• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீராப்பகை தீர்வானது - 19.

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,259
318
113
Chennai

பகுதி – 19.

வைஷாலி தன் அறையில் அமர்ந்து தீவிரமாக எதையோ யோசித்துக் கொண்டே இருந்தாள். அவளுக்கு அப்பொழுதும் முத்துப்பாண்டி அவளை அங்கேயே விட்டுச் சென்ற ரகசியம் மட்டும் புரியவே இல்லை.

அதைத் தெரிந்து கொள்ளவில்லை என்றால் தலையே வெடித்துவிடும் என்ற நிலை. ஆனால் ஒரு வாரமாக சர்வஜித் சென்னையில் இல்லை என்பதால், உடனடியாக அவனிடம் பேசி, விஷயம் என்ன என அவளால் தெரிந்துகொள்ள முடியவில்லை. அவனிடம் கேட்டால் அவன் விஷயத்தைச் சொல்வான் என்ற நம்பிக்கையும் அவளுக்கு சுத்தமாக இல்லைதான்.

முத்துப்பாண்டி கொடுத்த தவணையில் ஒரு மாதம் கடந்திருக்க, இன்னும் இரண்டு மாதங்கள்தான் கையில் இருந்தது. ‘அதற்குப் பிறகு என்ன ஆகும்?’ என யோசிக்க கூட அவளுக்குப் பிடிக்கவில்லை.

ஒரு மாதிரி மன உளைச்சலில் இருந்தாள். அதை யாரிடமும் அவளால் சொல்லவும் முடியவில்லை. ரூபிக்கு இப்பொழுது ஒரு மாதிரி விஷயம் தெரியும் என்றாலும் அவளால் மட்டும் என்ன செய்துவிட முடியும்?

முத்துப்பாண்டியின் கரத்தை சர்வஜித் உடைத்த பிறகு வெறிபிடித்த மனநிலையில்தான் அவன் இருந்தான். எப்பொழுது சர்வஜித்திடம் விடுத்த சவாலில் ஜெயிப்போம், அவனை எப்பொழுது இங்கே இருந்து விரட்டி அடிப்போம் என காத்துக் கொண்டிருந்தான்.

சர்வஜித் வைஷாலியை மூன்று மாதங்களுக்குப் பிறகு ஊருக்கே அனுப்பி வைத்து விடுகிறேன் எனச் சொல்லியிருக்க, தான் சவாலில் ஜெயிப்பது உறுதி என எண்ணினான். நிலைமை இப்படி இருக்க, அன்று சர்வஜித் அலுவலகம் வந்திருந்தான்.

அவளால் காத்துக்கொண்டிருக்க முடியாமல் போகவே, உடனே அவனைக் காணச் சென்றாள். அவள் அவனது அறைக்கதவை தட்டிக்கொண்டு அங்கே வந்து நிற்க, சர்வஜித் ஹரீஷைப் பார்க்க, உடனே அவன் அங்கிருந்து வெளியேறினான்.

அவளைப் பார்த்தவாறே சிகரெட்டை எடுத்து அவன் பற்ற வைத்துக் கொண்டான். ஆழ்ந்து அதைப் புகைக்க, “எனக்கு உங்ககிட்டே கொஞ்சம் பேசணும்” அவள் சொல்லவே, அவன் சலனமே இன்றி அவளைப் பார்த்தான்.

‘இவ்வளவு கஷ்டப்படுத்தியும் இன்னும் என்கிட்டே பேச நினைக்கறாளா? ஆச்சரியம்தான்...’ மனதுக்குள் எண்ணிக் கொண்டான். ஆனால் அதை வெளியில் அவன் காட்டிக் கொள்ளவில்லை.

“நீங்க முத்துப்பாண்டிகிட்டே என்ன பேசினீங்க? என்னைப்பற்றியா? அப்படி என்ன பேசினீங்க? என்னை எப்படி இங்கேயே விட்டுப் போக சம்மதித்தான்? நீங்க அவன் கையை உடைச்சு இருக்கீங்க... உங்களை அவங்க சும்மா விட மாட்டாங்க” கொஞ்சம் பயந்தபடியே சொன்னாள்.

“உன் முன்னாடி நான் இன்னும் முழுசா உட்கார்ந்துதான் இருக்கேன். என் தலையில்... இல்ல, என் உடம்பில் இருக்கும் ஒரு சின்ன ரோமத்தைக் கூட அவனால் தொடக்கூட முடியாது” அவன் குரலில் அத்தனை உறுதி.

“ஓகே... ஓகே... அப்போ என்ன பேசினீங்க?” அவள் கேட்க, ஆழ்ந்து புகைத்தவன், புகையை நிதானமாகவே வெளியேற்றினான்.

“அது ரகசியம்... எதுவும் சொல்றதுக்கு இல்லை. நீ போகலாம்...” என்றான்.

“அப்போ... அப்போ... என்னை அங்கேயே திருப்பி அனுப்பிடுவீங்களா?” அதைக் கேட்கையிலே தொண்டையை அடைத்தது.

அவள் கேட்டதற்கு அவன் அசையாமல் போக, “நான் இப்படில்லாம் யார்கிட்டேயும் கேட்டதே இல்லை. உங்ககிட்டேத்தான் நான் இப்படி...? ஏன் இப்படி இருக்கேன்னும் எனக்குத் தெரியலை” நிஜத்தில் கொஞ்சம் அவமானமாக கூட இருந்தது.

அவன் யார் அவளுக்கு? அவனிடம்போய் தன்னைக் காப்பாற்றச் சொல்லி கெஞ்சிக் கொண்டிருக்கிறாள். அவன் முன்னால் அழுதுவிடக் கூடாது என அவள் தன்னைக் கட்டுப்படுத்தப் போராடி தோற்றுப் போனாள். இறுதியில் அவள் கன்னத்தில் கண்ணீர் வழிந்தே விட்டது.

அவனிடம் தன் மனதை வெளிப்படுத்தவும் முடியாமல், தன்னைக் கட்டுப்படுத்தவும் முடியாமல் தனக்குள் போராடினாள். அவளது அந்த போராட்டம் அவனுக்கும் புரிய, மனதை என்னவோ செய்தது. அந்த தன் மனநிலை அவனுக்குப் பிடிக்காமல் போக, வெகு நிதானமாக அவளைப் பார்த்து, “கெட்... அவுட்...” என்றான்.

“ஏன்...? ஏன்...? நீங்க ஏன் இப்படி இருக்கறீங்க?” ஆற்றாமையாகக் கேட்டாள். மனம் அவன் பக்கமே நின்று சாதிக்க, அவன் துரும்பைக் கூட அசைக்க மாட்டேன் எனச் சொல்ல, அவளும் என்ன செய்ய?

“நான் இப்படித்தான்... உனக்கு உதவி செய்யணும்னு எனக்கு எந்த அவசியமும் கிடையாது” முகத்தில் அடித்தாற்போல் சொன்னான். அதற்கு மேலே அவன் முன்னால் நிற்க தன்மானம் இடம் கொடுக்காமல் போகவே, வேகமாக அங்கே இருந்து வெளியேறினாள்.

வைஷாலியோடு பேசிக் கொண்டிருந்தாலும், சர்வஜித்தின் கவனம் வைஷாலியின் அறையில் இருந்த சிசிடிவியிலேயே நிலைத்து இருந்தது. அங்கே ஹரீஷ் ரூபியோடு எதையோ பேச முயல்வதும், அதற்கு அவள் கோபமாக பதில் கொடுப்பதும் புரிய, புருவம் நெரித்தான்.

இவள் இங்கே இவனிடம் பேசிக் கொண்டிருக்க, ஹரீஷ் ரூபியைப் பார்க்கப் போனான். வைஷாலி சர்வஜித்தைப் பார்க்கப் போயிருக்க, ‘அங்கே என்ன ஆகுமோ? மேலே என்ன இழுத்து விட்டுக்கொள்ளப் போகிறாளோ?’ என எண்ணியவாறு நகத்தைக் கடித்துக் கொண்டு இருந்தாள் ரூபி.

அவள் தன் யோசனையிலேயே இருக்க, அங்கே ஹரீஷ் வந்ததை அவள் பார்க்கவே இல்லை. “ரூபி... ரூபி...” இரண்டு மூன்றுமுறை அவளது பயரைச் சொல்லி அழைத்த பிறகே அவனைப் பார்த்தாள்.

“என்ன? நீங்க எப்போ வந்தீங்க? இப்போ எதுக்காக இங்கே வந்திருக்கீங்க? எனக்கு உங்ககிட்டே பேச எதுவுமே இல்லை. இங்கே இருந்து போய்டுங்க. நீங்க இப்போ போகலைன்னா, நான் சார் கிட்டே கம்ப்ளெயின்ட் பண்ண வேண்டி இருக்கும்” படபடவெனச் சொன்னாள்.

அவனைக் காணாத வரைக்கும் எப்படியோ? அவனைக் கண்ட பிறகு மனம் ஒரு மாதிரி அலைபாய்ந்து கொண்டிருந்தது. அப்படி இருக்கையில் அவன் எதையாவது சொல்லிவிட்டு சென்றுவிட்டால் மனம் இன்னும் ரணப்படுமே என்ற கவலை அவளுக்கு.

“ஒரு ரெண்டே நிமிஷம்... நான் பேசிட்டு போய்டறேன்” அவன் இப்படிச் சொல்ல, அது இன்னும் அவளை கோபப்படுத்தியது.

“எனக்கு எதுவும் கேட்க வேண்டாம்” தன் காதைப் பொத்திக் கொண்டாள்.

“எனக்கு உன்கிட்டே மன்னிப்பு கேட்கணும். என் அம்மா ஆறுமாசமா உன்கிட்டே தொடர்ந்து பேசினது எனக்குத் தெரியாது. உன் மனசில் நம்பிக்கையை விதைச்சது எனக்கு தெரியாது. உன் மனசுக்குள் ஆசையை, எதிர்பார்ப்பை வளர்த்தது எனக்கு சுத்தமாவே தெரியாது” அவன் சொல்லிக் கொண்டே போக, கொதித்துப் போனாள்.

“ஷட் அப்... போய்டுங்க... இங்கே இருந்து போய்டுங்க... எனக்கு எதையும் கேட்கவும் வேண்டாம், தெரிஞ்சுக்கவும் வேண்டாம்” கிட்டத்தட்ட கத்தினாள். அந்த நேரம் அவளது குரலைக் கேட்டு அங்கே ஓடி வந்தாள் வைஷாலி.

“ரூபி... என்னடி ஆச்சு? சார்... என்ன? எதுக்காக அவ இப்படிக் கோபப்பட்டு கத்தறா?” அவன்தான் இதற்குக் காரணமாக இருக்கும் எனப் புரியவே கேட்டாள்.

“சாரி ரூபி... நான் போய்டறேன்...” என்றவன் வைஷாலியின் கேள்விக்கு எந்த பதிலையும் சொல்லவில்லை.

அவன் செல்லவே, ரூபி வாய்விட்டே கதறியவளின் தேகம் மொத்தமாக நடுங்கிக் கொண்டு இருந்தது. “ரூபி... என்னடி ஆச்சு? எதுக்கு இப்படி அழற?” தோழியை தோளோடு அணைத்துக் கொண்டாள்.

வெளியே சொல்ல முடியாத துக்கங்கள் எல்லாம் வெடித்து வெளியேற, அவள் தோள் சாய்ந்து அழுது தீர்த்தாள். அவன் தன் பலவீனத்தை தொட்டுவிட்ட உணர்வு. ஆறிவிட்ட ரணத்தில் சூடான கத்தியை விட்டுத் திருகினால் எப்படி வலிக்குமோ அப்படி ஒரு வலியை உணர்ந்தாள்.

அவளை சில பல நிமிடங்கள் அழ விட்டவள், “ரூபி... உங்களுக்குள்ளே என்னதான்டி நடக்குது? என்கிட்டே சொன்னால்தானே தெரியும்? அழுதது போதும். என்னன்னு சொல்லு...” அவளைப் பிடித்து உலுக்கினாள்.

இதற்கு மேலே அவளால் விஷயத்தை தனக்குள் வைத்திருக்க முடியாமல், தோழியிடம் சொல்லி அழுதாள். அதைக் கேட்ட வைஷாலி, “என்னடி சொல்ற? இது எப்போ நடந்தது? இத்தனை வருஷமா நீ என்கிட்டே சொன்னதே இல்லையே?” அவளிடம் கேட்டாள்.

“முதல் வருஷம் செமஸ்டர் லீவ்ல நடந்தது இது. அதனால் உனக்கு தெரியாமலே போய்டுச்சு. அதோட... அதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா நானே மறந்துட்டேன்னு நினைச்சேன். அதை கடந்துட்டேன்னு நம்பினேன்.

“ஆனா எப்போ அவரைப் பார்த்தேனோ, அந்த நிமிஷம் எனக்குள்ளே என்னவோ மறுபடியும் உடைஞ்ச மாதிரி இருந்தது. அவரை என் கண் முன்னாடி பார்க்கும்போது அப்படியே பலவீனமா ஆயிடறேன். என் தோல்வி, வலி எல்லாம் என் கண் முன்னாடி தெரியுது” என்றவள் கலங்கித் தவிக்க, வைஷாலியால் அவளைத் தேற்றவே முடியவில்லை.

“ஓ... அதனால்தான் அவரைப் பார்த்த அன்னையில் இருந்து அவர்மேலே எரிஞ்சு விழறியா? இப்போ அவர் என்ன சொல்ல வர்றான்னு கேட்டியா?” தயக்கமாகவே கேட்டாள்.

“எனக்கு எதையும் கேட்க வேண்டாம்... ஆனா... என்கிட்டே மன்னிப்பு கேட்கறார். அந்த மன்னிப்பு யாருக்கு வேணும்? எனக்கு இப்படி இருக்கறதே ஒரு மாதிரி அவமானமா, அசிங்கமா இருக்கு. என் பலவீனத்தை வெளியே காட்டறது எனக்குப் பிடிக்கலை” அவள் சொல்லச் சொல்ல, தன் நிலையும் அதற்குக் குறைந்தது இல்லை என்றே தோன்றியது.

“ரூபி... சொல்றேன்னு தப்பா நினைக்காதே. விடாமல் உன்னைச் சுற்றி வந்து பேச நினைக்கறார். அட்லீஸ்ட்... அவர் என்ன நினைக்கறார்? என்ன பேசறார் என்பதையாவது நீ கேட்கலாம். அதற்குப் பிறகு நீ என்ன முடிவை எடுக்கணுமோ எடு” அவள் இவ்வளவு துன்பப்படுகையில் அவன்மீதான நினைப்பு இன்னும் அவளுக்குள் இருப்பது தெரிகிறதே.

எனவே வீண் பிடிவாதத்தில் அவள் எதையும் இழந்துவிட வேண்டாமே என்று இருந்தது. ஆனால் அவளோ, “எனக்கு எதையும் கேட்க வேண்டாம் ஷாலு. அவர் என்னைப்பார்த்து சிரிக்கற மாதிரி இருக்கு. எனக்கு அது வேண்டாம்...” ஒரு மாதிரி முறுக்கிக் கொண்டாள்.

அவன் வேண்டும், ஆனால் வேண்டாம் என்னும் நிலை. மீண்டும் ஒரு முறை எதிர்பார்த்து ஏமாந்துபோக மனதில் தெம்பில்லை. ஒருவேளை அவன் தன்னிடம் காதலைச் சொல்ல வேண்டும் என அவள் அதைத்தான் அவள் எதிர்பார்த்ததாளோ? அது இல்லாமல், அவன் மன்னிப்பை கேட்டதில் அவளுக்கு ஏமாற்றமோ? அது அவளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

“சரி விடு... இப்படி இருக்காதே... வா...” என அவளை அழைத்துக் கொண்டு டீ குடிக்கச் சென்றாள். இருவரும் அமர்ந்து டீயைக் குடித்து முடிக்கவே, திடுமென ஒரு அலாரம் ஒலித்து அவர்களைக் கலைத்தது.

“ரூபி... ஏதோ ஆக்சிடென்ட்... நீ பேக்கிங் போ... நான் ப்ரொடக்ஷன் பக்கம் போறேன்...” என்றவள், அவசரமாக கதவைத் திறந்து அங்கே ஓடினாள்.

அவள் உள்ளே செல்ல முயல்கையிலேயே சிலர் வேகமாக உள்ளே இருந்து வெளியே ஓடிவந்து கொண்டிருந்தார்கள்.

“என்ன ஆச்சு?” வந்தவர்களிடம் கேட்டாள்.

“மேம் பேரல் கிரேக் ஆயிடுச்சு... ஆசிட் லீக் ஆகுது. அது எப்போ வேணா வெடிக்கலாம்” அவன் சொல்ல, தயாரிப்பில் எங்கேயோ பிழை ஏற்பட்டிருப்பது புரிந்தது. மொத்த யூனிட்டையும் உடனே நிறுத்தவில்லை என்றால், அடுத்தடுத்து ஆபத்து வரும் எனப் புரிய, வேகமாக செயல்பட முயன்றாள்.
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,259
318
113
Chennai
“எல்லோரையும் வெளியே போகச் சொல்லுங்க... ஷட்டவுன் பண்ணியாகணும்” என்றவள் உள்ளே செல்லவும், அந்த இயந்திரத்தின் ஓட்டம் சர்வஜித்தால் நிறுத்தப் படுவதற்கும் சரியாக இருந்தது. அவன் பார்த்துக்கொண்டு இருக்கையிலேயே விரிசல் விட்டுருந்த பேரல் வெடிக்கத் தயாரானது.

அந்த சூடான கெமிக்கல் அவள்மேல் கொட்டினால் மொத்தமாக வெந்து, அதில் அவள் கரைந்துபோகும் அபாயம் இருக்கவே, “ஏய்...” மேலே இருந்து அலறினான். உடனே செயல்பட்டாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தான்.

அருகே இருந்த ஒரு பேரல் நிறைய பெயிண்ட் இருப்பதைப் பார்த்தவன், மொத்தமாக அதை அவள்மேல் கவிழ்த்து இருந்தான். கூடவே இப்படி ஆபத்துக் காலங்களில் அதைத் தணிக்க செய்ய வேண்டியதை ஹரீஷ் வேகமாகச் செய்ய, ஒரு மிகப்பெரிய வெடி விபத்து அங்கே தடுக்கப் பட்டது.

திடுமென தன்மேல் விழுந்த பெயின்ட் குளியலை அவள் நிச்சயம் எதிர்பார்த்திருக்கவே இல்லை. ஒரு மாதிரி மூச்சு முட்டிப் போனது. நிற்க முடியாமல் வழுக்கி அவள் விழுந்துவிட, “ஏய்... அறிவில்ல... இப்படி அபாய மணி ஒலிக்குதுன்னா உயிரைக் காப்பாத்திட்டு ஓடுவதை விட்டு, இப்படி இங்கே வந்து உயிரை விடப் பார்த்திருக்க?” சர்வஜித் மேலே இருந்தே கத்தினான்.

ஒரு உயிர் போவதோ, அதை எடுப்பதோ கூட அவனுக்கு வெகு சுலபம்தான். ஆனால் இது... ஒரு நொடியில் திணறிப் போனான். சில நொடி தாமதம் என்றாலும் அவள் உயிர் நிச்சயம் போயிருக்கும் என்பது திண்ணம்.

அவன் வேகமாக கீழே இறங்கி வர, “எனக்கு உயிர் வாழணும்னு ஆசை இல்லை” பெயிண்டை தன் முகத்தில் இருந்து வழித்தவாறு சொன்னாள்.

“அப்படி சாகணும்ன்னா வேறே எங்கேயாவது போய் சாவு... யூஸ்லெஸ் க்ரீச்சர். ஹரீஷ்... என்ன செய்யணுமோ செய்” என்றவன் விபத்து எதனால் என்பதை ஆராயச் சென்றான். அங்கே விபத்துகால நடவடிக்கைகள் அனைத்தும் முறையாக இருக்கவே, வேறு எந்தவிதமான அசம்பாவிதமும் நேரவில்லை.

இப்பொழுது அவள் உடனடியாக குளித்து உடை மாற்றியாக வேண்டும். அதுவும் உச்சந்தலைமுதல், உள்ளங்கால் வரைக்கும் பெயின்ட் ஊறிப் போயிருக்க, உடனடியாக செயல்படவில்லை என்றால் கடினம்தான்.

அங்கே தொழிலாளர்கள் உபயோகிக்க கழிவறை வசதி உண்டே தவிர, குளிக்கும் வசதி எல்லாம் கிடையாதே. சர்வஜித்தின் அறையில்தான் அந்த வசதி உண்டு என்பதால், அங்கே இருந்த ட்ராலியில் அவளை அமரச் சொன்ன ஹரீஸ், சர்வஜித்தின் அறைக்கு அவளை அழைத்துச் சென்றான்.

“நீங்க குளிங்க... இந்த பெயின்ட் ரிமூவல் நான் எடுத்துட்டு வர்றேன். உங்க ஃப்ரண்டுகிட்டே சொல்லி ட்ரஸ் எடுத்துட்டு வரச் சொல்றேன். முகம், கண் எல்லாம் கவனம்... இல்லன்னா நாம ஹாஸ்பிடல் கூட போய்டலாம்” வேகமாகச் சொன்னான்.

“சார்... இது பெயின்ட் தானே... ஆசிட் இல்லையே... நீங்க போங்க... தேங்க்ஸ் சார்...” என்றாள்.

“நீங்க குளிங்க...” என்றவன் ரூபியை தேடிச் சென்றான். அவளிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு, வைஷாலிக்கு வேறு உடை கொண்டு வரச் சொன்னவன், அவளை அனுப்பிவிட்டு சர்வஜித்தை தேடிச் சென்றான். தொழிலாளர்கள் எல்லாம் வெளியே இருக்க, அவர்களிடம் சென்று விசாரித்துக் கொண்டிருந்தான். அங்கே இருந்தவர்களை எல்லாம் அவன் ஒரு வழி செய்து கொண்டிருக்க, அனைவருக்கும் விழி பிதுங்கியது.

அங்கே வேலை செய்யும் அனைவருமே எப்பொழுதும் எக்ஸ்ட்ரா கேர்’ருடனே இருப்பார்கள். அப்படி இருக்கையில்... சர்வஜித் இப்படி வந்து சாடினால் அவர்களும் என்னதான் செய்வார்கள்? எப்படியும் வெளியே இருந்து வந்து யாராவது எதையாவது செய்திருக்க வாய்ப்பில்லை என அவனுக்கு நன்றாகவே தெரியும்.

ஏனென்றால் அவனது கண்காணிப்பு விஷயங்கள் அத்தனை கடுமையானது என அவனுக்கு அபார நம்பிக்கை இருந்தது. ஆனாலும் தன் ஆட்களிடம் அழைத்து கேட்டும், சிசிடிவியை கண்காணிக்கும் ஆட்களை உடனே வரவழைத்தும் பேசினான்.

அவன் இருந்த வேகத்தையும், நிலையையும் பார்த்த ஹரீஷுக்கு கொஞ்சம் பயமாகவே இருந்தது. நெருப்பாக தகிக்கும் ஒரு சூரியனை நெருங்கிச் சென்று தணிக்க முடியுமா என்ன? சர்வஜித் அப்பொழுது அப்படித்தான் இருந்தான்.

“சார்... கொஞ்சம்...” அவனது வாட்ச் அலறிக் கொண்டிருக்க, அவனைத் தணிக்க முயன்றான்.

“என்ன?” எனத் திரும்பி அவனைக் கேட்ட அந்த வார்த்தயில் வாயை இருக்க மூடிக் கொண்டான்.

‘யூ கண்டினியூ...’ என மனதுக்குள் சொல்லிக்கொண்டு விலகி நின்றான்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம்... விசாரணையை நடத்தி, இது சதி வேலை இல்லை எனத் தெரிந்த பிறகே சற்று நிதானத்துக்கு வந்தான்.

அதன் பிறகே வைஷாலியைப் பற்றி விசாரித்தான். ஹரீஷ் அவளை குளிக்க அனுப்பி இருப்பதைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்க, அந்த நேரம் வேறு உடை மாற்றிக் கொண்டு அங்கே வந்தாள் வைஷாலி.

அவளது உடையைப் பார்த்த இரு ஆண்களுமே அதிர்ந்து போனார்கள். அவள் தங்களை நோக்கி வரத் துவங்க, சர்வஜித் தன் மேல் கோட்டை கழட்டியவாறே அவளை நோக்கி ஓடத் துவங்கி இருந்தான்.

“மேம் இங்கே வராதீங்க...” ஹரீஷ் கத்தியதை எல்லாம் அவள் கண்டுகொள்ளவே இல்லை. மாறாக சர்வஜித் தன்னை நோக்கி ஓடி வந்த விதம், எதுவோ சரியில்லை என அவளுக்குச் சொன்னது.

‘ஒரு வேளை இந்த ட்ரஸ்ஸை எடுத்துப் போட்டதுக்கா?’ அவள் குழப்பமான மனநிலையோடு அவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தாள்.

“இடியட்... ஸ்டே தேர்...” சர்வஜித் கத்த, இப்பொழுது நின்றுவிட்டாலும், அந்த பேராபத்தை அவர்கள் உணர்ந்தார்கள்.

“சார் அவங்க வெயில்ல நிக்கறாங்க...” ஹரீஷ் சொல்ல,

“கவர் அஸ்...” என்றவன், மறு நொடி அவள் அணிந்திருந்த உடையைக் கிழித்து எறிந்தான். மேலாடை மட்டுமே அணிந்து இருந்தவளுக்கு அவனது அந்த செய்கை பேரதிர்வைக் கொடுக்க, “சார்... நோ...” அந்த ஆடையை அகற்ற விடாமல் பிடிவாதமாக பிடித்து வைக்க முயன்றாள்.

அதற்குள் அவர்களைச் சுற்றிலும் பலர் சூழ்ந்துகொள்ள, அங்கே இருந்த தொழிலாளர்களை வேறு பக்கம் போகச் சொன்னார்கள். அவள் ஆடையை விலக்க விட மாட்டேன் எனப் போராட, அவனோ அதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை.

தான் செய்ய நினைத்ததை செய்துவிட்டே அவன் ஓய்ந்தான். தனது மேல் கோட்டை அவளைச் சுற்றிலும் போர்த்தியவன், கிழித்த உடையை ஹரீஷிடம் கொடுக்க, அதை வாங்கிக் கொண்டு அவன் உள்ளே ஓடினான்.

அத்தனைபேர் முன்னால் அவன் தன் ஆடையைக் கிழித்து எறிந்தால் அவள் எப்படி உணர்வாள் என வேண்டாம்? அதுவும் சுற்றிலும் அத்தனைபேர் இருக்க, அவள் கூனிக் குறுகிப் போனாள்.

“இடியட் அந்த...” சர்வஜித் அவளிடம் கத்திக் கொண்டிருக்க, அவளோ அவனை பளார் என அறைந்து இருந்தாள். அதுவும் ஒன்றல்ல, இரண்டல்ல... பல அடிகள் அடித்தவள், அவனைத் தள்ளி விட்டுவிட்டு அவன் அறைக்குள் சென்று மறைந்தாள்.

அவள் அப்படி அடித்ததை தொழிலாளர்கள், வேலை செய்யும் பெண்மணிகள், துப்புரவு ஆட்கள் என அனைவரும் பார்த்திருக்க, கொதித்துப் போனான். அவளை ஏதாவது செய்தே ஆக வேண்டும் என வெறியானான்.

“சார்... சாரி சார்... என்னோட கேர்லஸ் தான்...” ஹரீஷ் மன்னிப்பை வேண்ட, அவனோ தன் அறையை நோக்கி நடந்தான். அதற்குள் அங்கே வந்திருந்த ரூபி அவளிடம் உடையைக் கொடுக்க, அதை வாங்கி அணிந்தவள், உடனே தன் வீட்டுக்கு கிளம்பிவிட்டாள்.

அங்கே நடந்தது எதுவும் தெரியாத ரூபி, குழம்பிப்போய் நின்றிருந்தாள். சர்வஜித்துக்கு ஹரீஷ் மேல் கொலைவெறியே இருந்தது. இவர்களைப் பார்த்த உடனே, ரூபி அங்கே இருந்து செல்ல முயல, அவளைத் தடுத்தான்.

“ஒரு நிமிஷம்...” அவனது கோபக் குரல் அவளைத் தேக்க, நின்று அவன் முகம் பார்த்தாள்.

“ஹரீஷ் என்ன பிரச்சனை பண்றான்?” அவளிடம் கேட்டான்.

“சார்... அது...?” அவள் ஒரு மாதிரி தடுமாற,

“கேட்ட கேள்விக்கு பதில்...” கர்ஜித்தான்.

‘ஹரீஷ் எதுவும் சொல்லாதே’ எனப் பார்வையால் கெஞ்ச அது அவளுக்கு கோபத்தைக் கொடுக்க, “எனக்கு விருப்பம் இல்லைன்னு தெரிஞ்சும் என்னை தொல்லை பண்றார். என்னை செக்ஸ் டார்ச்சர் பண்றார்...” வேண்டும் என்றே பொய் சொன்னாள்.

அவனை புயல் வேகத்தில் நெருங்கிய சர்வஜித், அவனைப் போட்டு அடித்து துவைத்துவிட்டான். ஹரீஷ் நினைத்திருந்தால் அவனைத் தடுத்திருக்க முடியும். ஆனால் அதை அவன் செய்யவில்லை. தான் செய்த தவறுக்கான தண்டனையை தான் அனுபவித்தே ஆக வேண்டும் என நின்றான்.

சர்வஜித் தன்மேல் கொலைவெறியில் இருப்பது புரிந்தது. கூடவே அவன் கொண்ட அவமானத்தை தானும் பட வேண்டும் என அவன் நினைப்பதும் புரிந்தது. எனவேதான் ரூபியிடம் அப்படி ஒரு கேள்வியை அவன் கேட்டதும், அவள் முன்னால் வைத்து தன்னை தண்டிப்பதும் என அவனுக்குப் புரிய சலனமே இன்றி அவனது அடிகளை எல்லாம் வாங்கிக் கொண்டான்.

கன்னத்தில் கண்ணுக்கு கீழாக அவன் விட்ட குத்தில், கன்னம் கீறி ரத்தம் துளிர்த்ததும், தன் முகத்திலேயே அவன் விட்ட குத்துக்களால் ஹரீஷின் முகமே ரத்தத்தில் குளித்து இருந்தது.

“ஹையோ சார் வேண்டாம்... எதுக்கு இப்படிப் போட்டு அடிக்கறீங்க? நான் பொய் சொல்லிட்டேன்... இவர் என்கிட்டே பேச மட்டும்தான் ட்ரை பண்ணார். நான்தான் இவர் மேலே இருந்த கோபத்தில் மாற்றி சொல்லிட்டேன். அவரை விட்டுடுங்க...” சர்வஜித்தை கட்டுப்படுத்த முயன்று தோற்று அலறினாள்.

அவள் அப்படி அலறிய பிறகே ஹரீஷை விட்டு அகன்றவன், “துருவ்...” குரல் கொடுக்க, வேகமாக ஒருத்தன் உள்ளே வந்தான்.

“இவனை இழுத்துட்டு போ...” அவன் கட்டளையிட, ஹரீஷ் அவனோடு செல்ல, ரூபிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

அவர்கள் பின்னாலேயே அவளும் செல்ல, அந்த துருவ் ஹரீஷை ஒரு வண்டியில் ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டான். அந்த நேரம் அங்கே இருந்த துப்புரவு வேலை செய்யும் அக்கா, அங்கே நடந்த விஷயங்களை அவளிடம் சொல்ல, அதிர்ந்துவிட்டாள்.

“என்ன? அத்தனை பேர் முன்னால் சார் அவளோட துணியை எல்லாம் கிழித்து எறிந்தாரா? அவ அவரை அடிச்சுட்டாளா?” அதைக் கேட்டு அவளுக்கு நெஞ்சே அடைத்துப் போனது. சும்மாவே சர்வஜித் மிகக் கொடூரமாக நடந்து கொள்வான்.

இப்பொழுது அவன் செய்ததற்குத்தான் அவரை அவள் அடித்தாள் என்றாலும், அத்தனைபேர் முன்னால் அவள் அவரை அடித்துவிட்டாளே. அதை சர்வஜித் அத்தனை சுலபமாக கடந்துவிடுவான் என்ற நம்பிக்கை அவளுக்கு இல்லை.

தானும் விடுப்பு எடுத்துக் கொண்டவள், ஹரீஷின் வீட்டு முகவரியையும் வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்றாள்.

பகை முடிப்பான்......
 

kumarsaranya

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 14, 2025
17
16
3
Vellkovil
வைசாலி போட்டுட்டு வந்த ட்ரஸ் சர்வாவோடதா? அந்த ட்ரஸ்ஸால என்ன ஆபத்து? ரூபி ஏன் இப்படி ஒரு பொய்யை சொன்ன ஹரீஸ் பாவம்
 
  • Like
Reactions: Infaa

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,259
318
113
Chennai
வைசாலி போட்டுட்டு வந்த ட்ரஸ் சர்வாவோடதா? அந்த ட்ரஸ்ஸால என்ன ஆபத்து? ரூபி ஏன் இப்படி ஒரு பொய்யை சொன்ன ஹரீஸ் பாவம்

அந்த உடை ஆபத்தானதுதான்.

ரூபிக்கு ஏதோ கோபம்... ஆனாலும் ஹரீஷ் பாவம்தான்.