• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீராப்பகை தீர்வானது - 35 (End)

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,332
872
113
Chennai

பகுதி – 35.

வைஷாலியும், சர்வஜித்தும் ஒன்றாக அவனது கண்ணாடி மாளிகைக்கு வந்து இருந்தார்கள். வைஷாலியின் முகம் தாய்மையின் பூரிப்பில் திளைத்திருக்க, சர்வஜித்திடம் முதல் முறையாக ஒரு இலகுத் தன்மை இருந்தது.

“ஒரு நிமிஷம் இருங்க...” என்ற விசாலாட்சி, பின்னால் திரும்பிப் பார்க்க, ரூபி ஒரு ஆரத்தி தட்டோடு வெளியே வந்தாள்.

விசாலாட்சியைப் பார்த்த உடனே வைஷாலியின் மனம் பாரமாகிப் போக, முயன்று தன் முகம் மாறாமல் காத்தாள். அப்படி அவள் செய்தால், சர்வஜித்தே தாங்க மாட்டான் என அவளுக்குத் தெரியுமே. அதைவிட, அவன் தாயின் எந்த பேச்சையும் தட்டாமல் கேட்பதன் காரணம் கூட அவளுக்குப் புரிவதுபோல் இருந்தது.

“என்னம்மா இது?” சர்வஜித் புரியாமல் கேட்டான்.

“முதல் முறையா இந்த வீட்டுக்கு வர்றீங்க... ஆரத்தி எடுக்காமல் எப்படி? நீ எடும்மா...” விசாலாட்சி சொல்ல, ரூபி ஆரத்தி எடுத்தாள்.

ஆரத்தி எடுத்த ரூபி, “ம்... குடுங்க...” அவள் சர்வஜித்திடம் கரத்தை நீட்ட, தன் பர்சில் இருந்த துபாய் பணத்தை மொத்தமாக எடுத்து அவளிடம் கொடுத்துவிட்டான்.

அதைப் பார்த்தவள், “இதென்ன செல்லாத காசா கொடுக்கறீங்க?” ரூபி போலியாக அலற, சர்வஜித், சின்னதாக புருவம் நெரித்தவன் அவள் விளையாட்டை கண்டுகொண்டான். ஹரீஷோ பாய்ந்து வந்து அவள் வாயை மூடினான். ரூபியின் விளையாட்டு வைஷாலிக்குப் புரிய, வாய்விட்டு சிரித்தாள்.

“ஹரீஷ் அவளை விடுங்க... அவ சும்மா விளையாடறா” வைஷாலி சொன்ன பிறகுதான் ஹரீஷ் அவள் வாயில் இருந்து கரத்தை எடுத்தான். ஹரீஷ் சர்வஜித்தின் முகத்தைப் பார்க்க, அங்கே எந்தவிதமான கோபமும் இல்லை என்ற பிறகுதான் சற்று நிம்மதியானான்.

“சரி... சரி... வலது காலை எடுத்து வச்சு உள்ளே போங்க” என்ற ரூபி, ஆரத்தியை வெளியே ஊற்றச் செல்ல, ஹரீஷ் அவள் பின்னாலேயே சென்றான்.

“ரூபி... எந்த விதத்தில் நீ சார் முன்னாடி இப்படியெல்லாம் பேசற?” ஹரீஷுக்கு எப்பொழுதுமே சர்வஜித்தின் முன்னால் பேச்சே வராது. அதுவும் சர்வஜித் ஒன்றைச் சொல்லிவிட்டால் அதற்கு மறு பேச்சு கூட பேசாமல் அதைச் செய்து முடிப்பான்.

சர்வஜித் சொல்வது சரி வருமா? இல்லையா? என்று கூட அவன் யோசிக்க மாட்டான். சர்வஜித் ஒன்றைச் சொல்லிவிட்டால், அதன் விளைவுகள் எதுவாக இருந்தாலும் அவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை அவனுக்கு நிறையவே இருந்தது.

“ஏன் பேசினால் என்ன?” கணவனிடம் எதிர் கேள்வி கேட்டாள்.

“சார் எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க. கோபத்தில் ஏதாவது சொல்லிட்டா உனக்குத்தான் கஷ்டம். நானும் எதுவும் கேட்க முடியாது” என்றான்.

“கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா எனக்கு சாரைத் தெரியும். சார் என்னைக்காவது என்கிட்டே குரல் உசத்தி பேசியாவது நீங்க கேட்டு இருக்கீங்களா? அதெல்லாம் சார் எதுவும் சொல்ல மாட்டாங்க... நீங்க பயப்படாதீங்க. அப்படியே ஏதாவது சொன்னாலும் நான் டீல் பண்ணிக்கறேன்” என்றவள் முகத்தை ஒரு மாதிரி வெடுக்கென திருப்பிக் கொண்டு, கையில் இருந்த கத்தை பணத்தை அவனிடம் காட்டினாள்.

அவனோ அதைப் பார்த்துவிட்டு, “அவ்வா... அவ்வா... ஒரு ஆரத்தி சுத்தறதுக்கு இவ்வளவு பணமா? பேசாமல் நானும் பொண்ணா பொறந்திருக்கலாம்” என்றவன் ஒரு பெருமூச்சை வெளியிட்டான்.

“அப்படி பொறந்திருந்தா நானும் கிடைச்சிருக்க மாட்டேன்... என் மூலமா...” மேலே சொல்லப் போனவளது வாயை பாய்ந்து பொத்தினான்.

“அம்மா தாயே... நான் இப்படியே இருந்துக்கறேன்...” அவன் சொன்ன விதத்தில், அப்படி ஒரு சிரிப்பு சிரித்தாள்.

அவர்கள் இருவரும் உள்ளே வர, விசாலாட்சி, வைஷாலி, சர்வஜித் என அனைவரும் ஒன்றாக நின்று பேசிக் கொண்டு இருந்தார்கள். வைஷாலி தோழியைப் பார்த்து கரத்தை நீட்ட, அவளது கரத்தைப் பற்றிக் கொண்டாள்.

அதைப் பார்த்த ஹரீஷ், ‘அது முதலாளின்னு இவளுக்கு கொஞ்சமாவது நினைப்பிருக்கா? அவங்க கையைப் பிடிச்சுகிட்டு நிக்கறா. சாரும் எதுவும் சொல்ல மாட்டேங்கறார்?’ எண்ணியவாறே மனைவியைப் பார்த்தான்.

அவனுக்குள் என்னவோ ஓடுவது புரிய, ரூபி ‘என்ன?’ என்பதுபோல் புருவம் உயர்த்தினாள்.

‘எதுவும் இல்லை...’ என்றவாறு குறிப்பாக தோழியரின் இணைந்த கையை ஒரு பார்வை பார்த்தான். அதைப் பார்த்த ரூபி, இன்னும் அழுத்தமாக தோழியின் கரத்தை பற்றிக் கொள்ள, அவனுக்கு தலையிலேயே அடித்துக் கொள்ளலாம் போல் இருந்தது.

ஊரில் சர்வஜித் இல்லாத பொழுது, தோழியர் இருவரும் ஒன்றாகவே ஒரே அலுவலக அறை, சில நாள் இரவில் ஒரே படுக்கை அறையில் கூட உறங்குவதை கண்டு இருக்கிறான். இருவரையும் ஒன்றாக ‘மால்’லுக்கு ஒரே காரில் அழைத்துச் சென்றதும் அவன்தான்.

அப்பொழுது எல்லாம் வைஷாலி அவனிடம் எதையாவது கேட்டால், பேசினால் வெகு இலகுவாகவே பதில் கொடுப்பான். ஆனால் சர்வஜித்தின் முன்னால், வைஷாலியிடம் பேசக் கூட மாட்டான். அவ்வளவு ஏன் வைஷாலியை நேருக்கு நேராக பார்க்க கூட மாட்டான்.

இங்கே என்றால் அவனது மனைவியோ... சர்வஜித்தின் முன்பே வைஷாலியின் கரத்தை பிடித்துக்கொண்டு நிற்க, அவனுக்கு சற்று பதட்டமாகவே இருந்தது. ஹரீஷ் மனைவியிடம் கண்களால் எதையோ சொல்வதும், அதற்கு ரூபி வைஷாலியின் கரத்தை இன்னும் அழுத்தமாக பிடித்துக் கொள்வதையும் சர்வஜித் பார்க்கவே செய்தான்.

அதைக் கவனித்தாலும், விசாலாட்சி அவனிடம் எதையோ கேட்க, அதற்கு பதில் கொடுத்துக் கொண்டு இருந்தான்.

ரூபியோ, “எல்லாம் ஓகேயா?” தோழியின் காதில் கிசுகிசுத்தாள்.

“ம்...” சின்னதாக முனகியவள், கணவனைப் பார்த்தாள். ஹரீஷ் சர்வஜித்தின் பின்னால் நின்றுகொள்ள, அதைப் பார்த்த வைஷாலி அவனைப் பார்த்து புன்னகைத்தாள். அதற்கு மெல்லிய புன்னகையை உதிர்த்தவன் ஒரு மாதிரி விறைப்பாக நின்றுகொண்டான்.

அதைப் பார்த்தவள், “ஹரீஷுக்கு என்னவாம்?” தோழியிடம் கேட்டாள்.

“நீ என் முதலாளியாமா... நான் உன்னை தொட்டுப் பேசக் கூடாதாம்... அதுவும் சார் முன்னாடி கூடவே கூடாதாம்... இன்னும்...” என்றவள் யோசிப்பதுபோல் பாவனை செய்ய, ஹரீஷோ திருதிருவென விழித்தான்.

‘இவ என்னைத்தான் போட்டு கொடுக்கறா போல...’ அவன் நினைக்க, வைஷாலியும் அவனை திகைப்பாக பார்த்து அதை உறுதி செய்தாள்.

‘நான் காலம் முழுக்க இப்படி மைண்ட் வாய்சிலேயே புலம்பிக்கணும் போல... ஆண்டவா...’ நொந்துபோனான் ஹரீஷ்.

ரூபி சொன்னதைக் கேட்ட வைஷாலி சிறு அதிர்வோடு தோழியைப் பார்த்தாள். இந்த நொடி வரைக்கும் வைஷாலி அப்படியாக நினைத்தது கூட இல்லை. அப்படி இருக்கையில் ஹரீஷ் ஏன் அப்படி நினைக்கிறான் என அவளுக்குப் புரியவில்லை.

“ஓ...” என்றவள், ஹரீஷிடம் பேச வேண்டும் என முடிவெடுத்தாள்.

“எல்லாம் முடிந்ததாப்பா... இனிமேலாவது நீ நிம்மதியா, சந்தோஷமா உன் குடும்பத்தோட இருக்கணும்” விசாலாட்சி மகனின் கன்னம் வருடினார்.

“சரிம்மா...” என்றவன் தாயை தோளோடு அணைத்துக் கொண்டான். ரூபி தன்னவனை பார்வையாலேயே தன் பக்கம் அழைக்க, அவளுக்கு அருகே செல்லவில்லை என்றால், ‘ஹரீஷ்... இங்கே வாங்க’ என வாய்விட்டே அழைத்துவிடுவாள் என்பதால் அவளுக்கு அருகே சென்றுவிட்டான்.

“அவ்வளவு பயம்...?” ரூபி கணவனிடம் கேட்க, அவளை முறைத்தான். வாய்விட்டு எதையாவது சொல்லக் கூட பயமாகத்தான் இருந்தது. அதுவும் சர்வஜித் அங்கே இருக்கையில் அவன் அப்படியெல்லாம் நினைக்க கூட முடியாதே.

விசாலாட்சியோ, “இனிமேல் எந்த போராட்டமும் இல்லையே...?” தாய் மீண்டும் கேட்க,

”இல்லைம்மா... இனிமேல் உங்களோடதான் இருப்பேன்...” என்றவனது முகத்தில் ஒருவித சாந்தம் நிலவியது.

அது ஹரீஷுக்கும் புரிய, நிம்மதியாக மூச்சு விட்டான். ‘ஹப்பாடா... இனிமேல் சண்டைக்கு போக மாட்டார்’ என எண்ணியவன் ஒரு பெருமூச்சை வெளியேற்றினான்.

“என்ன இவ்வளவு பெரிய பெருமூச்சு விடறீங்க? சாரைப்பத்தி அப்படி என்ன யோசிச்சீங்க?” அவன் விலாவில் கையால் இடித்த ரூபி கணவனிடம் கேட்டாள். எங்கே இவளது பேச்சு வைஷாலிக்கு கேட்டுவிடுமோ என சற்று பதட்டமானான்.

“ஷ்... சும்மா இரு ரூபி...” அவளிடம் அடிக்குரலில் சொன்னான்.

“நீங்க என்னன்னு சொல்லுங்க. உங்க மைண்ட் வாய்ஸ் எனக்குத் தெரியாதுன்னு நினைக்கறீங்களா?” என்றவாறு அவனைப் பார்த்து கண்ணடித்தாள்.

“உன்கிட்டே சொன்னது என் தப்புதான்...” அவன் புலம்ப, ரூபிக்கு பக்கென சிரிப்பு வந்தது. தான் சிரித்தால் மற்றவர்களின் கவனம் தங்கள் பக்கம் திரும்பும் என்பதால், அமைதியாக இருந்து கொண்டாள்.

“வெளியே இவ்வளவு விறைப்பா இருந்துகிட்டு, உள்ளுக்குள்ளே எப்படி செம காமெடி பீசா இருக்கீங்க?” அவனைச் சீண்டினாள்.

“ஏன்டி... ஏன்... ஏன்... உன் புருஷன் உசுரோட இருக்கறது உனக்குப் பிடிக்கலையா?” அதே குரலில் அவளிடம் கேட்டு வைத்தான்.

“என்ன ஹரீஷ்...? அவங்க என்ன சொல்றாங்க? உன் மைண்ட் வாய்சை நான் எப்போ கண்டு பிடிப்பேன்னு கேட்கறாங்களா?” சர்வஜித் கேட்க ஹரீஷ் ஆடிப் போய்விட்டான்.

“சார்...” அவன் அதிர்வாக அழைக்க ரூபியோ வெடித்து சிரித்தாள். வைஷாலிக்கு அங்கே நடப்பது புரியாமல் போக, குழப்பமாக அவர்களைப் பார்த்திருந்தாள்.

“ஹா...ஹா...ஹா... சார்... உங்களுக்குத் தெரியுமா?” சிரிப்பின் இடையே ரூபி அவனிடம் கேட்டுவேறு வைத்தாள். ஹரீஷின் முகம் ஒரு மாதிரி சங்கடமும், சிறு பயமுமாக உருமாற, சர்வஜித் அவனை ஒரு பார்வை பார்த்தான்.

“அதெல்லாம் தெரியாமலா இருப்பேன்?’ என சர்வஜித் சொல்ல, ஹரீஷுக்கு கொஞ்சம் பயம்தான்.

ஹரீஷோ, “வாயை மூடு ரூபி... நீ உள்ளே வா உனக்கு இருக்கு” ரூபியிடம் சின்னக் குரலில் மிரட்டினான்.

“சார்... என்னை உள்ளே கூட்டி போய் மிதிப்பேன்னு சொல்றார்” ரூபி சர்வஜித்திடம் மாட்டிவிட, ஹரீஷ் நெஞ்சில் கை வைத்துக் கொண்டான்.

“ஐயோ இல்ல... இல்ல சார் பொய் சொல்றா...” சர்வஜித் பெண்கள் விஷயம் என வந்துவிட்டால் ரொம்பவே கெடுபிடி என அவனுக்குத் தெரியுமே. அவன் சொன்ன வேகத்தில் ரூபி இன்னும் சிரிக்க, சர்வஜித்தின் இதழோரம் புன்னகையில் லேசாக விரிந்தது.

அதைப் பார்த்த ரூபி... “ஷாலு... சார் இப்போ சிரிக்கறாரா?” தன் சிரிப்பை பட்டென நிறுத்தியவள் தோழியிடம் கேட்டாள்.

“என்னங்க... நான் சொன்னப்போ நீங்க நம்பலை தானே, இப்போ பாருங்க... ரூபி, நீங்க சிரிக்கறீங்களான்னு கேட்கறா?” வைஷாலி கணவனிடம் போட்டுக் கொடுக்க, ரூபி அவளை கையில் நறுக்கென கிள்ளி வைத்தாள்.

“ஸ்... ஆ... எரும மாடே எதுக்குடி இப்போ கிள்ளி விட்ட?” வைஷாலி தன் கரத்தை பரபரவென தேய்த்துக் கொண்டாள்.

“என்னடி பண்ற?” தோழியை அடக்க முயன்றாள்.

“என்ன கிள்ளிட்டாளா?” ஹரீஷ் கிட்டத்தட்ட கத்தினாள்.

“யோவ்... இந்த கேள்வியை சார் கேட்கணும். நீங்க என்ன ஊடால? நான் உங்களை மாட்டி விட்டேன்னு பெர்ஃபாம் பண்ணப் பார்க்கறீங்களா? கொன்னுடுவேன்...” ரூபி ஒற்றை விரல் நீட்டி எச்சரிக்க, ஹரீஷ் விழித்தான்.
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,332
872
113
Chennai
சர்வஜித்துக்கு அவள் சொன்ன விதத்தில் சிரிப்பு வந்துவிட, சிரித்துவிட்டான். அவன் அப்படி சிரிக்கவே, உலகத்தில் உள்ள எட்டாவது அதிசயத்தைப் பார்ப்பதுபோல் அங்கே இருந்த அனைவருமே பார்த்து வைத்தார்கள்.

“ஷாலு... என்னைப் பிடிச்சுக்கடி...” என்றவாறு ரூபி மயக்கம் போடுவது போல் நடிக்க, வைஷாலி பிடிக்கும் முன்பே, ஹரீஷ் அவளைத் தடுத்துப் பிடித்தான்.

“அவங்க கர்ப்பமா இருக்கறாங்க... அவங்களைத் தள்ளி விடப் பார்க்கற?” மனைவியைக் கடிந்தான்.

“ம்கும்... உங்களுக்கு முன்னாடியே இவ எனக்கு ஃப்ரண்டு... ரொம்பத்தான்” ரூபி நொடிக்க, ஹரீஷுக்கு சர்வஜித்தின் முன்னால் என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவள் இப்படி இயல்பாக இருப்பதைப் பார்க்க ஹரீஷுக்கும், சர்வஜித்துக்கும் கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது.

“நல்ல புள்ளைங்க... நீங்க எல்லோரும் உட்காருங்க. உங்களுக்கு குடிக்க ஏதாவது எடுத்துட்டு வர்றேன்” என்ற விசாலாட்சி உள்ளே செல்லப் போனார்.

அவரைத் தடுத்த சர்வஜித், “என்ன வேணும்னு இங்கே இருக்கறவங்க கிட்டே சொல்லுங்கம்மா. அவங்க எல்லாம் அதைச் செய்யறதுக்குத்தான் சம்பளம் கொடுக்கறோம்” தாயிடம் சொன்னான்.

“அது சரிதான்ப்பா... என்ன வேணும்னாவது சொல்லணும் தானே” என்றவர் சொல்கையிலே ஒரு ட்ரேயோடு ஒரு பணிப்பெண் அங்கே வந்தாள்.

“மாதுளை ஜூஸ் மேடம்...” அவள் சொல்ல, அதை அவள் கரத்தில் இருந்து விசாலாட்சி வாங்கிக் கொண்டார். சர்வஜித் மறுத்து எதையோ சொல்லப் போக, அவன் அருகே இருந்த வைஷாலி அவன் கரத்தைத் தொட்டு ‘வேண்டாம்’ என்பதுபோல் தலை அசைத்தாள்.

‘ஏன்?’ என்பதுபோல் அவன் பார்க்க,

“அவங்களுக்கு அவங்க கையால் உங்களுக்கு செய்யணும், பரிமாறணும்னு ஆசை. அதனால்தான் இப்படிச் செய்யறாங்க. அவங்க விருப்பத்துக்கு விடுங்க...” வைஷாலி சொல்ல, அதைக் கேட்டுக் கொண்டான்.

அனைவரும் ஜூஸ் குடித்து முடிக்கவே, “சரவணா... உங்க கல்யாணத்தை என்னன்னுப்பா வெளியே சொல்லப் போற? இங்கே நீ வேற ரொம்ப பிரபலமா இருக்க. உன் விஷயத்தை விடு, இப்போ இவளைப்பற்றி எல்லாம் இந்த பத்திரிகைக்காரங்க கிளறுவாங்களே...” விசாலாட்சி சொல்ல, சர்வஜித்தோ தோளைக் குலுக்கினான்.

“சரவணாவா?” ரூபி, ஹரீஷின் காதைக் கடிக்க, “சாரோட அம்மா அவருக்கு வைத்த பெயர்தான் அது” அவளுக்கு விளக்கம் கொடுத்தான்.

“ஓ...” என ரூபி கேட்டுக் கொள்ள,

“எங்க மேரேஜை சர்வஜித், வைஷாலி என்ற பெயரில்தான் ரிஜிஸ்டர் செய்து இருக்கேன்ம்மா. அதோட என் ஃபேமிலி விஷயத்தை நான் வெளியே சொல்லத் தேவை இல்லை. அப்படியே யாராவது கிளறினாலும் அவங்க வாயை மூட எனக்குத் தெரியும்” அவன் சொல்ல, அந்த தகவலே வைஷாலிக்கு புதிதுதான்.

‘சர்வஜித் இதை எப்படிச் செய்வான்?’ என பெண்கள் கலங்கிய அளவுக்கு, ஹரீஷ் நினைக்க கூட இல்லை. சர்வஜித் ஒன்றை செய்ய நினைத்தால், எத்தனை விலை கொடுத்தும் அதைச் செய்து முடிப்பான் என அவனுக்குத் தெரியுமே.

“வைஷாலிக்கு வளைகாப்பு வைக்கணும்ப்பா... இப்போ எட்டாவது மாசம் நடக்குது. ஒன்பதாவது மாச துவக்கத்தில் அதை வச்சுட்டா நல்லது. நீ என்னப்பா சொல்ற?” மகனிடம் கேட்டார். தாய் கேட்கவே, அவன் வைஷாலியின் முகம் பார்த்தான்.

“உனக்கு ஓகேயா?” அவன் கேட்க, அவளோ விழி விரித்தாள்.

“அத்தை சொன்னா சரியாத்தான் இருக்கும். அப்படியே செய்யலாம்” என்றவளுக்கு உள்ளுக்குள் தன் தகப்பனை எண்ணி ஏக்கமாக இருந்தது. தாயைப் பற்றி அவள் இப்பொழுது எல்லாம் நினைப்பது கூட இல்லை.

சர்வஜித்திடம் சொன்னால் நிச்சயம் தன் தகப்பனை அழைத்து வந்துவிடுவான் எனத் தெரியும். ஆனால இத்தனை வருடங்களுக்குப் பிறகு, பைரவன் தன் வாழ்க்கையை வாழத் துவங்கி இருக்கிறார். அவரைத் தொல்லை செய்ய வேண்டாம் என நினைத்தாள்.

“எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு... நான் வெளியே போயிட்டு வர்றேன்” என்ற சர்வஜித் கிளம்ப, ஹரீஷும் அவனுடனே சென்றான். ஹரீஷ் காரைக் கிளப்ப, அவனுக்கு அருகே அமர்ந்து கொண்டான்.

“ஹரீஷ்...” அவன் அழைக்க, “சார்...” என்றான்.

“வைஷாலியும், ரூபியும் நல்ல ஃப்ரண்ட்ஸ்... அதுவும் ரொம்ப திக் ஃப்ரண்ட்ஸ். வைஷாலிக்கு யாரும் இல்லாமல் இருந்தப்போ, ரூபி தான் அவங்களோட இருந்தாங்க. அவங்க அப்படியே இருக்கட்டும். இந்த தொழிலாளி, முதலாளி எல்லாம் அவங்களுக்குள்ளே வேண்டாம்.

“நம்மளால் அப்படி ஒரு நட்பை உருவாக்கிக் கொள்ளவோ, நமக்கு நடுவிலே கூட ஒரு எல்லைக்கு மேலே நம்மளால் நெருங்க முடியறது இல்லை. என் அம்மா உன்னை அவங்க பிள்ளையா பார்க்கறாங்க, ரூபியை இன்னொரு மருமகளா, மகளாத்தான் நினைக்கறாங்க.

“நம்ம நினைப்பை, எல்லைகளை எல்லாம் அவங்களுக்குள்ளே திணிக்க வேண்டாம். அவங்க அவங்களாவே இருக்கட்டும்” அவன் சொல்ல, ஹரீஷ் கேட்டுக் கொண்டான். சர்வஜித் இப்படி தன்னை கவனித்து இருப்பான் என அவன் எதிர்பார்க்கவே இல்லை.

“நீங்க சொன்னா சரிதான் சார்...” வேகமாகச் சொன்னான்.

அவர்கள் வந்த வேலையைப் பார்க்க, எப்பொழுதும் அழுத்தத்துடனே இருக்கும் சர்வஜித் இன்று அத்தனை இலகுவாக இருந்தான். அவனை வழக்கமாக பரிசோதிக்கும் மருத்துவர் அன்று அலுவலகம் வந்திருக்க, அவனைப் பார்த்த உடனே அவனது வித்தியாசத்தை கண்டு கொண்டார்.

“என்ன சர்வஜித்... உங்க லைப்ல ஒரு பெண் வந்துட்டா போலையே?” அவர் ஹிந்தியில் கேட்டு புன்னகைக்க, அவனுக்கு ஆச்சரியம்தான்.

“எப்படி டாக்டர்?” அவன் தன் வியப்பை வெளியிட,

“உங்க கையில் இருக்கும் வாட்ச் சாந்தமா இருக்கே...” என்றவர் ஆர்ப்பாட்டமாக சிரித்தார்.

“அப்போ நான் இனிமேல் இங்கே வரத் தேவை இருக்காது. இருந்தாலும் வருஷத்துக்கு ஒரு முறை ஒரு மாஸ்டர் செக்கப் நீங்க பண்ணிக்கறது நல்லது. அப்போ நான் கிளம்பறேன்...” என்றவர் கிளம்பிவிட்டார்.

அன்று அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வர, ஹரீஷை வைஷாலியும் பிடித்துக் கொண்டாள்.

“ஹரீஷ்... நான் உங்ககிட்டே என்னைக்காவது ஒரு முதலாளி மாதிரி பழகி இருக்கேனா?” வைஷாலி கேட்க, ‘அடுத்த ரவுண்டா?’ என எண்ணிக் கொண்டான்.

“இல்ல... இனிமேல் உங்க ரெண்டுபேருக்கு நடுவில் நான் வரலை. நீங்க ரெண்டுபேரும் என்ன வேணா பண்ணிக்கோங்க” அத்தனை வேகமாகச் சொன்னான்.

அதைக் கேட்டவாறே அங்கே வந்த ரூபி, “என்ன ஷாலு... என் புருஷனை மிரட்டிகிட்டு இருக்க? அந்த ஏகபோக உரிமை எல்லாம் எனக்கு மட்டும்தானாக்கும்” அவள் சொல்ல. வைஷாலி சிரித்துவிட்டாள்.

‘என் மானத்தை வாங்க வேற யாருமே வேண்டாம்’ எண்ணியவன், “நீங்க பேசுங்க, நான் வர்றேன்...” என்ற ஹரீஷ் அங்கே இருந்து ஓடியே போனான். அவன் செல்வதைப் பார்த்த இரு பெண்களும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டார்கள்.

“என்ன ஷாலு?” அவள் கேட்க,

“அது ஒன்றும் இல்லை... நீ போய் அவரை கவனி” என்றவள், சர்வஜித்தை தேடித் போனாள்.

நேரம் இரவு பத்தைக் கடந்திருக்க, “உங்க ஆபீஸ்ல இருந்து இங்கே இவ்வளவு தூரம் வர்றது கஷ்டமா இருக்கா?” என்றவாறே அவன் களைந்த ஆடைகளை தன் கரத்தில் வாங்கிக் கொண்டாள்.

“அப்படியெல்லாம் எதுவும் இல்லை... ஐ கேன் மேனேஜ்” என்றவன் குளிக்கச் செல்ல, அவனுக்காக காத்திருந்தாள்.

வெளியே வந்தவன் அவள் படுக்கையில் அமர்ந்திருக்கவே, “தூங்கல?” என்றவன் அவளுக்கு அருகே வந்து அமர்ந்தான்.

“நாளைக்கு என்னோட செக்கப் டேட்... ஹாஸ்பிடல் போகணும். இங்கே யாரைப் பார்க்கறதுன்னு ஏதாவது ஐடியா இருக்கா? டெலிவரியும் இங்கேயே பார்க்கற மாதிரி இருக்கும். அதோட... முடிஞ்சால் டெய்லி சாயங்காலம் என்கூட கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணுங்க.

“காலையில் ஒன்பது மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பி, நைட் பத்து மணிக்கு வீட்டுக்கு வர்றீங்க. எதுக்காக? யாருக்காக இவ்வளவு ஓட்டம்? உங்க பிசினஸ் பற்றி எல்லாம் எனக்குப் புரியுது. ஆனாலும் ஃபேமிலி ஃபர்ஸ்ட்...” அவள் சொல்ல, மறு நாள் முதல் ஐந்து மணிக்கெல்லாம் வீட்டில் இருந்தான்.

பீச்சில் அவளோடு காலார நடப்பது... இரவில் அவளது கால் வீக்கத்துக்கு வெந்நீர் ஒத்தடம் கொடுப்பது... அவளுக்கு கால் அமுக்கி விடுவது என அவள் சொன்ன எதையும் அவன் மறுக்கவே இல்லை.

“சர்வா... உங்ககிட்டே ஒன்று கேட்கணும்...” அன்று இரவு அவள் கேட்க, அவள் முகம் பார்த்தான்.

“ஊர்ல கோபால் மாமாவோட பினாமி பெயரில் இருந்த சொத்துக்களோட நிலை எல்லாம் என்ன ஆச்சு? ருக்மணி அத்தை பற்றி ஏதாவது தெரியுமா?” வந்து இத்தனை நாட்கள் ஆகிவிட்டதால் கேட்டாள்.

“கோதை கிட்டே அந்த லிஸ்ட் எல்லாம் கிடைக்கிற மாதிரி பண்ணிட்டேன். அவங்க அம்மா வீட்டு ஆட்களும் கொஞ்சம் பெரிய ஆட்கள் தான்... அதையெல்லாம் அவங்க மீட்டுப்பாங்க. உன் ருக்மணி அத்தை கூடத்தான் இப்போ அவங்க இருக்காங்க, சோ கவலை இல்லை...” அவன் சொல்ல, கேட்டுக் கொண்டாள்.
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,332
872
113
Chennai
“அங்கே இருக்கும் நம்மளோட ‘மால்’ வீடு எல்லாம்...?”.

“மால்’லை கவனிக்க ஆள் போட்டாச்சு. வீட்டுக்கு என்ன? அது அப்படியே இருக்கட்டும். நாம போனால், வந்தால் தங்கிக்கலாம்” என்றான்.

“என்னங்க... ஹரீஷுக்கு நாம ஒரு கார் வாங்கிக் கொடுக்கலாமா?” அவள் கேட்க, புருவம் நெரித்தான்.

“இல்ல... அவரும் உங்களோடவே வீட்டுக்கு வந்துடறார். மறுபடி அவங்க வெளியே எங்கேயாவது போகணும்ன்னா, நம்ம காரைத்தான் எடுத்துட்டு போகணும். அதுக்கு தயங்கியோ என்னவோ அவங்க வெளியே போறதே இல்லை... அதான்...” சற்று தயங்கியே சொன்னாள்.

“செய்யலாம்...” என முடித்துவிட்டான்.

நாட்கள் அழகாக கடக்க, அன்று வைஷாலிக்கு வளைகாப்பு நாள். ஜெயந்தி, விசாலாட்சி, ரூபி என அனைவரும் ஒன்று சேர்ந்து, அந்த கண்ணாடி மாளிகையிலேயே சின்னதாக ஏற்பாடு செய்து இருந்தார்கள்.

அவளது மெல்லிய அலங்காரம் கண்டு சர்வஜித் அப்படியே நின்றுவிட்டான். “ரொம்ப அழகா இருக்க...” மனையில் அமர வந்தவளிடம் சொன்னான்.

“ஃபர்ஸ்ட் டைம் நான் அழகா இருக்கேன்னு சொல்லி இருக்கீங்க” அவள் சொல்ல,

“நீ எப்பவுமே அழகுதான்... அதை வேற நான் தனியா சொல்லணுமா?” அவன் கேட்க,

“புருஷன் வாயால் அதைக் கேட்க ஒரு மாதிரி கிக்கா இருக்கும்” அவள் சின்னக் குரலில் சொன்னாள்.

“அப்போ இனிமேல் அடிக்கடி சொல்றேன்” அவன் வேகமாகச் சொல்ல, வாய்விட்டு சிரித்தாள்.

“இப்போதான் நீங்க முழு குடும்பஸ்தன் ஆகி இருக்கீங்க. இனிமேல் அடிக்கடி சொல்லுங்க... கேட்க நல்லா இருக்கு” அவன் கன்னம் கிள்ளி முத்தம் வைத்தாள்.

“ஷ்... எல்லோரும் இருக்காங்க” அனைவரும் அங்கே ஏதோ ஒரு வேலையைப் பார்த்துக் கொண்டிருக்க, அவளிடம் சொன்னான்.

“யார் பார்த்தால் எனக்கென்ன? நான் என்ன லிப்லாக்கா பண்ணேன்?” என்றவள், அவனை ஒரு பார்வை பார்த்தாள். அவளது பார்வைக்கான பொருள் புரியவே, வேகமாக அங்கிருந்து அகன்றுவிட்டான்.

அன்று அவர்களுக்குள் தாம்பத்யம் நடந்த பிறகு, வைஷாலி ஒரு மாதிரி மூச்சு வாங்கவே சற்று பயந்து போனான். மருத்துவ பரிசோதனைக்குச் சென்ற பொழுது, வைஷாலிக்கு பிபி கொஞ்சம் அதிகமாக இருக்கிறது எனச் சொன்னதில் இன்னும் பயந்து போனான்.

அன்று முதல் தனிப்பட்ட விதத்தில் அவளை அவன் நெருங்கவே இல்லை. ஒன்று இரண்டு முறை அவள் முயன்றும் அவன் பிடிகொடுக்காமல் போகவே, அதை இருவரும் நினைத்துக் கொண்டார்கள்.

வைஷாலியை மனையில் அமர்த்தி, விசாலாட்சி, ஜெயந்தி, ரூபி, சர்வஜித் என அனைவரும் வளையல் போட, பைரவன் சரியாக அந்த நேரம் அங்கே வந்தார்.

தகப்பனைப் பார்த்தவள், “அப்பா...” என அழைத்து எழுந்து கொள்ளப் போக, “பாப்பா... எழுந்துக்காதே” என்றவாறு மகளின் அருகே ஓடி வந்தார்.

“அப்பா... நீங்க எப்படிப்பா...?” என்றவள் தன்னவனைத்தான் கண்களால் தேடினாள். அவன் சற்று நெருங்கி வந்தவன், சிரிப்பும், பூரிப்பும், கண்ணீருமாக இருக்கும் தன்னவளைப் பார்த்தான். அவளுக்காக என்று எவ்வளவோ செய்தவன், இதைச் செய்ய மாட்டானா என்ன?

“தேங்க்ஸ்...” அவள் சொல்ல, பைரவன் மகளுக்கு தங்க காப்புகளை அணிவித்தார்.

அனைத்தும் முடியவே, சடங்குக்கு என்று அவளை ஜெயந்தியின் வீட்டுக்கு அனுப்பி வைத்தான். அவள் அங்கிருந்து செல்லும் முன்னர், ஹரீஷை அழைத்த சர்வஜித், அவன் கரத்தில் ஒரு ஆடி காரின் சாவியைக் கொடுத்தான்.

“இந்த கார்ல அவங்களை அழைச்சுட்டு போய் விடவா சார்?” ஹரீஷ் அவனிடம் கேட்டான்.

“அப்படியும் செய்யலாம்... ஆனால் இந்த கார் உனக்குத்தான்” அவன் சொல்ல, ஹரீஷ் ரூபியைத்தான் பார்த்தான்.

“இல்ல சார்... இவ்வளவு காஸ்ட்லியா...” வெகுவாக தயங்க, ரூபியும் அவனுக்கு அருகே வந்துவிட்டாள்.

“என்னடி உன் வேலையா?” சற்று கோபமாகவே தோழியிடம் கேட்டாள். ஹரீஷ் அப்படியே நின்று இருந்தான். சர்வஜித் அவனுடன் வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் சம்பளம் அதிகமாகவே கொடுத்து வந்தான். ஹரீஷுக்கே மாதம் இரண்டு லட்ச ரூபாய் சம்பளம்.

அவன் நினைத்தால் அவனாகவே கார் வாங்கிக் கொள்ள முடியும். அவன் தன் உழைப்பில் சென்னையில் வாங்கிய வீடு இன்னும் அப்படியேதான் இருந்தது. அதை அப்படியே போட்டு வைக்க வேண்டாம் என ரூபி தான் அதை வாடகைக்கு விடச் சொன்னாள்.

சென்னைக்குச் சென்றால் அங்கே அவர்கள் தங்குவதற்கு என மாடியில் ஒரு மிகப்பெரிய அறையை கட்டி இருந்தார்கள். சென்னை, மும்பை, கன்னியாகுமரி என எங்கே சென்றாலும், அவுட்ஹவுஸ், சர்வஜித்தின் வீட்டிலேயே தங்கிக் கொள்ள, எதையும் அவன் யோசித்ததே இல்லை.

அப்படி இருக்கையில் தனக்கு மட்டும் சர்வஜித் இதைச் செய்ய, தான் அவனுக்கு ஸ்பெஷலானவன் என்ற உண்மை அவனுக்குப் புரிந்தது.

“நல்ல நேரம் முடிய முன்ன கிளம்பணும் சரவணா” விசாலாட்சி குரல் கொடுக்க, அதற்கு மேலே அவர்கள் தாமதிக்கவில்லை.

அங்கே பைரவனும் உடன் செல்ல, தகப்பனைக் கட்டிக்கொண்டு அமர்ந்துவிட்டாள்.

“எப்படிப்பா இருக்கீங்க? எங்கே இருக்கீங்க? ஊருக்குப் போனீங்களா? அம்மாவைப் பார்த்தீங்களா?” அவளால் தாயைப் பற்றியும் கேட்க்காமல் இருக்க முடியவில்லை.

“நானும் இப்போ இங்கதாம்மா இருக்கேன். கொஞ்ச நாள் பெங்களூர்ல இருந்தேன்... பிறகுதான் ஜெயந்தி பத்தி தெரிய வந்தது. அவளும் என்னை கூப்ட்டுட்டே இருந்தாளா, இங்கே வந்து ரெண்டு நாள் ஆகுது.

“அந்த ராட்சசியைப் பத்தி எதுக்கும்மா கேட்கற? அவளுக்கு எல்லாம் இன்னும் புத்தியே வரலை. தனியா கிடந்தும் அவளுக்கு கொழுப்பு அடங்கலை. வாய்க்கு வந்தபடி பேசிகிட்டு, ஆடிக்கிட்டுதான் கிடக்கா. அவ ஆடி அடங்கட்டும்... நமக்கு அவ பேச்சே வேண்டாம் விடு” தகப்பன் சொல்ல, அவளும் விட்டுவிட்டாள்,

சில ஜென்மங்களுக்கு பட்டால்தான் புத்தி வரும். அப்படிப்பட்ட ஆட்களில் ரத்னாவும் ஒருத்தி. என்றைக்காவது ஒருநாள் தன் கணவன், மகளின் அருமை புரிந்து, அவர்களிடம் திரும்பி வரலாம். இல்லையா... இப்படியே கிடந்தது அனாதையாக சாகவும் செய்யலாம். முடிவு ரத்னாவின் கரத்தில்தான் உள்ளது.

ஜெயந்தியின் வீட்டில் மூன்று நாட்கள் இருந்துவிட்டு, வைஷாலி அன்று சர்வஜித்தின் மும்பை வீட்டுக்கு வந்தாள். ஜெயந்தி அவளை அங்கேயே இருக்கச் சொன்னதற்கு அவள் கேட்டுக் கொள்ளவில்லை.

இன்னும் இரண்டு நாட்களில் அவளுக்கு பிரசவ தேதி கொடுத்திருக்க, வீட்டுக்கு வந்தவளை உடன் இருந்து கவனித்துக் கொண்டான். விசாலாட்சியும் அவர்களோடு அங்கே வந்திருக்க, அங்கே பின்னால் இருந்த அவுட் ஹவுசில் ஹரீஷும், ரூபியும் இருந்தார்கள்.

அன்று இரவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சர்வஜித், படுக்கையில் புரண்டு படுக்க, அருகே வைஷாலியைக் காணாமல் திகைத்தான். கடந்த இரண்டு நாட்களாகவே அவள் இரவில் கொஞ்சம் சிரமப்படுவது அவனுக்குத் தெரியும்.

எனவே இரவு முழுவதும் கூட உறங்காமல் அவளைக் கவனித்துக் கொண்டுதான் இருந்தான். இன்றைக்குத்தான் அவன் கொஞ்சம் அசந்திருக்க, அவளைக் காணோம் எனவும் திடுக்கிட்டான். வேகமாக எழுந்து பாத்ரூமில் பார்க்க, அவள் அங்கே இருக்கவில்லை.

மேலே இருந்து கீழே பார்க்க, அங்கே கிச்சனில் வெளிச்சம் தெரிய வேகமாக அங்கே சென்றான். வைஷாலி இடுப்பை பிடித்துக்கொண்டு ஸ்டவ்வில் எதையோ வைத்திருக்க, வேகமாக அவளை நெருங்கினான்.

“வைஷாலி... இந்த நேரம் இங்கே என்ன பண்ற? ஏன் என்னை எழுப்பலை? உனக்கு என்ன வேணும்?” அவளிடம் கேட்டான்.

“அது... கொஞ்சம் ஒரு மாதிரி இருந்ததா... அதான் சூடா தண்ணி குடிக்கலாமேன்னு எழுந்து வந்தேன். பிளாஸ்கில் இருந்த தண்ணி காலி ஆயிடுச்சு. நீங்க இப்போதான் அசந்து தூங்கினீங்களா, அதான் எழுப்ப மனசு வரலை” என்றாள்.

“அதுக்கு... இப்படி தனியா வருவியா?” என்றவாறு வெந்நீரை ஆற்றி அவளுக்கு குடிக்கக் கொடுத்தான்.

அதை வாங்கிக் குடித்தவள், சட்டென தன்னைக் குனிந்து பார்த்தாள்... கால்களின் வழியாக பனிக்குடம் உடைந்து வெளியேற, அதை அவனும் பார்த்துவிட்டான்.

“வைஷாலி... இது... இது...” அவன் சட்டென பதட்டமாகிவிட்டான். அவன் எந்த ஒரு சூழ்நிலையிலும் இப்படி நடுங்கியதே இல்லை. அவனது பதட்டத்தைப் பார்த்தவள், அவனை இறுக கட்டிக் கொண்டாள்.

“சர்வா... இப்படி ஆனால் என்ன செய்யணும்னு டாக்டர் சொன்னாங்க தானே. டென்ஷன் ஆகாதீங்க... அத்தையை எழுப்புங்க... ஹரீஷை வரச் சொல்லுங்க...” அவள் சொல்ல, சற்று நிதானத்துக்கு வந்தான்.

அடுத்த அரைமணி நேரத்தில் மருத்துவமனையில் அவர்கள் இருக்க, வைஷாலி வலியில் துடித்துக் கொண்டிருந்தாள். அவளது கரத்தை அழுத்தமாக பற்றிக்கொண்டு உடன் இருந்தான் சர்வஜித்.

அவள் வலியில் துடிக்கும் ஒவ்வொரு நேரமும் அவனும் தவித்துப் போனான். அவர்களது இளவரசன் தாயைப் போட்டு பாடாக படுத்திவிட்டு, விடியற்காலை நெருங்கும் பொழுதே இந்த உலகுக்கு வந்தான்.

“சர்வஜித், உங்களுக்கு மகன் பிறந்திருக்கான்” மருத்துவர் சொல்ல, அவன் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.

வைஷாலியின் நெற்றியில் அவன் அழுத்தமாக முத்தம் வைக்க, மென்மையாக புன்னகைத்தாள். “நீ சொன்னதை மறக்காமல் செய்துட்டேன் பார்த்தியா?” அவன் சொல்ல, அவன் கன்னத்தில் தானும் இதழ் பதித்தாள்.
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,332
872
113
Chennai
‘இவர் என்பேச்சை எப்போ கேட்பார்?’ என அவள் எதிர்பார்த்தது போல், வைஷாலி சொல்லும் அனைத்தையும் அவன் கேட்டான். கண்ணை மூடிக்கொண்டு கேட்டான்... அதில் அவளுக்கு ஏக பெருமை.

****ஒரு வருடத்திற்குப் பிறகு....

அன்று சர்வஜித்தின் மகன் ஆத்மன்சரவணனுக்கு மொட்டை போட முடிவெடுத்து சென்னைக்கு வந்து இருந்தார்கள். திருவண்ணாமலைதான் விசாலாட்சியின் பிறந்த ஊர் என்பதால் அங்கேயே மொட்டை போட நினைத்தார்.

தன் மகனை ஆசை தீர ‘சரவணன்’ என்ற பெயரில் அழைக்க முடியாததால், தன் பேரப்பிள்ளைக்கு அந்த பெயரை வைக்க விரும்பினார். சர்வஜித் தாய் ஒன்றைக் கேட்டு மறுப்பானா? வைஷாலி விரும்பிய ‘ஆத்மன்’ என்ற பெயரோடு சரவணனையும் சேர்த்துவிட்டான்.

“முடி இறக்க நேரமாச்சு... வந்து குழந்தையோட உட்காருங்கோ” ஐயர் சொல்ல, சர்வஜித் தன்னவளை எங்கே எனத் தேடினான்.

அங்கே ஒரு மரத்தடியில் ரூபி வாந்தி எடுத்துக் கொண்டு இருக்க, இவளோ கையில் ஒரு தண்ணீர் பாட்டிலோடு நின்று இருந்தாள்.

ரூபியின் வயிறு நன்றாகவே மேடிட்டு இருக்க, நிச்சயம் ஐந்து மாதமாவது இருக்கும் எனத் தோன்றியது. அவளோ இன்னுமே வாந்தி எடுக்க, ஹரீஷ் வேகமாக அவர்களை நெருங்கினான்.

“நீங்க போங்க... அங்கே கூப்பிடறாங்க... நான் இவளைப் பார்த்துக்கறேன்” ஹரீஷ் சொல்ல,

“என்ன பார்ப்பீங்க? நான் வாந்தி எடுக்கறதையா? மூணு மாசத்திலேயே எல்லோருக்கும் வாமிட் நின்னுடுமாம். இங்கே எனக்கு ஐந்து மாசம் முடிஞ்சு ஆறாவது மாசமாகுது. இன்னும் வாமிட் நிக்கவே இல்லை. என்ன பிள்ளை உண்டாக்கி விட்டிருக்கீங்க? என்னைப் போட்டு பாடா படுத்துது” அவனிடம் கத்தினாள்.

‘நான் என்னடி செய்யட்டும்?’ என்பதுபோல் விழித்தவன், வைஷாலியைப் பார்த்து சங்கடமாக புன்னகைத்தான். வைஷாலியோ சிரிப்பை அடக்க முயன்றும் முடியாமல் சிரித்துவிட்டவள், பாட்டிலை அவனிடம் கொடுத்துவிட்டு நடந்துவிட்டாள்.

“முதல்ல இந்த தண்ணியை குடி...” என்றவாறு அவன் நீட்ட,

“எனக்கு பதில் சொல்லுங்க” என்றவாறு அவனை முறைத்தாள்.

“நான் என்னடி பண்ணேன்?” அவன் அப்பாவியாக கேட்டுவைக்க, அவளது முறைப்பு அதிகரித்தது.

“இது நீங்க பண்ணதுதான்” அவள் வயிற்றை சுட்டிக் காட்ட, நொந்தே போனான். அவள் மசக்கையில் கஷ்டப்பட துவங்கியது முதல் அவனைப் போட்டு வாட்டி வதைக்கவே செய்தாள். அவனும் மிகவும் பொறுமையாகவே அவளைக் கையாண்டு கொண்டிருந்தான்.

இப்பொழுதும் அவள் பேச, “அம்மா தாயே... நாளைக்கே நான் போய் ஆப்பரேஷன் பண்ணிக்கறேன். இன்னொரு பிள்ளையெல்லாம் நமக்கு வேலைக்கே ஆகாது. என்னை இம்சை பண்ற” முடியாமல் சொல்லிவிட்டான்.

“ஓஹோ... அப்போ பண்ணும்போது நல்லா இருந்தது... இப்போ கவனிக்க கசக்குதா?” அவள் பேச, நொந்தே போனான்.

வேகமாக அவளை நெருங்கி அவள் வாயை கரத்தால் மூடியவன், “என்ன பேச்சு பேசற, யார் காதிலேயாவது விழுந்தால் என்ன நினைப்பாங்க?” என்றவாறு சுற்றும் முற்றும் பார்த்தவன்,

“நான் ரொம்ப பாவம்டி... கொஞ்சம் கூட இரக்கமே பார்க்காமல் வச்சு செய்யற?” விட்டால் அழுதே விடுவான் போல... அப்படி நின்றான்.

அதில் அவளுக்கும் அவன்மேல் பரிவு தோன்ற, “சரி... சரி... வாங்க போகலாம். சார் கூப்பிடறார்...” என்றவாறு வாய் கொப்பளித்துவிட்டு, அவனோடு நடந்தாள். அவளது இழுப்புக்கு அவளோடு சென்றான்.

‘இப்போவே இப்படின்னா... இன்னும் குழந்தை பிறந்த பிறகு இவ என்னென்ன செய்வாளோ?’ என நினைக்கவே அவனுக்கு அடிவயிற்றில் ஒரு பயப்பந்து சுழன்றது.

“வாங்கோ...” ஐயர் மீண்டும் அழைக்கவே,

“ஹரீஷ்... குழந்தையை வாங்கிட்டு போய் உட்காருங்க” வைஷாலி சொல்ல, ரூபியும், ஹரீஷும் திகைத்துப் போனார்கள்.

“ஷாலு... என்னடி சொல்ற?” ரூபி தோழியை நெருங்கினாள்.

“ஏன் மாமன் சீர் தர வேண்டி இருக்குமேன்னு யோசிக்கறியா?” வைஷாலி கேட்க, தோழியை முறைத்தாள். ஹரீஷ் சர்வஜித்தை தான் பார்த்துக்கொண்டு நின்றான்.

“லூசே... உனக்கு என்ன வேணும்னு மட்டும் சொல்லு... உனக்கு இல்லாததா?” என்றவள் தோழியை இறுக கட்டிக் கொண்டாள். இது எத்தனை பெரிய விஷயம், அங்கீகாரம் என அவளுக்குத் தெரியாதா என்ன?

சர்வஜித்தோ தன் கையில் இருந்த மகனை அவனிடம் நீட்ட, வேகமாக கரத்தில் வாங்கிக் கொண்டான். குழந்தை அவன் கழுத்தை கட்டிக்கொண்டு குதித்தான். “மா...மா...” அவன் அம்மா என்று அழைத்தானா? இல்லையென்றால் ‘மாமா’ என அழைத்தானோ தெரியாது. ஹரீஷின் தேகம் சிலிர்த்துக் கொண்டது.

இது எவ்வளவு பெரிய கெளரவம் என அவனுக்குத் தெரியுமே. தாய் தந்தை, உறவுகள் இல்லாத அனாதை அவன். அப்படி இருக்கையில், வைஷாலி தன்னை அவளது அண்ணனாக அங்கீகரிப்பது அவன் கண்களை பனிக்கச் செய்தது.

அங்கே அவன் மடியில் அமர்த்தி குழந்தைக்கு மொட்டை போட்டு முடிய, கோவிலில் கிடா விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள். அங்கே அனைத்தும் முடிய, மீண்டும் மும்பைக்கே வந்துவிட்டார்கள்.

அன்று இரவில் குழந்தைக்கு பசியாற்றிவிட்டு, அவனைப் படுக்கையில் விட்டவள், “எனக்குப் பசிக்குது” என்றாள்.

அடுத்த நிமிடம் சர்வஜித் கிச்சனுக்குச் செல்ல, அவன் பின்னாலேயே வந்தாள். அவன் ப்ரெட் ஆம்லேட் போடத் துவங்கவே, அவனைப் பின்னால் இருந்து கட்டிக் கொண்டாள்.

“நீங்க செய்யற இந்த ப்ரெட் ஆம்லேட் சாப்பிட வேண்டும் என்றே எனக்கு அடிக்கடி நைட் பசிக்குது” என்றவளது கரம் அவனது சட்டை பட்டனில் விளையாடிக் கொண்டு இருந்தது.

“எனக்கு இதை சாப்ட்டு சாப்ட்டு போர் அடிச்சு போச்சு” என்றவன் தன் சட்டைக்குள் நுழையும் அவளது கரத்தை அனுமதித்தான்.

“எனக்கு போர் அடிக்கலை” என்றவள் அவன் நெஞ்சின் ரோமங்களை சுருட்டி இழுத்தாள். அது கொடுக்கும் வலியை ரசித்தவன்... கொஞ்சம் பாலையும் கொதிக்க வைத்து எடுத்துக் கொண்டான்.

“இந்த சாப்பிடு...” என்றவாறு அவளை விட்டு விலகினான்.

அவன் ப்ரெட் ஆம்லெட்டை அவள் கரத்தில் கொடுக்க, அவள் உண்ணத் துவங்கினாள். அவன் பாலை பதமான சூட்டுக்கு ஆற்ற, அவளோ கிட்டத்தட்ட அதை உண்டு முடித்திருந்தாள். வழக்கமாக அவனுக்கும் கொஞ்சம் கொடுப்பவள், இன்று அந்த நினைப்பே இல்லாதவள் போன்று இருந்தாள்.

இறுதி துண்டையும் அவள் வாயில் போட்டுக்கொள்ளப் போக, “எனக்கு... எனக்கு...” என்றான்.

“உங்களுக்குத்தான் இதை சாப்பிட போர் அடிக்குதே...” என்றவாறு அந்த இறுதி துண்டையும் தன் வாய்க்குள் போட்டுக் கொண்டாள். ஆனால் மறு நிமிடம் அவளது இதழ்கள் அவன் இதழ்களால் விழுங்கப் பட்டது.

கூடவே அந்த இறுதி துண்டை அவன் கைப்பற்றி இருக்க, அவள் இடையில் கை கோர்த்து தன்னை நோக்கி இழுத்தவன், தான் கைப்பற்றியதை நிதானமாக சுவைத்து தின்றான். அவனையே இமைக்காமல் பார்த்து இருந்தவள், அவன் உண்டு முடிக்கவே, அவன் இதழை கவ்விக் கொண்டாள்.

அவள் இதழ்கள் மெதுவாகப் பிரிந்து, விரிந்து அவனை அழைப்புவிடுக்க, சற்று வேகமானான். முன்னர் அவனிடம் இருந்த தயக்கங்கள் எதுவும் இல்லாமல் போக, அவள் இதழ்களுக்குள் மூழ்கினான். ஒரு மாதிரி ஆழமாக, அழுத்தமாக அவன் முத்தமிட, தானும் அவனை முத்தமிட்டவள், அவன் வேகம் தணியவே விலகி அவன் முகம் பார்த்தாள்.

“நாட் பேட்...” சிரிப்பை உள்ளடக்கிய குரலில் அவள் சொல்ல,

“என்ன? என்ன? நாட் பேடா?” என்றவன்... மீண்டுமாக அவளை முத்தமிட்டான். இப்பொழுது அவளிடம் ‘குட்’ என்ற வார்த்தையை அங்கீகாரத்தை பெற்றுவிட வேண்டும் என அவன் முயல, அவனை அவள் வெற்றி கொண்டாள்.

அவனை விட்டு மெதுவாக விலகியவள் அவன் முகத்தைப் பார்க்க, அவன் முகம் அத்தனை மயக்கத்தைக் காட்டியது. அதில் தானும் கிறங்கியவள், “சர்வா...” கிசுகிசுப்பாக அழைத்தாள்.

“ம்...” என முனகியவன், அவள் கழுத்தில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டான்.

“மாயக்காரி... என்னை வசியம் பண்ணித்தான் வச்சிருக்க” அவன் பேச்சில் அவளுக்கு அப்படி ஒரு பெருமிதம். இந்த அக்கினி புத்திரனை, முரட்டுக் காளையை தன்னவனாக மாற்றியதில் அவளது பங்கு மிகப் பெரியதே.

“நீங்க அந்த நிழல் உலகத்துக்குள்ளே எப்படி போனீங்கன்னு எனக்கு சொல்லவே இல்லையே” எத்தனையோ முறை அவனிடம் கேட்க நினைத்ததை இப்பொழுது கேட்டாள்.

“அது மட்டும் வேண்டாம் ஷாலு... என் கதையைக் கேட்டு யாராவது அதற்காக முயற்சி செய்தால் அது ஆபத்தா போய்டும் அது வேண்டாம்” அவன் முடித்துவிட, அவள் விட்டுவிட்டாள்.

“இப்போ உங்க பிசினஸ் எதிரிகளை எல்லாம் எப்படி டீல் பண்றீங்க?” அவனைப்பற்றி தெரிந்தே கேட்டாள்.

“அதையெல்லாம் இந்த சர்வா லெப்ட் ஹேண்ட்ல டீல் பண்ணுவான்” அவன் சொல்ல, சிரித்துவிட்டாள். அவன் அதைச் சொன்ன பொழுது இப்பொழுது அவளுக்கு பயம் வரவில்லை. மாறாக அவன்மேல் மலையளவு நம்பிக்கை பிறந்தது.

இவர்களது வாழ்க்கை இதே இனிமையோடு தொடரும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. நாமும் அவர்களை வாழ்த்தி விடை பெறுவோம்.
நன்றி!

(இந்த கதையோடு என்னுடன் தொடர்ந்து பயணித்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். தினமும் தங்கள் கருத்துக்களால் எனக்கு உற்சாகம் ஊட்டிய தோழமைகளுக்கு அன்பு வணக்கங்கள், வந்தனங்கள், நன்றிகள். இது போட்டி கதை மக்களே... வாக்கெடுப்பின் பொழுது உங்கள் சர்வாவை தோற்க விட்டுவிடாதீர்கள்.

அன்புடனும், நட்புடனும் உங்களிடம் வேண்டி, விரும்பி கேட்டுக் கொள்வது நான்...

உங்கள் இன்பா அலோசியஸ்)
 

kumarsaranya

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 14, 2025
25
29
13
Vellkovil
கதை ஆரம்பிக்கும் போது சர்வாவை ஆன்டி ஹீரோ லெவலுக்கு காமிச்சு, ஆனால் கதை போகப்போக சர்வாவின் செயல்களுக்கான விளக்கம் தெரிந்து சர்வாவை ரொம்பவே பிடித்துவிட்டது ❤️❤️போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள் சிஸ் 🥰🥰
 
  • Like
Reactions: grg

Malarthiru

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 15, 2023
150
7
28
VILLUPURAM
சர்வா 😍😍😍🥰🥰🥰❤️❤️❤️❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥
விசாலாட்சி அம்மா 😔😔😔🤗🤗🤗🤗❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥
வைஷாலி ஏம்மா அவன இப்படி பண்றனு கதற வச்சிட்டா 🙄🙄🙄😏😏😏😏
ரூபி ஹரிஷ் ❤️❤️❤️🥰🥰🥰😍😍😍 இரண்டு பேரும் 🥰🥰🥰🥰
பைரவன் அப்பா ஒரு ராட்சசி கிட்ட இருந்து விடுதலை வாங்கி கிட்டு சந்தோசமா இருக்காரு 🥰🥰🥰🥰🥰
ஜெயந்தி அவ குழந்தைகளோட 🥰🥰🥰🥰 கோதை அவ மாமியார் மகளோட இப்பவாச்சும் நிம்மதியா இருக்கட்டும் 😍😍😍😍🤗🤗🤗🤗🤗🤗
சர்வா வைஷாலி 🥰🥰🥰😍😍😍❤️❤️❤️❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥🥰😍🥰😍😍❤️😍🥰❤️😍❤️🥰❤️
 

Thani

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 2, 2023
122
34
28
Deutschland
அழகான கதை❤️❤️❤️❤️❤️
போட்டியில் வெறறி பெற வாழ்த்துக்கள் ஜி❤️❤️❤️❤️❤️