• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

விருத்தம் -01

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,272
497
113
Tirupur
காதலின் விருத்தம்
அத்தியாயம்–1
தொட்டு விடும் தூரம்தான் அந்த வானம், ஆனால் தொடுவதற்கு விரும்பவில்லை என்று தெனாவட்டாக பனிக்காற்றிடம் உதார் விட்டுக் கொண்டிருந்தது. அந்த மேற்கு தொடர்ச்சி மலை..!
வேகமாக மரங்களை அசைத்துக் கைக்கொட்டி சிரித்துக் கொண்டிருந்தது, விஷயம் புரிந்த காற்று..!
அடிவாரத்தில் பெயர் தெரியாத இசைக்கருவி, சந்தங்களில் பாட்டெழுதி வாசிப்பது போல சல சலத்துக் கொண்டிருந்தது குட்டி அருவி..!
மல்லிகையா..? முல்லையா..? என இனம் காண முடியாமல் மனத்தது காட்டு மலர்களின் வாசனை.!
யாராக இருந்தாலும் சட்டென்று வினாடியில் காதல் மலர்ந்து விடும் அந்த இடத்தில் நின்றால்..!
அப்படி மலராமல் இருந்தால் அது மலட்டு இதயமாகத்தான் இருக்க முடியும்... அவனுக்கு மலட்டு இதயமில்லை... அவன் மனதிலும் காதல் இருந்தது.. இருக்கிறது.. இனியும் இருக்கும்... இது அவனின் உயிரானவளுக்கும் தெரியும்..
ஆனால் என்ன செய்ய முடியும் அவனால், இல்லை அவளால்.? சிறுவயதில் பெரியவர்களின் வார்த்தைகள்தான் இருமனங்களிலும் நேசம் அரும்ப காரணம்.
ஆனால் இன்று அத்தனை உறவுகளும் பொய்த்துப் போனதே என்று எண்ணும் போது ஆறிய காயத்தை கீறி விட்டதுபோல் மீண்டும் ரணமாய் வலித்தது அவனுக்கு...
இன்றுதான் அவனுடைய வேலை உயர்வுக்கான கடிதம் வந்திருந்தது. அதைப் பார்த்தவனுக்கு மனம் நிலையில்லாமல் தவித்தது. அவனது ஒவ்வொரு இன்பமும், துன்பமும் இந்த அருவிக்கு தெரியாமல் இருந்தது இல்லை. இன்றும் அப்படித்தான் அவனின் இந்த வேலை உயர்வை தன் அருவி தோழியிடம் கூறிவிட வந்துவிட்டான்.
இது அவனுக்கு இன்பமா என்று கேட்டால் இல்லை.. அவனது லட்சியமே வேறாய் இருந்தது.. ஏரோனாடிகல் இஞ்சினியரிங் அவனது கனவு, லட்சியம். ஏன்..? அது தான் அவன் வாழ்க்கை என்றும் கூட சொல்லலாம்.
ஆனால் நடந்தது வேறு.. அவனது கனவு கோட்டைகள் நொடியில் சரிந்து தரைமட்டமானது ஒரு நாளில்.
ஆம். ஒரே நாளில் அவனது குடும்ப நிலவரம் தலைகீழாய் போனது. காரணம் அவனது தந்தை இந்த பூவுலகை விட்டு மொத்தமாய் பிரிந்ததுதான்.
அவர் மட்டும் இன்று இருந்திருப்பின் இந்த ஆறாண்டுகளில் அவன் ஒரு இஞ்சினியர். அவன் குடும்பமும் இன்று மற்றவர்களைப் போல் பெயர் சொல்லும் அளவிற்கு முன்னேறி இருக்கும். மனிதர்களின் ஆசைகளும், எண்ணங்களும், செயல்களும் உண்மையாகிப் போயின் அங்கு தெய்வத்திற்கு என்ன மதிப்பு.!
அவன் தந்தை உயிருடன் இருந்திருந்தால் இப்படி தேயிலைக் காட்டில் மழையிலும், பனியிலும், கடுங்குளிரிலும் கஷ்டப்பட விட்டிருக்கமாட்டார்…
இல்லையென்றாலும் இப்படி உண்மையான உறவுகளை அடையாளம் தெரிந்திருக்க முடியாது.. பொய்யான அன்பை நம்பி ஏமாந்து போன தன் குடும்பத்தையும், தன்னையும் எண்ணி ஒரு கசந்த முறுவல் உண்டானது அவன் இதழ்களில்...!
‘விர்ர்...’ என்ற ஊதல்காற்றில் யூகாலிப்டஸ் மரங்களின் சத்தத்தில் நினைவுக்கு வந்தவன், இனியும் தாமதிக்க முடியாது வீட்டில் இருப்பவர்களிடம் இந்த செய்தியைக் கூற வேண்டும், தனக்கு மகிழ்ச்சி இல்லையென்றாலும், அவர்களாவது சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் இருக்கட்டும் என்று எண்ணியவன், தன் தோழியிடம் மௌனமாய் விடைபெற்று வீடு நோக்கி நடர்ந்தான்.
இவன் சிவரூபன். சரவணன்-சாந்தா இருவருக்கும் பிறந்த இளையவன். மூத்தவள் ஓவியா. அழகில் ரவிவர்மனின் ஓவியமேதான். என்ன சற்று சாய்ந்த ஓவியம். ஆம்.! சிறுவயதில் போலியோ தொற்றினால் அவளது வலதுகால் மட்டும் பாதிக்கப்பட்டது.
பிறரின் உதவியின்றி நடக்க முடியும் அவளால். ஆனால் நடைமட்டும் சற்று சாய்ந்தாற்போல் இருக்கும். சாந்தாவின் தம்பியான விமலிற்கே திருமணம் முடித்துவிட இவர்களுக்கு ஒன்னரை வயதில் நவ்தீப் என்ற ஆண்குழந்தை இருக்கிறது.
அடுத்தது சிவரூபன். பள்ளிப்படிப்பை முடித்து தேர்வு முடிவுகளுக்காக காத்திருந்த வேளையில், அவனது தந்தை தேயிலைக்காட்டில் வேலை செய்துக் கொண்டிருக்கும் போது, எதிர்பாராதவிதமாக யானை மிதித்து இறந்து விட, அவரது வேலை வாரிசு அடிப்படையில் இவனுக்கு கொடுக்கப்பட, இந்த ஆறு வருடங்களாக குடும்ப பொறுப்பை ஏற்று நடத்துபவன்.
அவனுக்கு அடுத்து இளையவள் காவ்யா.. திருச்சூரில் டீச்சர் ட்ரெயினிங்கில் கடைசி வருடம் படிக்கிறாள். இன்னும் இரண்டு மாதத்தில் அவளது படிப்பும் முடிவடைகிறது. படிப்பு முடியும் தருவாயில் இருக்க, அவளுக்கு முன்கூட்டியே வேலையும் கிடைத்துவிட்டது. சென்னை டான்போஸ்கோ பள்ளியில் வேலை.. படிப்பு முடிந்ததும் உடனே சேர வேண்டியதுதான்.
இவர்களின் முன்னோர்கள் தமிழகத்தின் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள். வெள்ளையர்கள் நம் நாட்டை ஆட்சி செய்த சமயம், பஞ்சம் தலை விரித்தாடியபோது தன் சந்ததிகளாவது வறுமையில் இருந்து மீழட்டும் என்ற முடிவுடன் கிராமம் கிராமமாக அன்று கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தை நோக்கியும், தமிழகத்தின் கோவை மாவட்டம் வால்பாறையை நோக்கியும் இடம் பெயர்ந்தவர்கள்.
அன்று மூன்று வேளை சாப்பாட்டிற்காக, தங்கள் சுயத்தை இழந்து வெள்ளையனுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து வாழ்க்கையைத் தொலைத்தவர்கள்.
ஆனால் இன்றோ அந்த வேலைக் கிடைக்காதா எனும் ஏக்கம் இன்னும் சில மக்களிடம் உண்டு.. ஒரு அரசு ஊழியருக்கு உண்டான அத்தனை சலுகையும் உண்டு அவ்வேலையில்.... ஆனால் என்ன...? பனியிலும், மழையிலும் குளிரிலும் கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டும்..
(பரதேசி படம் உங்கள் முன் நிழலாடுகிறதா? அந்தப் படத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் உண்மையும் கூட.)
-
கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை.
அமைதியான இரவு திடீரென்று பரபரப்பானது. “சிஸ்டர் சிஸ்டர் அவருக்கு மூச்சு திணறல், அதிகமாயிடுச்சு. சீக்கிரம் வாங்க சிஸ்டர்.....” என்ற அங்கிருந்த பெண்மணி ஒருவரின் அழைப்பில் அந்த ஜெனரல் வார்டுக்கு சென்ற நர்ஸ் துளசி, உடனே தன்னால் ஆன பர்ஸ்ட் எய்டை முடித்தவள்... ஓட்டமும் நடையுமாய் நைட் டுட்டி பார்க்கும் டாக்டரிடம் ஓடினாள்.
“டாக்டர் அந்த மேல் வார்ட்ல 11 நம்பர் பெட்ல இருக்க பேசன்ட்க்கு சடனா பிரீதிங் அப்நார்மல் கண்டிசன் ஆகிடுச்சு. எமர்ஜென்சி டாக்டர்.”
“ஓமைகாட். ஜஸ்ட் பாஸ்ட். பேசண்ட் பல்ஸ் என்ன.? o2 கொடுத்தாச்சா.?. பீபி என்ன இப்போ..? என்ன இன்ஜக்சன் கொடுத்துருக்கு? ICU சிப்ட் பண்ணியாச்சா.?” என்று தன் கேள்விகளை அடுக்கிக்கொண்டே நர்சின் பின்னால் ஓடினாள் சக்தியாழினி.
டாக்டர் சக்தியாழினி. மருத்துவப்படிப்பை முடித்து நான்கு மாதங்களே ஆகியிருந்த நிலையில், அங்குள்ள டீனின் மூலம் ஆறு மாதம் பயிற்சி மருத்துவராக பணியாற்றிக் கொண்டிருக்கிறாள்... இந்த வாரம் அவளுக்கு நைட் டுட்டி.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகில், மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம்தான் ஆனைமலை..
செல்வராஜ் அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியர்... லட்சுமி இல்லத்தரசி.. இவர்களின் மூத்தவன் அர்ஜுன் சென்னையில் ஒரு MNC கம்பெனியில் IT துறையில் வேலை பார்க்கிறான்.
இளையவள் தான் சக்தியாழினி. இந்தக் கதையின் நாயகியும் கூட..