தாமரை -22
மும்பை வந்த கதிரவன் வழக்கம் போல ஊரில் நடந்ததை சீனிவாசனிடம் பகிர்ந்திருந்தார். சீனிக்குமே இது பெரிய சிக்கல் என அப்போதுதான் புரிந்தது.
‘இவர் வீட்டில் சண்டையிட்டு ஏதோ ஒரு கோபத்தில் கூட தன் திருமணத்தை வெளிப்படுத்தி விட்டு வந்திருக்கலாமே’ என கதிரவன் மேல் சீனிக்கு சிறு வருத்தம் உண்டானது உண்மை.
ஆனால் அதை வெளிக்காட்டாமல் என்ன சொல்வதென்று தெரியாமல் “கொஞ்சம் யோசிக்கலாம் கதிர்..” என்றதுமே,
“இல்ல… இல்ல சீனி.. ஜெயந்திகிட்ட எல்லாத்தையும் சொல்லிடலாம். எனக்கு மனசே சரியில்ல! யாருக்கும் உண்மையா இல்லாத மாதிரி, ஒரு வருத்தம் மனசு முழுக்க, அழுத்தமா இருக்கு. அட்லீஸ்ட் ஜெயந்திக்கிட்டயாவது இதை சொல்லணும். யார் தப்பா நினைச்சாலும் பரவாயில்லை, ஜெயந்தி என்னை தப்பா நினைச்சிடகூடாது..” என கதிரவன் வருத்தமாக கூற, அதிர்ந்து போனார் சீனி.
ஜெயந்திக்கு உண்மை தெரிந்தால், அவள் என்ன முடிவு எடுப்பாள் என்றே தெரியாது.
அதோடு கதிரை விட்டு விலகி விட்டால் என்ன செய்ய? தன் திட்டங்கள் அனைத்தும் என்னவாவது? என யோசித்தவர், “பொறு கதிர்! கொஞ்சம் பொறுமையா இரு, ஜெயந்திக்கு இதெல்லாம் தெரிஞ்சா என்ன நடக்கும் தெரியுமா? இன்னொரு பொண்ணோட வாழ்க்கையை கெடுத்துட்டோம்னு குற்றவுணர்ச்சியிலேயே செத்துடுவா? அப்புறம் அவ பாட்டுக்கு பிள்ளையை தூக்கிட்டு எங்கேயாச்சும் போயிட்டா, என்ன பண்ணுவ? நீ அவளை ஏமாத்திட்டன்னு நினைச்சு, உன்னை வெறுத்துட்டா என்ன செய்வ.?” என படபடவென சீனி கேட்க,
“அதெல்லாம் ஜெயந்தி புரிஞ்சுக்குவா சீனி. அவளை தவிர வேற யாரும் என்னை புரிஞ்சுக்குவா சொல்லு..” என மனைவியை நம்பி பதில் சொன்னார் கதிரவன்.
“எனக்கு பிரச்சனை இல்ல கதிர்.. நீ சொன்ன மாதிரி ஜெயந்தி உன்னை புரிஞ்சுகிட்டா சரிதான். ஒரு வேலை புரிஞ்சுக்கலைன்னா என்ன செய்வ? அதுக்கு பிறகு உங்க வாழ்க்கை எப்படி இருக்கும்? யோசித்துப் பாரு! எதுக்கும் பல தடவை யோசிச்சு ஜெயந்திகிட்ட சொல்லு.. ஜெயந்தி பத்தி தெரிஞ்சவன் என்ற முறையில் சொல்றேன், தேவையில்லாத பிரச்சனையை இழுத்து உங்க வாழ்க்கையை நரகமாக்கிடாதீங்க..” என முடித்து விட்டார் சீனி.
அதுவரை சொல்லிவிடலாம் என்ற முடிவில் இருந்த கதிரவனுக்கு, சீனியின் பேச்சில் அவர் முடிவு ஆட்டம் கண்டது.
அடுத்தடுத்த நாட்கள் மிகவும் யோசனையோடு சென்றது. அவருக்கு இப்போது ஜெயந்தியை விட லட்சுமி தான் கண் முன்னால் வந்து நின்றாள்.
சிறு பெண்ணை ஏமாற்றுகிறோம் என்ற குற்ற உணர்ச்சி வேறு, அவரை கொல்லாமல் கொன்றது. அந்த குற்ற உணர்ச்சியே மனைவியிடம் இருந்து அவரைத் தள்ளி வைத்தது.
“எதுவும் பிரச்சனையா கதிர்? ஏன் நீ அடிக்கடி தனியாக உட்கார்ந்து ஃபீல் பண்றீங்க? பிசினஸ்ல எந்த பிரச்சினையும் இல்லைன்னு அண்ணா சொன்னாரு. வேற என்ன பிரச்சினை? எங்கிட்ட சொல்ல முடியாதா? வீட்ட மிஸ் பண்றீங்களா.? என ஜெயந்தி கூட அடிக்கடி கேட்டு விட்டார்.
ஆனால் மனைவியின் அனைத்து கேள்விகளுக்கும் ‘ஒன்றுமில்லை’ என்ற பதிலை மட்டுமே கொடுத்தார் கதிரவன்.
இப்படியான யோசனையில் இருக்கும் போது தான் இவர்களது தொழிலுக்கான அடுத்தபடியாக, சிங்கப்பூரில் புதுக்கிளை திறப்பதற்கான ஆஃபர் வந்தது.
தன் உழைப்புக்கான வெற்றி என கதிரவனுக்கு புரிந்தாலும் அதில் மகிழ முடியவில்லை.
ஆனால் சீனி அதை அப்படியே விடவில்லை.. ஜெயந்தியிடம் “ஜெயந்தி உனக்கு கதிரோட உழைப்பை பத்தி தெரியல. அவரோட திறமைக்கு கிடைச்ச பரிசு. அவரோட மூளைத்திறன் எனக்குத் தெரியும். கண்டிப்பா ஒருநாள் இந்த உலகமே திரும்பி பார்க்கிறமாதிரி தொழில்ல ஜெயிப்பார். அவர்கிட்ட பேசி, அங்க போகறதுக்கான வேலையை பார்க்க சொல்லு..” என பேசி மூளைச் சலவை செய்தார்.
அதோடு சீனியும் கதிரவனிடம் “கதிர் உங்க பிரச்சினைக்கு இந்த ட்ரிப்ல கூட தீர்வு கிடைக்கலாம். யாருக்குமே கிடைக்காத ஒரு ஆஃபர் உங்களுக்கு கிடைச்சிருக்கு. இப்போ விட்டுட்டு பின்னாடி வருந்த வேண்டாம். முதல்ல போய் அங்க என்னனு பாருங்க. அப்புறம் எல்லாம் யோசிப்போமே..” என பேசிப் பேசியே கிளம்ப வைத்திருந்தார்.
இடையில் வசந்தியும் “சமீப காலமா உங்களுக்குள்ள நிறைய குழப்பம் இருக்குன்னு எனக்கு புரியுது தம்பி. அது எதனாலன்னு என்னால புரிஞ்சுக்கவும் முடியுது. ஆனால் அதுக்காக என் பொண்ணோட வாழ்க்கையை பணயம் வைக்க முடியாது தம்பி. இதுல என் பொண்ணை நீங்க சமாதானம் செய்யணும்னு நினைக்காதீங்க. உங்க வீட்டு ஆளுங்க கிட்ட என்ன பேசணுமோ? அதை பேசி முடிவெடுங்க. ஜெயந்தியை இந்த பிரச்சினையில இழுக்காதிங்க. நீங்க என்னை சுயநலவாதின்னு நினைச்சாலும் எனக்கு பரவாயில்லை தம்பி. ஒரு அம்மாவா என்னோட உணர்வுகளை நீங்களும் புரிஞ்சுக்கணும்..” என கதிரவன் மறுத்து பேச முடியாத அளவிற்கு பேசி முடித்து விட்டார்.
கதிரவனுக்கும் பிரச்சினையின் தீவிரமே இப்போதுதான் புரிந்தது. இனி ஜெயந்தியையோ குழந்தையோ இந்த பிரச்சனையில் இழுத்து விட முடியாது என நினைத்தவர், வேறு வழி இல்லாமல் தன் குடும்பத்துடன் சிங்கப்பூர் பயணத்திற்கு கிளம்ப முடிவெடுத்தார்..
வழக்கம்போல தான் சிங்கப்பூர் செல்வதை வீட்டில் அனைவருக்கும் தெரியப்படுத்த ஊருக்கு சென்றார் கதிரவன்.
லட்சுமியை கூட அவரால் பேசி சமாளிக்க முடிந்தது, ஆனால் தங்கத்திடம் பேசக்கூட முடியவில்லை.
“உன் இஷ்டத்துக்கு இருன்னு விட்டதுக்கு, நீ என்ன வேணும்னாலும் செய்யலாம்னு இல்ல கதிர். உனக்குத்தான் லட்சுமின்னு முடிவு பண்ணி, ரெண்டு வருஷமா நம்ம வீட்டுல கூட்டிட்டு வந்து வச்சிருக்கோம். அவளுக்கு ஒரு முடிவு சொல்லாம வெளிநாட்டுக்கு போறேன்னு சொல்றது எந்த வகையில் சரி. இதை என்னால ஏத்துக்க முடியாது..” என கத்த ஆரம்பித்து விட்டார்.
தனக்கு சப்போர்ட் செய்வார் என மளை போல் நம்பிய தாயிடமிருந்து, இந்த பேச்சை எதிர்பார்க்காத கதிரவன், சற்று அதிர்ந்து தான் போனார்.
இவரே இப்படி பேசினால்? மற்றவர்கள்.. என யோசிக்கவே பயமாக இருந்தது.
“ம்மா நான் என்ன செஞ்சாலும், இங்க வந்து உங்க கிட்ட சொல்லிட்டு தான் போறேன். அப்படி உங்களை ஏமாத்தணும்னு நினைச்சா, இத பத்தி சொல்லாமலே போய் இருக்கலாம் இல்ல.. ஏன் என்னை புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்க? நானே இப்படி ஒரு ஆஃபர் வரும்னு எதிர்பார்க்கல.. இந்த ஆஃபர் என் தொழிலுக்கு கிடைச்ச ஜாக்பாட் மாதிரி.. இதை விட்டுட்டா நான் என்ன புத்திசாலி? என்ன படிப்பாளி? இதைக் கேட்டு எல்லாரும் சந்தோஷப்படுவீங்கனு நினைச்சு, உங்க கிட்ட சொல்ல ஓடி வந்தது என் தப்பு தான்.” என கதிரவனும் கோபமாக பேசிவிட்டு வெளியில் செல்ல, அதற்குள் வேகமாக ஓடிவந்து அவன் கரத்தை பிடித்துக் கொண்டாள் லட்சுமி.
“விடு லட்சுமி… இங்க யாருமே என்னை புரிஞ்சிக்கல..” என வருத்தமாக கூறி, கையை விடுவிக்க பார்க்க,
“மாமா கொஞ்ச நேரம் அமைதியா இருங்க.. நான் பேசுறேன் எல்லார்கிட்டயும்..” என அவனை சமாதானம் செய்ய, கதிரவனுக்கு தான் நெஞ்சே வெடித்து விடும் போல் இருந்தது.
லட்சுமியை பார்க்கும் போதெல்லாம், அவனது குற்ற உணர்ச்சி அவனைக் கொன்று குவித்தது.
“விடு லட்சுமி.. நான் கிளம்புறேன்.. என் குடும்பம் நான் என்ன சொன்னாலும் கேட்கும், என்னை நம்பும்னு நினைச்சு ஒரு பேராசையில் வந்துட்டேன்.. அது தப்புன்னு புரியுது..” என கவலையாக பேச
“அட இருங்க மாமா! நான்தான் பேசுறேன்னு சொல்றேன்ல..” என லட்சுமி அழுத்தமாக கூற, அங்கிருந்து அத்தனை பேருமே பார்வையாளர்கள் ஆகிப் போனார்கள்.
செல்வத்திற்கும் இதில் விருப்பமில்லைதான். கதிர் கூறுவது போல தொழில் முன்னேற்றம் எனும் போது அதை தடுக்க நினைக்கவில்லை.
கதிரவனை ஓரிடத்தில் நிறுத்தி வைத்தவள், தங்கத்திடம் நேராக வந்து “அத்தை எனக்காக தான் மாமா கூட சண்டை போடுறீங்கனா, அது வேண்டாம். எனக்கு இதுல சந்தோசம் தான் அத்தை. கதிர் மாமா வெளிநாட்டுக்கு எல்லாம் போய் வந்தா, நம்ம குடும்பத்துக்கும் அது கவுரவம் தானே. எனக்கு என் புருஷன் வெளிநாட்டுல இருக்காருன்னு சொல்றதுல சந்தோஷம்தான்.” என சிரிக்க, கதிரவன் லட்சுமியின் ‘என் புருசன்’ என்ற பதத்தில் உள்ளுக்குள் நொறுங்கிக் கொண்டிருந்தார்.
“லட்சுமி இது விளையாட்டு இல்லடா… இங்க கௌரவம் நமக்கு ஒன்னும் குறைவா இருக்கல.. நம்ம குடும்பத்துக்கு இருக்கிற கௌரவமே போதும்.. இது எல்லாம் காரணமா சொல்லாத..” என கருப்பையா முதல்முறையாக வாய் திறந்தார்.
“மாமா எனக்கும் இதெல்லாம் தெரியும்… ஆனா இது இன்னும் கூடுதல்தான.. அதோட இந்த வெளிநாட்டு வாய்ப்பு மாமாவோட உழைப்புக்கு கிடைத்த வெற்றி. அதை உதறித் தள்ள வேண்டாம்.. நாம வேண்டாம் சொல்லி, அவரும் விட்டுட்டா பின்னாடி ரொம்பவே வருத்தப்படுவார். அவர் அப்படி வருத்தப்படுறதை நாம பார்க்க முடியுமா சொல்லுங்க. அவர் போயிட்டு வரட்டும்.. எனக்கு இதுல வருத்தம் எல்லாம் இல்ல..” என முடிக்க,
“என் கண்ணுடி ராசாத்தி.. நீ வளர்ந்துட்ட லட்சுமி.. எவ்வளவு பொறுப்பா பேசுற… இப்பவே உன் மாமனை எங்ககிட்ட விட்டுக் கொடுக்காம பேசுறியே, இனி அவன் வாழ்க்கையை வைத்து எங்களுக்கு கவலையே இல்ல.. நீ அவனை நல்லா புரிஞ்சு நடந்துக்குவேன்னு எனக்கு புரியுது.. அவன் போகட்டும். எங்களுக்கும் இஷடம்தான். ஆனால் அதுக்கு முன்னாடி உங்க கல்யாணத்தை முடிச்சு, முறையா உன்னை நம்ம வீட்டுல விட்டுட்டு போகட்டும்.. இந்த முடிவுக்கு அவன் சரின்னு சொன்னா, எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை..” என தங்கம் முடிக்க, மற்றவர்களும் ‘இதுவே சரி’ என்பது போல் அமைதியாக இருந்தனர்.
“அதெல்லாம் முடியாதுமா… என்ன விளையாடுறீங்களா? கல்யாணம் பண்ணி ஈங்க விட்டுட்டு போறதுக்கு, எதுக்கு எனக்கு கல்யாணம்? எல்லாம் புரிஞ்சுதான் பேசுறீங்களா?” என கத்திவிட்டு, அங்கிருந்து வேகமாக வெளியே சென்று விட்டார்.
கதிரவன் சத்தமாக பேசியது லட்சுமிக்கு உறுத்தியது தான். ஆனால் அவனின் ‘கல்யாணம் பண்ணி இங்க விட்டுட்டு போறதுக்கு, எதுக்கு கல்யாணம்..’ என்ற வார்த்தையில் பூரித்து போனாள்.
“என்னை அவங்க கூடவே வச்சுக்க நினைக்கிறாங்க போல! அதனாலதான் அப்படி பேசிட்டு போறாங்க! என தனக்குள்ளே நினைத்துக் கொண்டவள், தங்கத்திடம் “அத்தை மாமாவோட விருப்பம் எதுவோ அதையே செய்யட்டும்… என்னை காரணம் காட்டி அவரோட முன்னேற்றத்தை தடுக்க வேண்டாம்.. என்ன ரெண்டு வருஷம் தானே எனக்கு பிரச்சனை இல்ல..” என லட்சுமி ஒவ்வொருவரிடமும் பேசி, அவர்களை கரைத்து, கதிரவனுக்கான சம்மதத்தை வாங்கி கொடுத்திருக்க, மனம் எல்லாம் குற்ற உணர்ச்சி போட்டு அழுத்தினாலும், அதை வெளி காட்டாமல் நல்ல முறையில் பேசியே மும்பை வந்திருந்தார் கதிரவன்.
அடுத்த இரண்டாம் வாரம் அவர்கள் சிங்கப்பூர் கிளம்பி விட, அதற்கடுத்து வந்த நாட்களில் கதிரவனின் எண்ணத்தில் கூட லட்சுமி இருக்கவில்லை.