• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தாமரை - 39

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,274
498
113
Tirupur
தாமரை - 39

தாயும் மகனும் மட்டும் வெகு நேரம் அந்த அறையில் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு தனிமை கொடுத்துவிட்டு செல்வம் வெளியே வந்துவிட்டார்.

ஒரு மருமகனாக தங்கத்தின் மீதான பொறுப்பு செல்வத்திற்கு இருந்தாலும், தாய் இறந்த பிறகு தங்கள் இருவரையும் தன் பிள்ளை போல் வளர்த்த தங்கத்தை தாயின் மறு உருவமாகவே பல முறை பார்த்திருக்கிறார் செல்வம். அதனாலே தனக்கு பிடிக்கவில்லை என்றாலும் தங்கத்திற்காக வந்தார்.

இப்போதும் அவருக்கு கதிரவனின் மீது தீராத கோபம்தான். ஆனால் அதை வெளிக்காட்ட அவருக்கு விருப்பமில்லை. கதிரவனை பழி வாங்க அவருக்கு அதிக நேரம் ஆகாது. ஆனால் அதில் பாதிக்கப்படப்போவது கதிரவன் மட்டுமல்ல. மகேஸ்வரியும், தங்கமும் தான்.

‘அப்படி பழிவாங்கி எதை சாதிக்கப்போகிறோம்?’ என்று நினைத்து, கதிரவனிடமிருந்து ஒதுங்கிக் கொண்டார்.

கதிரவனும் கூட செல்வத்திடம் நெருங்கவில்லை. தன் துரோகமே அவரை நெருங்கவிடவில்லை. அதிலும் லட்சுமி இறந்த அன்று செல்வம் நின்ற நிலை. அதை இப்போதும் கதிரவனால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

செல்வத்திடம் மன்னிப்பு கேட்டு, தன் துரோகத்தை நியாயப்படுத்த விரும்பவில்லை. அதனாலே செல்வத்திடமிருந்து மொத்தமாக ஒதுங்கிக் கொண்டார் கதிரவன்.

தங்கம் தன் பிடியிலேயே நின்றார் “இன்னும் இங்க இருந்து என்னத்த சாதிக்கப்போற..” என்றார்.

“ம்மா.. நான் வரேன்.. ஆனா மொத்தமா வேண்டாம். அங்க வந்து ஊர்ல எல்லாரும் என்ன பேசுவாங்கன்னு இருக்கு. என்னை பேசிட்டாலும் பரவாயில்லை. இளாவை என்னமும் சொல்லிட்டா என்ன செய்ய? ஏற்கனவே அம்மா இல்லாம கஷ்டப்படுறான். அவங்க பேசுறதை கேட்டா இன்னும் கஷ்டப்படுவான். அதோட எனக்கும் இது தண்டனைதான். உங்களை நம்ப வச்சு ஏமாத்திருக்கேன். அதுக்கான தண்டனையா இதை ஏத்துக்கிறேன்..” என கதிரவன் பொறுமையாக கூற, மகனின் பேச்சை ஏற்கவில்லை தங்கம்.

இப்போதும் செல்வம்தான் சமாதானம் செய்தார்.

இரண்டு நாட்கள் அங்கிருந்து பேரனை நல்ல முறையில் பார்த்து வீட்டில் விட்டுவிட்டு கிளம்பியிருந்தனர்.

ஆனாலும் தங்கத்திற்கு மனமே இல்லை. அவருக்கு நாயகியின் பேச்சுத்தான் மனதை உறுத்திக்கொண்டே இருந்தது. மகளிடமும் அந்த பேச்சை கூறியிருந்தார்.

“அவ ஆள் சரியில்ல மகேசு.. புள்ளைய நல்லா பார்த்துக்குவாளான்னு மனசு அடிச்சிக்கிது. இங்க வர சொல்லியும் வர மாட்டேங்கிறான்..” என எப்போதும் தங்கத்திற்கு பேரனின் நினைப்புதான். அதனால் அவரின் உடல்நிலையும் மோசமாக ஆரம்பித்தது.

அதை கேள்விப்பட்டு கதிரவன் மகனுடன் வந்து பார்த்து சென்றார். ஆனாலும் தங்கத்தின் புலம்பல்கள் நின்றபாடில்லை.

திடீரென்று ஒருநாள் செல்வத்தை அழைத்து சொத்தை பிரிக்க ஏற்பாடு செய்தார். தங்கத்தின் பயம் அவருக்கு புரியாமலில்லை. ஆனால் இப்போது ஏன்? என்ற கேள்வியுடன் பார்க்க, “பிரிச்சிடலாம் சாமி. அந்த பணத்துக்காகவாவது என் புள்ளைங்கள அவங்க நல்லா பார்த்துப்பாங்க..” என புலம்ப,

செல்வத்திற்கும் தங்கம் இதை செய்யாமல் ஓயமாட்டார் என்று புரிய, சொத்தைப் பிரித்து எழுத அனைத்து ஏற்பாட்டையும் செய்தார்.

சொத்துக்களை மூன்றாக பிரித்து, ஒருபாகம் இளங்கோவிற்கும், மற்றொன்று தாமரைக்கும் என எழுதியவர், மூன்றாவது பாகத்தை மகேஸ் பெயரில் எழுதினார்.

ஒரு வேளை இளங்கோ அனைத்தையும் இழந்து வந்தால், இந்த சொத்தை அவனுக்கு கொடுக்க வேண்டும் என மகளிடமும், மருமகனிடமும் சத்தியம் வாங்கிக் கொண்டார்.

தனக்கென எதையும் வைத்துக்கொள்ளாமல் சொத்துக்களைப் பிரித்த தங்கத்தின் மீது கோபம்தான். ஆனால் அவர் ஏதோ பயத்தில் செய்கிறார் என புரிந்து அமைதியாகிவிட்டனர்.

அன்று இரவு நேரமே உறங்க சென்றவர், அடுத்த நாள் காலையில் விழிக்கவே இல்லை.

யாருமே இப்படியொரு இழப்பை எதிர்பார்க்கவில்லை. கதிரவனின் குடும்பம் வர, தாயின் இழப்பை தாங்க முடியாமல் கதறும் மனைவியை சமாளிக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டார் செல்வம்.

கதிரவன் வர, அடுத்தடுத்து காரியங்கள் வேகமாக நடக்க, தன் கோபத்தைக் காட்டாமல் கதிரவன் கூடவே இருந்தார் செல்வம்.

எந்தளவிற்கு சந்தோசமாக, கலகலப்பாக இருந்தாரோ? இப்போது அதற்கு நேர் எதிராக, முகத்தில் எப்போதும் குடியிருக்கும் ஒரு சோகம், பயம், கலக்கம். சிரிப்பு என்பதையே மறந்து போன ஒரு முகம்.. என பார்க்கவே பரிதாபமாக இருந்தார் கதிரவன்.

அவரை எப்படி தேற்றுவது என தெரியாமல் செல்வமும், வசந்தியும் தவித்து போயினர்.

இத்தனை பேரின் உயிரை காவு வாங்கிய இந்த காதல் தேவையா? என்று காலம் கடந்து யோசித்தார். யோசித்து என்ன பயன்? காலம் கடந்து போயிருந்ததே..

காரியம் முடிய கிளம்பியவர் அழுகையுடன் நின்றிருந்த தங்கையிடம் வந்தார்.

தந்தை இறந்த இத்தனை நாட்களில் இருவரும் ஒரு வார்த்தைக்கூட பேசிக் கொள்ளவில்லை. ஏனோ இருவருக்கும் இடையே ஒரு திரை விழுந்திருந்தது.

அழுகையை அடக்கி, இளங்கோவைப் பிடித்தபடி நின்றிருந்த தங்கையின் தலையில் கைவைத்தபடி நின்றிருந்தார் கதிரவன்.

அந்த செய்கையில் மகேஸ்வரி வெடித்து அழ, அங்கிருந்த அத்தனை பேரின் விழிகளிலும் நீர் வழிந்தது.

“நானும் இல்லாம போய்ட்டா என் பையனை நீதான் பார்த்துக்கனும் மகேசு..” என்றார் குரல் தழுதழுக்க,

“அப்படி எல்லாம் பேசாதண்ணா.. நீ எங்கேயும் போகாத.. இங்கேயே எங்ககூடவே இரு.. நாங்க இருக்கோம்.. ஏன் அங்க போற.. ஏன் இப்படியெல்லாம் பேசுற. உனக்கு ஒன்னுமில்ல.. ஒன்னும் ஆகாது..” என மகேஸ்வரி கேவல்களுக்கிடையே கூற,

“ம்ச்.. அதெல்லாம் சரி வராது மகேசு.. நீ பார்த்துக்கோ.. இனி அடிக்கடி இளங்கோவை கூப்பிட்டு வரேன்..” என்றவர் விடைபெற்று கிளம்பிவிட்டார்.

அதுதான் கதிரவனும் மகேஸ்வரியும் கடைசியாக பார்த்துக் கொண்டது.

சென்னை வந்த பிறகு இளங்கோவை முழுவதுமாக கதிரவனே பார்த்துக்கொள்ள ஆரம்பித்தார். தாயின் வார்த்தைகள் அதற்கு முக்கிய காரணமாக இருந்தது.

தங்கம் வந்து சென்ற அன்று நடந்ததை அவர் சொல்லவில்லைதான். ஆனால் செகியூரிடி கதிரவனிடம் சொல்லியிருந்தார்.

அப்போதிருந்தே நாயகியின் மேல் அவர் பார்வை யோசனையாக விழ ஆரம்பித்தது. அதை நாயகியும் உணர்ந்தாரோ என்னமோ “அண்ணா.. என்னை மன்னிச்சிடுங்க.. எனக்கு ரொம்ப குற்றவுணர்ச்சியா இருக்குங்க ண்ணா.. அன்னைக்கு ஊர்ல இருந்து அம்மா வந்த போது, நான் கொஞ்சம் கோபமா பேசிட்டேன். நம்ம ஜெயந்தி நம்மளைவிட்டு போனதுக்கு அவுங்களும் ஒரு காரணம்னு என் மனசு சொல்லவும், யோசிக்காம பேசிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க ண்ணா… அதுவும் அவங்க இறக்க ஒரு காரணமா இருக்குமோன்னு எனக்கு உறுத்திக்கிட்டே இருக்கு.. ஊர்ல இருந்து வந்ததுல இருந்து நீங்களும் சரியா பேசல.. இளாவையும் எங்கிட்ட விடல.. என்ன கோபம் ண்ணா..?” என அனைவரும் இருக்கும் போதுதான் கேட்டார்.

“என்ன சொல்ற? யாரை எப்போ பேசின?” என சீனி கோபமாக கேட்க, வசந்தியும் அதே கேள்வியோடு பார்க்க, நாயகியோ எதை சொல்ல வேண்டுமோ அதை மட்டுமே சொல்லி, “என்னை மன்னிச்சிடுங்க அத்த.. இளா ஜெயந்தியை கேட்டு அழுது, அவனுக்கும் உங்களுக்கும் முடியாம போனதுல வந்த கோபத்துல அப்படி பேசிட்டேன்.” என வருத்தம் போல பேச,

யாரால் என்ன பதில் சொல்ல முடியும்?

“விடும்மா.. நான் அதெல்லாம் யோசிக்கவே இல்ல. அத்தைக்கும் முடியல. நீயும் குழந்தையை வச்சிட்டு எப்படி இளாவை பார்ப்ப.. அதான் நான் அவனை பார்த்துக்கிறேன். அப்போதான் இளாவும் ஜெயந்தியை மறந்து படிப்புல கவனம் செலுத்துவான்..” என அதோடு நிறுத்திக் கொண்டார்.

வசந்தியும் தன் துக்கத்திலிருந்து வெளியில் வந்து பேரனைப் பார்த்துக்கொள்ள ஆரம்பிக்க, கதிரவன் மீண்டும் கம்பெனிக்கு செல்ல ஆரம்பித்தார்.

ஜெயந்தி இல்லாததை மெல்ல மெல்ல ஏற்று அந்த வீடு மீண்டும் பழையபடி தன் ஓட்டத்தை ஆரம்பித்தது.

நாட்கள் கடந்து ஒரு வருடமாகியிருக்க, கருப்பையாவிற்கு வருசாந்திரம் கும்பிட வேண்டும் என மகேஸ்வரி செல்வத்திடம் பேச, செல்வமும் தங்கைக்கும், தகப்பனுக்குமே செய்ய வேண்டும் என்பதால் நேரம் குறிக்க வள்ளுவரை பார்க்க சென்றனர்.

அப்போது அவர் “அகால மரணம் அடைஞ்சவங்களை முதல்ல சாந்தி பண்ணுங்க. அந்த பையனை வரச்சொல்லி பண்ணுங்க. அதுக்குப் பிறகு அவங்க வீட்டுல அவருக்கு பண்ணுங்க..” என்றவர், மகேஸை பார்த்து “உங்க அண்ணன் வீட்டுல மூனு பேருக்கும் சேர்த்து பண்ணிட சொல்லிடுமா.. இது மூனோடு நிக்காது.” என்று விட்டார் தீர்க்கமாக.

அதிலேயே மகேஸ்வரி அரண்டு போய் கணவரைப் பார்க்க, ‘உங்க வீட்டு வாரிசுக்கு பெத்தவங்களோட வாழ்ற குடுப்பினை இல்லம்மா.. நீங்க ஏன் முன்னாடியே வரல. ரெண்டு அகால மரணம் நடந்திருக்கு. எப்படி எந்த சாங்கியமும் செய்யல. அது சாந்தி அடையாம உங்க வீட்டுல யாரும் நிம்மதியா வாழ முடியாது. வாழவும் விடாது..” என முடித்துவிட, மகேஸ்வரிக்கு உயிரே இல்லை.

“என்ன சொல்றீங்க சாமி.. அப்போ.. அப்போ..” என திகைத்துப் போய் கேட்க,

“ரெண்டு உசுரு அவரைப் பிடிச்சு இழுத்துட்டு இருக்கு. அதுல ஒன்னு உக்கிரமா இருக்கு.” என்றவர், “முடிஞ்சளவு அவரை இங்க வர விடாம பார்த்துக்கோங்க. பையனுக்கு எந்த பிரச்சினையும் வராது. அவனை அவங்க பாட்டி பார்த்துப்பாங்க..” என்றவர், இரண்டு எழுமிச்சை பழங்களைக் கொடுத்து “உங்க அண்ணங்கிட்ட கொடுத்து அவர் வீட்டு சாமி ரூம்ல வைக்க சொல்லுங்க. எல்லாம் விதிப்படி தான் நடக்கும்..” என்றார்.

“இதுக்கு பரிகாரம் எதுவும் இல்லையா.?” என செல்வமும் பயத்துடன்தான் கேட்டார்.

“என் கைல எதுவும் இல்லப்பா. எல்லாம் சிவன் செயல் இதெல்லாம் அவன் விதிப்படிதான் நடக்குது. அவன் முன்னோர்கள் செய்த பாவத்தின் விளைவு. அவன் வாழ்க்கையை போட்டு புரட்டி எடுக்குது. அவன் இங்க வராம இருந்தாலும், எமன் துரத்திட்டுத்தான் இருப்பான். என்ன கொஞ்சம் காலம் கடக்கும்..” என முடிக்க, என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் இருவரும் தவித்துப் போய்தான் வீடு வந்தனர்.

“மகேசு சாமி சொன்ன எதையும் கதிர்கிட்ட சொல்லிட்டு இருக்காத.. இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா தன் கவலையில் இருந்து வெளியில் வர்ரான். நீ இதை சொல்லி, அந்த பயத்துலயும், கவலையிலயும் இன்னும் ஒடிஞ்சி போய்டுவான்..” என பலவாறு சமாதானம் செய்து அழைத்து வந்தாலும், செல்வத்திற்குமே மனம் ஒரு நிலையில் இல்லை.

கதிரவனுக்கு அழைத்த மகேசு “அண்ணா.. மாமாவுக்கும், லட்சுமிக்கும் உன் கையால எல்லா காரியமும் செய்ய சொல்றாங்க. அப்பா, அம்மா அப்புறம் அண்ணிக்கும் மொத்தமா செய்ய சொல்றாங்க. நீங்க எப்போ வரீங்க..” என கேட்க,

“ரெண்டு நாளைக்கு முன்னாடி வரேன் மகேசு.?” என்றவர், தங்கையின் குரலின் வேறுபாட்டில் “வேறொன்னும் பிரச்சினை இல்லையே.?” எனவும்,

“என்ன என்ன பிரச்சினை ண்ணா.. அதெல்லாம் ஒன்னுமில்ல.. நீ வா.?” என பேசி வைத்தவருக்கு என்ன முயன்றும் அழுகையை அடக்க முடியவில்லை.

ரெண்டு நாளைக்கு முன்னாடி வரேன் என்ற கதிரவன் அதற்கு முன்னமே வந்தார்தான்.. ஆனால் வந்தது..?