• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தாமரை - 38

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,274
498
113
Tirupur
தாமரை - 38

கணவர் இறந்த ஒரு வருடத்திலேயே மருமகளின் இழப்பு. தங்கத்தை பெரிதளவில் பாதித்தது. துக்கத்திற்கு அவர் போகவில்லை. மனைவியை போ என்றுதான் செல்வம் சொன்னார். ஆனாலும் மகேஸ்வரி போகவில்லை.

அங்கு போய் வந்த அனைவரும் சொன்ன ஒரே செய்தி, ‘அந்த பொண்ணுக்கு செஞ்ச பாவம்தான் இவளை வாழ விடாம பண்ணிடுச்சு. பெண் பாவம் பொல்லாததுன்னு சும்மாவா சொன்னாங்க.. இது இதோட முடியும்னு தோனல.. எதுக்கும் பூசாரிக்கிட்ட சோலி போட்டு கேளு, நம்ம கதிரு முகத்தை பார்க்க முடியல. ஆசைப்பட்டு கட்டிக்கிட்டான், அந்த புள்ள போனதும் உடைஞ்சி போயிட்டான்..’ என்பதுதான்.

தங்கத்திற்கு இருப்பு கொள்ளவில்லை. மகன் எப்படி இருக்கிறானோ? பேரன் எப்படி இருக்கிறானோ? என்று அவர் மனம் நினைத்து நினைத்து கதறியது.

அவரால் அங்கு இருக்கவே முடியவில்லை. மகனைப் பார்த்தே ஆக வேண்டும் என்று ஒரு மனம் அடம் பிடிக்க, மற்றொரு மனமோ மகனைப் பற்றி மட்டும் யோசிக்காதே, அவனால் இன்று மூன்று உயிர் இல்லை. உன் தாலியை அருத்தவன் அவன், மகள் போல் வளர்த்த மருமகளின் உயிரை காவு வாங்கியவன் அவன்.. இரண்டு பிள்ளைகள் தான் உலகம் என வாழ்ந்து வந்தவரின் வாழ்க்கையை அழித்தவன். அவனைத் தேடி போகப் போகிறாயா? உன் மகளைப் பற்றி நினைத்துப்பார். அடுத்து அவள் வாழ்க்கை என்னாகும்? என மற்றொரு மனம் எடுத்துரைக்க, இருதலைக் கொள்ளி எரும்பாய் தவித்து போனார் தங்கம்.

அவர் உடல்நிலையும் மோசமானது. செல்வம் வழக்கம்போல இரண்டு வீட்டு வேலைகளை செய்தாலும், முன்னப்போல் தங்கத்திடம் அதிகம் ஒட்டுதல் காட்டுவதில்லை.

தன் அத்தையைப் பார்த்துக்கொள்ள மனைவியை கொண்டு வந்து இங்கேயே விட்டுவிட்டார்தான். ஆனால் அவரால் அங்கு இருக்க முடியவில்லை.

அப்படி ஒரு நாள் அவர் வந்து சென்ற போது மகளிடம் இதையெல்லாம் சொல்லி தங்கம் அழ, செல்வத்திற்கும் மனம் முரண்டியது.

‘யாரோ செய்த தப்பிற்கு யாருக்கோ தண்டனை கொடுத்து விட்டேனே’ என தன்னைத்தானே திட்டிக்கொண்டு, மீண்டும் தங்கத்திடம் சாதாரணமாக பேச ஆரம்பித்தார்.

பின் அவரே “உனக்கு போய் பார்க்கனும்னா பார்த்துட்டு வா த்த.. எங்களை பத்தி யோசிக்காத..” எனவும், தங்கத்திடமிருந்து யாருமே எதிர்பாராத அளவிற்கு ஒரு கதறல் சத்தம் வெளிப்பட்டது.

“என்னைய தப்பா மட்டும் நினைச்சுப்புடாதயா.. பெத்த வயிறு.. மனசு கேட்கல.. அவனை மாதிரி எனக்கு கல் மனசு இல்ல பாரு.. அதான் அவன் ஒரு கஷ்டத்துல இருக்கான்னு தெரிஞ்சது, பார்க்க தவியா தவிக்குது.. என்னைய மன்னிச்சிப்புடுயா..” என கதறல்களுக்கிடையே கூற,

“த்த.. எனக்கு நீ இவ்ளோ விளக்கமெல்லாம் கொடுக்க வேண்டாம். உன்ன பத்தி தெரிஞ்சும், நான்தான் மட்டியாட்டம் உன்னைய பார்க்காம விட்டுட்டேன். நீதான் என்னை மன்னிக்கனும். நீ இப்படியெல்லாம் அழுவாத.. அது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. போனவுக போய்ட்டாங்க. இருக்குற நாமளாவது நிம்மதியா இருப்போம்.. விடு த்த.. நீ உன் மகனை பார்க்கனும்னா தயங்காம எங்கிட்ட சொல்லு.. நான் கூட்டிட்டு போறேன். எனக்கு உன் நிம்மதி தான் முக்கியம்..” என்றதும், மேலும் சத்தம் போட்டு அழுதார் தங்கம்.

“உன் மனசு யாருக்கும் வராது சாமி. என் கண்ணுக்கு நீ சாமியாத்தான் தெரியுற.. உனக்கு ஒரு கொறையும் வராது பாரு..” என்று தங்கம் மருமகனை நெட்டி முறிக்க, அதை கண்களில் நீருடனும், இதழ்களில் சிரிப்புடனும் பார்த்திருந்தார் மகேஸ்வரி.

இங்கு ஜெயந்தியின் இழப்பை யாராலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. கை குழந்தையுடன் கஷ்டப்பட்டு அனைவரையும் நன்றாகவே பார்த்துக் கொண்டாள் நாயகி. அது அடிக்கடி கதிரவனின் கண்ணில் பட்டது.

தாயின் இழப்பில் இருந்து மீள முடியாமல் தவித்த இளங்கோவைத்தான் சரி செய்ய முடியவில்லை. திடீரென்று அழுது, காய்ச்சல் வந்து ஹாஸ்பிடலுக்கு தூக்கி செல்வார்கள்.

இது அடிக்கடி நடக்க, மனைவிக்கு பிறகு மகனையும் இழந்து விடுவோமோ என்ற பயமே வந்துவிட்டது கதிரவனுக்கு.

அதனால் மகனை அவரே பார்த்துக் கொண்டார். வசந்திக்கும் இது பெரிய இழப்புத்தானே, அவரும் ஒடுங்கிப் போய்விட்டார்.

இப்படி அந்த வீட்டில் அனைவரும் கவலையில் ஒதுங்க, நாயகியின் கை ஓங்க ஆரம்பித்தது. சீனிக்கோ மனைவி தன் குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்கிறாள் என்ற எண்ணம்தான் வந்தது. அவர் நாயகியைத் தவறாகவே யோசிக்கவில்லை.

நாயகிக்கும் அதுதான் தேவைப்பட்டது போல.. அந்த வீட்டில் சுதந்திரமாக தன் வேலைகளை செய்ய ஆரம்பித்தார்.

அன்றும் அப்படித்தான் இரவெல்லாம் இளங்கோ ஜெயந்தியைக் கேட்டு அழுது, ஃபிட்ஸ் வந்துவிட, அதைப் பார்த்த வசந்திக்கும் அழுது அழுது மூச்சுத் திணறல் வந்துவிட, இருவரையும் உடனே மருத்துவமனையில் சேர்த்தனர்.

மிகவும் கொடுமையாக கழிந்தது அந்த நாட்கள். கதிரவனுக்கு தன் தாயை அதிகம் தேடியது, தனக்கு ஆறுதலை அவர்தான் தர முடியும் என மனம் உறுதியாக கூற, சற்றும் யோசிக்காமல் தன் வீட்டிற்கு அழைத்தார்.

ஆனால் அங்குதான் யாரும் அவர் போனை எடுக்கவில்லை. தங்கத்திற்கும் அன்று செக்கப் என்பதால் அனைவருமே மருத்துவமனைக்கு சென்றிருந்தனர்.

கதிரவனுக்கு ஒரு வகையில் இது ஏமாற்றம் என்றாலும், தாய் மட்டுமே ஊரில் இருக்க, ‘என்னாச்சோ?’ என பதட்டமும் வந்துவிட்டது.

அதனால் மகன் சரியானதும் அவனையும் அழைத்துக்கொண்டு ஊருக்கு போய் வர வேண்டும் என நினைத்துக் கொண்டார்.

‘வீட்டுக்கே வராதே..’ என்றாலும் அவரால் தாயை தனியே தவிக்க விட்டு இங்கு இருக்க முடியாதே. அவர் என்ன தண்டனை கொடுத்தாலும் பரவாயில்லை போயே ஆக வேண்டும் என முடிவு செய்து கொண்டார்.

தொழிலில் பாதியை விற்று சொத்தாக மாற்றிவிட்டார் கதிரவன். ஏனென்றால் அவரால் தொழிலில் கவனம் செலுத்த முடியவில்லை.

மகன் அதற்கு நேரமே கொடுக்கவில்லை. சீனியாலும் அனைத்தையும் பார்க்க முடியாமல் போக, பாதியை விற்று இளங்கோ பெயரிலும், பாதியை ப்ரீத்தா பெயரிலும் சொத்தாக மாற்றிவிட்டார்.

வசந்திக்கு முதலில் இது பெரிதாக தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் இரண்டு பேருக்குமாக சொத்து எழுதும் போதுதான் அவருக்கு உறுத்த தொடங்கியது.

ஆனால் அதை இப்போது வெளிப்படுத்த முடியாத சூழல். குடும்பத்தை தாங்கிப் பிடித்து செல்கிறாள் மருமகள். அவளுக்கு இதை செய்வதில் தப்பில்லை என்ற எண்ணம்தான். அதோடு சொத்தும் பேத்தி பெயரில்தானே போகிறது. அதனால் அதை அப்படியே விட்டுவிட்டார்.

இங்கு செல்வத்திடம் ஒருவழியாக மகனை பார்க்க போகலாம் என தங்கம் கூற, செல்வமும் மறுத்து பேசாமல் சென்னை அழைத்து வந்தார்.

“அத்த நீ போய் பார்த்துட்டு வா.. என்னைய உள்ள எல்லாம் கூப்பிடாத. அங்க சத்தம் எதுவும் போடாத.. பார்த்ததும் வந்துடு.. அவங்க வந்தா கூப்பிட்டு வா ஊருக்கு போய்டலாம்..” என சொன்னதையே சொல்லிக்கொண்டு வந்தார்.

செல்வம் சொன்ன அனைத்திற்குமே தங்கம் சிறு புன்னகையுடன் தலையாட்டிக் கொண்டே வந்தார்.

ஒருவழியாக கதிரவனின் வீட்டிற்கு இருவரும் வந்து செகியூரிட்டியிடம் சொல்ல, அவர் இருவரையும் யோசனையாக பார்த்தே தான் உள்ளே அனுப்பினார்.

அப்போது இளங்கோ மருத்துவமனையில் இருந்ததால், வசந்தியும் கதிரவனும் அவனோடு இருக்க, வீட்டில் நாயகி மட்டுமே இருந்தார்.

இவர்களைப் பார்த்ததுமே எந்த முக தாட்சன்யமும் இல்லாமல் “எங்க வந்தீங்க.?” என்றாள் கோபமாக.

“கதிரு எங்க.?” என்றார் தங்கமும்.

“என்ன இப்போ உங்களுக்கு சந்தோசமா இருக்குமே.. நீங்க நினைச்ச மாதிரியே, நீங்க சாபம் விட்ட மாதிரியே எங்க வீட்டு பொண்ண பறி கொடுத்துட்டோம். இப்போ உங்களுக்கு நிம்மதிதான. இதைத்தான எதிர்பார்த்தீங்க. நீங்க நினச்சது நடந்துடுச்சுல்ல, அதை பார்க்க வந்தீங்க போல..” என கோபமாக பேச,

“ஏய்.. வாயை மூடு. யாரைப் பார்த்து என்ன பேசுற..? என் பையன் எங்க இருக்கான். அவனை வரச்சொல்லு.. எங்கிட்ட்ட உன சவடாலெல்லாம் காட்டக்கூடாது..” என தங்கமும் கோபமாக பேச,

“எங்க வந்து யாரை மிரட்டுறீங்க.. இது என் வீடு. என் வீட்டுக்குள்ள வந்து என்னையே பேசுவீங்களா? ஹான் வெளியே போறீங்களா.. இல்ல செகியூரிடியை கூப்பிட்டு வெளிய தள்ள சொல்லவா?” என திமிராக பேச,

“அடிங்க.. ஆடுகாளி.. யாருக்கிட்ட வீட்டைவிட்டு வெளிய போக சொல்ற, இது என் பையன் வீடு, அவன் வீட்டுல நீ ஒட்ட வந்துட்டு என் வீடுன்னு சொல்லிட்டு திரியிரியா.. இருக்குற நாலு முடியையும் ஆஞ்சுப் புடுவேன் ஆஞ்சு.. இப்படி ஒரு பஜாரி இந்த வீட்டுல இருப்பான்னு நான் நினைக்கவே இல்ல.” என்ற தங்கம், முறைத்துக் கொண்டிருந்த நாயகியைப் பார்த்து “வீட்டுக்கு வந்தவங்ககிட்ட எப்படி பேசனும்னு கூட சொல்லித் தரலையா உனக்கு.. நல்ல லட்சனமான வளர்ப்புதான்..” என மேலும் சத்தமிட,

“இவ்ளோதான் உங்களுக்கு மரியாதை. இதுக்கு மேல பேசுனீங்க.. நான் பொம்பளையா இருக்கமாட்டேன். அன்னைக்கு வீட்டுக்குள்ளயே விடாத பொம்பள, இன்னைக்கு எங்க வீடு தேடி வந்துட்டு, எங்களையே அதிகாரம் பண்றீங்களா.. அதுதான் எங்க பொண்ணைத் தூக்கி முழுங்கிட்டீங்களே இன்னும் என்ன வேணும் உங்களுக்கு.. மரியாதையா வெளிய போய்டுங்க..” என ஆங்காரமாக கத்த அதற்கு தங்கம் ஏதோ பதில் சொல்ல வரும் முன், செல்வம் “போலாம் அத்த..” என அவரை அழைத்துக்கொண்டு வெளியில் வந்தார்.

இருவரின் முகமும் சரியில்லாததைக் கண்ட செக்யுரிடிக்கு நாயகியின் குணம்தான் தெரியுமே..
அதனால் இருவரும் கேட்டைவிட்டு சற்று தூரம் சென்றதும், ஓடிப்போய் “ஸார்.. ஸார் அந்த அம்மா பேசுறத எல்லாம் மனசுல வச்சிக்காதீங்க. அவங்க அப்படித்தான். இளா தம்பிக்கு ஜன்னி வந்து ஆஸ்பத்திரில வச்சிருக்காங்க. கதிர் சாரும், வசந்தி அம்மாவும் அங்கதான் இருக்காங்க. நீங்க அங்க வேணும்னா போய் பாருங்க..” என ஆஸ்பிடல் அட்ரசை கொடுக்க,

“ம்ம் ரொம்ப நன்றி ப்பா..” என்ற தங்கத்திடம், “இங்க நடந்ததை அவங்ககிட்ட சொல்லுங்க ம்மா, அப்போதான் வீட்டுல என்ன நடக்குது, அவரை சுத்தி என்ன நடக்குதுனு இனிமேலாவது விழிப்போட கதிர் சார் இருப்பார்..” என்ற செகியூரிடியுடம் தலையசைத்து இருவரும் மருத்துவமனைக்கு சென்றனர்.

“என்ன தம்பி இதெல்லாம்?” என்ற தங்கத்திடம்,

“அத்த.. உங்க பையன் திறமையானவன். அவனுக்கு எல்லாம் தெரியும், தெரிஞ்சுதான் அமைதியா இருப்பான். அதுக்கான நேரம் வரும் போது செய்வான். நீங்க இதெல்லாம் மனசுல போட்டு குழப்பிக்காதீங்க.. உங்க மகன்கிட்டயும் இதைப்பத்தி பேசாதீங்க..” என ஓரளவு சமாதானம் செய்துதான் அழைத்து வந்தார் செல்வம்.

மருத்துவ உபகரணங்களுடன் படுத்திருக்கும் பேரனைப் பார்க்க பார்க்க இதயமே வெடித்து விடும் போல் வலித்தது தங்கத்திற்கு.

கதிர் செய்த செயல்கள் எல்லாம் பின்னுக்கு செல்ல, பேரனின் முகம் மட்டுமே முன் வந்து நின்றது..

தன் கையைப் பிடித்து கதறும் மகனை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தார் தங்கம்.

கதிரவனின் ஒடுங்கிய தோற்றம் கண்டு ‘தன் மகனா இது?’ என அதிர்ந்து போயிருந்தார் தங்கம். அவரால் நம்பவே முடியவில்லை.

‘அய்யோ கடவுளே.. என் பிள்ளைக்கு ஏன் இந்த வேதனையும், சோதனையும்..’ என உள்ளுக்குள் கதறி தவித்தார்.

மகனின் முதுகை வருடி தேற்றியவர், பேரனுடனே அம்ர்ந்து கொண்டார். அவருக்கு இனி மகனையும் பேரனையும் தனியே விடும் எண்ணம் இருக்கவில்லை.

இனி என்ன நடந்தாலும் பரவாயில்லை. இருவரையும் தன்னுடன் அழைத்து செல்ல வேண்டும் என நினைத்துக்கொண்டார்.

தங்கத்தின் முடிவை கதிரவன் ஏற்றுக்கொள்வாரா?