• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தாமரை - 44

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,272
497
113
Tirupur
தாமரை - 44

தாமரையை இளங்கோவோடு அனுப்பிய அடுத்த நாளே மகேஸ்வரி ஊருக்கு கிளம்பிவிட்டார். அவருக்கு வளைகாப்பு வேலைகளை பார்க்க வேண்டியிருந்தது.

இரு குடும்பத்திலும் ஒற்றை வாரிசு. இரு பக்கமும் பங்காளிகள் வேறு இதை பெரிதாக செய்தே ஆகவேண்டும் என செல்வத்திடம் கூறி இருந்தனர்.

செல்வத்திற்குமே அந்த ஆசை இருந்தது. மகளின் திருமணத்தைத்தான் கண் குளிர பார்க்க முடியவில்லை. சீமந்தத்தையாவது விமர்சையாக செய்ய வேண்டும் என்று நினைத்தார்.

அதை மனைவியிடமும் கூறி, வசந்தியிடமும் கலந்து பேசி முடிவெடுக்க சொல்லியிருந்தார்.

வசந்தியும் சரியென்று விட, இங்கிருப்பவர்கள் தொழில் முறை சொந்தங்கள் என்பதால், அவர்களுக்கு குழந்தை பிறந்த பிறகு ஒரு விருந்து மட்டும் வைத்துக் கொள்ளலாம் என்று விட்டார்.

சீமந்தம் ஊரிலேயே வைக்க வேண்டும் என்பதுதான் எல்லோரின் ஆசையும். அதனால் இளங்கோவின் வீட்டிலும் அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று சொல்லிருந்தார் மகேஸ்வரி.

இரு வீட்டிற்கும் அவரே அனைத்தும் செய்ய வேண்டியிருந்ததால், இளங்கோ ஒரு வாரத்திற்கு முன்பே ஊருக்கு வந்துவிட வேண்டும் என்றும் கூறி சென்றிருந்தார்.

அவனுமே சரியென்றுதான் முடித்திருந்தான். இப்போது தாமரை வீட்டிலிருந்து வேலை செய்வதால் அறையை விட்டு கீழே வருவதே அரிதானது.

ராணியும் இளங்கோவும் அவளுக்குத் தேவையானதை பார்த்து பார்த்து செய்தனர்.

ஷ்யாமும் காலை மாலை என இரண்டு நேரமும் வந்து தாமரையைப் பார்க்காமல் செல்வதில்லை. அப்போது இளங்கோவை டென்சன் செய்யாமலும் விடுவதில்லை.

அன்றும் அப்படித்தான் காலையில் தாமரையைப் பார்க்க ஷ்யாம் வந்திருக்க, சீனிவாசன் அவனையே பார்ப்பது புரிந்தது. அவர் பார்வையில் இருந்த எடைபோடும் வித்தியாசம் அவனுக்கு புரியாமல் இல்லை.

அதனால் அவரே பேசட்டும் என பொறுமையாக காத்திருந்தான். ஆனால் ஷ்யாம் கிளம்பி செல்லும் வரைக்குமே எதையும் கேட்கவில்லை.

“என்ன மாமா? ஷ்யாமையே பார்த்துட்டு இருக்கீங்க.?” என இளங்கோ விளையாட்டுத்தனமாகவே கேட்டான். அவர் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டுமே.

“இல்ல இளா.. அந்த டாக்டர் பையன் நம்ம ப்ரீயை லவ் பண்றான்னு சொன்ன? ஆனா அப்படி ஒன்னும் தெரியலையே. நம்ம ப்ரீக்குட்டிக்கிட்ட கூட, கொஞ்சம் மாற்றம் இருக்கு. ஆனா இந்த பையன்கிட்ட..” என அவர் இழுக்க,

“மாமா.. சென்ட் பெர்சென்ட் அவனும் விரும்புறான். ஆனா அத்தையை நினைச்சு தயங்குறான். அதோட ரீத்துவும் அவனுமே இன்னும் பேசிக்கல. அவங்களே ஒரு முடிவுக்கு வரலன்னும் போது, நம்மக்கிட்ட எப்படி சொல்வாங்க..” என்றான் இளங்கோ..

“நீ சொன்ன பிறகு எனக்குமே நாயகியை நினைச்சு கொஞ்சம் பயமா இருக்கு இளா. அவ குணத்துக்கு இப்படி அமைதியா இருக்குற ஆளே இல்ல. ஏதோ பெருசா திட்டம் போடுறாளோன்னு கூட தோணுது..”

“ஏன் மாமா? செழியனுக்காக கூட அமைதியா இருக்கலாம்ல..”

“வாய்ப்பே இல்ல இளா.. செழியனுக்காக அமைதியா இருந்தாலும், இந்த பிரச்சினையைப் பத்தி எங்கிட்ட பேசியிருப்பாளே, என்கூட சண்டை போட்டிருப்பாளே, அவ்ளோ ஈசியா இதை விட்டுட மாட்டா.. அதுதான் எனக்கு பயமே..”

“ஹோ..” என்று யோசித்தவன் “மாமா.. நாளைக்கு அவங்க வீட்டுக்கு போய், அந்த பாட்டியைப் பார்த்துட்டு, அத்தையையும் ரீத்துவையும் நாம கூப்பிட்டு வந்துடலாம். நம்ம கண்பார்வையில் இருந்தாதான், அவங்க என்ன யோசிக்கிறாங்கன்னு நமக்கு தெரியும்..”

“ம்ம்.. சரிதான் இளா.. நாளைக்கு போகலாம்..” என்று இருவரும் அந்த பேச்சைவிட்டு, தொழில் பத்தி பேச ஆரம்பித்தனர்.

அத்தனை நாள் வழக்கம் போல, அன்றும் ஒரு குட் நைட்டை ஷ்யாமிற்கு அனுப்பி வைத்தாள் ப்ரீத்தா.

அந்த குறுஞ்செய்தியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ஷ்யாம்.

அவனுக்கு ஒரு வாரம் முன்பு ப்ரீத்தா போனில் பேசியது நினைவு வந்தது.

“ஸார்..” என பதட்டமாக அழைத்து, “நான் எங்க மாமா வீட்டுக்கு வந்துருக்கேன். அம்மாதான் கூப்பிட்டு வந்துருக்காங்க. இனி இங்க இருன்ட்ஹே காலேஜ் போக சொல்றாங்க. அப்புறம்.. அப்புறம்.. எங்க செழியன் மாமா இருக்காங்கல்ல, அவங்களுக்கும் எனக்கும் மேரேஜ் பண்ண போறதா பேசிட்டு இருக்காங்க..” என படபடவென பேச, ஆந்த குரலில் இருந்த பயம் ஷ்யாமிற்கும் புரிந்தது. அதை கேட்ட ஷ்யாமிற்கோ நாயகியின் மேல் ஆத்திரம் வந்தது.

தங்கள் மீது சந்தேகம் வந்து விட்டதால்தான் ப்ரீத்தாவை தன் பார்வையில் இருந்து விலக்கி வைக்கிறார் என ஷ்யாமிற்கு புரிந்தும் போனது.

ப்ரீத்தாவின் மேல் அவனுக்கு விருப்பம் இருந்தாலும், அவளின் வயதை நினைத்து தயங்கினான். அதனாலே தன் காதலை அவளிடம் தெரியப்படுத்தாமல் இருந்தான்.

இப்போது நாயகியின் செயலில் எரிச்சல் வர, அதை யாரிடம் காட்டுவது என்று தெரியாமல் “குட் நியூஸ் தானேமா சொல்லிருக்கா? மாப்பிள்ளையை புடிச்சிருந்தா ஓகே சொல்லு. இதுல நான் ஏதாவது ஹெல்ப் பண்ணனுமா?” என கேட்க,

“ம்ச்.. சார்.. நான் சீரியசா பேசிட்டு இருக்கேன்..” என ப்ரீத்தா சொல்ல,

“ஹேய் நான் மட்டும் என்ன வேலை வெட்டி இல்லாம, ஜாலியா உங்கிட்ட பேசிட்டு இருக்கேன்னு நினைச்சியா? நானும் சீரியசாதான் சொல்றேன். உனக்கு அவன் ஓக்கேன்னா நீ அவனை மேரேஜ் பண்ணிக்கோ.. மறக்காம இன்விடேஷன் அனுப்பு..” என நக்கலாக கூற,

“ஹோ.. அப்போ அவ்ளோதான.. உங்களுக்கு வேற பிரச்சினை இல்லையே..”

“எம்மா பரதேவதை உனக்கு கல்யாணம்னா, எனக்கு என்ன பிரச்சினை.?”

“ஹான் எனக்கு புரியுது.. நீங்க எங்கிட்ட சாதாரணமா பேசினதை எல்லாம் நான் நான்தான் தப்பா நினைச்சிட்டேன் போல.. சாரி..”

“ஹ்ம்ம்.. அதுதான்..”

“ஸாரி.. நீங்க உங்க தாமரைக்காக என்ன வேணும்னாலும் செய்வீங்கன்னு எனக்கு தெரியும். தெரிஞ்சும் நான் இதை எதிர்பார்த்திருக்கக்கூடாது. உங்க தாமரையோட லைஃப்க்காக என்னை யூஸ் பண்ணிக்கிட்டீங்க..” என்று ஆத்திரமும், கோபமும் கூடிய குரலில் ப்ரீத்தா பேச,

“ஹேய்.. ஸ்டாபிட்..” என கத்திய ஷ்யாம், “இதுதான் இதுதான் நான் யோசிக்க காரணம். என்னையும் அம்முவையும் நீ இப்படி யோசிச்சிட்டா என்ன பண்றதுன்னு நினைச்சுத்தான், உங்கிட்ட என் லவ்வை சொல்ல யோசிச்சேன். ஆனாலும் நீ அப்படி இல்ல, புரிஞ்சிப்பன்னு நினைச்சேன்..” என்றவன், “நான் நினச்சைதை பொய்யுனு யோசிக்க வச்சிட்ட.. என் காதலை சொல்லவிடாம என்னை காப்பாத்திட்ட..” என்றதோடு போனை வைத்தவன் தான், அதன் பிறகு பலமுறை ப்ரீத்தா அழைத்தும் அவன் போனை எடுக்கவே இல்லை.

பல போன் கால்ஸ், பல மெசேஜெஸ் என அவள் தன்னிலையை விளக்கி, தன் அவசரத்தனத்தை சொல்லி மன்னிப்புக் கேட்டு என அனுப்பிய எந்த செய்திக்கும் அவனிடம் பதில் இல்லை.

சில நாட்களுக்குப் பிறகு, காலையில் குட்மார்னிங்கில் ஆரம்பித்து, இரவு குட்நைட் வரை அவளின் அன்றாட நிகழ்வுகள் அனைத்தையும் அவனுக்கு செய்தியாக அனுப்ப ஆரம்பித்தாள்.

இதோ இப்போதும் குட்நைட் செய்தியை அனுப்பிவிட்டு, அவனின் பதிலுக்காக காத்திருக்கிறாள். அது ஷ்யாமிற்கு புரிந்தாலும் உடனே சமாதானம் ஆக அவனால் முடியவில்லை.

தாமரை அவன் வாழ்வில் மிக முக்கியமான ஒரு பெண். அவளைப்பற்றிய தவறான எண்ணம் ப்ரீத்தாவின் மனதில் வந்துவிடக்கூடாது என மிகவும் விரும்பினான்.

ஆனால் அவளோ அதையே அவனிடம் கூர, கொதித்து போனான். தாமரையின் பிரச்சினை முடியும் வரை இப்படியே போகட்டும், வளைகாப்பிற்கு வரும் போது பேசலாம் என நினைத்துக் கொண்டான்.

இங்கு ப்ரீத்தாவிற்கோ ஷ்யாமின் மௌனம் அவளை உயிரோடு வதைத்தது. மனதில் மிகப்பெரும் பாராங்கல்லை வைத்து அழுத்தியது போல் வலித்தது.

இந்த வலியை, அழுத்தத்தை அவளால் தாங்க முடியவில்லை. சிறு பெண் தானே! அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டுவிட்டாள். சொன்னால் புரிந்து கொள்வாளே! ஏன் அதை யோசிக்க மறந்துவிட்டான்.

என்னுடைய வலி அவனுக்கு ஒன்றுமே இல்லையா? நான் அழுதால், வருந்தினால் அவனுக்கு எந்த வருத்தமும் இல்லையா?

என் மேல் காதல் இருந்தும் இப்படி என்னை தவிக்க விடுவானா? அப்போ அது காதலா? என பல யோசனைகள். தனக்குள்ளே யோசித்து, தன்னையே வருத்தி மிகவும் உடைந்து போனாள் ப்ரீத்தா.

இதெல்லாம் நாயகியின் பார்வையில் விழாமல் இல்லை. ஷ்யாமின் பார்வை மகளின் மேல் வித்தியாசமாக விழுந்த அடுத்த நாளே, அவளை அங்கிருந்து தாய் வீட்டிற்கு கொண்டு வந்துவிட்டார்.

அப்படியிருக்க, மகளின் மாற்றம் தெரியாமல் போகுமா? ஆனாலும் அவர் அதைக் கேட்டு மகளை சுதாரிக்க விடவில்லை.

அவள் யோசித்து அடுத்து என்ன செய்ய என நினைக்கக்கூட விடாமல் வேலையை முடிக்க வேண்டும் என்று நினைத்தார்.

அதனால் அண்ணனிடம் பேசி திருமணத்திற்கான ஏற்பாடுகளை மிகவும் ரகசியமாக செய்ய ஆரம்பித்தார்.

ப்ரீத்தாவின் இந்த காதல் செழியனுக்கு தெரிந்தால் ப்ரீத்தாவின் நிலை? ஷ்யாமின் நிலை.? ஏற்கனவே அவனிடம் மாட்டிக்கொண்டிருக்கும் இளங்கோ தாமரையின் நிலை என்னவாகும்?

அடுத்த நாள் சீனியோடு வீட்டுக்கு வந்த இளாவை மிகவும் இன்முகமாகவே வரவேற்றார் நாயகி.

நாயகியின் தாயைப் பார்த்து நலம் விசாரித்த இளங்கோ, பின் வளைகாப்பு பற்றி கூறி, நாயகியை வீட்டிற்கு அழைக்க,

“எனக்கும் ஆசைதான் இளா.. ஆனா அம்மாவை பார்த்துக்க ஆள் வேணுமே. என்னதான் அண்ணி இருந்தாலும் நான் பார்க்கிற மாதிரி ஆகுமா? எனக்கும் வருத்தமாதான் இருக்கு, என்ன செய்ய இளா? வளைகாப்புக்கு கண்டிப்பா வந்துடுறேன். அதுக்கு முன்னாடி கஷ்டம் இளா. தப்பா எடுத்துக்காத..” என தன் மறுப்பை கூற, இளாவும் அதை ஏற்றுக் கொண்டான்.

“சரிங்க அத்த.. வளைகாப்புக்கு முதல்நாள் மாமா கூட அங்க வந்துடுங்க. நாங்க ஒரு வாரம் முன்னாடியே கிளம்பிடுவோம்..” என்றான் மகேஸ்வரி கூறியதை, அவரிடம் பகிர்ந்தான்.

“அவங்க சொல்றதுதான் ரொம்ப சரி இளா.. நீங்க இவ்ளோ நாள் போகாம இருந்ததே தப்பு.. நானும் சொல்லிருக்கனும்.. அந்த நேர கோபத்துல நானும் உன்னை தப்பா பேசிட்டேன்..”

“அத்தை எனக்கு உங்களை தெரியாதா? நான் உங்களை ரொம்ப ஹர்ட் பண்ணிருக்கேன். அதையெல்லாம் மறந்துடுங்க. நான் உங்க இளாதான். நீங்க வளர்த்த இளாதான். நான் உங்களை எப்பவும் தப்பா நினைக்கமாட்டேன். நீங்க அதையெல்லாம் யோசிக்கவே கூடாது. சீக்கிரம் உங்க கோபமெல்லாம் குறைஞ்சு நம்ம வீட்டுக்கு வரனும். நாங்க எல்லாம் உங்களுக்காக காத்துட்டு இருப்போம்..” என்று அவரை சமாதானம் செய்வதாக நினைத்து பேசி, கிளம்பிவிட்டான்.

ஆனால் சீனிக்கு மனைவியை தெரியுமே! அவளின் கோபம் அதுமட்டுமல்ல என அவருக்கு புரிய, மகளிடம் பேச வேண்டும் என நினைத்துக் கொண்டார்.

“ப்ரீக்குட்டியை கூப்பிட்டு போகட்டுமா நாயகி?” என்ற கணவரைப் பார்த்த நாயகியின் பார்வையில், சீனியின் எண்ணம் உறுதியாகிவிட்டது.

மனைவி ஏதோ திட்டம் தீட்டி விட்டாள் என்று புரிந்து அதிர்ந்து பார்த்தார் நாயகியை.