• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிரியம் 1

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
880
647
93
Chennai
அத்தியாயம் 1

வெள்ளிக் கிழமையின் அந்த அதிகாலைவேளையில் வீட்டின் வாசலில் கோலமிட்டு பூஜையறையில் விளக்கேற்றி வைத்துவிட்டு சமையலறைக்குள் நுழைந்தார் கனகவள்ளி.

கந்த சஷ்டி கவசம் ஓடிக் கொண்டிருந்தது வெளி அறையில். தினமும் காலை நேரம் இப்படி தான் ஆரம்பம் ஆகும் கனகவள்ளிக்கு.

மகனுக்கு பிடித்தது பால் பாயாசம். கணவனுக்கு அது சுத்தமாய் இறங்காது. இரு நொடிகள் கூட யோசிக்க அவகாசம் எடுக்காமல் பால் பாயாசம் செய்ய தேவையானவற்றை எடுத்து வைத்து வேலையை ஆரம்பித்தார்.

அடுத்த அரை மணி நேரத்தில் எல்லாம் தோள்களின் குறுக்காய் பையை மாட்டிக் கொண்டு படிகளில் அவன் இறங்கி வர, மகன் வரும் சத்தம் கேட்டு பாயசத்தை கைகளில் எடுத்தார்.

"ம்மா!" என்று அலைபேசியை பார்த்தபடி வந்தவன் வாசம் உணர்ந்து அன்னையைப் பார்க்க,

"பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிவா!" என்று அவன் கைகளில் இனிப்பை தர, புன்னகையுடன் வாங்கிக் கொண்டான்.

இன்று மகனின் பிறந்தநாள். வேறெந்த மாற்றமும் இருக்காது இந்த வீட்டில் அன்னை தந்த இனிப்பை தவிர.

விடிந்ததும் மகனை கவனித்து அலுவலகம் அனுப்பி வைத்து கோவிலுக்கு சென்று வருவார் கனகவள்ளி.

ஆனாலும் அன்னையுடன் அவன் வெளியில் கொண்டாடி விடுவான் இரவு. அது அவர்களுக்கான நேரமாய் அமையும்.

பிறந்த நாள் என்று மட்டும் இல்லாது தனக்கு மகிழ்ச்சியோ கவலையோ வருத்தமோ அன்று அன்னையும் மகனும் வெளியில் சென்றிடுவர்.

"தேங்க்ஸ் ம்மா!" என்று அன்னை காலில் விழுந்து எழுந்தவன்,

"டைம் ஆச்சு கிளம்பவா?" என்று கேட்க,

"சிவா!" என்று பாவமாய் அழைத்தவர் அங்கிருந்த சாப்பிடும் மேஜையைக் பார்த்தார்.

அதை இரவே பார்த்திருந்தாலும் கண்டு கொள்ளாதவனாய்,

"ஈவ்னிங் வெளில போலாம் ம்மா. அத்தைகிட்ட சொல்லணும்னா சொல்லிடுங்க" என்றான்.

"எப்ப டா வருவ? மதியமா சமைக்கவா?" இனி என்ன கேட்க அவனிடம்? தெரிந்து தானே பேச மறுக்கிறான்.

"மார்னிங் ஷிப்ட் தான் ஆனாலும் மீட்டிங் இருக்கும் மன்ந்த் எண்ட் ஆச்சே! நான் கால் பண்றேன் ம்மா!" என்றவன் சொல்லிவிட்டு செல்ல, வாசல் வரை வந்து கையசைத்துவிட்டு உள்ளே வந்தார்.

"போய்ட்டானா?" என்று அப்பொழுது தான் எழுந்து வந்தார் வாழவந்தான். கனகவள்ளியின் கணவர்.

"ஆமா!" என்றவர் காபியை கொண்டு வந்து கொடுத்துவிட்டு மீண்டும் சமையலறை சென்றார்.

"வள்ளி!" என வாழவந்தான் அழைக்க, நினைத்தது தானே என்றபடி வந்து நின்றார் கனகவள்ளி.

"கேட்டா தான் சொல்லுவியோ? என்ன சொன்னான் உன் மவன்?" என்று கேட்க,

"சொல்லிட்டேன். ஆனா அவன் எதுவும் சொல்லல"

"அப்போ என்ன செய்யணுமாம் அவனுக்கு? நினைப்பு எங்க இருக்கு?" என்று கேட்க,

"சாயந்திரமா வந்திருவான். கேட்டு சொல்றேன்" என்றார் இலகுவாய்.

"அவன் கூட சேர்ந்து வாய் மட்டும் நீளுது. ஏன் டி உன் புள்ளைக்கு கல்யாணம் பண்ண தானே கேட்குறேன். எனக்கு பண்ணவா நிக்குறேன்? கொஞ்சமும் தெரியல உனக்கு?"

"எனக்கு தெரிஞ்சு என்ன ஆவ போகுது? இப்பவும் போட்டோவை பாருன்னு தான் சொன்னேன். திரும்புவேனான்னு நிக்குறான். உங்களுக்கு கூட கல்யாணத்தை பண்ணிரலாம். அவனுக்கு பண்ணுறது தான் கஷ்டம்னு தோணுது!" என்றபடி மீண்டும் உள்ளே சென்றுவிட்டார்.

"திமிரு திமிரு. வாய் மட்டும் குடும்ப சொத்து. வேற ஒண்ணுத்துக்கும் உதவாது" இன்னும் என்னவெல்லாமோ சொல்லி அவர் திட்டிக் கொண்டிருக்க, காலை சமையலை முடித்த வள்ளி சாப்பிடும் மேஜையில் கிடந்த புகைப்படங்களை எல்லாம் வரிசையாய் அடுக்கி எடுத்து பத்திரமாய் கவரில் வைத்து மூடி ஒரு ஓரமாய் வைத்துவிட்டு, செய்து வைத்த சப்பாட்டைக் கொண்டு வந்து அங்கே வைத்தார்.

"அவனுக்கு கல்யாணம் பண்ணுத எண்ணம் இருந்தாலும் உனக்கு தான் அந்த எண்ணம் இல்லாத மாதிரி இருக்கு!" அவர் செய்வதை பார்த்தபடி நின்ற வாழவந்தான் கூற,

"நீங்க பாத்திங்களா? நானும் அவன் எப்ப தான் பொண்ணு பாருங்கன்னு சொல்லுவான்னு தான் காத்துட்டு இருக்கேன். அவன் தான் ஆறு மாசம் போகட்டும்னு சொன்னான் இல்ல? என் விருப்பம் தான்னு நீங்க உடனே குதிச்சா? ஏன் என்கிட்ட இவ்வளவு பேசுறதுக்கு அவன்கிட்ட பேசலாம்ல? உங்களுக்கும் மவன் தானே?" என்று பதிலுக்கு கூறிய மனைவியை பேச வாய் திறக்கும் நேரம்,

"இவ்வளவு உனக்கும் ஆகாது த்தா. இவ்வளவு பேச்சு வாங்கணுமா?. உன் மவன்கிட்ட பேசத்தான?" என்று எழுந்து வந்தார் ஈஸ்வரி. வாழவந்தான் அன்னை.

"நல்லா கேளும்மா!" என்று சொல்லிவிட்டு சென்ற கணவனை முறைத்தவர்,

"உங்க பேரன் தானே? கேட்கலாம்ல? நானும் நல்ல மருமகளா கொண்டு வா சாமினு காசு முடிஞ்சு வச்சு ஒரு மாசம் ஆக போகுது. என்னை என்ன த்த பண்ண சொல்லுதீங்க?" என்றார் மாமியாரிடம்.


"அததக்குன்னு ஒரு நேரம் வரணும்ல? என்னமோ போ! இந்த காலத்துல முப்பது வயசாக போற எவனும் கல்யாணம் வேண்டான்னு சொல்லி நான் கேள்விபடல!" என்று சொல்லிக் கொண்டிருக்கையில் பால் பாயசத்தைக் கொண்டு வந்து வைத்தார் வள்ளி.

"யாத்தே!" என்ற ஈஸ்வரிக்கு அப்பொழுது தான் நியாபகத்திற்கு வந்தது பேரனின் பிறந்தநாள்.

"ஏம்டி அவன் கிளம்பிட்டானா?" என்று கேட்க,

"அவன் கிளம்பின பாடு தான் உங்க பிள்ளை குதிக்கவே ஆரம்பிச்சாரு!" என்றார்.

"இருந்தா மட்டும் என்ன பண்ணிற போறீங்க?" என்று கேள்வி கேட்க,

"அதான் போய்ட்டான்ல? அந்த பாயசத்தை உள்ள கொண்டு போ! உன் புருஷனுக்கு அது ஆவாதுன்னு தெரியாதாக்கும்? பேச்சு வாங்கிட்டு இருக்காத டி!"

"இதை பார்த்த பின்னாடி தான் மவனுக்கு பிறந்தநாள்னு அப்பாவா நியாபகத்துக்கு வரும். அதையும் கெடுத்து எதுக்கு?"

"யாவம் வந்த பின்னாடி இத்தனை வயசான பொறவும் கல்யாணம் வேண்டாங்குதான்னு குதிப்பான். தேவையா உனக்கு?"

"அவன் வேண்டாம்னு எப்ப சொன்னான்? ஆறு மாசம் போகட்டும்னு தான சொல்லிருக்கான்" என்ற வள்ளிக்கு இப்பவே கண்ணை கட்டியது கணவரையும் மாமியாரையும் பேசி சமாளிப்பதற்கு.

ஆனாலும் பேசாமல் மட்டும் இருந்துவிட மாட்டார். பேசாமல் விட்டால் தலையில் ஏறி அமர்ந்து குனிய சொல்லி கொட்டுவர் என புரியாதவர் இல்லையே!.

வாழவந்தான் திருச்சியில் சிறிய அளவில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். போதிய அளவு வருமானம். கூடவே மகனும் நான்கு வருடங்களாக வேலை பார்க்கிறான் மென்பொருள் நிறுவனத்தில்.

ஈஸ்வரியின் ஒரே மகன் வாழவந்தான். கணவர் இறந்து பல வருடங்கள் கடந்துவிட்டது. கனகவள்ளி மருமகளாய் அமைதியான சுபாவம் தான். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு மட்டும்.

பேச வேண்டிய இடத்தில் பேசினால் மட்டுமே மதிப்பு என்று தெரிந்து நடந்து கொள்பவர்.

வாழவந்தான் கனகவள்ளி இவர்களின் மகன் சிவ பிரகாஷ் என்ற சிவா. ஈஸ்வரி, வாழவந்தான், கனகவள்ளி, சிவா என அளவான குடும்பம்.

சிவாவின் திருமணப் பேச்சு ஏற்கனவே ஒரு வருடத்திற்கு முன் ஆரம்பித்திருக்க, அப்பொழுது ஒரு வருடம் போகட்டும் என்றிருந்தான். இப்பொழுது ஆறு மாதம் என்கிறான். அந்த கோபத்தில் தான் வாழவந்தான் பேசியது.

இல்லையென்றாலும் மென்மையாய் எல்லாம் அவர் பேசியதில்லை. தேவைக்கு மட்டும் வார்த்தைகள் அவரிடம்.

கணவன் சாப்பிட அமருவதற்குள் பேசிவிட எண்ணி அலைபேசியை எடுத்துக் கொண்டு வீட்டின் பின்புறம் சென்றார் வள்ளி.

"மாலா! சாயந்திரமா கோவிலுக்கு வர்றியா?" எடுத்ததும் வள்ளி கேட்டவர்,

"சரி சரி! வந்துட்டு போன் பண்றேன்! அப்புறமா பேசிப்போம்!" என்று சுருக்கமாய் சொல்லி வைத்துவிட்டு உள்ளே வந்தார்.

மீண்டுமாய் பால் பாயாசத்திற்கு ஒரு பொங்கலை வைக்க ஆரம்பித்திருந்தார் வாழவந்தான்.

"வயசு போகுதுன்னு சாப்பாட்டுல மட்டும் தெரியும். ஒரு அக்கறையும் இல்ல. கேட்டா வக்கனையா பேச்சுக்கு குறை இல்ல! அதை எதுக்கு இங்க வச்சிருக்க? கொண்டு போ!" என்று மனைவியிடம் சொல்ல,

"நீங்க அதை சாப்பிடலைனா வேணும்ன்றதை சாப்பிட்டு எழுந்து போங்க. நான் சாப்பிடணும்!" என்று சொல்ல, முடிந்த மட்டும் முறைத்தார் மனைவியை.

"அவன் ஏசுதானேனு இவளும் அமைதியாகமாட்டா. அவ தான் மதிக்கலையேனு இவனும் சும்மா இருக்க மாட்டான்" என்று சும்மா இறாமல் ஈஸ்வரி பேசி மகனிடம் மாட்டிக் கொள்வது தான் வழக்கம்.

******************************************

"ஹாப்பி பர்த்டே பிரகாஷ்!" என்ற வாழ்த்துக்கள் அலுவலக கதவை திறந்ததும் பல குரல்களில் கேட்க, நன்றி கூறி புன்னகையுடன் கைகுலுக்கி தனது இடம் வந்தான் சிவ பிரகாஷ்.

"வா டா பர்த்டே பாய்! காலையிலேயே உன் பேர் தான் ஆபீஸ் ஃபுல்லா!" என்று உடன் வேலை பார்க்கும் நண்பன் கார்த்திக் கூற,

"நீ தான் சொன்னியா என்ன?" என்றான் சிவா.

"எனக்கே இங்க வந்து தான் டா தெரியும்!" என்றவன் கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தான்.

"ஹாப்பி பர்த்டே சிவா மாமா!" என்று பரிசுப் பெட்டியை நீட்டியபடி அவர்கள் முன் நின்றிருந்தாள் மகிமா.

"என்ன இது?" கைகளில் வாங்கிக் கொள்ளாமல் சிவா கேட்க,

"கிப்ட்!" என்றாள்.

"அது தெரியுது. ஆனா ஏன்?" என்றான்.

"பர்த்டேனா குடுப்பாங்க தானே?" என்று சொல்ல, எதுவும் பேசாமல் பார்த்து நின்றான் சிவா.

"கிப்ட் வர்றதுலாம் லக்கு டா. வாங்கிக்கோ!" கார்த்திக் சொல்ல,

"வாங்கிக்கோங்க மாமா!" என்றாள் மகிமா.

"அடி வாங்க போற!" என்று சுற்றிலும் பார்த்தான் சிவா.

"ஹயோடா! ரொம்பத்தான்! அப்போ நீங்க அம்மாவை தான் அடிக்கணும்!" என்றவள் அவன் கேள்வியாய் பார்க்கவும் கண் சிமிட்ட,

"ப்ச்! அத்தை குடுத்தாங்களா?" என்று கேட்டு அவள் எதிர்பார்க்காத நேரமாய் அவள் கைகளில் இருந்து உருவிக் கொண்டான்.

"கேட்டா நானே தர போறேன்!" என்றவள் அவன் பிரிக்கிறானா எனப் பார்க்க,

"நீ தான் எல்லாருக்கும் சொன்னதா?" என்றான் பரிசை கீழே வைத்து.

"நான் ஏன் சொல்ல போறேன். என் பர்த்டேக்கு சொன்னா கூட லாபம். இந்த கிப்ட்டை கொண்டுட்டு உள்ள வரும் போதே எல்லாரும் என்ன கிப்ட்? யாருக்கு கிப்ட்னு கேட்டு டார்ச்சர்!"

"ஓஹ்! அதான் தண்டோரா போட்டுட்ட?" என்றபடி அமர்ந்து கணினியை உயிர்பித்தான்.

"பர்த்டே பாய் சாக்லேட் எல்லாம் கொண்டு வர்ல?" கேட்டு அவன் கழட்டி வைத்த பேகில் இவள் கைவைக்க போக, அங்கிருந்த பெண் எடுத்து அவள் கையில் ஒரு அடி வைத்தான்.

"அவுச்!" என்று இழுத்துக் கொண்டாள்.

"போய் வேலையை பாரு!" என்றவன் தன் வேலையைப் பார்க்க தயாராக,

"புன்னகை மன்னன் தான் ஆனா ஸ்ட்ரிக்ட்டு ஸ்ரீரங்கம்!" என்று அழகு காட்டினாள்.

"சின்ன பசங்க மாதிரி பேசாம போய் வேலையை பாரு மகி. மீட்டிங் நியாபகம் இருக்குல்ல?" என்றவன் பேச்சில், இதற்கு மேல் இருந்தால் இவனே மாட்டிக் கொடுத்து விடுவான் என்று அறிந்து ஓடினாள்.

மகிமா கூறா விட்டாலுமே அன்று மாலைக்குள் அவன் பிறந்த நாள் அனைவருக்கும் தெரிய வந்திருக்கும். இது அந்த அலுவலகத்தில் அனைவருக்குமே உள்ளது தான். அனைவரின் பிறந்த நாளுக்குமே மாலை அனைவரும் ஒன்று கூடி கேக் வெட்டி பகிர்ந்து அந்த நாளை சிறப்பானதாக்குவது.

தொடரும்..

 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,761
570
113
45
Ariyalur
சூப்பர் சூப்பர் சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️எந்த அப்பா சின்ன வயசுல ஹீரோவா தெரியுறாரோ அவன் வளர்ந்த பின் வில்லன் ஆகிடுறாரு 🙄🙄🙄🙄🙄மாற்ற முடியாத விஷயம்
 
  • Love
Reactions: Rithi

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
880
647
93
Chennai
உண்மை
சூப்பர் சூப்பர் சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️எந்த அப்பா சின்ன வயசுல ஹீரோவா தெரியுறாரோ அவன் வளர்ந்த பின் வில்லன் ஆகிடுறாரு 🙄🙄🙄🙄🙄மாற்ற முடியாத விஷயம்
sis