துளி துளியாய் துரோகம் 4
வர்ஷா, சிந்து மற்றும் பைரவி பி.ஈ படிப்பிற்காகக் கல்லூரியில் காலடி எடுத்து வைத்தனர். அந்த வயதிற்கே உரிய உற்சாகம் அவர்களைத் தொற்றிக் கொண்டது. இனிமையாக நாட்கள் நகர்ந்தன.
கல்லூரியின் முதல் மூன்று மாதங்கள் முடிந்த தருணம். ஒரு நாள் சுந்தரி வீட்டுக்கு வந்து சிந்து மற்றும் பைரவியைத் தனியாகச் சந்தித்து “புது காலேஜ் எப்படி இருக்கு மா?” என நிதானமாகத் தொடங்கினார்.
“நல்லா இருக்கு மேம்” பைரவி உற்சாகம் பொங்கப் பதில் அளித்தாள். சிந்து தலையாட்டி ஆமோதித்தாள்.
சுந்தரி சோபாவில் அமர்ந்து எதிர் சோபாவில் இருவரையும் அமர கைகாட்டினார். அவர்களும் அமர்ந்தனர்.
“இந்த காலம் இளமை துள்ளல் அழகு காதலுக்கு ரொம்பவே ஏற்ற வயசு இல்லையா? .” என சற்றே பெரியதாகச் சிரித்தபடி சுந்தரி கூறவும்.
தொடர்பே இல்லாமல் அவர் பேசுவதைக் குழப்பமாக இருவரும்ப் பார்த்தனர்.
“காதலைவிட உங்களுக்குக் கடமை இருக்கு. அதை மறந்துடாதீங்க” குரலில் மாற்றம்
“யெஸ் மேம்” அவசரமாகச் சிந்து தலையசைத்தாள்.
“வர்ஷா மட்டும்தான் உங்க பார்வையில இருக்கணும். அவ பாதுகாப்பு தான் உங்க குறிக்கோள்”
“கண்டிப்பா மேம்” இது சிந்து
“ஒரு நாட்டுடைய இளவரசிக்கு எப்படி சேடிப் பெண்கள் இருப்பார்களோ அப்படிதான் நீங்க. உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு இங்க இடம் இல்லை. ஆனா உங்களுக்குத் தேவையான வசதிகள் பணம் எல்லாம் உங்க வாழ்க்கை முழுவதுக்கும் கிடைக்கும்”
“வர்ஷாக்கு நல்ல இடத்துல கல்யாணம் ஆகி .. அவ நிம்மதியா இருக்கும்வரை நீங்க அவ கூட இருந்தாகணும்” என சுந்தரி முடித்தார்.
இருவரும் ஒரு மார்க்கமாகத் தலையை ஆட்டி வைத்தனர்.
“இந்த விஷயமெல்லாம் வர்ஷா காதுக்குப் போக கூடாது” அடுத்த கட்டளை வந்தடைய .. அதற்கும் மண்டையை உருட்டினர்.
சுந்தரி கிளம்பிப் போய்விட்டார்.
பைரவி கலக்கமாக “சிந்து என்னடி இப்படி சொல்லிட்டாங்க?” என்றாள்.
சிந்து “இதை நான் எதிர்பார்த்தேன். சுருக்கமா சொன்னா நாம அவங்க அடிமை” பைரவியைக் கூர்ந்து நோக்கியபடி கூறினாள்.
பைரவி அதிர்ந்து சிந்துவைப் பார்த்தாள். “உண்மையாகவா?” என்னும் கேள்வி அவள் முகத்தில் தொங்கியது.
சிந்து தன் தோழியின் கைகளைப் பற்றி “பயப்படாத பைரவி, சுந்தரி அம்மாவால நமக்கு எந்த ஆபத்தும் நேராது. நாம வர்ஷாவை பாதுகாக்கணும். காதல் கத்தரிக்கானு போகக் கூடாது.. அவ்வளவுதான்”
“அவ்வளவுதானா?“ கசந்த புன்னகையுடன் கேட்டாள் பைரவி.
அந்த கேள்வியில் ஒரு பெண்ணாய் வாழ்க்கையில் காதலி மனைவி தாய் என அனுபவிக்கும் எந்த சுகமும் கிடையாது என்ற பொருள் ஒளிந்திருந்தது. புறாவின் சிறகைப் போலப் பைரவியின் இதயம் படபடத்தது.
“கர்ணன் நண்பனுக்காகத் தியாகம் செஞ்ச மாதிரி நாமும் வர்ஷாக்காக நம்ம வாழ்க்கையை விட்டு கொடுக்கணும்” சிந்து மென்னகையுடன் புரிய வைக்க முயன்றாள்.
“கர்ணனுக்குப் பேர், புகழ், பட்டம், பதவி, நாடு, அந்தஸ்து, கௌரவம், குடும்பம் குழந்தை” எல்லாமே இருந்தது.” சீற்றத்துடன் பொரிந்தாள் பைரவி.
“ஆனா உயிர்? போருக்கு போனு துரியோதனன் சொன்னா போய் தானே ஆகணும். நாமளும் அப்படிதான்”
பைரவி “சிந்து திரும்ப இல்லத்துக்கே போயிடலாமா?” கெஞ்சலாகக் கேட்டாள். அவளின் அலைபாயும் மனம் சிந்துவுக்கு நன்குப் புரிந்தது.
“வேண்டாம் பைரவி. நமக்கு இங்க பாதுகாப்பு இருக்கு. இல்லத்தில் அது இல்ல.”
“என்ன சொல்ற?”
“நீ சுத்தி நடக்கிறதை கவனிக்கிறதே இல்ல .. அங்க பல்லவிக்கு என்ன ஆச்சு?
“என்ன? காய்ச்சல் அதிகமாகி இறந்துட்டா”
“மக்கு” என பைரவி தலையில் குட்டிய சிந்து “வாட்ச்மேன் அவளை நாசம் பண்ணிட்டான்”
“வாட்ச்மேனா? நம்பவே முடியலை” அதிர்ச்சி கொட்டி கிடந்தது முகத்தில்.
“பல்லவி மட்டும் இல்ல இன்னும் மூணு நாலு பேரை அவன் நாசம் பண்ணிட்டான். இல்லத்துல இது மேலிடம்வரை எல்லாருக்கும் தெரியும்”
“தெரியுமா? ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கலை?”
“ஆமா, எந்த நடவடிக்கையும் எடுக்கலை போலீசுக்கும் போகலை. அப்படியேவிஷயத்தை மூடிட்டாங்க .. ஆதரவு இல்லாத பெண்கள் நிலை அங்க அப்படிதான். வெளியில் தெரிஞ்சா இல்லத்தின் பேர் ரிப்பேர் ஆகிடும் இல்லையா? அதோடு நன்கொடை வரதும் நின்னிடும்”
பைரவி குழப்பமும் பயமும் கலந்து தன் துப்பட்டா நுனியை முடிவதும் அவிழ்ப்பதுமாக இருந்தாள்.
“பைரவி சுந்தரி அம்மாவும் வர்ஷாவும் நமக்கு நல்லதுதான் செய்றாங்க. அவங்க பாசத்துல நடிப்பு இல்ல. நம்ம வாழ்க்கை ஆறு மாதிரி மேடு பள்ளம்னு போகுது. இது நாள்வரை நமக்கு நல்லது தான் நடந்திருக்கு. இனியும் நல்லதே நடக்கும்னு நம்புவோம்”
“ஆனா நாம இங்க பாதுகாப்பா இருக்கிற உணர்வு இருக்கு. உனக்கு இங்க இருக்க விருப்பம் இல்லைனா சொல்லு நான் சுந்தரி அம்மாகிட்ட பேசறேன்” சிந்து தங்களின் நிலையை விளக்கி .. விருப்பமில்லை என்றாள் பைரவியை அனுப்பிவிடலாம் என்றும் முடிவு செய்தே அப்படிக் கேட்டாள்.
தவணை முறையில் தெளிவில்லாமல் வார்த்தைகள் விழுந்தன “இல்ல நானும் இங்கேயே இருக்கேன்” என்றாள் பைரவி. சிந்துவைத் தனியே விட்டுப் போக முடியவில்லை.
அதற்கு மேல் சிந்து எதையும் பேசவில்லை. அவள் சிந்திக்கத் தனிமையைக் கொடுத்தாள்.
பைரவியின் பேச்சைக் கேட்டு இருவரும் வெளியேறி இருந்தால் எதிர்வரும் பல அனர்த்தங்களிலிருந்து தப்பி இருக்கலாம்.
இல்லத்தில் வாட்ச்மேன் சிந்துவையும் நாசம் செய்ய முயன்றான். அவளும் தப்பித்துக் கொண்டே இருந்தாள். அதனால்தான் சுந்தரி தங்களுடன் அழைத்துச் செல்ல கேட்டதும் உடனே சம்மதித்தாள். தன் நிலைமை பைரவிக்கு ஏற்படக் கூடாது என்பதால்தான் அவளை அனுப்ப மனம் வரவில்லை.
அடுத்த சில நிமிடங்களில் அவர்களுக்குத் தேவையை விட அதிகமான உடை ஆபரணங்கள் எனப் பல பொருட்கள் வீட்டை அடைந்தன. இருவரும் அவற்றைத் திரும்பிப் பார்க்கும் மனநிலையில் இல்லை.
அடுத்த சில நாட்களில் பைரவி சகஜ நிலைக்குத் திரும்பினாள். வர்ஷாவின் தூய்மையான கபடமில்லாத நட்பு அவளை மாற்றியது. பின்பு படிப்பில் கவனம் செலுத்தவும் மற்ற எண்ணங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டன.
சுந்தரி கூறியது போல அது காதலிக்கும் வயது என எண்ணங்கள் மேலோங்கும் வண்ணம் நிகழ்வுகள் நடந்தது.
துஷ்யந்த் அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.ஈ. படிப்பவன். துஷ்யந்த் நம் கதையின் நாயகன். சுந்தரிக்குத் தூரத்து உறவு. அண்ணன் மகன் வகையில் உறவு வருகிறது. தினம் தினம் பார்த்துப் பேசும்படி இல்லை.
வருடத்திற்கு ஒருமுறை பார்த்தால் பெரிது. அவரவர் தம் வாழ்க்கை பயணத்தில் ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டிருந்தனர். பணம் பொருள் சேர்ப்பது மற்றும் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கருதினர்.
துஷ்யந்த் நன்றாகப் படித்தான். ஆண்மகனுக்குத் தேவையான சாமுத்திரிகா லட்சணங்கள் அனைத்தும் அவனிடம் இருந்தது. பேசவும் பழகவும் இனிமையானவன்.
மரத்தில் உள்ள கனிகளை யார் வேண்டுமானாலும் சுவைக்கலாம். ஆனால் அந்த மரத்தின் வேர் முதல் அனைத்தும் எனக்கே உரியது என்ற எண்ணம் வர்ஷா மனதில் துளிர்விட்டது.
சமீபத்திய திருமணம் ஒன்றில் துஷ்யந்த் பட்டு வேட்டி சட்டை அணிந்து கம்பீரமாக எல்லா வேலையும் சாதாரணமாக இழுத்துப் போட்டுச் செய்தான். அவன் சிரிக்கையில் கன்னக்குழி, சிறிய கண்கள் என அவனைப் பார்த்துப் பார்த்து ரசித்தாள் வர்ஷா.
“இவன் பேர் துஷ்யந்த் உன் காலேஜ் தான். நமக்கு உறவுதான்” எனச் சுந்தரி அறிமுகம் செய்து வைத்தார்.
“ஹாய் வர்ஷா என்ன குரூப்? எந்த வருஷம்?” எனப் புன்னகையுடன் கேட்டவன் “நான் உன்னைப் பார்த்ததில்ல சாரி” என்றான்.
கடைசி வார்த்தைகள் சற்று ஏமாற்றத்தைத் தந்தாலும் வர்ஷா சமாளித்தவள் “ நானும் உன்னை பார்த்ததில்லை” என்றாள்.
வர்ஷா துஷ்யந்தை கண்டதும் சகுந்தலையைப் போல உயிருக்கு உயிராகக் காதலிக்கத் தொடங்கினாள். தினம் தினம் கல்லூரியில் அவனைக் கண்டு ரசித்தாள். அவனும் அவளிடம் சகஜமாகப் பேசினான்.
அவனிடம் தன் காதலை வெளிப்படுத்தவில்லை. அவளுள் சொல்ல முடியாதொரு அச்சம். நிராகரிப்பை ஏற்கும் மனவலிமை இல்லை. இரண்டு வருடங்கள் படிப்பில் கவனம் செலுத்தினாள்.
“வர்ஷா சீக்கிரமா பிரபோஸ் செய் இல்ல துஷ்யந்தை வேற எவளாவது லவுடிக்க போறா” எனப் பைரவி சொல்ல
“எனக்கும் அந்த பயம் இருக்கு பைரவி. ஆனா ..”வர்ஷா தயங்க
“உன்னை ரிஜெகட் பண்ண ரீசனே இல்ல வர்ஷா .. அழகு அறிவு அந்தஸ்து எல்லாம் உன்கிட்ட இருக்கு. தைரியமா உன் காதலை துஷ்யந்த்கிட்ட சொல்லு” எனச் சிந்து இடையே சிந்துப் பாடினாள்.
சரி என்றாலும் அவள் மனதைவிட்டு தயக்கம் அகலவில்லை.
அதற்காகச் சிந்துவும் பைரவியும் சிலபல வேலைகளைச் செய்தனர். தற்செயலாக பேசுவதைப் போல துஷ்யந்த் காதில் விழுமாறு சிந்து பைரவி வர்ஷாவைப் பற்றிப் பாராட்டிப் பேசினர். சைக்கிள் கேப்பில் எல்லாம் பந்தை வீசினர்.
பின்பு துஷ்யந்த் முகத்தை ஆராய அவன் கண்கள் ஆர்வமுடன் வர்ஷாவை தேடிப் புன்னகைத்தன. துஷ்யந்த் வர்ஷாவிடம் இயல்பாகப் பழகினான்.
மூன்றாம் வருடம் படித்துக் கொண்டிருந்தனர். வர்ஷா பிப்ரவரி 14 காதலர் தினமன்று தன் காதலைச் சொல்லத் திட்டமிட்டாள். சிந்துவும் பைரவியும் அவளுக்காகக் காதல் கவிதைகள் எப்படிப் பேச வேண்டும் என்றெல்லாம் யோசனைகளைக் கூறி அவளை தயார்ப்படுத்தினர்.
வர்ஷா தன்னை மிகவும் அழகாக அலங்கரித்துக் கொண்டாள். அன்று கல்லூரியே விழாக் கோலம் பூண்டிருந்தது. மாணவர் இதயங்கள் முழுவதும் காதல் பிரவாகமாய் ஓடிப் பாய்ந்தது.
வர்ஷா முன்னே நடக்க சிந்து பைரவி பின் தொடர்ந்தனர். வர்ஷா கண்கள் துஷ்யந்தை தேடின.
துஷ்யந்த் தடதடவென ஓடி வந்து அவள் முன்னே நின்றான். ”ஐ லவ் யூ” எனச் சொல்லி ஒரு காலில் மண்டியிட்டு அமர்ந்து புன்னகையுடன் அழகான ரோஜாவை அவளிடம் நீட்டினான்.
வர்ஷா மகிழ்ச்சியில் இதயம் துடிக்க மறுத்தது. சிந்து பைரவிக்கும் நிம்மதியாக இருந்தது.
ரோஜாவைக் கையில் வாங்கி ஆனந்தமும் வெட்கமும் கலக்க அவனை அதிசயித்துப் பார்த்தாள் வர்ஷா. ஆயிரம் சொற்கள் பேச நினைத்தாலும் ஒரு சொல்லும் உதட்டைவிட்டு வராமல் அடம்பிடித்தது.
“ ஹே வர்ஷா என்ன அப்படிப் பார்க்கிற?” என முகம் முழுவதும் புன்னகையாய் துஷ்யந்த் வினவ
“துஷ்யந்த்” குரல் அடைத்தது.
“என் பெர்பாமன்ஸ் எப்படி?” என நகைத்தான்.
வர்ஷா புரியாமல் விழிக்க
“நான் வெண்பாவை காதலிக்கிறேன். இன்னிக்கு என் காதலை அவகிட்ட சொல்லப் போறேன். அதான் ஒரு சின்ன ரிகர்சல்” என வெட்கம் பூசிய முகத்துடன் பேசினான்.
வர்ஷா இதயம் சுக்கு நூறாய் உடைந்தது. அவள் கையிலிருந்த ரோஜாவை எடுத்துக் கொண்டான். அவளின் உயிரை வேரோடு பறிப்பது போல வேதனை அடைந்தாள்.
“உன் நாடகத்துக்கு நானா கதாபாத்திரம்?” எனக் கேட்கத் துடித்த அதரங்கள் ஏனோ அடங்கின. யார் முன்னிலும் கண்ணீர் சிந்தாத வர்ஷாவின் கயல்விழிகளில் முதல் முறையாகச் சற்றே நீர் துளிர்த்தது.
சூழலை எண்ணி தன்னை சமன்படுத்திக் கொண்டாள்.
“வெண்பா என் காதலை எத்துப்பா தானே?” துஷ்யந்த் தயக்கமாக வெண்பாவின் பக்கமே பார்த்தபடி வர்ஷாவிடம் கேட்டான்.
வர்ஷா இன்னமும் கையில் ரோஜாவைப் பிடித்துக் கொண்டிருப்பதைப் போலவே நின்றிருந்தாள். அவளாள் துஷ்யந்த் சொன்ன சொற்களை முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அன்றைக்குப் பின் துஷ்யந்தை அவள் கண்டுப் பேசவில்லை. கல்லூரியில் வர்ஷாவின் மாற்றத்தை துஷ்யந்த் கவனிக்கவில்லை.
துஷ்யந்தை மனதிலிருந்து துடைத்துப் போட முயன்று தோற்றுக் கொண்டிருந்தாள் வர்ஷா.
கல்லூரி வாழ்க்கை முடியும் வரை முள்ளில் நிற்பது போலக் காலத்தைக் கடந்தாள்.
வர்ஷா சிந்து மற்றும் பைரவி மூவரும் படிப்பை முடித்துவிட்டனர். தற்பொழுது மோகனின் நிறுவனத்தில் பணி புரிகின்றனர். இதுவும் ஒரு வகையான கண்துடைப்புதான்.
வர்ஷா படிப்பை முடித்ததும் மோகனின் பல பிசினசை ஏற்று நடத்தினாள். அவள் தான் ஒரே வாரிசு. அத்தனையும் அவள் தெரிந்து கொண்டாக வேண்டும். மோகனுக்குப் பிறகு அனைத்தும் இவளையே வந்தடையும்.
அந்த காலகட்டத்தில் மோகன் வேறொரு திருமணம் செய்து கொள்வார் எனச் சுந்தரி நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஏன் மோகன் கூட சுந்தரியின் மனநிலையில்தான் இருந்தார். தனக்கு அனைத்துமாய் சுந்தரி இருக்கிறாள். சுந்தரி மீது மோகனுக்கு காதலும் மையலும் காட்டாற்றாய் ஓடியது.
மோகனின் நிறுவனத்தில் சிந்து பைரவிக்கு வேலை கிடைக்குமாறு சுந்தரி ஏற்பாடு செய்ய முயன்றார். ஆனால் மோகன் அதற்கு சம்மதிக்கவில்லை.
“அது எப்படி உடனே வேலை கொடுக்க முடியும் .. சான்சே இல்லை” என்றுவிட்டார் மோகன்.
சுந்தரி மற்றவரை எப்படி வேலைக்குத் தேர்ந்தெடுப்பார்கள் அதே வழியில் சிந்து பைரவியை விட்டுப் பார்த்தார். இருவரும் படிப்பில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்கள்.
அதனால் நேர்காணல் குரூப் டிஸ்கஷன் மற்றும் இறுதிச் சுற்று என மூன்றிலும் தேர்ச்சி பெற்றனர்.
மோகனுக்கு இவர்கள்தான் சுந்தரி குறிப்பிட்ட பெண்கள் எனத் தெரியாது. அதனால் வேலையில் இருவரும் சேர்ந்துவிட்டனர்.
சுந்தரி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என வர்ஷா பாதுகாப்பு அதோடு அலுவலகத்தில் எவரேனும் கருப்பாடாக இருந்தால் அவர்களையும் கண்டறிய சிந்து பைரவியைப் பயன்படுத்தினார்.
மோகனின் அலுவலகத்தில் வர்ஷாவின் அலுவலக ஆலோசகர் வேலை சிந்துவுக்கு. அலுவலக காரியதரிசி பைரவி எனப் புதிது புதிதாகப் பொறுப்புகளைச் சுந்தரி உருவாக்கினார். இருவரில் எவரேனும் ஒருவர் வர்ஷா உடன் எப்பொழுதும் இருக்க வேண்டும்.
வேலை புதிது அதனால் வர்ஷா தனக்கு இரண்டு ஆட்கள் தேவை என மோகனிடம் சொல்ல. அவரும் சம்மதித்தார்.
வர்ஷா பங்களாவினுள் காலடி எடுத்து வைத்த அடுத்த நொடி அவர்கள் சென்றுவிட வேண்டும். இது எழுதப்படாத விதி. இருவருக்கும் பங்களாவில் அனுமதி இல்லை.
சுந்தரி அல்லது வர்ஷா பிறந்தநாள் பார்ட்டி அப்படி ஏதேனும் பார்ட்டி இருந்து அழைத்தால் இருவரும் வரவேண்டும்.
ஆனால் சுந்தரி உடல்நிலைக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடன் சிந்து பைரவியைப் பங்களாவின் அவுட் அவுசில் தங்க சொல்லிவிட்டார். பங்களாவில் இருவரும் சுதந்திரமாக வந்து போகலாம் என்றார். இருவரும் சுந்தரி சொற்பேச்சை தட்டாது பின்பற்றினார்.
துளிகள் தெறிக்கும் …