• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

04. ரகசிய ராட்சஷி

kkp8

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
32
5
18
Tamil nadu
அத்தியாயம் 4


இந்த நாளுக்காகவே காத்திருந்தாற்போல் யாழினியை கட்டிக்கொடுத்த கையோடு, இதுதான் தருணமென அவளுடைய பெற்றோர் மருமகன் வீட்டுக்குச் செல்லாது, மண்டபத்திலிருந்து நேராக லண்டன் புறப்பட்டு விட்டார்கள். பின்னே இதற்கு மேல் ஒரு நிமிடம் இருந்தாலும், பிரச்சினை அவர்களுக்கு அல்லவா!

இங்கு அந்தப் பெரிய மாட மாளிகையின் முன் வந்து நின்றது கார். அதிலிருந்து முதல் ஆளாக இறங்கியது யாழினி தான்.

"பார்றா... ஊரிலேயே பெரிய வீடு தான் போல!" எனப் பிரமித்தவள் பின் என்ன நினைத்தாளோ, பெருமூச்சொன்றை இழுத்துவிட்டு தன் வீடுபோல் யார் அனுமதியும் இன்றி உள்ளே நுழைய எத்தனிக்க, ஏற்கனவே உள்ளே சென்றிருந்த சோபனா.

"எங்க வாற...?" என்றார் அவளை முன்னேற விடாது. அவரது தடாலடியான குரலில் ஒரு நிமிடம் தம்பித்து நின்றாலும், மறு நொடியே 'ஏன், இது என்ர வீடும் தானே' என்றவள் கண்களில் சோபனாவின் பின்னால் ஆரத்தி தட்டுடன் ஒரு பெண் வருவது தெரிய மாமியாரைத் திரும்பிப் பார்த்தவள்,

"இது என்ன?" என்றாள்.

"மருமகளா முதல் முதலா வீட்டுக்குள்ள அடி எடுத்து வைக்கிறாய், ஆலாத்தி எடுக்காம உள்ள விடக்கூடாது." என்றார். என்னதான் மருமகள் செய்வது தவறாக இருந்தாலும், தான் செய்ய வேண்டிய கடமையைச் சரிவரச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்.

"ம்ம்... இதுவும் ஒரு சம்பிரதாயமா? இவ்வளவு நடந்தும் அதை விடமாட்டன் என்டுறீங்கள். பரவாயில்லை எடுங்கோ. நான் வேற மேக்கப் எல்லாம் போட்டு வடிவா இருக்கிறன், ஆற்றயன் கண் விழுந்திருக்கும். இதால கண்ணூறாவது போகும்" என்று நிமிர்வாக வந்து நின்றவளிடம் என்னவென வாதாடுவார் சோபனா? எல்லாம் வேண்டி வந்த வரம் போல.

"மகிழ், உன்னையும் தான் எடுக்கோணும். நீயும் வந்து சேர்ந்து நில்லு!" என்றவருக்கு இந்த சில மணி நேரமே வெறுத்துப் போனது போல் பெருமூச்சொன்று வெளியேற, அந்தப் பெண்ணிடமிருந்து தட்டினை வாங்கிக்கொண்டு இருவருக்கும் கடமையே என ஆலாத்தி சுற்றியவர்,

"வலது காலை எடுத்து வைச்சு உள்ள போ" என்றார்.

"வலது காலோ! அது ஏன்?" என்றாள் புருவம் உயர்த்தி.

"அதுவும் ஒரு சம்பிரதாயம் தான்." ஏனோ, கேள்வி மேல் கேள்வி கேட்டுக் குடைபவளுக்கு உண்மையான காரணம் சொல்லப் பிடிக்காமல், வெறுமனே சம்பிரதாயம் என முடித்துக் கொண்டார் சோபனா.

"எப்பிடியும் இங்க வாழ வந்த நானும் சரி, நீங்களும் சரி விளங்கப் போறதில்ல..." பேசி முடிப்பதற்குள் இடது காலை எடுத்து படிகளில் வைத்தும் தான், "எதுக்கு வலது காலை?" வாக்கியத்தை முடித்து விட்டு மாமியாரைப் பார்த்தாள். அவரது முகமோ மருமகளின் செயலில் தகதகவென கொழுந்துவிட்டு எரிய, அதில் ஆனந்தம் கொண்டவள்,

"என்ர வேலையைப் பாத்து மாமியார் சரியான சந்தோசத்தில் இருக்குறீங்கள் போல. நான் தான் வந்துட்டனே இனிமேல் இப்பிடித்தான் ஒவ்வொரு நிமிசமும் வீடு சந்தோசத்தில் மிதக்கப் போகுது. சரி, இப்பிடியே நின்டா எப்பிடி வாங்கோ வீட்டுக்குள்ள போவம்." என்றவாறு வீட்டின் கதவுக்குள் நுழைந்தவள் கண்களில் விழுந்தாள் அவள்.

ஆம், கிட்டத்தட்ட இவள் வயதைவிட இரண்டு மூன்று வயது பெரியவளாய் இருப்பாள். பொருமியிருந்த வயிற்றில் கைவைத்தபடி வாசலில் அடி எடுத்து வைத்தவளையே வாசலின் ஓரம் நின்று ஏக்கமாய் பார்த்திருந்தவள் கண்களில் ஏனென்றே தெரியாது கண்ணீர்த் துளிகள் மின்னியது. ஏனோ அவளது தோற்றம் யாழினியையும் தாக்கியது போல, அவளையே வைத்த கண் வாங்காது பார்த்தவாறு மெதுவாக நடந்தவளது நடையின் வேகம் தளர்ந்ததைக் கண்ட சோபனா,

"இப்பிடி அன்ன நடை போட்டு வந்தா இருக்கிற நல்ல நேரமும் முடிஞ்சிடும். படத்துக்கு விளக்கு வைக்கோணும் நேரத்துக்கு நட!" என்றவரின் அதட்டலான குரலில் கனவிலிருந்து விழித்தவள் போல் விழிகளை சோபனாவிடம் திருப்பியவள், மீண்டும் அந்தப் பெண் நின்ற திசையில் திருப்பினாள்.

இல்லை அவள் அங்கு. அவளைத் தேடி மூலை முடுக்கு என்று பார்வையை மேயவிட்டவள் விழிகளில் மீண்டும் அவள் விழவே இல்லை. கண் இமைக்கும் நொடியில் எங்கு மறைந்தாளோ! நெருஞ்சி முள்ளாய் அவள் பார்வை அவளை ஏனோ குத்தியது. அதுவரை விபரீதமாய் ஏதோ ஒன்றைச் செய்துகாெண்டிருந்தவளது இறுக்கம் தளர்ந்து போக, மாமியார் குரலுக்கு அடி பணிந்தவளாய் அவர் பின்னே பட அறைக்குள் நுழைந்தாள்.

"ரெண்டு பேரும் ஒன்டா நின்டு சாமியைக் கும்பிடுங்கோ" என்றவர் சொல்லுக்குக் கட்டுண்டு இயந்திரமாய் கைக்கூப்பி நின்றவள் முன் தீப்பெட்டியை நீட்டியவர்,

"இந்தா நெருப்புப் பெட்டி! வலது கால எடுத்து வைச்சு வா என்டதுக்கு, விதண்டாதனம் செய்தா மாதிரி செய்து பாேடாம, சாமி விசயத்திலாவது சரியா நட!" என்றார் கறாரான குரலில். அதுவரை ஏதோ மாயையில் உழன்றவள் போல் சோபனா சொல்படி நடந்தவள், அவரது இறுதி வார்த்தையில் தான் மாயையிலிருந்து மீண்டவள் போன்று இமையினைச் சுருக்கி மாமியாரை ஒரு பார்வை பார்த்தவள்,

"அதானே! நீங்கள் சொன்னா நான் செய்திடோணுமோ? என்னால எல்லாம் இதைக் கொளுத்த ஏலாது." என்றாள் திமிராக.

"என்ர பொறுமைக்கும் ஒரு அளவிருக்கு. நானும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறன். நீ பாட்டு வாழ வந்த வீடு என்டில்லாம திமிரா நடக்கிற... இதுதான் உன்ர வீட்டில் சொல்லித் தந்து வளர்த்த வளர்ப்போ?" என்றார் கோபமாக. பாவம் அவரும் எவ்வளவுதான் பொறுமை காப்பது? எதுக்கும் ஓர் எல்லை உண்டு தானே! அதுதான் பொங்கி விட்டார் சோபனா.

"ம்ம்... இதைத்தான் எனக்குச் சொல்லி தந்தீச்சினம். உங்கள மாதிரி புள்ளைப்பூச்சியா எல்லாம் எங்கட அம்மா என்னை வளர்க்கேல" விடுவதற்கு அவள் என்ன மகிழவனா?

"என்ன... மகிழ நான் புள்ளைப்பூச்சியா வளர்த்தேனா? நீ பாத்தியா? வாய் இருக்கு என்டதுக்காக வாயில வாறது எல்லாம் கதைக்காத." என்றார் சோபனா தன் வளர்ப்பைக் குறை சொன்னதும் கோபமாக. உண்மைதானே! அவர் வளர்ப்பைப் பற்றி இன்று வந்தவளுக்கு என்ன தெரியும்? தாய் சொல்லைத் தட்டாமல் நடக்கிறான் தான் ஆனால் அதற்குப் பெயர் பிள்ளைப்பூச்சி இல்லையே! இந்தக் காலத்தில் இப்படி இன்று எத்தனை பிள்ளைகள் பெற்றவர்கள் சொல்லுக்கு அடிபணிந்து நடக்கிறார்கள். அப்படிப் பார்க்கப் போனால் சோபனாவின் வளர்ப்பு சரி தானே. அவளிடம் சாேபனா ஆத்திரம் கொண்டதில் தவறேதும் இல்லையே!

"நான் ஏன் பாக்கோணும்... அதான் ஊரே பாக்குதே!" என அவள் பக்கவாட்டில் முகத்தைத் திருப்பி முணுமுணுக்க,

"நானும் பாக்குறன் நீ ஓவரா போறாய்" அதற்கு மேல் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அடிப்பதற்கு ஓங்கிய கையினை லாவகமாகப் பற்றிக்கொண்ட யாழினி,

"என்னடா, இன்னும் மாமியாரின்ர அதிகாரத்தை காணேலயே என்டு! பரவாயில்லை, ஆரம்பமே அசத்தல் தான். ஆனா, மாமியாரே, ஒரு விசயத்தை மண்டையில் ஏத்தி வைச்சிருங்கோ. இந்த மாதிரி அதிகாரம் எல்லாம் என்னட்ட வேண்டாம்." பற்றியிருந்த கையினை ஆவேசமாகத் தூக்கி எறிந்தவள்,

"இதெல்லாம் விதியே என்டு பொறுத்துக் கொண்டு போக, மற்ற மருமகள் மாதிரி நான் இல்லை. வயசு வித்தியாசம் என்டு எல்லாம் பாக்க மாட்டன், எதை எனக்குத் தாரீங்களோ திரும்ப அதை நான் உங்களுக்குத் தர வேண்டி வரும், கவனம்." எச்சரித்தவள் விறுவிறுவென்று அந்தப் பட அறையினை விட்டு வெளியே வந்து கோலில் இருந்த கதிரையில் அமர்ந்து கொண்டாள்.

அவளது செயலில் அதிர்ந்து நின்ற சோபனாவின் கண்கள் குளம் கட்டியது. அப்படி அவர் என்ன செய்து விட்டார் என்று இப்படி ஒரு கதை கதைத்தாள்? அவள்தானே அவரது வளர்ப்பைப் பற்றிக் குறை கூறினாள். ஊரே அவர் வளர்ப்பைப் பெருமையாகக் கூறும்போது, இன்று வந்தவள் இல்லை அது தவறென்றால், இத்தனை காலம் பட்ட கஷ்டத்துக்கு அந்தச் சொல் கோபத்தை ஏற்படுத்தாதா? அதனால் செய்வது அறியாது சற்று கோபத்தை வெளிப்படுத்தி விட்டார். அதற்கு இப்படியா பெரியவர்கள் என்றில்லாது கதைப்பது?

"அம்மா..." கலங்கி நின்றவர் தோள்களைப் பற்றினான் மகிழவன். அதில் மகனைக் கலங்கிய விழிகளால் அவர் காண,

"அழாதீங்கோம்மா... உங்களைப் பற்றி யாழிக்கு என்ன தெரியும்? கொஞ்ச நாள் போனா உங்கட குணம் விளங்கும்." என்றான் சமாதானம் கூறும் விதமாய்.

"இல்லையடா! நான் பிழை விட்டுட்டன். உன்ர வாழ்க்கையை நானே பழுதாக்கிட்டன். வெளிநாட்டுப் பொம்பிளை என்டோன்ன என்ன ஏதென்டு விசாரிக்காம கல்யாணத்துக்குச் சம்மதம் சொன்னது பிழை என்டு இப்பத்தான் விளங்குது. மண்டபத்தில் அப்பிடி நடந்தும், மிச்ச சம்பிரதாயத்தைச் சரியா செய்யோணும் என்டு வீடு வரைக்கும் வந்திருக்கிற சொந்தங்களின்ர முகத்தில் இனி எப்பிடி தம்பி நான் முழிப்பன்? இவளின்ர பழக்கம் சரி இல்லாததால தான் இவளைப் பெத்ததுகள் தொல்லை துலைஞ்சா காணும் என்டு தாலி கட்டின கையோட மண்டபத்திலிருந்து ஓடிச்சுதுகள் போல..." என வருந்தி நின்றவர் கைகளை ஆதரவாய் பற்றியவன்,

"இல்லையம்மா... நீங்கள் செய்தது பிழையே இல்ல. நீங்கள் உங்கட மகன் நல்லா இருக்கோணும் என்ட நல்ல எண்ணத்தில் தான், எதைப்பற்றியும் யோசிக்காம இந்த முடிவு எடுத்திருக்கிறீங்கள். அது பிழையாப் போனா நீங்கள் என்ன செய்வீங்கள்? சொந்தக்காறருக்கு நீங்கள் ஆரென்டு தெரியும். அதால அவயல் என்ன நினைப்பினம் என்டு கவலைப்படாதங்கோ. அதோட யாழினியையும் உங்களுக்கு ஏற்ற நல்ல மருமகளா மாற்றிடலாம்" என்றான் மேலும் அவரை தேற்றும் பொருட்டு.

"ம்ம்... அந்தக் கடவுள் தான் அதுக்கு வழி விடோணும்" கடவுள் மேல் பாரத்தைப் போட்டவாறு கண்ணீரைத் துடைத்துக்கொண்டவர்,

"நல்ல காலம் இந்த விசயம் அறைக்குள்ள நடந்ததால ஆருக்கும் தெரியாது. சாமி விளக்கை நானே கொளுத்துறன். வெளியால நான் தான் கொளுத்தினான் என்டா மாதிரி காட்டிக் குடுக்காத, அனுபவிச்ச அசிங்கம் வரைக்கும் காணும்" மகனை எச்சரித்தவாறு விளக்கை வைத்தவர்,

"சாமி, எல்லாம் நீ தான். இதுக்கெல்லாம் ஒரு நல்ல வழியைக் காட்டு" மனதார வேண்டிக் கொண்டு வெளியே வந்தவரையும், யாழினியையும் மாறி மாறி சொந்தங்கள் காண,

"உடம்பு அலுப்பா இருக்குது என்டாள், அதான் விளக்க கொளுத்தின கையோட சென்றீல போய் இரு என்டு இவன்தான் அனுப்பினான்." தடுமாறிச் சொன்னவர் தடுமாற்றமே அங்கு நடந்ததை அவர்களுக்கு விளக்க, அதையே நோண்டிக் கேட்டு அவரின் மனதைப் புண்படுத்த விரும்பாதவர்கள் அவர் தோளில் ஆறுதலாய் தட்டிக்கொடுத்து,

"அப்ப நாங்கள் போட்டு வாரம்." என ஒவ்வொருவராக விடை பெற்றனர்.


*****