• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தாமரை - 01

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,272
497
113
Tirupur
WhatsApp Image 2024-10-12 at 10.20.53 AM.jpeg
செந்தாமரை..
என் தாமரை..!
(01)
கதிரவன் தன் கடமையை முடித்து சோர்வுடன் தன் வீடு கிளம்பும் அந்திம நேரம். அந்த பண்ணை வீட்டின் முன் ஊரே கூடியிருந்தது.

கலைந்த தலையும், கசங்கிய உடையும், அழுது ஓய்ந்த முகமுமாக தாய் மகேஸ்வரியின் தோளில் சாய்ந்து அந்தக் கூட்டத்தின் மத்தியில் நின்றிருந்தாள் செந்தாமரை.

இரண்டு கன்னத்திலும் அடி விழுந்ததற்கு அடையாளமாக கைத்தடங்கள் சிவப்பாக பதிந்திருக்க, யாரையும் நிமிர்ந்து பார்க்கும் திராணியின்றி தாயின் அனைப்பிலேயே நின்றிருந்தாள் பெண்.

அதற்கு எதிர்மாறாக தன் ஆறடி உயரத்திற்கு கொஞ்சமும் குறையாமல் அங்கு உள்ளவர்களை தீயாய் முறைத்துக் கொண்டிருந்தான் இளங்கோ.

தாயின் தோளில் சாய்ந்திருந்தவளைப் பார்க்க பார்க்க அவளைக் கொன்றுவிடும் அளவிற்கு கோபம் கொழுந்து விட்டெரிந்தது.

அவன் கையைப் பிடித்தபடி அவனுக்கு நிச்சயித்த பெண் ப்ரீத்தாவோ ‘ஏன் மாமா இப்படி பண்ணிட்டீங்க, உங்களை நான் எவ்ளோ நம்பினேன், இப்போ என்ன செய்ய போறீங்க? நீங்க இல்லைன்னா என்னால இருக்க முடியாது மாமா. நான் செத்துடுவேன் மாமா’ என கதறிக் கொண்டிருக்க,

‘எப்படியெல்லாம் வாழ நினைத்த வாழ்க்கையை, இப்படி ஒரு நாள் இரவில் ஒட்டு மொத்தமாக கெடுத்துவிட்டாளே, அய்யோ ‘மாமா மாமா’ என கதறுபவளுக்கு நான் என்ன பதில் சொல்வேன், என்னை பலவீனமாக்கி அவளின் ஆசைக்கு இணங்க வைத்துவிட்டாளே’ என தாமரையின் மேல் கடுங்கோபம் வந்தது இளங்கோவிற்கு.

“எல்லாரும் இப்படியே பார்த்துக்கிட்டு இருந்தா என்னப்பா அர்த்தம், பேச வேண்டியத பேசித்தான ஆகனும்.” என ஊர் பெருசுகளில் ஒருவர் ஆரம்பிக்க,

“அய்யா இது எங்க குடும்ப பிரச்சினை, இதை இப்படியே விட்டா நாங்களே பேசி முடிவு பண்ணிக்குவோம்..” என்றார் அதுவரை அமைதியாக இருந்த தாமரையின் தந்தை செல்வம்.

“செல்வம் நீ சொல்றது சரிதான். ஆனா அது வூட்டுக்குள்ள இருக்குற வரைக்கும் தான். வீதிக்கு வந்த பிறகு அந்த பேச்சே இருக்கக்கூடாது. இத்தனை வருஷம் ஊர் தலையாரியா இருந்துட்டு நீயே மாத்தி பேசினா எப்படிப்பா.?” என மற்றொருவர் கேட்க,

“அய்யா இதோ நிக்குதே என் பொண்ணு, அதுக்கும் என் மருமகனுக்கும் இன்னும் ஒரு வாரத்துல கல்யாணம். அது இந்த ஊருக்கே தெரியும். இப்போ நீங்க பேசுறது எல்லாம் நியாயமே இல்லைங்க… எங்க பொண்ணு வாழ்க்கையை யோசிச்சு பாருங்க..” என்றார் ப்ரீத்தாவின் தந்தை சீனிவாசன்.

“உங்க பொண்ணுக்கு இவர் இல்லன்னா இன்னொரு மாப்பிள்ளை கிடைப்பார், ஆனா தாமரைக்கு.? அந்த பொண்ணுக்கு இனி எப்படி மாப்பிள்ளை கிடைக்கும்? கல்யாணம் நடக்கும். ஒரு பொண்ணோட அப்பாவா யோசிங்க சீனி.” என்றதும்,

“இவ.. இவ கொழுப்பேறி என் மாமாக்கிட்ட போனா, நானும் என் மாமாவும் எங்க வாழ்க்கையை தொலைக்கனுமா.? அது முடியாது. என்னால என் மாமா இல்லாம வாழ முடியாது. அவ அவங்கப்பா பேச்சைக் கேட்டு எங்க மாமாவை பழிவாங்கத்தான் இப்படி செஞ்சிருக்கா.?” என ப்ரீத்தா ஆங்காரமாக கூட்டத்தின் நடுவே வந்து கத்த, அதில் இளங்கோவின் உடல் மேலும் இறுகிப் போனது.

“போதும் நிறுத்துமா? பெரியவங்க பேசிட்டு இருக்கும் போது நீ எதுக்கு பேசுற. எங்களுக்கு தாமரையைத் தெரியும்.” என்று முடிக்கும் முன்னே,

“அப்போ என்னைச் சந்தேகப்படுறீங்களா?” என்று ஆத்திரமாக கேட்டபடி முன்னே வந்தான் இளங்கோ.

“அப்படியெல்லாம் இல்ல தம்பி. ஏதோ சின்னஞ்சிறுசுக, வயசுக்கோளாறு. அதையே பேச வேண்டாமே..” என வேறு ஒருவர் பேச, எங்கு ஆரம்பித்தாலும் அளுடன் திருமணத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதுபோல் அனைவரும் பேசுவது இளங்கோவிற்கு மேலும் மேலும் கோபத்தையும், ஆத்திரத்தையும் கொடுத்தது.

ஆத்திரம் அவன் கண்ணை மறைக்க, வேகமாக தாமரையின் முன்னால் வந்தவன், தாயின் மேல் சாய்ந்திருந்தவளின் தலைமுடியைப் பிடித்து, “உன் அப்பனை மாதிரி இல்ல, நீ ரொம்ப நல்லவன்னு நம்பினேன்டி, அந்த நம்பிக்கையில மட்டும் தான் நேத்து உன்னை உள்ள விட்டேன், ஆனா நீ..?” என்றவன், அவள் முகத்தை அருவருப்பாக பார்த்து “வேசி கூட பணத்துக்காகத்தான் இன்னொரு ஆம்பிளைக்கிட்ட போவா, ஆனா நீ.?” என்று முடிக்கும் முன்னே இளங்கோவின் கையைத் தட்டிவிட்ட மகேஸ்வரி, தன் மகளை கன்னம் கன்னமாக அறைந்துவிட்டார்.

இந்த வார்த்தையை அவரால் தாங்கவே முடியவில்லை. ஒரு தாய் தந்தை முன்னால் ஒரு மகள் கேட்கக்கூடாத பேச்சல்லவா இது.

ஏற்கனவே அறைந்து கன்னம் கன்றி சிவந்திருக்க, இப்போது அடித்தது வேறு கன்னம் இரண்டும் தீயாய் எரிந்தது.

ஆனால் அதெல்லாம் அவளுக்கு உரைக்கவில்லை. மனதளவில் அவள் இறந்து பல மணி நேரங்கள் ஆகிவிட்டதே.

மகேஸ்வரி அவளை அடிக்க ஆரம்பித்ததும் வேகமாக வந்து மகளை தனக்கு பின்னே தள்ளிய செல்வம், “அய்யா எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க. என் பொண்ணுதான் தப்பு. அவ செஞ்சதுதான் தப்பு. ஏதோ புத்திக்கெட்டு செஞ்சிட்டா, அவளால யார் வாழ்க்கையும் கெட வேண்டாம். என் பொண்ணு வாழ்க்கையை இனி நாங்க பார்த்துக்கிடுறோம். யாரும் என் பொண்ணுக்காக அவங்க வாழ்க்கையை தொலைக்க வேண்டாம். அவங்களை போக சொல்லுங்க.” என்றவர்,

யாரும் என்ன என உணரும் முன்னே, அந்த கூட்டத்தின் நடுவே தரையில் விழுந்து “என் பொண்ணு செஞ்ச தப்புக்காக, அவங்ககிட்ட நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்..” எனவும்,

“அய்யோ என்னங்க இப்படி பண்ணிட்டீங்க..” என மகேஸ்வரி கதற,

“அப்பா.. அப்பா..” என தாமரை ஒரு பக்கம் அவர் காலடியில் விழுந்து கதற, ஊர் பெரியவர்களோ “என்னய்யா செல்வம் இப்படி பண்ணிட்ட, நம்ம பொண்ணுய்யா தாமரை. அது தப்பு செஞ்சிருக்காதுன்னு எல்லாருக்கும் தெரியும். நீ ஏன்யா மன்னிப்பெல்லாம் கேட்டுட்டு இருக்க..” என அவரைத் தூக்கிவிட,

இத்தனை களேபரத்திலும் ப்ரீத்தாவின் கையை விடாமல் பிடித்தபடி இறுகிய முகத்துடன் அவர்களையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தான் இளங்கோ.

“தாமரை.. தாமரை அப்பா மேல உனக்கு நம்பிக்கை இருக்குல்ல. அப்பா உன்னை பார்த்துக்குவேன். இவங்க வேண்டாம் சாமி. வேண்டாம்னு சொல்லிட்டு வா ராசாத்தி. நாம போகலாம்..” என செல்வம் மகளின் கையைப் பிடித்தபடி கெஞ்ச

“இவ இப்படி கெட்டுத்தான் அந்த வீட்டுக்கு வருவான்னா நான் அந்த வீட்டுல இருக்கமாட்டேன். என் பொணம்தான் அங்க இருக்கும் இது உங்களுக்கு சரின்னு சொன்னா உங்க பொண்ணை நீங்க கூப்பிட்டு வாங்க…” என அந்த கூட்டத்தில் உள்ள அனைவருக்கும் கேட்கும் படி மகேஸ்வரி சத்தமாக சொல்ல,

“என்ன என்ன சொல்றீங்க? உங்க பொண்ணை என் மருமகனுக்கு கல்யாணம் செஞ்சி வைக்க பார்க்குறீங்களா? அது எப்பவும் நடக்காது. அப்படி ஒன்னு நடந்தா என் நாத்தனாரோட ஆத்மா கூட இளாவை மன்னிக்காது.” என அதுவரை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ப்ரீத்தாவின் அம்மா நாயகி பேச,

எதை எப்போது பேசினால், இளங்கோவின் கோபம் முரட்டுத்தனமாக மாறும் என்று நாயகிக்கு தெரிந்திருந்தது. அதனால் சமயம் பார்த்து அதையே பேச, அவர் நினைத்தது போலவே இளங்கோவின் கோபம் எல்லைக் கடந்திருந்தது. அது மகேஸ்வரிக்கும் புரிந்தது.

வேகமாக எழுந்து தன் கூந்தலை அள்ளி முடிந்தவர், நேராக வந்து இளங்கோவின் முன் நின்றார். அவன் கண்களை கூர்மையாக பார்த்து “இதே தப்பைத்தான் உன் அப்பனும் செஞ்சிட்டு போனான். அதனால தான் எங்க வீட்டுல ஒரு பொண்ணு உயிரோட கொழுத்திட்டு செத்தா? அதையெல்லாம் மறந்து என்னை விரும்பின ஒரே காரணத்துக்காக உன் வீட்டு பொண்ணான என்னை இன்னும் அந்த வீட்டுல வச்சிருக்கார். அதே தப்பைத்தான் நீயும் செஞ்சிருக்க. உன் அப்பன் புத்தி உனக்கும் இருக்குமில்ல. என் பொண்ணை நான் சரின்னு சொல்லல, ஆனா நீயும் சரியில்ல.” என முடிக்கும் முன்னே,

“ம்மா நான்.. நான்தான் தப்பு பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிடுமா. அத்தானை ஒன்னும் சொல்லாத. நான்தான்மா..” என்றவள் மகேஸ்வரியும், செல்வமும் பார்த்த பார்வையில் கூனிக்குறுகி “ஸாரிம்மா, ஸாரிப்பா” என்று இருவரிடம் கூறிவிட்டு தள்ளாடியபடி இளங்கோவிடம் வந்தாள்.

அவனின் அசிங்கமான பார்வையில் உடலெல்லாம் கூசிப்போனது. அதோடு அவன் கூறிய வேசி என்ற வார்த்தையும் ஏற்கனவே இதயத்தை துண்டு துண்டாக்கியிருக்க “ஸாரித்தான். உங்க வாழ்க்கையை இப்போ மட்டுமில்ல, எப்பவும் நான் கெடுக்கமாட்டேன். நேத்தும் கூட” என்றவள் அடுத்து வந்த வார்த்தையை விழுங்கி “என்னை மன்னிச்சிடுங்க அத்தான்.” என்றவள் யாரும் என்ன என யோசிக்கும் முன்னே பக்கத்திலிருந்த கிணற்றில் ஓடிப்போய் விழுந்திருந்தாள்.

தாமரை இப்படி செய்வாள் என்று அங்கு யாருமே, ஏன் இளங்கோ கூட யோசிக்கவில்லை.

“அய்யோ என் பொண்ணு, யாராவது வாங்களேன், அவளைக் காப்பாத்துங்க.. அய்யோ தாமரை..” என மகேஸ்வரியின் கதறலில் அங்கிருந்த ஆண்கள் வேட்டியை மடித்துக் கட்டி கிணற்றில் குதித்துவிட்டனர்.

இந்த அதிர்வில் இருந்து மீள முடியாத இளங்கோவோ தலையில் கைவைத்தபடி அப்படியே அமர்ந்துவிட்டான்.

அவனின் அத்தை மகேஸ்வரி பேசியதில் இருந்தே அவன் இன்னும் வெளி வராமலிருக்க, அதற்குள் தாமரை ஏதேதோ பேசி கிணற்றில் குதித்திருந்தாள்.

இளங்கோவின் இந்த தோற்றம் சீனிக்கும் அவர் மனைவி நாயகிக்கும் சரியாக படவில்லை.

இளங்கோவின் அருகில் வந்து “இளா.. இளா..” என அவனை உழுக்க, சட்டென்று நினைவுக்கு வந்தவன், சுற்றிலும் பார்வையை ஓட்ட, இன்னுமே தாமரையை கிணற்றிலிருந்து மேலே கொண்டுவரவில்லை என்று தெரிந்தது.

மகேஸ்வரியின் கதறல் வேறு அவனை அடியோடு சாய்க்க, வேகமாக எழுந்தவனின் கையை விடாமல் பிடித்திருந்தாள் ப்ரீத்தா.

“கையை விடு ரீத்து.” என அவன் பல்லைக் கடிக்க,

“மாட்டேன்.. விடமாட்டேன். இப்போ விட்டுட்டா இனி எப்பவும் இந்த கை எனக்கு சொந்தமில்லாம போகும்னு என் மனசுக்கு படுது மாமா. அதனால நான் விடமாட்டேன்.” என ப்ரீத்தாவும் அழ, இருதலைகொள்ளி எறும்பாக அவன் தடுமாறிய நேரம் ஒருவழியாக தாமரையை மேலேக் கொண்டு வந்திருந்தார்கள்.

அதற்குள் ஆம்புலன்சுக்கும் சொல்லியிருக்க, மகளை மடியில் போட்டு கதறிய மகேஸ்வரியின் அழுகைக்கு அந்த ஊரே ஒரு நொடி உறைந்துதான் போயிருந்தது.

“இதுக்கா இதுக்கா என் பொண்ணை நான் பத்து மாசம் சுமந்து பெத்தேன். கடவுளே என் பொண்ணை இந்த நிலமையில என்ன பார்க்க வச்சுட்டியே. நீ கடவுளே இல்ல. கல்லுதான். வெறும் கல்லுதான்.” என அவளைக் கட்டிக்கொண்டு அழ, இறுக்கமாக பிடித்திருந்த ப்ரீத்தாவின் கையை வலுக்கட்டாயமாக பிரித்து எடுத்தவனின் கால்கள் தன்னால் தன் அத்தையிடம் சென்றது.

அவருக்கு அருகில் மண்டியிட்டு அமர்ந்தவன் “அத்தம்மா” என்றதும், திடுக்கிட்டு திரும்பியவர் ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்திருந்தார்.

“அதுதான் ஊரே சிரிக்கிற மாதிரி என் பொண்ணை உயிரோட கொன்னுட்டியே பாவி. இன்னும் என்ன இருக்கு அவளை கொல்றதுக்கு. முழுசா, உன்னை முழுசா நம்பினேனே.. யார் என்ன சொல்லியும் நான் கேட்கல. என் அண்ணன் மாதிரி அவன் இருக்கமாட்டான்னு நம்பினேன். ஆனா அப்பனுக்கு தப்பாம பிறந்துட்டேன்னு நிரூபிச்சிட்ட. நான் சாகுறதுக்குள்ள ஒரு நாளாச்சும் உன்னை பார்த்துடனும்னு நான் வணங்காத கடவுள் இல்லை. ஆனா இன்னைக்கு ஏன் உன்னை பார்த்தேன்னு இருக்கு..” என்ற நேரம், சரியாக ஆம்புலன்ஸ் வந்து நின்றது.

“தாமரை.. ராசாத்தி இங்க பாரு கண்ணு.. அம்மாவை பாரு..” என கன்னத்தை தட்டிய மகேஸ்வரியின் கையை எடுத்து விட்டவன், தாமரையை அள்ளியெடுத்து ஸ்ட்ரெச்சரில் கிடத்த, அவர்களும் உடனே முதலுதவி செய்து, அவளை மருத்துவமனைக்கு எடுத்து செல்ல ஆயத்தமாக, அதுவரை நெஞ்சை நிமிர்த்தி நின்றவன் தலை தானாக குனிந்தது.

செல்வமும் மகேஸும் தாமரையோடு ஆம்புலன்சில் ஏற, ஊர் மக்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பேசியபடி கலைந்து செல்ல, அவனுக்கு அருகே வந்த ஒரு பெரியவர் “உன்மேல கோடி நம்பிக்கை வச்சிருந்துச்சு மகேசு. அதை உன்னோட ஒத்த வார்த்தையில் சுக்குநூறா நொறுக்கிப்போட்ட, பெத்தவங்க முன்னாடியே வேசின்னு சொல்ற, அந்த வார்த்தையைக் கேட்டு அவங்க எவ்வளவு துடிச்சிருப்பாங்க. மகேஸு சொன்னதுதான் நானும் சொல்றேன். நீ உன் அப்பனுக்கு தப்பாம, அவன் குணத்தோடத்தான் பிறந்திருக்க..” என்றவர் நகர்ந்துவிட, அப்போதுதான் அவன் பிரயோகித்த வார்த்தையின் வீரியமே அவனுக்கு புரிந்தது.

‘கடவுளே என்ன வார்த்தை சொல்லிட்டேன், நான் விரட்டினாலும், மிரட்டினாலும் அத்தான் அத்தான்னு என் பின்னாடியே நாய்க்குட்டி மாதிரி சுத்தின பொண்ணை என்ன வார்த்தை சொல்லிட்டேன்’ என மனதுக்குள் அவன் மறுகிக் கொண்டிருந்த நேரம்,

“மாமா இனி நாம இங்க இருக்க வேண்டாம். இந்த ஊரே வேண்டாம் மாமா. இங்க இருந்தா நம்மளை பிரிச்சிடுவாங்க மாமா. நாம சென்னைக்கே போய்டலாம் மாமா.. ப்ளீஸ் மாமா” என ப்ரீத்தா கெஞ்ச,

அவளின் பெற்றோருமே “இளா ப்ரீக்குட்டி சொல்றதுதான் சரி. நாம இங்க இருந்தா என்ன வேனும்னாலும் நடக்கும். அதனால நாம இங்க இருந்து போய்டலாம். அந்தாளுதான் உன் அம்மாவையும் அப்பாவையும் இந்த ஊர்ல வாழவிடாம துரத்தினது, அதை மறந்திடாத..” என நேரம் பார்த்து ஈட்டியை சொருக, அது சரியாக இளங்கோவிடம் வேலை செய்தது.

“ம்ம் சரி போகலாம். இப்போ நீங்க வீட்டுக்கு போய் கிளம்புங்க. நான் இங்க இருக்குற வேலையெல்லாம் பிரிச்சு கொடுத்துட்டு வந்துடுறேன். ஆரம்பிச்ச வேலையை அப்படியே விட்டுட்டு வர முடியாது. அப்போ இத்தனை நாள் பட்ட கஷ்டமெல்லாம் வீணா போய்டும்..” என்றதும், முதலில் அதிர்ந்தாலும், இதற்கு மேல் இளங்கோவை கட்டாயப்படுத்த முடியாது என்று தெரிந்தவர்கள் மகளை அழைத்துக்கொண்டு முன்னே செல்ல, இளங்கோவின் மனம் தாமரைக்கு என்ன ஆனதோ என அவளுக்கு பின்னே சென்றது.
 

CRVS2797

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 11, 2023
117
8
18
Ullagaram
தாமரையே, என் செந்தாமரையே !
எழுத்தாளர்: வதனி .S
(அத்தியாயம் - 1)


அட.. இதென்ன இதுலயும் இளங்கோவா...? இளங்கோ என்கிற பேருக்கும் உங்களுக்கும் ஏதாவது நெருங்கிய தொடர்பு இருக்குதோ...?


அது சரி, இளங்கோவுக்கே தெரியாம அப்படி என்ன தாமரை பண்ணிட்டா..? வேசி என்கிற வார்த்தையை யூஸ் பண்ணியிருக்கான்னா, அவனுக்கே தெரியாம தாமரை சூறையாடிட்டாளோ...? அதெப்படி முடியும்....? புரியலையே...? ஆனா, எல்லாருமே ஒண்ணக்குள்ள ஒண்ணு உறவுங்கிறது மட்டும் நல்லாவே தெரியுது. அதோட இந்த இளங்கோ ப்ரீத்தாவுக்கு கிடையாது, கன்ஃபார்ம்டா தாமரைக்குத்தான் என்கிறதும் நல்லாவே தெரியுது.... அப்படித்தானே..???


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
  • Like
Reactions: Vathani

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,272
497
113
Tirupur
தாமரையே, என் செந்தாமரையே !
எழுத்தாளர்: வதனி .S
(அத்தியாயம் - 1)


அட.. இதென்ன இதுலயும் இளங்கோவா...? இளங்கோ என்கிற பேருக்கும் உங்களுக்கும் ஏதாவது நெருங்கிய தொடர்பு இருக்குதோ...?


அது சரி, இளங்கோவுக்கே தெரியாம அப்படி என்ன தாமரை பண்ணிட்டா..? வேசி என்கிற வார்த்தையை யூஸ் பண்ணியிருக்கான்னா, அவனுக்கே தெரியாம தாமரை சூறையாடிட்டாளோ...? அதெப்படி முடியும்....? புரியலையே...? ஆனா, எல்லாருமே ஒண்ணக்குள்ள ஒண்ணு உறவுங்கிறது மட்டும் நல்லாவே தெரியுது. அதோட இந்த இளங்கோ ப்ரீத்தாவுக்கு கிடையாது, கன்ஃபார்ம்டா தாமரைக்குத்தான் என்கிறதும் நல்லாவே தெரியுது.... அப்படித்தானே..???


😀😀😀
CRVS (or) CRVS 2797
ஆமா சிஸ்.. இளங்கோ பேர்ல க்ரஷ் ஆகிட்டேன்.. மிக்க நன்றி சிஸ்