• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எந்தன் ஜீவன் நீயடி..! - 02

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
176
157
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
எந்தன் ஜீவன் நீயடி - 02

மருத்துவர் கமலக்கண்ணன் அப்போதுதான் அறைக் கதவை திறந்து வெளியில் வந்தார். "மூர்த்தி, மருந்துகளால் தான் அவங்க உயிரை பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறோம். அவர்களிடம் முன்னேற்றம் கொஞ்சமும் இல்லை"

அம்பரிக்கு அவர் சொன்ன முதல் செய்தி பெருத்த அதிர்ச்சியை அளித்தது.. மனம் பதறியது.. அத்தைக்கு ஏன் இப்படி? கடவுளே எல்லார்க்கும் நல்லது செய்த பெண்மணிக்கு இப்படி ஒரு சோதனையா? அவள் நினைக்கும்போதே மருத்துவர் மேற்கொண்டு பேசுவதை கவனித்தாள்.

"நான் சொன்ன விஷயத்தை பற்றி என்ன முடிவு செய்தீர்கள்.. கீர்த்தி என்ன சொல்கிறான்? என்றார்.

டாக்டர் அங்கிள் என்ன சொல்கிறார்? எதைப் பற்றி முடிவு செய்ய வேண்டும்? அந்த துரை இந்நேரம் எந்த நாட்டில் எவளோடு சுற்றுகிறாரோ? கீர்த்திவாசன் நினைப்பில் அவளுக்கு மீண்டும் ஆத்திரம் உண்டாக.. மேற்கொண்டு யோசிக்க முடியாமல்.. தந்தையின் கரகரத்த குரல் ஒலித்தது.

"அது டாக்டர் அவன் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை... ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நான் உங்களுக்கு அப்புறமா போன் செய்து சொல்கிறேன்"என்றார்
நித்யமூர்த்தி.

"என்னால் ஆனமட்டும் மருத்துவத்தின் மூலம் செய்யகூடியதை எல்லாம் செய்துவிட்டேன். அடுத்து இருப்பது எனக்கு தெரிஞ்சு அது ஒன்றுதான் கடைசி முயற்சி. நேரத்தை கடத்தாமல் சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாருங்கள்.. நான் மதியம் வந்து பார்க்கிறேன்"என்றவர், அம்பரியை கவனித்துவிட்டு, அரைப் புன்னகையுடன்,"எப்படி இருக்கிறாய் லிட்டில் கேர்ள்? எங்களை எல்லாம் ஒரேயடியாக மறந்துவிட்டாயா?

"ஐம் ஃபைன் அங்கிள்.. அதெப்படி மறந்துவிடுவேன்? ஆன்ட்டி எப்படி இருக்கிறார்கள்? பிரபா அக்கா நல்லா இருக்காங்களா? போன் பண்ணினால் நான் ரொம்ப கேட்டதாக செல்லுங்கள்.."

"உன் ஆன்ட்டி நல்லா இருக்கிறாள். இப்போதே விசாரித்துக் கொள்வதை பார்த்தால், நீ எங்க வீட்டுக்கு வரும் உத்தேசம் இல்லையா? என்றார் பொய் மிரட்டலாக..

"அவசியம் வருகிறேன் அங்கிள். நான் லீவில் தான் வந்திருக்கிறேன்" என்றதும்,

"கண்டிப்பா வரணும்... என்று விட்டு "என்ன மூர்த்தி சார்? பெண்ணிற்கு எப்போது கல்யாணம் ?என்றார்.

"நித்யமூர்த்தி வேதனையுடன், "இந்த வருடம் அவளுக்கு முடித்துவிடலாம் என்று நினைத்தேன்.. ஆனால் அவள் தான் கல்யாணமே வேண்டாம் என்கிறாளே என்ன செய்யட்டும்? என்ற தந்தையின் பேச்சில் அம்பரியின் முகம் மாறியது.. கூடவே அப்பா இப்படி பிள்ளைகள் பற்றி அடுத்தவரிடம் புகார் சொல்கிறவர் இல்லையே... இப்போது ஏன்? என்ற யோசனை எழுந்தது..

"ஏன்மா அம்பரி ?என்றார் மருத்துவர்.

"அவசரமாக கல்யாணம் பண்ணி வைத்த அக்காவின் வாழ்க்கை என்னாயிற்று? என்று ஆத்திரமாக கேட்கத் துடித்த நாவை அடக்கிக்கொண்டு,"அப்பா சொன்னது உண்மைதான் அங்கிள்.. சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கொள்ள எனக்கு கொஞ்சமும் விருப்பமில்லை. முதலில் வேலைக்கு போகணும், என் காலில் நிற்கணும். வெளி உலகத்தை புரிஞ்சுக்கணும் என்று நினைத்தேன் அங்கிள். அதன்படி நான் இப்போது வேலைக்கு போகிறேன். ஆனால் எனக்கு கல்யாணம் செய்து கொள்ளும் எண்ணம் இன்னும் வரவில்லை. அவர் சொல்கிறார் என்று கல்யாணத்தை பண்ணிக் கொண்டு அப்புறமாக கஷடப்பட நான் தயாரில்லை .. இதில் ஏதும் தவறு இருக்கிறதா அங்கிள்?என்றாள் அம்பரி, ஆனால் அவள் அறியவில்லை.. அவளது திருமணம் அப்படித்தான், அடுத்தவருக்காக நடக்கப் போகிறது என்று..

"உன் பாயிண்ட் ஆஃப் வியூவில் சரிதான் அம்பரி.. சொல்லப்போனால் இன்றைய பெண்களுக்கு இந்த தெளிவு இருக்கிறது நல்லது.. என்றாலும் ஒரு மருத்துவனாக, ரொம்பவும் காலம் தாழ்த்தாமல் பண்ணிக்கொள்வது சிறந்தது என்பேன்"என்றவர் மணியை பார்க்கவும்,

அவரது கூற்றுக்கு பதிலளிப்பதை தவிர்த்து,"உங்களுக்கு ஹாஸ்பிடலுக்கு நேரமாகிவிட்டது அங்கிள்... நான் அத்தையை பார்க்கணும், இப்போது போகலாமல்லவா? என்று கேட்டாள் அம்பரி.

ஆமோதிப்பாக தலையசைத்து விட்டு நித்யமூர்த்தியின் தோளில் ஆறுதலாக தட்டிவிட்டு நகர்ந்தார் மருத்துவர்.

நித்யமூர்த்தி ஒரு பெருமூச்சுடன் அங்கிருந்து வேகமாக பக்கவாட்டு வாசல் வழியாக தோட்டத்தை நோக்கி சென்றார்.

அப்போது வீட்டின் முன்புறமிருந்து அங்கே வந்த சேர்ந்த உயரமான இளைஞன்.. அம்பரி சிகிச்சை அறைக்குள் செல்லவும் பின்னோடு ஓசையின்றி நுழைந்தான்.
❤❤❤

அந்த அறைக்குள் நுழைந்த அம்பரி பின்னோடு வந்தவனை கவனிக்கவோ உணரவோ இல்லை.. மாறாக அத்தையை பார்த்து திகைத்து போனாள். மருத்துவமனையின் உபகரணங்களோடு தீவிர சிகிச்சை பிரிவு அறையைப் போலவே காட்சியளித்தது அந்த அறை கட்டிலில் கிடந்த உருவம்.. அவளது அத்தையா அது? துவண்டு போன கொடி போலக் கிடந்தார். மூக்கிலும் கையிலும் குழாய்கள் மாட்டப்பட்டு அவளால் பார்க்கவே முடியவில்லை. அத்தை இப்படி உணர்வின்றி கிடப்பதை பார்த்ததுமே கண்ணீர் கட்டுக்கடங்காமல் வழிய.. அருகில் சென்று, அவரது வலது கையை மிருதுவாக பற்றினாள். வெகு பிரயத்தனத்துடன் துக்கத்தில் அடைத்த தொண்டையை சீர் செய்து கொண்டு பேசினாள்.

"அத்தை என்னைப் பாருங்க, உங்க அம்மு வந்திருக்கிறேன்..."ப்ளீஸ் அத்தை... கண்ணை திறந்து என்னை பாருங்களேன்" என்று குரல் கரகரக்க சொல்ல.. ஆனந்தவள்ளியின் கண் இமைகளில் மிக லேசான அசைவு உண்டாயிற்று.

அங்கே இருந்த நர்ஸ் வேதா, அம்பரி உள்ளே நுழைந்தது முதல் நோயாளிடம் அசைவு தெரிகிறதா என்று கூர்மையுடன் கவனித்துக்கொண்டு இருந்தாள். இரண்டு நாட்களாக ஒரு சிறிய முன்னேற்றம் உண்டாகாதா என்றிருந்த நிலையில் இந்த அசைவு.. பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தவே அவள் அந்த அசைவை குறித்துக்கொண்டு, அம்பரியை தொட்டு, தொடர்ந்து பேசுமாறு சைகை செய்தாள்..

அம்பரி தொடர்ந்து,"அத்தை என்னை பாருங்க... எனக்கு இன்னும் நீங்க சமையல் வேலை, வீட்டு வேலை எதுவுமே சொல்லி தரலை...எனக்கு எல்லாம் கத்துக் கொடுக்கிறதா சொன்னீங்கதானே?? சொன்ன வாக்கு மட்டும் எப்பவும் தவறக்கூடாதுன்னு சொல்வீங்களே அத்தை... நீங்க இப்படி படுத்துக் கொண்டால் அதை எல்லாம் எனக்கு யார் கற்றுத் தருவது அத்தை.. என்றவளுக்கு, சிறுவயது நினைவுகள் ஒவ்வொன்றாக ஆக்கிரமிக்க, தொடர்ந்து பேச முடியாமல், அவளது எண்ணக் கலவையில் மறைத்துவிட்ட சகோதரியின் நினைவும் சேர்ந்துகொள்ள, அழுகையை கட்டுப்படுத்த முடியாது போக.. அவள் உடைந்து அழுகையில் குலுங்க, அவரது அடுத்த கையின் விரல்கள் மிக மிக லேசாக அசைந்தது, கூடவே மெல்ல கண்களை திறக்க முயன்றார்...

அந்த இளைஞன் இரண்டே எட்டில் அம்பரியை அணுகினான்.."ஷ்..ஷ் அம்பரி.. ப்ளீஸ் அழாதே.. உன் அத்தை நீ இப்படி அழுவதை பார்த்தால் தாங்குவார்களா?" என்று ஆழ்ந்த குரலில் அவளுக்கு மட்டும் கேட்கும்படி கூற.. சட்டென்று அழுகை நிற்க.. திடுக்கிட்டு திரும்பியவள், அவளருகே, நின்றவனை பார்த்து அதிர்ந்து போனாள்.. அவன் உணர்ச்சியற்ற பார்வையுடன் அவளை பார்த்திருந்தான்..

அவன்..அத்தையின் ஒரே ஆண் வாரிசான கீர்த்திவாசன்.. திடுமென அவனை அத்தனை அருகாமையில் பார்த்ததில் ரொம்பவே வெவெலத்துப் போனாள்.. சிலகணங்கள் மூளை மரத்து போனதுபோல ஒன்றும் ஓடவில்லை... திக்பிரமை பிடித்தார் போல் அசைவற்று நின்றாள்.. இதயம் வேறு வேகமாய் படபடத்தது.. அவனது முகத்தில் இருந்து விழிகளை அகற்ற முடியாமல் திகைத்தாள். அவனும் ஏதோ மந்திரத்திற்கு கட்டுண்டவன் போல அசையாமல் நிற்க..

ஆனந்தவள்ளியின் கண்கள் மெல்ல மெல்ல திறக்க.. பார்வை சுற்றி சுழன்று வந்து அங்கே நின்ற இருவர் மீதும் படர்ந்து தீவிரமாக நிலைக்க..

அவரிடமே கவனத்தை வைத்திருந்த அந்த நர்ஸ்..thank God என்றாள்.. தொடர்ந்து.. உடனடியாக அம்மாளின் நாடித் துடிப்பை சோதித்தாள்.. இன்னும் சில பரிசோதனைகளை செய்துகொண்டிருக்க..

அந்த குரலில் நிகழ்வுக்கு திரும்பிய இருவருக்கும், சுற்றுப்புறம் கருத்தில் பட.. ஏதோ உணர்வு உண்டாக.. அம்பரி சட்டென்று அத்தையை திரும்பி பார்த்தாள்.. கீர்த்திவாசனும் அவளிடம் இருந்து விலகி தாயை பார்த்தான்.. அவர்களையே பார்த்த வண்ணம் புன்னகைக்க முயன்று முடியாமல் மறுபடியும் அவரது கண்கள் மூடிக்கொள்ள..

இருவருக்கும் பதற்றம் தொற்றிக்கொண்டது.. அம்பரிக்கோ மீண்டும் துக்கத்தில் தொண்டை அடைத்து கண்கள் குளமாயிற்று.

கீர்த்திவாசன் பதற்றத்துடன் நர்ஸிடம் சென்றான்.. அம்மாவுக்கு என்னாச்சு சிஸ்டர்? கண்ணை விழித்தார்களே.. என்று சந்தோஷப்படுமுன் மூடிக்கொண்டார்களே? என்று வினவ..

"ரிலாக்ஸ்.. மிஸ்டர் கீர்த்திவாசன், பயப்படாதீங்க.."என்றவள் ஏறிக்கொண்டு இருந்த ட்ரிப்பில் ஊசியால் மருந்தை ஏற்றினாள்..

இப்போதைக்கு அவங்களுக்கு பிரச்சினை எதுவும் இல்லை.. நினைவு திரும்பிடுச்சு.. தூங்குகிறார்.. பூரண ஓய்வு தேவை.. ஆனால் வேறு ஏதும் பிரச்சினை இருக்கிறதா? இல்லையா? மேற்கொண்டு என்ன சிகிச்சை அளிப்பது என்பதை டாக்டர்தான் சொல்லவேண்டும்.. so excuse me டாக்டருக்கு சொல்ல வேண்டும்" என்றுவிட்டு அந்த நர்ஸ் வேதா,கைப்பேசியுடன் வெளியே விரைந்தாள்.

கீர்த்திவாசன் அம்பரியை பார்த்தான்.. அவள் அம்மாளின் கையை எடுத்து கன்னத்தில் வைத்தபடி கண்களை மூடி நின்றிருந்தாள்.. மெல்ல அங்கிருந்து வெளியௌறினான்..

சிலகணங்களில் அம்பரியும் வெளியே வந்தபோது.. அந்த நர்ஸிடம் ஏதோ பேசிவிட்டு கீர்த்திவாசன் அடுத்திருந்த நூலக அறைக்குள் நுழைந்ததைப் பார்த்தாள்.. யோசனையுடன்
சற்று முன் தந்தை அமர்ந்திருந்த சோபாவில், அமர்ந்து கொண்டாள்.. நர்ஸ்ஸின் வார்த்தைகள் ஆறுதலாக இருந்தாலும்.. அத்தை பூரணமாக குணமடைய கடவுளை வேண்டிக் கொண்டாள். எப்படி இருந்த அத்தை.. இன்றைக்கு வேர் அறுந்த மரமாய் சாய்ந்து கிடக்கிறார்.. இதற்கெல்லாம் காரணம் என்ன? திடுமென அப்படி என்ன நடந்தது.. ஒருவேளை வழக்கம்போல துரைதான் காரணமோ? அந்த குற்றவுணர்வில் தான் இப்படி உருகுகிறானோ? அந்த வீட்டில் அவனுக்கு என்று பிரத்தியேக அறையை அவனது தந்தை கட்டித் தந்திருக்கிறார்.. அதை விட்டு நூலக அறைக்குள் என்ன செய்கிறான்..? யாரை நம்ப வைப்பதற்கு இந்த நாடகம்?? ஏதேதோ கேள்விகள் எழ.. அவள் குழப்பத்துடன் இருந்தபோது..

அரக்க பரக்க டாக்டரும் அவரைத் தொடர்ந்து நர்ஸ் வேதாவும் அத்தையின் அறையினுள் செல்ல.. பார்த்திருந்த அம்பரிக்கு டாக்டர் நல்ல செய்தி சொல்ல வேண்டும் என்று ஒரே தவிப்பாக இருந்தது..

பதினைந்துக்கும் மேலான நிமிடங்கள் கழிந்த நிலையில் வெளி வந்த மருத்துவர்,"கீர்த்தி எங்கேம்மா? என்று கேட்கும்போதே..

"நான் இங்கே இருக்கிறேன் அங்கிள், என்றவாறு அடுத்திருந்த நூலக அறையில் இருந்து வெளிப்பட்டான்.. கீர்த்திவாசன்.

"கொஞ்சம் என்னோடு வாப்பா என்றவர், நீயும் வாம்மா" என்று கூடத்திற்கு அழைத்துப் போனவர். சில கணங்கள் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தார்,

"என்னாச்சு அங்கிள் என்ன யோசிக்கிறீங்க.. அம்மா.. அம்மாவுக்கு ஒன்றுமில்லையே.. என்ற கீர்த்திவாசனின் குரல் கரகரத்தது.. அம்பரிக்கும் பதற்றமாகத்தான் இருந்தது.. டாக்டரின் மௌனம் உள்ளூர சற்று பயத்தையும் அளிக்க, சேலைத் தலைப்பை முறுக்கியபடி மருத்துவரைப் பார்த்தாள்..

"ஹூம்.. கொஞ்சம் கிரிட்டிக்கல் தான். நான் சொல்லப் போவதை கவனமாக கேளுங்கள்.. எங்கே கோமாவிற்கு சென்று விடுவாரோ என்று பயந்துகொண்டிருந்தேன். நல்ல வேளை.. அப்படி இல்லாமல் நினைவு திரும்பிவிட்டது.. என்றாலும் அம்மா பிழைத்திருப்பது தெய்வாதீனம்..
ஆனால் அவரது இதயம் மிகவும் பலவீனமாக இருக்கிறது.. எந்த அதிர்ச்சியையும் தாங்கக்கூடிய சக்தி அதற்கு இல்லை.. கூடுமானவரை மனஅழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளணும். இந்த வயதுக்கு அதிக வீரியமான மருந்து மாத்திரைகளை கொடுக்கவும் முடியாது.. சந்தோஷமாக வச்சுக்கோங்க..அத்தோடு நான் நேற்றைக்கு சொன்ன யோசனையை நிறைவேற்ற முயற்சி செய் கீர்த்தி. அதனால் அம்மா எழுந்து உட்கார்ந்துடுவாங்கனு சொல்லலை.. ஆனால் அவங்க இருக்கப்போறது இன்னும் எத்தனை நாட்கள் அல்லது வாரங்கள் என்று சொல்வதற்கில்லை.. அந்த கொஞ்ச காலத்திற்காவது அவர்கள் நிம்மதியான வாழ்வு வாழட்டும் என்பது என்னுடைய கருத்து..ஒரு வேளை அவங்க சந்தோஷப்படுறாப்ல நிகழ்ச்சி நடந்தால் இன்னும் சில மாதங்கள் அவரது ஆயுட்காலம் நீடிக்கும்.. என்பது என்னுடைய யூகம்.. டாக்டர் சொல்ல..

"அம்பரிக்கு அழுகையை அடக்க முடியவில்லை.. முகத்தை மூடிக்கொண்டு குலுங்கியவளை.. இரக்கத்தோடு பார்த்த மருத்துவர்.. அவளது தோளில் லேசாக தட்டிக் கொடுத்தவாறு,"நர்ஸ் உன்னை பத்தி சொன்னாளம்மா.. அத்தை மேல் உனக்கு இருக்கிற அளவுக்கடந்த பிரியம்தான்.. சொல்லப்போனால் உன் மீது அவர்களுக்கும் பிரியம் அதிகமாக இருக்கப்போய் தான் உன் அழுகை அவரை பாதித்திருக்கிறது.. அவங்களோட உயிரை மீட்டிருக்கிறது.. அதனால் நீ அவங்ககூட இருந்து பார்த்துக்கிட்டால் யார் கண்டது எழுந்து பழைய மாதிரி நடக்கவும் செய்யலாம்.. அத்தோடு நீ மனது வைத்தால்.. என்ற டாக்டரின் பேச்சில் குறுக்கிட்டான் கீர்த்திவாசன்..

"அங்கிள், ப்ளீஸ் வேண்டாம்.. வேண்டாம்.. அவள் இங்கே இருக்கட்டும். அவளோட அத்தையை கவனித்துக்கொள்ளட்டும்.. அதுவே போதும் அங்கிள்.. அதற்கு மேலே எதுவும் வேண்டாம். ஆனால் அம்மாவின் ஆசையை நான் எப்படியும் நிச்சயம் நிறைவேற்றுவேன்.. எனக்கும் அம்மா அதிக நாள் வாழணும் என்கிற ஆசை இருக்காதா அங்கிள் என்றபோது கீர்த்திவாசனின் குரல் தழுதழுத்துவிட.. உடனேயே சமாளித்துக் கொண்டு "இதோ வர்றேன்" என்றுவிட்டு எழுந்து உள்ளே சென்றான்..

கீர்த்திவாசன் பேசப்பேச.. அம்பரியின் அழுகை நின்று பேச்சை கூர்ந்து கவனித்தவள். உண்மையில் பிரமித்து போனாள்.. அவன் தான் பேசினானா? அவளால் நம்பவே முடியவில்லை.. முன்பு ஒருமுறை அவனது தாயின் மனதை நோகச் செய்தவன் இவன்தானா? எப்படி இந்த மாற்றம்? ஒரு வேளை மரணப் படுக்கையில் தாயை பார்த்ததால் மாறிவிட்டானா? அப்படித்தான் இருக்க வேண்டும் .. மற்றபடி அவனெல்லாம் திருந்துகிற ஜென்மமா? ஆனால் அவள் மனது வைத்தால் என்று டாக்டர் ஏதோ சொல்ல வந்தாரே.. அது என்ன?அவன் அதை தடுக்க என்ன காரணம்? விடை தெரியாத கேள்விகளுடன் அமர்ந்திருக்கையில்.. மன்னிப்புக் கோரியபடி.. திரும்ப வந்தான் கீர்த்திவாசன்.

"சரி, கீர்த்தி உன் விருப்பம் போல செய்.. தாமதப்படுத்திடாதே.. என்றவர் மணியை பார்த்துவிட்டு, "எனக்கு ஹாஸ்பிடலுக்கு நேரமாச்சு.. இன்றைக்கு மட்டும் ட்ரிப் ஏறட்டும்... நாளையில் இருந்து என்ன மாதிரி ஆகாரம் சாப்பிடலாம் என்பது பற்றி நர்ஸ் சொல்வாங்க.. அப்புறம்.. அவங்க கொஞ்சம் திடமாகிற வரைக்கும் நர்ஸ் இங்கே இருக்கட்டும்... நான் நைட் வந்து பார்க்கிறேன்" என்று எழுந்தவரிடம்..

"நான் அத்தையை பார்க்கலாமா டாக்டர்? "என்றாள் கரகரத்த குரலில் அம்பரி.

"இப்போது வேண்டாம் மா. மதியத்திற்கு மேலே விழித்து விடுவார்கள்.. அப்போது போய் பார்த்துக்கொள்.. ஆனால் முக்கியமாக அழுது வைக்காதே.. அவங்களை பேசவும் விடாதே... இப்போது அவங்களுக்கு இதமாக என்ன செய்ய முடியுமோ அதை மட்டும் செய்" என்று விட்டு கிளம்பிச் சென்றுவிட..

அப்போது நித்யமூர்த்தி தோட்டத்தில் இருந்து பக்கவாட்டு வாசல் வழியாக உள்ளே வந்தார்.. ஆளுக்கொரு இருக்கையில் பிரம்மை பிடித்தார்போல் அமர்ந்திருந்த இருவரையும் பார்த்தவர்,"என்னாச்சு? ஏன் இரண்டு பேரும் எதையோ பறிகொடுத்த மாதிரி உட்கார்ந்து இருக்கீங்க.. என்று இயல்பாக கேட்டவாறு வந்தவர்... சட்டென ஒரு நினைவு உந்த.. "அக்கா.. அக்காவுக்கு..என்றவரால் மேலே பேச முடியாமல் போய் பதற்றத்தில் லேசாக தள்ளாடவும்..

கீர்த்திவாசன் சட்டென்று அவரை தாங்கிப் பிடித்துக் கொண்டு,"அடடா என்ன மாமா இது.. எதுக்கு இப்படி பதட்டப்படுறீங்க.. அம்மா இப்ப நல்லா இருக்காங்க.. டாக்டர் அங்கிள் இப்பத்தான் வந்து பார்த்து சொல்லிவிட்டு போகிறார்.. அம்மா ஒருவர் முடியாமல் படுத்திருப்பது போதாதா? நீங்களும் உடம்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள்" என்று கடிந்து கொண்டுவிட்டு தொடர்ந்து, நானே தோட்டத்துக்கு வந்து உங்ககிட்ட பேசணும்னு இருந்தேன்.. நீங்களே வந்துவிட்டீர்கள்.. என்றவன், "சுப்பம்மா, எங்களுக்கு குடிக்க ஜுஸ் அனுப்பி வைங்க" என்று குரல் கொடுத்து விட்டு,மாமாவை அழைத்துக்கொண்டு முன்புறம் இருந்த அலுவலக அறைக்கு சென்று கொண்டே.."நீயும் ஜூஸ் குடிச்சுட்டு அப்புறமாக அவுட்ஹவுஸுக்கு போ அம்பரி"என்றுவிட்டுப் போனான்.

அம்பரிக்கு கீர்த்திவாசன் வீட்டு மனிதனாக உபசரிப்பதை நம்ப முடியவில்லை.. சமையல் அறைக்கு சென்றபோது.. சுப்பம்மா.. ஏதோ மசாலாவுக்காக வறுத்துக் கொண்டிருந்தாள்.

"கண்ணு, மதிய சமையலுக்கு தம்பி புலாவ்,மீன் குழம்பு வைக்க சொல்லிட்டுப் போச்சு..ராமாயி இப்பத்தான் மீனை கழுவப் போயிருக்கிறா.. மசாலா வேற அரைக்கணும்.. ஐயாவுக்கும் தம்பிக்கும் தனியா சைவம் சமைக்கணும்.. கூட மாட ஒத்தாசை செய்ய.. மாரியும் இல்லை. அவளை அண்ணிங்க கூட அழைச்சிட்டு போயிட்டாங்க.. என் கையை பாரு அழுக்கா இருக்கு, அதனால கொஞ்சம் நீயே ஆங்கே இருக்கிற ஜூஸை டம்ளரில் ஊற்றி எடுத்துப் போய் கொடுத்துடுறியா..
என்றாள் தயக்கத்துடன்..

"என்ன சொல்றீங்க? சைவம் அவங்க இரண்டு பேருக்கும்னா.. இந்த புலாவ்,மீன் குழம்பு யாருக்கு? என்றாள் குழப்பமாக..

" ஊரில் இருந்து வர்றவங்களுக்கும், எங்களுக்கும்னு சொன்னுச்சு தம்பி.. சரி, நீ கொடுத்துட்டு வந்து, நீயும் குடி கண்ணு" என்று தன் வேலையில் கவனமானாள் சுப்பம்மா..

"என்ன நடக்கிறது இந்த வீட்டில்... இன்னும் யார் வரப் போகிறார்கள்? யோசனையுடன் பழரசத்தை உரிய குவளைகளில் எடுத்துக் கொண்டு அலுவலக அறையை அடைந்தால்.. அங்கே தீவிரமாக என்றாலும் ரகசிய குரலில் கீர்த்திவாசனும் தந்தையும் பேசிக் கொண்டிருந்தனர்.. அம்பரி மேலும் குழம்பி நின்றாள்...

07. 08. 2021
 

Attachments

  • IMG-20210807-WA0021.jpg
    IMG-20210807-WA0021.jpg
    84.8 KB · Views: 106

Saranya writes

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
24
12
3
Virudhunagar
திருந்திய கீர்த்தி வாசனை அம்பரியின் மனம் ஏற்றுக்கொள்வாளா? ஆனந்த வள்ளி மீண்டு வருவாரா?. வரப்போகும் நபர்கள் யார்? கதை கேள்விகளால் நிரம்பி நிற்கிறது பதிலை எதிர்ப்பார்த்து,அருமை ஆயிஷா.💙👏👏👏
 
  • Love
Reactions: Aieshak

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
176
157
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
திருந்திய கீர்த்தி வாசனை அம்பரியின் மனம் ஏற்றுக்கொள்வாளா? ஆனந்த வள்ளி மீண்டு வருவாரா?. வரப்போகும் நபர்கள் யார்? கதை கேள்விகளால் நிரம்பி நிற்கிறது பதிலை எதிர்ப்பார்த்து,அருமை ஆயிஷா.💙👏👏👏
மிக்க நன்றி மகளே 😍
 
  • Love
Reactions: Saranya writes