• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தாமரை - 09

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,272
497
113
Tirupur
தாமரை - 09

அடுத்தடுத்த நாட்கள் ஷ்யாம் சொன்னது போலவேதான் நடந்தது. காலையில் தாமரையை வந்து அழைத்துப் போனால், மாலை ஆறு மணிக்கு மேல்தான் வந்துவிட்டு போவான்.

இந்த இரண்டு நாட்களும் தன் பெற்றோருடன் முழுதாக நேரம் செலவழித்தாள் தாமரை. மகேஸ்வரி மகளுக்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்தார்.

செல்வத்திற்கு மகளை இங்கு விட்டுச் செல்லவே மனமில்லை. ஆனாலும் அவர்களுக்கு வேறு வழியும் இருக்கவில்லை. அதனால் ஷ்யாமிடம் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு அவர்கள் ஊருக்கு கிளம்பிவிட்டனர்.

காலையில் வெளியிலிருந்தே அழைத்துச் செல்பவன், மாலை விடும்போது மட்டும் வீட்டிற்குள் வந்துதான் விட்டுச் செல்வான்.

வசந்தியும், சீனியும் அதைப் பார்த்தாலும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. இருவரும் இவர்களைப் பார்த்து சிறு புன்னகை கூட உதிர்க்க மாட்டார்கள்.

ப்ரீத்தா இவர்களைப் பார்த்து பொறாமையில் வெம்பி போவாள்.

ஆனால் நாயகி, ஷ்யாம் கிளம்பிய அடுத்த நொடியிலிருந்து தாமரையை வார்த்தைகளால் வதைக்க ஆரம்பித்துவிடுவார்.

எவ்வளவு பேசினாலும் ஒரு வார்த்தைக்கூட எதிர்த்து பேசமாட்டாள் தாமரை. தன் கோபத்தையும் முகத்தில் கூட காட்டாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிடுவாள்.

வசந்திக்கு தாமரையின் இந்த குணம் மிகவும் பிடித்து போனது. தன் மருமகனைப் போல அமைதியான குணம் என அவருக்கு தோன்றியது.

ஆனால் அந்த அமைதிக்குப் பின்னால் இருந்த தவறு, அதை இப்போதும் அவரால் ஏற்றுக்கொள்ள முடியாது.

தாமரையின் இந்த பொறுமைதான் வசந்திக்கு பல யோசனைகளை கொடுத்தது. இப்படி குணம் உள்ள பெண் எப்படி தன் மானத்தை, கர்ப்பை இழக்க முடிவெடுத்தாள்.

தன் பேரனும் அப்படிப்பட்டவன் இல்லை, பார்த்தவரையில் தாமரையும் அப்படி இல்லை எனும் போது, எங்கே தவறு நடந்தது என யோசித்துக் கொண்டே இருந்தார்.

தன் மருமகன் செய்த அதே தவறை, பேரனும் செய்து விடுவானோ என்ற பயம் வேறு, அவரை இப்படி எல்லாம் யோசிக்க வைத்தது.

இப்படி யோசனையில் இருந்தவரின் முன்னால் வந்து நின்றாள் தாமரை.

திடீரென்று வந்து நின்றவளை பார்த்ததும், புருவம் சுருக்கியவரிடம் “எனக்கு லீவ் முடிஞ்சது பாட்டிம்மா. நாளைக்கு இருந்து ஆபீஸ் போகணும். ஷியாம் பிக்கப் பண்ணி டிராப் பண்ணுவான்.” என்றதும் வசந்திக்கு இது அதிர்ச்சியான செய்தி

“என்ன வேலைக்கு போக போறியா? எங்க?” என அதே அதிர்ச்சியுடன் கேட்க, எதற்கு இவ்வளவு அதிர்ச்சி என்ற குழப்பத்துடன் அவளும் ஒரு எம்என்சி கம்பெனியின் பெயரைச் சொல்ல,

தன் அதிர்ச்சியை மறைக்க முடியாமல் “ஓ… என்ன படிச்சிருக்க.?” என்றார் அடுத்து.

“இன்ஜினியரிங் முடிச்சிருக்கேன், இப்போ ஒரு வருஷமா இங்கதான் ஒர்க் பண்றேன்.” எனவும்

மீண்டும் “ஓ.. நீ படிச்சது எல்லாம் இங்க தானா.?” என்றார் அதிர்ச்சியை மறைத்து அமைதியாக.

“ஆமா பாட்டிம்மா எம்ஐடில தான் படிச்சேன். அங்க இருந்துதான் பிளேஸ்மென்ட் ஆனேன்.” என்று அவளும் அமைதியாக கூற,

“இளங்கோவும் அங்கதான் படிச்சான். அப்போ இருந்தே அவனை தெரியுமா உனக்கு.?” என்றார் எதையோ தெரிந்து கொள்ளும் பாவனையில்.

“ம்ம்ம் ஆமா தெரியும்..? எனக்கு சீனியர்..” என்று தாமரை முடிக்கும் முன்னமே,

“பார்த்தீங்களா அத்தை.. பார்த்தீங்களா? நான் சொல்லும்போது நீங்க நம்பவே இல்லையே! இவளும் இவ குடும்பமும் சேர்ந்து திட்டம் போட்டுத்தான் நம்ம இளாவை இந்த பிரச்சினையில மாட்டி அவன் கல்யாணத்தை நடக்க விடாம பண்ணிருக்காங்க..” என நாயகி கத்திக்கொண்டே வர, வசந்திக்கும் கூட அப்படி இருக்குமோ என்று ஒரு நொடியில் தோன்றிவிட்டது.

ஆனால் தாமரையின் முகத்தில் இருந்த சலிப்பும் எரிச்சலும் அப்படியில்லை என அப்பட்டமாகக் காட்டியது. அதனால் அதை கேட்காமல் அவளையே அமைதியாக பார்க்க,

“நான் ஃபஸ்ட் யேர் ஜாயின் பண்ணும்போது, அத்தான் லாஸ்ட் யேர் படிச்சாங்க. அப்போ கூட அவங்ககிட்ட நான் பேசினது இல்ல.” என ஏதோ செய்தி வாசிப்பது போல சொன்னவள், வசந்தியிடம் தலையசைத்துவிட்டு தன்னறைக்கு கிளம்பிவிட்டாள்.

“எவ்வளவு திமிர் பாருங்கத்த. வீட்டுக்கு பெரியவங்க உங்களை மதிக்காம போயிட்டு இருக்கா.?” என நாயகி மீண்டும் ஆரம்பிக்க,

“நாயகி..” என அதட்டினார் வசந்தி.

“நான் ஒன்னும் தப்பா சொல்லலத்த.. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இவளை இங்கிருந்து அனுப்பிடுங்க. ஒருநாள் போல ஒருநாள் நான் அமைதியா இருக்கமாட்டேன்..” என வசந்தியிடம் சொல்லிவிட, அவருக்கு தன் மருமகளை நினைத்து எரிச்சல்தான் வந்தது.

“நாயகி! அந்த பொண்ணை சீண்டாம இருக்குறதுதான் எல்லாத்துக்கும் நல்லது. இதை சொல்லி சொல்லி எனக்கே சலிப்பு வந்துடுச்சு. அந்த பொண்ணு பிரச்சினை பண்ணாம போகனும்னா நீ அமைதியா இருந்தாதான் முடியும் பார்த்துக்கோ..” என்றார் சலிப்பாக.

“அதெப்படி அப்படியே விடமுடியும்.? என் பொண்ணு வாழ்க்கையை நாசம் பண்ணிட்டு என் முன்னாடியே நடமாடுவா, அதைப் பார்த்துட்டு நான் சும்மா இருக்கனுமா? என் நெஞ்செல்லாம் எரியுது அத்த. உங்களுக்கு அப்படியில்லையா? என்ன இருந்தாலும் உங்க பொண்ணு குடும்பம்தானே உங்களுக்கு முக்கியம். உங்க பையனை நினைச்சிருந்தா அன்னைக்கு அந்த சொத்தை வரவிடாம பண்ணிருப்பீங்களா?” என கோபமாக பேச,

“என்ன பேசுற? அது யார் சொத்துன்னு தெரியுமில்ல. அந்த குடும்பத்துக்கு செய்யக்கூடாத பாவத்தை செஞ்சிட்டு வந்தாக்கூட, இளாவுக்கு சேர வேண்டிய சொத்தை சரியா கொடுத்துட்டாங்க. அப்படி நியாயமா நடந்துக்கிட்டவங்க சொத்து அவங்க பேரனுக்குத்தான் போகனும். அதை தூக்கி உங்களுக்கு கொடுக்க சொல்றீங்களா.? அதுக்கு வாரிசு இளாதான். அவன் கொடுத்தா வாங்கிக்க வேண்டியதுதான.” என அவரும் கோபமாக பேச,

“அப்போவே அந்த சொத்து வந்திருந்தா நாங்க ஏன் இங்க உக்காந்துருக்க போறோம். இப்போ என் பொண்ணைக் கட்டு கட்டுன்னு இவனை கெஞ்ச போறோம்..” என்றவர், “இளா இங்க வரதுக்குள்ள இந்த பொண்ணை அனுப்பிடுங்க அத்த.. அதுதான் அவளுக்கும் நல்லது. எல்லாருக்கும் நல்லது.” என குரூரமாக பேசி நாயகி வெளியில் சென்றுவிட,

மருமகளின் மற்றொரு முகம் அவருக்கும் தெரியும்தான். ஆனால் அதை தன் பேரன் விசயத்தில் காட்டமாட்டாள் என்று நினைத்திருந்தவருக்கு, இன்று அவளின் வெளிப்படையான பேச்சைக்கேட்டு அதிர்ந்து போனார்.

அதிர்ந்தது அவர் மட்டுமல்ல. தாமரைக்கு குடிக்க ஜூஸ் எடுத்து மாடியேறிய ராணியும்தான்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, “அந்த பொண்ணைக் கொஞ்சம் கவனமா பார்த்துக்கோ ராணிம்மா. நீ செஞ்சதை மட்டும் அவளுக்கு சாப்பிடக்கொடு. யார் கொடுத்தாலும் சாப்பிடக்கூடாதுன்னு அவளுக்கு சொல்லிடு..” மிகவும் களைப்புடன் என்றுவிட்டு தன்னறைக்குச் சென்றுவிட்டார்.

ராணிக்கு இதை எப்படி எடுத்துக்கொள்ள என்றேத் தெரியவில்லை. தாமரையை மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மட்டும் தெரிந்து கொண்டார்.

இத்தனை நாள் இவர்களிடமிருந்து இளங்கோவை காப்பாற்றிக் கொண்டிருந்தார். இப்போது தாமரையையும் சேர்த்து பார்த்துக் கொள்ள வேண்டும். அவருக்கு இப்போது பொறுப்பு கூடிப் போனதை உணர்ந்து கொண்டார்.

எப்போது இவர்களை எல்லாம் உணர்ந்து இளா திருந்த போகிறானோ என நினைத்தவருக்கு ஒரு பெருமூச்சுத்தான் வந்தது.

அப்போதுதான் அவர் கையிலிருந்த ஜூஸ் நியாபகத்தில் வர, அதோடு தாமரையின் அறையை நோக்கி நடந்தார்.

“பாப்பா.. அம்மா ஊருக்கு போயிட்டாங்களா?” என்றவாரே, தாமரையிடம் அந்த ஜூசை நீட்டினார் ராணிம்மா.

“ம்ம் போயிட்டாங்க ராணிம்மா.. ஆனா உங்க ரகசியத்தை நீங்க எங்கிட்ட சொல்லவே இல்லை பார்த்தீங்களா?” என சிறு சிரிப்புடன் கேட்க, ராணிக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

“ம்ம் உங்க அம்மா எல்லாம் சொல்லிட்டாளா.?” என்றதும், ‘ஆம்’ என்பது போல் தலையாட்டினாள் தாமரை.

“எனக்கு உலகமே உங்கம்மாதான் பாப்பா. புருசன் போய் தனியா நிக்கும்போது என்னை பார்த்துக்கிட்டது அவதான். அவக்கேட்டு நான் முடியாதுன்னு எப்பவும் சொல்ல மாட்டேன். என் வாழ்க்கையை வாழ வச்சவ மகேசு. இளா அப்பா எனக்கு அண்ணன் முறையாகனும். அவர் இறந்த சமயம் என்னை இங்க அனுப்பி வைச்சா. அவளுக்கு ரொம்ப பயம் இளாவை நினைச்சு. பணத்துக்காக என்ன வேணும்னாலும் செய்வாங்கன்னு தெரிஞ்சிருக்கு. அதனால யாருக்கும் தெரியாம எங்கிட்ட வந்து அங்க யாரும் இளாவை நல்லா பார்த்துக்க மாட்டாங்க அக்கா. நீ போய் அங்க இருந்து, இளாவை நல்லா பார்த்துக்கோன்னு சொல்லி என்னை அனுப்பி வைச்சா. அவ சொன்னதும் சரிதான். இங்க யாரும் அவனைக் கண்டிப்பு காட்டி வளர்க்கல. அதே நேரம் பாசம் காட்டியும் வளர்க்கல..” என நிறுத்த, அவரை யோசனையாக பார்த்தாள் தாமரை.

“புரியலையா.?” என்றதும், அவள் ‘இல்லை’ என்பதுபோல் தலையை ஆட்ட,

“உங்க பாட்டி சாகும்போது அவங்க அம்மா வழி சொத்து எல்லாத்தையும் இளா பேர்லதான் எழுதி வச்சாங்க. அது இல்லாம உங்க தாத்தாவும் சொத்துல சரிபாதியை இளா பேர்ல எழுதி வச்சிட்டார். இது எதுவுமே இளாவோட அப்பாவுக்கு ஆரம்பத்துல தெரியாது. ஆனா குத்தகைக்காரங்க பணம் கொடுக்க போகும் போதுதான் எல்லாம் அவருக்கே தெரிஞ்சிருக்கு. அதுக்குப் பிறகுதான் விசாரிச்சு எல்லாம் தெரிஞ்சிக்கிட்டார். இளாவோட மாமாவும் அத்தையும் ஆரம்பத்துல பாதி சொத்தை அந்த பொண்ணு, ப்ரீத்தா பேர்ல எழுத சொல்லிருக்காங்க. அவரும் சரின்னு சொல்லிருக்கார். ஆனா வசந்தி அம்மாதான் விடல. அண்ணனும் மாமியார் சொன்னா சரியா இருக்கும்னு விட்டுட்டார்.”

“எங்க சித்தி அதுதான் உங்க பாட்டி இறந்த பிறகு, அண்ணனுக்கு ரொம்ப குற்றவுணர்ச்சி. அந்த குற்றவுணர்ச்சிதான் அவரைக் கொன்னுடுச்சு. நாயகி கேட்ட மாதிரி பாதி சொத்தை அவ பேர்ல எழுதிருந்தா கூட அமைதியா போயிருப்பா. இப்போ மொத்த சொத்தையும் அமுக்கிடனும்னு மகளை வச்சு வேலை பார்த்துக்கிட்டு இருக்கா. இதெல்லாம் இளாவுக்கு தெரியாதுன்னு நினைக்கிறியா? கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்.” என்றதும், அதை கவனிக்காதது போல அமைதியாகவே இருந்தாள் தாமரை.

“இதெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான் பாப்பா. குழந்தையைப் பார்த்ததும் இளாவோட மனசு மாறிடும். நீ வேணும்னா பாரு இந்த வீட்டுல நீயும் இளாவும் குடும்பமா சந்தோசமா வாழப் போறீங்க..” என தாமரையை நெட்டி முறிக்க,

“ராணிம்மா.. குழந்தை பிறந்ததும் கொடுத்துட்டு போயிடனும்னு சொல்லிருக்கார் உங்க இளா தம்பி. அதுக்குள்ள விவாகரத்துக்கும், கல்யாணத்துக்கும் ரெடி பண்ணிடுவாராம்..” என்றாள் வலி நிறைந்த குரலில்.

“பாப்பா அது கோபத்துல சொல்றது, பேசுறது. ஆனா இளா அப்படியெல்லாம் நடந்துக்கமாட்டான். நீ பார்த்துட்டே இரு, ஒருநாள் வந்து ப்ரீத்தாவுக்கு வேற மாப்பிள்ளை பாருங்கன்னு சொல்லப் போறான். அப்போ இந்த நாயகி மூஞ்சி போற போக்க பார்க்கனும் நான்..” என சிரிக்க, தாமரைக்கு சிரிப்பெல்லாம் வரவில்லை.

அவளுக்கு இங்கு இருக்க வேண்டும், அவனோடு வாழ வேண்டும் என்றெல்லாம் ஆசையே இல்லை.

இதயத்தில் முதன்முதலாக கொத்து கொத்தாய் பூத்து குழுங்கிய காதல் பூக்களைத்தான் வேரோடு பிடுங்கி எரிந்துவிட்டானே. இனி அவனே வந்தாலும் அவளுக்கு அவன் வேண்டாம். இந்த விசயத்தில் தாமரை உறுதியாக இருக்கிறாளே.!

“ராணிம்மா நாளைக்கு இருந்து நான் ஆஃபிஸ் போகனும். உங்களுக்கு முடிஞ்சா லஞ்ச் கொடுங்க. இல்லைன்னா அங்க கேன்டின்ல பார்த்துக்குறேன்.” என பேச்சை மாற்ற,

“அதென்ன முடியுமான்னு கேள்வி. செஞ்சி கொடுங்கன்னு சொன்னா, செஞ்சி கொடுத்துட போறேன். அதோட இந்த மாதிரி நேரத்துல வெளிய எல்லாம் சாப்பிடக்கூடாது. ஜீரணம் ஆகாது. நானே எல்லாம் செஞ்சி எடுத்து வச்சிடுறேன்..” என்ற ராணியம்மாவிடம் சிரித்தபடியே சரியென்றாள் தாமரை.

இங்கு ஜெர்மனியில் எதைப்பற்றியும் சிந்திக்காமல் ஓடிக் கொண்டிருந்தான் இளங்கோ. உண்மைக்கும் அவனுக்கு ஓய்வே இல்லைதான். வேலை அவனை நெட்டி முறித்தது. பசி ஒரு பக்கம், ஓய்வே இல்லாத ஓட்டத்தில் உண்டான சோர்வு ஒருபக்கம் என எரிச்சலில் இருந்தவன் சமைத்து சாப்பிட வேண்டும் என்ற கடுப்பில் அப்படியே கட்டிலில் விழுந்தான்.

சில நிமிடங்களில் அவனது மொபைலில் மெசேஜ் வந்ததற்கான ஒலி கேட்க, அசுவாரஸ்யமாக அந்த மெசேஜைத் திறந்தவன் அதிலிருந்த போட்டோவை பார்த்ததும் கொதிநிலைக்கு சென்றுவிட்டான்.

அப்படி எதைப் பார்த்து கொதிநிலைக்கு சென்றான் இளங்கோ?
 

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 21, 2022
267
105
43
Theni
Ranimmavai paththi naan yosichathu rombavum sarithan.
Mahes anuppina aaluthaan
 

CRVS2797

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 11, 2023
117
8
18
Ullagaram
தாமரையே, என் செந்தாமரையே !
எழுத்தாளர்: வதனி .S
(அத்தியாயம் - 9)


வேற யாரைப் பார்த்து ஹை டெம்ப்ரேச்சருக்கு போவான்...? எல்லாம் நம்ம தாமரையைப் பார்த்து தான் இருக்கும். ஆகாத பொண்டாட்டி கண்ணுல பட்டாலும் குத்தம், கண்ணுல படலைன்னாலும் குத்தம் தானே..!


எனக்கென்னவோ, இந்த பழைய கதையெல்லாம் இளங்கோவுக்கு தெரியும்ன்னு சொன்னா என்னால நம்ப முடியலை. தெரிஞ்சிருந்தா எதுக்கு இப்படி தையாத்தக்கான்னு பரதநாட்டியம் ஆடப்போறான் ?
அவங்களுக்கே சொம்பையும் தூக்கப்போறான் சொல்லுங்க...?


😀😀😀
CRVS (or) CRVS 2797