• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

03. ரகசிய ராட்சஷி

kkp8

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
32
5
18
Tamil nadu
அத்தியாயம் 3


எல்லாம் அறிந்தும் அறியாதவன் போல் நடந்து கொண்டவனுக்கு ஒரு மாதத்துக்கு மேல், குட்டி நாயாட்டம் பின்னால் பின் தொடர்பவளைச் சுற்றலில் விட விருப்பம் இல்லாது போகவே, சடேன் பிரேக் இட்டு தன் நடையை நிறுத்தி, அவளைத் திரும்பி முறைத்தவன்,

"உனக்கு என்னதான் பிரச்சினை? ஏன் இப்பிடி பின்னாலேயே வந்து என்ர மானத்தை வாங்கிற?" என்றான் கடுமையான குரலில்.

"பிரச்சினை என்டு ஒன்டும் இல்லையே!" சாதாரணமாகத் தோள்களை குலுக்கினாள் அவள்.

"ஒன்டும் இல்லாம தான் இப்பிடி நெடுக பின்னாலேயே சுத்துறியா?"

"ஓ... அப்ப இத்தனை நாள் நான் பின்னாலேயே வாரது தெரிஞ்சும், என்னை உதாசினப் படுத்தியிருக்கிறீங்கள், அப்பிடி தானே!" புருவங்கள் வில்லாய் விளைந்தது.

"நான் வேணும் என்டா இந்த அரிய நிகழ்வைப் பாராட்டி விழா ஒன்டு எடுக்கட்டா? நாலு பேர் வாயில விழுற மாதிரி நடந்திட்டு கேக்கிற கேள்வி என்டா... முதல்ல நான் கேட்டதுக்கு பதிலை சொல்லு? உனக்கு என்ன வேணும்? ஏன் எனக்கு பின்னாலேயே திரியுற?" என்றான் நெருமிய பற்களுக்கு இடையே.

"எனக்கு என்ன வேணும்? அண்டைக்கு என்ன சொன்னனோ அதுதான். எனக்கு நீங்கள் தான் வேணும்." என்றாள் இன்றும் அதே தோறணையோடு.

"உனக்கு அவ்வளவு தான் மரியாதை. இதுக்குமேல ஒரு வார்த்தை கதைச்சா பல்லை கொட்டிடுவன்..." கோபத்தில் மேலே ஏதோ சொல்ல வந்தவனைத் தடுப்பது போல்,

"இருங்கோ இருங்கோ... ஏதோ நான் தான் உங்களிட்ட வலியக் கதைக்க வந்தது மாதிரி சொல்லுறீங்கள். நான் பாட்டுக்கு நாகரிகமா பத்தடி தூரத்தில தானே வந்து கொண்டிருந்தன், நீங்களா கூப்பிட்டுக் கதைச்சு போட்டு, என்னைக் குறை சொல்லுறீங்கள்." என்றாள் எதுவும் அறியாத குழந்தை போல் இமைகளை வெட்டி. அதில் சற்றே மனம் தடுமாறினாலும் அதை வெளிப்படுத்த விரும்பாதவன்,

"எது...? இப்பிடி நாலு பேர் பார்க்கப் பின்னாலேயே வாரதுதான் உன்ர நாகரிகமோ! இண்டைக்குதான் கடைசி. இதுக்கு பிறகும் பின்னாலேயே வந்தாய் என்டா, இத்தனை நாள் பார்க்காத மகிழவனை பாப்ப!" என்றான் இன்னமும் கோபம் குறையாது.

"மகிழவன் தான் உங்கட பெயரா? யாழினி மகிழவன்... பெயர்ப் பொருத்தம் நல்லா இருக்கே!" என்றாள் சற்றும் அவன் கோபத்தைச் சட்டை செய்யாது.

"உனக்கென்ன பைத்தியமே! நான் என்ன கேக்கிறன், நீ என்ன உளர்ற? சும்மா பகல் கனவு காணாம உருப்படியான வேலை ஏதும் இருந்தா செய்!" என்றான்.

"பகல் கனவுதான் மகிழவன், பகல்ல காணுற கனவுதான் பலிக்குமாமே! அம்மா அடிக்கடி சொல்லுவா, அப்ப நான் இப்போதைக்குப் போட்டு வாரன். நாளைக்கு சந்திப்பம்." என்றவள் மயக்கும் ஒரு புன்னகையுடன் கண்ணடித்து விலகிச் செல்ல, அவனுக்குத்தான் இவள் எல்லாம் என்ன ரகம் என்று ஆனது.

அன்றைய நிகழ்வின் பின்னர் கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் கடந்திருந்தது. எந்தவித குறு குறுப்பும் இல்லாது, முன்னையது போல், இயல்பாக மகிழவன் நடமாட ஆரம்பித்தான். ஆம், யாழினியை காண்பதற்கு முன்னர் எப்படிச் சாதாரணமாக இருந்தானோ, அதே போல் அவனால் மீண்டும் நடமாட முடிந்தது.

[இல்லை இல்லை, அவசரப்பட்டு நீங்களா ஒரு முடிவுக்கு வரவேண்டாம் மக்களே! யாழினி அவனுக்கு பின்னாலதான் சுத்துறாள். ஆனா என்ன, ஐயா தான் கணக்கிலேயே எடுக்கிறதில்ல]

அன்றும் அதே போல் இப்படி ஒருத்தி சுற்றுகிறாள் என்பதைக் காணாதவன் போல் விறுவிறு என்று பைக்கை நிறுத்தி வைத்திருந்த இடத்துக்கு விரைந்தவன் காதுகளில்,

"மகிழவன்..." என்ற குரல் ஒலிக்க, அது யார்க் குரல் என்பதை அறிந்தவனோ, கேட்டும் கேட்காதவனைப் போல் நடையில் வேகத்தைக் கூட்டினான்.

"டேய் மகிழு..." மரியாதை தேய்ந்து போனது அவனது பாரா முகத்தால். அது அவனுக்கு உறைக்கவில்லை போலும், பின்னே வேண்டாதவள் மரியாதை எதற்கு அவனுக்கு? இன்று கண்டு, நாளை நலம் கேட்கும் பட்டியலில்கூட அவள் பெயர் இல்லையே! பின்பு எதற்கு மரியாதைக் குறைவாக அழைத்தாய் என்று கேட்கக்கூட நாவு எழவில்லை. அதனால் முன்னேறியவனைத் தடுப்பது போல், வேகமாக ஓடிவந்து அவன் வழிமறித்து நின்றவள் மார்பானது வேக வேகமாக ஏறி இறங்க,

"கூப்பிட்டது கேட்கேலயா மகிழவன்? ஏன் உப்பிடி மனச்சாட்சியே இல்லாம நடக்கிறீங்கள்? இன்னும் எத்தினை நாளைக்குத் தான், உங்களுக்கு பின்னால நாய் மாதிரி திரியிறது. ப்ளீஸ் மகிழ்... இதுக்குமேல என்னை அலைய விடாதைங்கோ" என்றாள் காதல் யாசகம் கேட்பது போல் கெஞ்சலாய்.

"நான் ஒன்டும் உன்னை அலையச் சொல்லேலயே!" உதடுகள் நக்கலாய் ஒரு பக்கம் ஏறிப் புன்னகைத்தது.

"அலைய சாெல்லேல தான், அதே சமயம், என்னை வேண்டாம் என்டும் சொல்லேலயே நீங்கள்" என்றாள் அவனது அன்றைய பதிலில் ஓர் ஓட்டையைப் பிடித்து.

"அண்டைக்கு நான் சொன்னதின்ர அர்த்தம் இதுதான். உனக்குத் தெளிவா சாென்னாத்தான் விளங்கும் என்டா, இப்ப சொல்லுறன், எனக்கு இந்தக் காதல், கல்யாணத்தில் எல்லாம் விருப்பமில்லை. என்ர வாழ்க்கையில அப்பிடி ஒன்டு இனி நடக்கவும் நடக்காது. அதால உனக்குத் தகுந்த ஓர் ஆளைப் பாத்து கலியாணம் கட்டப்பார்" என்றான் தெள்ளத் தெளிவாய்.

"அதெல்லாம் எனக்குத் தெரியாது. என்ர வாழ்க்கையில கல்யாணம் ஒன்டு நடந்தா அது உங்களோடதான். இல்லை மாட்டன் என்டு இண்டைக்கு மாதிரி நீங்கள் அடம் பிடிச்சீங்கள் என்டா, கட்டாயம் என்ர உயிரை விட்டிடுவன். அதுவும் உங்கட கண்ணுக்கு முன்னாலேயே!" அவளும் தன் முடிவிலிருந்து மாறுவதாக இல்லை.

"என்ன வெருட்டி பார்க்கிறியா? இதுக்கெல்லாம் பயப்படுற ஆளா பார்த்து இந்த நாடகத்தை அரங்கேற்றம் செய்!" என்றான் இந்த மிரட்டலுக்கெல்லாம் வளைந்துகொடுக்கத் தான் தயாராக இல்லை என்பது போல்.

உதட்டில் மெல்லியக் கீற்றாய் ஒரு புன்னகையினை உதிர்த்தவள், "எல்லாரையும் மாதிரியே என்னையும் நினைச்சிட்டீங்கள் போல." உதிர்த்த புன்னகை உதிர்ந்து விரக்தியாய் மாற, கண்கள் அரும்பிய கண்ணீரைப் புறங்கையினால் தேய்த்து எடுத்துக் கொண்டவள் பாதங்களோ, பின்புறமாய் வீதியினை நோக்கி நகர ஆரம்பித்தது.

ஆம், அவர்கள் அப்போது நின்றது வீதியின் ஓரம் தான். அதுவும் எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் முக்கிய பாதைகளில் ஒன்று. வாகனங்கள் குறிப்பிட்ட வேகத்தில் செல்வதால், எப்போதுமே வாகனங்களின் இரைச்சலுக்கும், அது எழுப்பும் ஒலிக்கும் பஞ்சமே இருக்காது. அவளது பேச்சும் நகர்வு எதை நோக்கி என்பதை உணர்த்த,

"ஏய்...! சொன்னா கேள்! இன்னும் ஒரு அடி எடுத்து வைச்சா, ஏதாவது ஒரு வாகனம் தட்டீட்டு போயிடும்." தன்னால் ஓர் உயிர் போய் விடும் என்ற பதற்றம் அவனுக்கு. அதனால் நாவானது தந்தியடிக்க அவசரமாய் மறித்தவன் பேச்சை அவள் கேட்க வேண்டுமே? அவனை நோக்கிய விழிகள் அசையாது, தலையினை மட்டும் மறுப்பாய் அசைத்தவாறு மேலும் பின்னோக்கி நடந்தவளை எத்தனை கதியில் வந்தாலும் வேகத்தை மாற்றாது, லாவகமாக வாகனத்தை அவள் மீது மோதாது திருப்பிக் கொண்டு சென்றவர்கள் ஏச்சானது அவள் காதில் விழுந்ததோ என்னவோ, அவன் காதில் தெளிவாகவே விழுந்தது.

பதற்றம் கூடிப்போனவனாய், ஓடிச் சென்று அவளை வீதியின் ஓரம் இழுத்து வந்தவன், உண்டான ஆத்திரத்தில் சட்டென வீதி என்றும் பாராது ஓங்கி ஒன்று விட்டான்.

"என்ன விளையாடுறியா? விசரி மாதிரி நடந்து நீ பாட்டுக்குச் செத்து துலைஞ்சிடுவாய், நான் தான் நாளைக்குக் கோட்டு, பொலிஸ் என்டு திரியோணும். எப்ப உன்னை பார்த்தனோ, அப்ப புடிச்ச தரித்திரம். இண்டைக்கு வரைக்கும் பின்னுக்கே சுத்துது." ஆத்திரத்தில் ஆரம்பித்துப் புலம்பலில் முடித்தவனையே கண்களை வெட்டாது பார்த்திருந்தவள்,

"சாகிறவரைக்கும் சுத்தத்தான் போகுது" என்றாள் அதே பார்வையினை மாற்றாது அப்பாவியாய். ஏனோ அவளது அந்த சிறுபிள்ளைத் தனமான அடமும், உறுதியும் சிரிப்பைத் தான் அவனுக்கு வர வைத்தது. அதை மறைக்கவும் விரும்பாது சிரித்து வைக்க,

"சிரிக்கேக்க நீங்கள் வடிவாத்தானே இருக்கிறீங்கள்! பிறகு ஏன் எப்பவும் நெருப்பை விழுங்கின மாதிரி எல்லாரிலேயும் எரிஞ்சு விழுறீங்கள்?" என்றாள். அந்தக் கேள்வி இன்னமும் சிரிப்பை வரவழைக்க,

"ஆம்பிளை என்டா அப்பிடிதான் இருக்கோணும். சிரிச்சுக் கொண்டே இருந்தா பொம்பிளைக்கும் ஆம்பிளைக்கும் என்ன வித்தியாசம்?" இயல்பாய் அவளுடன் பேச ஆரம்பித்தான்.

"இஞ்ச பார்! அப்போ சொன்னது தான் இப்பவும் சொல்ல போறன். எனக்கு கலியாணத்தில் விருப்பமில்லை. இல்லை உனக்கு என்னைத் தான் புடிச்சிருக்குது, நான் தான் வேணும் என்டு நினைச்சா என்டா, உங்கட அம்மா அப்பாவ எங்கட வீட்ட வந்து கதைக்க சொல்லு. அம்மா 'ஓம்' என்டுட்டா என்டா எனக்கும் சம்மதம்." பெரியவர்கள் என்றதும் பயத்தில் ஒதுங்கி விடுவாள் என்று எண்ணம் அவனுக்கு.

உண்மை தானே! பெரியவர்கள் ஆயிரத்தெட்டு வரைமுறைகள் பார்ப்பவர்கள் இவளது விளையாட்டுத் தனத்திற்கு உடன்படுவார்களா என்ன?

அன்றைய நாளின் பின்னர் ஒரு கிழமை தேய்ந்து மறைந்திருந்தது. இத்தனை நாளாக அவன் வால் போல் பின்னாலேயே திரிபவளை அன்றைய நாளின் பின்னர் காணவே கிடைக்கவில்லை. இவனும் எங்கேயாவது தென்படுவாள் என்று பார்வை போகும் இடம் எல்லாம் அளந்து விட்டான், அவள் நிழலைக்கூடக் காண முடியவில்லை. அவளே வரவில்லையாம் அவள் நிழல் மாத்திரம் எப்படி வரும்?

வேலைப்பளு கூடியதாலோ என்னமோ, வீட்டுக்கு வரும்போதே உடல் சோர்வானதைப் போல் தோன்ற, பைக்கை அதன் இடத்தில் நிறுத்திய மகிழவன்,

"அம்மா, எனக்கு ஒரு தேத்தண்ணி வேணும்" அன்னை வீட்டில் உள்ளாரா இல்லையா என்ற ஆராய்ச்சி எல்லாம் இல்லை. வாசலில் இருந்தே குரல் கொடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தவனை வரவேற்பறையில் அமர்ந்திருந்த சிலர் விநோதமாகப் பார்த்தனர்.

ஆம், அவனுக்கும் சரி, அவனது அன்னைக்கும் சரி, இது புதிதொன்றும் இல்லை. மகிழவன் ஒரு தேத்தண்ணி பிரியன். உடலோ மனதோ சோர்வு கண்டால் தேத்தண்ணி தான் அதற்கு மருந்து என்பதைப் போல் அதையே நாடுவான். இன்றும் அதே போல் கூவியவனைத்தான் அவர்கள் விநோதமாகப் பார்த்து வைத்தனர்.

"இவன் தான் என்ர மகன் மகிழவன்" என்று அவனைக் கண்டதும் அறிமுகப்படுத்த, ஏற்கனவே தன் செயலில் வந்தவர்கள் தன்னை என்ன நினைப்பார்களோ என்று குறுகுறுத்த மனதைத் தாண்டி, கடினப்பட்டு உதட்டில் பொய்யாய் ஒரு புன்னகையினைப் பூசிக்கொண்டவன், பொதுவாய் எல்லோருக்கும் வணக்கம் வைத்து,

"இவயல நான் இதுவரைக்கும் கண்டதில்லையே, தூரத்து சொந்தமோம்மா?" என்றான் தாயிடம் அவர்களிடமிருந்த விழிகளை அசைக்காது.

"இல்லை மகிழு... யாரோ ஒரு புள்ளைக்கு உன்னை எங்கேயோ பார்த்துப் புடிச்சு இருக்கென்டு சொல்லி, அந்தப் புள்ளை இவயல இங்கே அனுப்பியிருக்கிறா. இவயல் சம்பந்தம் பேச வந்திருக்கினமடா!" என்றார் தனக்கு என்ன தகவல் வழங்கப்பட்டதோ, அதை ஒப்பித்து.

விளங்கிக் கொண்டாள் மகிழவன். அவனுக்குத் தான் தெரியுமே அது யார் என்பது.

"ஓ..." என ஒற்றை வார்த்தையோடு முடித்துவிட்டு, தாயின் பதிலமுன்னேறுவதைத் கேளாது விலகிச் செல்ல எத்தனித்தவனை,

"என்ன பதில் சொல்லட்டும் மகிழ்?" என்றார் அவன் மேலே முன்னேறுவதை தடுப்பது போல்.

"உங்கட பதில் தான் எனக்கு தெரியுமேம்மா... உங்களுக்குச் சரி என்டு படுறத சொல்லுங்கோ" என்று விட்டு மீண்டும் நகர முற்பட,

"எனக்கு தெரியுமடா! என்ர சொல்ல என்ர புள்ளைத் தட்ட மாட்டான் என்டு, அதால தான் ஏற்கனவே சரி சொல்லீட்டன்" இடியை இறக்குவது போல் அவர் சாென்ன பேச்சில் கால்கள் தானாய் இறுகிக்கொள்ள, தாயை இறுக்கமாய் ஒரு பார்வை பார்த்தவனால் சற்றும் நம்ப முடியவில்லை. அதே சமயம் வந்தவர்கள் முன்பு காரணம் கேட்டு வாதாடவும் முடியவில்லை.

"இதெல்லாம் உங்களுக்குச் சரி என்டு படுதாம்மா?" என்றான் அதே அழுத்தம் நிறைந்த பார்வை மாறாது.

"இதில் என்னடா இருக்கு? இன்னும் எத்தின நாள் தான் என்னோடயே இருப்பாய்? உனக்கென்டும் ஒரு வாழ்க்கை வேணும் தானே!"

"அதுக்கென்டு இவ்வ..." என ஏதோ கோபமாய்க் கேட்க வந்தவன், எதிரில் இருப்பவர்கள் நினைவு வர அவர்கள் புறம் விழிகளைத் திருப்பினான். அவர்களும் இவர்களையே வைத்த கண் வாங்காது பார்ப்பது தெரிய,

"உங்களுக்கு எது சரி என்டு படுதோ அதைச் செய்யுங்கோ." என்றவனுக்கு என்ன அவசரமோ, விறுவிறுவென நடந்தவனது அழுத்தமான காலடித்தடமானது வந்திருந்தவர்களது செவிப்பறைகளில் மோதி தேய்ந்து மறைய,

"தம்பி போற விதமே சரியில்லையேம்மா! ஒரு வேளை தம்பிக்கு விருப்பமில்லையோ என்னவோ?" வந்திருந்தவரில் மூத்தவர் சோகம் காட்ட,

"ச்சீ ச்சீ... அப்பிடி ஒன்டும் இல்லையங்கோ... திடீர் என்டு கலியாணம் என்டதும் தான் அவன் அப்பிடி நடக்கிறான். பிறகு சரியாகிடுவான்." என்றார் அவசரமாய் அவனது அன்னை சோபனா. வீடு தேடி ஒரு நல்ல வரன் வரும்போது யார் தான் விடுவார்கள். சோபனாவுக்கு இப்படி ஒரு சம்பந்தத்தை விட விருப்பமில்லை. அதனால்தான், மகன் மனம் தெரிந்தும் சம்மதம் தெரிவித்தார்.

"ஏதோ நீங்கள் சொல்லுறீங்கள். நாளை பின்னப் பிரச்சினை வந்தா முழுப் பொறுப்பும் நீங்கள் தான். அப்பக் கலியாணத்தை எப்ப வைப்பம். பொம்பிளை இருக்கிற அவசரத்துக்கு நாளைக்கு என்டாலும் சந்தோசப்படுவா!" என்றார் அவர் மேலும் தாமதிக்க வேண்டாம் என்பது போல.

"ஏன் அவ்வளவு அவசரம்? மாப்பிள்ளை எங்கே ஓடப் போறான்?" என்றவர் எதுவோ நினைவு வந்தவராய்,

"சரி, பொம்பிளை ஆசைப்படுறா என்டுறீங்கள் கலியாணத்தை எப்ப வைப்பம் என்டு நீங்க சொல்லுறீங்களோ, அதுக்கு நானும் உடன்படுறன்." என்றார்.

"நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னன் சம்பந்தி. கலியாணம் என்டா விளையாட்டே என்ன? பிள்ளைகளுக்கு அவசரம் என்ட உடனம் செய்யிறதுக்கு. எனக்கு ஒரே பிள்ளை. ஊரே கொண்டாடுற போல நடத்தோணும். ஒரு மாதம் கழிச்சே வைப்பம்." என்றார் பெண்ணின் தந்தை.

"நீங்க சொன்னா சரி தான்" எனச் சிரித்தவர் முகம் தான் ஏனோ ஊரே கொண்டாட வேண்டும் என்றதில் வெளிறியதோ தெரியவில்லை.

"அப்ப சரி! நாங்கள் வெளிக்கிடுறம். கையோட போய் ஐயரிட்ட நாள் எடுத்துட்டு சொல்லுறம். இப்பவே வேலையை ஆரம்பிச்சா தான் சரியா இருக்கும்." என்றவர்கள், நின்று ஒரு கப் தேநீர் கூட அருந்த நேரமற்றவர்கள் போல், அவசரமாகச் சென்று விட்டார்கள்.

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு ஐந்து நாட்கள் என்று வித்தியாசம் இருக்க, ஐயரும் தேதி குறித்துக் கொடுக்க, மறுக்காது அதே தேதியை இரு குடும்பமும் ஏற்றுக் கொண்டாயிற்று.


*****