• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மோதி மிதித்துவிடு

Santirathevan_Kadhali

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 10, 2021
Messages
7
ஆதவன் தன் பொற்கரங்களை நீட்டி புவிக்கு வெளிச்சம் தந்து கொண்டிருக்கும் இனியக் காலைப் பொழுது அது. சேவல்கள் தங்கள் கூவும் கடமையை செவ்வனே செய்து கொண்டிருந்தன.

"பள்ளிக்கு மணியாச்சி விகாஷ் சீக்கிரம் எழுந்திரி" என்று தன் தாயின் குரலைக் கேட்டதும் சட்டெனக் கண் விழித்தான் விகாஷ். இரவெல்லாம் தன் தாயாரின் வியாபாரத்திற்காக உணவுகளை செய்து கொடுக்க உதவிய விகாஷால் அன்றைய தினம் எழுந்திரிக்க இயலவில்லை.

தனது கட்டிலில் உருண்டு பிரண்டான். ஏதோ ஒர் சிந்தனை அவனை வாட்டி எடுத்துக் கொண்டிருந்தது.

மீண்டும் தன் தாயாரின் குரலைக் கேட்டவன் "இதோ அம்மா குளிக்கப் போறேன்", என்று கூறிவிட்டு குளியலறைக்குள் நுழைந்தான்.


சற்று நேரத்தில் தன் காலைக் கடன்களை மளமளவென்று முடித்தவன் தன் பலகை வீட்டின் கீழ்மாடிக்கு மெதுவாக இறங்கி வந்தான். அவன் முகம் கலையிழந்து காணப்பட்டது.


"விகாஷ் என்னாச்சி ஏன் உன் முகம் வாடியிருக்கு", என்று தன் தாயார் சகுந்தலை கேட்க "ஒன்றுமில்லை" என்ற பதிலைக் கூறி தலையசைத்தான்.

"நான் அப்போவே சொன்னேன் போய் தூங்குன்னு..பாரு இரவுலாம் என்னோட உட்காந்து வடை சுட்டுக்கிட்டு இருந்த", சகுந்தலை.

"தனியா எப்படி எல்லா வேலையும் பாப்பிங்க..அதான் நான் இருக்கேன்ல அம்மா", விகாஷ்.

வழக்கம் போல் விகாஷ் தன் தாயாரிடம் விடைப்பெற்று விட்டு தன் மிதிவண்டியை எடுத்துக் கொண்டு தன் இடைநிலைப்பள்ளிக்குப் புறப்பட்டான்.

செல்லும் வழியில் அவனுக்குப் பல சிந்தனைகள் எழுந்தாலும் அவன் அதனைப் பொருட்படுத்தாது மிதிவண்டியை ஓட்டுவதில் மட்டும் கவனம் செலுத்தினான்.

அவன் ஒர் ஒற்றையடிப் பாதையில் தன் மிதிவண்டியைச் செலுத்திக் கொண்டிருந்தபோது திடீரென்று பின்வழியிலிருந்து எவரோ மிதிவண்டியை வேகமாக எட்டி உதைக்க கால் இடறி கீழே விழுந்தான் விகாஷ்.

கீழே விழுந்தவனின் பள்ளிச் சீருடை முழுதும் மட்கறைபட தன் மிதிவண்டியை எட்டி உதைத்தவன் யார் என்று திரும்பிப் பார்த்தவனுக்கு பயம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்தது.

"அண்ணே நீங்களா...?", விகாஷ்.

"அப்பறம் வடை அண்ணா நான் கேட்டத எடுத்து வந்திங்களா?" ரவுடிகளின் குழுவில் சேர்ந்த ராமு.

"அண்ண அது வந்து நான் பள்ளிக்குச் சீக்கிரமா கிளம்பிட்டேன்...அதுனால மறந்துட்டேன்", என்று கூறிய விகாஷின் சட்டையைப் பிடித்து இழுத்தான் சரண் என்ற இன்னொருவன்.

"இங்கப் பாரு நீ பணக்காரன்னு எனக்குத் தெரியும்...எங்கக்கிட்ட திமிர் காட்டாத..அன்னாடம் நீ தான் உங்க அம்மாக்கு வியாபாரம் பண்ண உதவுற..காசுலாம் உன்கிட்ட தான் இருக்கும்", என்றான் ராமு.

"உண்மையாவே இல்ல அண்ணா அந்தப் பணம்லாம் எங்கக் குடும்பச் செலவப் பார்க்கவே சரியா இருக்கு...எனக்கு அப்பாவும் இல்ல..அம்மா ஒருத்தவங்களோட சம்பாத்தியம். அதுவும் வருமானம் ரொம்ப குறைவு", என்று பணிவுடன் கூறியும் அவ்விருவரும் அதனை செவிமடுத்தப்பாடில்லை.

"ஒழுங்க நீ நாளைக்கு பணத்த ஒப்படைக்குற இல்ல நாளை உன் உயிருக்கு உத்தரவாதம் இல்ல" என்றான் சரண்.

"சரி" என்று பயத்துடன் கூறியவன் தன் மிதிவண்டியை எடுத்துக் கொண்டு ஒருவழியாகப் பள்ளியைச் சென்றடைந்தான். அங்கே, மாணவர் தலைவர்கள் பள்ளியின் வாயிலை காத்துக் கொண்டிருந்தனர்.

"நில்லு",மாணவர் தலைவர்.

விகாஷ் அமைதியாய் நின்றான். "உன் சட்ட ஏன் இப்படி இருக்கு..? இன்னிக்கு திங்கட்கிழமை சபைக்கூடல் இருக்கும்ன்னு தெரியாதா?", மாணவத் தலைவன்.


"இல்ல நான் வரும் வழில கீழ விழுந்துட்டேன்" என்றதும் அந்த மாணவத் தலைவன் விகாஷ்ஷை ஆசிரியரிடம் அழைத்துச் சென்றான்.

ஆசிரியர் விகாஷிடம் கீழே விழுந்ததன் காரணத்தைக் கேட்டும் அவன் அதனைக் கூறியப்பாடில்லை. தன் தவறு என்று கூறி சமாளித்தான்.

அவ்வாறே விகாஷ் வகுப்பறையில் கல்வி கற்க, மதியம் பள்ளி நேரம் முடிந்து வீட்டிற்குச் செல்ல ஆயத்தமானான். காலையில் வந்த அதே ஒற்றையடிப் பாதையில் தான் விகாஷ் சென்றான். ஆனால், இம்முறை இன்னைரு அதிர்ச்சி சம்பவம் விகாஷுக்குக் காத்திருந்தது.

ராமுவும் சரணும் அதே இடத்தில் ஒரு பள்ளி மாணவியை வழிமறித்து அவளைப் பணம் கொடுக்கும்படி மிரட்டிக் கொண்டிருந்தனர். அந்த மாணவியோ பயத்தில் அழ ஆரம்பித்தாள். விகாஷ் செய்வதறியாது விழித்தான். அவ்விருவரின் செயல்களும் எல்லை மீறிப் போவதை உணர்ந்தான்.

அந்த பெண்ணிற்கு உதவ முன் வந்தான். " ஏய் இரண்டு பேரும் என்னா நினச்சிட்டு இருக்கிங்க பொண்ணுங்கள பயமுறுத்தி காசு வாங்குறிங்க...உழைச்சி சம்பாதிக்கத் தெரியாதா இரண்டு பேருக்கும்" என்று கோபத்தால் கர்ஜித்தான்.

அதைக் கண்ட இருவரும் கலகலவென வாய்விட்டுச் சிரித்தனர். "டேய் நம்ம மொத விழ வச்சோமே அந்த வடையண்ணாக்கு இவ்ளோ ரோசம் இருக்கா?" என்று ராமு சரணிடம் கூறி விகாஷ்ஷின் குடும்பத் தொழிலை எள்ளி நகையாடினான்.

"எங்க அம்மா பண்ற தொழில வச்சி என்ன தப்பா பேசாத...!!இல்ல நடக்குறதே வேற", என்று விகாஷ் கூறியதும் சரண் விகாஷின் அருகே வந்து அவன் சட்டையைப் பிடித்திழுத்து கீழே தள்ளிவிட ராமு அவனை பலமாக அடிக்க ஆரம்பித்தான்.

சரணும் ராமுவும் மாறி மாறி தாக்கியதில் விகாஷ் மூர்ச்சையடைந்து கீழே விழுந்தான். "இவன இப்படியே விட்டுட்டுட்டு கிளம்புவோம்", என்று கூறிய வண்ணம இருவரும் அவ்விடத்தைவிட்டகன்றனர்.

மாலைப் பொழுது சாய்ந்தது. விகாஷ் வீட்டிற்கு வராததை எண்ணி சகுந்தலை பதற்றத்திற்குள்ளானார். தன் அண்டை வீட்டுக்காரர்களிடம் விகாஷைத் தேடித் தரும்மாறு உதவிக் கேட்டார். பள்ளியில் ஆசிரியரிடம் கேட்டப் பொழுது அவர்கள் விகாஷ் பள்ளி முடிந்தவுடனேயே வீடு திரும்பிவிட்டதாகக் கூறினர்.

சகுந்தலைக்குப் பதற்றம் இன்னும் அதிகரித்தது. தன் உறவினர்களின் உதவியுடன் விகாஷைத் தேடலானாள். தான் செல்லும் வழியில் ஒரு பள்ளி மாணவி தன் எதிரே ஓடி வருவதைக் கண்டாள். அவள் "காப்பாத்துங்க..!! காப்பாத்துங்க", என்று அலறிய வண்ணம் சகுந்தலையை நோக்கி வந்தாள்.

அதைக் கண்ட சகுந்தலையோ " யாருமா நீ? ஏன் இப்படி ஓடிவர?",என்று வினவினாள்.

"அம்மா அங்க ரெண்டு ரவுடி பசங்க ஒரு அண்ணன அடிச்சி ஒத்தையடிப் பாதையிலே மயங்கி விழவச்சிட்டு ஓடிட்டாங்க...நான் புதரு பக்கம் மறஞ்சியிருந்து பார்த்தேன். யாரையாவது உதவிக்குக் கூப்பிடலாமே" என்று ஓடி வந்தேன் என்றாள்.

"சரி வா யாருன்னு பாப்போம்" என்றெண்ணிய சகுந்தலை அம்மாணவியைத் தொடர்ந்நு சென்று அந்த ஒத்தையடிப் பாதையை நோக்கி நடந்தாள்.

அங்கே அவளுக்கு ஓர் அதிர்ச்சி சம்பவம் காத்திருந்தது. தன் கண் எதிரிலேயே தன் மகன் மயங்கிய நிலையில் பலத்தக் காயத்துடன் விழுந்து கிடந்தான். அதைக் கண்ட சகுந்தலைக்கு மனம் வெந்தது. கண்களில் கண்ணீர் குளமாகின. தன் மகனின் இந்நிலைக்குக் காரணம் யாரென அம்மாணவியிடம் வினவினாள்.

அந்த பகடிவதைக்காரர்கள காவல் துறையினரிடம் ஒப்படைக்க எண்ணினாள். அஞ்சலி என்றப் பெயர் கொண்ட அம்மாணவினை சாட்சிக் கூறும்படி கேட்டாள். முதலில் அஞ்சலி பயந்தாலும் அந்த துஷ்டர்கள் அவர்களுக்கு இழைத்த தீங்கினை எண்ணிப் பார்த்தாள். இன்று பயந்து ஒதுங்கினால் நாளை மற்றவர்களுக்கும் இதே நிலை என்று எண்ணியவள் தைரியமாக வாக்குமூலம் அளிக்க முன் வந்தாள்.

விகாஷ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அவன் கைகளில் சில எழும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர் கூறினார். பலமான காயங்களின் காரணமாக விகாஷ்ஷால் எழுந்திரிக்க முடியவில்லை. சுயநினைவிலும் அவன் இல்லை.

விகாஷ்ஷின் பள்ளி ஆசிரியர்களுக்கு இச்செய்தி காட்டுத் தீ போல பரவியது. விகாஷ் பகடிவதைக்கு ஆளாகியிருந்தும் அவன் கூறாமல் மறைத்ததன் காரணத்தை ஆசிரியர்கள் அறிய முற்பட்டனர். விகாஷின் உடல் நலம் சரியானவுடன் அவனைச் சந்தித்து அவனைப் பகடிவதை செய்த நபர்களை கண்டறிந்து காவல் துறையினரிடம் புகார் செய்ய கங்கணம் கட்டினர்.

இரண்டு நாட்கள் கழிந்தன. வெய்யோனின் திருமுகம் காண சூரியகாந்திகள் காத்துக் கொண்டிருந்த அழகியக் காலை வேளை. குயில்களின் கானம் காதுகளுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும் வண்ணம் இருந்தன.அன்று விகாஷின் உடல் நிலை சற்றுத் தேறி வந்தது. இரண்டு நாட்களுக்குப் பின் சுயநினைவு திரும்பி புவியின் அழகிய நிறங்களை கண்விழித்துப் பார்த்தான் விகாஷ்.

அவனுக்கு என்ன நடந்தது என்ற சிந்தனை நினைவில் இல்லாவிட்டாலும் ராமுவும் சரணும் தான் அவனிடம் இறுதியாகப் பேசினார்கள் என்ற நினைவு மட்டும் இருந்தது.

சற்று நேரத்தில் காவலாளிகள் விகாஷ்ஷின் அறைக்குள் நுழைந்தனர். அதைக் கண்ட விகாஷ் அதிர்ச்சியுற்றான். விகாஷ்ஷிடம் நலம் விசாரித்த அவர்கள் இரண்டு நபர்களின் படத்தைக் காட்டி "இவர்களை உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள்.

"இல்லை", என்றான்"விகாஷ்.

"இவங்க இரண்டு பேரும்தான் உங்கள தாக்குனதா ஒரு பொண்ணு வாக்குமூலம் கொடுத்தாங்க", காவலாளி.

"இவங்கள எனக்கு யாருன்னே தெரியாது", என்று மலுப்பினான் விகாஷ்.

"விகாஷ் கொஞ்சம் நல்லா பாத்து சொல்லுங்க...நீங்க இன்னிக்குப் பண்ற உதவி மத்தவங்கள பாதுகாக்கும்", காவலாளி.

"நான் இவரப் பார்த்ததில்ல இவரு யாருன்னே தெரியல சார்", என்றான் விகாஷ்.

அதற்கு மேல் விகாஷ்ஷிடம் பதில் வராது என்பதை உணர்ந்த காவலாளி அவ்விடம் விட்டகன்றார். வேறு யுக்தியைப் பயண்படுத்தி விகாஷ்ஷிடம் வாக்குமூலம் பெறலாம் என்று எண்ணினார்.

மெத்தையில் மௌனமாய் படுத்திருந்த விகாஷ்ஷுக்கு எண்ண அலைகள் பின்நோக்கிச் சென்றன.தான் கொடுத்த வாக்கினொ மீற முடியாதவனாய் இருந்தான். தன் ஆரம்பப்பள்ளி நினைவுகளை எண்ணிப் பார்த்தான். தன் உயிர் தோழன் திவாகருடன் பழகிய நாட்களை எண்ணிப் பார்த்தான். இருவரும் இணைப்பிரியாத நண்பர்களாக வாழ்ந்து வந்தனர். ஆனால், அந்த நட்பு வெகு கவலம் நீடிக்கவில்லை. இடைநிலைப்பள்ளியின் முதல் நாள் அன்று திவாகர் பள்ளிக்கு வர சாலையைக் கடந்து வந்து கொண்டிருந்த போது துர்அதிர்ஷ்டவசமாக ஒரு மகிழுந்து கட்டுப்பாட்டை இழந்து அவனை மோத விபத்துக்குள்ளாகினான் திவாகர்.

அவ்விபத்தைக் கண் எதிரே கண்ட விகாஷ்ஷால் அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பள்ளி ஊழியர்களின் துணையுடன் திவாகர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அவனுக்குத் துணையாக, விகாஷ் இருந்தான். உடலில் பலத்தக் காயங்கள் ஏற்பட்டதால் சிகிச்சைப் பலனில்லாமல் போனது.

திவாகர் தன் உயிரை விடும்முன் விகாஷ்ஷிடம் ஒரு செய்தியைக் கூறினான். " விகாஷ் என் அம்மாவுக்கு இருக்கறது நானும் என் அண்ணன் சரணும் தான். என்னால நிச்சயம் இனி உயிர்ப்பிழைக்க முடியாது. சரண் ரவுடி பசங்களோட சேர்ந்துட்டான். அவனை திருத்த முடியாது. ஆனா நீ எனக்கு ஒரு வாக்குறுதி கொடுக்கனும்...எந்தச் சூழலிலும் நீ எங்க அம்மாவ கைவிடக் கூடாது. அவங்களுக்கு வருத்தம் தர்ற விஷயம் என்னாவா இருந்தாலும் அத நீ தான் போக்க உதவி பண்ணணும்...உன்ன என் குடும்பத்தப் பார்க்க சொல்லல ஆனா என் அம்மாவ மட்டும் அப்போ அப்போ போய் பார்த்துட்டு வா...இல்லனா அவங்க மன வேதனையில மனம் உடஞ்சி போய்ருவாங்க...அவங்களுக்கு இருக்கற ஒரே நம்பிக்கை நான் தான், நீ எனக்கு வாக்கு கொடுக்கனும்", என்ற வார்த்தையைக் கூறிய அத்தருணமே அவனின் உயிர் உடலை விட்டுப் பிரிந்தது.

இவையணைத்தையும் சிந்தித்துப் பார்த்த விகாஷால் ஏதும் சொல்ல இயலவில்லை. காரணம் சரண் தான் தன் நிலைக்குக் காரணம் என்று கூறினால் காவல் துறை அதிகாரிகள நிச்சயம் அவனைக் கைது செய்துவிடுவார்கள். பின்னர் அவனின் தாயார் பெரும் மன வருத்தத்திற்குள்ளாவார் என்று எண்ணினான்.

அமைதியாய் தன் இரு விழிகளையும் மூடினான். தான் செய்வது சரியா அல்ல தவறா என்பதைச் சிந்திக்கலானான். "விகாஷ்" என்றக் குரலைக் கேட்டதும் திரும்பினான். அங்கே அவனின் பள்ளி ஆசிரியர்கள் அவன் நலம் விசாரிக்க வந்திருந்தனர்.

"பகடிவதைக்குள்ளானத ஏன் எங்கக்கிட்ட சொல்லல?", என்று விகாஷ்ஷின் வகுப்பாசிரியர் கேட்டார்.

விகாஷ் அனைத்தையும் மறைத்தான். ஆனால், அவனின் ஆசிரியர்களோ விகாஷ் எதற்கோ பயந்துதான் உண்மையைச் சொல்ல மறுக்கிறான் என்பதை அறிந்தனர். விகாஷிடம் அழகாகப் பேசினர். அவன் எதிர்கொண்டப் பிரச்சனைகளைப் பற்றிக் கேட்டனர்.

விகாஷ் ஒருநிலைக்கு திரும்பியவுடன், அவனின் நிலைக்கு யார் காரணம் என்று கேட்டனர். இதற்கு மேல் நடந்ததை மறைப்பது சரியில்லை என்பதை உணர்ந்த விகாஷ் நடந்தவை அனைத்தையும் உலறி வைத்தான்.

ஆசிரியர்களும் அவனுக்குப் பல அறிவுரைகள் கூறினர். "பிரச்சனையைக் கண்டு அஞ்சினால்...பிரச்சனை வந்து கொண்டே தான் இருக்கும் விகாஷ்....அதை நீ மோதி மிதித்துவிட்டால் மகிழ்ச்சி என்றும் உன் பக்கமே", என்று அறிவுரைக் கூறினார்.

"குற்றவாளிக்கு அஞ்சி அவனைக் காட்டிக் கொடுக்காமல் இருந்தால் நீயும் குற்றத்திற்கு உடந்தை போனவனாவாய் விகாஷ். உன் நண்பன் உன்னிடம் கூறியதை நீ தவறாகப் புரிந்து கொண்டுள்ளாய். காவலாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டு சரண் திருத்தப்படுவது அவன் அம்மாவிற்கு வருத்தம் தருமா? அல்ல தகாத செயல்களைச் செய்து குடும்ப கௌரவத்தை இழக்க வைப்பது அவன் தாயாருக்கு வருத்தம் தருமா விகாஷ்?", எனறு கேட்டார்.

அதற்குமேல் விகாஷிடம் பதில் வரவில்லை." நீ கவலைக் கொள்ளாதே விகாஷ் சரணும் ராமுவும் இளைஞர்கள் அவர்களுக்கு தண்டனை மிகவும் எளிமையான முறையில் தான் வழங்கப்படும். சீர்திருத்தப் பள்ளிக்கு அவர்கள் அனுப்பிவைக்கப்பட்டு திருந்தி வாழ வழி சொல்வார்கள். சிறிது காலம் கழித்து அவர்களாகவே திருந்தி வீட்டிற்கும் நாட்டிற்கும் நல்லப் பிள்ளைகளாக மாறிவிடுவார்கள்", என்றார்.

இவையணைத்தையும் செவிமடுத்த விகாஷ் சற்று நேரம் சிந்தித்தான். சரணும் ராமுவும் திருந்தி வந்தால் அவர்கள் குடும்பத்திற்கு நலம் தானே என்று சிந்தித்தான். வாக்குமூலம் கொடுக்க முன் வந்தான்.

ராமுவும் சரணும் சீர்த்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விகாஷோ ஒரு வாரம் கழித்து உடல் தேறி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

"எத்தகைய துன்பம் வந்தாலும் நான் இனி அஞ்சப் போவதில்லை. மோதி மிதித்துவிட்டு கடந்து செல்வேன்", என்ற வசனத்தைக் கூறித் திரும்பியவனைப் பார்த்து சுவரில் மாட்டப்பட்டிருந்த திவாகரின் படம் மௌனமாய்ச் சிரித்தது.
 
Top