• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

02. ரகசிய ராட்சஷி

kkp8

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
32
5
18
Tamil nadu
அத்தியாயம் 2


நீண்ட நேரமாக ஒரே இடத்தில் தம்பித்து இருந்த அவளது விழியில் மெல்லிய ஓர் அசைவு தெரிந்ததும்,

"எப்பா அவள் உயிரோட தான் இருக்கிறாள்! இப்போ கேள்" என்றாள் அவளுடன் வந்திருந்த அவள் தோழிகளில் ஒருத்தி.

ஆம், அது ஒரு மாலை நேரத்து தேநீர் விடுதி. அந்த தேநீர் விடுதியானது இயற்கையுடன் கூடிய திறந்த வெளி விடுதி என்பதால், இயற்கையின் பிரியர்கள் அந்த விடுதியைத்தான் நாடுவார்கள்.

யாழினி, இவள் ஓர் இயற்கையின் ரசிகை. பிறந்தது முதல் இத்தனை ஆண்டுகளாக வெளிநாட்டு வாழ்க்கை வாழ்ந்ததனாலோ என்னவோ பச்சைப் பசேலென்ற எதைக் கண்டாலும் பட்டாம்பூச்சியைப் போல இறக்கை கட்டிக் கொள்ளும் அவள் மனம். இன்றும் தோழிகள் வெளியே போவோம் என்றதும் அவள் கேட்டுக்கொண்டது வித்தியாசமான ஓர் இடம் இருந்தால் சொல், நான் வருகிறேன் என்பதுதான். அதனால்தான் அவளை இங்கு அழைத்து வந்தனர் அவளது புதிய நண்பர்கள் பட்டாளம்.

உண்மை தான். அவள் நாட்டுக்கு வந்து இரண்டே மாதங்கள்தான் ஆகிறது. வந்தவளுக்குச் சொந்த நாட்டைப் பார்த்ததும் ஏனாே மீண்டும் லண்டன் செல்லப் பிடிக்கவில்லை. அதனால் பெற்றவர்களை மட்டும் லண்டனுக்கு அனுப்பி வைத்துவிட்டு தந்தை வழி அத்தை வீட்டில் தங்கிக்காெண்டாள். மீண்டும் லண்டனுக்குப் போவாளா எனக் கேட்டால் அது அவளுக்குமே தெரியாது. எப்போது இந்த நாடு சலிப்பு தட்டுகிறதோ அப்போது கிளம்பிவிடுவோம் என்ற எண்ணப் போக்குதான் அவளுக்கு.

"ஏய்! ஏன் அவனையே பார்த்துக்கொண்டிருக்கிறாய்? அவன் எதேர்ச்சையா நீ பார்க்கிறதை பார்த்துட்டா எங்களைப்பற்றி என்ன நினைப்பான்? அவன் பார்க்கிறதுக்குள்ள திரும்பு" என்றாள் இன்னொருவள். எங்கே தம்மையும் அவளுடன் சேர்த்து தவறாக அவள் பார்வைக்குரியவன் நினைத்து விடுவானோ என்ற எண்ணத்தில் எரிச்சலுடன்.

"இதில நினைக்கிறதுக்கு என்னடி இருக்கு? அவன் பார்க்க அழகா இருக்கிறான் பார்க்கிறன், வடிவ ரசிக்கிறதில பிழை ஒண்டும் இல்லை." என்றாள் யாழினி தன் செயலை நியாயப்படுத்தும் பொருட்டு.

"சரி தான்... வடிவ ரசிக்கிறது பிழையில்லையம்மா. ஆனா நீ ரசிக்கிறது ஓர் ஆம்பிளைய, அதுவும் இலங்கையில. லண்டன்ல இதெல்லாம் ஆரும் பெருசா எடுக்காயினம். அவன் எப்பிடிப்பட்டவனோ, உன்ர பார்வையை அவன் என்ன மாதிரி எடுக்கிறானோ ஆருக்கு தெரியும்?" என்றாள் எல்லா இடமும் ஒரே போல் இல்லை என்பதை நினைவு படுத்தும் பொருட்டு.

"என்னவாயும் எடுக்கட்டுமே! எனக்கு அவனைப் பிடிச்சிருக்குது. அவன் மட்டும் ‘ஓம்’ என்டு சொல்லட்டும், நான் கலியாணம் செய்ய ரெடி தான்." என்றாள் யாழினி சர்வ சாதாரணமாக.

"ஏய்! நீ என்ன விளையாடுறியா? ஏதோ சும்மா பார்க்கிறாய் என்டு நினைச்சா, கலியாணம் என்டெல்லாம் கதைக்கிற. விசரி மாதிரி கதைக்காம, ஒழும்பு இடத்தைக் காலி பண்ணுவம்" என்றாள், விட்டால் இவள் ஏதோ எல்லாம் உளறுவாள் என்று.

"நோ... நான் வரமாட்டன். அவன் அழகா இருக்கிறான். அவனைப் பார்த்தோன்ன நான் எப்பிடி மயங்கினனோ, அதே போல அவனும் என்னைப் பார்த்து மயங்கிறதுக்கு வாய்ப்பு இருக்கு தானே! அப்பிடி ஒரு வாய்ப்பை நான் நழுவவிடமாட்டன். நீங்கள் போறான்டா போங்கோ, நான் இருந்து ஆறுதலா வாரன்." என்றாள் ஒரு நப்பாசையில்.

"இவள் திருந்த மாட்டாள்டி! இதுக்கு பிறகும் இருந்தா அசிங்கப்படுறமோ இல்லையோ, நாளைக்கு இவளால எங்களுக்கும் கலியாணம் நடக்காமப் போயிடும்" என்றவாறு மற்றையவள் எழுந்து கொள்ள,

"நீ இரடி! நீ நினைக்கிற மாதிரி இவள் சீரியசா கதைக்கிறாள் என்டே நினைக்கிறாய், அவள் காதல் கலியாணம் என்டெல்லாம் போகமாட்டாள்டி! எல்லாரையும் போல, தன்ர வடிவில ஆம்பிளைங்களை மயக்கோணும். அதுவும் அவனைப் போலக் கொஞ்சம் வடிவா இருக்கிற ஆம்பிளை தன்னை பார்க்கோணும் என்டு நினைக்கிறதில் பிழை இல்லையே! அந்த அற்பச் சந்தோசத்துக்காகத் தான் மேடம் ஏங்குறாங்க. அவளோட ஆசையை ஏன் கெடுப்பான். கொஞ்ச நேரம் தானே! விடு அனுபவிச்சிட்டே வரட்டும்." என்றாள் இன்னொருவள் பெரிய மனசோடு.

"ஆருக்கடி அற்பச் சந்தோசம் வேணும். நான் ஒண்டும் நீ சொல்லுற ரகம் இல்லை." என்றாள் யாழினி கோபமாக.

"அப்பிடியா மேடம்? அப்பிடி என்டா அவனே உங்களை பார்க்கோணும் என்டு நீங்கள் ஏன் வெயிட் பண்றீங்கள்? உங்கட தான் உண்மையான, பரிசுத்தமான கண்டதும் காதலாச்சே! நீங்களே போய், ‘எனக்கு உன்னை பிடிச்சிருக்கு, கலியாணம் செய்வமா? என்டு கேக்கிறது." என்றாள் அவளுக்கு அந்தளவுக்குத் துணிச்சல் இல்லை என்று தெரிந்தும் நக்கலாய்.

"கேக்கலாம் தான். ஆனா...
ஆனா..." மேலே பேச முடியாது அவள் தடுமாற,

"என்ன ‘அ’னா… ‘ஆ’வன்னா... விளையாட்டு விபரீதத்தில் முடிஞ்சிடும் என்ட பயம் வருதெல்லே! இனியாவது வாயை மூடிக்கொண்டு மூட்டையைக் கட்டு, போவம்" என்றாள் கடுப்புக்களுடன்.

"ஏன்டி! நான் சொல்லுறதை ஆருமே நம்புறீங்கள் இல்லை. எனக்கு அவனை உண்மையாவே பிடிச்சிருக்கு. அவனைக் கலியாணம் செய்தா சந்தோசப்படுவன்" எனச் சிறுபிள்ளை போல் சொன்னதையே மீண்டும் மீண்டும் சொன்னவளைக் காண்கையில் வந்திருந்த மூன்று தோழிகளுக்குமே எரிச்சல்தான் வந்தது.

"அதான் சொல்லுறம்... உனக்கு அவனை பிடிச்சிருக்குதானே! உன்ர காதல் உண்மை என்டா எதுக்கு காத்திருக்கோணும்? கிடைச்ச வாய்ப்பு இன்னொரு தரம் வருமோ தெரியாது, அதால இவள் சாென்னதுபோல இப்பவே காதலை சொல்லிடன்" என்றாள் பொறுமையை இழந்து வந்த கடுப்பை மறைக்காது.

"இப்பிடி சொன்னா பயந்துடுவனா? இப்ப என்ன? உங்கள் எல்லாருக்கும் என்ர காதல் உண்மையானது என்டு நிரூபிக்கோணும் அவ்வளவுதானே!" என்று ஆவேசமாகக் கதிரையை விட்டு எழுந்தவள், நேராக அவன் இருக்கும் இடத்தை நோக்கி விரைந்தாள்.

தீவிரமாக எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தவனிடம் பேசிக்கொண்டிருந்தவன் பின்னே வந்து நின்ற யாழினி,

"எக்ஸ்கியூஸ் மீ..." என அவர்கள் இருவரது கவனத்தையும் தன்புறம் திருப்பியவள்,

"எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு... நாங்கள் ஏன் கல்யாணம் செய்யக்கூடாது?" என்றாள் தன் ரசனைக்குரியவனிடம் மட்டும் பார்வையினைப் பதித்து கூச்சமே இல்லாது.

அது சரி அவள் வளர்ந்த சூழல் நம் நாட்டை போல் இல்லையே! எந்தவித உணர்வு மனதில் தோன்றினாலும், அதை மறைக்காது அப்படியே வெளிப்படுத்தும் நாட்டில் வளர்ந்தவளுக்குக் கூச்சம் என்று ஒன்று இருந்தால் தான் ஆச்சரியமே!

அவளது கேள்வியில் இமைகள் இரண்டும் உரசிக் கொள்ளும் அளவிற்கு நெற்றியானது சுருங்க, அவளை வேற்றுக்கிரகவாசி போல் பார்த்தவன்,

"கூ ஆர் யூ...?" என்றான் வார்த்தையில் கடுமையைக் காட்டி. பின்னே யாரென்றே தெரியாத ஒருத்தி, அதுவும் தொழில்ரீதியான முக்கியமான ஓர் பேச்சுவார்த்தையின் நடுவே புகுந்து இப்படி ஆட்டத்தைக் கலைப்பது போல், நாகரீகமேயில்லாது நடந்து கொண்டால் யாருக்குத்தான் கோபம் வராது? இதில் எதிரே இருந்தவன் விழிகள் வேறு, இவனைச் சந்தேகமாக அளவிட்டதும் தான் குபுகுபுவென ஏறியது அவனுக்கு.

"ஓ... சொரி! என்னை அறிமுகப்படுத்த மறந்திட்டன்" தனது மடத்தனத்தை எண்ணி நொந்துகொண்டவளாய்த் தலையில் அடித்தவள் உதடுகளோ மாறாய் புன்னகைக்க,

"மை நேம் இஸ் யாழினி... அமுதயாழினி." எனத் தன் கையினை அவனது அறிமுகத்துக்காய் நீட்ட, அதைக் கண்டும் காணாதவன் போல், அலட்சியம் செய்து அதே இடத்தில் அமர்ந்திருந்தவன் பார்வையோ, அவளை அருவருப்புடன் நோக்கியது.

"உங்களை அறிமுகப்படுத்த விருப்பம் இல்லாட்டிக்கு பரவாயில்லை... ஆனா நான் கேட்ட கேள்விக்கு பதில சொன்னீங்கள் என்டா சந்தோசமா போவன்." அவன் என்ன உதாசீனம் செய்தாலும் பரவாயில்லை என்பது போல் முன்னர் கேட்ட கேள்விக்கான பதிலுக்காகக் காத்திருந்தவளை முறைத்தவாறு இருக்கையிலிருந்து எழுந்தவன்,

"உனக்கு என்ன விசரே! முன்ன பின்ன தெரியாத ஒருத்தனிட்ட என்ன கேக்கோணும் என்டு தெரியாது? இதுவே ஒரு ஆம்பிளை கேட்டிருந்தா, கத்திக் கூப்பாடு போட்டிருப்பீங்கள். ஆம்பிளை என்டா பொம்பிளைய கண்டுட்டு இளிச்சுக் கொண்டு வருவான் என்ட எண்ணம். போ... போய் உருப்படியா வேலை ஏதன் இருந்தா பார்." என்றான் கோபமாக.

"மாட்டன்... நான் போக மாட்டன். எனக்குப் பதில் ஒண்டு தந்தா தான் போவன்." யாழினி உடும்புப்பிடியாக நிற்க.

"என்ன விளையாடுறியே? அசிங்கமா ஏதன் சொல்லுறதுக்குள்ள போயிடு! வந்துடுவாளுங்கள் ‘ஆ... ஊ’ என்டா கேமராவைத் தூக்கிக் கொண்டு ‘பிராங்க்’ பண்ணிறம் என்டு" அவன் கோபம் தணிந்த பாடில்லை. இப்போதைய நாகரிகம் அவனை அப்படிச் சிந்திக்க வைத்தது.

"அய்யோ இல்ல... நான் பிராங்க் ஒண்டும் பண்ணேல... உண்மையாவே நான் உங்களை விரும்புறன்." என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் கன்னத்தில் ஒன்று விட்டவன்,

"ஒருக்கா சொன்னா உனக்கு விளங்காதா? இதுக்குமேல ஒரு நிமிசம் எனக்கு முன்னால நின்டாய் என்டா, நடக்கிறது வேற..." என அதே கோபம் தணியாது கத்தியவன், கன்னத்தைத் தாங்கியவாறு, கலங்கிய விழிகளுடன், அவனையே பார்த்து நின்றவள் மேலிருந்து அருவருப்புடன் விழியினைத் திருப்பி,

"இப்ப எல்லாம் நிம்மதியா ஒரு மனுசர் ஒரு இடத்தில இருக்க முடியுதில்ல இந்தச் சனியன் புடிச்சதுகளால. சேர் இங்கே ஒரே தொந்தரவா இருக்கு நாங்கள் இன்னொரு நாளைக்கு சந்திக்கலாம். எங்கே சந்திக்கலாம் என்டுற விபரம் போன்ல சொல்லுறன்." என்றவாறு மேசை மேல் இருந்த அலைபேசியை எடுத்தவன் போவதற்கு முன் அவளை முறைத்துவிட்டே சென்றான்.

பாவம், அத்தனை பேர் மத்தியில் அசிங்கப்பட்டது யாழினி தான். அவர்கள் போனதும் அவளைத் தூண்டிவிட்ட தோழிகளுக்குக் குற்ற உணர்வு தோன்ற, அவளைச் சூழ்ந்து கொண்டவர்கள்,

"சொறிடி... நீ சும்மா விளையாடுறாய் என்டு தான் நினைச்சு அப்பிடி கதைச்சோம், ஆனா இந்தளவுக்குப் போகும் என்டு நினைக்கேல. சரி விடு! அந்த சிடு மூஞ்சைக்கு குடுத்து வைக்கேல" என அவளை சமாதானம் செய்ய,

"இல்லடி! நீங்க என்ன சொன்னாலும், எனக்கு அவரை நான் விடுறதா இல்லை. எனக்கு அவர் தான் வேணும்." சற்று முன்னர் வாங்கிய அறை கூட மறந்துபாேய்க் குழந்தையாய் அடம்பிடித்தவளை என்ன சொல்வதென்று இருந்தது அவர்களுக்கு.

"சொன்னா கேட்கவே போறாய்? நீ என்னன்டாலும் செய்! இந்த ஆட்டத்துக்கு நாங்கள் வரேல தாயே! நாளைக்கு ஏதன் பிரச்சனை என்டா, எங்கட தலை தான் உருளும்." என அவர்கள் விலகிக்கொண்டனர்.

இரண்டு நாட்கள் ஓடி மறைந்திருந்தது. தாமரை இதழ் கொண்ட கூரிய விழி, ரோஜா நிறத்து அதரங்கள், இவை இரண்டிற்கும் இன்னும் அழகு சேர்க்கும் விதமாய் மேலும் எடுத்துக்காட்டிய கூரிய நாசி, சற்றே உப்பிப் போயிருந்த கன்னங்கள், காதில் தொங்கிய நீளமான நீல நிறத்து வளையம், அதற்கு ஒப்பாய் மேல் ஆடையும், கீழே வெள்ளை நிறத்து ஜீன்ஸும் அணிந்திருந்தவளது கனமில்லாத நீள் முடியானது காற்றில் அசைய, அதை ஒதுக்கும் வெண்டைப் பிஞ்சு விரல்கள். இத்தனை அழகிற்குச் சொந்தக்காரி அத்தனை பேரின் முன்பும் அநாகரீகமாக நடந்து கொள்வாள் என்று கனவிலும் அவன் நினைக்கவில்லை.

ஆம், அவள் அழகை ரசிக்கத் தவறவில்லை அவனுமே! சொல்லப் போனால், அவள் அவனைக் காணும் முன்னர் அவன் தான் கண்டான். ஆனால் அவன் கண்ணிற்குப் பத்தொடு பதினொன்று தான். காதல் கத்தரிக்காய் என்று எதுவும் அவனுக்குத் தோன்றவும் இல்லை. அப்படித் தோன்றவும் தாேன்றாது. ஏனோ இந்த இரண்டு நாட்களும் அன்றைய அவள் முகமே, அவன் விழிகளுக்குள் வந்துவந்து போனது.

எப்படி வராது போகும்? அவள் தான் அவன் நிழலாய் அவன் பின்னே சுற்றிச்சுற்றி வருகிறாளே! அப்படி பின்னால் சுற்றும் போது வராது போனால் தான் அதிசயம்.

ஆம், அன்றைய நாளின் பின், யாழினியின் முழு நேர வேலை அவனைப் பின்தொடர்வதுதான். காலையில் அலுவலகம் செல்பவன் பின்னால் செல்பவள், வீடு திரும்பும் வரை அங்கேயே தவமிருந்து வேலை முடிந்ததும் மீண்டும் பின்னாலே செல்வாள். இடையில் அவன் எங்கேயாவது புறப்பட்டால் அப்போதும் அதே கதிதான். ஆனால் ஒரு வார்த்தை பேசவில்லை. அவ்வளவு ஏன்? பத்தடி தூரத்தில்தான் அவனைப் பின்தொடரவே செய்வாள்.


***ரகசியம் தொடரும்***
 
  • Love
Reactions: Kameswari

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
417
99
43
Tirupur
கண்டதும் காதல் 😍 அதுவும் விடாது கருப்பு மாதிரி அவனை தொடர்ந்துட்டே இருந்திருக்கா 🤩
 
  • Like
Reactions: kkp8

kkp8

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
32
5
18
Tamil nadu
கண்டதும் காதல் 😍 அதுவும் விடாது கருப்பு மாதிரி அவனை தொடர்ந்துட்டே இருந்திருக்கா 🤩
ஓமப்பா இனி.விடாது கருப்பு தான்