• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அ.. ஆ.. -10

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,272
497
113
Tirupur
அ.. ஆ - 10

நித்யா அதிர்ந்து நின்றது எல்லாம் ஒரு நொடிதான். உடனே தன் முகபாவத்தை மாற்றிவிட்டு “ஹரி, ஹனி ரெண்டு பேரும் உள்ள வாங்க..” என தங்களின் அறைக்கு அழைத்துச் சென்று, “இப்போ தெளிவா சொல்லு.?” என கேட்க, ஹரியும் அவன் பார்த்ததையும் கேட்டதையும் தெளிவாக சொல்ல, நித்யாவின் மனதில் எழுந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

‘கடவுளே என் வேண்டுதல் பழிச்சிடுச்சு. அவங்க நல்லாத்தான் இருக்காங்க. அதுவே எனக்கு போதும்.’ என அவசரமாக கடவுளுக்கு நன்றி கூறினாலும், ஆனந்தத்தில் கண்கள் கலங்கிப் போனது.

பிள்ளைகள் இருவரும் தாயின் முகபாவனைகளைக் கவனித்து குழம்பிப் போயினர். ஹரிஷ் இப்போது பத்தாவதில் இருக்க, ஹரினி எட்டாவதில். இருவருக்கும் ஓரளவிற்கு விபரம் தெரியும் வயதுதான்.

பிள்ளைகளின் இத்தனை வயதில், அவர்கள் பார்த்த வரையில் அந்த வீட்டின் ஆட்கள் யாரிடமும் இவர்கள் பேசியதே இல்லை. அதிலும் பாட்டியும் அத்தையும் அவர்களைப் பார்த்தால் ஜாடையில் ஏதேதோ பேசிக்கொண்டே இருப்பார்கள். அதிலேயே அவர்களுக்கும் நமக்கும் பிரச்சினை என்று பிள்ளைகளும் ஒதுங்கித்தான் போவார்கள்.

காயத்ரிதான் இவர்களோடு பேசும் ஒரே ஆள். அதிலும் பெரியவர்களுக்குத் தெரியாமல் தான் பேசுவாள். அப்படி என்னதான் பிரச்சினை என்று பிள்ளைகள் கேட்டாலும், யாரும் சொல்லக்கூட மாட்டார்கள்.

இப்போது தெரிந்து கொண்டே ஆகவேண்டும் எனத் தோன்ற, “ம்மா என்ன நடக்குது நம்ம வீட்டுல? அவங்க யாரு? எதுக்காக நீங்க அழறீங்க.? அந்த வீட்டு ஆளுங்களே சரியில்ல. மோசமானவங்கன்னு அத்தையும் பெரியம்மாவும் சொல்லிருக்காங்க. அவங்களுக்காக நீங்க ஏன் அழறீங்க.?” என சரியாக ஹரிஸ் கேட்க,

“டேய் உங்க அத்தயும், பாட்டியும், முக்கியமா உங்க பெரியம்மா என்ன பேசினாலும் அதெல்லாம் கேட்கக்கூடாதுனு சொல்லிருக்கேன்ல. அவங்க வீட்டு ஆளுங்க சரியில்லையா? எவ்வளவு திமிரு உங்க அத்தைக்கும், பெரியம்மாவுக்கும். எவ்வளவு பட்டாலும் திருந்தமாட்டாங்க.” என மகனிடம் காய்ந்த நித்யா,

“இங்க நடக்குறது எல்லாம் நீங்களும் தெரிஞ்சிக்கனும். இப்போ உங்களுக்கு சொல்றதை நீங்க, வீட்டுல யாருக்கிட்டயும் சொல்லக்கூடாது, கேட்கவும் கூடாது. செய்யமாட்டீங்கன்னு எனக்கு பிராமிஸ் பண்ணுங்க, அப்போதான் உங்களுக்கு சொல்வேன்..” என உறுதியாக கேட்க, பிள்ளைகள் இருவரும் சரியென்று பிராமிஸ் செய்ய, நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லி முடித்தாள் நித்யா.

மஞ்சரியைப் பத்தி அனைத்தையும் சொல்லி முடித்த நித்யா பிள்ளைகளைப் பார்க்க, இருவரும் அதிர்ச்சியில் இருந்தனர். ‘அம்மா சொல்றது உண்மையா.? நம்ம பெரியப்பாவா அப்படி?’ அந்த கேள்விதான் அவர்கள் இருவரின் மூளையை செயலிழக்க வைத்திருந்தது.

“ஹரி..” என மகனை உழுக்க, “ம்மா.. என்னம்மா இதெல்லாம்.? எப்படிம்மா இவ்ளோ பெரிய தப்பை பண்ணாங்க.? மஞ்சரி பெரிம்மா ரொம்ப பாவம்மா. அக்காவையும் வச்சுக்கிட்டு எவ்ளோ கஷ்டப்பட்டுருப்பாங்க.. எனக்கு அவங்களைப் பார்க்கனும் ம்மா. நான் போய் பார்த்துட்டு வரவா.?” என அதிரடியாக கேட்க,

“ம்மா.. ஆமாம்மா… ஹரி சொல்றது சரிதான். எனக்கும் அவங்களைப் பார்க்கணும். அக்கா கலெக்டரா இருக்காங்க. நானும் போய் பேசிட்டு வரேன்..” என அடம்பிடிக்க,

“ஹேய் ரெண்டு பேரும் சும்மா இருங்க. நாம இப்படி பேசினது தெரிஞ்சாலே உங்க பாட்டி ஆடித் தீர்த்துடுவாங்க. இதுல அங்க போய் பார்க்குறோம்னு தெரிஞ்சா அவ்ளோதான்..” என பயந்தவள்,

“எனக்கும் அவங்களைப் பார்க்கனும் போலத்தான் இருக்கு. ஆனா சிச்சுவேசன் இப்போ சரியில்லயே. வெளியில எங்கையாவது பார்த்தா பேசலாம் சரியா? அப்புறம் இப்போ மகியைக் காணோம்னு எல்லாரும் பயத்துல இருக்காங்க. இந்த நேரத்துல இந்த பேச்சே இருக்கக்கூடாது சரியா.? நம்ம ரூம்ல மட்டும்தான் இதைப்பத்தி பேசனும்..” என கண்டிப்பாக கூறிவிட, வருத்தமாக இருந்தாலும் சரியென்றுவிட்டனர் பிள்ளைகள்.

அந்த நேரம் வீட்டுக்கு வந்த வினோத் “என்ன இந்த நேரம் ரூமுக்குள்ள அடைஞ்சி கிடக்குறீங்க. ஹால்ல டிவி சத்தமும் காணோம். என்ன எதாவது தப்பு பண்ணிட்டீங்களா.?” என பிள்ளைகளிடம் கேட்டபடியே, உடை மாற்ற லுங்கியை எடுக்க,

“அதுப்பா.. அந்த காயத்ரி அக்கா வீடு இருக்குல்ல, அங்க கலெக்டர் வந்துருக்காங்க..” என ஹரினி சொல்ல,

“ஏன் அந்தாளு எதையும் திருடிட்டு வந்துட்டானா? அது கலெக்டர் வரைக்கும் போயிடுச்சா.?” என உடையை மாற்றிக் கொண்டே கேட்க,

“ப்பா இப்படி பேசுறது ரொம்ப தப்பு. உங்களைப் பார்த்துதான் நாங்களும் கத்துப்போம்..” என மகள் பட்டென சொல்ல, வேகமாக திரும்பி மகளைப் பார்த்தான் வினோத்.

அவள் முகத்தில் இருந்தது என்ன? என யோசித்தபடியே மனைவியைப் பார்க்க, “அகானாதான் வந்திருக்கா? அவதான் இப்போ தேனி மாவட்ட கலெக்டராம். அவங்க அம்மாவும் அவளும் வந்திருக்காங்க.” என கணவனின் கண்ணை நேருக்கு நேர் பார்த்து கூற, வினோத்தின் விழிகள் அப்பட்டமான அதிர்ச்சியை வெளிக்காட்டியது.

வினோத்தின் இந்த அதிர்ச்சியை மூவரும் அமைதியாகத்தான் பார்த்தனர்.

“என்ன சொல்ற? அந்த பொண்ணு வந்திருக்கா? அவங்க அம்மாவுமா?” என அந்த அதிர்ச்சி விலகாமலே கேட்க,

“என்ன அந்த பொண்ணா?” என ஆத்திரமாக கேட்ட நித்யா, பிள்ளைகள் தங்கள் இருவரையுமே பார்ப்பதை உணர்ந்து முகத்தைத் திருப்பி அமைதியாகிவிட,

“ப்பா.. ஏன்ப்பா இப்படி பண்ணீங்க? அவங்க பாவம்ல்ல..” என்ற மகளை “ம்ச் ஹனி சும்மா இரு.?” என்று அதட்டிய நித்யா வேகமாக அறையை விட்டு வெளியேறிவிட, பிள்ளைகளும் அவளுக்குப் பின்னே சென்றுவிட, தலையைப் பிடித்தபடி அமர்ந்துவிட்டான் வினோத்.

அவன் மனதில் மஞ்சரி இங்கிருந்து சென்றபிறகு நடந்தது எல்லாம் படமாக ஓடியது. அப்போது நித்யாவும் வினோத்தும் காதலித்த சமயம். வினோத்திற்கு நிரந்தரமான வேலை இல்லை.

நித்யாவின் வீட்டில் பெண் கொடுக்கவே சம்மதிக்கவில்லை. அதோடு மைதிலியைப் பற்றித் தெரிந்தபிறகு அவர்கள் வினோத்திடம் பேசவேக்கூடாது என்று நித்யாவிடம் கண்டிப்பு காட்டியதுடன், வேறுபக்கம் மாப்பிள்ளையும் பார்க்க, செய்வதறியாது திகைத்துப் போனான் வினோத்.

வீட்டில் சரஸ்வதியிடம் பேச, அவரோ “அவங்க வீட்டுல சம்மதிக்கலன்னா என்னடா செய்ய முடியும்? விடு வேற பக்கம் பார்த்துக்கலாம்.” என மிகவும் சாதாரணமாக சொல்ல, கொதித்துவிட்டான் வினோத்.

யாரையும் வைத்துப் பார்க்கவில்லை. வீட்டில் உள்ள அத்தனை பேருடனும் சண்டையிட்டு வீட்டையும் விட்டு வெளியில் வந்துவிட, அப்போதுதான் மகனின் தீவிரம் புரிந்தது பெற்றவர்களுக்கு.

மைதிலிக்கும் வினோத்தின் செயலில் கொஞ்சம் பயம் வர, அவளே வீட்டில் பேசி நித்யாவின் வீட்டில் பேச வைத்தாள். ஆனாலும் அவர்கள் இறங்கி வரவே இல்லை.

சங்கர்தான் வினோத்திற்காக சென்று பேசினார். மிகவும் பொறுமையாக எடுத்துச் சொல்ல, “இங்க பாருங்க தம்பி, உங்க மேல எங்களுக்கு மரியாதை இருக்கு. ஆனா நம்பிக்கை இல்லை. ஒரு குடும்பத்தை பிரிச்சு, ஒரு பொண்ணை வாழவிடாம விரட்டியடிச்ச குடும்பத்துக்கு எந்த நம்பிக்கையில நான் பொண்ணு கொடுக்க முடியும். நேத்து அந்த பொண்ணுக்கு நடந்தது. நாளைக்கு என் பொண்ணுக்கு நடக்காதுன்னு என்ன நிச்சயம்..” நித்யாவின் அப்பா கேட்க, சங்கரால் பதில் சொல்ல முடியவில்லை.

“பத்து வருஷம் காதலிச்சு, ஏழு வருஷம் வாழ்ந்துருக்காங்க. அவங்களையே நிமிசத்துல பிரிச்சு, விரட்டியடிச்சிருக்காங்க உங்க மாமியார். என் பொண்ணெல்லாம் எம்மாத்திரம். இதெல்லாம் சரிபட்டு வராது தம்பி. பொண்ணைக் கொடுத்துட்டு ஒவ்வொரு நாளும் வயித்துல நெருப்பக் கட்டிட்டு இருக்க முடியாது..” என நித்யாவின் அம்மாவும் சொல்ல, அமைதியாக எழுந்து சென்றுவிட்டான் வினோத்.

அவனுக்கு இந்த திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கையே போய்விட்டது. ஆம் போய்விட்டது! தன் வீட்டில் நடந்ததை மறைக்காமல் நித்யாவிடம் கூறியிருந்தான் வினோத். அதைக் கேட்டதில் இருந்து அவனிடம் பேசுவதையே நிறுத்தியிருந்தாள் நித்யா. அவளை சமாதானம் செய்வதா? இல்லை அவள் வீட்டார்களை சமாதானம் செய்வதா? எனத் தெரியாமல் பைத்தியக்காரனைப் போல் மாறியிருந்தான்.

வினோத்தின் இந்த மாற்றம் வீட்டில் உள்ளவர்களுக்கு பயத்தைக் கொடுத்தது. அவர்கள் அவனிடம் கெஞ்சி வீட்டுக்கு வா என அழைத்தாலும் செல்லவில்லை.

இவனின் தோற்றத்தைப் பார்த்த சங்கர்தான் மீண்டும் நித்யாவின் வீட்டில் வந்து பேசினார். முதலில் அவர் நித்யாவிடம்தான் பேசினார். அவள் கோபத்தை புரிந்து சமாதானம் செய்து, பிறகு அவளின் வீட்டில் பேசி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தார்.

இத்தனை முறை இறங்கிப் போயும் பெண் தரவில்லை என்ற கோபம் வினோத்தின் வீட்டினருக்கு. அதனால் வேண்டா வெறுப்பாகத்தான் திருமணத்திற்கு சம்மதித்தனர்.

வெளியில் தங்கள் கௌரவம் போய்விடக்கூடாது என்பதற்காக மிகவும் விமர்சையாகவே திருமணத்தை நடத்தி வைத்தனர். அன்றைய இரவில் நித்யா கேட்ட ஒவ்வொரு கேள்வியும் இப்போது நினைத்தாலும் வினோத்திற்கு தன்னையே வெறுக்கத் தோன்றும்.

ஒரே அறையில், ஒரே வீட்டில் இருந்தாலும் இருவரும் தேவைக்கு அதிகமாக பேசிக்கொள்ளவே இல்லை. இதை வீட்டில் உள்ளவர்கள் கவனித்தாலும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் மைதிலியால் அப்படியிருக்க முடியவில்லை.

மைதியிலியை நித்யா பார்க்கும் பார்வை வேறு கோபத்தைல் கொடுக்க, எப்படியாவது நித்யாவை மட்டம்தட்ட வேண்டும் என்று யோசித்து இந்த பிரச்சினையை கையிலெடுத்தாள். தான் பேசினால் பிரச்சினையாகும் என்று ரஞ்சனியைத் தூண்டிவிட, அது சரியாக வீட்டில் பிரச்சினையை உருவாக்க நொந்து போனான் வினோத்.

இத்தனை பிரச்சினையிலும் ரவி எதிலும் தலையிடவில்லை. மனம் கேளாமல் ஏன் என்று ஒருமுறை வினோத் கேட்டதற்கு, ‘என்னாலத்தான் இவ்ளோ பிரச்சினையும், இதில் நான் பேசி அது இன்னும் பெரிதாக வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கிறேன்’ என்று சொல்ல, வினோத்திற்கு மனமே விட்டுப்போனது.

‘இவருக்காக நான் எவ்வளவு செய்திருப்பேன், ஆனால் இவர்?’ என்ற கேள்வி தோன்ற, கொஞ்சமும் யோசிக்காமல் தன் ஈகோ அனைத்தையும் விட்டுவிட்டு நித்யாவின் காலிலேயே விழுந்துவிட்டான்.

“ப்ளீஸ் நித்தி… என்னை மன்னிச்சிடுடி. இது நம்ம வாழ்க்கை. அடுத்தவங்களுக்காக நம்ம வாழ்க்கையை வீணாக்காத. புரிஞ்சிக்கோ நித்தி..” என்று கெஞ்ச,

“அவங்களுக்கு நடந்தது நாளைக்கு எனக்கு நடக்கும்னு எல்லாம் நான் பேசி உங்களை டென்சன் பண்ணமாட்டேன். ஆனா நீங்க செஞ்ச இந்த பாவம் அது என்னையும் என் குழந்தைங்களையும் என் வம்சத்தையும்தான பாதிக்கும். அதை நினைச்சா என்னால தூங்கவே முடியல. இந்த பயம் என்னை வாழவிடாது போல..” என அழுதவள்,

“அவங்க கெட்டவங்க, கேரக்டர் சரியில்ல.. இல்ல வேற எதோ ஒரு ரீசன்னு சொன்னாக்கூட மனசு ஆறும். ஆனா கூடவே இருந்து குழி பறிச்சமாதிரி, அவங்க கூடவே இருந்து முதுகுல குத்தி ஏமாத்திட்டு வந்துருக்கார். அதுவும் பணத்துக்காக. இந்த பணம் இன்னைக்கு இருக்கும், நாளைக்கு இல்லாம போய்டும். அப்போ இதே பணத்துக்காக இன்னொரு பொம்பளைய கல்யாணம் செய்வாரா.?” என ஆங்காரமாக கத்த, மனைவியின் எந்த கேள்விக்கும் பதில் சொல்ல முடியவில்லை வினோத்தால்.

“சாகக்கிடந்த குழந்தையை பணையமா வச்சு விவாகரத்து வாங்கிருக்கீங்க. அந்த பாவத்துல நீங்களும் பங்கெடுத்துருக்கீங்க. அதை எப்படி என்னால சாதாரணமா எடுத்துக்க முடியும். நாளைக்கு நம்ம பொண்ணுக்கு இப்படி நடந்தா என்ன செய்வீங்க..” என்றவள், “பத்தினி சாபம் சும்மா விடாதுனு சொல்வாங்க. கண்டிப்பா அவங்க பாவம் இங்க யாரையும் விடாது. கடவுள் எல்லாத்தையும் பார்த்துட்டுத்தான் இருப்பார்..” என தன் மனதில் இருந்த கோபத்தை எல்லாம் கொட்டி முடித்த நித்யாவை வெறித்துப் பார்த்தான் வினோத்.

அவள் சொல்வது உண்மைதானே! நிச்சயம் அந்த இரு பெண்களின் பாவமும் சாபமும் எங்களை சும்மா விடாது என்று அவனுக்குமே புரிந்தது.

அனைத்தையும் ஒரு பெருமூச்சோடு ஏற்றுக்கொண்டவன், மனைவியின் கையைப் பிடித்து அருகில் அமர்ந்தான். அழுது அழுது முகமெல்லாம் வீங்கிப் போயிருந்தது.

திருமணம் முடிந்து முழுதாக பத்து நாட்கள் கூட ஆகவில்லை. புதுமணத் தம்பதிகளுக்கான எந்த ஒரு ஆசையும் நெருக்கமும் இருவரிடமும் இல்லை. இப்போது மனைவியை இப்படி பார்த்ததும் அள்ளி அனைக்கத் தோன்றியது.

மெல்ல இழுத்து தன் தோளில் சாய்த்தவன் “இனி என்ன நடந்தாலும் இதுதான் நம்ம வாழ்க்கை. இதுதான் நம்ம குடும்பம். என் பக்கமிருந்து இனி எந்த தப்பும் நடக்காது. நீயோ நம்ம பிள்ளைங்களோ சங்கடப்படுற மாதிரி நான் நடந்துக்க மாட்டேன். நம்பு நித்தி. ப்ளீஸ். உனக்கு நம்பிக்கை வரனும்னா நான் என்ன செய்யனும் சொல்லு.. நான் என்ன செஞ்சா உன் கோபம் குறையும்..” என வருத்தமாக கேட்க,

“அந்த அக்கா நல்லபடியா, பாதுகாப்பா இருக்கனும். அதுதான் என்னோட வேண்டுதல். இனி அவங்க இந்த குடும்பத்துக்கு வரமாட்டாங்க. அவங்க எங்கையோ நிம்மதியா இருக்கட்டும். ஆனா ஒருவேளை அடுத்து அவங்களை எப்போ பார்த்தாலும், நீங்க ஒதுங்கிப் போகாம, உங்களால முடிஞ்சவரைக்கும் ரெண்டு பேரையும் பாதுகாப்பா பார்த்துக்கனும். பார்த்துக்குவேன்னு பிராமிஸ் பண்ணுங்க..” என தீர்க்கமாக கேட்க, முதலில் அதிர்ந்தாலும் மனைவி பின்வாங்க மாட்டாள் என்று புரிய, வேறுவழியில்லாமல் நித்யாவிற்கு சத்யம் செய்து கொடுத்தான் வினோத்.

அதையெல்லாம் இப்போது யோசித்தவனுக்கு, நித்யா எதை பார்வையால் உணர்த்தி செல்கிறாள் என்று புரியாமல் இல்லை.

அன்றிலிருந்து இன்றுவரை வீட்டில் நடக்கும் சம்பவங்களை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது பலமுறை வினோத்தே நினைத்திருக்கிறான்.

கர்மா திருப்பி அடிக்கிறது என்று!

அவர்களுக்கான கர்மா அகானாவின் வடிவில் திருப்பி கொடுக்க வந்திருக்கிறது.