• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என்மேல் விழுந்த மழையே!-2

Meenakshi Rajendran

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 22, 2024
161
54
28
Tiruppur
அத்தியாயம் 2:


பிருத்விகாவோ கண்களைத் திறந்து திறந்து மூடிக் கொண்டிருந்தாள். உடலும், மூளையும் ஒத்துழைக்க மறுத்தது. ஆனால் அவன் குரலைக் கேட்டதும் ஏதோ ஒரு உந்துதலில் இறங்க முயற்சித்தாள். அதற்குள் அவள் விழுந்து விடாமல் இருக்க அவள் தோளைப் பிடித்துக் கொண்டான். அவன் உடல் உறுதியின் முன் அவள் உறுதி எடுபடவில்லை, அவனை எதிர்க்கும் நிலையிலும் அவன் இல்லை. காரின் முன் பக்கத்தில் இருந்த அவளுடைய பேக் அவனுடைய தோளில் தொங்கிக் கொண்டிருந்தது.


சந்தன நிறம் பூசப்பட்டு, ஆங்காங்கே சிவப்பு நிறம் பூசப்பட்ட அந்த இரண்டு மாடி வீட்டின் கேட் முன்னால்,‘ஸ்ரீ இல்லம்’ என்ற அழகிய பலகை தொங்கிக் கொண்டிருந்தது.
அதன் கேட்டைத் திறந்து அவளை உள்ளே அழைத்துச் சென்றான் வருண். பிருத்விகாவும் மிகவும் தளர்ந்து போயிருந்தாள். அவள் பேக்கிலிருந்த சாவியை துழாவி எடுத்தவன் கதவை நீக்கிக் கொண்டு உள்ளே அவளை வீட்டினுள் அழைத்துச் சென்றான்.


மாடியில் இருந்தது அவளது அறை. சரியாக மாடிக்கு அவளை தோளில் தூக்கிப் போட்டுச் சென்றான். படிகளில் அவளை இழுத்துச் செல்லும் போது எங்காவது அவளுக்கு அடிப்பட்டால் வீண் பிரச்சினை.
அவள் அறை எங்கு என்று அவனுக்குத்தான் தெரியுமே. இருவரும் எதிரெதிர் வீடுகளில் வசிக்கின்றனர். அவனும் மாடியில் அவளுடைய அறைக்கு எதிரில் இருக்கும் அறையில் தான் தங்கி இருக்கிறான். அவள் அடிக்கடி மாடியில் பார்க்கலாம்.


அவளுடைய அறைக்கு இது வரை அவன் வந்தது இல்லை என்றாலும் வீட்டிற்கு வந்திருக்கிறான். அதனால் அனுமானித்து அவளை அழைத்துச் சென்றான். அறைக் கதவு பூட்டப்படவில்லை. அவன் கை வைக்கவும் அப்படியே திறந்து கொண்டது. பிருத்விகாவை அப்படியே தூக்கிச் சென்று அவளை படுக்கையில் விட்டான். படுக்கை கிடைத்ததும் அந்த சுகத்தில் அப்படியே சாய்ந்து கொண்டாள் அவள்.


அவள் மீது போர்வையை எடுத்துப் போர்த்திவிட அவள் இன்னும் அதற்குள் புதைந்து கொண்டாள்.
அவள் காதருகே குனிந்து, “இதெல்லாம் உனக்காகச் செய்யலை. நினைவில் வச்சுக்கோ. ஆன்ட்டியை அனுப்பி விடறேன். அவங்க உன்னைப் பார்த்துக்குவாங்க. சொன்னப் பேச்சை நீ கேட்கறதே இல்லை.” என்று கசப்பான குரலில் கூறிவிட்டு வெளியே சென்றான்.


தன் காரை எடுத்துக் கொண்டு ,‘சந்திர விலாசம்’ என்ற பெயர்ப் பலகைத் தெரிந்த எதிரே உள்ள பங்களாவினுள் தன் காரை விட்டான். காரை அவன் திருப்பியதிலேயே அவன் கோபம் தெரிந்தது. அவன் முகத்தில் அதை எளிதில் காட்டி விட மாட்டான். அட்டோமேட்டிக் டோர் என்றாலும் வாட்ச் மேன் அருகே இருந்தார். அவனைப் பார்த்ததும் அவர் புன்னகைத்தார். அவனும் புன்னகைத்தப்படி காரை காராஜ் இருக்கும் பகுதிக்கு விட்டான்.

****
அடுத்த நாள் காலை சூரியன் ஏழு மணிக்கே உக்கிரமாக வந்திருந்தான். இரவு முழுவதும் மழை பெய்திருந்ததால் அது பொறுக்காமல் காய்ச்சிக் கொண்டிருந்தான். மெல்ல கண் விழித்து எழுந்தாள் பிருத்விகா. மாலை நடந்தது அனைத்தும் அவளுக்கு நினைவில் வந்தது. காய்ச்சல் முழுவதும் விட்டிருந்தது. அவன் கைகளில் தான் இருந்தது எல்லாம் அங்காங்கே நினைவில் வந்தது. எவ்வளவு கூறியும் கேளாமல் அவளை இழுத்துக் கொண்டு வந்திருக்கிறான்.
அவள் உதடுகள் தானாக, “வருண் ராமச்சந்திரன்” என்ற பெயரை முனுமுனுத்தது.

***


வருண் ராமச்சந்திரன் பிருத்விகா படிக்கும் அதே இடத்தில் படிக்கிறான். சிறு வயதிலிருந்தே ஒரே பள்ளியில் படித்தார்கள். மருத்துவம் கூட ஒரே கல்லூரியில் படித்தனர். அது மட்டும் இல்லாமல் இருவரும் சிறப்பு மருத்துவத்தை ஒரே பிரிவை தேர்வு செய்தது மட்டும் இல்லாமல் ஸ்பிரிங்க் மெண்டல் ஹெல்த் மருத்துவனை நிறுவனத்தில் விண்ணப்பமும் செய்திருந்தனர். பி.ஜி மருத்துவம் படிக்கும் போது மட்டும் பிருத்விகா தான் தேர்ந்தெடுத்த துறை, விண்ணப்பிக்கும் இடம் ஆகிய அனைத்தையும் ரகசியமாக வைத்திருந்தாள்.
அதற்கு முக்கியமான காரணம் வருண் ராமச்சந்திரன். அவள் வாழ்க்கையில் நடைபெறும் மிக முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்திலும் அவன் பங்கு இருக்கும். அவனுக்கும் அப்படித்தான். இவர்களது பெற்றோர் இருவருக்கும் ஆழமான தோழமை ஆட்சி செய்கையில் இவர்கள் இருவருக்கும் இருப்பது ஆழமான வெறுப்பு என்று கூட கூறலாம்.

பிருத்விகாவின் பெற்றோர் இல்லாத நேரத்தில் வருண் தான் பிருத்விகாவைப் பார்த்துக் கொள்வான். அவளால் தன்னையே பார்த்துக் கொள்ள முடிந்தவரை வருண் தலையிட மாட்டான். ஆனால் பிருத்விகாவுக்குப் பிரச்சினை எனில் அவன் உடனே வந்து விடுவான். பிருத்வியால் அவனைத் தடுக்க இயலாது. அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு, அவளுடைய அன்னை அவனிடம் வாங்கிய சத்தியம், இரண்டாவது அவளுடைய அன்னையில் வார்த்தைகளை அவள் இன்னும் மதித்துக் கொண்டிருக்கிறாள். அதனால் சில நேரங்களில் வருணின் உதவியை அவளால் ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலைகளை அவள் எதிர் கொள்ள நேரிடும்.

அவனிடம் உதவி பெறுவது பிருத்விக்கு பிடிக்கவில்லை எனினும் சில நேரங்களில் அவள் சுய மரியாதையை விட்டுக் கொடுக்க வேண்டி இருக்கும்.
வருண் பிருத்விகாவை விட பல மடங்கு வசதியில் உயர்ந்தவன். கோயம்புத்தூரில் இருக்கும் கோடீஸ்வரரின் ஒற்றை வாரிசு. பிருத்விகா அப்பர் மிடிஸ் கிளாஸைச் சார்ந்த பெண்.
அவள் பார்க்கிங்கில் யாரைப் பார்க்கக் கூடாது என்று நினைத்தாளோ அவனுடனே வீட்டுக்குள் வரும் நிலை உண்டாகிவிட்டது. அதை எண்ணிதான் அவள் இப்போது தலையைப் பிடித்துக் கொண்டிருக்கிறாள்.



அதோடு அவன் கூறிய வார்த்தைகளும் நினைவுக்கு வந்தது.
‘இவனை யாரு ஹெல்ஃப் செய்ய சொன்னா? விட்டுட்டு போக வேண்டியதுதானே.. நான் கேட்டனா இவனை? பெரிசா.. ஹெல்ஃப் பன்ன வந்துட்டான். எப்படியோ போகட்டும்னு விட வேண்டியதுதான. இல்லை ஹாஸ்பிட்டலில் இருக்கற யார் கிட்டயாவது கால் பன்னி சொல்ல வேண்டியதுதானே. அவங்க அப்பாகிட்டேயும், எங்கிட்டேயும் நல்ல பேரு வாங்க ஆக்டிங்க் செய்யறது.’ என்று நினைத்துக் கொண்டாள்.
அப்போது மேலே யாரோ வரும் காலடி சத்தம் கேட்டது.


“பாப்பா.. எழுந்துட்டீங்களா?” என்றபடியே உள்ளே வந்தார் தேவகி அம்மாள். வருண் வீட்டில் வேலை செய்பவர். அவனைப் பார்த்துக் கொள்ள அவனுடைய பெற்றோர்களால் நியமிக்கப்பட்டவர். அவருக்கு வருண் என்றால் மிகப் பிரியம். ஆனால் வருணுக்குப் பிருத்விகாவைப் பிடிக்காது என்று தெரிந்தாலும் அவளை அன்புடன் நடத்துவார்.
இரவு முழுவதும் அவர் இங்குதான் இருந்திருக்க வேண்டும். ஐம்பதுகளில் இருக்கும் அவருடைய தலை இன்னும் நரைக்கவில்லை. தோல் சுருக்கம் மட்டுமே அவருடைய வயதைக் காட்டும். நெகமம் புடவையை அழகாக உடுத்தி இருப்பார். நீண்ட கூந்தல் இடையைத் தொட்டுக் கொண்டிருக்கும். நெற்றியில் விபூதி எப்போதும் நிரந்தர இடம் பிடித்திருக்கும். மாநிறத்தில் இருக்கும் அவரைப் பார்த்தாலே ஒரு வித அமைதி இருக்கும்.

“எந்திருச்சுட்டேன் அம்மா.”
அவள் கழுத்தைத் தொட்டுப் பார்த்தார்.


“காய்ச்சல் உட்டுப் போச்சு அம்மிணி. கஞ்சியும் மிளகு இரசமும் வச்சுருக்கேன். சாப்புட்டா தெம்பா இருக்கும்.” அவருக்கும் இன்னும் கொங்கு பேச்சு வழக்கு மாறவில்லை. அடிக்கடி இப்படி வெளிப்பட்டு விடும்.
தலையை ஆட்டியவள் கட்டிலை விட்டு எழுந்தாள். அவளுக்கு இப்போது எந்தப் பிரச்சினையும் இல்லை. சிலருக்கு அப்படித்தான். முதல் நாள் காய்ச்சல் இருக்கும். அடுத்த நாள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

“நடு இராத்திரி காய்ச்சல் ரொம்ப அதிகமாகி இருச்சு அம்மிணி. ஏதோ ஏதோ பேச ஆரம்பிச்சீங்க. உடம்பு தூக்கிப் போட்டுச்சு. அப்புறம் வருண் தம்பியை கூப்பிட்டேன். நாலு மணி வரைக்கும் உங்க பக்கத்தில் இருந்துட்டு அப்பறம் தான் வூட்டுக்குப் போனாரு.”
அவன் தன்னுடன் இருந்தான் என்ற செய்தி அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்த அவளுடைய பாதாம் அமைப்புடைய ஆழ்ந்த கருமை நிறம் கொண்ட விழிகள் விரித்தாள்.
“சேரி பாப்பா. நீ தூங்கு. நான் வருண் தம்பியைப் பார்த்துட்டு வரேன்.”

“இல்லம்மா. நான் காலேஜ்க்கு கிளம்புறேன். ரொம்ப முக்கியமான வேலை இருக்கு.”

“இல்ல பாப்பா… காய்ச்ச”

“இல்லம்மா. நிச்சயம் போகனும்.” என்று எழுந்தவள் மெல்ல குளியலறை நோக்கி விரைந்தாள். தேவகி அம்மாள் வேறு வழியின்றி கீழே சென்றார். டாக்டராக இருந்தால் அவளுக்கு அறிவுரை செய்யலாம். அவளே டாக்டர் எனும் போது என்ன கூற முடியும். அதுவும் விடுமுறை எடுக்காமல் கல்லூரிக்குச் செல்லும் ஆள் பிருத்விகா. அவளைத் தடுக்கவும் முடியாமல், அனுப்பவும் முடியாமல் அவர் மனது அடித்துக் கொண்டது.
பிருத்விகாவுக்கு நேற்று மாலை இருந்ததை விட இப்போது உடல் நன்றாக இருப்பது போல் தோன்றியது. குளிக்க வேண்டும் என்று தோன்றியது. முதலில் முகத்தைக் கழுவிட்டு தன் அறையில் உள்ள வார்ட் ரோப் பக்கம் வந்தாள். கதவை நீக்கி உடைகளை ஒவ்வொன்றாகப் பார்க்கும் போது அவள் வலது கையை பிடித்தான் வருண்.
தன் கைகளைப் பிடித்தவுடன் நிமிர்ந்து பார்த்தாள் பிருத்விகா.

“மேடம் எங்க கிளம்பீட்டீங்க?” நக்கலாக ஒலித்தது அவனுடைய குரல். அவன் குரலில் இருந்த ஏளனத்தை உணர்ந்த பிரித்விகா நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
அவனிடம் இருந்து தன் கையை உதறியவள்,


“நாட் யுவர் பிஸ்னஸ்.” அவள் குரல் லேசாக கர கரவென்று ஒலித்தது.
பீட்ரூட் கலர் சட்டை, பிளாக் பேண்டில் அவள் எதிரில் நின்று கொண்டிருந்தான். மஞ்சள் நிற தேகம், கரிய சிகை. மற்றவர்களும் இப்படி இருந்தாலும் இவனிடத்தில் ஏதோ வசீகரம் இருந்தது. ஒரு தனித்தன்மை அவனிடம் இருந்தது. மெடிக்கல் காலேஜில் இவனுக்கு பல புரோப்போசல்கள் வந்தது. இவனைக் காதலிக்காத பெண்களுக்குக் கூட இவனைப் பிடிக்கும். புத்திசாலி, படிப்பில் கெட்டி, ஜெண்டில் மேன். இப்படி மெடிக்கல் காலேஜே இவனைத் தூக்கி வைத்து பேசும். ஆனால் இப்போது அவன் முகத்தில் இருக்கும் அந்த முக பாவனை எப்போதும் பிருத்விகாவுக்குச் சொந்தம். அந்த ஏளன முகத்தை அவன் அவளுக்கு மட்டும் காட்டுவான்.


“உன்னை நான் காப்பாத்துனேன். அதனால் திஸ் இஸ் மை பிஸ்னஸ். கர்ட்டசிக்கு ஒரு தேங்க்ஸ் கூட சொல்ல முடியாது உனக்கு.” அவன் குரல் உறுதியாக அவளைக் குற்றம் சாட்டி ஒலித்தது.

“ஓ அப்படியா? நீ எனக்கு முழு மனசோட ஹெல்ஃப் செஞ்சயா? இல்லையே… உன்னோட அப்பாவுக்குப் பதில் சொல்லனும். அவங்க முன்னாடி நல்லவனாக் காட்டிக்கனும். அதுக்காக அப்படிச் செஞ்ச. இல்லைனா பார்க்கிங்கில் என்ன? நீ ரோட்டில் நான் விழுந்து கிடந்தாலும் கண்டுக்கமா போயிருவ.”
இவற்றை அனைத்தும் அவன் கண்களை நேராகப் பார்த்தப்படி மெல்லிய குரலில் கூறி முடித்தாள் பிருத்விகா. அவள் குரலில் இருந்த வெறுப்பு எதிரில் இருந்தவனின் மனதின் ஆழம் வரை சென்று தாக்கியது.





 

Meenakshi Rajendran

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 22, 2024
161
54
28
Tiruppur