• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வண்ண நிழல்கள் - 22.

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,106
438
113
Chennai

பகுதி – 22.

பூமிகாவும், ஆகாஷும் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ள, பிரபாவின் கண்களில் கண்ணீர் நிறைந்து கன்னத்தில் வழிந்தது. தன் மகளைக் கன்னம் தாங்கி, அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைக்க, பூமிகாவிடம் பெருத்த அமைதி.

நித்யானந்தம் மகளை மென்மையாக அணைத்து, அவனையும் தன் கைகளுக்குள் இழுத்து கட்டிக்கொள்ள, “சார்... போதும்...” பூமிகாவின் உடல்நிலையைக் கருதி அவரைத் தேக்கினான்.

“நாங்க இங்கே பக்கத்துல இருக்கறோம்ப்பா...” பூமிகா சொல்ல, அவர்களுக்கு தனிமை கொடுத்து அனுப்பினார்.

மகளது வாழ்க்கை விடிந்துவிடும், அவள் இன்னும் நூறு நாள் வாழ்ந்துவிடுவாள் என்பதெல்லாம் இல்லை, அவள் சாகும் வரைக்கும், அவளுக்கு பிடித்த விதத்தில் இருக்கட்டும்’ என்பது மட்டுமே அவரது எண்ணமாக இருந்தது.

கோவிலுக்கு வெளியே இருந்த குளக்கரையில் இருவரும் அமர, “என்ன இது?” அவன் கரத்தில் தான் கட்டிய கையிற்றை வருடியவாறு கேட்டாள்.

“நான் உன் பொண்டாட்டி ஆயிட்டேன்... வேற என்ன?” அவன் சொல்ல, அவளுக்கு மெல்லிய சிரிப்பு எட்டிப் பார்த்தது.

“என்னை உங்க மனசுக்குள்ள ஏத்திக்காதீங்க” அவள் சீரியசாக சொல்ல, அவன் அவள் முகம் பார்த்தான்.

“என்னைப்பத்தி கவலைப்படறியா? இதென்ன பூமி? நான் உனக்கு மட்டும்தான்... வேற எதையும் இப்போ யோசிக்காதே” அவன் சொல்ல, அவன் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள்.

“அப்படின்னா உங்களுக்கு என்னைப் புடிக்குமா?” அவள் கேட்க, அவள் தலையில் தன் கன்னம் தாங்கியவன்,

“நீ என்ன நினைக்கறியோ அதான்... புடிக்கும்ன்னு நினைச்சா புடிக்கும்... புடிக்காதுன்னு நினைச்சா புடிக்காது... ரொம்ப புடிக்கும்னு நினைச்சா ரொம்ப புடிக்கும்...” அவனது குரல் கனிந்து கிடக்க, அவளது இதயம் படபடத்தது.

கடமைக்கென செய்யும் செய்கையில், ஒரு உயிரோட்டமோ, அக்கறையோ நிச்சயம் இருக்காது. ஆனால்... அவன் தனக்கென ஒவ்வொன்றையும் செய்கையில், அதில் நேசமோ, பாசமோ இல்லை என அவளால் நினைக்க முடியுமா என்ன?

அதற்கு மேலே அவனிடம் எதையும் கேட்கவோ, அவனும் பேச முயலவோ இல்லை. அந்த அமைதியை அனுபவித்துக்கொண்டு அமர்ந்திருந்தார்கள். அவர்களை தூரத்தில் இருந்து பார்த்த அனைவரின் கண்களும் நிச்சயம் கலங்கி இருந்தது மட்டும் உண்மை.

சற்று நேரத்தில் வீட்டுக்கு வந்த ப்ரதிக்கும், தேன்மொழியும் செல்ல சீண்டலும், ப்ரதிக்கின் அடாவடியிலும் திளைக்க, அவர்களைப் பாராமல் பார்த்திருந்தாள் பூமிகா.

தன் தோழியின் முகத்தில் கவிழும் வெட்கமும், தவிப்பும், படபடப்பும்... அவள் கன்னங்கள் சிவக்கும் அழகும், அவள் கண்கள் தன்னவனைத் தேடி சுழலும் விதமும் என அவளைப் பார்க்கவே அத்தனை கவிதையாக இருந்தது.

முதலில் இப்பொழுது திருமணம் வேண்டாம் என மறுத்தவளை, “எனக்கு உன் கல்யாணத்தைப் பார்க்கணும்... கூடவே உன்னை பத்திரமா இவங்ககிட்டே ஒப்படைச்சுட்டு போனாத்தான் என்னால் நிம்மதியா சாகக் கூட முடியும்” என பூமிகா சொன்ன வார்த்தைகள், மறு பேச்சு பேசாமல் திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தது.

“நீங்க இன்னுமே ஹால்ல என்ன பண்றீங்க? அவங்க அவங்க ரூமுக்கு போங்க...” காலையில் சீக்கிரம் எழுந்து வேலை பார்த்திருந்த களைப்பில், பிரபா அனைவரையும் போகச் சொன்னார்.

ப்ரதிக் சற்று கலவரமாக தாயைப் பார்த்தவன், தன்னவளை கண்களால் ‘வா’ என அழைத்தான்.

‘ஐயோ... நான் மாட்டேன்...’ கண்களில் அதே கலவரத்தை தனதாக்கி, வேகமாக மறுப்பாக தலை அசைத்தாள்.

‘பிளீஸ்டி...’ இப்பொழுது அவன் கெஞ்ச, ‘ம்ஹும்...’ அழுத்தமான தலை அசைப்போடு,

“பூமி... வா... வந்து படு... ரொம்ப சோர்ந்து தெரியற” தோழியை கை பிடித்து எழுப்ப, அவள் இதழ்களிலோ குறும்பு புன்னகை.

“என்னை நான் பார்த்துக்கறேன்... நீ அண்ணாவை கவனி” சீண்டலாக சொல்ல, தோழியை போலியாக முறைத்தாள்.

“பூமி... சும்மா இரு...” அடிக்குரலில் அவளை அடக்கியவள், ப்ரதிக்கை திரும்பியும் பாராமல் அறைக்குச் செல்ல, அவன் அருகே இருந்த சோபாவை கோபமாக குத்தினான்.

“என்னடா... நீ இன்னும் போகல?” தாயின் குரலில் கலைந்தவன், அதற்கு மேலே அங்கே இருந்தால் வேலைக்கு ஆகாது என்பதால், தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்றான்.

“ஏன் பிரபா...? அவங்களை விடேன்...” நித்யானந்தம் மனைவியிடம் மகனுக்காக பேச, அவரோ தன் தலையிலேயே அடித்துக் கொண்டார்.

“அவ என்ன ஓடியா போகப் போறா? இதுக்கெல்லாம் நேரம் காலம் பார்க்கறது இல்லையா? எல்லாம் எனக்குத் தெரியும், பேசாம இருங்க” அவரை அடக்க, இந்த திருமணம் நடக்கவே செய்யாதோ என பயந்தவர் ஆயிற்றே, எனவே மனைவியை மறுத்துப் பேசாமல் அமைதியாக சென்றுவிட்டார்.

சிவா ஏற்கனவே வேலைக்கு கிளம்பிச் சென்றிருக்க, காவேரியும் படுக்கப் போயிருந்தார்.

தங்கள் அறைக்கு வந்த தேன்மொழி, முதலில் பூமிகாவுக்கு உடை மாற்ற உதவி செய்ய, “இந்த ட்ரஸ் ரொம்ப வெயிட்டா இருக்கு இல்ல... கஷ்டமா இருந்ததா பூமி?” அவளிடம் கேட்க, அவளோ தன் கழுத்தில் கிடந்த ஆகாஷின் செயினை கரத்தால் வருடிக் கொண்டிருந்தாள்.

அவள் ஏதோ யோசனையிலும், லயிப்பிலும் இருக்கவே, தன் வாயை மூடிக் கொண்டவள், அவளுக்கு வேண்டியதைச் செய்ய, உடை மாற்றியவள், படுக்கையில் அமர்ந்து கொண்டாள்.

“பூமி... படுத்துக்கோ...” அவளது தோளை அழுத்தி படுக்க வைக்க முயல,

“நான் ரெஸ்ட் ரூம் போய்ட்டு வர்றேன்” அவள் எழுந்துகொள்ள, “உள்ளே லாக் போடாதே...” வழக்கமாக அவளிடம் சொல்லும் அதே டயலாக்கைச் சொல்ல, தோழியைப் பார்த்து புன்னகைத்தாள்.

“நான் ரொம்ப சுயநலவாதியோ தேனு?” சற்று கவலையாக அவள் கேட்க, தோழியின் கன்னத்தை பாசமாக வருடினாள்.

“அப்படி இருந்ததால்தான் எனக்குன்னு ஒரு குடும்பம் கிடைச்சிருக்கு. இல்லன்னா அனாதையா நின்னிருப்பேன்...” அவள் கண்கலங்கவே, தன்னையே கண்டித்துக் கொண்டாள்.

“சந்தோஷமா இருக்க வேண்டிய நாள், எதுக்கு தேனு கண்ணெல்லாம் கலங்கற?” அவளையும் கடிந்துகொள்ள,

“இது ஆனந்தக் கண்ணீர்... நீயும் கண்டபடி பேசாதே... உனக்கு சந்தோஷமா? எனக்கு வானம் அளவுக்கு சந்தோஷமா இருக்கு பூமி” சொன்னவள் தோழியின் கன்னத்தில் இதழ் பதிக்க, அவளோ சிரித்துக் கொண்டாள்.

“இந்த முத்தத்துக்கு எல்லாம் சொந்தக்காரன், உரிமைக்காரன் ஒருத்தன் வந்துட்டான். இனிமேல் நீ அவனுக்குத்தான் இதெல்லாம் கொடுக்கணும்” குறும்பு புன்னகையில் அவள் சொல்ல, தேன்மொழியின் முகத்தில் சட்டென ஒரு செம்மை பரவியது.

“இதென்ன காலியாகற கடைச்சரக்கா? அதெல்லாம் நிறையவே ஸ்டாக் இருக்கு... இது உனக்கானது... ஒரு வேளை...” எதையோ சொல்லத் துவங்கியவள், சில தனிப்பட்ட கேலிகள் அவளை படபடக்கச் செய்தால், அதன் எதிர்வினைகளை எண்ணி சட்டென வாயை மூடிக் கொண்டாள்.

“நீ போய்ட்டு வா பூமி...” அவள் சொல்லவே, தோழி சொல்லாமல் விட்டது அவளுக்குப் புரிய, அவள் கரத்தை தட்டிக் கொடுத்துவிட்டு சென்றாள்.

உள்ளே நுழைந்தவள், அந்த வெஸ்ட்டர்ன் டாய்லெட்டின்மேல் அமர்ந்தவள், அந்த செயினை எடுத்து, அதில் இதழ் பதித்தாள்.

“ஆகாஷ்...” மெதுவாக சொல்லிப் பார்த்தவளுக்கு, அவன் அருகே இருக்க வேண்டும்போல் இருந்தது.

அதே நேரம்... தேன்மொழியிடம் இருக்கும் அலைபேசி அதிர்ந்து அவளது கவனத்தை திருப்ப, முந்தானையில் இருந்த பின்னை அகற்றியவளின் கவனம் அதில் செல்லவே, “மொழி... மொழி...” என ப்ரதிக் விடாமல் செய்தி அனுப்ப, வேகமாக அதை கையில் எடுத்துக் கொண்டாள்.

“ம்...” அவள் ஒற்றை எழுத்தை அவனுக்கு பதிலாக அனுப்ப, பல முத்த ஸ்மைலிகள் படை எடுத்தது.

“என்ன பண்ற?” கூடவே செய்தியும் வர,

“படுக்கப் போறேன்...” அவனுக்கு தகவல் கொடுத்தாள்.

“பூமி?” அவன் கேட்க,

“வாஷ்ரூம் போயிருக்கா...” அவள் செய்தி அனுப்ப, அதற்கு எந்தவிதமான பதிலும் இருக்கவில்லை.

தோளைக் குலுகியவள், புடவையில் ஆங்காங்கே குத்தியிருந்த ‘பின்’களை எல்லாம் அகற்ற, தங்கள் அறைக்கதவு திடுமென திறந்து மூடும் ஓசையில் திடுக்கிட்டு திரும்பியவள், அங்கே ப்ரதிக்கை நிச்சயம் எதிர்பார்க்கவே இல்லை.

முந்தானையை எடுத்து நலுங்காமல் படுக்கையில் விட்டிருந்தவள், கையில் இருந்த மொத்த பின்’னையும் கீழே வைத்துவிட்டு, முந்தானையை எடுக்கும் முன்னர், கண்ணிமைக்கும் நேரத்தில் அவளை நெருங்கியவன், அவளை இழுத்து அணைத்திருந்தான்.

“ஹையோ... என்னங்க... இங்கே என்ன பண்றீங்க?” பதறிய அவளது இதழ்கள், அவன் இதழ்களுக்குள் இப்பொழுது அலறிக் கொண்டிருக்க, அவனோ அவள் இதழ்களை மொத்தமாக கவ்வி சுவைத்துக் கொண்டிருந்தான்.

“சத்தியமா முடியலை மொழி...” முத்தத்துக்கு இடைவெளி விட்டு பிதற்றியவன், மீண்டுமாக அவளை முத்தமிட, மொத்தமாக தடுமாறிப் போனாள்.

“பூமி இருக்கா...” சின்னக் குரலில் அவனைத் தேக்க முயல,

“அதெல்லாம் அவ தப்பா நினைக்க மாட்டா... சந்தோஷம்தான் படுவா...” சொன்னவன், அவள் கன்னத்தில் முத்தமிட்டு, கள்வெறி கொண்டு, அவள் கழுத்தில் இறங்கி, அவள் தேகத்தில் முகம் பதிக்க, பதறினாள்.

அதுவும் அவன் இதழ்பதித்து, பல்த்தடம் வேறு பதிக்க, “ம்மா...” அவன் சிகைக்குள் கை கோர்த்து நெரித்தவள், அவனை விலக்க முயன்றாள். பெரும் பசியில் இருப்பவனிடம் பிரியாணி பொட்டலத்தை கொடுத்துவிட்டு, அதைப் பிரிக்காதே எனச் சொன்னால் முடியுமா என்ன?

அவனோ இன்னும் அழுத்தமாக அவளில் பதிய, “முத்தத்தோட விடுவீங்கன்னு பாத்தா, இதென்ன...” அவனது அடாவடி தாங்க முடியாமல் திணறினாள்.

“மொழி... இப்படியே இருந்தேன்னா நைட்டுக்குள்ள ஒரு வழி ஆயிடுவேன். பிளீஸ் டி...” தன் உணர்வுகளை அவளிடம் வெளிப்படுத்தி அவன் கெஞ்ச, அவளுக்கு பாவமாக இருந்தாலும், தோழியை அறைக்குள் வைத்துக்கொண்டு அவனோடு இருக்க முடியுமா என்ன?

“ஒரு பத்து நிமிஷம் நீங்க உங்க ரூம்ல இருங்க, நான் அங்கே வர்றேன்... பிளீஸ்...” அவள் அவனை சமாதானப்படுத்த, அரை மனதாக அவளை விட்டு விலகினான்.
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,106
438
113
Chennai
“நைட் வரைக்கும் வெயிட் பண்ண முடியாதா?” சின்னக் குரலில் அவனிடம் கேட்க, அவனோ அவளை மீண்டும் நெருங்க முயல, வேகமாக பின்வாங்கினாள்.

“இப்போ என்னால தனியா எல்லாம் இருக்க முடியாது” அவன் தெளிவாக சொல்லி, அவளை மென்மையாக அணைத்துக் கொள்ள, அவளுக்குள் அத்தனை தடுமாற்றம்.

“சரி நீங்க போங்க...” அவனை அனுப்ப, அதன் பிறகே பூமிகாவைத் தேடி ஓடினாள்.

“பூமி...” அவள் குரல் கொடுக்கவே, தோழியை குறுகுறுவென பார்த்தவாறு அவள் வெளியே வர, தேன்மொழியால் அவளை ஏறிட்டு பார்க்கவே தயக்கமாக இருந்தது.

அதை உணர்ந்த பூமிகா, “தேனு... ஃப்ரீயா விடு... இதில் உன் தப்பு எதுவும் இல்லை. நான் மாடிக்கு போறேன்... நீ அண்ணாவை கவனி...” அவள் சொல்ல, அவளது கரத்தைப் பற்றி தடுத்தவள், தன் அலைபேசியை எடுத்துக் கொண்டு படுக்கையில் அமர்ந்தாள்.

அவளது செய்கையைப் பார்த்தவள், “தேனு, ட்ரஸ்ஸை கூட மாத்தாமல், உடனே மெஸ்சேஜா?” குறும்பாக வினவ, அவளையும் தன் அருகே அமர்த்தியவள், அவள் முன்பாகவே தன்னவனுக்கு செய்தி அனுப்பினாள்.

கூடவே... “பூமி... தற்கொலை எண்ணம் முதல், இந்த செக்ஸ் ஃபீல் வரைக்கும், அந்த நிமிஷத்தைக் கடந்துட்டா, நாம செய்ய இருந்ததோட எதிர்விளைவும், முட்டாள்த்தனமும் நமக்கு ரொம்ப தெளிவா புரியும்” அவள் சொல்ல, தோழியை வியப்பாக ஏறிட்டாள்.

“என்னென்னவோ சொல்ற தேனு...” அவளது பதிலை கவனிக்கும் நிலையில் தேன்மொழி இருக்கவில்லை.

“நான் சொல்ல நினைக்கறதை டைப் பண்ணி அனுப்பினா சரி வராது... இரு...” சொன்னவள் ரெக்கார்டிங்கை தெரிவு செய்தாள்.

“என்னங்க... நான் சொல்லப்போறதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க. கிணத்து தண்ணியை ஆத்து வெள்ளம் அடிச்சுட்டு எல்லாம் போகாது. அது மட்டும் இல்லை... நம்ம வாழ்க்கையை நாம இன்னைக்குதான் ஆரம்பிக்கறோம், அது எல்லா விதத்திலும் பெரியவங்களோட ஆசீர்வாதத்தோட இருக்கணும்னு நான் ஆசைப்படறேன்.

“அவங்க நம்ம மேல வச்சிருக்க நம்பிக்கை... அது எந்த விதத்திலும் காப்பாற்ற முடியாமல் போறதை நாம எப்படி செய்யலாம்? உங்களோட அந்த எமோஷனை கடந்த உடனே எழற அந்த குற்ற குறுகுறுப்பு... நம்ம வாழ்க்கையை சந்தோஷமா ஆரம்பிக்க வேண்டிய நேரத்தில், அந்த உணர்வோடையா ஆரம்பிக்கறது?

“இந்த ஜென்மம் முழுக்க நான் உங்களோட இருப்பேன்... இன்னைக்கு தான் நம்ம வாழ்க்கை ஆரம்பிக்குது. கொஞ்சம் யோசிங்க... இதுக்கு மேலையும் உங்களுக்கு நான் உடனே வேண்டும்னா... நான் ரூம்ல தனியாத்தான் இருக்கேன்... வாங்க...” சொன்னவள் அலைபேசியை கீழே வைக்க, பூமிகாவிடம் வியந்த பார்வை.

“எப்படி தேனு... அவன் வருவானா? மாட்டானா?” அவளிடம் கேட்க, அவள் அருகே இருந்து எழுந்து கொண்டவள், உடை மாற்றத் துவங்கினாள்.

“அதெல்லாம் மாட்டார்... உங்க அண்ணாவைப் பத்தி எனக்கு தெரியாதா?” அவள் அத்தனை நம்பிக்கையாக சொல்ல, அதே நேரம் அவனிடமிருந்து பதில் குறுந்தகவல் வர, பூமிகா அதைப் பார்த்தவள், அமைதியாக அமர்ந்து கொண்டாள்.

“என்னவாம்...?” தேன்மொழி கேட்க,

“அதை நீயே தனியா கேட்டுக்கோ... உன் பெர்சனலுக்குள்ளே என்னை வைக்காதே தேனு” அதை ஒரு கோரிக்கையாகவே வைக்க, தேன்மொழிக்கு தன் தோழியை நினைத்து அத்தனை பெருமை.

பூமிகாவின் முன்பாகவே அவள் உடையை மாற்றி முடிக்க, “ஹேர் அலங்காரம் எல்லாம் ரிமூவ் பண்ண ஹெல்ப் பண்ணவா தேனு? இப்படியே இருந்தா ரொம்ப தலை வலிக்கும்” சொன்னவள் அவளை அமர்த்தி அதைச் செய்ய, தேன்மொழியின் கண்கள் கலங்கியது.

“என்ன தேனு?” அவளது கண்ணீரைப் பார்த்துவிட்டு கேட்டாள்.

“நீ மட்டும் இல்லன்னா என்னோட வாழ்க்கை என்னை எங்கே இழுத்துட்டு போயிருக்கும்னு நினைச்சேன்...” சொன்னவள், தோழியின் பக்கம் திரும்பி, அவளை இடையோடு கட்டிக் கொள்ள, மென்மையாக அவளை அணைத்துக் கொண்டாள்.

“கடவுள் போடற கணக்குக்கு முன்னாடி, நாம செய்யறது எதுவுமே இல்லை தேனு” அவளுக்கு பதில் கொடுக்க, தேன்மொழி அதற்குமேல் தோழியை தொல்லை செய்ய விரும்பவில்லை.

அவளிடமிருந்து அவள் விலக, “நான் மாடிக்கு போய்ட்டு வர்றேன்...” அவளது குரலில் இருந்த துள்ளலில், கரை காண முடியாத காதலில், எதிர்பார்ப்பில் கரைந்தது தேன்மொழியின் மனம்.

“என்ன பூமி இப்படி ஆயிட்ட?” அவளிடம் கேட்கவும் செய்தாள்.

“எனக்கு சொல்லத் தெரியலை தேனு... ஒரு மாதிரி ‘Madness’ன்னு வச்சுக்கோயேன். அவரோட குரலை இப்போவே கேட்டாகணும்னு ஒரு ஆசை, அவரோட முகத்தை இப்போவே பாத்தாகணும்னு ஒரு பரபரப்பு... இந்த ‘Madness’ இதுவரைக்கும் என் வாழ்நாளிலேயே நான் அனுபவிச்சே இராதது.

“ஒரு மாதிரி பித்து பிடிச்சாப்ல... அவரை எனக்கு அந்த அளவுக்கு பிடிச்சிருக்கு. அவருக்கு என்னை பிடிச்சிருக்கா? இல்லையாங்கறதைப் பத்தி எல்லாம் யோசிக்க கூட மாட்டேங்கறேன். அப்படி ஒரு ‘Madness’...” அவள் சொல்லிக் கொண்டே போக தேன்மொழி தன் கலக்கத்தை தனக்குள் மறைத்தாள்.

“அவருக்கும் உன்னை கண்டிப்பா புடிக்கும் பூமி” அவள் தோழிக்கு ஆறுதல் அளிக்க முயல,

“ம்ஹும்... இல்ல.... என்னை அவருக்கு புடிக்க வேண்டாம்னு தோணுது. அவர்கிட்ட நான் இப்போ எதிர்பார்க்கற இதுவே சுயநலம்ன்னா... அது... ரொம்ப பெரிய சுயநலம் தேனு. எனக்குப் பிறகு அவருக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு... அதை அவர் வாழணும்...” அவள் சொல்லச் சொல்ல, இந்த புரிதலுக்கான பலன் என்னவென அவளுக்கு தோன்றியது.

“அவரோட குரல் கேட்கறப்போ எல்லாம்.... அவரை பார்க்க கூட வேண்டாம்... இங்கே என் பக்கத்திலேயே, என்னைச் சுத்தியே இருக்கறாங்கன்னு உணர்ந்தாலே... மனசு தன்னால பட்டமாகும்.

“இந்த உலகமே அழியப்போகுது... இப்போவே என்னை கட்டி புடிச்சுக்கோ, மடியில தாங்கிக்கோ, என்னை அரவணைச்சுக்கோன்னு கதற தோணுது” அவள் சொல்லச் சொல்ல, அந்த அன்பின் ஆழத்தில் அமைதியானாள்.

அவளது பேச்சை, அவளைக் காண வந்த ஆகாஷும் கேட்டிருக்க, உள்ளே நுழைந்து, அவளைத் தன் கரங்களுக்குள் இழுத்து கட்டிக்கொள்ள எழுந்த ஆவலை அடக்கிக்கொண்டு வேகமாக மாடியேறிவிட்டான்.

அவன் நினைத்த எதையாவது அவன் செய்து வைத்தால், பூமிகாவின் நிலை எப்படி மாறும் என அவனுக்குத் தெரியவரவே, அதை செய்ய முடியாத நிலையில் அங்கிருந்து அகன்றான்.

அவன் சென்ற மறு நிமிடம், அத்தனை நேரமாக உணர்ச்சிவசப்பட்டு பேசிய பூமிகாவிடம் ஒரு பெரும் நடுக்கமும், மூச்சுத் திணறலும், இதழ்களில் மெல்லிய நீலம் பூக்க, தேன்மொழி உள்ளுக்குள் பதறிப் போனாள்.

“பூமி... பேசாத... முதல்ல படு...” அவளைப் படுக்க வைத்தவள், ஆக்ஸிஜன் மாஸ்க்கை அணிவிக்க, அதன் பிறகே சற்று தெளிந்தாள். அப்படியும் அவளால் ஒரு நிலைக்கு வர முடியாமல் போகவே, அவள் அருகே படுத்துக் கொண்ட தேன்மொழி, தோழியை மென்மையாக அணைத்துப் படுத்தாள்.

உள்ளுக்குள் இதயம் தாறுமாறாக துடிக்க, கண்களோ பூமிகாவையே வெறித்தது.

“எனக்கு ஒண்ணும் இல்ல...” அவள் திணறி உரைக்க,

“பேசாத பூமி... நீ நல்லா இருக்கன்னு எனக்கு தெரியுது. கொஞ்சம் பேசாதேயேன். இப்போ எல்லாம் நீ நிறைய பேசற... அது நல்லதில்லை, வேண்டாம். எனக்கு உன்னைப் புரியும்” அவள் சொல்லிக்கொண்டு இருக்கையிலேயே பூமிகா தன் விழிகளை மூடிக் கொண்டாள்.

“என் உடம்பு ரொம்ப மோசமாயிட்டே போகுது தேனு... இருக்கற நாளை எனக்கு அவரோடதான் வாழணும்” அந்த குரலில் இருந்த ஏக்கம்... அது அவளை கசக்கிப் போட, பட்டென எழுந்து அமர்ந்தாள்.

“இப்போ என்ன...? உனக்கு அவரோட இருக்கணும் அதானே... வா... நான் கூட்டி போறேன்” சொன்னவள், அவளை கைத்தாங்கலாக எழுப்பி அமர வைக்க, அவளது முகம் பெருமளவு சோர்ந்து கிடந்தது.

இதுவே சென்னையில் இருந்த பூமிகாவாக இருந்திருந்தால், அவள் அனுபவிக்கும் கஷ்டத்துக்கு, தன் படுக்கையை விட்டே எழாமல் படுத்துக் கிடந்திருப்பாள் என்பது புரிய, ஒரு விதத்தில் இது அவளை ஆறுதல் படுத்தியது.

கூடவே இவளது இந்த கஷ்ட நேரத்தில், இவளை அங்கே அனுப்பினால், ஆகாஷ் என்ன நினைத்துக் கொள்வான்? என நினைக்கையில் ஒரு பக்கம் கவலையும் எழுந்தது.

பூமிகாவோ தன் உடலை தூக்கிக்கொண்டு எழுந்துவிட, தேன்மொழி அவளோடு நடந்தாள்.

“நானே...” ‘போய்க்கொள்வேன்’ என்னும் விதமாக சொல்ல,

“மாடி வரைக்கும் வந்து விட்டுட்டு கீழே இறங்கிடறேன்” அவளது பிடிவாதம் ஜெயிக்க, இருவரும் மாடியேறி வருகையில், ஆகாஷ் சில சிறுவர்களோடு பேசிக் கொண்டிருந்தான்.

“டேய்... நீ வரைந்த இந்த நாய்க்குட்டி ரொம்ப அழகா இருக்குடா...” அவன் ஒரு சிறுவனைப் பாராட்ட அவன் முகத்தில் அத்தனை பெருமை.

மற்றொரு சிறுவன் அந்த படத்தை அருகே சென்று உற்று பார்க்கவே, “இவனே, ரொம்ப கிட்ட போகாதடா... நாய் நக்கி வைக்கப் போகுது” அவன் பின்னந்தலையில் மென்மையாக தட்டி அவன் சொல்ல, சுற்றி இருந்த சிறுவர்கள் எல்லாம் சிரித்துவிட்டார்கள்.

கூடவே தேன்மொழியும், பூமிகாவும் கூட சிரித்துவிட, அந்த குரலில் அவர்கள் பக்கம் திரும்பியவன், “ஓகேடா... நீங்க எல்லாம் போய்ட்டு நாளைக்கு வாங்க...” சிறுவர்களை அனுப்பியவன், அவர்கள் பக்கம் வந்தான்.

“இப்போ எதுக்கு இவ்வளவு சிரமப்பட்டு மாடி வரைக்கும் வர்ற? எனக்கு ஒரு குரல் கொடுத்திருக்க வேண்டியதுதானே?” கேட்டவன், தேன்மொழியின் கரத்தில் இருந்து ஆக்ஸிஜன் சிலிண்டரை வாங்கிக் கொண்டான்.

அதை வாங்குகையில் தேன்மொழி அவன் முகத்தையே பார்த்திருக்க, அவளை நிமிர்ந்து பார்க்கவே, ‘இவளுக்கு சுத்தமா முடியலை...’ என கண்களை உருட்டி, இதழ் பிதுக்கி என அவள் சொல்ல, ‘நான் பார்த்துக் கொள்கிறேன்’ என இமைகளை மூடி தைரியம் சொன்னவன் அவளை அனுப்பிவிட்டு, கதவை இந்தப்பக்கம் தாழ் போட்டு பூட்டினான்.

‘இது எதுக்கு?’ என்பதுபோல் பூமிகா அவன் முகம் பார்க்க,

“புதுசா கல்யாணம் ஆனவங்க... தனியா இருக்கும்போது யாராவது வந்து தொல்லை பண்ணாம இருக்கணும்ல்ல... அதான்...” அவன் சொன்ன விதத்தில், அவளுக்கு வெட்கம் வருவதற்கு பதில், சிரிப்பு வந்தது.

“வா... வந்து உக்கார்...” அவளை அழைத்துச் சென்று அங்கே கிடந்த கட்டிலில் அமர்த்தியவன், தானும் அவள் அருகே அமர்ந்தான்.

பூமிகா சோர்ந்து தெரிய, அவளுக்கு ஓய்வு ஒன்றே இப்போதைய தேவை என அவனுக்குப் புரிந்தது. நிச்சயம் அவளால் இப்பொழுது கலகலப்பாக பேசி, சிரித்து மகிழ்ந்திருக்கும் நிலையில் அவள் இல்லை எனப் புரிய, மனதுக்குள் ஒருவித வலி.

அதை தனக்குள் புதைத்து அவள் முகம் பார்க்க, “என்ன பூமி...” அவன் வருடும் குரலில் கேட்க,

“நான் உங்களை தொட்டுக்கலாமா?” அவள் மெல்லியதாக சின்னக் குரலில் கேட்க, அவனுக்குள் குட்டி சுனாமியே எழுந்து சுழற்றி அடித்தது.

தொடரும்....
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,106
438
113
Chennai
அச்சோ எவ்வளவு நாள் இந்த அவஸ்தை, வேதனை பாவம் இருவரும்

அவர்களுக்கென கடவுள் கொடுத்திருக்கும் காலம் வரைக்கும் வேற வழி இல்லையே.

நன்றி!
 

Thani

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 2, 2023
88
40
18
Deutschland
"நான் உங்களை தொட்டுக்கலாமா.."இந்த வார்த்தைகளுக்குள்ள எத்தனை அர்த்தங்கள் ...
முடியல ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு ,அம்மாடியோ ....இவங்களுக்கு ஏன் இந்த கஷ்டம்😢
 
  • Like
Reactions: Infaa

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,106
438
113
Chennai
"நான் உங்களை தொட்டுக்கலாமா.."இந்த வார்த்தைகளுக்குள்ள எத்தனை அர்த்தங்கள் ...
முடியல ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு ,அம்மாடியோ ....இவங்களுக்கு ஏன் இந்த கஷ்டம்😢

முற்றிலும் உண்மை.

இந்த கஷ்டம் எல்லாம் இவங்களுக்கு வந்திருக்கவே வேண்டாம்.
 
  • Love
Reactions: Thani

saru

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 24, 2022
318
26
28
Hosur
Nice infaa