• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எந்தன் ஜீவன் நீயடி..! - 01

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
176
157
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
எந்தன் ஜீவன் நீயடி..! - 01

பெங்களூர்


சனிக்கிழமை காலை..



மல்லேஸ்வரி பகுதியில் இருந்த லோட்டஸ் மகளிர் விடுதி..


அம்பரிக்கு அன்று விடுமுறை. ஆகவே சற்று சாவகாசமாய் எழுந்து நிதானமாக குளியலை முடித்துவிட்டு, காலை உணவையும் முடித்தபோது தந்தையின் கைப்பேசி அழைப்பு வந்தது. அவளுக்கு முதலில் தோன்றிய உணர்வு ஆச்சரியம்தான். ஆனால் அடுத்து.. இந்த நேரத்தில் திடுமென ஏன் அழைக்கிறார்... என்று லேசான பதற்றமும் உண்டாயிற்று. தந்தை தினமும் பேசுகிறவர் இல்லை. அப்படியே பேசுவதானால் இரவு பத்து மணிக்குதான் அழைப்பார். அவ்வப்போது ," அவள் இருப்பதையே தந்தை மறந்து விடுகிறாரோ", என்று தோன்றும் அளவிற்கு தொடர்ந்து ஒருவாரத்திற்கு மேலே பேசாமல் இருப்பவர்தான். அவரது வேலை அப்படி என்று காரணம் புரிந்தாலும், "ஏனோ தந்தைக்கு அவள் ஒரு பொருட்டே இல்லை" ,என்றுதான் தோன்றும்..


ஆனால் இன்றைக்கு இந்த நேரத்தில் அழைக்கிறாரே ஏன்..?அவர்தான் அழைக்கிறாரா?. அல்லது அப்பாவுக்கு ஏதும் நேர்ந்து வேறு யாரேனும்.. அழைக்கிறார்களா?.. நினைக்கவே மனம் நடுங்கியது.. ஏற்கெனவே ஒருமுறை அனுபவித்த வலியே இன்னும் நீங்கவில்லை... அதற்குள் இன்னொன்று என்றால் அவள் தாங்க மாட்டாள்.. நொடியில் உலகை வலம் வந்துவிடும் வல்லமை படைத்த மனம்... வேகமாக கற்பனை செய்து கொண்டிருக்க..சங்கீதமாக அழைக்கும் கைப்பேசியை எடுக்க ஏனோ அச்சமாக இருந்தது.


அதையே வெறித்தபடி இருக்கையில்.. ஒருமுறை மணி அடித்து ஓய்ந்து மீண்டும் ஒலிக்க.. என்னவோ ஏதோ என்று பதறிய மனதை திடப்படுத்த பிரயத்தனம் செய்தவாறு.. கை நடுங்க எடுத்து உயிர்பித்தாள்..


"ஹ. ..ஹலோ.. அப்பா" என்று அம்பரி முடிப்பதற்குள்.. படபடவென்று அவளது தந்தை பேச ஆரம்பிக்கவும்.. நிம்மதி பெருமூச்சுடன்... அவரது பேச்சை கவனித்தாள்.


"அம்பரி, கவனமாக கேள். உடனே ஊருக்கு கிளம்பி வா. வேலைக்கு ஒரு பத்து நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு வா. இங்கே உன் அத்தை ரொம்ப உடம்புக்கு முடியாமல் இருக்கிறாங்க.... இன்னும் நாலு நாட்கள் கூட தாங்காது என்று.. டாக்டர் கெடு விதிச்சுட்டார்.. என்றபோது குரல் கமற..



"திடீரென்று அத்தைக்கு என்னாச்சு அப்பா. ஒரு வாரமாக வேலை அதிகம் அதனால் நான் பேசவில்லை " என்றாள் கவலையுடன் .


உடனே தொண்டையை செருமி சீர் செய்து..."அது நாலு நாளாக காய்ச்சல். கொஞ்சம் குணமாச்சு, அப்புறம் நல்லாதான் இருந்தாங்க, இரண்டு நாளைக்கு முன்னாடி பேசிட்டு இருந்தப்போ திடீரென்று மயக்கமாகிட்டாங்க, டாக்டரும், அவங்க மனசுல ஏதோ ஏக்கம், ஒரு வேளை தன்னோட பொண்ணுங்களையும் பேரன் பேத்திகளை பார்த்தால், மனசுக்கு மாற்றமாக இருக்கும்னு சொன்னார். கூடவே, கொஞ்சம் கவலைக்கிடம்னு சொன்னார். "அதனால தகவல் சொல்லி வெளிநாட்டில் இருந்து அவங்களோட இரண்டு பொண்ணுங்களும் குடும்பத்தோடு நேற்று வந்துவிட்டார்கள். பிள்ளைகளை பார்த்தாலே எழுந்து உட்கார்ந்து விடுவாங்கன்னு நம்பினேன்.


ஆனால், அக்காவிடம் எந்த முன்னேற்றமும் இல்லை. "இப்போது நிலைமை கைமீறிப் போயிடுமோ", என்று கொஞ்சம் பயமாக இருக்கிறது.. அதுக்காக ஒரு முடிவை அவசரமா எடுக்க வேண்டும். அது பத்தி உன்கிட்ட பேசணும்.. அதை இப்ப விவரமா போனில் சொல்ல முடியாது. அடுத்து எந்த பிளைட் கிடைக்குதோ அதில் கிளம்பிவிடு, முடிஞ்ச அளவு நீ சீக்கிரம் வந்து சேரு" என்றவர் அவள் பதிலுக்கு கூட காத்திராமல் இணைப்பை துண்டித்து விட்டிருந்தார்.


தந்தையின் இந்த நடவடிக்கை ஒன்றும் அவளுக்கு புதிதில்லை. மாறாக அவர் இவ்வளவு நீளமாக பேசியதே ஆச்சர்யம் தான். அதிலும் அவர் சொன்ன செய்தி உண்மையில் அவளை அதிர வைத்தது, எனலாம்.


அம்பரி அழகான இளம் பெண். சந்தன நிறம். 5.7அடி உயரமும் அதற்கு ஏற்ப தேகம், இடை வரை அழகாக வெட்டப்பட்ட நீண்ட கூந்தல்,. என்று பார்ப்பவரை கவரும் வண்ணம் இருப்பவள். ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் கை நிறைய சம்பளத்துடன் நல்ல பதவியில் அவளுக்கு வேலை. சில கசப்பான சம்பவங்களின் விளைவாக அவளுக்கு ஆண்கள் என்றால் சற்று கடுப்புதான். அதிலும் பணக்கார ஆண்கள் என்றால் நின்று கூட பேச மாட்டாள். அவ்வளவு வெறுப்பு.


படிப்பை முடித்ததும் வேலையும் கிடைக்க கிளம்பி வந்துவிட்டாள். அதன் பின் கடந்த மூன்று ஆண்டுகளாக, அவள் ஊருக்கு போகவில்லை. இப்படி ஒரு சூழல் வரும் என்று அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. பழைய நினைவுகள் மனதை ஆக்கிரமிக்க... தலையை உலுக்கி அதை ஒதுக்கிவிட்டு, அவள் செய்ய வேண்டிய விஷயங்களில் மனதை செலுத்தி விரைவாக கிளம்புவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டாள்.


வேலைக்கு சேர்ந்தது முதலாக அதிகமாக விடுமுறை எடுக்காமல் இருந்தினால் அவள் பணிபுரியும் நிறுவனத்தில் எளிதாக பத்து நாட்கள் லீவு கிடைத்தது. தேவையான உடமைகளை பெட்டியில் சேகரித்துக்கொண்டு, ஆயிரத்தெட்டு விதிமுறைகளை கடைப்பித்தாக வேண்டுமே.. என்று சற்று முன்னதாகவே அம்பரி விமான நிலையத்திற்கு கிளம்பிவிட்டாள்.


***

விமானத்தில் ஏறி அமர்ந்தவளுக்கு அக்கம் பக்கம் எதுவும் கருத்தில் படவில்லை. தாயில்லாத குறை தெரியாமல் வளர்த்த அத்தையின் உடல்நிலை சரியில்லை என்ற நினைவு தான் தாங்க முடியாத துயரமாக இருந்தது. கடந்த மூன்று ஆண்டு காலம் அவள் தான் போகவில்லையே தவிர, அத்தையோ அப்பாவோ வந்து பார்த்து விட்டு போவார்கள்.மேலும் அவ்வப்போது அத்தையுடன் போனில் பேசிக்கொண்டு தான் இருந்தாள். அது மட்டுமின்றி அவளுக்கு முடிந்த போது காணொளியிலும் பேசுவதுதான் . அவரது குரலில் தென்படும் ஆயாசம், "வயதினால்" என்று எண்ணியிருந்தாள். பத்து நாட்கள் முன்பு கூட வீடியோ கால் செய்தபோது பார்க்க நன்றாகத்தான் தோன்றினார். முகத்தில் காட்டிக் கொள்ளாவிட்டாலும் கண்களில் அந்த கவலை, ஒருவித சோர்வு தெரியத்தான் செய்தது.


அது அவரது மகனால் என்பதை உணர்ந்திருந்த காரணத்தால் அவள் அதுபற்றி எப்போதும் பேசுவது கிடையாது. பொதுவாகவே அவள் கீர்த்திவாசன் பேச்செடுத்து பேசமாட்டாள். பிள்ளை பெற்றோருக்கு பெருமை சேர்த்திருந்தால் அவனைப் பற்றி வாய் வலிக்க பிறரிடம் பேசலாம். ஆனால் அவன் அப்படியில்லை என்கையில்.. அத்தையும் மகனைப் பற்றி அவளிடம் பேசுவதில்லை. ஒரே நல்ல விஷயமாக அவன் சொந்த ஊருக்குள் எந்த கண்றாவியையும் செய்து வைக்கவில்லை என்பது தான் ஆறுதல்.


ஆனால் பத்து நாட்களுக்குள் அந்த துரை என்ன பண்ணித் தொலைத்தான்? என்ற எண்ணம் ஓடும்போதே,அவன் இந்தியா வந்து நாலைந்து ஆண்டுகளுக்கு மேலாகிறது என்பதும் நினைவுக்கு வந்தது.. ஒருவேளை மகனைப் பாராத ஏக்கம் தான் அத்தைக்கு இப்படி ஆகிவிட்டதோ..? என்று தோன்ற கீர்த்திவாசன் மீது அவளுக்கு மிகுந்த ஆத்திரம் உண்டாயிற்று.


●●●

அம்பரி பண்ணை வீட்டை அடைந்த போது நள்ளிரவு தாண்டிவிட்டது. ஆகவே, பின் பக்கமாக இருந்த அவுட்ஹவுஸ் வாசல் அருகே வண்டியை நிறுத்தச் சொன்னாள். ஊரே அமைதியான தூக்கத்தில் ஆழ்ந்திருந்தது. காரில் இருந்த சாமான்களை எடுத்துக் கொண்டு அவர்களது பகுதிக்கு சென்றாள்.

நித்யமூர்த்தி அந்த ஊருக்கு தன் மக்களோடு வந்த பின்,தனக்கு தனி வீடு பார்க்க வேண்டும் என்று சொன்னபோது, ஆனந்தவள்ளி அவர்களுக்கு, பண்ணை வீட்டினை ஒட்டியே கட்டப்பட்டிருந்த அந்த அவுட்ஹவுஸை ஒதுக்கி கொடுத்திருந்தார். தானும் அவ்வப்போது பிள்ளைகளை கவனித்துக்கொள்ள வசதி என்று அவர் கூறவும் நித்யமூர்த்தி மேற்கொண்டு மறுக்கவில்லை.

அந்த சிறிய வீட்டில் எதிரும் புதிருமாக குளியல் அறை வசதியுடன் இருந்த இரண்டு அறைகள், அவற்றை இணைக்கும் விதமாக இடையில் சிறு கூடம் போன்ற பொது பகுதியும் இருக்கும். அதில் சின்னதாக குறு மேசையும், இரண்டு ஒற்றை சோபாக்களும் , ஒரு இரட்டை சோபாவும் போடப்பட்டிருந்தது.

அந்த பொது அறையில் தான் நித்யமூர்த்தி மகளுக்காக காத்திருந்தார். அவளுக்கு அது சற்று ஆச்சரியம் தான்.. அதை காட்டிக்கொள்ளாமல், "அத்தை எப்படி இருக்கிறாங்க அப்பா? இப்ப போய் பார்த்து வரலாமா? என்று விசாரித்தாள்.

"அத்தை அப்படியே தான் இருக்காங்க.. வீட்டில் மற்றவர்கள் தூக்கத்தில் இருக்கிறார்கள். இப்ப போனால் விளக்குகளை போட வேண்டியிருக்கும்" அம்பரி. அதனால் நாளை காலையில் போய் பார்க்கலாம். நீ முதலில் பயண களைப்பு தீர குளி, அப்புறம் அந்த பிளாஸ்க்கில் பால் இருக்கு குடிச்சிட்டு படும்மா. எதுவானாலும் காலையில் பேசிக்கலாம்" என்றார் ,நித்ய மூர்த்தி.


"சரி அப்பா. நீங்க போய் படுங்க" என்று தந்தையை அனுப்பிவிட்டு, அறைக்குள் சென்று உடமைகளை வைத்துவிட்டு அவளுக்கு இருந்த அசதியில் அப்படியே படுத்துக்கொள்ளலாம், என்று தோன்றியது. ஆனால் பயணக் களைப்பு நீங்க உடல் கழுவிக்கொண்டு படுத்தால் தான் நன்றாக உறங்க இயலும் என்று பெட்டியை திறந்து உடுத்த வேண்டியதை எடுத்துக் கொண்டு குளிக்கப் போனாள் அம்பரி. ஆனால் உள்ளூர சிந்தனை ஓடியது.. எப்போதும் திடமாக காணப்படும் தந்தை அன்று இயல்பாக இல்லை. அத்தையை பற்றி கலங்குகிறாரோ? அல்லது வேறு எதுவும் பிரச்சனையோ? எப்போதும் அவர் மனம் விட்டு பிள்ளைகளிடம் பேசுகிறவர் இல்லை. எல்லாம் விடிந்தால் தெரிந்து போகும்.. என்று எண்ணியவாறே படுத்தவள் சற்று நேரத்தில் நித்திரையில் ஆழ்ந்துவிட்டாள்.


காலையில் விழிப்பு வந்தபோது மணி ஒன்பது. வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்தவள், வேகமாக, பல் தேய்த்து, குளித்து முடித்துவிட்டு, சின்னதாக கூடம் போன்றிருந்த பொது அறையில் சென்று பார்த்தாள். ஃபிளாஸ்க்கில் காஃபி இருந்தது. கூடவே ஃஹாட் பாக்கில் காலை உணவும் இருந்தது.


ஈர கூந்தலை உலர்த்திவிட்டு, காபி பலகாரத்தை அவசரமாய் முடித்து விட்டு, வீட்டின் உள்ளே சென்றாள் அம்பரி. அவர்கள் பகுதிக்கு அடுத்த கட்டு, சமையல் சாமான்கள், பொருட்கள் வைக்கும் அறை, அதற்கு அடுத்து சமையல் மற்றும் சாப்பாட்டு அறை. அதற்கு அடுத்து பெரிய திறந்த வெளி முற்றமும், நான்கு புறத்திலும் அறைகளும் அடுத்த முன் பகுதியில் பெரிய கூடமும் அங்கே விருந்தினர் தங்கும் அறைகளும் உண்டு. அந்த திறந்த வெளி முற்றத்திற்கு வந்தபோது, கூடத்தை அடுத்து முன்புறம் பிரதான வாயிலில், அத்தையின் மகள்களும் அவர்களது மக்களும் எங்கோ கிளம்பிக் கொண்டிருந்தனர். வண்டியை எடுக்கச் சொல்லி பெரியவள் ஈஸ்வரி கட்டளை பிறப்பித்துக் கொண்டிருந்தாள். அடுத்தவள் சங்கரி சாப்பாடு கூடைகளை வண்டியில் ஏற்றச் சொல்லிக் கொண்டிருந்தாள்.


அத்தை உடம்பு முடியாமல் கிடக்கிறார்கள். இவர்கள் எங்கே கிளம்புகிறார்கள்? என்று மனம் பதற சமையல் அறையில் நின்று பார்த்திருந்தாள் அம்பரி. அவர்கள் எல்லாரும் கிளம்பிச் செல்ல, திரும்பி உள்ளே வந்த சமையல்கார பெண்மணி சுப்பம்மா அவளை கவனித்து விட்டு,"கண்ணு எப்ப வந்தே? என்று ஆவலுடன் வினவினாள்.


"நான் ராத்திரி வந்தேன், சுப்பம்மா. நீங்க எப்படி இருக்கீங்க? உங்க பொண்ணு,பேரன் எல்லாம் சுகமா?என்று பதிலுக்கு விசாரித்தாள்.


"எங்களுக்கு என்னா கண்ணு, நல்லா இருக்கோம். பெரியம்மா தயவுல நல்லா இருக்கோம்... ஆனால் பெரியம்மா தா உடம்புக்கு முடியாத படுத்து கிடக்கிறாங்க, பார்க்க பார்க்க மனசு ஆறலைம்மா.. எப்படி சுறுசுறுப்பாக இருந்த மகராசி.., இரண்டு நாளைக்கு முன்னாடி கூட நல்லா பேசிக்கிட்டு தான் இருந்தாங்க.. திடீர்னு என்னாச்சுனு ஒன்னும் புரியலைமா" என்றாள் கண்கள் கலங்க..


"அத்தைக்கு ஒன்றும் ஆகாது, கடவுளை வேண்டிக்கோங்க,நான்.. நான் போய் அத்தையை பார்த்துவிட்டு வர்றேன்" என்றுவிட்டு உள்ளே விரைந்தாள்.


கூடத்தின் இடது புறமாக இருந்த விருந்தினர் அறைகளுள் ஒன்றில் தான் ஆனந்தவள்ளிக்கு சிகிச்சை நடந்து கொண்டிருந்தது.. அந்த அறையின் வாசலில் நீள சோபா ஒன்று போடப்பட்டிருந்தது. அதில் தான் நித்யமூர்த்தி கண்களை மூடி சாய்ந்திருந்தார்.

- ஜீவ ராகம் தொடரும்.

- கலீல் ஆயிஷா.(எழுத்தாளர்)

01.08.2021
 
Last edited:

Saranya writes

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
24
12
3
Virudhunagar
நல்ல தொடக்கம். வாழ்த்துகள். முதல் அத்தியாயத்திலே அம்பரிக்கும் கீர்த்தி வாசனுக்கும் ஏதோ பிரச்சனை என்பது தெரிய வருகிறது. இப்படி எதிரும் புதிருமாய் இருப்பவர்களுக்கு மத்தியில் காதல் எப்படி துளிர்விடும் என்ற ஆர்வமும் இருக்கிறது. அருமையான எழுத்து நடை. பெயர்களும் அருமை. வாழ்த்துகள் தாயே.💙
 
  • Love
Reactions: Aieshak

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
176
157
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
நல்ல தொடக்கம். வாழ்த்துகள். முதல் அத்தியாயத்திலே அம்பரிக்கும் கீர்த்தி வாசனுக்கும் ஏதோ பிரச்சனை என்பது தெரிய வருகிறது. இப்படி எதிரும் புதிருமாய் இருப்பவர்களுக்கு மத்தியில் காதல் எப்படி துளிர்விடும் என்ற ஆர்வமும் இருக்கிறது. அருமையான எழுத்து நடை. பெயர்களும் அருமை. வாழ்த்துகள் தாயே.💙
நன்றி மகளே💜💜
 
  • Love
Reactions: Saranya writes

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,745
606
113
45
Ariyalur
அருமை அருமை அம்மா ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
ஒவ்வொரு தந்தைக்கும் மகள் என்றால் அவ்வளவு பிரியம் ஆனால் இந்த கதையில் கொஞ்சம் வித்யாசமான தந்தையாக நித்யமூர்த்தி, பாசத்திற்கு ஏங்கும் மகள் அம்பரி (பெயர் அருமை).ஏதோ ஒரு பாச நிர்பந்தத்தில் சிக்கி தவிக்க போகும் அம்பரி, வித்யாசமான கதை களம் அம்மா 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
 
  • Love
Reactions: Aieshak

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
176
157
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
அருமை அருமை அம்மா ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
ஒவ்வொரு தந்தைக்கும் மகள் என்றால் அவ்வளவு பிரியம் ஆனால் இந்த கதையில் கொஞ்சம் வித்யாசமான தந்தையாக நித்யமூர்த்தி, பாசத்திற்கு ஏங்கும் மகள் அம்பரி (பெயர் அருமை).ஏதோ ஒரு பாச நிர்பந்தத்தில் சிக்கி தவிக்க போகும் அம்பரி, வித்யாசமான கதை களம் அம்மா 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
மிக்க நன்றி மா, தொடர்ந்து வாசித்து நிறை மற்றும் குறைகளை பகிரவும்
 

தீபா செண்பகம்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
520
5
43
madurai
ஆரம்பம் சூப்பரா இருக்குகா. தொடர்ந்து வாசிக்க கண்கள் ஒத்துழைப்பதில்லை. அவ்வப்போது வாசித்து கமண்டிவிட்டுப் போகிறேன்.
 
  • Love
Reactions: Aieshak

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
176
157
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
ஆரம்பம் சூப்பரா இருக்குகா. தொடர்ந்து வாசிக்க கண்கள் ஒத்துழைப்பதில்லை. அவ்வப்போது வாசித்து கமண்டிவிட்டுப் போகிறேன்.
Thank you