• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முத்த மழை - 05

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,272
497
113
Tirupur
முத்தம் - 05

“வெற்றி நீ இவங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டு வெளிய போய்ட்டு வா.. கர்ணா வரும் போது நீ இங்க இருக்க வேண்டாம்..” என ராமசாமி சொல்ல,

அவர் எதற்கு சொல்கிறார் என சிவாவிற்கும், வெற்றிற்கும் புரிய, “ராமுப்பா… தேவையில்லாம பயப்படுறீங்க. மாமா பேசினது அவனுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பே இல்ல. அதோட அவன் இங்க இருக்கவும் மாட்டான். நீங்க பயந்து எங்களையும் டென்சன் ஆக்கக்கூடாது..” என வெற்றி தெளிவாக கூற,

“அதுக்கில்ல வெற்றி.. கர்ணன் பேசின விதமே எனக்கு ஒரு மாதிரி இருந்தது. லிங்கா பேசினது தெரிஞ்சா இன்னும் பிரச்சினை செய்வானோன்னு இருக்கு..” என அப்போதும் பயந்தே தான் பேசினார் ராமு.

“ராமு.. வெற்றி சொல்றதுதான் சர். நீ தேவையில்லாம பயப்படுறியோன்னு எனக்குத் தோணுது. அப்புறம் நாம சொன்னா லிங்காவுக்கு புரியாதா? அப்படியா நம்மக்கிட்ட கோவிச்சிக்க போறான்..” என சிவகுரு எடுத்டு சொன்னாலும் ராமுவின் முகம் தெளியவே இல்லை.

இத்தனை வருட பழக்கத்தில் சொக்கலிங்கம் இப்படியொரு அழுத்தாமான அதேநேரம் கட்டாயப்படுத்தி எதையும் கேட்டதில்லை. அவர் அன்று கேட்ட விதம் தான் ராமுவின் மனதைப் போட்டு ஆட்டிபடைத்தது.

சொக்கலிங்கத்தைப் பற்றி அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை. கர்ணனும், அவன் வீட்டு ஆட்களும் தான் அவருக்கு பிரச்சினை.

கர்ணன் விவரம் தெரிய வெளிநாட்டிற்கு சென்று இப்போது வரை அங்குதான் இருக்கிறான். அவன் பழக்க வழக்கம் எப்படியோ என்ற பயம்.

அடுத்து ராஜலட்சுமியும் அவரின் பிள்ளைகளும். அவருக்கு ஆரம்பத்தில் இருந்தே ராமசாமியை பிடிக்காது. எப்போது பார்த்தாலும் தனக்கு கீழேதான் என்ற எண்ணத்தோடு தான் பார்ப்பார்.

அப்படியிருக்க தன் ஒற்றை மகளை அவர்கள் எப்படி பார்த்துக் கொள்வார்களோ என்ற பயம் அந்த தகப்பனை வேறு யோசிக்க விடவில்லை.

தந்தையின் பதட்டத்தை வந்ததில் இருந்தே கவனித்துக் கொண்டுதான் இருக்கிறாள் வல்லபி.

ஏதோ சரியில்லை என்கிற வரை தெரிகிறது. என்ன என்று கேட்டால் யாரிடமும் பதிலில்லை.

வந்தனா மட்டுமே மிகவும் சாதாரணமாக அவளிடம் பேசுகிறாள். என்னாவாகிற்று எல்லோருக்கும்.. என யோசனையுடனே காலையிலிருந்து சுற்றுகிறாள்.

அத்தனை பேரின் புலம்பல்களுக்கும் சொந்தக்காரன் ஒருவழியாக அங்கு வந்து சேர்ந்தான்.

கர்ணன் உள்ளே வரும் போதே அனைவரும் அட்டென்சேன் பொசிசனில் நிற்பது போல வல்லபிக்கு தோன்றியது.

உள்ளே வந்தவனும், அனைவரையும் பார்த்து புன்னகைத்து அமர்ந்தான்.

அமர்ந்தவனின் பார்வை வல்லபியின் மேல் ஒரு நொடி அதிகமாக பதிந்ததோ என்று கூட தோன்றியது அவளுக்கு.

`சீதா அவனுக்கு மாதுளை ஜூசை கொடுக்க, “என்ன ஆன்டி..? உங்க காஃபி சூப்பரா இருக்கும்னு யாழி சொன்னா? நீங்க ஜூஸ் கொடுக்குறீங்க..? என சிரித்தபடியே கேட்க,

“வெயில்ல வந்தீங்கல்ல தம்பி அதுதான் ஜூஸ் போட்டேன். இருங்க நான் காஃபி கொண்டு வரேன். யாழிக்கு என் காபி ரொம்ப பிடிக்கும்..” என உள்ளே செல்ல, கர்ணாவோ வேண்டாம் என்று ஒரு ஃபார்மாலிடிக்கு கூட சொல்லவில்லை.

அவர் காபி கொண்டு வரட்டும் என விட்டு விட்டான்.

“கொழுப்பு..” என வெற்றி வாய்க்குள் முணுமுணுக்க,

“இப்போ அங்கிள் எப்படி இருக்கார்.. பேசுறாரா?” என வல்லபிதான் கேட்டாள்.

‘இப்போ இவளை யார் கேட்க சொன்னா?’ என எல்லோர் பார்வையும் அவள் மேல் எரிச்சலாக விழுந்தது. அதை வல்லபி கவனிக்கவில்லை. ஆனால் கர்ணன் கவனித்துவிட்டான். அவன் புருவம் யோசனையில் சுருங்கியது.

“ம்ம் ஓக்கே கண் விழிச்சிட்டார் இன்னும் பேசல..” என வல்லபிக்கு பதில் தந்துவிட்டு, ஆண்கள் மூவரையும் பார்த்து ‘நீங்கள் விசாரிக்கவில்லையே’ என்பது போல் பார்த்தான்.

அதில் பெரியவர்கள் இருவரும் தலை குனிய, வெற்றி வல்லபியை பார்த்தான்.

அப்போது உள்ளிருந்து வந்த வந்தனா கர்ணாவைப் பார்த்து “ஹேய் நீங்க வந்துருக்கீங்கன்னு இந்த யாழு மாடு சொல்லவே இல்லையே.. எப்போ வந்தீங்க ண்ணா..” என கேட்கவும், பெரியவர்களுக்கு ஆசுவாசமானது.

வந்தனா அண்ணா என்றால் வல்லபியும் அண்ணா என்றுதானே அழைக்க வேண்டும் அதனால் அவரகள் சற்று ரிலாக்சாக, அதை கவனித்த கர்ணனுக்கு சட்டென ஒரு கோபமும், கூடவே சிரிப்பும் வந்துவிட்டது.

“யாழு மாடா.? நல்லா இருக்கே.. அவக்கிட்ட பேசும் போது மறக்காம சொல்றேன்..” என சிரித்தவன் “அண்ணான்னு எல்லாம் கூப்பிட வேண்டாம் வந்தனா.. அத்தான் இல்ல மாமான்னு கூப்பிடு. உங்க லிங்கா மாமா மகன் உனக்கு அண்ணனா?” என புருவம் உயர்த்த, பெரியவர்களின் முகம் சப்பென்றானது.

‘என்ன இவன் எந்த பக்கம் போனாலும் கேட் போடுறான்’ என வெற்றி யோசிக்கும்போதே சீதா காஃபியோடு வந்துவிட்டார்.

“சாரி தம்பி.. டிக்காசன் இறக்கி போட்டுட்டு வந்தேன் அதான் லேட்டாகிடுச்சு. அதோட லஞ்சும் இங்கதான்னு அங்கிள் சொன்னார். அதனாலத்தான் ஜூஸ் குடுத்தேன். காஃபின்னா பசிக்காது பாருங்க..” என நீண்ட விளக்கமும் கொடுக்க,

“அச்சோ ஆன்டி நீங்க ஏன் இவ்ளோ விளக்கம் கொடுக்குறீங்க. யாழி சொல்லித்தான் விட்டாஅ. நீங்க சாப்பிடாம அனுப்பமாட்டீங்கன்னு..” என அவனும் பதில் கொடுத்தபடியே காபியை உறிஞ்சினான்.

உண்மையிலேயே அருமையான காஃபி. ரசித்து ருசித்தான் கர்ணன்.

“ஆன்டி.. யாழி சொல்லும்போது கூட நான் நம்பல. ஆனா குடிச்சதும் நான் உங்க காஃபிக்கு ஃபேன் ஆகிட்டேன். அருமையான காஃபி ஆன்டி..” என பாரட்ட, சீதாவிற்கு வெட்கமே வந்துவிட்டது.

“என்ன தம்பி நீங்க.?” என சிரித்தவர், “லஞ்ச் முடிச்சிட்டுதான் போகனும்.” என்றவர் சொக்கலிங்கத்தைப் பற்றி விசாரித்தார். அவருக்கு பதில் கொடுத்தவன், பேவென விழித்த வந்தனாவைப் பார்த்து “ஏன் இப்படி நிக்கிற.?” என கேட்க,

“நீங்க எனக்கு மாமாவா.?” என ஆர்வமாக கேட்க,

“இல்லையா.?” என்றவன் “ஆன்டி நீங்க சொல்லுங்க.?” என சீதாவிடம் கேட்க,

“ஆமா.. மாமாதான் வேனும். மாமான்னு கூப்பிடுங்க மூனு பேரும்” என வெற்றியையும் சேர்த்து சொல்ல, பல்லைக் கடித்தான் வெற்றி.

“என்ன ஒரு ஹேண்ட்சம் மாமா..?” என வந்தனா கூற, அவள் கையைப் பிடித்து கிள்ளினாள் வல்லபி.

எல்லாம் விளையாட்டுதான் என அங்கிருந்த பெரியவர்களுக்கு புரிய, பெயருக்கு சிரித்துக் கொண்டனர்.

கர்ணாவின் அமைதி வேறு அவர்களை யோசிக்க வைத்திருந்தது.

“ஓக்கே ஆன்டி.. நாங்க கம்பெனிக்கு போய் பார்த்துட்டு வரோம்..” என எழ, “போலாம் ப்பா..” என வெற்றியும் முன்னால் நடந்தான்.

வெற்றி காரில் ஏற அவனுடன் ராமசாமி ஏறிக்கொள்ள, கர்ணன் டிரைவருடன் வந்தாலும், அவனைத் தனியாக விட பிடிக்காமல் கர்ணனுடன் ஏறிக் கொண்டார்.

அங்கிருந்து அரை மணி நேர பயணத்தில் இருந்தது அவர்கள் கம்பெனி. மேல் தளம் மொத்தமாக எரிந்திருந்தது. மெசின்கள் மொத்தமும் எரிந்து சேதமாகியிருந்தது.

கீழ்தளம் கொடவுன் என்பதாலும், ஸ்டாக்கும் அப்போது குறைவாக இருந்ததாலும் ஓரளவுக்கு தப்பித்திருந்தது. அங்குமே சில இடங்கள் கருகிப் போயிருந்தன.

“எல்லாமே இன்சூரன்ஸ் பண்ணதுனால ரெகவர் பண்றது இல்ல. இப்போ சரக்கை கொடுக்கனும். அதுவும் அவங்க சொல்ற டைமுக்குள்ள கொடுக்கனும் அதுதான் பிரச்சினை. யூனியன்ல பேசிருக்கோம். அவங்களும் பேசுறேன்னு சொல்லிருக்காங்க. ஆனா நம்பிக்கை இல்ல..” என சிவகுரு கூற,

“ம்ம்ம்..” என்றவன் பார்வை அந்த கட்டிடத்தை ஆராய்ந்தது.

தந்தை இதை ஆரம்பிக்கும் போது எவ்வளவு சந்தோசப்பட்டார் என்று அவனுக்குத் தெரியுமே. இப்போது இதை சரிசெய்தே ஆகவேண்டும் என்பதால், அடுத்து என்ன செய்ய வேண்டும், எப்படி? யாரை சந்திக்க வேண்டும். யாரிடம் பேச வேண்டும் எல்லாம் தெரிந்து கொண்டான்.

இதில் சொக்கலிங்கம் போட்ட பணத்தின் அளவை நினைத்துதான் அவனுக்கு யோசனை. எப்படி அவ்வளவு பணத்தை இதில் போட்டார் என்பதுதான் அவன் கேள்வி. பணம் அவர்களுக்கு பிரச்சினை இல்லைதான். ஆனால் கோடிகளில் முதலீடு செய்வது என்றால் எங்கோ இடிக்கிறதே.. அதனால் அதை அவர்களிடமே கேட்டான்.

“எத்தனையோ வெளிநாட்டு ஆர்டர் நமக்கு வந்தூர்க்குதான். ஆனா இது அதிகம். அதோட கனடால இது பெரிய கம்பெனி. அதனால லிங்கா யோசிக்காம இன்வெஸ்ட் பண்ணிட்டான். அவங்களுக்கு சொன்ன டைம் நாம சரக்கு கொடுக்கலன்னா, உடனே அக்ரிமென்ட் கேன்சல் பண்ணிடுவேன்னுதான் சொல்லிருக்காங்க. அதுதான் லிங்காவுக்கு பயம்..” என்றார் ராமு.

“பணம் பிரச்சினையில்ல.. வேற என்ன பயம்.?” என கர்ணன் கேட்க,

“ஒரு டைம் ஆர்டர் கேன்சல் ஆகிட்டா, அடுத்து இன்டெர்னேஷனல் ஆர்டர் வர்ரது கஷ்டம். அப்படியே வந்தாலும், ஏமாத்த அதிகம் வாய்ப்பிருக்கு. அது பிசினசை மொத்தமா முடிச்சி விட்டுடும்..” என்றார் சிவகுரு.

“இதெல்லாம் நீங்க ஏன் அவர்கிட்ட சொல்லி புரிய வைக்கல..” என கர்ணன் கேட்க,

“அவனுக்கு எல்லாம் தெரியும் தம்பி. எங்களுக்கே பல யோசனைகள் அவன்தான் கொடுப்பான். அவனுக்கு நாங்க சொல்லனுமா?” என்ற சிவகுருவை கர்ணன் பார்க்க,

“நான் ரொம்ப எடுத்து சொன்னேன் தம்பி.. ஆனா லிங்க இந்த முடிவை மாத்திக்கவே இல்ல..” என்றார் ராமசாமி.

“ம்ம் சரி அடுத்து என்ன செய்யனும்..” என்றவன் “இனி எங்கிட்ட சொல்லுங்க. என்னை கூப்பிடுங்க. நான் இனி அப்பாக்கூடத்தான் . அவர் பிசினஸ் எல்லாம் நான்தான் பார்க்க போறேன். இங்க உள்ளது எல்லாம் உங்களுக்கு தெரியும்ல, அதெல்லாம் எனக்கு சொல்லுங்க. இப்போதைக்கு இங்க கலெக்ஷனுக்கு சுந்தர் வருவான். அவன் வரலன்னா வேற ஆள் ஏற்பாடு பண்றேன்..” என்றதும், மூவர் முகத்திலும் ஈயாடவில்லை.

“என்ன இவன் போகலையா?” இதுதான் அவர்கள் கேள்வி. ஆனால் அதை எப்படி கேட்க என தெரியாமல் திணறினார்கள்.

தன் வாட்சை பார்த்தவன் “டைமாச்சு கிளம்பலாமா?” என காருக்கு நடக்க, மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அவனுக்கு பின்னே நடந்தனர்.

“என்னப்பா இது?” என வெற்றி எரிச்சலடைய,

“நீ சும்ம இரு வெற்றி… நான் பொறுமையா பேசிக்கிறேன். நாம பயந்த மாதிரி இல்ல. நல்லவிதமாதான் பேசுறான். வரும் போது ரொம்ப பொறுமையா பேசினான்..” என சிவகுரு சொல்ல, ராமசாமி ‘அப்படியா’ என்று கேட்டுக் கொண்டார்.

பரவாயில்லை நாம் பயந்தது போல் இல்லை என ஒரு ஆசுவாசத்துடன் இந்த முறை கர்ணனுடன் காரில் ஏறினார் ராமசாமி.

அவரைப் பார்த்ததும் சிரித்தவன் “ஏன் அங்கிள் அப்பா கேட்டதுல உங்களுக்கு விருப்பம் இல்லையா?” என்றான் கர்ணன்.

அவன் கேட்டது அவருக்கு புரியவில்லை. “என்ன தம்பி.?” என்றார் புரியாமல். அவருக்கு சொக்கலிங்கம் இதை மகனிடம் சொல்லியிருப்பார் என்றெல்லாம் யோசிக்கவில்லை. அதனால் கர்ணன் வேறு ஏதோ கேட்கிறான் என்றுதான் நினைத்தார்.

“நான்தான் அங்கிள் உங்க பொண்ணை எனக்கு கேளுங்கன்னு அப்பாக்கிட்ட சொன்னேன். அதனாலத்தான் கேட்டார்.” என்றவன், “அதுக்காக அவசரமா எல்லாம் உங்க பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்காதீங்க அங்கிள். இனி எப்பவும் பார்க்காதீங்க.” என்றவனின் குரல் இறுகிப் போயிருக்க, ராம்சாமியின் உடல் அதிர்ச்சியில் தூக்கிப் போட்டது.