• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சிறகு - 26 Final

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
279
446
63
Madurai
சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே...

சிறகு - 26 ( இறுதி அத்தியாயம்)

தனது கூடாரத்திற்குத் திரும்பிய ஜேபியின் முகத்தில் நாணப் பூக்கள் பூத்துக் குலுங்கின.

'இந்தக் காதல் தான் எத்தனை அழகானது. தனது கருமை வானம் எங்கும் வண்ணங்களை வாரி இறைத்து, நொடியில் வாழ்க்கையை வர்ணஜாலமாக்கியதே! ருசிக்கப் பயந்த வாழ்வின் பக்கங்களை தித்திப்பாக்கியதே!', எண்ணங்களின் மயக்கம், கண்களில் மிதக்க, சிறு படபடப்புடன் கூடாரத்தின் வாசலில் நின்றிருந்தாள்.

வசீகரனின் வரவைக் கண்டதும், 'உள்ளே செல்வோமா? வெளியே நிற்போமா?' என்று மனதிற்குள் விவாதம் நடத்திக் கொண்டிருந்தாள்.

வசீகரன் அருகில் வந்ததும், துடிக்கும் கீழ் உதட்டை அடக்கும் வழி தெரியாது, பற்களால் சிறை செய்து, கால் விரல்கள் மண்ணில் பதிய, பேசாமடந்தையாய் நின்றாள்.

அவளின் மோன நிலையையும், பயத்தையும் புரிந்து கொண்ட வசீகரன், அவளின் தோள்களின் மேல் தனது கைகளை ஆதரவாய் வைத்து, அவளின் பிறை நெற்றியோடு, செல்லமாய் முட்டி, சிங்கார முத்தமிட்டான் அவளின் பிறை நுதலில்.

"உள்ளங்கையில் உருகும் சர்க்கரையைச் சுவைக்கும் வேகத்தை விட, ஏனோ அது பாகாய் கரைவதைப் பார்த்து ரசிக்க மனம் ஏங்குகிறது. உங்களின் எத்தனையோ பரிமாணங்களைப் பார்த்த நான், உங்களுடைய இந்தக் காதல் பரிமாணத்தில், சிக்கிச் சிதறி சில்லு சில்லாய் உடைகின்றேன். அள்ளி எடுத்து ஆதரவு தருவீர்களா அம்மணி?" என்றான் வசீகரன் குறும்புடன்.

அவனின் குறும்புப் பேச்சில் தன்னை மீட்டெடுத்துக் கொண்ட ஜேபி, "ம்க்கும்... சர்க்கரை மேல் ரொம்ப அக்கறை தான். நாளை எனது போட்டியின் இறுதி நாள். அதனால் தூங்கப் போகிறேன். நீங்கள்?" என்றாள்.

"தூங்கத்தான் வேண்டும். கூடாரத்திற்குள் நான் வந்தால் சேதாரம் உங்களுக்குத்தான். பரவாயில்லையா அம்மணி?" என்றான்.

அதுவரை சாதாரணமாக இருந்த ஜேபி, தன் கண்களில் தீவிரத்தைக் கொண்டு வந்து,
" இன்று தான் உலகம் அழியப் போகும் கடைசி நாளாக இருந்தாலும், எந்தன் அனுமதியின்றி நீங்கள் எல்லையைக் கடக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது வசீ!" என்றாள் என்றும் அவனறியாத மாயக் குரலில்.

ஒரு பெண்ணின் நம்பிக்கையை வென்றால், அவளின் மனதை வென்றதற்குச் சமம். அவளின் மனதை வென்று விட்ட மன்னவனின் மனதில் ஆயிரம் மத்தாப்புகள் வெடித்து காதல் தீபாவளியைக் கொண்டாடியது.

" என் சக்கரைக் கட்டி அம்மணி!" என்றவளின் இரு கன்னத் தசைகளையும், அள்ளிக் கிள்ளி எடுத்து ஆனந்தக் கூத்தாடினான்.

சந்தோஷத்தின் உச்சியில் சிறு குழந்தை போல் கைகளை விரித்து, "ஹுர்ரே..." என்று கத்திக்கொண்டு மணலில் வட்டமிட்டான்.

பூமியின் வட்டப்பாதையில் நிலவு குறிக்கிடுவது போல், வசீகரன் சுற்றி வந்து கொண்டிருந்த வட்டப்பாதையில் குறுக்கே வந்த ஜேபி, அவன் எதிர்பாராமல் அவன் நெஞ்சோடு மோதி, அவன் முதுகினை இறுக்க கட்டிக்கொண்டு, அவன் நெஞ்சில் தலையினை சாய்த்து, கண்களை மூடிக்கொண்டு சட்டென்று அவன் மார்பில் முத்தமிட்டாள்.

முத்தப் பதக்கம் பெற்ற அந்த மாவீரனின் உடல் சிலிர்த்து அடங்கியது. அவன் பதில் பேச நினைக்கும் போது, ஜேபியின் தளிர் விரல்கள் சற்றே உயர்ந்து, அவன் உதட்டினைச் சிறை செய்தது.

தன் மார்பில் சூடாய் இறங்கும் அவளது கண்ணீர், அவளது உணர்வுகளின் வடிகால் என்று புரிந்து கொண்டவன், தன்னுடைய இரு கரங்களாலும் ஜேபியை வாகாய் அணைத்துக்கொண்டு தன் கூட்டிற்குள் பொருத்திக் கொண்டான்.

" தேங்க்ஸ் வசீ... என்னை எனக்கே மீட்டுக் கொடுத்ததற்கு. என் தயக்கங்களை உடைத்ததற்கு. ஆயிரம், ஆயிரம், லட்சம் கோடி தேங்க்ஸ்" என்றாள் உணர்வுப் பெருக்குடன்.

"ஹேய்... ரிலாக்ஸ்... தேங்க்ஸ் சொல்லுவதெல்லாம் இருக்கட்டும். இரவு முழுவதும் இப்படியே கட்டிக் கொண்டா இருக்கப் போகிறோம்?" என்றான்.

" ஏன் இப்படியே நின்றால் என்ன? " என்றாள்.

" கடைசிக் கூடாரம் மற்றும் நான்காவது கூடாரத்திலிருந்து ஆட்கள் நான்கு முறை எட்டிப் பார்த்து விட்டார்கள் வசதி எப்படி?" என்றான்.

வெட்கம் மேலிட, அவனிலிருந்து மெல்ல பிரிந்து நின்று, "அடுத்தவர்களுக்காக ஓர் வாழ்க்கை. நமக்காக ஓர் வாழ்க்கை என்று வாழக்கூடாது என்று வசீயானந்தா சொல்லி இருக்கிறார். அதனால்..." என்று இழுத்தாள்.

" அதனால்... " என்று ராகமாக அவனும் இழுத்தான்.

ஓடி வந்து மீண்டும் அதிரடியாய் அவனைக் கட்டிக் கொண்டு, " என் வாழ்க்கை! என் இஷ்டம்! நான் இப்படித்தான் இருப்பேன்" என்று கடற்கரை மணலில் சத்தமாக உரைத்தாள் ஆனந்தத்துடன்.

இரவு முழுவதும் மங்கையவளை மழலையாய் தன் மடியில் தாங்கினான் மன்னவன். தாயாய் அவன் அணைப்பில், சேயாய் அவள் உறக்கம் கொண்டாள் என்றும் இல்லா நிம்மதியுடன்.

மணற் சிற்ப போட்டியின் இறுதி நாள் கோலாகலமாக தொடங்கியது. வசீகரனின் கண்கள் ஜேபியையே வட்டமிட்டுக் கொண்டிருந்தன.

மனதிற்குள் காதல் புது வெள்ளம் போல் பாய, கைகளில் அதன் உற்சாகம் தொற்றிக் கொள்ள, அதனை தனது மணற் சிற்பத்திற்கு கடத்திக் கொண்டிருந்தாள் ஜேபி.

போட்டியின் இறுதி நொடியும் வந்தது. ஒவ்வொருவரும் தங்களது மணற் சிற்பத்திற்கான விளக்கத்தினை நடுவர் குழுவிடம் விவரித்துக் கொண்டிருந்தனர்.

ஜேபியின் அருகில் வந்த நடுவர்களுக்கு அவள் விளக்கம் கூறாமலேயே, அவள் வடித்த மணற் சிற்பம், அதன் முழு அர்த்தத்தையும், கலை நயத்துடன் அவர்களுக்குத் தெளிவாக உணர்த்தியது.

போட்டியின் பரிசை அறிவிக்கும் தருணத்தில், ஜேபி வசீகரன் கைகளோடு தன் கைகளை பிணைத்துக் கொண்டு, அவனின் தோள் சாய்ந்து அந்த நொடிகளை அமைதியாய் கடந்து கொண்டிருந்தாள்.

" அடுத்த தலைமுறைக்கான சிற்பி" என்ற விருதினை நடுவர் குழு ஜேபிக்குப் பரிந்துரை செய்தது.

நிர்மலமான முகத்துடன், தன் தோள் வளைவில் இருந்த ஜேபியின் உச்சந்தலையில் ஆழ்ந்த முத்தத்தைப் பதித்து தன் பாராட்டுக்களை வெளிப்படுத்தினான் வசீகரன்.

மேடையில் சென்று பரிசினை பெற்றுக் கொண்டவளிடம், "உங்கள் மணற் சிற்பத்திற்கான தலைப்பினைக் கூற முடியுமா? " என்றனர்.

கூட்டத்தில் ஒருவனாக நின்று கொண்டிருந்த வசீகரனின் கண்களைப் பார்த்து, இரு புருவங்களையும் ஒற்றை நொடியில் உயர்த்தி, "என் வானம்! என் சிறகுகள்!" என்றாள் குரலில் எந்தப் பிசிறும் இன்றி.

அந்தச் சின்னஞ்சிறு பறவையின் சிறகுகளைத் தாங்கும் வானம் தான் என்பதில் ஆனந்தம் எல்லை மீறியது வசீகரனுக்கு.

பரிசளிப்பு முடிந்ததும் அனைவரும் பயணப்பட தயாராகிக் கொண்டிருந்தனர். தீவிலிருந்து மும்பைக்கு செல்லும் படகில் அமர்ந்து கொண்டிருந்தனர் இருவரும்.

" என்ன மிஸ்டர் வசீகரன், பரிசு பெற்ற எனக்கு நீங்கள் எந்த வாழ்த்தும் சொல்லவில்லையே..." என்றாள்.

"உங்க அலைபேசியைப் பாருங்கள் அம்மணி!" என்றான் காதோரம் அவளின் முடிக்கற்றைகளை ஒதுக்கி கிசுகிசுப்பாக.

கூச்சத்துடன் சற்றே அவனைத் தள்ளிவிட்டு, தனது அலைபேசியைப் பார்த்தாள்.

" என் வானில் உள்ள நட்சத்திரங்களை எல்லாம் பிடுங்கி எரிந்து விட்டேன்...
உன் சிறகுகளைக் காயப்படுத்தக் கூடாது என்பதற்காக...
உந்தன் வெற்றி!
எந்தன் வெற்றி!
என் காதலின் தொடக்கம் நீ!
உன் தேடலின் முடிவு நான்!"
என்றும் மாறாத காதலுடன்...
ஜேகே! என்ற ஜெயகரன்!
ஜெயலட்சுமி பெருமாளின் கரன் என்ற வசீகரன்!
குறுஞ்செய்தியை வாசித்த ஜேபியின் விழிகள் விரிந்து கொண்டது ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியுடன்.

"இந்த... காதல்... கவிதை..." வார்த்தைகள் சிக்கித் திணறியது ஜேபிக்கு.

" உங்கள் இதயத்தில் நான் குடியேறும் முன், என் கவிதையின் வழி என் வார்த்தைகள் குடியேறிவிட்டது அம்மணி!" என்றான் கண்களைச் சிமிட்டி.

"வசீ...." வார்த்தைகள் கூட காற்றாய் மாறியது ஜேபிக்கு.

" சொல்லுங்க சக்கரக்கட்டி!" என்றான்.

" என்னை ஒரு பெண்ணாய் உணர வைத்தது உங்கள் வார்த்தைகள் தான். காதலை அழகாய் ரசிக்க வைத்தது உங்கள் வார்த்தைகள் தான்.

எழுதிய அந்த கைகளுக்கு ஏமாற்றம் கொடுக்கக் கூடாது என்று தான் விலக்கி வைத்தேன். எழுதிய கைகள் இதுதான் என்று தெரியாமல் இன்று, என் கைகளுக்குள் தாங்கிக் கொண்டிருக்கிறேன். இன்னும் இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் மாயக்காரா?" என்றாள் மையல் கலந்த கோபத்துடன்.

" வார்த்தைகளால் சொல்ல முடியாது அம்மணி. உத்தரவு தந்தால் உதடுகளால்... " என்றவன் முடிப்பதற்குள் தன் உதட்டின் மீது விரல் வைத்து இருபுறமும் தலையினை அசைத்து , விழிகளால், 'மேலே சொல்லாதே!" என்று கட்டளையிட்டாள்.

சிறு கோபம் போல் வசீகரன் காலினை உதைக்க, அவன் கைகளை ஆனந்தமாய் பிணைத்துக் கொண்டாள் நிழலும் நிஜமும் ஒன்றென அறிந்ததால்.

அரபிக் கடலின் காற்றும் அவர்களுக்கு கையசைத்து அவர்களின் நல் வாழ்விற்கு வாழ்த்துக் கூறி வழி அனுப்பி வைத்தது.

வீட்டிற்கு திரும்பிய ஜேபியின் முகத்தில் ஒளிர்ந்த ஒளியினைக் கொண்டே தன் மகளின் வாழ்வு மலர்ந்தது என்பதைக் கண்டு கொண்ட பெருமாள், ஒரு தந்தையின் மன நிறைவினை அடைந்தார்.

மங்கி பிரதர்ஸ் டீம் என்றும், எப்பொழுதும் ஜேபியின் வெற்றியைச் சிறப்பாகக் கொண்டாடும். இன்றோ மூவரும் ஜேபியிடம் பேசாமல் வசீகரனிடம் மட்டும் பயணம் எப்படி இருந்தது என்பதைக் கேட்டுக் கொண்டனர்.

முதலில் தன்னிடம் விளையாடுகிறார்கள் என்று எண்ணிய ஜேபி, நேரம் செல்லச் செல்ல ஏதோ ஒரு விஷயம் ஒளிந்து இருப்பதைக் கண்டு கொண்டு, மதுவிடம், "என்ன?" என்று வினவினாள்.

தன் தோழியிடம் நீண்ட நேரம் கோபம் கொள்ள முடியாத மது, இறுதியில் வசீகரன் அலுவலகத்தில் அவளால் நடந்த குழப்பத்தை விளக்கிக் கூறினான்.

தனக்காக, வசீகரனிடம் உள்ள எதை இழக்கச் சொன்னாலும் இழப்பதற்குத் தயாராக இருக்கும் வசீகரனின் காதல் ஜேபியை மிரட்டியது.

" நிச்சயமாக நான் இப்படி நடக்கும் என்று நினைக்கவில்லை மது. உண்மையாக நான் வருந்துகிறேன்" என்று உள்ளடங்கிய குரலில் பேசிய தன் தோழியின் தலையில் லேசாகத் தட்டி, " எல்லாவற்றையும் பாஸ் சரி செய்து விடுவார். கவலை கொள்ளாதே" என்று குற்றம் சாட்டியவனே, ஆறுதலும் கூறினான். அதுதானே நட்பின் இலக்கணம்.

ஜேபியின் வாடிய முகம் பொறுக்க மாட்டாமல், யாதவும், கிருஷ்ணாவும், "ஹேய் ஜேபி! பி ஹேப்பி! தீர்வில்லாத பிரச்சனைகள் என்று இந்த உலகத்தில் எதுவும் இல்லை. பாத்துக்கலாம் மச்சி!" என்று தைரியம் கூறினர்.

அவர்களிடையே வந்த அன்னம்மாள், " நீ எலி பேண்ட் போட்டத பாக்க போயிருக்கேன்னு சொன்னாங்க. அத பாக்க ஒரு வாரமா?" என்றார்.

அனைவரின் இமைகளும் ஒரே நேரத்தில் மேல் எழும்பி நின்றது.

"பேபி.... அது எலிஃபெண்டா தீவு" என்றான் யாதவ்.

" அத தாண்டா லூசு பயலே நானும் சொல்றேன். அந்த தீவுல எலி பேண்ட் மட்டும் தான் போட்டு இருக்குமா? சட்ட போட்டு இருக்காதா? ஒரு கேள்வி கேட்டா பதில் சொல்லத் துப்பில்லை" என்று கழுத்தை நொடித்து விட்டுக் கிளம்பினார்.

தங்கள் அறைக்குள் வந்ததும் வசீகரன் முன் வந்து நின்ற ஜேபி, "உங்கள் உழைப்பை எல்லாம் என் காலுக்கு கீழ் போடும் அளவு நான் தாழ்ந்தவள் இல்லை. என்னால் நடந்த அனைத்து குழப்பத்திற்கும் என்னை மன்னித்து விடுங்கள் வசீ" என்றாள்.

" அந்த நொடி உன்னைத் தவிர எனக்கு வேறு எதுவும் பெரிதாகத் தோன்றவில்லை. என் தொழிலில் முதல் முறை ஓர் சறுக்கலை சந்தித்து இருக்கிறேன். வீழ்ச்சியை அல்ல. இதை உன் மனதில் வைத்து குழப்பிக் கொள்ளாதே!" என்றான்.

வசீகரனுக்காக சிரித்து வைத்தவள், இந்த பிரச்சினையை எப்படி தீர்க்கலாம் என்று நொடி நேரம் கூட விடாமல் யோசித்தாள்.

மறுநாள் வசீகரன் அலுவலகம் கிளம்பியதும், ஜேபி தனது நண்பர்களை அழைத்துக் கொண்டு வெளியே சென்றாள்.

ஒரு வாரம் கடந்த நிலையில், வசீகரனின் அலுவலக அறையில், கோப்புகளில் கையெழுத்து வாங்க ஜேபி நின்றிருந்தாள்.

அப்பொழுது கதவினைத் திறந்து கொண்டு வேகமாக ஓடி வந்த வசீகரனின் செயலாளர், " சார் அந்த வெளிநாட்டு நிறுவனத்தின் தலைமை அதிகாரி வந்து கொண்டிருக்கிறார். சூப்பர் சார்! சொன்னபடியே நிலைமையை சரி செய்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்!" என்றான்.

வசீகரனுக்கு இம்மையும் புரியவில்லை மறுமையும் புரியவில்லை. அலைபேசியில் கூட தன்னை அணுக விடாதவர், எப்படி தன் அலுவலகத்திற்கு நேரில் வர முடியும் என்று குழம்பினான்.

கதவைத் திறந்து உள்ளே வந்த வெளிநாட்டு ஒப்பந்த நிறுவனர், அடுத்த நொடி, " ஹாய் மிஸஸ் வசீகரன்" என்றார் ஜேபியைப் பார்த்து.

வசீகரன் ஜேபியைப் பார்க்க, அவளோ இமைகளை மூடித் திறந்து மெலிதாகப் புன்னகைத்தாள்.

" இந்திய பெண்மணிகள் சிறந்த புத்திசாலிகள் என்பதை உங்கள் மனைவி மூலம் அறிந்து கொண்டேன் மிஸ்டர் வசீகரன். என்னிடம் பேச வாய்ப்பு தரவில்லை என்றதும் நேரடியாக என் மனைவியிடம் பேசி, நிலைமையை விளக்கி உள்ளார் உங்கள் மனைவி. என் காதல் மனைவியின் கட்டளைப் படி இதோ உங்கள் முன் நான்" என்று சிரித்துக் கொண்டே நிறுத்தப்பட்டிருந்த ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பித்துவிட்டு வசீகரனிடம், "உங்கள் மனைவிக்கு உங்கள் மீது அலாதியான காதல். வாழ்த்துக்கள்!" என்று கூறிவிட்டு கிளம்பினார்.

வசீகரன் எதுவும் பேசாமல் ஜேபியையே இமை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவனின் பார்வையில் பெருமிதம் வழிந்தோடியது.

ஆசை, காதல், பாசம், பாராட்டு கலந்த அவன் பார்வை அவளைப் பரவசம் கொள்ளச் செய்தது. இறுதியாக அந்தப் பார்வையில் தெரிந்த ஏக்கம், மோகம் அவளை பேச்சிழக்கச் செய்தது.

அவனருகே நெருங்கி வந்தவள், பூட்டிய கதவின் பின்னிருப்பது பிசாசா? பூதமா? என்று பார்த்து விடலாம் என்ற தைரியத்தில், "நம் ஒரு வருட ஒப்பந்தத்தை நிறுத்தி விடலாம். இருவரின் பெற்றோர் வீட்டுக்கும் மாறி மாறி சென்று தங்கி வரலாம். இன்று... ம்... நம் திருமண வாழ்க்கையைத் தொடங்கலாம் வசீ " என்றாள் தரையைப் பார்த்துக் கொண்டே.

மலர்ந்த புன்னகையை உதட்டுக்குள் அடக்கிக்கொண்டு, "ஏன் நம் திருமணத்திலிருந்து நம் வாழ்க்கைதான் தொடங்கி விட்டதே?" என்றான்.

திகைப்புடன் வசீகரனை நிமிர்ந்து பார்த்தவள் அவனின் கள்ளச் சிரிப்பைக் கண்டதும், "அப்போ சரி. அமேசானில் இருந்து இரண்டு காவி வேட்டி ஆர்டர் பண்ணிக்கோங்க சார்" என்று பணிவாய் கூறி விட்டு வெளியேறினாள்.

நிறுத்தப்பட்டிருந்த வேலைகள் மீண்டும் ஆரம்பித்ததால் அலுவலக வேலைகள் இழுத்துக் கொண்டது வசீகரனுக்கு. நடுநிசியில் வீட்டிற்கு வந்தவனை ஜேபி இல்லாத வெற்று அறை வரவேற்றது.

படுக்கையின் மீது ஒரு காகிதம் சுற்றிக் கிடந்தது. காகிதத்தை எடுத்து, அதில் எழுதி இருந்த எழுத்துக்களை வாசித்தான்.

" நான் விளக்கு அல்ல! ஆனால் என்னால் பற்றிக் கொள்ள முடியும் "

ஜேபி தனக்கான தேடல் வேட்டை வைத்திருப்பதை உணர்ந்தவனின் உள்ளம் கனிந்து சிரித்தது. புதிரினை ஒன்றிற்கு இரு முறை வாசித்தவனுக்கு விடை புலப்பட, தீப்பெட்டியினைத் தேடினான்.

தீப்பெட்டியை கண்டுபிடித்ததும், தீப்பெட்டியின் அருகில் இருந்த மற்றொரு காகிதத்தை எடுத்து வாசித்தான்.

"நான் இளமையாக இருக்கும்போது உயரமாகவும், வயதாகும்போது குட்டையாகவும் இருக்கிறேன்"

சிரித்துக் கொண்டே மெழுகுவர்த்தியைத் தேடினான். தீக்குச்சியினை உரசி மெழுகுவர்த்தியைப் பற்ற வைத்ததும் அறை இருளில் மூழ்கியது.

இருள் சூழ்ந்த அறையில், ஒற்றை ஒளியின் முன் அவனின் தேவதைப் பெண் வந்து நின்றாள்.

"நான் ஒருவேளை உங்களைக் காயப்படுத்தினால்..." என்று தயங்கித் தயங்கி கேட்டவளுக்கு, " நம் காதல் என்றும் தோற்காது" என்றான் உணர்வுப் பூர்வமாக.

பெண்மையின் வன்மை ஆண்மையின் மென்மையில் மலர்ந்து சிரித்தது.

சிறிய பறவை தன் வானத்தில் சிறகடித்து பறக்க ஆரம்பித்தது....

*** சுபம் ***

 

Shimoni

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 17, 2022
180
111
43
Germany
பெண்ணவள் மனதை வென்றுவிட்டான் இந்த வசீகரன் 😎😎😎

அருமை தோழி 👏👏👏

தங்களின் உடல்நிலையிலும் கவனம் செலுத்துங்கள்😊😊😊