• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

துளி துளியாய் துரோகம் 1

kkp5

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
55
70
18
Thanavur
துளி துளியாய் துரோகம் 1

சுபயோக சுபதினமாய் மலர்ந்தது அன்றைய நாள். சென்னை ஈ.சி.ஆர். பகுதியில், பல ஏக்கரில் கட்டியிருந்த மோகனின் பெரிய பங்களாவை நோக்கி வேகமாக இரண்டு கார்கள் விரைந்தபடி இருந்தன.

அந்த கார்கள் நின்ற இடத்தில் மோகன் வெட்ஸ் கல்பனா என்னும் எழுத்துகள் தங்க நிறத்தில் ஜொலித்தன. அதோடு அரண்மனையை போலக் காட்சியளித்த பங்களாவின் வாயிலில் பெரிய கோலங்களும் மற்றும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

மணமகள் கல்பனா, அவளுடன் அவளின் நெருங்கிய உறவினர் சிலர் காரிலிருந்து இறங்கி உள்ளே சென்றனர். மணமகளுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் மங்கள வாத்தியம் இசைக்க … சுபமுகூர்த்த நேரத்தில்

மாங்கல்யம் தந்துனானே

மம ஜீவன ஹேதுனா,

கண்டே பத்னாமி சுபாகே

த்வம் சஞ்சீவ சரத சதம்.


என ஐயர் வேத மந்திரம் ஓத

மோகன் தாலியை கல்பனா கழுத்தில் கட்டினார். மூன்றாவது முறையாகச் சிறப்பாகத் தனது திருணமத்தை நடத்திக் கொண்டார். ஐம்பத்தேழு வயது மணமகன் மோகன் மையலுடன் தன் புத்தம் புது மனைவியைப் பார்த்துக் கண்ணடித்தார். மணமகள் முகமும் நாணத்தால் சிவந்தது.

சிலர் அட்சதை தூவினர். சிலர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அந்த இடமே சில நிமிடங்களுக்கு ஆனந்த கூத்தாடியது. இனிதே திருமணம் முடிந்தது.

வர்ஷா இந்த காட்சிகளைக் கண்களால் ஸ்கேன் செய்தபடி இருந்தாள். இவை அனைத்தும் போலியான சந்தோஷ ஆரவாரம் என அவளுக்கு நன்குத் தெரியும். எனினும் தன் வெறுப்பை மிக அழகாக தன் மேக்அப்பின் உதவியால் மறைத்து போலியாக முறுவலித்தாள்.

காலையில் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டார் என மிக முக்கியமானவர் மட்டுமே கலந்து கொண்டனர். எளிமையாகத் திருமணம் நடந்தேறியது.

மோகன் தாலி கட்டியதும் கல்பனாவின் நெத்தி சுட்டியைச் சற்றே விலக்கி வகிடு பகுதியில் குங்குமம் இட்டார். பின்பு பிறைச்சந்திரன் போன்ற நெற்றியில் முத்தமிட்டார். போட்டேகிராபர்கள் தங்கள் திறமையைமொத்தமாகக் கொட்டி அதை கணக்கு பாடத்தில் இல்லாத கோணத்தில் படம் பிடித்தனர்.

நிச்சயமாக நாளை இந்த புகைப்படம் தான் அனைத்து செய்தித்தாள் மற்றும் சமூக ஊடகங்களில் தலைப்பாகத் திகழும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

அந்த காட்சியைக் காண சகிக்காத வர்ஷா முகத்தைத் திருப்பிக் கொண்டாள். சில நிமிடங்களுக்குப் பிறகுத் தனது அறைக்குச் சென்றுவிட்டாள். அவளின் காரியதரிசி சிந்துவை ஒற்றை பார்வை பார்த்து வைத்தாள்.

பச்சிளம் குழந்தையின் அழுகையைப் புரிந்து கொள்ளும் தாயைப் போல தலையசைத்து புரிந்தது என்பதை சூசகமாகப் பதிலளித்தாள் காரியதரிசி சிந்து. இனி மாலைவரை வர்ஷா வெளியே வர மாட்டாள் எனவும் தெரியும்.

“மேடம் பிஸி இப்ப பார்க்க முடியாது“ எனக் கேட்டவரிடம் சிந்து உதட்டுச் சாயப் புன்னகையுடன் அழகாய் மறுப்பாள்.

மாலையில் ரிசப்ஷன். கடற்கரையை ஒட்டி ரம்மியமாக அலங்கரிக்கப்பட்ட மேடை. உலகின் அத்தனை வகையான ருசியான உணவுகள் ஒரு பக்கம். போதை ஏற்றும் விலை உயர்ந்த மது வகைகள் என அத்தனையும் வரிசைப்படுத்தி இருந்தது.

மோகன் என்ன சாதாரண மனிதரா? அரசியல், சினிமா, கிரிக்கெட் என அத்தனை துறைகளிலிருந்தும் ரிசப்ஷனுக்கு ஆட்கள் வந்து நிரம்பி வழிந்தனர்.

மோகன் மிகப் பெரிய தொழிலதிபர். பிஸ்னஸ் ஜாம்பவான் என்றே மற்றவர்களால் அழைக்கப்படுபவர்.

சில அரசியல் கட்சிகள் இவரை நம்பித்தான் உள்ளது. அவரின் சொத்து மதிப்பு அவருக்கே சரியாகத் தெரியாது.

கோடிகளில் பணம் இருப்பதால் வயதை வெளிக்காட்டாமல் அவ்வப்பொழுது வெளிநாடுகளுக்குச் சென்று தன்னை இளமையாகக் காட்டிக் கொள்ள காஸ்மெடிக் சர்ஜரி மற்றும் சிகிச்சைகளை மேற் கொள்வார்.

தலையில் நரைத்தமுடி ஒன்றுகூட இருக்காது. இருக்கவும் கூடாது. அவர் வரையில் முதுமை ஒரு சாபம்.

இது அவருக்கு மூன்றாவது திருமணம்.

ரிசப்ஷெனுக்கு வந்திருந்தவர்கள் அனைவரும் கோடீஸ்வரர்கள். லட்சாதிபதியை லட்சியம் செய்யாதவர்கள். அவர்களிடம் உள்ள பணம் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை இன்றி குட்டிகளைப் போட்டு வாரிசை உருவாக்கிக் கொண்டிருந்தது. அளவுக்கு அதிகமான பணம் இருந்ததால் பணத்தின் மேல் மதிப்பு அவர்களுக்கு குறைந்தே இருந்தது.

அவர்கள் அணிந்திருந்த வைர நகைகள் நட்சத்திர ஓளியை காட்டிலும் அதிகமாய் ஒளி வீசியது. விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் அவர்களின் அந்தஸ்தை குறிக்கும் ரிப்போர்ட் கார்டாக திகழ்ந்தது.

அவ்வாறே ரிசப்ஷனுக்கு ஆடம்பர கார்களில் வந்து அந்த சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் வாகன நெரிசலை ஏற்படுத்தியது.

ரிசப்ஷனில் மணப்பெண் கல்பனா அணிந்திருந்த சேலையின் மதிப்பு பல கோடிகள் பெரும். மெரூன் நிறத்தில் தங்கச் சரிகையினால் புடவை வடிவமைக்கப்பட்டிருந்தது. அதில் வைரம் முதல் நவரத்தின கற்கள் பதித்திருந்தன. குஞ்சலங்களில் வைரக் கற்கள் என ஆடம்பரமாகக் காட்சியளித்தாள்.

மோகனும் சேலை நிறத்திற்கு ஏற்றார் போல ஷெர்வானி அணிந்து அதிலும் நவரத்தின கற்கள் பதித்து ஆடை வடிவமைக்கப்பட்டிருந்து.

மிகவும் நேர்த்தியான ஆடைவடிவமைப்பாளர் கொண்டு அத்தனையும் ஏற்பாடாகியிருந்தது. திருமணத்திற்கு அனைத்திலும் தி பெஸ்ட் ஆனவர்களைக் கொண்டு நடந்தது.

வர்ஷாவும் தன்னை மிகவும் நேர்த்தியாக அலங்கரித்துக் கொண்டாள். அவளின் டிரேட் மார்க் புன்னகையுடன் வளம் வந்தாள். தன் மனவோட்டத்தை முகத்தில் வெளிக் காட்டாமல் அனைவரையும் உபசரித்தாள்.

ஆனால் உண்மையில் மனம் எதிலும் லயிக்கவில்லை. சில நிமிடங்களுக்குப் பின் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்துவிட்டு தன் செல்போனில் கவனம் செலுத்துவது போல லாவகமாகப் பாவனை செய்தாள். அருகில் காவல் காக்க காரியதரிசி.

வர்ஷா மனதில் எதோ அறுபட்டதைப் போல உணர்ந்தாள். இனி தனக்கும் மோகனுக்கும் இடையே கல்பனா வந்துவிட்டாள். இந்த திருமணத்தில் வர்ஷவிற்குச் சிறிதும் விருப்பம் இல்லை. ஆனால் அது இங்கு ஒரு பொருட்டே இல்லை என்பது போல ஆகிவிட்டது.

வர்ஷா மனதில் ஒரு மாதம் முன்பு தனக்கும் மோகனுக்கும் நடந்த உரையாடல் மீண்டும் நிழலாடியது.

அன்றும் இதே போலத் தனிமையை விரும்பி அறைக்குள் முடங்கியிருந்தாள்.“மேடம் சார் உங்களை பார்கணுமாம்” என காரியதரிசி சொல்லிவிட்டு நகர மோகன் உள்ளே வந்தார்.

மோகன் நேரே வர்ஷா அருகில் உட்கார்ந்து அவளையே பாசத்துடன் பார்த்தார்.

“என்ன விஷயம்? நானே வந்திருப்பேனே” என வர்ஷா புருவங்கள் உயர

“நம்ம வீடு ரொம்ப வெறுமையா இருக்கிற மாதிரி இருக்கு வர்ஷா ..” என எங்கே வெறித்தபடி சொன்னார்.

அவரே சொல்லட்டும் என மௌனம் காத்தாள்.

“இந்த வீட்ல ஒரு கல்யாணம் நடந்தா நல்ல இருக்கும்னு தோனுது வர்ஷா”

“இல்ல எனக்கு கல்யாணம் வேண்டாம்” என சொல்ல எத்தனித்தாள் .. அதற்கு முன்

“ஐ ம் இன் லவ் வித் கல்பனா… அவளை கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன்” என்றார்

“அப்பா” அதிர்ந்துவிட்டாள் வர்ஷா தன்னை கட்டுப்படுத்த முடியாமல் தன் உணர்வை வெளிக்காட்டிவிட்டாள்.

“நீ ஷாக் ஆவேனு தெரியும் பட் … எனக்கு கல்பனாவை ரொம்ப பிடிச்சிருக்கு. அவ இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்ல. அவளும் என்னை காதலிக்கிறா” என இளம் வாலிபனைப் போல வசனம் பேசியபடி இருந்தார். அவர் கண்களில் மின்னலாய் வந்து போன காதலை வர்ஷா கவனிக்கத் தவறவில்லை.

தன் அப்பா இப்படியெல்லாம் பேசுவார் எனக் கனவிலும் எதிர்பார்க்கவில்லை வர்ஷா. காதலுக்குக் கண் இல்லை என்பது போல வயதும் இல்லை என எண்ணத்தான் தோன்றியது.

வர்ஷா “அப்போ அம்மா …??” என ஈனஸ்வரத்தில் கேள்வி எழுப்ப

“அம்மா இந்த கல்யாணத்துக்கு முழு சம்மதம் கொடுத்து கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கா பார்” என சில காகிதங்களைக் காண்பித்தார். திருமணத்தில் சட்டச் சிக்கல் எதுவும் எழாமல் இருக்க ஏற்பாடு செய்துவிட்டார்.

அதைப் பார்க்க விருப்பமில்லாமல் அமர்ந்திருந்தவளை “அம்மாவையும் உன்னையும் விட்டிட மாட்டேன் வர்ஷா” என்றார்.

அவர் வாழ்க்கை .. அவர் முடிவு இதில் தலையிட வர்ஷா விரும்பவில்லை. சொன்னாலும் கேட்கும் ரகம் இல்லை.

வலுகட்டாய வறண்டப் புன்னகையுடன் “ வெரி ஹேப்பி பார் யூ டேட்” என ஒற்றை வரியில் முடித்துவிட்டாள்.

பரவசமாக “ரியலி?” எனக் கேட்டு அவளை கட்டியணைத்து “தேங்க் யூ மை கேர்ள்” என உச்சி முகர்ந்தார்.

“நீ அப்பாவை தப்பா நினைப்பயோனு நினைச்சேன்”

“இல்லபா” என்றாள் . தனக்குள் “இனி நான் தப்பா நினைக்க என்ன இருக்கு?”

“கண்டிப்பா கல்பனா உனக்கு ஒரு நல்ல அம்மாவா இருப்பா” என்றார்

“வாய்ப்பே இல்ல” தனக்குள் மீண்டும் சொன்னவள் “சரியென” தலையசைத்தாள்.

“அடுத்த மாசம் இருபதாம் தேதி கல்யாணம். கல்பனாவும் அவ தம்பியும் ஒரு வாரம் முன்ன நம்ம ரெயின்போ பங்களாவுக்கு வந்திடுவாங்க. நீதான் எல்லா ஏற்பாட்டையும் செய்யணும்”

திருமண நாள் குறித்தபின் தான் தனக்குச் சொல்கிறார் என்பதே வலித்தது.

“நிச்சயமா டேட்” வெறும் வார்த்தைகள் வெளிவந்தன.

“உனக்கு அப்பா மேல கோபம் இல்லையே?”

“இல்ல பா”

“கல்பனாவை நீ இன்னைக்கு ஈவினிங் மீட் பண்ணப் போற .. உனக்கும் அவளை ரொம்ப பிடிக்கும்” என்றார்.

“ஷ்யூர் டேட்”

“என்னோட சொத்தில் பாதி உன் பேருக்கும் உன் அம்மா சுந்தரி பேருக்கும் மாத்தியிருக்கேன் வர்ஷா” என சில காகிதங்களை நீட்டினார்.

“இப்ப எதுக்கு இதெல்லாம்?”

“அப்படி இல்லமா எந்த நொடி எப்ப எது மாறும்னு சொல்ல முடியாது. என் கல்யாணத்துக்கு முன்னமே உனக்கு சேர வேண்டியதை கொடுத்தடனும் நாளைக்குப் பிரச்சனை வரக் கூடாது பாரு”

தன் குடும்ப நிலையை எண்ணி கண்ணோரம் துளிர்த்த நீரைத் துடைத்தபடி வர்ஷா அவற்றை வாங்கிக் கொண்டவள் ”தேங்க்ஸ் டாட்” எனச் சொல்லி அவரை அணைத்துக் கொண்டாள்.

“அப்பா”

“என்னடா உனக்கு என்ன வேணும் கேளு”

“எப்பவுமே உங்க பாசம் வேணும். உங்க இதயத்துல எனக்கு சின்னதா இடம் வேணும்”

“லவ் யூ பேபி” என்றார் நெகிழ்ச்சியுடன்.

அப்போது அவரின் போன் அலற … அதில் கல்பனா என்னும் பெயர் மிளிர “யுவர் மாம்” எனச் சொல்லியபடி போனை உயிர்ப்பித்து “எஸ் டார்லிங்” எனப் பேசியபடி சென்றுவிட்டார்.

“யுவர் மாம்” என்ற வார்த்தை மீண்டும் மீண்டும் அசரீரியாய் ஒலித்தது. தன் அம்மாவின் இடத்தில் இந்த கல்பனாவா என நினைக்கவே கசந்தது.

சாதாரண ஏழை இளைஞனாக இருக்கையில் மோகன் பெற்றோர் பார்த்து வைத்த பெண் கங்காவை திருமணம் முடித்தார். அப்போது அவருக்கு இருபது வயது. அவர்களுக்கு அஷ்வத் அஸ்வினி என ஒரு மகனும் மகளும் பிறந்தார்கள். ஆறு வருடங்களில் கங்கா நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார்.

பெரும் பணக்காரர் ஆன பின்னர் மோகன் சுந்தரி என்பவளைக் காதலித்து திருமணம் முடித்தார். இருவருக்கும் வர்ஷா பிறந்தாள். அழகாய் பல வருடங்கள் உருண்டோடின.

ஒரு வருடத்திற்கு முன்பு மோகனின் மனைவியும் வர்ஷாவின் தாயுமான சுந்தரி கேன்சர் நோயால் பாதிப்படைந்தார். தற்பொழுது மருத்துவமனையில் அவர் படுத்த படுக்கையாகி தீவிர சிகிச்சையில் உள்ளார்.

சுந்தரி மகப்பேறு மருத்துவர். சிறுவயதிலிருந்தே செல்வச் செழிப்பில் வளர்ந்தவர். தன் மகள் வர்ஷா ஆசைப்பட்டதை அடுத்தநொடி அவள் முன் கொண்டு வந்துவிடுவார். மோகனை மனதார காதலித்தார். சுந்தரியிடம் பணம் கொட்டி கிடந்ததால் மோகனின் பணம் கண்ணை உறுத்தவில்லை.

சுந்தரி வர்ஷாவின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பங்கை வகித்தவர். தந்தையின் பாசம் இருந்தாலும் தாயின் சொல் செயல் அரவணைப்பு அதிகம். தாய் மகளின் பிணைப்பு சொல்லில் அடங்காது. வர்ஷா வாழ்க்கையின் முக்கிய கட்டங்களில் தாயின் ஆலோசனை படி நடந்தாள்.

அப்படிப்பட்டவரின் இன்றைய நிலை வர்ஷாவிற்கு மிகப் பெரிய இழப்பு. அஷ்வத் மற்றும் அஸ்வினி என்றுமே வர்ஷாவுடன் சேர்ந்ததில்லை. எங்கேனும் பார்க்க நேர்ந்தால் அஸ்வினி செயற்கை புன்னகையை அளவோடு உதிர்ப்பாள். அஷ்வத் அதுவும் செய்யமாட்டான்.

சுந்தரியைத் திருமணம் முடித்தாலும் அஷ்வத் மற்றும் அஸ்வினியை மோகன் கவனிக்காமல் இருந்ததில்லை.

இருவருக்கும் நல்ல இடத்தில் திருமணம் நடத்தினார். அவர்கள் விரும்பிய வாழ்க்கையைக் கொடுத்தார். இருவருக்கும் பல கோடி சொத்துகளை எழுதி வைத்தார் .



ரிசப்ஷனில் வர்ஷா தலைவலியுடன் அமர்ந்திருந்தாள். காதை செவிடாக்கும் வகையில் பாட்டை போட்டு இளசுகள் ஆடிக் கொண்டிருந்தனர்.

மேடையில் மோகனுடன் சிரித்து சிரித்துப் பேசும் கல்பனாவைக் காணப் பற்றி எரிந்தது. ஆனால் அதை ரசித்துப் பார்ப்பதைப் போல முகத்தை வைத்தாள்.

கல்பனா பிரபல நடிகை. அவளின் சொக்கும் அழகும் மயக்கும் உடற்கட்டும் எந்த வயது ஆணாக இருந்தாலும் மயங்குவது திண்ணம்.

தற்பொழுது அவளுக்கு வயது முப்பது என்பதால் வாய்ப்புகள் குறைந்து கொண்டே போனது. கல்பனாவும் தன் ஆடையைக் குறைத்து மவுசை ஏற்ற முயன்றார். ஆனால் எதுவும் நடக்கவில்லை.

மோகனை ஒரு பார்ட்டியில் சந்தித்து அப்படியே நெருங்கி தன் வலையில் விழ வைத்துவிட்டாள். மனைவி அருகில் இல்லாத மோகனும் கல்பனாவை கண்டதும் மோகத்தில் வழுக்கி விழுந்துவிட்டார்.

வர்ஷாவுடனான முதல் சந்திப்பில் கல்பனா “பேபி ஐ லவ் யூ சோ மச் .. யூ லுக் சோ பியூட்டிபுள் ” எனப் பசப்பு வார்த்தைகளை ஊற்றாக கொட்டினாள். மோகனுக்குச் சொந்தமான நட்சத்திர விடுதியில் இருபெண்களின் முதல் சந்திப்பு நிகழ்ந்தது.

வர்ஷாவிற்கு “ஐயோ இந்த மென்டல்கிட்ட அப்பா சிக்கிட்டாரே” என்றுதான் தோன்றியது.

வர்ஷாவும் புன்னகையுடன் பதிலுக்குப் பேசினாள்.

கல்பனாவின் தம்பி ராகேஷ் அநியாயத்திற்கு வர்ஷாவிடம் வழிந்தான். ஆனால் வர்ஷாவின் பார்வை அவனைத் தள்ளியே நிறுத்தியது.

அவளுக்கு தங்களைப் பிடிக்கவில்லை என்பதை உணர்வது பெரிய காரியமாக இல்லை. அவற்றை வர்ஷாவின் சொல் செயல் அப்பட்டமாகக் காட்டியது.

ராகேஷ் “கல்யாணம் முடியட்டும்” என மனதில் கருவிக் கொண்டான்.

இப்பொழுதே தன் மோகத்தை வெளிக்காட்டி காரியத்தைக் கெடுக்க அவன் விரும்பவில்லை. அதோடு கோடிக் கணக்கான மோகனின் சொத்தும் தங்கள் வசம் வர வேண்டும் என்பதால் தன் விருப்பங்களை அணைப்போட்டு தடுத்தான்.

இவை அனைத்தையும் வர்ஷா புரிந்து கொண்டாள். ஆனால் மோகன் எதையும் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை.

மோகன் முத்த மழையில் நனையும் நாளுக்காகக் காத்திருந்தார்.



துளிகள் தெறிக்கும் …











 
  • Like
  • Love
Reactions: ADC and Vathani

ADC

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 5, 2024
13
13
3
Bangalore
Nice start sis 👍🏼 ponnu ku marriage panama ivare thirumbha thriumbha pannipar pole 😀😀 property kaga kalpana ivarai potu thalama irundha nalladhu 😁😁Varsha is smart, no sonnalum use illanu thelivaga irukanga. Parkalam Aduthu ena agumnu.
Good luck 🤝
 
  • Love
Reactions: kkp5

kkp5

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
55
70
18
Thanavur
Nice start sis 👍🏼 ponnu ku marriage panama ivare thirumbha thriumbha pannipar pole 😀😀 property kaga kalpana ivarai potu thalama irundha nalladhu 😁😁Varsha is smart, no sonnalum use illanu thelivaga irukanga. Parkalam Aduthu ena agumnu.
Good luck 🤝
Thank you so much ADC 🤩