• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Nilaa - 05

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,393
433
113
Tirupur
நிலவு _ 5

சீரான வேகத்தில் செலுத்தப்பட்ட கார் மிகப் பிரமாண்டமான பங்களா என்றும் சொல்ல முடியாத அதே சமயம் சாதாரண வீடு என்றும் சொல்ல முடியாத இரண்டிற்கும் இடைப்பட்ட ஓர் சிறிய அழகிய பங்களாவின் முன் போய் நின்றது.
அதிலிருந்து இறங்கி தன் வழக்கமான வேகநடையோடு உள்ளே செல்ல முயன்ற இனியன் சற்றே தயங்கி சிறு சிரிப்புடன் வாசலில் இருந்த காலணிகள் வைக்கும் தாங்கியில் தன் காலணிகளை கழற்றி வைத்து விட்டு வீட்டினுள்ளே நுழைந்தான்.

இனியனின் தாய் கமலாதேவிக்கு வீட்டினுள்ளே காலணிகளை அணிவது அறவே பிடிக்காத விடயம். சில சமயம் இனியன் ஏதேனும் சிந்தனையில் காலணிகளுடன் வீட்டினுள்ளே நுழைந்து விட்டால் அவ்வளவு தான்.

இனியா என்ன பழக்கம் இது.இது வீடா அல்லது வேறு ஏதாவதா?? நாம் வாழும் வீடு என்பதும் ஒரு கோவில் போலத் தான்.அங்கும் லட்சுமி தேவி வாசம் செய்வாள். தெய்வம் வாசம் செய்யும் இடத்தில் இப்படித்தான் காலணிகளோடு உள்ளே நுழைவாயா?? அப்படி செய்தால் அந்த வீட்டில் தெய்வம் வாசம் செய்யுமா??? என்று ஒரு பிடி பிடித்துவிடுவார்.

இனியனோ ஹ ஹ ஹ......அம்மா நீங்கள் சொல்வது எல்லாம் சும்மா போலி சம்பிரதாயங்கள் மா. வீட்டினுள்ளே காலணிகள் அணியக்கூடாது என்பதற்கு உண்மைக் காரணம் எது தெரியுமா?? நாம் இந்த காலணிகளோடு கண்ட இடங்களுக்கும் செல்கிறோம் நம் வீதிகள் அவ்வளவு சுத்தமாக இருக்கின்றனவா?? அதனால் கண்டதையும் மிதிக்க வேண்டிய சூழ்நிலை வருகிறது.அதே காலணிகளோடு வீட்டினுள்ளே வரும் போது பல கிருமிகள் வீட்டினுள்ளே பரவி நோய்த் தொற்றுகள் ஏற்பட வாய்ப்பிருக்கின்றது.
இந்த காரணத்தைச் சொன்னால் நாம் அவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்ள மாட்டோம் என்று தெய்வத்தை காட்டி மிரட்டி நம்மை இதை செய்ய வைத்துள்ளனர் நம் முன்னோர். அதோடு...........

சரி டா சரி.நீ சொல்வது போலவே இருக்கட்டுமே.அவர்கள் ஒன்றும் தவறாக சொல்லவில்லையே??? அவர்கள் சொல்வதில் எவ்வளவு பெரிய அர்த்தம் உள்ளது.அதற்காகவேனும் உன் சோம்பேறித்தனத்தை கைவிட்டு இந்த நல்ல பழக்கத்தைப் பின்பற்றலாமில்லையா?? இதோ பாருப்பா நம் முன்னோர்கள் சொன்ன ஒவ்வொரு விடயத்திலும் ஆயிரம் அர்த்தங்கள் நன்மைகள் ஒளிந்திருக்கும்.அதை கண்டுபிடிப்பதற்கு நமக்கு அறிவு தான் போதாது.

உதாரணமாக நாம் பிள்ளையாரின் முன் தலையின் இரு ஓரங்களிலும் குட்டிகும்பிடுகிறோம் இல்லையா?? அது மிகச் சிறந்த ஒரு பயிற்சியாம்.தலையின் அந்த ஓரங்களில் முக்கியமான நியாபக சக்தியைத் தூண்டும் நரம்புகள் உள்ளனவாம்.நாம் மூன்று முறை குட்டிக்கும்பிடும் போது அந்த நரம்புகளுக்கு லேசான அழுத்தம் கிடைத்து நம் நிஜாபக சக்தி அதிகரிக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அந்த காலத்தில் நம் முன்னோருக்கு இந்த கண்டுபிடிப்பை யார் வந்து சொன்னார்கள்.விநாயகனை வணங்கினால் புத்திக்கூர்மை கிட்டும் என்று??
இந்த விஞ்ஞானம் எல்லாமே நம் மெய்ஞானத்தில் இருந்து தோன்றியது தான் கண்ணா. நம் முன்னோர்கள் கூறிய ஒவ்வொரு விடயத்திலும் ஆயிரம் அர்த்தம் இருக்கும்.கண்ணை மூடிக்கொண்டு அவர்கள் கூற்றைப் பின்பற்றினால் கூட தப்பில்லை.என்று மூச்சு வாங்க அறிவுரை சொல்லத் தொடங்கிவிடுவார்.இறுதியில்

தெய்வமே....போதும்.ஒரு shoe போடும் விடயத்திற்கு இவ்வளவு lecture அஹ முடியல மா விட்டுடுங்க.நான் இனி காலணியே அணிய மாட்டேன் என்று போலியாய் அவன் கதறிய பின்பே அவரின் அறிவுரையை நிறுத்துவார்.

என்னதான் தாயை கேலி செய்தாலும் முடிந்தளவு நியாபகமாய் காலணிகளை வெளியே நீக்கிவிட்டே வீட்டினுள்ளே செல்வான்.

உள்ளே கூடத்தில் ஏதோ ஒரு புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்த அவன் தந்தை ராமமூர்த்தி அவனைக் கண்டதும் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு..

வாப்பா....ஏன் இவ்வளவு தாமதம்??? என்றவர் தொடர்ந்து மிகவும் களைத்து தெரிகிறாய் போ .. போய் குளித்துவிட்டு வா சாப்பிடலாம் என்றார்.

அவருக்கு சம்மதமாகத் தலையசைத்தவன்.நீங்களும் இன்னும் சாப்பிடவில்லையாப்பா???? என வினவினான்.

நீ வந்தபின் பேசியபடி சேர்ந்து சாப்பிடலாம் என்று இருந்தேன்பா.என்ற தந்தையிடம்

ப்ச்..என்னப்பா நீங்கள்.மாத்திரை எடுப்பது நேரத்திற்கு சாப்பிட வேண்டாமா?? என்று கடிந்துகொண்டவன் மேலும் நேரத்தைக் கடத்தாது விரைந்து சென்று குளித்து உடைமாற்றிவிட்டு உணவு மேசைக்கு வந்தான்.

கமலா இருவருக்கும் தட்டுக்களைக் எடுத்து வைத்து பரிமாற முற்படவும் அவர் கையைப் பற்றி தன்னருகில் அமர வைத்த ராமமூர்த்தி
நீயும் உட்கார் தேவி. ஏற்கனவே நேரமாகிவிட்டது.மூன்று பெரும் சேர்ந்தே உண்ணலாம் என்றவர்.உணவினை எடுத்து மனைவியின் தட்டிலும் தானே பரிமாறினார்.

எப்போதும் போல தந்தைக்கும் தாய்க்கும் இடையே உள்ள காதலை பாசத்தை அன்னியோன்யத்தை ஓரக் கண்ணால் பார்த்து புன்னகைத்துக்கொண்ட இனியனின் மனம் நிறைந்தது.

அவனின் வாழ்விலும் இதே போல் மாறா நேசத்தை கொடுக்க பெற அவனின் வாழ்க்கையை அன்பால் வண்ண மயமாக்க ஒருத்தி எப்போது வருவாளோ???

இனியா!! இன்று அன்னை இல்லத்துக்கு சென்றாயா??

தந்தையின் கேள்வி அவனின் எண்ணத்தை இடைவெட்ட அன்னைஇல்லம் எனும் பெயரில் அத்தனை நேரம் மறந்து போயிருந்த நிலாவின் நிர்மலமான முகம் அவன் மனதில் மின்னல் வெட்டியது.

ம்ம் போனேன் பா. துர்க்காம்மாவை சந்தித்து பேசினேன்.இல்லத்தையும் சுற்றிப்பார்த்தேன்.அவர்களால் முடிந்தவரை சிறப்பாகவே நடத்துகிறார்கள் பா.ஆனாலும் அங்கு பூர்த்தியாக்கப்பட வேண்டிய தேவைகளும் இல்லாமல் இல்லை.நம்மளால் முடிந்தவரை இன்னும் செய்ய வேண்டும்பா.என்றான் ஓர் உறுதியுடன்.

அதைக் கேட்டு கண்டிப்பாய் செய்யலாம் இனியா என்றவர் என்ன கமலா என்று மனைவியின் கருத்தையும் கேட்டார்.
இதில் நான் சொல்ல என்னங்க இருக்கு.ஆண்டவன் நாலு பேருக்கு நல்லது செய்யக் கூடிய நிலையில் நம்மை வைத்திருக்கிறான்.நம்மால் முடிந்தவரை அடுத்தவருக்கு உதவுவதில் எனக்கும் சந்தோசந்தாங்க.என்று கூறி புன்னகைத்தார் கமலாதேவி.

தாய் தந்தையின் பேச்சைக் கேட்டு புன்னகைத்தவன் ஏதோ நினைவு வந்தவன் போல அம்மா இன்று நிலாவைப் பார்த்தேன் மா என்றான் மகிழ்ச்சியுடன்.

அது என்ன புதிதா டா.அது தான் தினமும் வானத்தில் தெரியுதே நீ இன்று தான் பார்த்தாயா?? என்று தாய் அப்பாவியாய் கேட்கவும்

ம்மாஆ ...என்று அவன் பல்லைக்கடிக்க அவன் நிலை உணர்ந்த அவன் தந்தை சிறு சிரிப்புடன்.

நிலா....கேள்விப்பட்ட பெயராய் இருக்கிறதே என்று சற்று சிந்தித்தவர் சட்டென நினைவு வந்தவராய்

ஒ...உன் நண்பனின் தங்கை.உன்னைக்கூட வண்டியால் மோதி சாக்கடையில் தள்ளி விட்டாளே அந்தப் பெண்ணா?? ஆனால் அந்தப்பெண் எப்படி இங்கே??? என்று சிறு சிரிப்புடன் விசாரித்தார்.

ஹ்ம்ம் இப்படி என் மானத்தை வாங்கியதற்கு நீங்கள் அந்தப் பெண் யாரென்று தெரியாது என்றே கூறியிருக்கலாம் என்று அவன் கடுப்புடன் கூறவும்

ஹ ஹ ஹ என்று வாய்விட்டு சிரித்தவர் சாரிப்பா அந்த சம்பவம் மிகவும் சுவாரஸ்யமானதா?? அது தான் சட்டென்று நினைவு வந்துவிட்டது என்று கூறி சிரித்தார்.

அவர் கூட சேர்ந்து அவன் அன்னையும் ஒ அந்தப் பெண்ணா நீ கூட அவளின் குறும்புகளைப் பற்றி கூறி சிரிப்பாயே அவளா?? சட்டென நிலான்னதும் நிஜாபகம் வரவில்லை.நீ முன்பு அவளைப் பற்றி கூறும் போது அவளைப் பார்க்க வேண்டும் என்று நினைத்ததுண்டு.இப்போது எப்படி இருக்கிறாள்??? வளர்ந்துவிட்டாளா?? இப்போதும் அதே குறும்புதானா??? என்று ஆர்வத்துடன் விசாரித்தார்.

அன்னையின் கேள்வியில் அன்று முக்கால் காற்சட்டையும் தொளதொள ஷர்ட்டுமாக கூந்தல் இழைகள் இழுத்து வாராமல் தன் போக்கில் காற்றில் பறக்க அவள் பின்னே நிலாக்கா நிலாக்கா என்றபடி சுற்றிய ஐந்தாறு வால்களுடன் கலகலத்துச் சிரித்தபடி ஓடிய நிலா நினைவடுக்கில் வந்து போக இழுத்து வாரி கொண்டை போட்ட முடியும் கண்ணியமாய் உடுத்திய பருத்திப் புடவையும் சிரிப்பென்பதை அறவே தொலைத்த முகமும் கண்களில் நிரந்தரமாய் குடியேறிய அமைதியுமாய் இன்றைய நிலாவின் தோற்றம் விழித்திரையில் வந்து போனது.

காரணம் அறியாமலே அவன் நெஞ்சில் ஏதோ பாரமேறிய உணர்வுடன் ரொம்பவும் வளர்ந்துவிட்டாள் மா என்று முனுமுனுத்தவன் தூக்கம் வருகிறது.தூங்கப்போகிறேன் பா.என்றபடி கைகளைக் கழுவிவிட்டு தன்னறைக்கு விரைந்தான்.

இனியா பாலைக் குடித்துவிட்டு போ என்று மகனை அழைத்த மனைவியை விடு கமலா அவன் மிகவும் சோர்வாக இருக்கிறான் தூங்கட்டும். ஒரு நாள் பால் குடிக்காமல் விடுவதால் எதுவும் ஆகிவிடப்போவதில்லை என்று சமாதானம் செய்தார் ராமமூர்த்தி.

தன்னுடைய அறைக்குச் சென்ற இனியன் உண்ட பின் நூறடி உலாவுதல் வேண்டும் எனும் வழக்கத்திற்கு ஏற்ப சற்று நேரம் பால்கனியில் நடை பயின்றவன்.பின் பால்கனியில் போட்டிருந்த கூடை நாற்காலியில் சாய்ந்தான். அவன் மனம் பழைய நிகழ்வுகளில் உழன்றது.

அவன் தந்தை அரசாங்கத்தில் உயர் பதவியில் இருந்ததாலும் தன்னுடைய பணியில் நேர்மையுடன் இருந்ததாலும் அடிக்கடி இடமாற்றம் வந்துகொண்டே இருந்தது.அதன் காரணமாக அவனின் பள்ளிப் படிப்பும் காலத்துக்கு காலம் இடம் மாறிக்கொண்டே இருந்தது. இதே நிலை அவனின் கல்லூரிப் படிப்பிலும் தொடர்ந்துவிடக்கூடாது என்பதற்காக அவன் தனது கல்லூரிப் பட்டப்படிப்படிப்பை சென்னையில் ஒரு பிரபலமான கல்லூரியில் விடுதியில் தங்கி தொடர்ந்தான்.

அச் சமயத்தில் தான் அவனுக்கு சேரனின் நட்பும் கிடைத்தது. இனியனுக்கு பள்ளிக் காலம் தொட்டே ஒரு கனவுண்டு. கனவு என்பதை விட ஒரு ஆசை வெறி என்றே கூட சொல்லலாம். இனியன் அறிந்தவரையில் அவன் குடும்பத்தின் மூத்தோர்கள் அனைவருமே அடுத்தவர்களிடம் கை நீட்டி சம்பளம் பெற்று பிழைத்தவர்கள் தான்.அவன் தந்தை கூட அரசாங்க உத்தியோகம் என்றாலும் அதுவும் அரசிடம் கைநீட்டி சம்பளம் வாங்குவது போல தானே. சிறு வயதில் இருந்தே நினைத்ததை அடைந்து பழகிய அவனுடைய இயல்புக்கு மாதம் முழுதும் மாடாய் உழைத்து மாதக் கடைசியில் இன்னொருவரிடம் சம்பளம் பெற்று பிழைப்பது என்பது துளியும் சரி வராதது என்பது அவனுக்கு புரிந்து போனது.குறைந்தது பத்துப் பேருக்காவது அவன் சம்பளம் கொடுக்க வேண்டுமே தவிர அவன் யாரிடமும் கைநீட்டி சம்பளம் வாங்கிவிடக் கூடாது என்ற எண்ணம் சிறு வயதிலிருந்தே அவன் மனதில் ஆழப் பதிந்த விடயம்.எனவே அவன் மனம் ஆரம்பத்திலிருந்தே அதற்கான வழியைத் தேடுவதிலேயே குறியாக இருந்தது.

கல்லூரி படிக்கும் போதும் அவன் மற்ற பையன்கள் போல அரட்டை சினிமா கேளிக்கை என்று நேரத்தை செலவிட்டது குறைவே! அதில் அவனுக்கு அவ்வளவாய் ஆர்வமும் இருந்ததில்லை..அவன் மனதில் ஒன்றையே நினைத்து அதை நோக்கியே தனது ஒவ்வொரு அடிகளையும் எடுத்து வைத்துக்கொண்டிருந்தான்.

பிறரிடம் அளவாய் பேசி அமைதியாய்ப் புன்னகைத்து தன் குறி ஒன்றே இலக்காய் அமைதியுடன் கல்லூரி வாழ்கையில் பயணித்த இனியனுக்கு அவனைப்போலவே அனாவசிய ஆர்ப்பாட்டங்கள் இன்றி அமைதியாய் பொறுப்பாய் கல்லூரி வாழ்கையை எதிர்கொண்ட சேரனை பிடித்திருந்தது.இருவரின் இயல்பும் கிட்டத்தட்ட ஒத்துப் போனதால் இருவருக்கும் இடையே நல்ல நட்பும் மலர்ந்தது.அது சேரனின் வீடுவரை தொடர்ந்தது.

முதல் முதல் தான் சேரனின் வீட்டுக்கு சென்ற தினத்தை நினைத்துப் பார்த்த இனியனின் இதழ்களில் அவனையும் மீறி ஓர் முறுவல் மலர்ந்தது.

அன்று சேரன் ஜுரம் என்று கல்லூரிக்கு சில நாட்கள் வராததால் அவனிடம் இருந்த ஒரு முக்கியமான reference book ஒன்றை வாங்கி வருவதற்காக அவனின் வீட்டுக்கு சென்றான் இனியன். அந்த நேரம் அவனின் வண்டி வேறு மக்கர் செய்துவிட்டதால் வேறு வழியின்றி பேரூந்தில் சென்று அவன் வீடு இருக்கும் பகுதியில் இறங்கி அவன் வீட்டுக்கு நடந்தே செல்ல வேண்டிய சூழ்நிலை.

அதற்கு முன் சேரனின் வீட்டுக்கு அவன் செல்லவில்லையாதலால் சேரனிடம் தொலைபேசியில் அழைத்து முகவரியை கேட்டவாறே நடந்துகொண்டு இருந்தவன் மீது திடீரென்று பின்னால் வந்து எதுவோ வேகமாய் மோத அந்த அதிர்வில் நிலை தடுமாறி அருகில் ஓடிக்கொண்டிருந்த கழிவுநீர் வாய்க்காலில் விழுந்தான் இனியன்.

நல்லவேளை ஒரு காலின் முக்கால் பாகம் மட்டுமே கழிவுநீர் தொட்டியுள் மூழ்கியிருக்க அருகிலிருந்த மதில் சுவரைப் பற்றிப் பிடித்து முழுதும் விழுந்து விடாமல் சமாளித்தபடி கோபத்துடன் திரும்பினால் தனக்கும் அந்த நிகழ்வுக்கும் எதுவித சம்பந்தமுமே இல்லை என்பது போல அவன் கால்களுக்கிடையில் புகுந்து நின்றிருந்த தனது துவிச்சக்கர வண்டியை நிதானமாக எடுத்துக்கொண்டிருந்தாள் ஒரு சின்னப்பெண்.

வந்த ஆத்திரத்தில் பல்லைக் கடித்தவன் “ஏய் உனக்கு அறிவில்லை.உன் கண்ணை என்ன பிடரியிலா வைத்திருக்கிறாய் “ என்று சீறினான்.

அவன் கோபத்தைக் கண்டு சற்றும் அசராதவள் அவனை நிமிர்ந்து பார்த்து ஏன் சார் உங்களுக்கு கொஞ்சம் கூட அறிவில்லை. என் சைக்கிளே பிரேக் பிடிக்காமல் வந்துகொண்டிருக்கிறேன்.இப்படியா முன்னே வருவது. வீதியில் நடக்கும் போது முன்னால் பின்னால் பார்த்து நடப்பதில்லை என்றாள் அதட்டலாக.

முன்னால் பின்னால் பார்த்து நடப்பதா..??

இனியனே அவள் பேச்சைக் கேட்டு அசந்து போனான்.சிவனே என்று வீதியோரம் நடந்து கொண்டிருந்தவன் மீது வந்து சைக்கிளால் மோதி சாக்கடையில் தள்ளியது மட்டுமில்லாமல் ஏதோ தன்னில் தப்பே இல்லாத மாதிரி குருட்டு நியாயம் வேறா?? என்றிருந்தது.

அவளின் பேச்சை ஜீரணித்து அவன் மீண்டும் கோபமாக ஏதோ கூற முயலும் முன் நிலாக்கா என்னாச்சு?? நிலாக்கா என்னாச்சு?? என்றபடி ஒரு நாலைந்து சிறுவர் சிறுமிகள் ஆளுக்கொரு துவிச்சக்கர வண்டியில் வந்து அந்த இடத்தில் குவிந்தனர்.

ஹே எனக்கு ஒண்ணுமில்ல டா. இந்த சார் தான் போனில் சுவாரஸ்யமாய் ஏதோ பேசியபடியே என் சைக்கிளின் குறுக்கே வந்து விழுந்துவிட்டார் என்று அப்பாவியாய் விழிவிரித்து கூறினாள் நிலா.
அவள் பேச்சைக் கேட்டு அவன் பல்லைக் கடிக்கும் போதே அவள் பேச்சைக் கேட்ட அந்த வாண்டுகளும் ஏன் அங்கிள் பார்த்து போக கூடாது. சரி சரி இனியாவது பார்த்து எங்கேயும் விழுந்து அடிபடாமல் வீடு போய் சேருங்கள் என்று கன அக்கறையாக அவனுக்கு புத்திமதி சொல்லிவிட்டு அவரவர் சைக்கிளை கிளப்பினார்கள்.

இனியனுக்கு வந்த ஆத்திரத்துக்கு அங்கிருந்த மரக்கிளையை ஒடித்து அந்த வானரக்கூட்டத்தை நாலு விளாசு விளாசலாமா என்று தோன்றியது. சேறு படிந்த காலும் முகம் முழுதும் கோபமுமாக பல்லைக் கடித்தபடி அவன் அவளை முறைக்கும் போதே சற்று தூரம் சென்றிருந்தவள் தலையை திருப்பி இவனைப் பார்த்து நாக்கை துருத்தி கண்ணைச் சுருக்கி பழிப்பு காட்டிவிட்டு தன் சைக்கிளை விரைந்து மிதித்தாள்.

ஆக அவன் அவளைத் திட்டும் முன் அவளே முந்திக்கொண்டு அவனை பேச முடியாதபடி முட்டாளாக்கி விட்டு சென்றிருக்கிறாள்.சரியான வானரம்.கோபத்துடன் காலை தரையில் ஓங்கி உதைத்தவன் அங்கிருந்து சில வீடுகளே தள்ளியிருந்த சேரனின் வீட்டுக்கு சென்றான்.
உள்ளே வரச் சொல்லி அழைத்த அவனின் அன்னையிடம் தனது காலினை காண்பித்தவன்
ப்ளீஸ் ஆன்டி வாஷ் பண்ண வேண்டும் என்றான் சங்கடத்துடன்.முதல் முதல் நண்பன் வீட்டுக்கு இந்த நிலையிலா செல்ல வேண்டும் என்று இருந்தது இனியனுக்கு.
என்னப்பா ஆச்சு?? எங்கேயாவது விழுந்து விட்டாயா?? அடி எதுவும் படலையே?? என்று அக்கறையாக விசாரித்தவாறு முன்னால் தோட்டத்தில் இருந்த பைப்பினைக் காண்பித்தார் சேரனின் அன்னை.

ஒரு சின்னப் பெண் சைக்கிளால் மோதிவிட்டாள் ஆன்டி .என்று பல்லைக் கடித்தபடி கூறியவன் இல்லை அடி எதுவும் படவில்லை என்று லேசாகப் புன்னகைத்தான்.
 

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,393
433
113
Tirupur
நல்லவேளைப்பா என்று தானும் புன்னகைத்தவர் ஆமாம் எங்கு வைத்து அந்தப் பெண் சைக்கிளால் மோதினாள் என்று ஓர் கூர் பார்வையுடன் விசாரித்தார் சேரனின் அன்னை.
காரணம் புரியாமல் உங்கள் வீடுள்ள இந்த வீதியில் வைத்து தான் ஆன்டி ஏன் கேட்கிறீர்கள் என்று அவன் புரியாமல் கேட்கவும் எதுவும் சொல்லாமல் புன்னகைத்தவர் நீ உள்ளே வந்து உட்காருப்பா என்று அவனை உள்ளே அழைத்துச் சென்று வரவேற்பறையில் அமர வைத்தவர் சென்று சேரனை அழைத்து வந்தார்.

சேரனின் அம்மாவான சகுந்தலா கல்லூரிப் பேராசிரியை ஆதலால் சேரனின் நண்பர்களுடனும் கூட இயல்பாக பழகுவார்.சமகால இளைஞர்களின் மனநிலையை நன்கு உணர்ந்தவர்.தன் பிள்ளைகளுக்கும் கூட போதிய சுதந்திரம் கொடுப்பவர். ஆனால் சில விடயங்களில் மிகுந்த கண்டிப்புடன் இருப்பார்.

என்ன தான் சேரனின் நண்பர்களை வீடு வரை அனுமதித்தாலும் அந்த அனுமதி வரவேற்பறை வரைக்கும் தான். அத்தோடு என்னதான் ஆண் பெண் நட்பை இயல்பாக ஏற்றுக்கொண்டாலும் அவர்கள் ஒருவருக்கொருவர் தொட்டுப் பேசிப்பழகுவதை ஒருபோதும் அனுமதிக்காதவர்.

அவரின் அந்த இயல்புகள் இனியனை மிகவும் கவர்ந்தவை.அவனையே வரவேற்பறையிலேயே அவர் நிறுத்திக்கொண்டாலும் கூட அவன் அவரின் அந்த இயல்பை ரசித்தான். அவர் அவன் கண்ணுக்கு சிறந்த ஒரு அன்னையாக தெரிந்தார்.

சேரன் வந்து அமரவும் அவனிடம் உடல் நலம் குறித்து நலம் விசாரித்தவன் சற்று நேரம் பொதுவாக அவன் குடும்பம் பெற்றோர் என்று சேரனிடமும் அவன் அன்னையிடமும் பேசிவிட்டு வேண்டிய புத்தகத்தையும் பெற்றுக்கொண்டு கிளம்ப எத்தனித்த நேரம் வாசலில் கடார் முடார் என்று ஏதோ சத்தம் கேட்டது. அதை தொடர்ந்து அண்ணா என்றபடி உள்ளே நுழைந்த அந்தப் பெண்ணின் விழிகள் அங்கிருந்தவனைக் கண்டு வியப்பிலும் சிறு பயத்திலும் விரிய இனியனின் விழிகளோ சிறு திகைப்பும் கோபமுமாக இடுங்கின.

அவன் ஏதோ சொல்ல முயலும் போதே சகுந்தலா ஏய் நிலா எங்கேடி போய்விட்டு வருகிறாய்?? உன் சைக்கிளுக்கு பிரேக் போட்டு தரும் வரை அதை தொடக் கூடாது என்று சொன்னேனில்லையா??? என்று அவளை அதட்டினார்.

ம்மா… நான் ரொம்ப தூரம் எல்லாம் போகவே இல்லம்மா.அதோட வேகமாவும் ஒட்டல பக்கத்து சந்துல உள்ள பிரியா வீட்டுக்கு தான் மா நோட்டு வாங்க போயிருந்தேன். என்றாள் இந்த பூனையும் ஐஸ்கிரீம் சாப்பிடுமா என்பது போன்ற ஒரு முக பாவனையுடன்.

அடிப்பாவி வேகமாவே ஓட்டலையா??? உன் சைக்கிள் மோதி விழுந்த எனக்குத் தானே தெரியும் நீ சைக்கிள் ஒட்டிய வேகம் என்று அவன் மனசுக்குள் கடுகடுக்கும் போதே

ஏய் பொய் சொல்லாதே என்று மகளை அதட்டிய சகுந்தலா. நீ சொல்லுப்பா இவ தானே பிரேக் பிடிக்காத சைக்கிளை கொண்டுவந்து உன் மேலே மோதினது என்று நேரடியாக இனியனை கேட்கவும் அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. தன் பெண்ணைப் பற்றி எவ்வளவு சரியாக புரிந்து வைத்திருக்கிறார் என்று.இது தான் சாக்கு என்று அந்த வானரத்தை போட்டு கொடுத்துவிடலாம் என்று கோபத்துடன் எண்ணியபடியே அவளைப் பார்த்தால் அவளோ தன் அண்ணனின் முதுகுக்கு பின்னால் மறைந்த படி அவனைப் பார்த்து

கையினை செல்லமாய் குவித்து தலையை சரித்து கண்ணை சுருக்கி முகத்தில் சிறு கெஞ்சலுடன் மாட்டி விடாதே ப்ளீஸ் என்பதைப் போல் அவனைப் பார்த்தாள். அவளின் அந்த பாவனையைப் பார்த்ததும் அதுவரை இருந்த கோபம் மறைந்து போய்விட அவன் இதழ்களில் சட்டென ஒரு இளநகை உதித்தது.

அந்த புன்னகையோடு சகுந்தலாவை ஏறிட்டவன் இல்லை ஆன்டி என்று கூறி அவளை தாயின் திட்டில் இருந்து காப்பாற்றிய மறுநொடி அது வேறு ஒரு வானரம். என்று யாரும் அறியாமலேயே அவளுக்கு ஒரு குட்டும் வைத்தான்.

அதைக் கேட்டு அவள் முறைக்கவும் உதட்டுக்குள் புதைந்த ஒரு நமட்டு சிரிப்புடன் எழுந்தவன் வரேண்டா மச்சான் உடம்ப பார்த்துக்கோ என்று சேரனிடம் கூறியவன் வரேன் ஆன்டி என்று சகுந்தலாவிடமும் விடைபெற்று கிளம்பினான்.

கிளம்பி செல்லும் போது அவனுக்கு ஒன்று தோன்றியது.அவளுக்கு பாவம் பார்த்து அவளை மாட்டி விடாமல் இருந்தாலும் அவள் செய்த காரியம் எவ்வளவு தவறு??? இன்று பிரேக் பிடிக்காமல் அவன் மேல் மோதியதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.இதுவே ஒரு வாகனத்தோடு மோதியிருந்தால் அவள் கதி?? அந்த சிறு பெண்ணின் உயிருக்கே அல்லவா ஆபத்து!! சேரனிடம் இதைப் பற்றி கூறி எச்சரிக்க வேண்டும் என அவன் எண்ணிக்கொண்டிருக்கும் போது மறுமுறை அவனைக் கல்லூரியில் சந்தித்த சேரனோ “சாரிடா” என்றான் சம்பந்தமே அற்று.

இவன் புரியாமல் பார்க்கவும் அன்று நிலா சைக்கிளால் உன்னை இடித்து சாக்கடையில் தள்ளிவிட்டாளாமே.ஒரு சாரி கூட கேட்கவில்லை என்று சொன்னாள். அது தான் சாரி டா.என்றான்.

ஹே அதைவிடு.முதலில் உன் தங்கையின் சைக்கிளுக்கு பிரேக்கை பூட்டிக்கொடு டா. வேறு எங்காவது போய் மோதி பெரிய விபத்தாகிவிடப் போகிறது.என இவன் அக்கறையுடன் கூறும் போதே

ம்ம் அதெல்லாம் அடுத்தநாளே பூட்டிக் கொடுத்துவிட்டேன். பிரேக் பூட்டும் வரை அந்த ஒரு நாள் பொறுக்க கூட அவளால் முடியாது. அதற்கிடையில் பக்கத்து வீட்டு குட்டீஸ் கூட சைக்கிள் பந்தயம் வைக்க வேண்டும்.சரியான வால் என்று கூறி சிரித்தான் சேரன்.

தங்கையைப் பற்றி பேசும் போது நெகிழ்ந்த அவனின் குரலும் கனிந்த முகமும் தங்கை மீதான அவனின் பாசத்தைப் பறை சாற்றியது.

அவனின் முகத்தை வியப்புடன் நோக்கிய இனியன் தங்கை என்றால் ரொம்ப பிரியம் போல என்றான் சிறு சிரிப்புடன்.

ம்ம்..ரொம்பபப .........அவள் எங்கள் வீட்டின் குட்டி தேவதை டா. எங்கள் அப்பா இறக்கும் போது அவளுக்கு வயது ஐந்து. எனக்கு பத்து. அப்பா இறந்தது கூட தெரியாமல் சிரித்து விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது மனதில் எண்ணிக் கொண்டேன் அவளின் இந்த சிரிப்பு வாடாமல் எப்போதும் அவளை வாழ வைக்க வேண்டுமென்று.

இதுவரை அப்படித் தான் அவள் இருக்கிறாள்.அவளுக்கு துன்பம் கவலை கஷ்டம் இதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்று கூட தெரியாதுடா.அவள் அறிந்தது எல்லாம் சிரிப்பு குறும்பு மகிழ்ச்சி தான்.இனியும் அவள் அப்படித் தான் இருக்க வேண்டும்.நான் சீக்கிரமே படித்து முடித்தவுடன் ஒரு வேலையை தேடிக்கொள்ள வேண்டும்.அவள் தன கல்லூரிப் படிப்பை முடிக்கும் முன் அவளுக்கு வேண்டிய எல்லாம் வாங்கி சேர்க்க வேண்டும்.இப்பவே பார் டைம் வேலை பார்க்கிறேன் டா. இது அம்மாவுக்கு கூட தெரியாது.தெரிந்தால் படிக்கும் வயதில் எதுக்கு இந்த கஷ்டம் என்று அனுமதிக்க மாட்டார்கள். எல்லாம் நிலாக்காக தான்.அவளை மகாராணி போல வாழ வைக்க வேண்டும் டா. என்று கண்களில் கனவுடன் பேசினான்.

அவன் பேச்சை புன்னகையுடன் ரசித்த இனியன் வேண்டுமென்றே பெரிய பாசமலர் தான் போ என்று கேலி செய்தான்.

நீ சொன்னாலும் சொல்லாவிடிலும் நாங்கள் பாசமலர் தான் டா. என்று அவன் தோளில் அடித்தவன்
பெண்பிள்ளை இப்படி பொறுப்பில்லாமல் வளரக்கூடாது என்று அம்மா அவளை சற்று அதட்டுவார்கள். அதனால் மேடம் அம்மாவுடன் அதிகம் ஒட்ட மாட்டார்கள். அவளுக்கு எல்லாமே நான் தான். என்னவென்றாலும் பகிர்ந்துகொள்வது என்னிடம் தான்.என்று கூறி சிரித்தவன் நேற்று நீ கிளம்பியதுமே என்னிடம் வந்து அனைத்தையும் சொல்லிவிட்டாள். அது தான் அவள் சார்பாக உன்னிடம் மன்னிப்பு கேட்டேன் டா.என்று முடித்தான்.

அவன் பேச்சைக் கேட்டு சிரித்தவன் இதுக்கு எதுக்குடா மன்னிப்பெல்லாம். என்று கூறி அந்தப் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தான்.

அதன் பின் அவர்கள் கல்லூரி வாழ்க்கை அமைதியாக ஆற்று நீரோட்டம் போல சென்றது. சேரன் இனியனின் நட்பும் இறுகியது. குரூப் ஸ்டடி செய்ய இனியன் சேரன் வீட்டுக்கு செல்வதும் விடுதியில் தங்கியிருக்கும் அவன் வீட்டு சாப்பாட்டுக்கு ஏங்க கூடாதென்று சகுந்தலா இனியனுக்கும் சேர்த்து உணவு செய்து கொடுப்பதும் என்று அவர்களுக்கிடையில் ஓர் பாசப்பிணைப்பு உருவானது.

நிலாவின் குறும்பும் வளர்ந்து கொண்டே சென்றது. சேரன் வீட்டில் இருவரும் மொட்டை மாடியில் உக்கார்ந்து சேர்ந்து படிக்கும் போது அவ்வப்போது மேலே வருபவள் டேய் நிஜமாவே ரெண்டு பேரும் படிக்கிறீங்களா இல்லை இந்த சினிமாவில் வருவது போல திருட்டு தம் தண்ணி என்று போடுகிறீர்களா?? ஹா?? என்று இடுப்பில் கை வைத்து கண்ணை சுருக்கி மிரட்டுவாள்.

அவள் பாவனையைப் பார்த்து வரும் சிரிப்பை அடக்கியபடி மட்டமான ஆட்களோட மூளையும் இப்படி மட்டமாய்த் தான் சிந்திக்கும் போல டா.என்று சேரனுடன் சேர்ந்து அவளைக் கலாய்ப்பான் இனியன்.

அவளோ அதற்கு அய் ...அய்....இப்படி கேலி பண்ணினா நான் ரோசப்பட்டு உங்க பக்கமே வராம போய்டுவேன்னு மட்டும் நினைக்காதீங்க இனியணன்ணா நான் அப்பப்போ வந்து செக் பண்ணிட்டு தான் இருப்பேன். சோ சும்மா அந்த பிகர் இந்த பிகர்ன்னு அரட்டை அடிக்காம ஒழுங்கா படிக்கிற வேலையைப் பாருங்க சரியா என்று மிரட்டி விட்டு போவாள்.

அவள் அப்படித் தான் ஒரு நேரத்தில் “டா” போட்டும் பேசுவாள் மறுநொடியே அண்ணா என்பாள்.அவளின் ” டா “ வை கவனத்தில் எடுக்காதது போலவே அவளின் அண்ணா என்ற அழைப்பையும் இனியன் கருத்தில் எடுப்பதில்லை.

சில சமயங்களில் இனியணன்ணா என்று “ண” கரத்தை போட்டு அவள் இழுத்து சிரமப்பட்டு அழைக்கையில் ஹே எதுக்கு இவ்ளோ சிரமப்படுகிறாய் சும்மா இனியன் என்றே அழைப்பது தானே என்று அவன் கூறியிருக்கிறான்.

அதற்கு அச்சோ பெரியவங்களை பெயர் சொல்லி அழைப்பது தப்புப்பா.நான் ரொம்ப மரியாதை தெரிஞ்ச பொண்ணு. என்று விழிவிரித்து அப்பாவியாய் கூறிவிட்டு கண் சிமிட்டி கலீரென்று சிரிப்பாள்.

அவளின் பேச்சிலும் பாவனையிலும் அவனுக்கும் சிரிப்பு வர ஆமா ஆமா அப்படித் தான் ஊருக்குள்ள பேசிக்கிறாங்களாம்.என்று அவளை கேலி செய்து கூடச் சேர்ந்து சிரிப்பான்.

சேரன் அவளுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு செல்லம் கொடுக்கிறானோ அதே அளவு கண்டிப்பையும் காட்டுவான்.அதை பலமுறை இனியன் அவதானித்ததுண்டு.சேரனை சிறந்த ஒரு அண்ணன் என்று மனதினுள் மெச்சியதும் உண்டு.

பழைய நினைவுகளில் மூழ்கியிருந்த இனியனிடம் இருந்து ஒரு பெருமூச்சு கிளம்பியது. ஹ்ம்ம் அது ஒரு காலம். காலத்தின் ஓட்டத்தில் அவரவர் அவரவர் பாதையில் பயணித்ததில் அவர்களுக்கிடையிலான நெருக்கமும் தொடர்பாடலும் மெல்ல மெல்ல குறைந்து நின்றே போயிற்று.இனியன் கல்லூரி படிப்பை முடித்தபின் M.B. A முடித்தான்.அதன் பிறகு அவனின் கனவுத் தொழிற்சாலையை நிறுவது அதை நல்ல முறையில் நிர்வகிப்பது என்று அவன் நேரம் முழுதையுமே அவன் தொழிற்சாலையே தின்றது.விளைவு அன்று குறைந்தது பத்துப் பேருக்காவது தான் சம்பளம் கொடுக்க வேண்டும் என்று அவன் கண்ட கனவு இன்று பதின்மடங்காய் நிறைவேறி இருக்கிறது.

என்னதான் சேரனுக்கும் அவனுக்கும் இடையில் காலத்தின் ஓட்டத்தில் தொடர்பு அற்றுப் போனாலும் அவன் ஒரு போதும் சேரனையோ அவன் குடும்பத்தையோ மறந்து விடவில்லை. அவனுடன் மீண்டும் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நேரில் கண்டு அளவளாவ வேண்டும் என்று எண்ணியதும் உண்டு.ஆனால் அவனின் வேலைப் பளு அதற்கு அவனை அனுமதிக்கவில்லை.

ஆனால் இன்று நிலாவைக் கண்டபின் அந்த எண்ணம் மேலும் வலுப்பெற ஏதோ முடிவெடுத்தவனாய் வந்து படுக்கையில் விழுந்து விழிமூடினான் இனியன்.