• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதலில் விதிகள் ஏதடி 2

Jul 31, 2021
71
54
18
Thanjavur
அத்தியாயம் 2

நீண்ட நேரமாகச் சிலைபோல் நின்றவளைப் பார்க்க அங்கிருந்த அனைவருக்குமே சிறிது பாவமாகத் தான் இருந்தது. அதைவிடவும் இவள் அடுத்து என்ன செய்யப் போகிறாள் என்ற பயமும் ஏற்பட்டது. கடைசியில் ஆதிரையின் தாய் மங்களம் தான் அவளது இரு தோள்களையும் குலுக்கி, சத்தமாக “ஆதிமா... ஆதிமா... ஆதிரை! என்னைப் பாரடா? எனக் கூறி அவளை நிகழ்காலத்திற்கு வரவைக்க வேண்டியதாக இருந்தது.

ஒரே வினாடியில் உலகத்தையே சுற்றி வரக்கூடிய மனம் ஆதிரைக்கு அவளது கடந்த சில நாட்களில் அவள் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை நினைவுபடுத்திச் சென்றது. யார் என்றே தெரியாத ஒருவன் தன் கழுத்தில் தாலி கட்டியதை உணர்ந்தவள் தன் அருகில் அவள் பெயரைச் சொல்லி அழுது கொண்டிருந்த தாயைப் பார்த்தாள். அதற்குள் அங்கிருந்த ஒருவர்,

“மங்களம். அழாதே மா. நடக்கக் கூடாத சம்பவங்கள் நடந்துவிட்டன. இனி என்ன என்பதைப் பற்றித் தான் நாம் சிந்திக்க வேண்டும்” என்றார்.

அந்தப் பெரியவர் பேசியதைக் கவனித்த ஆதிரை ‘அடுத்து என்ன’ என்று யோசிக்கும் பொழுதே விக்ரம் “இனி என்று எதுவும் இல்லை, யார் என்றே தெரியாதவன் தாலி கட்டினானென அவனுடன் என் அக்கா வாழ வேண்டுமா? நான் இருக்கும் வரை அது நடக்காது” என யாரையும் பேச விடாமல் கத்திக்கொண்டிருந்தான்.

கூட்டத்திலிருந்த இன்னொரு மனிதர் “தம்பி, தவறு எங்கள் தேவா தம்பியின் பெயரில் இருப்பதால் தான் பொறுமையாக நிற்கின்றோம். அதற்காக அவரை மரியாதை இல்லாமல் பேசினால் நன்றாக இருக்காது” என்றார்.

மரியாதையுடன் பேசச் சொல்லிக் கூறவும் விக்ரமின் கோபம் இன்னும் கூடுவதை ஆதிரை கவனிக்கத் தவறவில்லை.

அவருக்குப் பதில் கூற விக்ரம் ஏதோ கேட்கப்போக அதற்குள் ஆதிரை “போதும். நிறுத்துங்கள்” எனக் கத்தியவள் அதற்கு மேல் தாங்காமல் நின்ற இடத்திலேயே அமர்ந்து அழத் தொடங்கி விட்டாள். தன் அக்கா அழுவதைப் பார்த்த விக்ரமின் கண்களிலும் நீர் பெருக்கெடுத்தது.

அங்கிருந்தவர்கள் மாறி மாறிப் பேசிக்கொள்ள விக்ரம் ஒரு கட்டத்தில் தன் பொறுமையை இழந்து விட்டான். தரையில் அமர்ந்து அழுது கொண்டிருந்த தமக்கையின் கைகளைப் பற்றி இப்பொழுதே நாம் ஊருக்குச் செல்வோம் வா என அழைத்துச் செல்ல ஆரம்பித்தான்.

இத்தனை நேரம் அமைதியாக நின்ற பிரச்சனைக்குக் காரணமானவன் முதல்முறையாக அசைந்து விக்ரமின் வழியை மறைத்து நின்றான்.

“என்ன? வாங்கியது போதவில்லையா?” என்று கேட்ட விக்ரமிடம்

“என் மனைவியை எங்கும் அனுப்புவதாக இல்லை” என்றான். கூட்டத்திலிருந்த சிலர் அவனிடம் “தேவா தம்பி நீங்கள் செய்வதும் தவறு” என்றனர்.

ஆனால் யார் பேச்சையும் காதில் வாங்கும் மனநிலையில் அந்தத் தேவாவும் இல்லையென அவன் நிற்பதிலேயே தெரிந்தது. அவன் மனைவி என்று கூறியதில் ஆத்திரமடைந்த விக்ரம் அவனது சட்டையைப் பிடித்து “யாருக்கு யாருடா மனைவி? இன்னொரு முறை கூறிப்பார் உன்னை இங்கேயே வெட்டி விட்டு நான் சிறைக்குச் செல்கிறேன்” எனவும் அங்கு மீண்டும் ஒரு கைகலப்பு ஏற்பட்டது.

அத்தனை நேரம் ஆதிரையைப் போலவே அங்கு இன்னும் இருவரும் அமைதியாக நின்று கொண்டிருந்தது ஆதிரையின் தந்தை மற்றும் தேவா என்பவனின் தந்தையும் தான். விக்ரமை தேவாவிடமிருந்து விளக்கியபின் முதல்முறையாகத் தேவாவின் தந்தை சதாசிவம் ஆதிரையின் தந்தை முருகனிடம் பேசினார்.

“என் மகன் செய்தது மிகவும் தவறு அதில் மாற்றுக்கருத்து எதுவும் இல்லை, உங்கள் குடும்பத்திற்கு இது எவ்வளவு பெரிய அதிர்ச்சி என்று எனக்கும் புரிகின்றது. நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் அதற்கு நாங்கள் கட்டுப்படுகிறோம். என் மகனால் எந்தப் பிரச்சனையும் வராது. அதற்கு நான் பொறுப்பு” என்றார் முருகனோ “இதில் நான் முடிவெடுக்க எதுவும் இல்லை. எதுவாக இருந்தாலும் ஆதிரை தான் கூற வேண்டும்” என்று கூறவும் விக்ரம் தன் அக்காவிடம் திரும்பி “சொல் அக்கா. சொல்லிவிட்டு வா, நாம் இப்பொழுதே இங்கிருந்து செல்வோம்” என்றான்.

சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக நின்ற ஆதிரை “நான் எங்கும் வரவில்லை, தாலியெனக் கட்டியபின்... அவருடனேயே வாழ்கிறேன்” என்றாள். ஆதிரையின் இந்த முடிவு அங்கிருந்த அனைவருக்குமே அதிர்ச்சியாக இருந்தது.

விக்ரம் ஒரு பக்கம் “அக்கா! உனக்கு என்ன பைத்தியம் பிடித்து விட்டதா?” எனக் கத்திக் கொண்டிருந்தான்.

ஆனால் தாலி கட்டியவனுடன் வாழ்கிறேன் என்று கூறியபோது ஆதிரையின் கண்களிலிருந்து கண்ணீர் வரவில்லை. அவள் மிகவும் திடமாகத் தான் கூறினாள், அதைத் தேவாவும் கவனிக்க மறக்கவில்லை.

கத்திக் கொண்டிருந்த மகனை மங்களம் அமைதிப்படுத்த முயன்று கொண்டிருக்கும்பொழுது முருகன் ஆதிரையைக் குழப்பமாகப் பார்த்து விட்டுத் தேவாவிடம் திரும்பி

“நீங்கள் செய்த விஷயத்தில் நியாயம் அநியாயம்பற்றி நான் பேச விரும்பவில்லை. ஆனால் நீங்கள் செய்தது தவறு என நீங்களே ஒத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்” என்றவரை இடைமறித்த தேவா

“நான் செய்தது முற்றிலும் தவறு தான், நான் முழுமையாக ஒற்றுக் கொள்கிறேன். அதற்கான தண்டனையையும் ஏற்கத் தயாராக உள்ளேன்”என்றான்.

“நான் கூற வந்தது தண்டனையைப் பற்றியல்ல. இது வேறு தம்பி. நான் ஆதிரையின் தந்தை. அவளைப் பற்றி அனைத்தும் அறிவேன். உங்களுடன் வாழ்கிறேன் என்று அவள் சொல்வது நல்லதாக எனக்குப் படவில்லை. எனவே அவளை நான் என்னுடன் அழைத்துச் செல்கிறேன். எதுவாக இருந்தாலும் பிறகு பேசிக்கொள்ளலாம்” என்ற முருகனிடம்

“என்மீது நம்பிக்கை இல்லையா?” என்று தேவா கேட்கும் பொழுதே விக்ரம்

“உன்மீது நம்பிக்கை ஒன்றுதான் இப்போது குறைச்சல் அல்லவா” என்றவனை முறைத்து விட்டு முருகன்

“என் மகள்மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்பதே உண்மை. நீங்கள் அவளுக்குச் செய்ததற்கு உங்களை, அவள் மன்னிப்பது அவ்வளவு எளிதல்ல” என்றார்.

“வாழ்க்கை முழுவதும் கூட என்னை மன்னிக்காமல் இருக்க அவளுக்கு முழு உரிமையும் உள்ளது. மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றவனிடம் அதற்குமேல் முருகனாலும் எதுவும் பேச இயலவில்லை.

ஊர் பெரியவர்கள் பேசியும் கூட ஆதிரையின் தாய்வழி சொந்தங்கள் யாரும் இந்தத் திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே அவளை அவள் கணவன் வீட்டில் விட யாரும் வருவதாக இல்லை. ஆதிரை பெற்றோருடன் முத்து மட்டுமே வரச் சம்மதித்தார். அதுவும் வீட்டிற்கு வெளியில் வரை வருவதற்கு மட்டுமே.

ஒரு வழியாகப் பிரச்சனைகளைப் பேசி முடித்து ஆதிரையை அழைத்துக் கொண்டு தேவாவின் இல்லத்திற்குச் சென்றனர். வீட்டிற்குச் சென்றதும் ஆரத்தி எடுக்க வேண்டும் எனக் கூறி வாசலில் நிற்க வைத்தனர். வீட்டிலிருந்த பெண்மணிகளை ஆதிரை ஏற்கனவே பார்த்திருந்தாள்.அவர்கள் அன்று திருமணத்தில் வரிசை கொண்டு வந்தவர்கள் என்பது அவளது நினைவில் வந்து சென்றது.

ஒரு பெண் மட்டும் முன்வந்து ஆரத்தி எடுக்க முயன்றபொழுது ஆதிரை அந்தப் பெண்ணிடம்

“ஒரு நிமிஷம். என்ன செய்கிறீர்கள்? மிகவும் முறைப்படி நடந்த கல்யாணம் என்பதால் முறைகளைக் கடைப்பிடிக்கின்றீர்களோ!” என்றாள்.

அவள் பேசியதின் அர்த்தம் புரியாமல் அந்தப் பெண் முழிக்கவும் ஆதிரையின் அருகில் நின்ற தேவா

“ஆதிரை, உன் கோபம் புரிகிறது ஆனால் இது நமது பழக்கத்தில்” என்பவனை இடைமறித்து ஆதிரை

“யார் என்றே தெரியாத பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவது தான் நம் பழக்கமோ?” என்றாள்.

தாலி கட்டியவனுடன் வாழ்கிறேன் என்று கூறியதிலிருந்தே ஆதிரையின் பேச்சில் அதிக நக்கலும், குத்திக்காட்டுதலும் அதிகமாக இருந்ததைத் தேவாவும் கவனிக்கத் தவறவில்லை. கோபமாகப் பேசினால் கூடப் பரவாயில்லை இதை எப்படிச் சமாளிப்பது என்றே அவனுக்குப் புரியவில்லை. பற்றாக்குறைக்கு இவள் பேசப் பேச அவள் அருகில் நின்ற விக்ரம் வேறு நக்கலாகச் சிரித்துக் கொண்டிருந்தான். தேவாவின் இந்த எண்ணப் போக்கை மீண்டும் ஆதிரையின் குரல் களைத்தது.

“எப்படி என் தம்பியிடம் என்னை அழைத்துச் செல்ல இயலாது என்று கூறினாயோ, அதே போல் இந்த வீட்டிற்குள் நீ வந்தாலும் என்னால் உள்ளே வர முடியாது. அதற்காக வேறு வீட்டிலும் நீ சென்று தங்கக் கூடாது. நாம் நின்று கொண்டிருக்கும் இதே இடத்தில், அதாவது உன் வீட்டு வாசலில் தான் நீ இருக்க வேண்டும்” என்றாள்.

ஆதிரை தேவாவுடன் வாழ்கிறேன் என்று கூறியதை விடவும் அவள் இப்படிக் கூறியதே அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. விக்ரமே ஒரு நொடி அதிர்ச்சியில் உரைந்து விட்டான். முருகன் பதறிப்போய்

“என்னம்மா கூறுகிறாய்? எதில் விளையாடுவது என்றில்லையா?” என்றார்.

ஆனால் ஆதிரையோ எந்த ஒரு பதட்டமோ கோபமோ இல்லாமல் மிகவும் உறுதியாகவும் அமைதியாகவும் “விளையாடுவதா! விளையாடுவதில். அதிலும் வாழ்க்கையில் விளையாடுவதில் முதன்மையானவரை வைத்துக் கொண்டா?” என்று தேவாவைக் காட்டிக் கூறினாள்.

வாழ்க்கையில் விளையாடுபவன் என ஆதிரைக் கூறியபோது அடி வாங்கியவனைப் போலத் தேவா மனதால் துடித்ததை அவள் அப்போது கவனிக்கவில்லை. அவள் கவனிக்காமலிருந்ததும் தேவாவிற்கு நல்லது தான். இல்லையெனில் ஆதிரை அன்று இருந்த மனநிலைக்குத் தேவாவின் பாடு தான் படாத பாடு ஆகியிருக்கும். இவனது நிலை தெரியாத ஆதிரையின் வார்த்தைகளிலோ சாட்டை சூழன்று கொண்டிருந்தனர்.

தன் தந்தையிடம் கேள்வி எழுப்பியவள் அவரது பதிலுக்காகக் கூடக் காத்திராமல் தேவாவிடம் திரும்பி

“ஆம் கேட்க மறந்தே போனேன். உன் பெயர் என்ன” என்றாள்.

அந்த நொடியில் தேவாவின் இதயம் வெளியில் விழுந்து விடும் போல் இருந்தது அவனுக்கு. அதை மறைத்துக் கொண்டு “தேவா” என்றான்.

“எனது நிபந்தனைகள்?” என்றவளிடம் அவளைப் போலவே

“ஏற்கப்படுகிறது” என்றான்

‘நக்கலா?’ என்று எண்ணியவள் பிறகு ஒன்றும் கூறாமல் ஆரத்தி தட்டுடன் நின்ற பெண்ணைப் பார்த்து

“நான் எங்குத் தங்க வேண்டும்? நிச்சயம் உங்கள் தேவாவின் அறையில் தங்க இயலாது” என்றாள்.

ஏதோ கூற வாய்யெடுத்த முருகனையும் தேவாவின் சைகை நிறுத்தியது. ஆரத்தியுடன் நின்ற பெண்ணிற்குப் பின் நின்ற பெண்மணி முன் வந்து

“இங்கு ஒரு அறை இருக்கின்றது. இதுவரை அதை யாரும் உபயோகம் செய்தது இல்லை. அதை நீ எடுத்துக்கொள்” என்றார்.

அந்தப் பெண்மணியைத் தான் ஆதிரை திருமண மண்டபத்தில் பார்த்தால், வந்த பெண்களில் முதலில் நடந்து வந்தவர், அவரது அன்றைய உருவம் இன்னும் ஆதிரையின் மனதில் அப்படியே தோன்றியது.

அழகான பாசி பச்சை நிறத்தில் பட்டுப் புடவை உடுத்தியிருந்தார். முடிகளை அள்ளிக் கொண்டையிட்டு, அதைச் சுற்றி மல்லிகைப்பூ சூடியிருந்தார், மிகவும் பெரிதாகவும் இல்லாமல் அதற்காகச் சிறியதாகவும் இல்லாமல் நடுத்தரமாகக் குங்குமத்தால் பொட்டு வைத்திருந்தார். அதற்கெல்லாம் ஏற்றவாறு அவரது இதழ்களில் ஒரு அளவான புன்னகை. அன்பிற்கு ஒரு உருவம் இருந்தால் அது அவரைப் போல் தான் இருக்குமோ என்று கூட ஆதிரை சிந்தித்தால். ஆனால் இன்று! இன்றும் அதைப் போல் தான் இருந்தார்.

பட்டுப் புடவைக்குப் பதிலாகக் காட்டன் புடவை. அவரது உதடுகள் இன்று புன்னகைக்கவில்லை. மாறாக அவரது கண்கள் வழிகளைப் பிரதிபலித்தன. ஆதிரை அவரையே பார்ப்பதைப் பார்த்தவர் ஓரளவு அவளது எண்ண ஓட்டங்களையும் ஊகித்து

“நான் தேவாவின் தாய். என் பெயர் மீனாட்சி” என்றார்.

“ஓ!” என்று ஆதிரை கூறும் பொழுதே

“முதல் முறையாகத் தேவாவின் தாய் என்று கூற வெட்கப்படுகிறேன்” என்றும் மீனாட்சி கூறினார்.

‘இப்படியொரு பிள்ளையைப் பெற்றால் அவமானமாகத்தான் இருக்கும்’ என்று மனதில் மட்டும் நினைத்துக் கொண்டாள் ஏனோ அவரிடமும் அவளால் தேவாவிடம் பேசுவதைப் போல் எடுத்தெறிந்து பேசத் தோன்றவில்லை.

தன் தாய் பேசியது வருத்தமாக இருந்தாலும், தன் தாயிடமும் ஆதிரை எடுத்தெறிந்து பேசவில்லை என்பது மட்டும் சிறிது ஆறுதலாக இருந்தது.

பிரச்சனைகள் ஏதுமின்றி ஆதிரையை வீட்டில் விடலாம் என்று உடன் வந்த ஊர் மக்களும், முருகன் மற்றும் முத்துவும் கூடத் தேவாவிடம் ஆதிரை கேட்டது அநியாயம் என்றே கூறி வாதிட்டனர். ஆனால் தேவா

“அவளுக்கு நான் செய்ததும் அநியாயம் தானே. இதை நான் பார்த்துக் கொள்கிறேன்”, என்று கூறியதால் யாராலும் அதற்கு மேல் பேச இயலவில்லை. ஊர் மக்கள் தான் பாதிப் பேர் தேவாவுக்கு ஆதரவாகவும் இன்னும் சிலர் “எந்தப் பெண் தான் திடீரெனத் தாலி கட்டினால் சும்மா விடுவாள்” என்று ஆதிரைக்கு ஆதரவாகவும் பேசிச் சென்றனர். முருகனும் ஒரு முறைக்குப் பல முறை தேவாவிடம் பேசிப் பார்த்தார். தேவாவோ அனைத்தையும் நானே பார்த்துக் கொள்கிறேன் என்றதால் அவராலும் எதுவும் பேச முடியவில்லை. விக்ரம் தான் தேவாவைப் பார்த்து நக்கலாகச் சிரித்துச் சென்றான். ‘இவன் வேறு, அக்காவுக்குத் தம்பி தப்பாமல் பிறந்திருக்கிறான்’ என்று எண்ணிக் கொண்டான் தேவா.

அன்று முழுவதுமே ஆதிரை எதுவும் சாப்பிடவில்லை. அவளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அறைக்குள்ளே ஒரு ஓரமாக அமர்ந்திருந்தாள். அங்கிருந்து பார்த்தாலே தேவா வெளியில் அமர்ந்திருந்த இடமும் நன்றாகவே தெரிந்தது. அப்படி ஒருமுறை அவனை எட்டிப் பார்க்கும்பொழுது தான் அவனுக்காக அங்குப் போடப்பட்டிருந்த கயிற்றுக் கட்டிலைக் கவனித்தாள்.

‘மகாராஜாவிற்குக் கட்டில் ஒன்று தான் இப்போது முக்கியம்’ என்று நினைத்தவள், கட்டிலையும் எடுக்கச் சொல்லுவோமா என எண்ணினாள். அவளுக்கே அந்த எண்ணம் அதிகப்படியாகத் தோன்றவும் அதைக் கைவிட்டாள்.

‘அவனது வீட்டினுள் அவனையே வரக் கூடாது என்று அவள் கூறியது, தனிமையில் சிந்திக்கும்பொழுது அவளுக்கே தவறோ என்று தோன்றியது. ஆனால் அவளுக்கு நடந்தது மட்டும் அநியாயம் அல்லவா? அதற்குத் தானே இந்தத் தண்டனை? நன்றாக அனுபவிக்கட்டும்.’ என அவளது மனதுடனையே வாதாடிக் கொண்டிருந்தவளை மீனாட்சியின் குரல் நிகழ் உலகத்திற்கு அழைத்து வந்தது.

“ஆதிமா... நீ ஒன்றுமே சாப்பிடவில்லையே! சிறிது சாப்பிடலாம் அல்லவா? வெறும் வயிற்றுடன் உறங்கக் கூடாது” என்றவரை ஆதிரை ஒன்றுமே கூராமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவளிடமிருந்து எந்த விதமான பதிலும் வராததால் “என்னமா?” என்றாள்.

“இது மருமகள் மீதான அக்கறையோ? அப்படியெனில்... நேரவிரயம். நான் சீக்கிரம் என் தந்தை இல்லத்திற்கே... அதாவது என் வீட்டிற்கே சென்று விடுவேன். மற்றும் தற்போது எனக்கு உணவும் வேண்டாம்” எனக் கூறிவிட்டு அதற்கு மேல் பேச ஒன்றுமில்லை என்பதைப் போல உறங்குவதைப் போல் படுத்துக் கொண்டாள்.

அவளது இந்தப் பதிலை எதிர்பார்க்காத மீனாட்சி தான் அதிர்ந்துபோய் நின்றுவிட்டாள்.
தொடரும்...​
 

Ramya(minion)

Vaigai - Avid Readers (Novel Explorer)
Sep 27, 2021
405
190
63
India
Aaha aadhirai adhiradiya seyalpaduranga ponga😂😂..Deva un nilamai ivlo mosama aganuma🤪🤪.vikram sirichikite irukan po..meenatchi ma😌😌