• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிலவோடு தென்றலும்! 24

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
880
647
93
Chennai
அத்தியாயம் 24

"ஓய்! என்ன?" என அனன்யா முன் கையசைத்து அரவிந்த் புன்னகையுடன் அழைத்தான்.

"ஹான்!" என சுதாரித்தவள், எதுவுமில்லை என தலையசைக்க,

"எப்ப கூப்பிட்டேன்னு தெரிஞ்சாலும் சொல்ல மாட்ட. ஆனா லுக் மட்டும் குடுப்ப இல்ல?" என கேட்டு மிதமாய் முறைத்தவன்,

"சாப்பிடு!" என சொல்லவும் அவளும் சாப்பிட ஆரம்பித்தாள்.

"ரொம்ப ரொம்ப அழகா இருந்த நேத்தும் இன்னைக்கும். ஒரு ஃபீலோட நேத்தே சொல்ல நினச்சேன். எங்க விடுறாங்க!" என்றவன் சாப்பிட்டபடி சொல்ல, சாப்பாட்டோடு புன்னகையையும் உள்ளிழுத்துக் கொண்டாள் அனன்யா.

"அத்தை எதுவும் சொன்னாங்களா?" என அரவிந்த் கேட்கவும் சாப்பிட கைகளை உயர்த்தியவள் ஒரு நொடி நின்றுவிட,

"சாப்பிட்டுட்டே பேசு அனு!" என்றான் அரவிந்த்.

"கொஞ்ச நேரம் முன்னாடி கூட அப்படியே பளிச்சுனு கண்ணுக்கு தெரிஞ்ச. இப்ப கொஞ்சம் டல்லாகிட்ட. அத்தை என்ன சொன்னாங்க? பதிலுக்கு எதுவும் பேசிட்டியா?" என கேட்க, கண்கள் கலங்கி விடும் போலானது அனன்யாவிற்கு.

'எப்ப இருந்து த்தான் என்னை இவ்வளவு கவனிச்சிங்க?' என மீண்டுமாய் அவனை அனன்யா காண,

"சாப்பிடு டா!" என்றான் அத்தனை கனிவாய் பார்த்து.

"இன்னும் எவ்வளவோ பார்க்கணும். இதுக்கேவா" என அரவிந்த் சொல்ல,

"நான் ஈவினிங் கிளம்புறேன் த்தான்!" என்றாள் அனன்யா.

"வீட்டுக்கா?" என்ற அரவிந்த் முகம் நொடியில் வாட்டத்தைக் காட்ட,

"அத்தை ரொம்ப பேசிட்டாங்களா?" என்றவன்,

"இன்னைக்கு ஒரு நாள் இருந்துட்டு நாளைக்கு போலாம்ல அனு? மகி இன்னைக்கு அவங்க வீட்டுக்கு போய்ட்டு நாளைக்கு விருந்துக்கு வந்துடுவா!" என சொல்ல,

"அதான் நீங்க இருக்கீங்களே!" என்று சிரித்தவள் செயலில் என்னவோ செய்தது அரவிந்த்திற்கு.

அவளுக்கு இங்கிருந்து செல்வது எத்தனை கஷ்டம் என புரிந்தவனுக்கு அவளை அனுப்பவும் மனமில்லை. இந்த வேதனையிலும் அவள் காட்டும் புன்னகை அவனுக்குள் வலியை சேர்த்துக் கொண்டது.

"சரி டா போய்ட்டு வா! மாமாவும் உன்கூட டைம் ஸ்பென்ட் பண்ண நினைப்பாங்க இல்ல" என்றான்.

"சென்னை எப்போ அனு?"

"சனிக்கிழமை நைட் த்தான்!" அனன்யா சொல்ல,

"ஹ்ம் நானும் வந்துடுவேன்! ஆமா டிக்கெட் போட்டியா?" என கேட்க,

"ம்ம் நேத்து தான் போட்டுட்டு அப்பாக்கு அனுப்பினேன்!" அனன்யா.

"ப்ச்! என்ன அனு நீ? நானும் தான் வர்றேனே! கப்பில் சீட் புக் பண்ணி போயிருக்கலாம்!" என்றவன் இதழ் மடித்து புன்னகையை அடக்கி அவளைக் காண, இலையை மடித்துக் கொண்டிருந்தவள் விரிந்த கண்களோடு சட்டென அவன் பக்கம் திரும்பினதில் வெடித்து அரவிந்த் சிரிக்க, வசந்த் மகிழினியும் அரவிந்த் பக்கம் திரும்பி இருந்தனர்.

"த்தான்!" என்ற அனன்யாவும் பதறி மகிழினியை திரும்பிப் பார்த்துவிட்டு அரவிந்த்தைக் கண்டாள்.

"என்ன டா ஒரு மாதிரியா சிரிக்குற?" மகிழினி சந்தேகமாய் பார்த்து வைத்து கேட்க,

"ம்ம்ஹும்! ஒண்ணுமில்ல!" என்றவனிடம் இன்னும் புன்னகை மிச்சம் இருந்தது.

"நைட்ல்லாம் கல்யாண வேலை பார்த்ததுல எந்த பேய் பிடிச்சதோ!" என்று சொல்லி மகிழினி வசந்த் உடனே கைகழுவ எழுந்து கொள்ள,

"த்தான்!" என முறைத்தாள் அனன்யா.

"சும்மா அனு!" என்றவன்,

"ஆனாலும் ஆசை இருக்கு!" எனவும் சொல்ல,

"ப்ச்! நான் கிளம்புறேன் போங்க!" என்றவள் எழுந்து கொண்டாள்.

"சரி சரி மெதுவா!" என சிரித்தவன்,

"ஈவ்னிங் ட்ராப் பண்ணவா அனு?" என கேட்க,

"ம்ம்ஹும்! வேண்டாம். மகியை அவங்க வீட்டுக்கு அனுப்பிட்டு வந்து தான் போவேன். நான் ஆட்டோ போட்டுக்குறேன்" என்றாள்.

"ஹ்ம் டா! அத்தைகிட்ட கோபப்படாத. எதுவானாலும் பார்த்துக்கலாம். நான் இருக்கேன்!" அரவிந்த் சொல்ல, எதுவுமே கூறவில்லை அதற்கு அனன்யா.

அடுத்தடுத்த சடங்குகள் சம்பிரதாயங்கள் என அன்றைய தினம் முழு வேகத்தில் செல்ல, வசந்த் வீட்டிற்கு மகிழினியை அழைத்து செல்லும் போது மணி நான்கு.

அன்பரசன் கனகாவை வீட்டில் விட்டுவிட்டு தானுமே வந்திருந்தார் மகிழினி வீட்டிற்கு.

திகழ்மதியை கட்டிக் கொண்டு மீண்டுமாய் அழுகை மகிழினியிடம். திகழ்மதியுமே அழுதபடி நிற்க, அருகில் அரவிந்த் கண்கள் கலங்கி நின்றதை ஆர்யன் புன்னகையுடன் பார்த்து அருகேவே நின்றான்.

இதற்கெல்லாம் ஆறுதல் கூறிட முடியுமா என்ன? இத்தனை வருடங்கள் உடனிருந்தவர்களை பிரிந்து செல்வது என்ன சாதாரண வலியா?

"ஆர்யா ண்ணா!" என சத்தமாய் அனன்யா அழைக்கவும் நால்வரும் அனன்யா பக்கம் திரும்ப, அழுது கண்ணீர் வடிந்த முகங்களை தனது அலைபேசியில் சேமித்துக் கொண்டாள் அனன்யா.

"அனு!" என அரவிந்த் முறைக்க,

"ஏன் த்தான் கண்ணு கலங்கி இருக்கு. தூசு விழுந்துருச்சா?" என கேட்க,

"அவனை நீ கலாய்க்குறியா?" என்றான் ஆர்யன்.

"நான் எவ்ளோ போல்ட் தெரியுமா அப்படினு சென்னைல பில்டப் பண்ணிட்டு இங்க வந்து கண்ணை கசக்குறாங்க!" என சிரித்தவள் இன்னும் ஏங்கிக் கொண்டிருந்த மகிழினியை கட்டிக் கொண்டாள்.

"ஹப்பியா இருக்க வேண்டிய நேரம். அழாத மகி!" என்ற அனு,

"அண்ணி! நீங்களுமா!" என திகழ்மதியையும் கட்டிக் கொள்ள,

"நீ என்ன டா பாக்குற?" என்றான் ஆர்யன் அரவிந்த்திடம்.

"மாமா!" என அரவிந்த் முறைக்க,

"உனக்கெல்லாம் இப்ப கிடைக்காது!" என்ற கிண்டல் வேறு.

பல அறிவுரைகள் கூறி மகிழினியிடம் இருந்து திகழ்மதி குடும்பத்தினர் விடைபெற்று கிளம்பி திகழ்மதி வீடு வந்து சேர,

"நானும் அப்பாவோட கிளம்புறேன் அண்ணி!" என்றாள் அனன்யா திகழ்மதியிடம்.

"நாளைக்கு கிளம்பலாமே டா!" என அவள் சொல்ல, அன்பரசனும் தடுக்கவெல்லாம் இல்லை.

ஆனால் அனன்யா தான் கிளம்ப வேண்டும் என்ற முடிவில் இருந்தவள் அரவிந்த்திடமும் சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டாள்.

கனகாவின் வேலை தான் என புரிந்தது அரவிந்த்திற்கு. என்னவோ சொல்லி இருக்க வேண்டும் அதனால் தான் இத்தனை அடமாய் கிளம்பி செல்கிறாள் என நினைத்தவன் இவள் பதில் பேசி சண்டையிடாமல் இருக்க வேண்டுமே என நினைத்திருக்க,

அவன் நினைத்தது போலவே தான் அங்கே அனன்யா வீட்டிலும் நடந்தது. ஆறு மணிக்கு அன்பரசனுடன் வந்த அனன்யாவை எதுவுமே கேட்டுக் கொள்ளவில்லை கனகா.

அடுத்த நாள் காலை எட்டு மணிக்கு எழுந்த அனன்யா குளித்து முடித்து ஒரு சல்வாரில் வெளிவர,

"அனு! இந்த ட்ரெஸ்..." என எதுவோ சொல்ல வந்த கனகா பின் மனதை மாற்றிக் கொண்டவராய் எதுவும் கூறாமல் சென்றுவிட்டார்.

அன்பரசன் ஒன்பது மணிக்கு மேல் வெளியில் சென்று வருவதாய் கூறியவரையும் செல்ல விடவில்லை.

பத்து மணியை நெருங்கும் நேரம் திகழ்மதிக்கு அழைத்த அனன்யா மகிழினியை விருந்துக்கு அழைத்து வருவதைப் பற்றி விசாரித்து பேசிக் கொண்டிருக்க, வெளியில் சலசலவென்ற சத்தம்.

"சரி அண்ணி! போய்ட்டு வாங்க. நான் அப்புறம் பேசுறேன்!" என சொல்லிவிட்டு அறையில் இருந்து வெளிவர, அன்பரசன் மனைவியின் செயலில் கோபமாய் இருந்தாலும் வந்தவர்கள் முன் காட்டிடவா என பொறுமை காத்து நிற்க, கனகா தண்ணீரை கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தார்.

பார்த்ததும் அவர்கள் ஏன் வந்திருக்கிறார்கள் என புரிந்த அனன்யாவிற்கு கோபமான கோபம். சட்டென உள்ளே சென்று தன் அறையில் அமர்ந்து கொண்டாள்.

உச்சந்தலை வரை கோபம் ஏறி இருக்க, பல்லைக் கடித்து அமர்ந்திருந்தவள் என்ன செய்வதென யோசித்தது எல்லாம் சில நொடிகள் தான்.

உடனே மொபைலை எடுத்து அரவிந்த் எண்ணுக்கு அழைக்க, அவன் மகிழினி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான். அனன்யா எண்ணைக் கண்டவனுக்கு புன்னகை வர, "ஹால்ப் அன் ஹவர்ல கூப்பிடுறேன் டா!" என அனுப்பி வைத்தான் செய்தியாய்.

"ப்ச்!" என மொபைலை கட்டிலில் அவள் தூக்கி எறியும் நேரம் கனகா அவள் அறைக்குள் பூவுடன் நுழைந்தார்.

பூவைக் கொண்டு வந்து அவள் தலையில் வைத்துவிடும் வரை அமைதியாய் அனன்யா இருக்க, இத்தனை பேர் இருக்கும் நேரம் என்ன செய்துவிட போகிறாள் என ஒரு எண்ணம் கனகாவிற்கு.

"இந்த காபியை கொண்டு வந்து அங்க இருக்கவங்களுக்கு குடு!" என மீண்டும் காபி ட்ரேயுடன் கனகா வர,

"முடியாது!" என அனன்யா சொல்லும் நேரம் அன்பரசனும் உள்ளே நுழைந்தார்.

"முடியுமா முடியாதான்னு கேட்கல அனு. குடுன்னு சொன்னேன்!" கனகா அழுத்தம் கொடுக்க,

"அனு! வந்தவங்க கிளம்பட்டும் பார்த்துக்கலாம் டா!" என்ற தந்தையையும் முறைத்தாள் அனன்யா.

"எனக்கும் தெரியாது அனு. இவ இவ்வளவு செய்வானு நான் நினைக்கல!" என மனைவியை முறைக்க,

"என்னால முடியாது ப்பா!" என்றாள் அனன்யாவும் அன்னையை விட அழுத்தமாய்.

"வெளில காத்துட்டு இருக்காங்க வாடின்னு சொன்னேன்!" என சத்தம் வெளியில் செல்ல கூடாதே என மெதுவாய் அனன்யாவை கனகா மிரட்டப் பார்க்க, அனன்யாவிற்கு தான் அந்த கட்டுப்பாடுகள் எல்லாம் கிடையாதே!.

இனி அன்னையிடம் மட்டும் தன் மறுப்பை தெரிவித்து பிரயோஜனம் இல்லை என நினைத்தவள் பெண் பார்க்க வந்திருந்தவர்கள் எவராய் இருந்தால் என்ன என்ற எண்ணம் தோன்றவும் விறுவிறுவென எழுந்து வெளியில் வர, கனகா அவள் சென்ற வேகத்தில் அதிர்ந்திருக்கும் போதே,

"இந்த கல்யாணத்துல எனக்கு இஷ்டம் இல்லை. மன்னிச்சுடுங்க." என அத்தனை பேரின் நடுவிலும் நின்று சொல்லிவிட்டு உள்ளே சென்று தன் அறை கட்டிலில் அமர்ந்துவிட, வெளியில் சிறு சலசலப்புடன் கூட்டம் கலைய ஆரம்பித்தது.

கனகாவை அவர் காதுபட பேசி திட்டியபடி வந்திருந்தவர்கள் எல்லாம் கலைந்து சென்றிருக்க,

"என்ன அனு!" என அன்பரசன் மகள் அருகே அமரவும்,

"நான் தான் உங்ககிட்ட பேசணும் சொன்னேன்ல ப்பா. ஏன் அம்மா இப்படி பன்றாங்க!" என கேட்க,

"என்ன டி பேச போற நீ? என்ன பேச போற? வந்த மாப்பிள்ளை யாரு தெரியுமா? மாசம் ரெண்டு லட்சம் உள்ளூர்ல சம்பாதிக்குறவன்" என கோபமாய் கூறினார் கனகா.

"நீ சும்மா இரேன் டி. புருஷன்னு என்கிட்ட கூட சொல்லாம என்ன பண்ணி வச்சிருக்க நீ?" என மனைவியை அதட்ட,

"நீங்க பொண்ணுக்கு செய்ய வேண்டியதை செஞ்சா நான் ஏன் இப்படி செய்ய போறேன்?" என்றார் கனகா.

"உன்னையெல்லாம்!" என அன்பரசன் பேச வர,

"ப்பா! நான் இப்போ சொல்றது யார் பேச்சை கேட்டும் இல்ல. முழுக்க முழுக்க என்னோட விருப்பம்" என்ற அனன்யா,

"நான் அர்வி அத்தானை விரும்புறேன். அவரை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன். எனக்காக திகழ் அண்ணிகிட்ட பேசுவீங்களா ப்பா?" என உடைத்துக் கேட்டவள் அதன்பின் நடந்த பேச்சுவார்த்தை வாய்வார்த்தைகளின் தாக்கத்தோடும் கோபத்தோடும் சென்னை கிளம்பி சென்றிருந்தாள்.

தொடரும்..
 
  • Love
Reactions: Vathani

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,273
498
113
Tirupur
நாந்தான் சொன்னேன்ல இது சரவெடின்னு
 
  • Love
Reactions: Rithi

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
880
647
93
Chennai
நாந்தான் சொன்னேன்ல இது சரவெடின்னு
ஹீரோயின் ஆர்மி