• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வண்ண நிழல்கள் - 2.

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
915
81
93
Chennai
பகுதி – 2.

அந்த வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. அதை வீடு எனச் சொல்வதை விட, பங்களா எனச் சொல்ல வேண்டுமோ? சென்னையில் இருந்து பதினைந்து கிலோமீட்டர்தொலைவில் இருந்தது அந்த பங்களா.

வீடு என்னவோ மாடர்ன் உலகத்தின் பிம்பமாக ஜொலிக்க, அதற்குள் இருந்த மனிதர்களோ நாகரீகத்தின் துவக்கப் படியில் நின்டிருந்தார்கள்.

“ஏத்தா வடிவு... உன் புள்ளை உனக்கு மாளிகையேல்லா கட்டிக் கொடுத்திருக்கான். நீ புண்ணியம் பண்ணியிருக்கத்தா” ஒரு வயதான பெண்மணி வடிவை வாழ்த்த, அவருக்கோ முகம்கொள்ளா புன்னகையும், பெருமிதமும்.

“எலேய் கோட்டைச்சாமி... உனக்கு வாழ்வுல... எம்மாம் பெரிய உசரத்துக்கு போய்ட்ட...” மற்றொருவர் கணவனிடம் பேசுவது கேட்க, அந்த பெருமிதம் இன்னும் அதிகரித்தது.

“நம்ம ஊரே வந்து தங்கலாம் போலையே... எம்புட்டு பெருசா இருக்கு”.

“நம்ம ஊரு பெரிய வீட்டுக்காரரோட வீடு மட்டுமில்ல... முத்தம், சுத்தி இருக்க இடம் கூட இந்த வீட்டுக்குள்ளாற நிக்கும் போலையே...”.

“அப்ப இனிமே நம்ம கோட்டச்சாமிதான் ஊர் பெரிய மனுஷனா?”.

“இல்லையா பின்ன... இந்த வருஷ திருவிழாவுல செலவழியப் போறது எல்லாம் நம்ம கோட்டைச்சாமி பணம் தான...”.

“எம்புட்டு உசரத்துக்கு போனாலும், பணம் வந்தாலும், அதைக் கொடுக்கதுக்கு ஒரு மனசு வேணும்லே... அது நம்ம கோட்டை கிட்ட இருக்கு” ஆளாளுக்கு அங்கே பேச, அவர்களுக்கு நிலையில்லா பெருமிதம்தான்.

ஆனால், இந்த பெருமையையும், புகழையும் தங்களுக்கு தேடிக் கொடுத்த மகன் அங்கே இல்லாதது அவர்களுக்கு மிகப்பெரும் குறையாகவே இருந்தது.

“வடிவு... எங்க உன் புள்ளையைக் காணோம்?” உறவுக்கார பெண்மணி ஒருத்தி கேட்க, வடிவு சற்று கவலையானார்.

வந்த உறவுகள் அனைத்தும், நேற்று முதல் தங்கள் மகன் விஷ்வாவைத் தேட, அவனோ வீட்டுக்கு வந்தே பல மாதங்கள் கடந்துவிட்டது என அவர் எப்படிச் சொல்வதாம்?

“அவனைத்தான் நம்ம கண்ணுலேயே காட்ட மாட்டேங்காளே... பொத்தி பொத்தில்ல வச்சிருக்கா” ஒருத்தி நொடித்துக் கொள்ள,

“நாமளும் வந்த நாள்ல இருந்து கேட்டுகிட்டுத்தான் கிடக்கோம். இன்னா வாறான், அந்தா வாறான்னு சொல்லுதாளே தவிர, அவனை வரச் சொல்லவும் காணோம்” கோட்டைச்சாமியின் அக்கா முத்து. சடைக்க, அவளுக்கு கூடவே ரத்தினமும், தங்கமும் சேர்ந்தது சிறப்பு.

கோட்டைச்சாமி தன் அக்காக்களின் வாயை அடைக்க முடியாமல் திணற, அங்கே வந்தான் அறிவு, விஷ்வாவின் தம்பி.

அவர்களது பெயர்களுக்கு ஏற்றாற்போல் முன்னர் மதிப்பாக நடந்தவர்கள்தான். எப்பொழுது தங்கள் தம்பியின் வாழ்க்கை முறை மாறத் துவங்கியதோ, அப்பொழுது முதல் அவன்மேல் பெரும் பொறாமைதான்.

அதில் கொஞ்சம் விதிவிலக்கானவள் என்றால் அது ரத்தினம் தான்.

“அம்மா, அப்பா... ஐயரு உங்களை அங்க தேடிகிட்டு இருக்கார். நீங்க இங்கே என்ன பண்றீங்க? முதல்ல போங்க...” அவன் படபடவென குரலுயர்த்தி கத்த, விட்டால் போதுமென அங்கிருந்து அகன்றார்கள்.

“என்ன ஐத்தைங்களா... சாப்ட்டீங்களா? இல்லன்னா போய் சாப்பிடுங்க” அவன் சொன்ன விதமே ஒரு தினுசாக இருக்க, அவனை முறைத்தார்கள்.

“என்னவே... நாலு காசு வந்துட்டா, சொந்தத்தை எல்லாம் மதிக்கத் தெரியாதோ?” முத்து, அவனிடம் கேட்க, அவனோ அவரை அசால்ட்டாக பார்த்தான்.

“சொந்தத்தை எல்லாம் மதிச்சுதான் கூப்பிட்டு ஒரு வாரமா நல்ல பெரிய ஹோட்டல்ல தங்க வச்சு, வண்டி வச்சு சென்னையை சுத்திக் காட்டிகிட்டு இருக்கோம்.

“சொந்தம் வேண்டாம்னு நினைச்சிருந்தா இப்படி செஞ்சு இருப்போமா? என்ன பேசறீங்க நீங்க?” அவன் கோபமாக கேட்க, முத்துவோ முகத்தை நொடித்துக் கொண்டார்.

“நல்லா செஞ்சீங்களே... எங்க... என் மவனும் சினிமாவுல நடிக்கணும்னு கேக்கானே, அவனுக்கு என்னத்த செஞ்சீங்கலாம்?” அவர் கோபமாக கேட்க, அவனுக்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் போல் இருந்தது.

“எங்க அண்ணன் என்ன படமா எடுக்கறான்? உங்க மகனை நடிக்க வைக்க?” அவன் கேட்க, முத்துவோ சமாதானம் ஆகும் வழியைக் காணோம்.

“எடுத்த படமெல்லாம் அவன்கிட்டேதான வருது? அப்போ எல்லா பெரிய மனுஷங்களையும் அவனுக்குத் தெரியும்தான...?” அவர் எகிற, ‘இவரிடம் பேசுவது வீண்’ என்ற முடிவுக்கு வந்திருந்தான்.

“அதுக்குன்னு வர்றவங்க கிட்டே எல்லாம் கேக்க முடியுமா? அப்படி கேட்டா என்ன நினைப்பாங்கன்னு வேண்டாம்? அப்படிப் பாத்தா, நானே இந்நேரம் நடிகன் ஆகி இருக்கணுமே, ஏன் ஆகலை?” அவன் கேள்வியில், பதில் சொல்ல முடியாமல் விழித்தார்.

“என்ன இருந்தாலும் நீ அவன் தம்பி, நிமிஷத்துல அவன் உனக்கு என்ன வேண்ணா செய்வான். உன்னைய அவன் கூடவே கூட வச்சுக்கலாம்... இதெல்லாம் எங்ககிட்டே சொல்லிகிட்டா செய்வீக?” அவர் விடாமல் வாதாட சலித்துப் போனான்.

“எப்படியோ நீங்க சொன்னதையேதான் சொல்லிக்கிட்டு இருக்கப் போறீங்க. சாப்ட்டு தெம்பா பேசுங்க, போங்க...” சொன்னவன் அங்கிருந்து செல்ல, அக்கா தங்கைகள் அனைவரும் முணுமுணுத்தார்கள்.

“இவனுக்கு வந்த வாழ்வைப் பாத்தியா? ஊருக்குள்ள விவசாயம் பாக்க இடமில்லாம சென்னைக்கு ஓடி வந்த பய, இப்போ ஊரு அளவுக்கு வீடும் இடமும் வச்சிருக்கான்.

“அதை நமக்கும் கொஞ்சம் தரலாமுல்ல... நாம பாத்து வளத்த பய, இப்போ நம்மளையே மதிக்க மாட்டேங்கான்” முத்து இன்னுமே வாயை மூடாமல் போக,

“அக்கா, தம்பிதான நம்ம மூனுபேத்துக்கும் வீடு கட்டிக் கொடுத்திருக்கு, அதை மறந்துட்டு பேசாதக்கா” ரத்தினம் இடைபுகுந்து சொல்ல, அவளை முறைத்தாள்.

“என்னடி... உன் மவன் சம்பாதிக்கான் அந்த திமிரா? வீடு கட்டி குடுத்தா ஆச்சா? மீன் குடுக்கதை விட, மீன் பிடிக்க கத்துக் கொடுக்கணும்னு ஒரு சொலவடை கேட்டிருக்கியா?” கண்ணை உருட்டி தங்கையை கடிந்துகொண்டாள்.

“நாக்குல நரம்பில்லாம பேசாதக்கா... ஊர்ல இருந்த நிலத்தை எல்லாம், நம்மளை கட்டிக் கொடுக்கணும்னு தான் வித்தாக. தம்பிக்குன்னு அந்த ஓட்டு வீட்டைத் தவிர நம்ம அம்மா அப்பா ஒரு அடி நிலத்தை கூட அவனுக்குக்கு கொடுக்கலை.

“அவனுக்குன்னு ஒரு ஏக்கரா நிலத்தை கொடுத்திருந்தா கூட, இத்தனை வருஷமா சென்னையில வந்து ஆட்டோ ஓட்டி கஷ்டபட்டிருக்காது. அப்படியும் ஊர் திருவிழா, விசேஷம்ன்னா, அது சக்திக்கு புடவை எல்லாம் வாங்கிக் கொடுக்கத்தான் செஞ்சான்.

“இப்பதான் அவன் உழைக்காம உக்காந்து சாப்பிடறான்... அது உனக்கு பொறுக்கலையா? இதென்ன அவன் சம்பாத்தியமா? அவன் புள்ளை சம்பாதிக்கறது, அவன் உழைப்புல நாம உரிமை கொண்டாடிக்கலாம்... அவன் புள்ளை சம்பாத்தியத்திலும் பங்கு கேக்கறது முறையா?”.

அவர் நியாயம் பேச, “இந்தா பாருங்கடி ஒரு நியாயஸ்த்தி... உனக்கு வேண்டாம்ன்னா போ... நான் எனக்கு வேண்டியதை வாங்காமல் போகப் போறதில்லை. ஒரு பத்து லட்சமாவது தேத்திக்கிட்டுதான் போவேன்” முத்து சவால் விட, ரத்தினம் மறுப்பாக தலை அசைத்தார்.

“நீ என்னவே செஞ்சுக்கோ... குடுத்தா வாங்கிக்க, எனக்கு எதுவும் வேண்டாம். ஏய் தங்கம்... அவதான் புரியாம பேசறான்னா, நீயும் இவளுக்கு கூட்டா?” ரத்தினம் தங்கையிடம் பாய்ந்தார்.

“அவளுக்கு மட்டும் காசு கிடைச்சா கசக்குமா என்ன?” முத்து இடைபுக, ரத்தினம் தங்கத்தை பார்க்க, அவளோ இரண்டுகெட்டான் மனநிலையில் நின்றுகொண்டிருந்தாள்.

“உன் மண்டையையும் கழுவிட்டாளா? இது நல்லதுக்கில்ல, நான் அம்புட்டுதான் சொல்லுவேன்” ரத்தினம் அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டாள்.

சென்றவன், நேராக சென்று நின்றது வடிவிடம் தான். “மதினி... எங்க பெரியவனை இன்னுமே காணோம்?” அவரிடம் கேட்க, வடிவோ கையைப் பிசைந்தார்.

“வர்றேன்னுதான் சொன்னான் மதினி, இப்போ என்னன்னா போனையே எடுக்க மாட்டேங்கறான்” கையில் இருந்த பட்டன் போனை பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தார்.

“டேய் அறிவு... உன் அண்ணனுக்கு போனைப் போடுடா” அவர் சொல்ல,

“நான் ஒரு நூறு போன் பண்ணிட்டேன்... எடுக்கணுமே...” அவனும் கவலையாக நின்றிருந்தான்.

“ஓ... புள்ள வேலையா இருக்கான் போல...” ரத்தினம் சொல்ல, வடிவுக்கு கண்கள் கலங்கிப் போனது.

“அறிவு, ஒரு எட்டு போய் பாத்துட்டு வர்றியா?” தாய் கேட்க, அவரை நம்ப முடியாமல் பார்த்தான்.

“அம்மா, நாம அங்க போறது அவனுக்குப் பிடிக்காதுன்னு தெரியும் தான. வேண்டாம்மா... கண்டிப்பா அவனே வருவான். நீங்க வந்தவங்களை போய் கவனிங்க” அவன் சொல்ல, கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டார்.

“எங்கிட்டு போனாலும், ‘வீடு கட்டின உன் மவனைக் காணோம்’ன்னே கேக்காவடா. எல்லாருக்கும் பதில் சொல்லி முடியலை. ஆனாலும் அவன் ஒரு எட்டு வந்துட்டு போயிருக்கலாம்டா...” அவர் சொல்ல, அவனுக்குமே அதே எண்ணம் தான்.

“சரி விடுங்க, சம்மாளிச்சுதான் ஆகணும். மறுபடியும் அவனுக்கு போனைப் போடுங்க, ஒரு எட்டு வந்துட்டு போகவாச்சும் சொல்லுங்க” சொன்னவன், வந்தவர்களை கவனிக்கச் சென்றான்.

இவர்கள் விடாமல் அழைக்க முயன்றுகொண்டிருந்த விஷ்வாவோ, தன் ஸ்டுடியோவில் திரையோடும், கணினியோடும் போராடிக் கொண்டிருந்தான்.
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
915
81
93
Chennai
திரைப்படத்தை எடுப்பவர்கள் எவ்வளவு தாமதமாக எடுத்தாலும் சரி, ஆனால் எடிட்டிங் வேலை என வந்துவிட்டால் மட்டும், ஒரு வாரத்தில் படத்தை முடித்துக் கொடு, இரண்டே நாளில் முடித்துக் கொடு என கழுத்தை நெரிப்பார்கள்.

அதிலும் எடிட்டிங் செய்வதற்கு எத்தனையோபேர் இருந்தாலும், படத்தின் நீளத்தையும், தரத்தையும் சரியான அளவில் நிர்ணயிப்பதில் விஷ்வா வல்லவனாக இருந்தான்.

சில எடிட்டர்கள் கத்தரி வைப்பது பல்லைக் கட்டிக்கொண்டு திரையில் தெரியும். தொடர்ச்சியே விட்டுப்போய், கத்தரி வைத்த இடமும், தொடர்புகளுமே இடம்மாறிப் போயிருக்கும்.

ஆனால் விஷ்வா அதை எல்லாம் கச்சிதமாகச் செய்தான். அதனாலேயே குறுகிய நிலையில் அவனால் இந்த அளவுக்கு அசுர வளர்ச்சி காண முடிந்தது.

மதனின் படத்தை ஏற்கவே முடியாது என அவன் இருக்க, அவனைப் பகைத்துக் கொள்ளவே முடியாத சூழலும் உருவாகவே அவனது படத்தையும் ஏற்றிருந்தான்.

சில புத்திசாலித்தனமான முடிவுகள் தன் எதிர்காலத்துக்கு நல்லது என்பதாலேயே அவ்வாறு செய்தான்.

அந்த வேலையே அவனை கழுத்தை நெரிக்க, கடந்த மூன்று நாட்களாக அவன் ஒரு பொட்டு தூங்கவில்லை.

முடித்துக் கொடுக்கிறேன் எனச் சொல்லி வாங்கியிருந்த படத்தை எல்லாம் முடித்துக் கொடுக்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு. கூடவே, மதனின் படமும் சேர அவனுக்கு வேலைப்பளு அவனைப் போட்டு அழுத்தியது.

வெளி உலகம் என்ற ஒன்றே இருப்பது அவனுக்கு நினைவில்லை. தினமும் அவன் உறங்குவது என்பது ஒருமணி நேரமோ, இரண்டுமணி நேரமோ என்றாகிப் போக, மற்றவை எல்லாம் எங்கே அவன் நினைவில் நிற்குமாம்?

அவனது அலைபேசி விடாமல் அதிர்ந்து கொண்டிருக்க, அப்பொழுதுதான் ஸ்டுடியோவுக்கு வந்த வாசுதேவன் அதைக் கவனித்தார்.

வேலை என வந்துவிட்டால், ஒரு சிறு இடைஞ்சல் கூட அவனுக்கு இருக்கக் கூடாது என்பதால், அவன் மட்டும் தனியாக அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.

வேகமாக சென்று அழைப்பது யார் எனப் பார்த்தவர், அழைப்பது அவனது தாய் என்று தெரிய, அழைப்பை ஏற்றார். அதுவும் அதற்கு முன்னர் சில பல அழைப்புக்கள் தவறிப் போயிருக்கவே, ஏதும் அவசரமோ என எண்ணியே அதை எடுத்தார்.

“சொல்லுங்க விஷ்வா அம்மா... நான் வாசுதேவன் பேசறேன்”.

“ஐயா, நீங்களும் அங்கனதான் இருக்கீங்களா? ஒரு போனைப் போட்டா அவன் எடுக்கவே இல்லை. இன்னைக்கு விசேஷ நாளும் அதுவுமா கூட வீட்டுக்கு வரலன்னா எப்படிய்யா? கொஞ்சம் சொல்லி அனுப்ப மாட்டீங்களா? அவர் வேதனையாக கேட்க, வாசனோ விழித்தார்.

“என்ன சொல்றீங்க? விசேஷமா? ஓ... இன்னைக்கு வீடு கிரகப்பிரவேசம் இல்ல...” வாசனுக்கே அந்த விஷயம் அப்பொழுதுதான் நினைவுக்கு வருகிறது என்றால், விஷ்வாவின் நிலை என்னவாக இருக்கும் என வடிவுக்குப் புரிந்து போனது.

“அவன்கிட்டே கொஞ்சம் போனைக் கொடுக்கறீங்களா?” அவர் எதிர்பார்ப்பாக கேட்க, அவரால் மறுக்க முடியவில்லை.

“ஒரு நிமிஷம் லைன்லேயே இருங்க...” சொன்னவாறே, வெளி அறையில் இருந்து, விஷ்வா இருக்கும் இடத்துக்குச் சென்றார்.

விஷ்வா, அத்தனை முனைப்போடு வேலை பார்த்துக் கொண்டிருக்க, விஷ்வாவுக்கு இந்த நேரம் பகலா? இரவா? என்பது கூடத் தெரியாது எனத் தோன்ற, ஒரு பெருமூச்சு எழுந்தது.

‘இப்போ இருக்கற எல்லாருக்குமே எல்லாத்துக்குமே அவசரம் தான்...’ எண்ணியவர், அவன் அருகே சென்று நின்றார்.

தன் அருகே விழலாடுவது புரிய, திரையில் இருந்து கண்களைத் திருப்பியவனின் கண்கள் உறக்கத்தை தொலைத்து சிவந்து போயிருந்தது. பொதுவாகவே ஏதும் தலைபோகும் அவசரம் இல்லாமல் அவர் தன் அருகே வர மாட்டார் என்பதால், கேள்வியாக அவரை ஏறிட்டான்.

“அம்மா விஷ்வா...” சொன்னவர் அலைபேசியை அவன் கரத்தில் திணித்தேவிட, கோபமாக எதையோ சொல்லப் போனவன், அதை அடக்கி தாயின் அழைப்பை ஏற்றான்.

“இப்போ என்னம்மா...” அவன் கோபமாக துவங்கும் நேரம்,

“சாமி... வீடு கிரகப்பிரவேசம் சாமி...” தாயின் குரல் அவனைத் தீண்ட, அவனது மொத்த கோபமும் வடிந்து போனது.

அங்கிருந்த தினக் காலெண்டரில் அவனது கண்கள் பதிய, அன்றைய தேதியைக் காட்டி அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது.

வடிவு விஷயத்தைச் சொல்லிவிட்டு அலைபேசியை வைத்துவிட்டிருக்க, அப்படியே அமர்ந்துவிட்டான்.

தாயின் அந்த சோர்ந்த குரல் மனதைப் பிசைந்தது. தன் சொந்தங்கள் எல்லாம் ஒரு வாரம் முன்பே வந்திருப்பார்கள் என்பதும், இன்று தன்னைக் கேட்டு அவரைத் துளைத்து எடுத்திருப்பார்கள் என்பதும் புரிய, ஒரு செயல்பட முடியாத நிலையில் தவித்தான்.

“தம்பி... சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க... மனுஷங்களுக்கு பணம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு உறவுகளும் முக்கியம். வேலை எவ்வளவு முக்கியமோ, குடும்பம் அதே அளவுக்கு முக்கியம்.

“இந்த வயசில் அதெல்லாம் பெருசாவே தெரியாது. ஆனா ஒரு நாள், பொட்டி நிறைய பணமிருக்கும், பேச்சு துணைக்கு ஆள் இருக்காது. இப்போ இல்லாத நேரம், அப்போ நிறைய இருக்கும். ஆனா தனிமையில் நிக்கற வலி எல்லாம் கொடுமை தம்பி.

“இப்போ நான் சொல்லி, இதைக் கேக்க கூட உங்களுக்கு பிடிக்காது. ஆனாலும் ஏன் சொல்றேன்னா, நான் சொல்லி இருந்தா நீங்க கேட்டிருப்பீங்களோன்னு நான் வருத்தப்படக் கூடாது பாருங்க, அதான் சொல்றேன்” அவர் சொல்ல முதல் முறையாக அமைதியாக அதைக் கேட்டான்.

“இப்போ உங்க ரத்தம் ரொம்ப சூடா இருக்கற நேரம். நேரம் காலம் இல்லாமல் உழைக்கலாம்னு தோணும். இதுல பாத்தீங்கன்னா, பகலைப் படிச்ச அதே கடவுள்தான் இரவையும் படைச்சார், ஓய்வு எடுக்கன்னு அதை நமக்கு கொடுக்கவும் செய்திருக்கார்.

“என் வயசுக்கு பிபி, ஷுகர், டென்ஷன் எல்லாம் சரி, உங்க வயசுக்கு உங்க கோபம், தலைவலி, டென்ஷன், பிபி எல்லாம் சாதாரணம் கிடையாது. இந்த இண்டஸ்ட்ரிக்குள்ள நீங்க வந்து அஞ்சு வருஷமாகுது.

“ஆனா, இந்த அஞ்சு வருஷத்துக்குள்ள நீங்க இழந்தது என்னவெல்லாம்னு உங்களுக்குத் தெரியுமா? அம்மா கையால் சாப்ட்டு எத்தனை நாளாச்சு, தம்பியோட விளையாடி எத்தனை வருஷமாச்சு, அப்பா கூட உக்காந்து பேசி எத்தனை காலமாகுது?

“இது பொறுப்புகளை சுமக்கற வயசு இல்லைன்னு நான் சொல்லலை, அதே நேரம், குடும்பத்தை விட்டு ஓடற வயசும் இல்ல. தேவைக்கு கூட நீங்க அங்கே இல்லன்னா, வேற என்ன இருந்துடப் போகுது?” அவர் தான் பேசியது அதிகம் என நினைத்தாரோ என்னவோ, பட்டென வாயை மூடிக் கொண்டார்.

அவரது பேச்சினாலா, இல்லையென்றால் அவனது தாய் வருத்தமாக பேசியதா, ஏதோ ஒன்று அவனை மௌனமாக்கி இருக்க அமைதியாகவே இருந்தான்.

“எப்படியும் இன்னைக்கு போக முடியாது... மதனுக்கு இதைக் கொடுத்தாகணும்” அவன் கத்தாமல் இப்படிச் சொன்னதே ஆச்சரியமாக இருக்க,

“இன்னைக்கு போகலைன்னாலும், நாளைக்காவது கண்டிப்பா போங்க” அவர் சொல்ல, மெளனமாக தலை அசைத்தான்.

“இதை எப்படியோ மறந்துட்டேன்... நீங்க போய்ட்டு வாங்க” இப்படிச் சொன்னவனை வியப்பு குறையாமலே பார்த்தார்.

“சரி விஷ்வா...” இவ்வளவு நேரமாக தம்பி எனச் சொன்னவர், விஷ்வா என மாற்றி அழைக்க, உள்ளுக்குள் எழுந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான்.

“இந்த வேலையை நான் வேண்ணா முடிக்கவா? நீங்க கிளம்பறீங்களா?” அவர் உதவிக்கு வர, வேகமாக மறுத்தான்.

அவரும் பழைய எடிட்டர்தான் என்றாலும், இன்றைய தொழில்நுட்பம் எல்லாம் அவருக்கு பிடிபடுவதில்லை. பிலிம் ரோலில் பழகியவருக்கு, டிஜிட்டல் கேமராக்கள் மூலம் உருவாக்கும் பிரிண்டுகள் கைவசம் ஆக மறுத்தது.

“இல்ல, இந்த வேலையை முடிச்சுட்டே கிளம்பறேன்... மதனுக்குத் தெரியவந்தா கஷ்டம்” சொன்னவன் வேலையைப் பார்க்கத் துவங்கவே, வாசுதேவன் அங்கிருந்து கிளம்பினார்.

அவர் சென்ற மறு நிமிடம், ‘நிக்கி’ என அலைபேசி ஒளிர்ந்து அதிர, அதை ஒரு தவிப்பான மனநிலையில் தள்ளிவைக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானான் விஷ்வா.

தொடரும்...