• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தாமரை - 23

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,272
497
113
Tirupur
தாமரை-23

தன் சிறுவயதிலிருந்தே ஏங்கிக் கொண்டிருந்த ஒரு வாழ்க்கை, அது கையில் கிடைத்த போதும் கூட, அதை சந்தோஷமாக அனுபவிக்க முடியவில்லை என கதிரவன் வருந்தாத நாளே இல்லை.

ஒரு காலத்தில் அவரது லட்சியமே நகர வாழ்க்கையும் வெளிநாட்டு வாழ்க்கையும் தான்.

ஜெயந்தியோடு திருமணமான போது வெளிநாட்டு வாழ்க்கையை மறந்து, கிடைத்த நகர வாழ்க்கையில் நிம்மதி பட்டுக்கொண்டார்.

ஆனாலும் இப்போது தானாக கிடைத்த வெளிநாட்டு வாய்ப்பை, தன் வாயாலயே வேண்டாம் என்று சொல்வோம் என அவர் நினைத்திருக்க கூட மாட்டார்.

நல்லவேளையாக சீனி உறுதியாக நின்று தன் முடிவை மாத்தி அனுப்பி வைத்தார். இல்லையென்றால் தன் கனவு வாழ்க்கையை நினைத்து நினைத்தே உரு குழைந்து போயிருப்பார்.

இப்போது அவரது எண்ணத்தில் எங்கேயுமே லட்சுமி இல்லை. மகேஸ்வரி இல்லை. ஏன் அவரின் பெற்றோர் கூட இல்லை. அவரது எண்ணம், சொல், செயல் அனைத்திலும் ஜெயந்தியும் இளங்கோவும் மட்டுமே நிறைந்திருந்தனர்.

தொலை தூரம் வந்ததாலோ என்னமோ? அவருக்கு பிரச்சினையின் வீரியம் புரியாமல் போனது. புரிந்தும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையோ?

வீட்டினராக திருமணத்தைப் பற்றி பேசும் வரை, தானாக வாய் திறக்கக்கூடாது என்று முடிவெடுத்துக்கொண்டார் கதிரவன். அப்படியே கேட்டாலும் என்ன பதில் சொல்ல வேண்டும் என்றும் யோசித்து வைத்துக் கொண்டார்.

இப்போது கதிரவனுக்கு பயமெல்லாம் ஜெயந்தியை பற்றி தான். தன்னைப் பற்றி தெரிந்தால் என்ன செய்வாளோ என மிகவும் பயத்தில் இருந்தார்.

அதனாலே தன் வீட்டைப் பற்றியோ, லட்சுமியை பற்றியோ சீனியிடம் கூட பேசுவதில்லை.

அதோடு சிங்கப்பூர் வந்த பிறகு அதைப்பற்றி நினைக்கக் கூட அவருக்கு நேரம் இருந்ததில்லை.

இந்தியாவில் தான் சம்பாதித்த மொத்த பணத்தையும், இந்த தொழிலில் போட்டிருந்தார் மனிதர். அதனாலே தொழிலின் பின்னே ஓடிக் கொண்டிருந்தார்.

ஜெயந்தியோ கதிரவன் மட்டும் தனக்கு போதும், அவர் வீட்டினரைப் பற்றி தெரிந்து கொள்ள தேவையில்லை என்ற நிலையில் இருந்தார்.

ஜெயந்தியும், இளங்கோவும் இங்கு ஓரளவுக்கு செட்டில் ஆகி விட, கதிரவனும் தன் குடும்பம் என்ற கூட்டுக்குள் தன்னைப் பொருத்திக் கொண்டார்.

வேலை முடிந்து வரும் போது ‘அப்பா’ என்று ஓடிவரும் மகன், தங்கள் இருவரையும் ஆசையாக பார்த்தபடி நிற்கும் ‘மனைவி’ என இந்த வாழ்க்கையை மிகவும் விரும்பினார் கதிரவன்.

இப்படியான வாழ்வை சீர்குலைக்கும் எந்தச் செயலையும் செய்ய அவர் விரும்பவில்லை.

இதற்கிடையில் சரியாக ஓராண்டுக்கு பிறகு, சீனிவாசனுக்கும் நாயகிக்கும் திருமணம் நடந்தது. அதற்கு சென்னை வரை வந்தவர், தன்னுடைய கிராமத்திற்கு செல்லாமலேயே மீண்டும் சிங்கப்பூர் கிளம்பி விட்டார்.

வாரத்திற்கு ஒரு முறை இவரே அழைத்து பேசுவதை வழக்கமாக்கி கொண்டார். வீட்டிலிருந்து யார் அழைத்தாலும் இரண்டு வார்த்தைகளுடன் நிறுத்திக் கொண்டார்.

அதை நினைத்து பெரியவர்கள் குழம்பினாலும், அதற்கும் லட்சுமி தான் சமாதானம் செய்ய வேண்டியதாக இருந்தது.

“மாமா சொல்லிட்டு தான போனாங்க.. அவரோட வேலை எப்படி இருக்கும்னு.. அவரா கூப்பிட்டு பேசுவாங்க.. விடுங்க..” என்று மற்றவர்களுக்காக கூறினாலும், வீட்டில் உள்ளவர்களிடம் கூட பேச முடியாமல் அப்படி என்ன வேலை என்று தான் அவளுக்கும் தோன்றியது.

லட்சுமிக்காக மட்டுமே அனைவரும் அமைதியாக சென்றனர். எங்கே கதிரவனை பேசினால், லட்சுமி வருந்துவாளோ என்றுதான் அமைதி காத்தனர். அது லட்சுமிக்கும் புரியத்தான் செய்தது.

திருமணம் முடிந்தால் அனைத்தும் சரியாகிவிடும் என மனதை தேற்றிக் கொண்டாள்.

கதிரவன் சென்று இரண்டு ஆண்டுகள் முடிந்திருக்க, மகேஸ்வரி மீண்டும் உண்டாகி இருந்தார். அதனால் அனைவரும் கதிரவனை மறந்து, மகேஸ்வரியின் மேல் கவனம் செலுத்தினர்.

போன முறை போல் விபரீதம் ஆகிவிடக்கூடாது என்று மிகவும் கவனமாகவே மகேஸ்வரியை பார்த்துக் கொண்டனர். இந்த முறை வளைகாப்பு என்று எதுவும் வேண்டாம் என திட்டவட்டமாக செல்வம் கூறிவிட்டார்.

தங்கத்திற்கும் அதுதான் சரியென்றுபட்டது. போன முறை ஊரே வியக்கும் படி விஷேசம் செய்து தான், கண் திருஷ்டி போல குழந்தை இறந்தே பிறந்ததோ என அடிக்கடி நினைத்திருக்கிறார். அதனால் செல்வம் கூறவும் எல்லோருமே சரியென்று விட்டனர்.

ஒன்பதாம் மாதம் இறுதியில் ஒரு வெள்ளிக்கிழமை, அழகான காலை பொழுதில் மகேஸ்வரிக்கு பெண் குழந்தை, பிறக்க அதற்கு செந்தாமரை என பெயரிட்டனர்.

குழந்தையைப் பார்க்க கதிரவன் வரவில்லையென்றாலும், குழந்தைக்கென்று பல பரிசுகளை வாங்கி அனுப்பியிருந்தார் கதிரவன்.

கதிரவன் அனுப்பிய பொருட்களை பார்த்ததும், அவர் வரவில்லை என்ற கோபம் கூட குறைந்திருந்தது.

இப்போதெல்லாம் இயந்திரத்தனமாக வேலைகளை செய்துவிட்டு, அமைதியாக அறைக்குள் அடங்கிக் கொள்ளும் லட்சுமியை நினைத்து அனைவருக்குமே பயம்தான்.

அதை கவனித்த மகேஸ்வரி, தன் குழந்தையின் மொத்த பொறுப்பையும் லட்சுமியை பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டாள். லட்சுமிக்கும் குழந்தையோடு நேரம் சரியாக இருந்தது. தாமரையோடு நேரம் செலவழிப்பதால் அவளது கவலையில் இருந்து சற்று வெளியில் வந்தாள் எனலாம்.

என்னதான் மகனுக்கு குழந்தை பிறந்தது சந்தோஷமாக இருந்தாலும், மகள் தனியாக இருப்பது அந்த வயதான தந்தையை பெரிதாக பாதித்தது.

யாரையும் அவரால் குற்றம் சொல்ல முடியாது. தனக்கு மறைத்து எதுவும் நடக்கவில்லையே, அதனால் மகளை அடிக்கடி வெளியில் அழைத்துச் சென்றார்.

இப்போது கதிரவன் சொல்லி சென்ற மூன்று வருடமும் முடிந்து விட்டது. இன்னும் அவனிடமிருந்து எந்த செய்தியும் வரவில்லையே என தந்தையாக அவருக்கு, பெரும் கவலை தொற்றிக் கொண்டது.

அதன் வெளிப்பாடாக “தம்பி கதிர் போய் மூணு வருஷம் ஆச்சு.. கொஞ்சம் என்ன ஏதுன்னு விசாரிப்பா.. ஊருக்குள்ள ஆளாளுக்கு ஒன்னு பேசுறாங்க.. நம்ம சொந்தத்திலேயே ஏதேதோ பேசுறாங்க, மனசுக்கு ஒன்னும் சரியா படல. கருப்பையாகிட்ட என்னால இதை பேச முடியாது.. நீ மருமககிட்ட பேசி என்னன்னு விசாரி..” என மகனிடம் சொல்லி இருந்தார்.

செல்வமும் தந்தை சொல்வதற்கு முன்னே மனைவியிடம் பேசி இருந்தார்.

“கதிர் பண்றது எதுவும் சரியில்ல. அத்தைக்கிட்ட சொல்லி என்னனு விசாரிக்க சொல்லு.. சென்னைல இருந்தா கூட என்ன செய்றான், எப்படி இருக்கான்னு போய் பார்த்துட்டு வரலாம். சிங்கப்பூர் வரை போக முடியுமா.? அவனுக்கு அங்க எதுவும் பிரச்சினையோ என்னமோ..? இங்க லட்சுமிக்கு வயசு ஏறிட்டே போகுது.. இப்படியே வச்சிட்டு இருக்க முடியாது..” என்றிருந்தான். அப்போது கூட அவன் ஏமாற்றுவான் என்றெல்லாம் செல்வமும் யோசித்திருக்கவில்லை.

“அப்பா நான் மகேஸ்கிட்ட ஏற்கனவே பேசிட்டேன். அவ அத்தைகிட்ட பேசுறன்னு சொல்லி இருக்கா.. பொறுங்க என்னன்னு பார்ப்போம்.. கதிர் இந்த வாரம் பேசும்போது அத்தை பேசுவாங்க..” என தந்தையை சமாதானம் செய்திருந்தார் செல்வம்.

உடனே மகேஸுமே தங்கத்திடம் பேசி இருந்தாள். “

அம்மா என்னதான் நாம சொன்னதுக்காக மாமாவும், லட்சுமியும் அமைதியா இருந்தாலும், அவங்க மனசுல வருத்தம் கூடிக்கிட்டே போறது, உங்களுக்கு புரியுதா இல்லையா? இந்த வாரம் அண்ணன் பேசும்போது, அவர் எப்போ வராருன்னு கேட்டு கல்யாணத்துக்கு முடிவு பண்ணுங்க. மாமாவா இருக்க போய் தான் பொறுமையா இருக்கார். அவர் இடத்துல நீங்களோ அப்பாவோ இருந்திருந்தா என்ன செய்திருப்பீங்கன்னு யோசிங்க..” என்று முடித்திருந்தாள்.

அன்றிலிருந்தே தங்கத்தின் முகம் மிகவும் யோசனையாகத்தான் இருந்தது. மகள் பேசியதை கணவரிடமும் பகிர்ந்திருந்தார்.

அவர்கள் கேட்டதில் தப்பில்லை என்பதுதான் இருவரின் எண்ணமும். கதிர் பேசும்போது முடிவாக கேட்க வேண்டும் என நினைத்துக் கொண்டே இருந்தார்.

அவர் நினைத்தது போலவே, அந்த வாரம் கதிர் பேசும் போது தங்கம் நேரடியாகவே கேட்டுவிட்டார்.

“என்ன தம்பி மூணு வருஷம்னு சொன்ன, நாங்களும் சரின்னு விட்டோம். ஆனா இப்ப நாலு வருஷமே முடிஞ்சு போச்சு. நீ வர்ரத பத்தி பேசவே மாட்டேங்குற. உன்னை நம்பி இங்க ஒரு பொண்ணு இருக்கா, ஞாபகம் இருக்கா.” என கோபம் இருந்தாலும் தன்மையாகவே கேட்டார்.

எப்போது என்றாலும் இந்த கேள்வியை, எதிர்கொள்ளத்தான் வேண்டும் என்று புரிந்து கொண்ட கதிரும், “அம்மா எல்லாம் ரெடியாகிட்டு இருக்கு. இங்கே பார்த்துக்க ஆள் செட் பண்ணிட்டு, அவருக்கு எல்லாம் ட்ரெய்னிங் கொடுத்துட்டு வந்துடுவேன். இது என்னோட சாம்ராஜ்யம்மா. என்னோட பணம், உழைப்பு எல்லாத்தையும் இதுல போட்டுருக்கேன். அதை நம்பிக்கையான ஆளுங்க கிட்ட விட்டுட்டு வரணுமில்ல..” என கதிரவனும் தன்மையாகவே தான் பதில் சொன்னார்.

எப்போது கேட்டாலும் இந்த பதிலை தான் சொல்ல வேண்டும், என பல மாதங்களாக யோசித்து வைத்திருப்பார் போல. அதனால் எந்த ஒரு பிசிறும் இல்லாமல், கோர்வையாக சொல்லி முடித்து இருந்தார்.

“ஆமா.. ஆமா தம்பி… நீ சொல்றதும் சரிதான். எல்லாம் சரியா பாத்துக்கிற மாதிரி நம்பிக்கையான ஆள் கிடைக்கிறது கஷ்டம் தான். இங்கனாலும் தெரிஞ்சவங்க இருப்பாங்க. அயல் தேசத்துல யாரை நம்ப, நீ பார்த்து முடிச்சுட்டு சொல்லு தம்பி. இங்க கல்யாணத்துக்கு ரெடி பண்ணிடலாம்.” என்ற தங்கம் மகன் பேசியதை வீட்டில் கூற, எல்லாருக்குமே நிம்மதி உண்டானது.

ஒருவழியாக லட்சுமியின் வாழ்க்கை சரியாக போகிறது என்று ஆசுவாசம் உண்டானது அனைவரிடத்திலும்.

இத்தனை வருடங்களில் திருமணம் ஆகாத பெண்ணை, மருமகள் என தன் வீட்டில் அழைத்து வந்து வைத்திருந்தால், அந்த ஊர் என்ன என்ன பேசி இருக்கும். அனைத்தையும் முகம் சுளிக்காமல் தான் கடந்து வந்திருந்தனர் அனைவரும். காரணம் கதிரவனின் மேல் இருந்த நம்பிக்கை.

தன் மகன் தங்களை தலை குணிய வைக்கமாட்டான் என்ற பெற்றவர்களின் நம்பிக்கை.

அந்த நம்பிக்கை பொய்யாகும்போது, அதை எல்லோரும் எப்படி தாங்கிக் கொள்வார்களோ? குறிப்பாக லட்சுமி! அவளை எப்படி இதிலிருந்து மீட்பார்கள்.

கதிரவன் வந்துவிடுவான் என்று தெரிந்த பிறகு, இரண்டு வீட்டிலும் கல்யாண கலை வந்துவிட்டது.

செல்வத்தின் திருமணத்திற்கு பிறகு, கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் கழித்து லட்சுமியின் திருமணம்.

இரு வீட்டிற்கும் மிக முக்கியமான திருமணமும் கூட. அதனால் அனைவருமே அதை விழா போலத்தான் பார்த்தனர்.

மருமகன் வெளிநாடு சென்று வருகிறார், அவருக்கு தகுந்த போலவே மகளின் உடைகள், நகைகள் இருக்க வேண்டும் என்ற ஆசையில், கந்தசாமி மகனிடம் கூட சொல்லாமல் தெரிந்த நண்பரை அழைத்துக்கொண்டு சென்னை வந்து விட்டார்.

நண்பரும், நண்பரின் மனைவியும் உதவி செய்ய, மகளுக்காக நகைகளை பார்த்து பார்த்து வாங்கினார் மனிதர். அவர் முகத்தில் மின்னிய மகிழ்ச்சியை பார்க்க பார்க்க அந்த நண்பருக்கே தெவிட்டவில்லை.

“என்ன கந்தா உன் முகம் சூரியன் மாதிரி மின்னுது..” என நண்பர் கூட கிண்டல் அடித்தார்.

“என் பொண்ணு வாழ்க்கை சரியாகுமா, ஆகாதான்னு ரொம்ப மன வருத்தத்தில் இருந்தேன். இப்போதான் எல்லாம் கூடி வந்து, மாப்பிள்ளை ஊருக்கு வரேன்னு சொல்லி இருக்கார். எனக்கும் இப்பதான் மனசு நிம்மதியா இருக்கு.. என் புள்ள வாழ்க்கை நல்லபடியா அமைஞ்சா போதும்..” என நண்பருக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தவரின் காதில்,

“ஜெயந்தி இந்த டிசைன் பாரு… இதுதான் உன் கழுத்துக்கு எடுப்பா இருக்கும். விலை எல்லாம் பார்க்காத.. நகையை மட்டும் பாரு.. நம்ம மேரேஜ்க்கு கிப்ட் பன்றேன். இதுல போய் விலையெல்லாம் பார்ப்பியா..” என்ற குரல் விழ, அதை கேட்டு வேகமாக திரும்பினார் கந்தசாமி.

‘இது.. இது கதிரோட குரல் ஆச்சே..’ என்றவருக்கு, அவர் பேசிய பேச்சுக்கள் நினைவில் வர, ‘என்ன.. என்ன இது..’ என தவித்த இதயத்தை தடவியபடியே, நிமிர்ந்து பார்க்க,

ஆறு வயதில் ஒரு சிறுவனை தோளில் தூக்கிக்கொண்டு, மறு கையால் ஒரு பெண்ணை அணைத்தபடி, அந்த கடையில் இருந்து வெளியில் சென்றார் கதிரவன்.

தான் பார்த்ததை நம்ப முடியாமல், ‘இல்ல.. இல்ல… இது கதிர் இல்ல.. வேற யாரோ? எங்க கதிர் அப்படி எல்லாம் நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டான்..’ என மனதுக்குள் சமாதானம் செய்தபடியே, அவர்களுக்கு நகையை காட்டிய பெண்ணிடம் வேகமாக ஓடினார்.

“பாப்பா.. இப்போ ஒருத்தர் நகை வாங்கிட்டு போனாரே, அவர் யார் என்னென்னு விவரம் தெரியுமா.?” என தவிப்பாக கேட்க, கந்தசாமியின் செய்கை நண்பருக்கு யோசனையாக இருந்தது.

“நீங்க யாருங்க அய்யா.. அப்படியெல்லாம் அடுத்தவங்களோட டீடைல்ஸ் கொடுக்கக் கூடாது..” என்ற பெண்ணிடம்,

“கொஞ்சம் தயவு பண்ணு பாப்பா… எனக்கு தெரிஞ்சவங்க மாதிரி இருக்காங்க..” என மீண்டும் கேட்க,

‘என்னாச்சு இவனுக்கு? என யோசித்தபடியே அவரிடம் வந்த நண்பர் “என்ன கந்தா யாரபத்தி விசாரிக்கிற.?” என கேட்கவும்,

“அது… இப்ப போனவங்க நம்ம ஊர் பையன் மாதிரி இருந்தது.. ஒருவேளை தெரிஞ்சவங்களா இருந்தா, பேசலாமேனு கேட்டேன்..” என உண்மையை மறைத்து கூற,

எதிரில் நின்ற விற்பனை பெண்ணோ, கந்தசாமியின் முகத்தில் இருந்த பதட்டத்தைப் பார்த்து மனமிறங்கி, “அவங்க இந்த ஊர் இல்ல சார்.. சிங்கப்பூர்ல இருந்து வந்து ரெண்டு நாள் தான் ஆச்சாம். அவங்க கல்யாண நாள் கிப்ட் வாங்க வந்திருக்காங்க..” என்றதும், கந்தசாமிக்கு உண்மை புரிந்து விட்டது.

ஆனாலும் சிறு நம்பிக்கை அதைவிட மனமில்லாமல் “அவர் பெயர் என்னன்னு தெரியுமா பாப்பா? ஜாடையில எங்க ஊர் பையன் மாதிரியே இருக்காரு..” என மீண்டும் கேட்க,

கந்தசாமியின் முகத்தில் வந்து போன பதட்டமும், பரிதவிப்பும் அந்த பெண்ணை அடுத்து யோசிக்கவிடவில்லை. “ஒரு நிமிஷம் அய்யா பில் பார்த்து சொல்றேன்..” என்றவள் பில்லில் இருந்த, கதிரவன் என்ற பெயரை கூற, மொத்தமும் ஒடுங்கிப் போனது கந்தசாமிக்கு.

‘அய்யோ என் பொண்ணுக்கு நான் என்ன பதில் சொல்வேன்’ என்ற கேள்வி தான் அவர் மனதை, மூளையை பெரிதளவில் ஆக்கிரமித்து இருந்தது.




 

Lakshmi kandhan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 6, 2025
109
87
28
Salem
இந்த கதிர் கதையை முடிச்சு விடல உங்களை முடிச்சு விட்டுடுவேன். ஆனாலும் பொய்யா வாழ ஒரு தைரியம் வேணும் ப்பா... நமக்காக மத்தவங்களை காயப்படுத்தாத பொய் சொல்லும் போதே படபடன்னு இருக்கு இவன் எப்படித்தான் இப்படி இருக்கானோ தெரியல
 
  • Haha
Reactions: Vathani

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,272
497
113
Tirupur
இந்த கதிர் கதையை முடிச்சு விடல உங்களை முடிச்சு விட்டுடுவேன். ஆனாலும் பொய்யா வாழ ஒரு தைரியம் வேணும் ப்பா... நமக்காக மத்தவங்களை காயப்படுத்தாத பொய் சொல்லும் போதே படபடன்னு இருக்கு இவன் எப்படித்தான் இப்படி இருக்கானோ தெரியல

அவனை எப்படி முடிக்க