• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அ..ஆ.. - 25

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,272
497
113
Tirupur
அகானா - 25

அகானாவின் வீட்டின் ஹாலில் அனைவரும் அமர்ந்து பழங்கதைகளை பேசிக் கொண்டிருந்தனர். காயத்ரியின் சத்தம் தான் அங்கு அதிகம் கேட்டது.

அதிலேயே தெரிந்தது.. மேடம் சரியான வாயாடி என்றும், அத்தனை பேருக்கும் செல்லம் என்றும்.! அதிலும் அவள் பேசினால் யாரும் மறுத்து பேசுவதே இல்லை. அத்தைகள் கூட அவள் பேச்சை ரசித்தபடிதான் அமர்ந்திருந்தனர்.

அதை கவனித்த அகானாவிற்கு தன்னால் ஏன் இவர்களோடு ஒன்ற முடியவில்லை என யோசிக்காமல் இருக்க முடியவில்லை. ஆனால் தன் ஏக்கத்தை முகத்தில் துளி கூட எங்குமே காட்டவில்லை.

அப்போது கேட்டில் இருந்து அகானாவிற்கு இன்டர்காம் அழைப்பில் “மேடம் உங்க ரிலேடிவ்ன்னு சொல்லிட்டு ஒருத்தர் வந்துருக்கார்…” என்றதும்,

அகானாவிற்கு சட்டென ரவீந்திரனின் நினைப்புத்தான் வந்தது. இன்று ஆஃபிஸ்க்கு வந்தாரே, அம்மாவிடம் பேச வேண்டும் என வீட்டிற்கும் வந்துவிட்டாரோ’ என பயந்தே விட்டாள்.

அதற்குள் செக்யுரிடி இரண்டு முறை “மேடம்.. மேடம்..” என அழைத்துவிட,

“ஹான் யெஸ்… அவர் பேரென்ன?” என கேட்கவும்,

“தாமோதரன் மேடம்..” என்ற செகியூரிடியிடம்,

சட்டென “எஸ்.. எஸ். எங்க ரிலேடிவ்தான்.. உள்ள அனுப்புங்க..” என்றவள், வாசலுக்கு செல்ல, நவீன் தான் “யாரு பாப்பா..? ஏன் டென்சன்..?” என கேட்க,

“ஒன்னுமில்ல.. பெரிப்பா வந்துருக்கார் போல.. செகியூரிடி கால் பண்ணார்..” எனவும்,

“ஹான் அப்பாவா? அவருக்கு எப்படி..?” என யோசித்தபடியே நிற்க,

அப்போது வெள்ளை வேட்டி சட்டையில், க்ளீன் சேவ் செய்த முகம், படிய வாரிய தலை, நெற்றியில் திருநீறு வைத்து, பளிச்சென வந்து நின்ற தாமோதரனைப் பார்த்து அனைவரின் கண்களும் விரிந்து, பின் கலங்க ஆரம்பித்தது.

“ப்பா..” என்ற காயத்ரி அவரிடம் செல்ல, அவரோ அகானாவையே பார்த்துக் கொண்டிருந்தார்.

‘இந்த மாற்றம் உனக்காக.. உனக்காக மட்டும்..’ என அந்த பார்வை சொன்ன செய்தியில், பாவையின் விழிகளும் கலங்கித்தான் போனது.

அகானாவின் இதழ்கள் “பெரிப்பா..” என முணுமுணுக்க, கால்களோ அவரிடம் மெல்ல நடந்தது.

தன் அருகில் வந்தவளை தோளோடு அனைத்துக் கொண்டவர் “என்னை ஏதோ அடிக்ஷன் சென்டர்ல விடுறேன்னு உங்க பெரிம்மாக்கிட்ட சொன்னியாம் பாப்பா.. எப்போ போலாம்..” என சிரித்தபடியே கேட்க,

“ப்பா..” என கேவி அழுத காயத்ரியைப் பார்த்து, “உன்கூட சேரவே மாட்டேன்.. நீ என்னை செங்கல் வச்சு அடிச்சத்தான..” என சிரிக்க,

“ப்ப.. ப்பா..” என்றவள் வேகமாக வந்து அவரைக் கட்டிக்கொண்டு மேலும் கேவி கேவி அழுதாள்.

பார்த்திருந்த அனைவரின் விழிகளில் இருந்தும் கண்ணீர் வழிந்தது. இருக்கும் இடம் உணர்ந்து கத்தி ஆர்ப்பாட்டம் செய்யாமல், அனைவருமே தங்களின் உணர்வுகளை அடக்கிக்கொண்டனர்.

அகானாவின் பாட்டிதான், தன் தம்பியின் கையைப் பிடித்தபடி வெகுநேரம் அமர்ந்திருந்தார். யாரும் யாரிடமும் பேசவே இல்லை. அந்த இடமே உணர்வுக் குவியலாய் மாறிப் போயிருந்தது.

“ஹான்.. ம்மா.. பெரிப்பாவுக்கு சாப்பிட எடுத்து வைங்க.” என மஞ்சரியிடம் கூற, தாமோதரனும் அப்போதுதான் மஞ்சரியைப் பார்த்தார்.

மஞ்சரியோ எதுவும் பேசாமல் கிச்சன் செல்ல, கவிதாவும் மஞ்சரியின் பின்னே சென்றார்.

“வாங்க பெரிப்பா..” என்ற அகானாவின் சொல்லுக்கு கட்டுப்பட்டு சென்றவர், பல நாட்களுக்குப் பிறகு திருப்தியாக உண்டார்.

அன்றைய இரவு அந்த உறவுகளுக்கு உறங்கா இரவாகிப் போனது.

பல வருடங்களுக்குப் பிறகு மிகவும் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் உறங்கி எழுந்தனர் அந்த குடும்பத்தினர்.

அடுத்தநாள் காலை வழக்கம்போல அகானா தன் யோகா பயிற்சியில் இருக்க, ஆரியிடமிருந்து அழைப்பு வந்தது.

‘அவசரம் இல்லாமல் ஆரி இந்த நேரம் அழைக்கமாட்டானே, அங்க மகிக்கு எதுவும் பிரச்சினையோ?’ என யோசித்தபடியே அந்த காலை அட்டென்ட் செய்ய, “அகி.. அகிமா.. மார்னிங்க் நியுஸ் பேப்பர் பார்த்தியா..?” என்றான் பதட்டமாக கேட்க,

“இல்லையே ஆரி! என்னாச்சு?” என்று பேசியபடியே வெளியில் வந்தவள், அங்கிருந்த நியூஸ் பேப்பரை பிரித்துக்கொண்டே டிவியையும் ஆன் செய்தாள்.

“நீ.. நீ பாரு.. இது சீனியர்தான். சீனியர்தான் இப்படி பண்ணிட்டார்.” என்றான் ஆரி பரிதவிப்பாக.

“ம்ச்.. இரு ஆரி நீ டென்சன் ஆகாத.. நான் பார்க்கிறேன்..” என அந்த பேப்பரில் மூன்றாவது பக்கத்தை புரட்டியவளின் பார்வை அந்த செய்திலேயே நிலைத்தது.

‘சொந்தப் பகையை மனதில் வைத்து, எங்கள் நிறுவனங்களின் மீது பொய்யான வழக்கை பதிவு செய்து, சமூகத்தில் இருக்கும் எங்கள் மீதான நற்பெயரை கெடுக்க விரும்புகிறார் மாவட்ட ஆட்சியர் அகானா ரவீந்திரன்.. - மைதிலி ரவீந்திரன்.’ என்ற தலைப்புச் செய்தியும், அதன் கீழ் நேற்றைய சம்பவங்களை சற்று விரிவாக எழுதியிருந்தது. அந்த பத்திரிக்கை நிறுவனம்.

அதைப் படித்ததும் அகானாவின் இதழ்களில் ஒரு ஏளனச் சிரிப்பு உதயமாக, அவளையே கவனித்துக் கொண்டிருந்த சரவணனும், தாமோதரனும் ‘என்ன பாப்பா..?’ என கேட்க,

“ஒன்னுமில்ல மாமா. சும்மா பயம் காட்டுறாங்க..” என சிரித்தவள், பேப்பரை அவர்களிடம் கொடுத்துவிட்டு “ஆரி.. இதுக்கா நீ இவ்ளோ பதட்டப்பட்ட, அவங்க மேல கை வைக்கும் போதே எனக்குத் தெரியும். இந்த வகையிலும் என்னை டார்கெட் பண்ணுவாங்கன்னு. அதை எப்படி ஹேன்டில் பண்ணனும், சால்வ் பண்ணனும்னு ஆல்ரெடி எல்லாம் செட் பண்ணிட்டுத்தான் உள்ள வந்துருக்கேன். மார்னிங்க் நியூஸ் நமக்கு ஷாக்கா இருக்கும், ஈவ்னிங்க் நியூஸ் அவங்களுக்கு ஷாக்கா இருக்கும். நீ ஷாக்க குறை..” என அவள் பேசியது அங்கிருந்த அனைவருக்குமே கேட்டது.

அகானாவின் தெளிவான பேச்சு, அவளின் நிமிர்வான பார்வை, அதில் தெரிந்த கோபம் அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

சரியாக அதேநேரம் நித்யாவிடமிருந்து அகானாவிற்கு அழைப்பு வர, எடுத்தவள் ஹலோ சொல்லும் முன்னே “பாப்பா நீ ஓக்கே தான..” என கேட்க,

“ஹான்.. எனக்கென்ன.. நான் ஓக்கேதான். அவங்கதான் பயத்துல ஏதோ பண்ணிட்டு இருக்காங்க போல. எதுக்கு இந்த வேண்டாத வேலை. அரசு அதிகாரி மேல பொய்யான குற்றச்சாட்டு வச்சா, மான நஷ்ட வழக்கு போடுவாங்கன்னு கூடவா தெரியாது. சரியான ஆர்வக்கோளாறு போல..” என கிண்டலாக சிரிக்க, அந்தப் பக்கம் நித்யாவிற்கும் சிரிப்பு வந்துவிட்டது.

சிரித்தபடியே “ஆர்வக்கோளாறு இல்ல.. பதட்டத்துல என்ன பண்றோம்னு தெரியாம பண்ணிட்டு இருக்காங்க. நீ சீண்டிவிட்டா.. தானா வந்து சிக்குவாங்க..” என்றார் மேலும்.

“என்னோட டார்கெட் அவங்க இல்லை… நான் ஆஃபிஸ் கிளம்பனும். அங்க பார்க்கலாம்.. பை..” என வைத்தவள், தன்னையே பார்த்துக் கொண்டிருந்த மஞ்சரியிடம் “அந்த நித்யா தான் பேசினாங்க..” என்றாள் முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல்.

“அவங்க ஏன் உனக்கு கூப்பிடுறாங்க..?” என நவீன் குமரன் கேட்க,

“நியூஸ் பார்த்துட்டு கூப்பிட்டுருக்காங்க. இதெல்லாம் ஒன்னுமில்ல..” என்றவள் தன் அறைக்கு செல்ல, கனேசனும் சரவணனும் கவலையாக குமரனைப் பார்க்க,

“மாமா.. அம்முவுக்கு எல்லாம் தெரியும். அவ போக்குல அவளை விடனும். அவளோட இந்த வேலையில இதைவிட மோசமான சூழலை கூட பார்க்க வேண்டி வரும். நாம அவளுக்கு எப்போவும் நாங்க உன் கூட இருக்கோம்னு சொல்லிட்டே இருக்கனும். அதுதான் நம்மளோட வேலை. அவளுக்கு அட்வைஸ் பண்றதா நினைச்சு பயமுறுத்தக்கூடாது..” என்றான் நவீன்.

தாமோதரனும் கூட அதையேதான் சொன்னார். “அம்முவுக்கு இந்த வேலையோட முக்கியத்துவம் தெரியும். நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும். நாம அவளுக்கு சப்போர்ட் தான் செய்யனும்.” என்றவர், நேற்று மைதிலி துரைப்பாண்டியனை பார்க்க வந்ததை கூற,

“அந்த பொம்பளைய அப்படியேவா விட்டுட்டு வந்தீங்க..” என்றான் குமரன் கோபமாக.

“துரை அண்ணன்கிட்ட சொல்லிட்டுத்தான் வந்துருக்கேன்..” என்றவன் நவீனைப் பார்த்து, “நீதான் அவரைப்பத்தின டீடைல்ஸ் எல்லாம் அம்முவுக்கு கொடுத்ததா? அவர் மேல ரெய்ட்க்கு அப்ளை பண்ணிருக்கலாம் அம்மு அப்படியா?” என கேட்க,

“ம்ச்.. நான் இல்லை… அது அந்த இண்ஸ்பெக்டர் உதய்தான். நான் அந்த கஞ்சா கேஸ் மட்டும் தான் கொடுத்தேன்..” என்றதும், அவனை நம்பாமல் பார்த்தார் தாமோதரன்.

“விடுங்க மாமா.. பிள்ளைங்க வளர்ந்துட்டாங்க.. அவங்க என்ன செஞ்சாலும் சரியா இருக்கும்.. பார்த்துக்கலாம்..” என்று இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே கிளம்பி வந்திருந்தாள் அகானா.

அவளைப் பார்த்த கனேசன் “பாப்பா அம்மாவை நாங்க ஊருக்கு கூட்டிட்டு போறோம். ஒரு வாரம் சமாளிச்சிக்குவியா?” என்றவரிடம்

மஞ்சரியைப் பார்த்த அகானா “தாராளமா கூப்பிட்டு போங்க மாமா.. நான் சமாளிச்சுக்குவேன்..” என்றவள் மஞ்சரியிடமும் “ம்மா ஆரி இங்கதான் இருக்கான். சோ டோன்ட் வொரி.. நீங்க போய்ட்டு வாங்க. நான் லீவ் அப்ளை பண்றேன்.. அப்ரூவ் ஆகிடுச்சின்னா நெக்ஸ்ட் வீக நானும் ஆரியும் வரோம்..” என்றதும் தான் மஞ்சரியின் முகம் சற்று தெளிந்தது.

காலை உணவை முடித்து, அனைவரிடமும் விடைபெற்று வெளியில் வர, கண்ணன் அவளுக்கான பைகளை வாங்கிக்கொண்டு முன்னே நடந்தார்.

அவளின் நிமிர்வான நடையைப் பார்த்து “மஞ்சு அம்முவுக்கு முதல்ல திருஷ்டி கயிறு வாங்கி காலுல கட்டிவிடனும்.. நம்ம கண்ணே முக்கால்வாசி பட்டிருக்கும்..” என்றார் கவிதா.

‘ஆம்’ என்பது போலவே இஉர்ந்தது அனைவரின் பார்வையும். அப்போது நவீன் “ப்பா.. மதுரையில ஒரு அடிக்ஷன் சென்டர் இருக்கு.. அங்க ஓக்கேவான்னு அம்மு கேட்டா.. அதோட டீடைல்ஸ் அனுப்பிருக்கா. நீங்க ஒரு டைம் பாருங்க. கண்டிப்பா ஃபிஃப்டீன் டேய்ஸ் அங்க இருக்கனுமாம். அப்போதான் செர்டிஃபிகேட் கிடைக்கும்னு சொல்றா.. உங்களுக்கு ஓக்கேவா..” என அந்த போட்டோக்களைக் காட்ட, அந்த இடமே அமைதியாக, பார்க்கவே ரம்மியமாக இருந்தது.

“நல்ல இடமாத்தான் இருக்கு.. ஆனா பதினைஞ்சு நாள்தான் கஷ்டமா இருக்கு..” என சிரிக்க, “போய்ட்டு வாங்க ப்பா.. பார்த்துக்கலாம்..” என குமரனும் கூற,

“சரி போய்ட்டு வரேன்…” என தாமோதரனும் கூற, அனைவரும் ஊருக்கு கிளம்பும் வேலையில் இறங்கினர்.

இங்கு காரில் ஏறியதுமே கண்ணன் “மேடம்.. இந்த நியூஸ்க்காக எங்கொய்ரி வைக்கவும் வாய்ப்பிருக்கு..” என்றதும்,

“எஸ்.. ஐ நோ.. பார்த்துக்கலாம் விடுங்க..” என்றவள், தன் மொபலை பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.
ரவீந்திரன் வீட்டில் மைதிலியிடம் கத்திக் கொண்டிருந்தார். “உன்னை யார் இந்த வேலையை செய்ய சொன்னது? இப்போ நீயேதான் எனக்கும் அம்முவுக்குமான உறவை வெளிய சொல்லிருக்க.. அவ எங்கேயும் நான்தான் அப்பான்னு சொல்லல.. நீயே தம்பட்டம் அடிச்சி சொல்லிட்ட..” என கத்த,

“அவ செஞ்ச வேலைக்கு அப்படியே விட சொல்றீங்களா? என்னால அப்படி விட முடியாது.. என்னையே ஒட்டிக்கிட்டவங்களான்னு ஊர் முன்னாடி அசிங்கப்படுத்துவாளா? அவளை நான் ஒன்னும் பண்ணாம விடனுமா?” என பதிலுக்கு கத்த, சரஸ்வதிக்கே எரிச்சல் வந்துவிட்டது.

“என்ன செஞ்சு வச்சிருக்க மைதிலி.. அவ அவளோட வேலையை செஞ்சிருக்கா? சும்மா இருந்தவளை சீண்டிவிட்டு வந்துருக்க.. இப்போ அவளோட அப்பா நம்ம ரவின்னு சொன்னதும் இல்லாம, அந்த மஞ்சரிதான் ரவியோட முதல் பொண்டாட்டின்னும் சொல்லிட்டு வந்துருக்க.. இப்போ ஏன் அவ போனா? என்ன நடந்ததுன்னு விசாரிக்க ஆரம்பிச்சா என்ன நடக்கும் தெரியுமா? அவளை மிரட்டி எழுதி வாங்கினது, இந்த ஊரைவிட்டு ஓட வச்சது எல்லாம் தெரிய வரும். அப்போ ஊர் முழுக்க மட்டுமில்ல, உலகமே நம்மளைப் பார்த்து காரித்துப்பும். அதைத்தான் செஞ்சிட்டு வந்துருக்க..?” என காட்டமாக கூற,

“ம்ச்.. இங்க பாருங்க.. நீங்க என்ன வேணும்னாலும் சொல்லிக்கோங்க. எனக்கு அதைப்பத்தி கொஞ்சமும் கவலை இல்லை. நான் என்னோட வாழ்க்கையை காப்பாத்திக்கனும். அதுக்காக நான் செய்ற எல்லாமே சரிதான்..” என்று மைதிலி அகங்காரமாக கத்த,

“உன் வாழ்க்கையா? என்ன வாழ்ந்துட்ட நீ? உன் வாழ்க்கையை காப்பாத்த போற? நீ சொல்றதுக்கெல்லாம் தலையாட்டி, நீ சொன்னதெல்லாம் கேட்டு உன்னை என் மகனுக்கு கட்டி வச்சு நான் தான் பெரிய தப்பு பண்ணிட்டேன் போல…” என சரஸ்வதி கோபமாக கூற, ரவீந்திரனே திகைத்துப் போனார் என்றால், மைதிலியின் நிலையை சொல்லவும் வேண்டுமா?

“என்ன பேசுறீங்க நீங்க? அப்போ உங்க பையனை மாதிரியே உங்களுக்கும் அவங்களைப் பார்த்ததும் பாசம் பொத்துக்கிட்டு ஊத்துதோ? என்ன பழசெல்லாம் மறந்துடுச்சா? என் பையனை எங்கிட்ட வர வைக்கனும், அது உன்னாலத்தான் முடியும்.. உன் பணத்தாலதான் அவனை திரும்ப வர வைக்கமுடியும்னு எங்கிட்ட கால்ல விழாத குறையா கெஞ்சினது மறந்துடுச்சு போல.. மறந்தா நியாபகத்துக்கு கொண்டு வந்துடுங்க.. நீங்க எனக்கு எழுதிக் கொடுத்த பத்திரமும் அப்படியே இருக்கு..” என நக்கலாக சிரிக்க, ரவீந்திரனுக்கு அந்த பேச்சில் உடலெல்லாம் கூசிப் போனது.

சரஸ்வதியோ “என்ன மிரட்டுறியா? நான் செஞ்சதை இல்லைன்னு சொல்லவே இல்லையே.. ஆனா இப்போ அந்த நியூசைக் கொடுத்து, நீயாதான் போய் அவ வலையில விழுந்துருக்க. எப்படி அவக்கிட்ட இருந்து தப்பிச்சு வெளிய வரதுனு யோசி.. என்கூட நீ பொறுமையா சண்டை போடலாம்..” என நக்கலாக பேசிவிட்டு சரஸ்வதி சென்றுவிட, அப்போதும் மைதிலி அசரவில்லை.

என்னிடம் பணம் இருக்கிறது.. அதை வைத்து எதையும் என்னால் சாதிக்க முடியும்.. என்ற திண்ணக்கத்தில் யாரையும் மதிக்காமல் தன் போல் அனைத்தையும் செய்தார்.

ஆனால் அகானாவிடம் இருப்பது ‘மாவட்ட ஆட்சியர்’ என்ற பதவி இருப்பதை மறந்து போனார். அவள் தன் கண்ணில் விரல் விட்டு ஆட்டும் சூழலை தானே உருவாக்கிவிட்டோம் என்பதை மறந்து போனார்.