• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
இரவு நேரம் இருவருக்குமாக பால் காய்ச்சி ஆழியிடம் அறைக்கு கொடுத்துனுப்பினார் வெங்கடேஸ்வரி. அறைக்குள் நுழைவதற்கு முன் மகளின் முகமாற்றத்தையும், அதனால் உண்டான தடுமாற்றத்தையும் குறித்துக் கொண்டது அந்த கபடமற்ற அன்னை மனம்.

அறைக்குள் தனது பரிட்சைகாக குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்தான் அம்புதி. பால் டம்ளரை அவன் முன்னால் நீட்டிட மறுப்பு கூறாமல் வாங்கிக் கொண்டான். ஆழியின் உபசரிப்புகள் எதையும் இது நாள் வரை ஏற்றிடாதவன், இப்போதோ அனைத்தையும் சிறு முக மாற்றம் கூட காட்டாமல் ஏற்றுக் கொள்ளவே, அவளுக்கு அது புது விதமாக இதம் பரப்பியது.

இதற்கு முன்னும் இருவரும் ஒரே அறையில் தங்கியிருக்கிறார்கள் தான். ஆனால் அன்றெல்லாம் இல்லாத இந்த அசாத்திய சூழ்நிலை ஆடவன் மனதை வதைத்ததோ!, கலைத்ததோ! அப்படியே புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, பார்வைக்குக் கூட இடமளிக்காது பெண்ணவளுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டான்.

மறுநாள் காலை வழக்கம் போல் நேரத்திற்கு எழுந்து தன் அன்னைக்காக மட்டுமே தலை குளித்து கல்லூரிக்கு தயாராகிக் கொண்டிருந்தாள் ஆழி.

ஒரே நாளில் தன் அன்னையின் பார்வை பல நேரங்களில் தன்னை ஆராய்வதைக் கண்டவள், 'பகல் பொழுதிலேயே தன் மேல் இத்தனை ஆராய்ச்சிப் பார்வையை பதிக்கிறார் என்றால், காலைப் பொழுதில் விட்டு வைப்பாரா என்ன!' என்ற எண்ணத்தில் சிறு ஒப்பனை மட்டுமாவது செய்து கொண்டு தான் கதவைத் திறக்க வேண்டும் என்ற முடிவுடன் கண்ணாடி முன் சென்று நின்றாள்.

அம்புதி இன்னமும் உறங்கிக் கொண்டிருக்கவே, அவன் தூக்கம் கலையாத படி விடிவிளக்கை மட்டும் உயிர்ப்பித்து அந்த வெளிச்சத்திலேயே தடவித் தடவி தன் பணிகளைச் செய்யத் தொடங்கினாள்.

ஈர தலையை காய வைத்து காதோர கூந்தலை அள்ளி எடுத்து கிளிப் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தவளின் இடையை பின்னாலிருந்து ஒரு கரம் வளைத்து இறுக்கி அணைத்திட பெண்ணவள் அதிர்ச்சியில் வாயில் கவ்வியிருந்த கிளிப்'பை தவறவிட்டாள்.

தங்கள் அறையில் தன்னவனைத் தவிற வேறு யார் தன்னை அணைக்கப் போகிறார்கள் என்ற தைரியம், 'யாராக இருக்கும்!' என்ற பயத்தை அவளுக்கு ஏற்படுத்திடவில்லை. ஆனால் எவ்வாறு இது சாத்தியம்! என்ற அதிர்ச்சியை அளவிற்கு அதிகமாகவே ஏற்படுத்தியிருந்தது.

நங்கையவளின் இடை வளைத்திருந்த அம்புதியின் கரம் பெண்ணவளை தன் புறம் முழுமையாகத் திருப்பிட, அவன் இதழ்களோ நெற்றி, கண்கள், கன்னங்கள், காதுகள் என்று அவள் முகத்தில் ஊர்வலம் நடத்தி இறுதியில் இதழைச் சிறை பிடித்திருந்தது.

விருந்தனையவளுக்கோ அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக ஒவ்வொன்றாக நிகழ்ந்திட, மொத்தமாக பேச்சற்றுப் போனாள். அதனோடு சேர்த்து இறுதியான இதழ் முத்தம் உச்சி முதல் உள்ளங்கால் வரையுமே ஒவ்வாமைத் தன்மையை ஏற்படுத்தியிருந்தது.

நொடிப்பொழுதில் விழிநீர் கன்னங்களில் தடம் பதித்திட, பதியவனின் மனம் புரிந்தவளாய் அத்தனையையும் அம்புதி என்ற ஆண்மகனுக்காக தாங்கிக் கொண்டு மனவலியை நயனநீர் கொண்டு துடைத்துக் கொண்டிருந்தாள்.

இரண்டொரு நொடிகளில் தன் செயலின் வீரியம் தன் மூளையை சுருக்கென குத்திட, ஆழியைவிட்டுப் பிரிந்தான் அம்புதி. வதுகையவள் இதனை எப்படி எடுத்துக் கொள்வாளோ! என்ற அச்சத்தில் அவள் முகம் நோக்கினான். கூர்பார்வை செலுத்த அவசியமே இன்றி அந்த மங்கலான வெளிச்சத்திலும் கூட அவள் கன்னம் தொட்டிருந்த விழிநீர் மின்னியது‌.

விறலியவளின் விழிகளிலிருந்து வழிந்த நயனநீர் அவளின் இயலாமையின் வெளிப்பாடு என்று எண்ணி, தான் செய்த காரியத்தை நினைத்து வெட்கி தலைகுனிந்து நின்றான்.

வழக்கம் போல் அவனது மற்றொரு மனமோ தன் காதலுக்கும், காதலிக்கும் துரோகம் செய்ததாக உணர வைத்திட, 'நான் யாருக்கும் துரோகம் செய்யலே... இனி நான் எப்போதும் ஆழியின் அம்புதி தானே!' என்று மூளை நிதர்சனத்தை எடுத்துரைத்து மனதோடு முரண்டு பிடித்துக் கொண்டிருந்தது.

பதிலுக்கு அவன் மனசாட்சியோ 'காதலிக்கு சரி... ஆனால் ஆழிக்குமா துரோகம் செய்யவில்லை! அது போகட்டும் நீ மட்டும் 'அவனுடைய நீ'யாக இருந்தால் போதுமா! அவளும் 'உன்னுடைய அவளாக' தன்னை நினைக்க வேண்டாமா?' என்ற கேள்விகளை வரிசையாக அடுக்கிட அவை எதற்கும் பதில் இல்லாமல் தோற்று நின்றான் அம்புதி.

அத்தனை மனப் போராட்டங்களும் சில நொடிப் பொழுதில் நிகழ்ந்து முடிந்திட, ஆழியை ஏறெடுத்துப் பார்க்கும் வலிமையின்றி குளியலறைக்குள் தன்னை ஒழித்துக் கொண்டான்.

ஆழியின் மனமோ தன் மனவலியையும் தாண்டி அம்புதியின் மனவலியைத் தான் படிக்க முற்பட்டது.

'இரண்டு நாட்களாக தன்னுடன் சண்டையிட்ட போதும், அவன் முகத்திலும் ஒரு அகமகிழ்வு தெரியத்தானே செய்தது. அந்த உணர்விற்கு நடிப்பு அல்லது நட்பு என்று எந்த பெயர் வைத்துக் கொண்டாலும் அத்தனையும் படுக்கையறை வாசல் வரை மட்டும் தானே சுமந்து கொண்டிருக்க முடியும்! உள்ளே வந்த பிறகு அத்தனையும் கணவன், மனைவி என்ற உறவுக்குள் அடங்கிவிடுமே!

படுக்கையை பகிர்பவள் தன் பதியவளாக மட்டும் தான் இருக்க வேண்டும் என்ற கோட்பாடு உடையவன், அந்த பதியவளும் அவன் மனம் கவர்ந்த ஈஸ்வரி தான் என்று தானே இத்தனை நாள் நினைத்திருந்தான். அவளது நினைவில் தானே தன்னை நெருங்கியிருப்பான். அதனால் தான் தன் வதனம் காண வெட்கி ஓடிவிட்டான்.' என்று சரியாக ஊகித்தாள்.

மேலும் 'அது சரி ஒத்த வயதுடைய அக்காள், தங்கை இருவரும் ஒரே உயரமும், ஒரே உடல் வனப்பும் கொண்டிருந்தால் அவருக்கு அவர் காதலி நினைவு தானே வரும். தன் ஆருயிர் காதலி தனது அறையிலா என்ற சந்தோஷத்தில் தன்னையும் மறந்து தீண்டியிருப்பார். இவ்வுலகில் எவரும் நூறு சதம் ராமனாகவும் இருக்க முடியாது, நூறு சதம் ராவணனாகவும் இருக்க முடியாது..‌.'
என்று அம்புதியின் மனதை படித்து வைத்திருந்தவள், தன் இதயத்தில் குருதி வடிவதை பொருட்படுத்தாது இந்த சூழ்நிலையை அவனோடு சேர்ந்து அவனையும் கடத்தி செல்ல வேண்டும் என்ற முடிவோடு மெல்லிய ஒப்பனையோடு அடுக்களை நுழைந்தாள்.

அப்போது தான் எழுந்து வந்த வெங்கடாவும், மகளின் முழு அலங்காரம் கண்டு மெய்சிலிர்த்து நின்றார். நெட்டி முறித்து திருஷ்டி கழித்திட, சடசடவென முறிந்தது அத்தனையும்.

நேற்று மகள் எழுந்து வராத போது திட்டித் தீர்த்த ஈன்றவள் தான் இன்று அவளை ஒரு வேலையும் செய்யவிடாமல் அமர்த்தி வைத்து தானே அனைத்தும் செய்து கொண்டிருந்தார்.

பணிக்குச் செல்ல தயாராகி வந்த அம்புதி கொஞ்சம் வேலை அதிகமாக இருப்பதாக உரைத்து காலை உணவையுமே வேண்டாம் என்று மறுத்து நின்றான். வெங்கடேஸ்வரி அனைத்தும் தயார் என்று கூறி மதிய உணவுப் பையுடன், காலை உணவாக இட்லி எடுத்து வைத்திட அதற்கு மேல் மறுக்க முடியாமல் ஐந்தே நிமிடத்தில் உண்டு எழுந்து சென்றுவிட்டான்.

இவை அனைத்தையும் சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஞானபாண்டியனுக்கும் சந்தேகம் எழ, தனது மகளை பார்த்தார்.

ஆழிக்கு அன்னை, தந்தையின் பார்வை தன்மேல் விழுவது புரிந்திட, "அதான் வேலைனு சொல்லிட்டு தானே போறார் ம்மா... பின்னே என்ன? என்னை ஏன் பாக்குறிங்க ரெண்டு பேரும். சரி நானும் கிளம்புறேன். ஆல்ரெடி நேத்து லீவ் வேற போட்டிருக்கேன். கொஞ்சம் இயர்லியரா போனா தான் நேத்து க்ளாஸ்ல என்ன நடந்ததுனு கதை கேட்க முடியும்.

அப்பறம் ஈவ்னிங் ரெண்டு பேரும் ரெடியா இருங்க... பக்கத்துல பிள்ளையார் கோவில் இருக்கு. இங்கே ரொம்ப ஃபேமஸ். அங்க போறோம்... நைட்டே சொல்லிட்டார்... நான் தான் உங்ககிட்ட சொல்ல மறந்துட்டேன். சாட்டர்டே, சன்டே ரெண்டு பேருக்கும் லீவ் தான். சோ அலிபாக் போலாம்... நான் அவர்கிட்ட சொல்லிடுறேன்..." என்று வாய் ஓயாது பேசி, கணவன் மனைவி இருவரும் இயல்பாகத் தான் பேசிக் கொள்கிறோம் என்று காட்டிக் கொண்டாள். அதே நேரம் இருவரின் மனமும் குளிரும்படி சிரித்து, சிரிக்க வைத்து தான் அவர்களிடம் விடைபெற்றாள்...

மகள் மருமகன் இருவரும் வெளியேறியதும் தன் மனைவியைக் கண்டார் ஞானம். இருவரும் கண்களால் செய்தி பரிமாறிக் கொள்ள, ஞானம் தன் திறன்பேசி எடுத்து தனது அண்ணன் வேல்பாண்டியனுக்கு அழைத்து, அவருக்கும், அவரது மகன் விகாஸ்'க்கு சில பணிகளை ஏவினார்.



★★★★★​



ஆழி கல்லூரிக்குள் நுழைவதற்கு முன்பே ஸ்வாதி அவளுக்காக காத்திருந்தாள். ஆழியோ விடிந்ததிலிருந்தே ஏற்பட்ட குளறுபடிகளாளும், குழப்பங்களாலும் சற்று கலைப்பாகவே தான் உள்ளே நுழைந்தாள். ஆழியைக் கண்டதும், அவளருகே வேக எட்டுகள் வைத்து நடந்து வந்து,

"வாடி வா... உனக்காக தான் க்லாஸ்'க்கு கூட போகாம இங்கேயே வெய்ட் பண்ணிட்டு இருக்கேன்."

"அப்படி என்ன தலை போற விஷயம்!" என்று தோழிக்காக வரவழைக்கப்பட்ட சிரிப்புடன் வினவினாள்.

"உனக்கு எப்படியோ! ஆனா எனக்கு தலையை பிச்சுக்கிற விஷயம் தான்... எங்கே இன்னைக்கும் வராம போயிடுவேயோனு பயந்துட்டேன்!"

"அப்போ கண்டிப்பா தலை போற விஷயம் தான் போல... என்னனு சொல்லு கேட்போம்... என்ன ஸ்பெஷல்?" என்றாள் நடந்தபடி.

"என்ன ஸ்பெஷலா? அதை நீ தான் சொல்லனும்! ஒன்னுமே தெரியாதவ மாதிரி நடிக்காதே!"

"நான் சொல்றதுக்கு எந்த ஸ்பெஷல் நியூஸ்'ம் இல்லேயே டி!" என்று நண்பியைக் கண்டு குழப்பமாகக் கூறினாள்.

"பார்றா!!! என்கிட்டேயே சீன் போடுறேயா! ஒழுங்கு மரியாதையா நீயா உண்மைய சொல்லிடு" என்று புன்னகைத்த படியே மிரட்டல் விட்டாள்.

"ஏய் லூசு... ஆல்ரெடி நான் பல டென்ஷன்ல இருக்கேன்... புதிர் போடாம என்னனு சொல்லு? இல்லே கேளு? நான் பதில் சொல்றேன்." என்றால் சற்றே சலிப்பாக.

"என்ன நடக்குது?"

"என்ன நடக்குது!!!"

"உங்க ரெண்டுபேருக்குள்ள தான்?"

"யார் ரெண்டு பேருக்குள்ள?"

"அடியேய்... வடிவேலு மாதிரி பேசி சமாளிக்காதே! உண்மைய சொல்லு?"

"ஓ... காட்.... ஒரு க்வஸ்டின்'னாச்சும் தெளிவா கேளு... பதில் சொல்றேன்."

"சரி நேத்து ஏன் வரலே?"

இப்போது தான் ஆழிக்கு நேற்று ஸ்வாதி அனுப்பிய குறுந்தகவல் நினைவில் வந்தது. இந்த ஒரு கேள்வியிலேயே அடுத்த கேள்வியும் என்னவாக இருக்கும் என்றும் ஆழிக்கு புரிந்துவிட்டது.

"ஊர்ல இருந்து என் பேரெண்ட் வந்திருக்காங்க... நேத்து உன் வேந்தன் சார் என்னை ஏன் கேட்டாருனு எனக்கு சத்தியமா தெரியாது... அதுக்கு பதில் நீ அவர்கிட்ட தான் கேட்கனும்" என்றிட ஸ்வாதி ஆழியைப் பார்த்தபடி நின்றுவிட்டாள்.

அவள் இதழில் சிறு புன்னகை வேறு... பின்பு!!! தான் கேட்காமலேயே அடுத்த கேள்விக்கும் சேர்த்து பதில் கூறும் தோழியின் கள்ளம் அறிந்துவிட்டதாக அவளுக்குள் ஒரு பரவசம். ஆழியோ இவை எதையும் கண்டு கொள்ளாமல் முன்னேறிச் செல்ல, அவளை இரண்டே எட்டில் விரட்டிப் பிடித்து நிறுத்தி,

"சரி அதை நான் அவர்கிட்டயே கேட்டுக்கிறேன். நீ இப்போ பதில் சொல்லு? உனக்கு வேந்தன் சாரை பிடிக்குமா? நேத்து அவரை மிஸ் பண்ணினேயா?"

ஒரு நொடி ஸ்வாதியின் கண்களை நேருக்கு நேர் பார்த்தபடி, அழுத்தமான பார்வையை செலுத்தி, "நான் என் பேரெண்ட்ஸோட சந்தோஷமா டைம் ஸ்பெண்ட் பண்ணினேன். நான் யாரையும் மிஸ் பண்ணல... புரியுதா" என்று முயன்று இயல்பான குரலில் கூறினாள்.

"ஹேய்... லையர்... பொய் சொல்லாதே... நீ உள்ளே வரும்போதே உன் கண்ணு அவரைத் தேடுச்சே! நான் பார்த்தனே!" என்றாள் உற்சாகமாக.

அது என்னவோ உண்மை தான். ஆழியின் கண்கள் ஒருமுறை 150° தலையைத் திருப்பாமலேயே சுழன்று வந்தது தான். அது யாரைத் தேடியது என்று அவள் மட்டுமே அறிவாள். அதையே இப்போது ஸ்வாதி கேட்க, பெருமூச்சு இழுத்துவிட்டு அருகில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு, தன் கழுத்துவரை முடியிருந்த மேலாடைக்குள்ளிருந்து திருமாங்கல்யத்தை எடுத்துக் காட்டானாள்.

இவ்வளவு நேரம் சிரித்த முகமாக ஆழியை வம்பு செய்து கொண்டிருந்த நட்பு இப்போது பேச்சற்று நின்றிருந்தது.

"உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா!!!"

"ம்ம்ம்"

‌‌ "எப்போ?"

"காலேஜ்ல ஜாயின் பண்றதுக்கு முன்னாடியே"

"அதை ஏன் மறைக்கிறே! ஏன் யார்கிட்டேயும் சொல்லலே... எல்லா இடத்திலேயும் உன் அப்பா பேர் சேர்த்து தான் சொல்றே! ஏன்?"

"சர்ட்டிபிகேட் படி என் அப்பா பேர் தானே எல்லா இடத்திலேயும் இருக்கு... அதான். அதுமட்டும் இல்லாம கல்யாணம் ஆகிட்டா மட்டும் என் அப்பாவுக்கு நான் புள்ள இல்லேனு ஆகிடுமா! இல்லேல!

அதேபோல என் நேம்'க்கு பின்னால் என் ஹஸ்பண்ட் நேமை சேர்க்கிறதால மட்டும் தான் நான் அவர் வொய்ப் ஆக முடியும்னா நான் என்றைக்கோ அவர் மனைவி ஆகிட்டேன்."

"………"

இன்னமும் தன் அதிர்ச்சியிலிருந்து மாறாமல் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் ஸ்வாதியைக் காண ஆழிக்கே பரிதாபமாகிப் போனது. அவளுக்கு ஒன்றும் புரியவில்லை என்பதும் புரிந்திட,

"சரி வா க்லாஸ்'க்கு போகலாம். டைம் ஆச்சு" என்று கூறி கை பிடித்து இழுத்துச் சென்றாள். மறக்காமல் திருமாங்கல்யத்தை மீண்டும் சட்டைக்குள் எடுத்து போட்டுக் கொண்டாள்.

இன்னும் இரண்டு நாட்களில் அந்த பல்கலைக்கழகம் தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவு பெற இருப்பதால், அதனை கொண்டாடும் விதமாக பாட்டு, நடனம் என கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த வாரம் முழுதும் யாருக்கும் வகுப்புகள் இல்லாத நிலையில் அனைத்து மாணவர்களும் வளாகத்தில் தான் சுற்றிக் கொண்டிருந்தனர்.

வழக்கம் போல் சீனியர் புவன் ஆழியைக் கண்டதும், மாராத்திய பாடல் ஒன்றை பாடிட, பதிலுக்கு ஆழியோ "எங்க வீட்டு ஐயனார் இப்போ என் வீட்ல தான் இருக்கார்... வர சொல்லட்டுமா?" என்றாள் அவனை கேலி செய்யும் விதமாக.

இப்போது சீனியருக்கு சில தமிழ் வார்த்தைகள் புரிந்திடவே, அவள் கூறிய ஐயனார் மட்டும் விளங்கவில்லை. "வாட் அய்யானார்?" என்றார் தப்பும் தவறுமாக...

"மிஸ்டர் முறுக்கு மீசை வந்தாச்சு பட்டி(buddy)." என்றிட, புவன் தலைக்கு மேல் கை உயர்த்தி, அவளை இங்கிருந்து செல்லுமாறு கையசைத்தான். சிரித்தபடியே அவனைக் கடந்து சென்றாள் ஆழி.

தோழியை கொலைவெறியோடும், மனத்தாங்கலோடும் கண்டாள் ஸ்வாதி. "உனக்கு கல்யாணம் ஆன விஷயத்தை சீனியர் கிட்டேயும், வேந்தன் சார் கிட்டேயும் சொல்லிடு" என்றாள்.

"யார்கிட்ட சொல்லனும், யார் என் விஷயத்தை தெரிஞ்சிக்கிற அளவுக்கு என் மனசுக்கு நெருக்கமானவங்கனு எனக்கு தெரியும்" என்று வெடுக்கென சிரித்துக் கொண்டே மொழிந்தாள் ஆழி.

"தேவையில்லாம அவங்க மனசுல ஆசைய வளர்த்துவிடாதே மித்து"

"லிஸன் சுவி... சீனியர் மனசுல அப்படி எந்த ஆசையும் இல்லே... அது எனக்கு எப்பவோ தெரியும்... அவன் பண்றது ஜஸ்ட் ராக்கிங். இந்த கேம்பஸ்'ஸை விட்டு வெளியே போனா அவனைப் போல எனக்கு ஒரு நல்ல ஃபிரண்ட்'டா யாராலையும் நடந்துக்க முடியாது. வேந்தன் சார் இந்த கேம்பஸ்'க்குள்ள ஒரு நல்லா வாத்தியாரா நடந்துக்கிட்டா அவருக்கு மரியாதை... இதை தவிர அவருக்கு சொல்ல என்கிட்ட வேற எதுவும் இல்லே"

"நீ மேரிட்'னு சொல்லிக்கிறதுல உனக்கு என்ன கௌரவக் குறைச்சல் வரப்போகுது! சீனியர் கிட்ட சொல்லு சொல்லாம போ... அது உன் இஷ்டம். ஆனா வேந்தன் சார்கிட்ட நான் சொல்லத்தான் போறேன். அவர் ஒன்னும் விமனைசர் கிடையாது. சொன்னால் புரிஞ்சு விலகி போயிடுவார்."

"ஸ்டாப் திஸ் நான்-சென்ஸ் சுவி. நான் உனக்கு அல்ரெடி சொல்லிட்டேன். என்னோட பர்ஸனல் யார்கிட்ட சொல்லனும்னு எனக்கு தெரியும்... காட் இட்" என்று சற்றே குரல் உயர்த்தி கத்திவிட்டாள்.



காதல் கரை எட்டுமா!
 
Top