• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தேன்-1

Meenakshi Rajendran

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 22, 2024
161
54
28
Tiruppur
அத்தியாயம்-1

இரவு நேரம் ஒன்பதை தாண்டி இருக்கும். போக்குவரத்து வெகுவாகக் குறைந்திருக்க, சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருக்கும் சூரிய மின் விளக்குகள் ஒளியைக் கொட்டிக் கொண்டிருக்க, பெரும் சத்தத்துடன் விரைந்து வந்து கொண்டிருந்தது அந்த இரு சக்கர வாகனம். வாகன ஒட்டியின் கருப்பு நிற தலைக் கவசமும், வாகனத்தின் நிறமும் விளக்கு ஒளி வெளிச்சத்தில் பளபளக்க, வாகன ஓட்டி அணிந்திருந்த கருப்பு நிற மேலாடையும் அதற்கு போட்டி போட்டது. கால்களில் மட்டும் கருப்பும், வெளிர் சிவப்பும் கலந்த காலணி. தீடிரென்று சிவப்பு நிற போக்குவரத்து சமிக்ஞை கண்ணிமைக்கும் நொடியில் மாற, உடனே வேகத்தடையைப் பயன்படுத்தி நிறுத்தியதில் பின் சக்கரம் தூக்க, வாகன ஓட்டியும் அதனுடன் எழும்பி அமர, பின்னால் வந்த காரும் சட்டென நின்றது.

அப்போது, அந்த இருசக்கர வாகனத்திற்கு இணையாக இரண்டு இருசக்கர வாகனங்கள் நின்றது. கையில் மதுபான பாட்டிலுடன் பின்னால் கல்லூரி மாணவர் போன்ற தோற்றத்துடன் இருவர் அமர்ந்திருந்தனர். மொத்தத்தில் நால்வரும் சோமபானம் தந்த போதையில், தனக்கு அருகில் நின்ற வாகன ஓட்டியைப் பார்த்தனர்.

“ப்பா.. என்ன ஷேப்பு? அப்படியே…”

“டேய் சும்மா இருடா.”

“என்னடா? எவனுக்கு கொடுத்து வச்சுருக்கோ. அந்த வண்டியா நான் இருந்திருக்கக் கூடாதா?”

உடனே நால்வரும் நகைச்சுவை போல் சிரித்தனர். உடனே முதலில் வந்த வாகன ஓட்டித் தலையைத் திருப்பி பின்னால் இருக்கும் மகிழுந்தை நோக்கி, கையை அசைத்தாள்.

“என்னடா பின்னாடி இருக்கற கார்காரனை அதுக்குள்ள செட் பண்ணிட்ட போல, ஹவருக்கு எவ்வளவு?” என இன்னொருவன் சீண்டினான்.

அதற்குள் பச்சை நிற போக்குவரத்து சமிக்கை வருவதற்கு அறிகுறியாக ஐம்பது நொடிகள் கடந்திருந்தது.

தலைக்கவசத்தின் கண்ணாடி முகத்தைப் திறக்க, கருமையாக, வில்லாய் வளைந்த புருவங்களுக்கு கீழே வெளிர் தேன் நிற விழிகள் ஏளனமாய் அவர்களைப் பார்த்தன.

“எனக்கு சீஃப் புராடக்ட்ஸ் பிடிக்காது.” எனக் கூறிவிட்டு கருப்பு நிற கையுறை அணிந்திருந்த வலது கையைத் தூக்கி பாம்பு விரலை மட்டும் நீட்டிக் காட்டி விட்டு, அடுத்த நொடி அந்த இயந்திரக் குதிரையை முடுக்கி விரைந்தாள் அந்தப் பெண்.

“டேய் சேஸ் பண்ணுடா. என்ன திமிரு அவளுக்கு? இன்னிக்கு அவளை விடறது இல்லை.” உடனே பின்னால் அந்த இரு சக்கர வாகனங்கள் முடுக்கப்பட்டது.

அவர்களைத் தொடர்ந்து அந்த மகிழுந்தும் செல்ல ஆரம்பித்தது.

மகிழுந்தைக் கட்டுப்படுத்தியவன் முகமோ கல்லாய் இறுகி இருந்தது. சதுர தாடை, கருப்புச் சட்டை, கால் சாராய், அதே நிறத்தில் காலணி. மாநிறத்தில் சதுர தாடையுடன், அந்த உணர்வுகளும் வெளிப்படாமல் இருந்தது.

அவன் அருகே, ஆலிவ் வண்ண நிறத்தில், சுடிதார் அணிந்திருந்த பெண் அமர்ந்திருந்தாள். ஒல்லியான தேகம், பால் நிறம், முதுகு வரை வளர்ந்திருந்த கூந்தல் என பார்த்தாலே குடும்பப் பெண் என்று கூறுமளவு இருந்தாள். ஆனால் அவள் முகமும் கலவரத்தில் சுருங்கி இருந்தது.
மூன்று இரு சக்கர வாகனங்களும் போட்டி போட்டுக் கொண்டு சென்று கொண்டிருந்தது. காரும் அவர்களைத் தொடர்ந்து வேகமாகச் சென்று கொண்டிருந்தது. பின்னால் இருசக்கர வாகனத்தில் துரத்தியவர்களின் வாயில் இருந்து தமிழில் பெண்ணைத் திட்டும் வகையில் உருவான கெட்ட வார்த்தைகளை பிரயோகம் செய்து கொண்டே அந்தப் பெண்ணைத் துரத்தினர்.

அவளோ அவர்களுக்கு ஈடு கொடுத்து, வாகனத்தை மின்னல் வேகத்தில் செலுத்திக் கொண்டிருந்தாள்.

தீடிரென ஒரு சந்தில் வாகனத்தைச் செலுத்த, இவர்களும் செலுத்தினர். அவள் நேராகச் சென்று தன் இருசக்கர வாகனத்தை நிறுத்தியது காவல் நிலையத்தின் முன், ஆனால் அதற்குள் அந்த நால்வரும் அருகே வந்திருக்க, காவல் நிலையத்தைப் பார்த்ததும் திரும்ப முயல, ஆனால் அவர்களை மறைத்தப்படி அந்தக் நான்கு சக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருக்க, நால்வரும் விழித்தனர்.

ஓட்டுநர் இருக்கையில் இருந்து அவன் இறங்கினான். ஆறடியைத் தொடும் உயரம், நிற்கும் போது இன்னும் கம்பீரமாகத் தெரிந்தான். அடுத்த நொடியே அவனுக்கு அருகில் இருந்த பெண்ணும் இறங்கி இரு சக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டு வந்திருந்த பெண்ணின் அருகில் ஓடிச் சென்றாள்.

“மேம் ஆர் யூ ஓகே?”
தலைக்கவசத்தைத் தலையில் இருந்து விடுவிக்க, அவளுடைய தோளைத் தாண்டித் தொடும், கூந்தலும் கருப்பு நிற மேலாடையின் மேற்புறத்தின் பகுதியில் அலையாய் புரள, முகத்தில் இருந்த முகமூடியை நீக்கினாள்.

அந்த தேன் விழிகளுக்கு பொருத்தமான அழகிய வசீகரமான முகம்.
நடந்த களேபரத்தில் வாயிலில் காவலுக்கு நிற்கும் காவலர்கள் அருகில் வந்துவிட்டனர். அந்த நால்வரும் தப்பிக்க முயல, அதற்கு காரில் இருந்து இறங்கியவன் விடவே இல்லை.

“ஹேமவள்ளி ஆடியோ ஃபைலை ஹேண்ட் ஓவர் பண்ணிட்டு ராகவன் கூட வந்துருங்க.”

“ஓகே மேம்.”
மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறிவிட்டாள் மித்ரவிந்தா சாமூண்டிஸ்வரி தேவி. சாமூண்டி குரூப்ஸின் பெண் வாரிசு. இப்போது அதன் மொத்த நிர்வாகத்தையும் கட்டி ஆண்டு கொண்டிருக்கிறாள்.
ஹேமவள்ளி அவளுடைய செயலாளர். ராகவன் பாதுகாவலன்.

அதற்குள் நால்வரையும் காவலர்கள் அழைத்துச் செல்ல, காரை ராகவன் தள்ளி நிறுத்த, மித்ரவிந்தா தன் இரு சக்கர வாகனத்தில் மீண்டும் நெடுஞ்சாலை போக்குவரத்தில் விரைந்தாள். அவளுடைய ஒவ்வொரு அசைவும் புகைப்படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

அதே நேரம், அவளுடைய புகைப்படங்கள் எல்லாம் சென்னையில் ஒரு வீட்டில் கணணி வழியே அச்சு இயந்திரத்தின் மூலம் பிரதி எடுக்கப்பட்டு சுவற்றில் சிவப்பு நிற ஹூடி அணிந்தவனால் வெல்வெட் துணியில் குத்தப்பட்டது. அந்த அறையில் இருந்த குறைந்தபட்ச வெளிச்சம் அவன் முகத்தைக் காட்டவில்லை.

“மித்ரவிந்தா சீக்கிரமே உன்னோட சாம்ராஜ்யம் சரியும். காத்துட்டு இரு. விஷம் மாதிரி நான் நீ சுவாசிக்கற காத்தில் கலந்து இருப்பேன்.” என முகம் கோணலாக புன்னகைத்தான்.

தன்னை அழிக்க ஒருவன் காத்திருக்கிறான் என்பது தெரியாமல் இரு சக்கர வாகனத்தை தான் இருக்கும் மாளிகையை நோக்கிச் செலுத்திக் கொண்டிருந்தாள்.

தலைக்கவசத்தின் கண்ணாடி முகப்பைத் திறந்து விட காற்று அவள் முகத்தில் மோதியது. தேன் நிற வழிகளில் காற்றினால் உருவான கண்ணீரைப் பொருட்படுத்தாமல் நேராக தன் வீட்டிற்குச் சென்றாள்.

1000243140.jpg

அவள் சென்ற சிறிது நேரத்திலே ராகவனும், ஹேமவள்ளியும் காவல் நிலையத்தில் அனைத்தையும் முடித்து விட்டு தாங்கள் வந்த மகிழுந்தை நோக்கி நடக்க ஆரம்பிக்க, ஹேமவள்ளி தன் உடையின் துப்பட்டா, தரையை முத்தமிடுவதை அறியாமல் காலை அதன் மேல் வைத்துத் தட்டிவிட, அவள் தரையை முத்தமிடாமல் அவள் தோளையும், கையையும் பிடித்து தடுத்து நிறுத்தி இருந்தான் ராகவன்.

“தேங்க்ஸ்.” என அசடு வழிய அவனுக்கு நன்றி கூற அவன் முகத்தில் எந்த உணர்வுமே இல்லை.

‘எந்த நேரம் பார்த்தாலும் முகத்தை அயன் பண்ண மாதிரி வச்சுருக்கற இவன். எப்ப என்ன பண்ணுவாங்களேனு தெரியாத அவங்க. இவங்க இரண்டு பேருக்கும் நடுவில் நானு. எப்படி வந்து சிக்கி இருக்கேன் பார்த்தியா முருகா?’ என புலம்பியவள் வேகமாக மகிழுந்தை நோக்கி விரைந்தாள்.
ராகவன் கிளம்ப ஆயத்தமாக ஒலி எழுப்ப, உடனே ஏறி அமர்ந்தாள்.

‘இவனும் பேச மாட்டான். கேட்டாலும் ஒரு வார்த்தையில் பதில் சொல்வான். நாளைக்கு வேற என்ன டிசைனில் பிரச்சினை வருமோ? முருகா கொஞ்சம் பார்த்து பத்திரமாக செய்யவும். மீ பாவம். உன் பக்தையை நீதான் காப்பாத்துனும். யார்கிட்டேயும் புலம்பக் கூட முடியலை.’ என்றவள் வெளியில் வேடிக்கைப் பார்த்தபடி ராகவனுடன் மித்ராவின் மாளிகைக்குப் பயணம் செய்தனர்.

***

ஐந்து நட்சத்திர சொகுசு விடுதி. இரவு உடையில் நின்று கொண்டிருந்தான் அவன். ஆறடி உயரம், காவல் துறை பயிற்சியில் நிறம் மங்கிப் போயிருந்தாலும், அவனுடைய காவல் துறையினருக்கான பிரத்தியேக சிகை வடிவமைப்பும், மீசையும் கம்பீரத்தைக் கூட்டியது. அவன் விழிகளில் சோகமும், போதையும் சிவப்பை ஊட்டி இருக்க, கைகளில் இருந்த மோதிரத்தை தடவிப் பார்த்தான். அவனுக்குப் பிடிக்காமல் அவன் விரலில் அமர்ந்திருந்தது. அதை அவன் நினைத்தாலும் கழற்ற முடியாது.
அப்போது அவனை விட குறைவான போதையில் அவன் தோளைப் பின்னிருந்த அணைத்தன அந்த தளிர்க்கரங்கள்.
அவள் கைகளில் இருந்த குளிர்ச்சி, அவன் மார்புக்கு இதமாக இருந்தது. விழிகளை மூடி தன் துக்கத்தை விழுங்க முயன்றான்.


1000243146.jpg


“நோ தியா.”

“பிளிஸ் ஷிவ். எனக்காக. இனி உன்னை நான் எப்போ பார்ப்பேனு தெரியாது.”

“வேண்டாம். எனக்கு இப்ப கல்யாணம் ஆகிடுச்சு.”

“கல்யாணம் ஆனாலும் உன் மனசில் இருக்கறது நான்தானே. உன்னோட காதலிக்காக இதைக் கூட செய்ய மாட்டியா? நாலு வருஷ லவ். நான் பிரேக் அப் செஞ்சுருக்கக் கூடாது. அவள் விழிகளில் நீர் இறங்கி அவன் தோளைச் சுட்டது.”

அவள் கண்ணீர் சிந்துவதை எப்போதும் பொறுக்க மாட்டான் ஷிவ்.

“ப்ச்.. அழாத தியா பேபி.”

“நீ எனக்கு வேணும் ஷிவ். கடைசி ஒரு தடவை. என்னோட பழைய காதலானா. இந்த ஒரு தடவை மட்டும். ஐ லவ் யூ. ஐ ஆல்வேஸ் லவ் யூ.”

“மீ டூ தியா.” அவள் கரங்கள் அவன் மேனியில் அத்து மீற, இவனும் போதையில் கிறங்க ஆரம்பித்திருந்தான். அந்த இரவு பிரிக்கப்பட்ட காதலர்களின் இறுதி சங்கமாக இருக்க, நிதர்சனம் எல்லாம் மறக்கப்பட்டு விட்டது.

ஒருவரை ஒருவர் வெறித்தனமாகத் தேட ஆரம்பித்த தேடல் தொடர்ந்து கொண்டே இருந்தது. அவர்கள் விழிகளும் அவ்வப்போது கண்ணீரைச் சிந்திக் கொண்டே இருந்தது.

‘ஐ டிண்ட் லவ் மை வைஃப். ஐ ஹேட் ஹெர்.’
ஐந்து வருடங்களுக்கு முன்னால் பதிவு செய்யப்பட்டிருந்த நாள்காட்டிப் பதிவைப் படித்துக் கொண்டிருந்த மனைவியின் விழிகளில் இருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது.

"இத்தனை வருஷம் அவர் என் கூட போலியாக வாழ்ந்துட்டுத்தான் இருக்காறா?”
கையில் எலும்பு முறிவுக்குப் போடப்பட்டிருந்த கட்டைப் பார்த்தாள்.

‘கெட் வெல் சூன் வைஃபி’ என அவன் கணவன் எழுதிய வாசகம் அவளைப் பார்த்துச் சிரித்தது. அவளுக்குக் கை உடைந்ததே தன் கணவனைக் காப்பாற்ற சென்றதால் தானே.

அவளுடைய குடும்ப வாழ்க்கையும், காதலும் ஒரு நொடியில் இல்லை ஒரு வார்த்தையில் சூன்யமாகி விட்டதைப் போல் உணர்ந்தாள் மயூரா.

அந்த பேரழகியின் விழிகளில் நீர் வழிய மார்பில் எதையோ வைத்து அழுத்துவது போல் கனம் கூடியது.

காலை அவனுடைய கணவன் ஒரு கோப்பைத் தேடிக் கொண்டிருக்க, ஐந்து வருடங்களுக்கு முற்பட்ட நாள்குறிப்பேடு வெளிய வந்திருந்தது. பொதுவாக கணவனின் அலுவல் சார்பாக எந்தக் கோப்பையும் அவள் தொடுவது இல்லை. ஆனால் கை உடைந்து பின் வீட்டில் சும்மா இருக்க முடியவில்லை. அந்த குறிப்பேடு குறு குறுப்பை ஏற்படுத்த எடுத்துப் படித்தவளின் குடும்ப வாழ்க்கையே ஆட்டம் கண்டிருந்தது.

அதை மூடி வைத்திருந்தவள், விழிகளில் வழியும் நீருடனே மீண்டும் கனத்த இதயத்துடன் அதைப் படிக்க ஆரம்பித்தாள்.


***
அடுத்த நாள் காலை. மித்ரவிந்தா அலைபேசி ஒலிக்க உடனே எடுத்தாள். அதில் கேட்ட செய்தி அவளுக்கு உவப்பானதாக இல்லை.