• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அகானா - 31

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,272
497
113
Tirupur
அகானா - 31

மகிழினியைப் பார்த்து அதிர்ந்தது அவர்கள் மட்டுமல்ல ஆரியனும்தான்.

அவள் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த மஞ்சள் கயிறைப் பார்த்து ‘என்னடி இது.?’ என அதிர, அதை மற்றவர்கள் கவனிக்கும் முன்னே “எனக்கு இவரைப் பிடிச்சிருக்கு ப்பா..” என்றாள் மகிழினி அவசரமாக.

‘இது எப்போ?’ என மீண்டும் ஆரியன் அதிர,

‘தரமா அவங்களை வச்சு செய்வான்னு பார்த்தா, எனக்கே செஞ்சிருக்கா..’ என ஆரியன் மனதுக்குள் புலம்பும் நேரம் “ப்பா… நான் நாலு நாள் இவர்கூட இருந்துருக்கேன். இவர் என்னை இப்ப வரை தப்பா ஒரு பார்வை கூட பார்த்தது இல்ல. எங்கிட்ட ரொம்ப பொறுமையா நடந்துக்கிட்டார். என்னை பார்த்து ஒதுங்கித்தான் போனார். அவர் அப்படி நடந்துக்கறதைப் பார்த்துதான் எனக்கு அவரைப் பிடிச்சது..” என ஆரியன் மறுத்துப் பேச முடியாமல் மகிழினி பேசினாள்.

“ஏண்டி.. ஏண்டி உனக்கு புத்தி இப்படி போச்சு. உன் வயசென்ன.. இப்ப கல்யாணத்துக்கு என்னடி அவசரம். அதை கழட்டி எரிஞ்சிட்டு வாடி. அம்மா உனக்கு நல்ல பையனா பார்த்து செஞ்சு வைக்கிறேன். இவன்… இவங்க குடும்பமே வேண்டாம். இவன் யாருன்னு கூட தெரியாது. அந்த ஆடுகாளிக்கு என்ன சொந்தம்னு கூட தெரியாது. சொன்னா புரிஞ்சிக்கோ மகி. அதை தூக்கி எரிஞ்சிச்சிட்டு வா..” என ரஞ்சனி அதட்டி, உருட்டி, மிரட்டி, கெஞ்சி என எல்லா வகையிலும் பார்த்து விட்டார்.

ரஞ்சனியின் பேச்சைக் கேட்டதும், ஆர்யனின் முகம் கோபத்தில் சிவப்பதையும், உடல் இறுகுவதையும் மகிழினியால் உணர முடிந்தது.

உடனே “ம்மா.. நீங்க முதல்ல அவரை அவன் இவன்னு பேசுறதை நிறுத்துங்க. உங்களுக்கு பிடிச்சாலும், பிடிக்கலன்னாலும் அவர்தான் என் கணவர். நம்ம வீட்டு மாப்பிள்ளை. அவரை மரியாதை இல்லாம பேசாதீங்க..” என கோபமாக பேச,

“செய்றதையும் செஞ்சிட்டு, எதிர்த்து வேற பேசுவியா? காலை உடைச்சு வீட்டுல ஒரு மூலையில போட்டாத்தான் அடங்குவ..” என மகளிடம் வர,

“போதும் நிறுத்து.. இனி அவ உன் பொண்ணு இல்ல.. அவரோட மனைவி. உன் இஷ்டத்துக்கு பேசிட்டே போகாத. முதல்ல இங்க இருந்து கிளம்பு நீ..” என சங்கர் மனைவியை அதட்ட பார்க்க,

“உங்களாலத்தான் என் புள்ளைங்க ரெண்டும் இப்படி இருக்குங்க. போயும் போயும் எந்த குடும்பத்துல நுழைஞ்சிருக்காங்க. இது வெளிய தெரிஞ்சா எவ்ளோ அசிங்கம் தெரியுமா? ஊர்ல நம்மளை மதிப்பாங்களா? அவளை ஓட விட்டதுக்கு, இப்படி வந்து என் குடும்பத்தை பழி வாங்குறாளா? அவ நல்லாவே இருக்கமாட்டா.. என் புள்ளைங்கள எங்கிட்ட இருந்து பிரிச்ச அவ நாசமா போயிடுவா?” என ரஞ்சனி மஞ்சரிக்கு சாபம் விட,

“போதும் இதோட நிறுத்திக்கோங்க. எங்க மஞ்சு அம்மாவை பேச யாருக்கும் தகுதி இல்ல. இப்போ என்ன உங்க பொண்ணை கூப்பிட்டு போகனுமா? தாராளமா கூப்பிட்டு போங்க..” என நிறுத்தியவன், மகிழினியின் முகம் கோபத்தில் இறுகுவதைக் கண்டு “அவ என்னை விட்டு வந்தா, நீங்க தாராளாமா கூப்பிட்டு போங்க..” என்றான் நிதானமாக.

மகளிடம் வேகமாக வந்த ரஞ்சனி ஆர்யனின் கடைசி வார்த்தையில் அப்படியே நின்றார்.

“என் மகளை மயக்கி எனக்கெதிரா திருப்பிட்டு இப்போ மாத்தி பேசுறியா? உன் மேல நான் மகளிர் ஸ்டேசன்ல கம்ப்ளைன்ட் கொடுப்பேன்.. உன்னை உள்ள தூக்கி வைக்காம நான் ஓய மாட்டேன்..” என ஆங்காரமாக கத்திக் கொண்டிருக்க,

“அக்கா அமைதியா இரு பேசுவோம். மகி சின்ன பொண்ணு. சொன்னா புரிஞ்சிப்பா. கொஞ்சம் நேரம் பொறுமையா இரு..” என வினோத் ரஞ்சனியை ஒரு ஓரமாக அமர வைக்க, மற்றொரு மூலையில் ஓய்ந்து போய் அமர்ந்திருந்தார் சங்கரன்.

மனைவி கத்தி கத்தி பேசுவதை கண்டுகொள்ளவில்லை. அடுத்தவருக்கு நாம் என்ன செய்கிறோமோ அதுதான் நமக்கும் கிடைக்கும் என்பதை பல முறை பார்த்திருக்கிறார். உணர்ந்திருக்கிறார்.

இதோ இப்போது அவர் பிள்ளைகளின் வாழ்க்கையில் அது நடந்துவிட்டது.

மஞ்சரியை அந்த வீட்டில் இருந்து, ரவியின் வாழ்க்கையில் இருந்து மொத்தமாக கலைய வேண்டும் என நினைத்து ரஞ்சனியின் குடும்பம் செய்த வேலை, இப்போது அகானாவால் முடிந்திருக்கிறது.

இனி மகன் அகானாவை விடமாட்டான் என்று உறுதியாக தெரிந்து போனது.

மகளும் இதோ ஒரு வாழ்க்கையோடு எதிரில் நிற்கிறாள். ஒரு அப்பாவாக அவர் தோற்றுப் போய்விட்டதாகவே உணர்ந்தார்.

அவரின் தளர்ந்த தோற்றம் மனதை பிசைய, அவர் கையைப் பிடித்து எதிரில் மண்டியிட்டு அமர்ந்த ஆரியன் “அங்கிள் என்னை மன்னிச்சிடுங்க. சில உண்மைகளை உங்ககிட்ட என்னால சொல்ல முடியாது. அது என்னை நம்பி வந்த மகியை நான் விட்டுக் கொடுத்த மாதிரி ஆகிடும். நீங்க பயந்துக்குற அளவுக்கு நான் மோசமானவன் இல்லை. நான் என்னோட பேரண்ட்ஸ உங்ககிட்ட பேச சொல்றேன். என்னோட டீடைல்ஸ் தரேன். நீங்களும் விசாரிங்க. கண்டிப்பா உங்களுக்கு திருப்தியா இருக்கும்..” என அவருக்கு புரிய வேண்டுமே என தயக்கமாகவே பேசினான்.

“உங்களைப்பத்தி எனக்கு விசாரிக்க ஒன்னுமே இல்ல தம்பி. ஆகனுக்கு உங்களைத் தெரியும். அம்முவை இத்தனை வருசம் உங்க சொந்த தங்கை மாதிரி பார்த்துக்கிட்டீங்க.. இந்த ஒன்னே போதும் உங்க குடும்பம் பத்தி தெரிஞ்சிக்க. எனக்கு பயமே அம்முவை வச்சுத்தான். மஞ்சரி கூட சமாதானம் ஆகலாம். ஆனா அம்மு அவ எப்படி.?” என நிறுத்த,

“அகியை சமாதானம் செய்ய முயற்சி செய்யாதீங்க அங்கிள், அப்புறம் சீனியர் கூட கண்டிப்பா அவ லைஃபை ஸ்டார்ட் பண்ண மாட்டா. அவளுக்கு அந்த ஃபேமிலிக்குள்ள வர எப்பவும் விருப்பம் இல்ல. அதுலயும்..” என நிறுத்தி ரஞ்சனியைப் பார்த்துவிட்டு “இவங்க இருக்குற வீட்டுக்கு அவ வரவே மாட்டா அங்கிள்.. சீனியரும் இவங்கள விட்டு வரமாட்டார். சோ நீங்க அகியை நினச்சு ஆசையை வளர்த்துக்காதீங்க ப்ளீஸ்..” என அகானாவின் தற்போதைய மனநிலையை சொல்லிவிட்டான்.

அவன் சொல்லாத சிலதையும் சங்கராலும், வினோத்தாலும் புரிந்து கொள்ள முடிந்தது.

எந்த வீட்டில் மஞ்சரி வாழக்கூடாது என்று துரத்தியடிக்கப்பட்டாளோ, அந்த வீட்டில் அகானாவாலும் வாழ முடியாது.

முக்கியமாக ரவீந்திரன் மைதிலி இருக்கும் அந்த வீட்டில் அவளால் நொடி நேரம் கூட இருக்க முடியாது.

சங்கருக்கு அகானாவின் மனநிலை புரியாமல் இல்லை. ஆனால் மகன்.. அவனும் அகானாவை விடமாட்டானே.. என எண்ணங்கள் எங்கெங்கோ போனது.

“அங்கிள்” என அழைத்த ஆரியன், ரவீந்திரன் ஆஃபிஸில் வந்து மகளைப் பார்த்ததை கூற, இப்படி நடக்கும் என சங்கர் யூகித்தார்தான். ஏன் வினோத் கூட நினைத்தான்தான்.

ஆனால் ரஞ்சனி இதை எதிர்பார்க்கவே இல்லை. “என்ன சொல்ற? அண்ணன் வந்து அவளைப் பார்த்தானா? ச்சே ஏன் இவன் புத்தி இப்படி போகுது.. அந்த சனியனுங்க ரெண்டையும் அவன்கிட்ட இருந்து பிரிக்க நாங்க என்ன பாடு பட்டோம். இப்போ மறுபடியும் வந்து ஒட்டிக்க பார்க்கிறாங்களா? இவங்களுக்கு மைதிலி அண்ணியைப் பத்தி தெரியல. அவங்க நினைச்சா நிமிசத்துல ரெண்டு பேரையும் ஒழிச்சுக் கட்டிருவாங்க.. ச்சே இந்த அண்ணனுக்கு ஏன் இப்படியெல்லாம் மூளை வேலை செய்யுது.. என்னதான் நாயைக் குழிப்பாட்டி நடுவீட்டுல வச்சாலும்..” என ரஞ்சனி முடிக்கும் முன்னே, அங்கே டீப்பாயின் மேல் இருந்த ரிமோட்டைத் தூக்கி சுவற்றில் எரிந்திருந்தான் வினோத்.

ரஞ்சனி பேசியதில் அனைவருக்குமே கோபம்தான். ஆனால் அதை வெளிக்காட்ட முடியாமல் இருந்தனர். ஆர்யனுக்கு ரஞ்சனியிடம் பேசவே பிடிக்கவில்லை. ஆனாலும் அடுத்து பேச ஆரம்பிக்கும் போது பதில் கொடுக்க வேண்டும் என தயாராகத்தான் இருந்தான்.

அதற்குள் வினோத் முந்திக் கொண்டான். “அவர் அவரோட பொண்ணை பார்க்க போயிருக்கார். அதை தப்புன்னு யாரும் சொல்ல முடியாது. நீ வேண்டாம் வேண்டாம்னு ஒதுக்கின ஒரு குடும்பம்தான் இன்னைக்கு உன் வீட்டுக்குள்ள வந்திருக்கு, அது உனக்கு புரியுதா இல்லையா? பிரிச்சேன், ஓட விட்டேன்னு பெருமையா சொல்ற? அதுவும் உன் பொண்ணு முன்னாடியே, உன் மேல அவளுக்கு இருக்குற நல்ல எண்ணமெல்லாம் மொத்தமா போயிருக்கும். இனி உன்னை நம்பி எப்படி அந்த வீட்டுக்கு வருவா? அவருக்கு செஞ்ச மாதிரி இவளுக்கு செய்ய மாட்டன்னு எப்படி நம்புவா..? என்ன ஜென்மம் நீயெல்லாம்..” என காட்டுக்கத்தலாக கத்த,

வினோத்தின் பேச்சில் ரஞ்சனி அதிர்ந்து மகளைப் பார்க்க, அவளோ ‘ச்சீ நீயெல்லாம் ஒரு அம்மாவா.?’ என்பது போல் ஒரு பார்வையைக் கொடுத்துவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

மகளின் முகத் திருப்பலிலேயே பெரிதாக அடி வாங்கிவிட்டாள் ரஞ்சனி. அதோடு எங்கே மகள் தன்னோடு வரமாட்டாளோ என்ற பயமும் வந்துவிட்டது.

“மகி.. அம்மா உனக்கு போய் அப்படியெல்லாம் செய்வேனா? அது.. அது உன் மாமாவுக்கு அவங்களை பிடிக்கல. அவங்ககூட இருக்கும் போது ரொம்ப கஷ்டப்பட்டான். அவங்க அவனை ரொம்ப கொடுமைப் படுத்திட்டாங்க. அவ கூட இருக்கவே முடியாதுன்னு வந்துட்டான். நாங்க வேற என்ன செஞ்சிருக்க முடியும் சொல்லு. அவனுக்காக, அவன் கேட்டுக்கிட்டதுக்காகத்தான் செஞ்சோம். இதுல எங்க தப்பு என்னடி இருக்கு.. புரிஞ்சிக்கோ மகி.. இந்த கல்யாணம் எல்லாம் செல்லாதுடி.. அதை கழட்டி கொடுத்துட்டு வந்துடு, கொஞ்ச நாள் கழிச்சு, அம்மா உனக்கு நல்ல இடமா பார்த்து, ஹான் ஃபாரின் மாப்பிள்ளையா பார்த்து கட்டி வைக்கிறேன்..” என பரிதவிப்பாக கெஞ்ச,

“ம்மா.. இவரும் ஃபாரின்தான். MD முடிச்சிருக்கார். எனக்கு இவர் கூடவே போதும். நானும் இவர் கூடவே ஃபாரின் போய்டுவேன்.. நீ கவலைப்படாத..” என பாவம் போல கூற, அதுவரை இருந்த சூழல் நொடியில் மாறிவிட, ரஞ்சனி தவிர்த்து அனைவருமே சிரித்துவிட்டனர்.

“திமிர் பிடிச்ச கழுத.. நான் என்ன சொல்றேன்.. நீ என்ன பேசிட்டு இருக்க..” என ஆத்திரமாக மகளிடம் வந்தவர், அடுத்தவர்கள் சுதாரிக்கும் முன் மகிழினியின் தாலியைப் பிடித்திருந்தார்.

“ம்மா என்ன பண்றீங்க.. விடுங்க.. விடுங்க..” என மகிழினி கத்த, இருவரின் போராட்டத்தில் மகிழினியின் கழுத்து இறுக ஆரம்பிக்க, ஆர்யன் வந்து மகியைப் பிடித்துக்கொள்ள, சங்கர் வந்து மனைவியின் கையைத் தட்டி விட்டார். ஆனாலும் ரஞ்சனியின் பிடி வழுவாக இருந்தது.

“அக்கா விடு.. பைத்தியம் போல எதையும் செய்யாத.. அவளுக்கு வலிக்குது போல..” என்ற நேரம் ஆர்யன் ரஞ்சனியை வினோத்தின் புறம் தள்ளிவிட்டு, மகிழினியை தன் புறம் திருப்பி அனைத்திருந்தான்.

அதற்குள் அங்கிருந்த மெய்ட் அவளுக்கு தண்ணீர் எடுத்து ஓடி வர, தண்ணீரை குடிக்க கொடுத்து அவள் முதுகை தடவி விட்டபடியே சங்கரைப் பார்த்து “சாரி அங்கிள்..” என்றவன், ரஞ்சனியைப் பார்த்து “இதுதான் நீங்க அவ மேல கை வைக்கிறது கடைசியா இருக்கனும். என் முன்னாடியே எவ்ளோ மோசமா நடந்துக்குறீங்க. நான் இல்லன்னா..?” என நிறுத்தியவன் “இந்த நிமிசம் வரை மகியை சமாதானம் செஞ்சி உங்ககூட அனுப்பி வைக்கிற ஐடியாவில் தான் இருந்தேன். ஆனா இனி இல்ல. நீங்க கிளம்புங்க.. நீங்க என்ன செய்யனுமோ செஞ்சிகோங்க. கேஸ் போட்டாலும் போட்டுக்கோங்க. நான் அதை எப்படி ஃபேஸ் பண்ணனுமோ பண்ணிக்கிறேன்..” என்றான் தீர்மானமாக.

“ஏய் என்னையவே மிரட்டுறியா.?” என ரஞ்சனி மீண்டும் ஆரம்பிக்க, அதை காதில் வாங்காதவன் போல, யாரையும் கருத்தில் கொள்ளாமல் மகியை கையில் அள்ளிக்கொண்டு அவள் அறைக்கு நடந்தான் ஆரியன்.