• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Sailajaa sundhar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jun 13, 2024
Messages
27
பூமழை தூவும் காற்று

காற்று - 1

நேரம் இரவு 11.30. மும்பையில் இருந்து மதுரை வந்தடைந்தது அந்த இன்டிகோ பயணிகள் விமானம். பயணிகள் அனைவரும் ஒவ்வொருவராய் வெளியேற ஆரம்பிக்க, வெளியேறும் எண்ணம் சிறிதும் இன்றி தன் தலையைத் தாங்கிப் பிடித்து அமர்ந்திருந்தாள் பெண்ணொருத்தி.

அவளிடம் வந்த அங்கிருந்த விமானப் பணிப்பெண் “ஆர் யூ ஓக்கே மேம்” என அனுசரனையாக கேட்க, “எஸ் ஐம் ஓக்கே” என மெல்லிய புன்னகைத்தவள், எழுந்து விமானத்தில் இருந்து இறங்கினாள்.

தன் உடமைகளை எல்லாம் சரிபார்த்துவிட்டு, விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தாள் ஆதிரை. நெடுநெடுவென உயரம். யாரையும் பார்த்ததுமே கணித்துவிடும் விழிகளின் கூர்மை. உயர்த்திக் கட்டிய போனி டெயில். ப்ளூ கலர் டெனிம் ஜீன்சும், சந்தனக் கலரில் காட்டன் டாப்பும் அணிந்திருக்க, ப்ளூ ஜீன்சில் ஒரு ஓவர்கோட்டும் அணிந்திருந்தாள்,

ஏர்போர்ட்டில் இருந்து வெளியில் வந்தவளின் கண்கள் ஒருபுறம் சுற்றுப்புறத்தை அலசியது. பின் அங்கிருந்த கால் டேக்சி ஒன்றை நோக்கி கையசைக்க, அது அவளருகில் வந்து நிற்பதற்கு முன்னே, ஒரு ஐ20 ஆதிரையை உரசியபடியே வந்து நின்றது.

“ஹேய்” எனக் கெட்ட வார்த்தையில் திட்ட வந்த கால்டேக்சி டிரைவர், அந்தக் காரோட்டியின் உஷ்ணமானப் பார்வையில் கப்பென்று வாயை மூடி நகர்ந்து விட, அமைதியாகத் தன் பொருட்களை அந்த காரில் அடுக்கியவள், பின்னிருக்கையில் அமர்ந்து சீட்டில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.

ரிவர் வியூவ் மூலம் ஆதிரையின் செய்கையை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு எரிச்சலும் கோபமும் அலையென பொங்கிவர, “ஏய் உனக்கு நான் என்ன டிரைவரா.? வந்து முன்னாடி உக்காருடி” என காட்டமாகக் கத்த, நிமிர்ந்து அவனை அதே அமைதியுடன் பார்த்தவள், பின் இறங்கி டிக்கியில் இருந்த தன் உடைமைகளை எடுக்கப் போக, அதில் மேலும் எரிச்சலானவன், கோபத்தை அடக்க முடியாமல் அவளை அப்படியே நடுரோட்டில் விட்டுவிட்டு தன் காரை எடுத்துக் கொண்டு போய்விட்டான்.

அவன் இப்படித்தான் செய்வான் என்று ஆதிரையும் அறிந்திருந்தாளோ, கொஞ்சமும் முகத்தில் கோபம் எரிச்சல் என எந்த உணர்வையும் காட்டாமல், சற்று தள்ளி நின்ற கால் டேக்சியைப் பார்க்க, அவனும் உடனே “வாங்க மேம்” என அழைக்க, “தேங்க்ஸ்” என்றபடியே பின்னிருக்கையில் அமர்ந்துவிட்டாள்.

“மேம் நீங்க எங்க போகனும்னு சொல்றீங்களா?” என்றதும், “MMC” என்ற ஒற்றை வார்த்தையை பதிலளித்துவிட்டு, சீட்டில் சாய்ந்துவிட்டாள்.

உடலும் மனமும் மிகவும் சோர்ந்து போயிருந்தது. ‘வாழ்க்கை இன்னும் எவ்வளவு தூரம் தான் அவளை ஓட வைக்குமோ’ என வழக்கம் போல மனதுக்குள்ளே நினைத்தவள், தனக்காக போராடும் ஒரு ஜீவனும் இப்போது மருத்துவமனையில் இருப்பதை எண்ணி மனதுக்குள்ளே கதறினாள்.

இனி தனக்காக யார் இருக்கிறார்கள் என்ற கழிவிரக்கமும் சேர்ந்து கொள்ள, மனம் நிலையில்லாமல் தவித்தது. ஏதோ பெரிதாக நடக்கப் போவது போல் நெஞ்செல்லாம் தடதடத்தது.

அவருக்கு மட்டும் எதுவும் நடந்துவிடக்கூடாது என வழக்கம்போல கடவுளை வேண்டி கொண்டவள், அடுத்தடுத்து நடக்க போகும் தாக்குதலுக்கு தன்னை தயார்படுத்த ஆரம்பித்தாள்.

திண்டுக்கல் கீழக்கோட்டைதான் ஆதிராவுக்கு சொந்த ஊர். திருமலைசாமி வேதவல்லி தம்பதியருக்கு பாஸ்கரன், பிரகாஷ் என்ற இரண்டு மகன்களும் பாக்யா என்ற மகளும் இருக்க, பாஸ்கருக்கு தன் சொந்தத்திலேயே அகிலாவைப் பெண் பார்த்து கட்டி வைத்தார் திருமலை.

அவரும் ஆரம்பத்தில் இருந்தே ஊரில் விவசாயம் பார்க்க, பிரகாஷ் வேறு இனத்தில் புனிதாவை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துகொள்ள, அது பெரும் பிரச்சினையாக, ஊரில் இருக்க வேண்டாம் என கொடைக்கானலில் குடும்பத்துடன் செட்டிலாகிவிட்டார்.

வேதவல்லி மகள் பாக்யாவை தன் தம்பி சுந்தரத்திற்கே திருமணம் செய்து கொடுத்து பக்கத்திலேயே வைத்துக் கொண்டார்.

பாஸ்கருக்கு இரண்டும் பெண் குழந்தைகள் தான். மூத்தவள் ஆராதனா, இளையவள் ஆதிரா

பிரகாஷிற்கு மூத்தவள் தர்சினி அடுத்து தர்சன். பாக்யாவிற்கு மூத்தது அமரன், அடுத்தது அனேகன் என இரண்டு ஆண்கள், கடைக்குட்டி தாமரை.

மிகவும் கலகலவென சந்தோசமாக ஊரே மெச்சும்படி வாழ்ந்த குடும்பம். ‘தினம் தினம் பெரியவீட்டுல விஷேஷம் தான் போல’ என ஊரே வியக்கும்படி தான் இருக்கும் அந்த பெரியவீடு.

‘யார் கண் பட்டதோ’ என கடந்த காலத்தில் சுழன்று கொண்டிருந்தவளை “மேடம் வந்தாச்சு” என டிரைவர் கூற, “ம்ம்” என்றவள் தன்னுடைய மொபைலை எடுத்து அதில் ஜிபேயில் பணத்தைக் கட்டிவிட்டு ஒரு தேங்க்ஸோடு விருவிருவென நடக்க ஆரம்பித்தாள்.

நள்ளிரவிலும் அந்த மருத்துவமனையில் ‘ஜே ஜே’ என்று ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருக்க, இது இரவா பகலா என யோசித்தபடி இன்னும் நடையில் வேகத்தைக் கூட்டினாள் ஆதிரா.

வேகமாக இரண்டாம் மாடிக்கு வந்தவளுக்கு அந்த தளத்தின் கடைசியில் இருந்த ஐசியுவை நெருங்க முடியாமல் கால்கள் தள்ளாடியது.

அங்கு அவளின் பாட்டி, சித்தி, சித்தப்பா, அத்தை மற்றும் தர்ஷினி இருக்க, இவளது வருகை முன்னமே தெரிவிக்கப்பட்டது போல, இவளைப் பார்த்ததும் அனைவரும் முகத்தைத் திருப்ப, பாட்டி மட்டும் பொங்கிய அழுகையுடன் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவரைப் பார்த்து வந்த அழுகையை அடக்கியவள் அறைக்குள் நுழைய முற்பட,

“யாரும் இப்போ பார்க்க முடியாது, விசிடர்ஸ் டைம் இது இல்ல அப்புறம் இப்போ மாமா தூங்கிட்டு இருக்காங்க.” என யாருக்கோ சொல்வது போல தர்ஷினி சொல்ல, ஆத்திரமும் அழுகையும் ஒரு சேர வர, அதை வெளிக்காட்ட முடியாத இயலாமையில் தனியாக இருந்த இருக்கையில் சென்று அமர்ந்து விட்டாள் ஆதிரா.

முகம் சிவந்து, அழுகையை அடக்கி அமர்ந்திருந்தவளின் தோற்றம் அங்கிருந்த அனைவரையும் வருத்தியதுதான். ஆனால் இதெல்லாம் அவளாக இழுத்துக் கொண்டது தானே அனுபவிக்கட்டும் என பிரகாஷின் மனைவி புனிதா நினைத்துக் கொள்ள, அவளை நோக்கி நகரப் போன பாக்யாவின் கையை இறுகப் பிடித்து தடுத்து நிறுத்தியிருந்தாள் தர்ஷினி.

வேதவல்லி கண்ணிமைக்காமல் பேத்தியைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார். அவளோ தலையை நிமிர்த்தவேயில்லை. நிமிர்ந்தால் தன்னுடைய இந்த இறுக்கமான வேஷம் கலைக்கப்படும் அபாயம் இருப்பதால் யாரையும் பார்க்காமல் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தாள்.

அந்த நேரம் “ஹேய் ஆதி, எப்ப வந்த. நான் என் ரூம்ல தானே உன்னை இருக்கச் சொன்னேன்.” என்றபடியே அவளருகில் வேகமாக வந்து கை கொடுத்து எழுப்பினான் ஆன்டர்ஷன்.

அவனைப் பார்த்து சினேகமாக சிரித்தவள், “ஜஸ்ட் நவ் டா.. மாமா தூங்குறாங்க போல..” எனவும்,

அவளை ஆராய்ச்சியாக பார்த்தவன் “கம்..” என அங்கு சற்று தள்ளியிருந்த பெல்லை அமர்த்த, அடுத்த நொடி அந்த ஐசியு அறையின் உள்ளிருந்து ஒரு நர்ஸ் வெளியில் வர “இவங்க டாக்டர் ஆதிரா, பல்மனாலாஜிஸ்ட். யுஜில என்னோட க்ளாஸ்மேட் அன்ட் க்ளோஸ் ஃப்ரன்ட்” என்று அறிமுகப்படுத்தியவன், மும்பையின் மிகப்பெரிய மருத்துவமனையின் பெயரைச் சொல்லி, “அங்க சீஃப் கன்சல்டன்ட். உள்ள இருக்குற பேசன்ட் இவங்க மாமா. சோ ஆதிரா டாக்டர் எப்போ வந்தாலும் உடனே உள்ள அலோவ் பண்ணுங்க, அன்ட் டே டியுட்டி பார்க்க வர ஸ்டாஃப்க்கும் இன்ஃபார்ம் பண்ணிடுங்க ரைட்..” என அந்த செவிலியருக்கு தன் இறுக்கமானக் குரலில் ஆர்டர் போட்டவன், ஆதிராவின் கையைப் பிடித்து “ஆதி கம்” என உள்ளே அழைத்துப் போனான்.

இதையெல்லாம் எரிச்சலாகப் பார்த்த தர்ஷினி, “அம்மா சின்னத்தானுக்கு போன் பண்ணுங்க. அவர் என்ன சொல்லிட்டு போனார். இவ வந்தா உள்ளே விடக்கூடாதுனு சொன்னாங்கதான. இப்போ அவ உள்ளே போயிட்டா பாருங்க. பெரிய மாமாவுக்கு இவளைப் பார்த்ததும் பிபி அதிகமாகிடும். சீக்கிரம் கூப்பிடுங்க..” என எரிச்சலாக கத்த,

“ஷ்.. எதுக்கு இப்படி கத்துற தர்ஷினி. அவளும் டாக்டர்தான், அதோட கூட போயிருக்குறவரும் ஒரு டாக்டர்தான். அவங்க இருக்கும் போது மாப்பிள்ளைக்கு என்னாகிடும். முதல்ல அவளை இப்படி பேசுறதை நிறுத்து. இது ஆஸ்பத்திரி வீடு இல்ல..” என வேதவல்லி பேத்தியைக் கண்டிக்க,

“அதானே இன்னும் என் பொண்ணை ஒன்னும் சொல்லலையேன்னு பார்த்தேன்” என்ற புனிதா, “கிளம்புங்க போகாலாம். இனி நாம இங்க அதிகப்படிதான்..” என மகளை இழுத்துக் கொண்டு கிளம்ப எத்தனிக்க, அதே நேரம் ஐசியுவில் இருந்து வெளியில் வந்தனர் ஆதிராவும் ஆன்டர்ஷனும்.

அதுவரை இருந்த உடல்மொழி அல்ல இப்போது ஆதிராவுக்கு. தொழில் என்று வந்துவிட்டாள் அவள் வேறமாதிரிதான். அங்கு யாரையும் வச்சு பார்க்கமாட்டாள். இப்போதும் நிமிர்ந்து நேரானப் பார்வையுடன் தன் மாமாவைப்பற்றி பேசியபடியே வெளியில் வந்தாள்.

பாட்டியும் அத்தையும் அவளையேப் பார்ப்பதை உணர்ந்தவள் “டூ மினிட்ஸ் ஆன்ட்” என நண்பனிடம் கூறிவிட்டு, பாக்யாவின் எதிரில் நின்று, “மூனு இடத்துல ப்ளாக் இருக்காம். நாளைக்கு நைட் சர்ஜரி பண்ணிக்கலாம் என்று சொல்றார் ஆன்டர்ஷன். எனக்கும் அதுதான் சரின்னு படுது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பண்ணிடலாம்.” என தகவலாகச் சொல்ல, “ம்ம் சரி” என இருவரும் தலையை ஆட்ட,

“ஆதிக்குட்டி..” என்ற குரல் தூரத்தில் கேட்க, ஆதிராவின் இதழ்களும் ‘ஆராக்கா’ என முணுமுணுத்தது.

புயல் வேகத்தில் வந்த ஆராதனா சுற்றி இருப்பவர்களை மறந்து, தன்னிலையையும் மறந்து “ஆதிக்குட்டி, ஆதிக்குட்டி வந்துட்டியா செல்லம். ஆதிமா..” என தங்கையைக் கட்டிக் கொண்டு அழ,

“ஹேய் என்ன பன்ற, இந்த மாதிரி நேரத்துல ஏன் இப்படி நடந்துக்குற” என அக்காவை கடிந்து கொண்டே கட்டிக் கொண்டவளுக்கும் விழியில் நீர் பெருக்கெடுக்கத்தான் செய்தது.

“ஒன்னுமில்ல ஒன்னுமில்ல இங்க பாரு, அழறதை நிறுத்து முதல்ல. ஆராக்கா சொன்னா கேளு. ப்ளீஸ், நீ இப்படி அழுதா உள்ள இருக்குற குழந்தைக்கு கஷ்டம் சொன்னா கேளு.” என எவ்வளவோ சமாதானம் செய்தும் ஆராதனாவின் அழுகையை நிறுத்த முடியவில்லை.

“ஆரா..” என்று ஓங்கி ஒலித்த ஒரு கர்ஜனைக் குரலில் சட்டென்று ஆராதனாவின் அழுகை நின்றுவிட, உடலும் கூட பயத்தில் சட்டென்று தூக்கிப் போட்டது.

“உனக்கு ஒரு டைம் சொன்னா புரியாதா.? இதுக்குத்தான் இந்த நைட் டைம் என்னைக் கூட்டிட்டு போங்கன்னு அடம் பிடிச்சியா..” எனக் கத்த,

“இல்ல இல்லத்தான் நான் அழமாட்டேன் ப்ராமிஸ். இனி அழமாட்டேன்.” என முகத்தை வேகமாகத் துடைத்தவள் ஆதிராவின் கையை இறுகப் பற்றிக் கொண்டாள்.

“ஓக்கே உன்னை நான் நம்புறேன். இன்னொரு முறை இப்படி அழுதா கண்டிப்பா இங்க கூட்டிட்டு வரமாட்டேன் பார்த்துக்கோ. புரியுதா.?” என மனைவியைக் கண்டிக்க, அதில் இருந்த கோபத்தில் ஆராதனா வேகவேகமாய் சரியெனும் விதமாய் தலையை ஆட்ட, தமக்கையை பேசியவனை முறைத்துப் பார்த்தாள் ஆதிரா.

அவளையும், அவள் முறைப்பையும் கண்டு கொள்ளாமல் “ஹாய் டாக்டர்” என ஆன்டர்ஷனைப் பார்த்து புன்னகைக்க,

“ஹாய் மாம்ஸ், என்ன நீங்க இந்த நேரம் ஆராக்காவை அழைச்சிட்டு வந்துருக்கீங்க. ஆதியே இப்போ அங்க வந்துருப்பாதானே. இந்த மாதிரி நேரத்துல எதுக்கு ரிஸ்க் எடுக்குறீங்க” என கேட்க,

“நடுராத்திரில இவளை இழுத்துட்டு வர எனக்கு மட்டும் என்ன வேண்டுதலா மச்சான். உன் அக்கா அவ தங்கச்சியைப் பார்க்கனும்னு ஒத்தக்கால் சின்னப்பதாஸ் மாதிரி நின்னா..? என் பொண்ணும் கூட்டிட்டு போங்கன்னு பெர்மிஷன் கொடுத்துட்டா, எனக்கும் வேறவழி தெரில. என்னை என்ன பண்ண சொல்ற. உன் ஃப்ரண்ட் வீட்டுக்கு வருவாளோ இல்லை அப்படியே மும்பைக்கு ஃப்லைட் ஏறுவாளோ யாருக்குத் தெரியும். அதான் என் பொண்டாட்டி ஆசைதான் முக்கியம்னு கூட்டிட்டு வந்துட்டேன்.” என ஆதிராவை இளக்காரமாகப் பார்த்தபடி ஆன்டர்ஷனுக்கு பதில் கொடுத்தான் அமரன்.

“ம்ச் மாம்ஸ்..” என அவனின் பதிலில் சலித்த ஆன்டர்ஷன், “ஆராக்கா இன்னும் நீங்க சின்ன பிள்ளையா சொல்லுங்க. உங்க பொண்ணே பரவாயில்ல போல. நான் உங்ககிட்ட சொன்னேன் இல்ல. ஆதியை வீட்டுக்கு கூப்பிட்டு வருவேன்னு. அப்போ நீங்க என்னை நம்பலையா..” என கேட்க,

“இல்லடா தம்பி. எனக்கு உன்மேல நம்பிக்கை இருக்கு, அதே சமயம் ஆதியையும் தெரியும். யார் சொன்னாலும் வீட்டுக்கு வரமாட்டா. அதான்..” என இழுக்க,

“ஆராக்கா..” என சலித்த ஆதிரா, “நான் நம்ம வீட்டுக்குத்தான் வரேன். மாமா சர்ஜரி முடியிற வரை இங்கதான் இருப்பேன்..” என ஆறுதலாக சொல்லி, கைப்பிடித்து அவளை அழைத்துச் செல்ல,

“ம்மா இங்க என்ன நடக்குது. எல்லாரும் ஒன்னு சேர்ந்துட்டா அப்புறம் நம்ம ப்ளான் என்னாகும்.. இவளை யார் இங்க வர சொன்னது.?” என தர்ஷினி பல்லைக் கடிக்க,

“கொஞ்சம் சும்மா இரு தர்ஷி, உன் அப்பாவுக்கு மட்டும் இதெல்லாம் தெரிஞ்சா அவ்வளவுதான். இங்க எதுவும் பேசாத, வீட்டுல போய் பேசிக்கலாம். முதல்ல இங்க நடந்ததை உன் அத்தானுக்கு கூப்பிட்டு சொல்லு.” என மகள் காதைக் கடிக்க, “ம்ம் என்னையே அடக்குங்க..” என எரிச்சலாக முணுமுணுத்துவிட்டு மற்றவர்களைப் பார்த்து முறைத்தபடியே மொபைலுடன் நகர்ந்துவிட்டாள் தர்ஷினி.
 

Vimala

Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 10, 2023
Messages
41
ஆரம்பமே அசததலா இருக்கே..
உணர்ச்சி பூர்வமான எபிசோட்
அருமை மா
 

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 21, 2022
Messages
156
வாவ்.. ரியல்லி வெரி நைஸ் ஸ்டார்டிங்க் சிஸ்.
இது உங்க முதல் கதைன்னா நம்பவே முடியலயே..
வாழ்த்துக்கள்...
மேலும் பல கதைகள் எழுத மனமார்ந்த வாழ்த்துக்கள் சிஸ்.
 

Vimala Ashokan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 9, 2021
Messages
285
மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா..
மிகவும் அருமையான அப்டேட்.
உணர்ச்சிப்பூர்வமா இருக்கு, அடுத்த எபிசோடுக்கு வெயிட்டிங்க்.
 

Sailajaa sundhar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jun 13, 2024
Messages
27
வாவ்.. ரியல்லி வெரி நைஸ் ஸ்டார்டிங்க் சிஸ்.
இது உங்க முதல் கதைன்னா நம்பவே முடியலயே..
வாழ்த்துக்கள்...
மேலும் பல கதைகள் எழுத மனமார்ந்த வாழ்த்துக்கள் சிஸ்.

Thank u so much sis
 

Sailajaa sundhar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jun 13, 2024
Messages
27
🤔🤔🤔🤔🤔🤔இந்த கதை படிச்ச ஞாபகம்,, சூப்பர் சூப்பர் ❤️💚❤️💚❤️💚❤️

ஆமா சிஸ்.. போட்டிக்கதைக்கு எழுதிட்டு பாதிலயே நிறுத்திட்டேன்
 
Top