• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

17. இதயம் பகிர்ந்திட வா

Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
742
164
93
Jaffna
"நான் உள்ள வரலாமா...?" நீண்ட நேரமாக ஜன்னலையே வெறித்திருந்தவன் காதினில் கேட்ட குரலில், தான் கேட்ட குரல் அவளது தானா என அறிவதற்கு சட்டென திரும்பினான் சத்தியன்.
சந்தேகமே இல்லை. வெறுமை படிந்த முகத்துடன் வாசலில் நின்றிருந்த பிரியாவை கண்டதும்,

"நீ தானா...? ம்ம் வரலாம்." ஆர்வமாக திரும்பியதற்கும், அலுத்துக் கொண்டு அழைப்பதற்கும் சம்மந்தமே அற்றிருந்தது.
அவனது அழைப்பின் பின் உள்ளே புகுந்தவள், கதவினை பூட்டினாள்.

"கதவை ஏன் பூட்டுற...? ஏதாவது பண்ண போறியா என்ன..?" உதட்டினுள் புன்னகையினை மறைத்துக் கூறியவனது அப்பட்டமான புன்னகையினை காண்கையில், மூன்று நாட்கள் இல்லை.. அவன் உண்டு, முன்று மணி நேரம் கூட ஆகியிருக்காது போல, அந்த அளவிற்கு போசாக்கோடு பேசுபவன் போல் தான் இருந்தது.
அந்த பேச்சும், செய்கையும் மீண்டும் ஆத்திரத்தை பிரியாவுக்கு வரவழைக்க, 'இவனுக்காவது பேசி புரிய வைப்பதாவது.' தனக்குள் நினைத்தவளாய், கதவினை திறக்க முயன்றவள் முன் ஓடி வந்து அதை தடுத்தவன்,



"நான் தப்பா ஒன்னும் கேட்கலையே! கதைவ பூட்டுறியே! உள்ள வைச்சு ரெண்டு காட்டுக் காட்டப் போறியோன்னு நினைச்சுத் தான், அந்த மாதிரி கேட்டேன். உனக்கு என்ன மாதிரி புரிஞ்சுதோ! தப்பு என் பேரில இல்லம்மா..." அவசரமாய் தன் தரப்பு நியாயத்தை கூறியவனை கை கட்டி வேடிக்கையாய் பார்த்தாள் பிரியா.


பின்னே அவன் பொய் சொல்லலாம். ஆனால் பொய் தான் சொல்கிறான் என தெரிந்து கொள்ள தெரியாத தத்தி இல்லையே அவள்.


"சரி! நான் தான் தப்பா நினைச்சிட்டேன். அதை தான் உனக்கும் புரிய வைக்க வந்திருக்கேன். நான் உன்னை தப்பா நினைச்சது போல, நீயும் என்னை தப்பா நினைச்சிட்டா..?
அந்த எண்ணத்தை மாத்திக்கன்னு சொல்லத் தான் வந்திருக்கேன்." சுற்றி வளைத்து பேசாது, நேராக விஷயத்திற்கு வந்து விட்டாள்.




"இல்லையே நான் தப்பா நினைச்சேன்னு உனக்கு யாரு சொன்னா...? நான் சரியா தான் நினைச்சிருக்கேன். எனக்கு நீ வேணும்." அவள் எப்படிச் கூறினாலும் தன் நிலையிலிருந்து மாறுவதாக அவன் இல்லை.
அவனது அந்த பதில் மீண்டும் அவள் நிதானத்தை இழக்கச் செய்யது.



"லூசா நீ.... நீ வேணும்.... நீ வேணும்னா... நான் என் கடையில விக்கிற புண்ணாக்கா... பொட்டலம் கட்டித் தர, மனுஷி... எல்லாரையும் போல, ஒருதனுக்கு ஒருத்தின்னு வாழ நினைக்கிற சராசரி மனுஷி."

"நான் இல்லைன்னு சொல்லலையே! நீயும் வாழு... என்னையும் வழ விடுன்னு தானே சொல்லுறேன்." என்றான் எப்போதும் போல் புரியாது.


"எப்பிடி வாழ்றது? என் வாழ்க்கைக்கு குறுக்க வந்து நின்னுட்டு, வாழ்ன்னா எப்பிடி நிம்மதியா வாழுவேன்?"


"உண்மைய சொல்லு... நீ வாழ்ற வாழ்க்கை எல்லாம் ஒரு வாழ்க்கையா...? இல்லன்னா இத்தனை நாள் சுமந்திட்டிருந்தியே, நான் அறுத்து எறிஞ்ச அந்த தாலி.. அதை இன்னார் தான் காட்டினான் எண்டு தைரியமா அந்த ஆளை, உன்னால அடையாளம் தான் காட்ட முடியுமா...?" என்றான் அவளிடம் சவால் விடும் தோறணையில், அதில் சட்டென தலை கவிழ்ந்தவளால் எதுவும் பேச முடியவில்லை.


எங்கே உண்மை எல்லாம் தெரிந்து விட்டதோ! மேலே பேசப் போனால், மீதமும் சொல்லி விடுவானோ என்ற பயம் தோன்ற, சட்டென திரும்பி கதவின் புறம் சென்றவள் கையினை, போகாது பிடித்து நிறுத்தியவன்,


"எனக்கு ஒரு பதிலை சொல்லிட்டு போ பாரதி.." என்றான் அழுத்தமாக.
அவனை திரும்பிப் பார்க்காது தன் கையினை உருவியவள்,

"யாருக்கும் பதில் சொல்லுற நிலையில நான் இல்லை. ஆனா என் வாழ்க்கையில இனிமே யாருக்கும் இடம் இல்லை." உயிரற்ற ஜடம் பேசினால் எப்படி இருக்குமோ, அதே பாேல் பேசி விட்டு முன்னேறியவள் முன் வந்து நின்றவன்,

"எனக்கு சாதகமான பதில் வரலன்னா, பட்டினி கிடந்தே செத்துடுவேன் பாரதி.. என் சாவைத் தான் நீ எதிர் பார்க்கிறேன்னா, தாராளமா இங்க இருந்து போகலாம்." கூறிவிட்டு விலகி நின்றவனை நிமிர்ந்து பார்த்தவள் கண்கள் கண்ணீரில் குளித்திருந்தது.


"உனக்கு என்னை பத்தி என்ன தெரியும்ன்னு என் மேல ஆசை படுற....?" என்றாள் இறுகிய குரலி
ல்.


"எல்லாமே தெரியுமே!"


"இல்லை... இல்லை.... எல்லாமே தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல... என்னை பற்றி இப்போ சொல்லுறேன் கேளு... நான் ஒரு சுயநலவாதி... கேடு கெட்டவ... ஒழுக்கம் இல்லாதவ... அடுத்தவ புருஷன்னு தெரிஞ்சு ஒருத்தனை அபகரிக்க நினைச்ச ஈனப்பிறவி..." ஆதங்கத்தோடு பெரிதாய் கத்தி விட்டு, முகத்தினை மூடி குழுங்கி அழுதவள், சட்டென அழுகையினை நிறுத்தி,


"என்னை பற்றி எல்லாம் சொல்லிட்டேன். இனியும் நீ வேணும்ன்னு பின்னால வராத... வந்தா என்னால உனக்கும் கெட்ட பெயர் தான் வரும்." சொல்ல வேண்டியதை சொல்லி ஆயிற்று என்பது போல் கண்ணீரை அழுத்தி துடைத்து விட்டு, மௌனமாக நின்றவளையே பார்த்திருந்தவன்,


"இப்ப தான் உன்னை எனக்கு ரொம்ப புடிக்குது பாரதி" என்றவனை மின்சாரம் தாக்கியது போல் நிமிர்ந்து நோக்கியவளுக்கு, என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

"உனக்கு சொன்னா புரியாதா...? இவ்ளோ சொல்லுறேன்ல.. அப்புறமும்..."


"யாரு சொன்னா எனக்கு புரியலன்னு... எனக்கு நல்லா புரியுது..."


"என்ன புரிஞ்சுது. புரிஞ்சு தான் இந்த மாதிரி திரும்ப திரும்ப..."


"நீ தப்பு பண்ணிருக்க வாய்ப்பில்ல பாரதி... உன்னை எனக்கு நல்லா தெரியும்... நீ தான் உன்னை குழப்பிக்கிற..."


"என்ன தெரியும் உனக்கு என்னை பற்றி... இல்லை என்ன தெரியும்ன்னு கேக்குறேன்." இவ்வளவு சொல்லியும் தான் சொல்வதை செவி சாய்க்கவில்லை என்ற ஆதங்கத்தில், அவன் சட்டையினை பற்றி கேட்டவள் கையினை, தன் சட்டையிலிருந்து அவளுக்கு வலிக்காது இதமாக விடுவித்தவன்,

"எனக்கு தெரியாதுல்ல. நீ சொல்லு... அப்பிடி உன் வாழ்க்கையில என்ன தான் நடந்திச்சு...? எதுக்கு இத்தனை சொந்தங்கள் இருந்தும், அனாதையா இங்க வந்து கிடக்கிற..?" என்றதும் மீண்டும் தன் தலையினை கவிழ்ந்தவள் தன் கடந்த காலத்தை கூற ஆரம்பித்தாள்.

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
"மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குநழ்யும் விருந்து.


அதாவது இந்த குறளோட பொருள் என்னன்னா....
அனிச்சம் பூவை பத்தி இங்க யாரெல்லாம் கேள்வி பட்டிருக்கிங்க..." கேட்டு விட்டு பதிலுக்காய் தன்னிடம் ரியூசன் பயிலவரும் குழந்தைகளின் முகத்தினை நோக்கினாள். யாரும் பதில் சொல்வது போல் தெரியவில்லை. மாறாக உதடு பிதுக்கியவர்களை கண்டு சிரித்தவள்.


"யாருக்குமே தெரியாதா...? சரி நானே சொல்லுறேன். அனிச்சம் பூவுன்னு ஒரு பூ வகை. அதோட இதழ் இருக்குல்ல... அது அவ்வளவு மென்மையா இருக்குமாம். எவ்ளோ மென்மைன்னா... சாதாரண பூவைப் போல இல்லாம... அந்த பூவை சும்மா முகர்ந்து பார்தாலே அது வாடிடுமாம். அப்பிடி பட்ட பூவை பறிக்க முடியுமா...? கை பட்டதும் கசங்கி காணாம போயிடும். அந்த பூவை தான் இங்க வள்ளுவன் விருந்தினரோட மனம் அவ்வளவு மென்மையானதுன்னு உவமையா சொல்லிருக்காரு.
வீட்டுக்கு வந்தவங்கள கண்டதும் கொஞ்சுண்டு முகம் கோணி பார்த்தாலே, விருந்தினர்கள் முகம் வாடி போயிடும்ன்னு வள்ளுவர் சொல்லுறாரு. இப்போ புரியுதா....?" என்றவளது விளக்கம் கேட்டதும்.


"புரியுது மிஸ்..." என்றனர் எல்லோரும் கோலசாக.
அதே நேரம்...

"இவ்ளோ தெளிவா என் டீச்சரும் எனக்கும் பாடம் சொல்லித் தந்திருந்தா நானும் இப்போ பெரிய பண்டிதர் ஆகி இருந்திருப்பேன்.
என்ன செய்ய...? எனக்கு வாய்ச்சது டாச்சர் ஆச்சே" வெளியே சுற்றி விட்டு வந்த அவளது தம்பியான தசரதன் காதில் அவள் சொல்லிக் கொடுத்த குறளின் பெருள் விழுந்தது போல. கேலி பேசியவாறு வந்தவன், வாசலில் இருந்த வாலி நீரினால் பாதத்தினை கழுவியவாறு,


"சந்ரூ நீயும் காலை கழுவிடு! இல்லன்னா வாசல்ல இருக்கிற துவார பாலகரோட அனுமதி கிடைக்காது." கடைக் கண்ணால் தமக்கையை பார்த்தவாறு கூறியவனை முறைத்தாள் பாரதி.


உண்மை தான்... பாரதிக்கு காலினை கழுவாது வீட்டுக்குள் வருவது பிடிக்காது. பின்னே அவர்கள் இருப்பது மலைக் கிராமம் ஆயிற்றே... காலினை கழுவாது உள்ளே வந்தால், அவர்களோடு சேர்த்து அட்டையும் அல்லவா ஒட்டிக் கொண்டு வந்துவிடும். அதிலும் தசரதன் சும்மாவே ஊர் சுற்றி... அங்கு இங்கு என திரிந்து எதை மிதித்து விட்டு வீட்டுக்குள் வருவானோ! அவனுடன் சேர்ந்து கண்டதும் அல்லவா வீட்டுக்குள் வரும், பின் அவள் தான் அதை தேய்து கழுவ வேண்டும். இருக்கும் வேலைப் பழுவில் இதுவும் அவளுக்கு தேவையா? அதனால் தான் ஓர் முன் எச்சரிக்கைக்காக வாசலில் நீர் வாலி ஒன்றினை வைத்து, சட்டமும் வகுத்தாள்.



"டேய்... இன்னைக்கு கருட பார்வை என் பக்கம் திரும்பிடிச்சு போல.. சீக்கிரம் உள்ள வா...!" பயத்தில் தன் நண்பனை உள்ளிழுத்து ஓடியவனை கண்டவள் உதடுகளோ, தம்பியின் செயலில் நாசுக்காய் நகைத்தது.


இப்படித் தான் நண்பர்கள் என்று தினமும் ஒருவனை அழைத்து வருவான் தசரதன். அவனுக்கு யாராசு மச்சான் என்று விட்டால் போதும். வயது வேறுபாடு அற்று அவர்களுடன் நட்பினை வளர்த்துக் கெள்வது மட்டுமல்லாது, வீட்டிற்கு அழைத்து வந்து விருந்து உபச்சாரத்தில் இறங்கி விடுவான். அவனது அன்னை காஞ்சனா
வும்,


"வீட்டில ஒரு வயசுக்கு வந்த பொண்ணிருக்கிறது நினைவிருக்கா..? தினமும் ஒருதனை அழைச்சட்டு வந்தா, ஊர் என்ன பேசும்.?" அவரும் எப்போதும் போல், தனிமையில் அழைத்து திட்டுவார் தான், அவன் கேட்க வேண்டுமே.


"அம்மா... அம்மா.... இங்க வாம்மா.... என் ஃப்ரண்ட் வந்திருக்கான். வந்து அறிமுகம் ஆகிக்கோ." ஏதோ பெரிய முதல்வர் ரேஞ்சுக்கு சமையல் கட்டில் வேலையாய் இருந்தவரை அழைத்ததும் ஆத்திரம் வந்தாலும், வந்தவன் முன்பு அவனை திட்ட முடியாதே!
கையாலிருந்த தோசை கறண்டியோடு ஹாலுக்கு வந்தவர்,


"வாப்பா.... நல்லா இருக்கியா...? உன்னை நான் இவன்கூட பார்த்ததே இல்லையே!" அவன் முகம் புதிதாக இருக்கவும் வினவினார்.


"ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் ஆன்ட்டி பழக்கமானோம்."

"ஓ. அப்பிடியா...? சரி நீங்க பேசுங்க எனக்கு சமையல் வேலை இருக்கு." வந்த வழி திரும்பினார். நின்று பேச நேரமும் வேண்டும்... பிடிக்கவும் வேண்டுமே!


"ம்மா... நண்பனுக்கு ஒரு காஃபி" என்றவனை மற்றையவன் அறியாது முறைத்தவர், கடிபட்ட பற்களின் இடுக்கினால்,


"ஊத்தி வைக்கிறன் வந்து எடுத்துட்டு போ!" என்றவரும் அறிவார், கேட்டவனும் அறிவான், உள்ளே அவன் வந்ததும் என்ன நடக்கும் என்பதை.

"முக்கியமா பேசப் போறாம்மா... நீயே எடுத்துடு வாயேன்." தனிமையில் சிக்காது தப்பிப்பதற்கு கூறியவனை இம்முறை வெளிப்படையாக முறைத்தவர்,


"இலங்கை பொருளாதாரத்தில மாற்றத்தை உங்க பேச்சு கொண்டு வரப்போகுது பாரு. உன்னால ஏற்கனவே ஒரு தோசை கருகின வாடை வருது. அடுத்த தோசையும் கருகீச்சுதுன்னு வையி! நீ தான் அது ரெண்டைத்தையும் திங்குவ... மரியாதையா வந்து எடுத்துட்டு போ!" எல்லா வீடுகளிலும் நடப்பது தானே இது. புதிதாக வந்தவனுக்கு அது தவறாகப் படவில்லை. மாறாக புன்னகைத்தவன்,


"நான் காஃபில்லாம் சாப்பிட மாட்டேன் ஆன்ட்டி!" என்றான் இருவருக்கும் சிரமம் தராது.

"அது என்ன வேண்டாம்... முதல் முதலா வீட்டுக்கு வந்திருக்க.. காஃபி பிடிக்கலன்னா என்ன....? அம்மா பூஸ்ட் ஊத்தி தருவாங்க... இல்லையாம்மா..." அவனே பெரிய மனதுடன் வேண்டாம் எனும் போது, விட வேண்டியது தானே! சனியனை தூக்கி அக்குளில் சொருவிக் கொண்டான் தசரதன்.