• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தேன்-4

Meenakshi Rajendran

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 22, 2024
161
54
28
Tiruppur
அத்தியாயம்-4

மாலைச் சூரியன் மெல்ல மேற்கு வானில் கீழே இறங்க ஆரம்பித்து இருக்க, மாலை நேரத்தில் தன் மனையாளை நல்ல நேரம், கெட்ட நேரம் பார்க்காமல் கரம் பிடித்திருந்தான் தனுர் விஜய பாண்டியன்.

அவனுடைய மனையாளின் மான் விழிகளில் மை உறைந்திருக்க, விஜயனைப் பார்த்து எந்தப் பயமும் இன்றி அவன் விரல்களைப் பிடித்தப்படி அக்னியை சுற்றி வலம் வந்து கொண்டிருந்தாள்.

ஜஸ்ராவின் மீது அவனுக்கு எந்த விருப்பமும் இல்லை. அவளுக்கும் அப்படியே என்று தெரியும். பல திருமணங்கள் முதலில் பிடித்து நடந்தாலும் பிறகு பிடித்தம் குன்றி கடமைக்கே வாழும் சமூகத்தில் வாழ்பவன் தானே அவனும். பிடிக்காமல் கட்டாயத்தின்படி நடக்கும் திருமணங்கள். தன் காதலை வழித்துணைக்கே என சேர்க்கும் சிலர். காதல் திருமணம் எனப் பல வகை உண்டு. இருவர் சேர்ந்து இழுத்தால் தான் திருமணம். ஒருவர் இழுத்தால் சுமை மட்டுமே.
ஜஸ்ராவுக்கும் இதில் விருப்பமும் இல்லை.

தன் விருப்பம் கேட்காமல் அவசர கோலத்தில் கடமைக்கும், நன்றிக்கும் நடந்த திருமணம். விஜயனிடம் இருந்து அவளுக்கு விடுதலை இல்லை என்றும் தெரியும். அவன் கை பிடித்து தெரிந்தே ஆயுள் கைதியாகி இருந்தாள் ஜஸ்ரா.

இயல்பாக திருமணம் நடக்கும் போது பெண்களுக்கு எழும் எந்த பயமும், நடுக்கமும் அவளுக்கு இல்லை. விஜயனுக்கே அவள் செய்கை ஆச்சரியம்தான். ஜஸ்ராவின் புதியப் பக்கத்தை அன்று பார்க்கிறான்.

இருவரும் மும்முறை அக்னி வலம் வந்து ஐம்பூதங்கள் சாட்சியாக திருமணத்தை முடித்திருந்த போது அந்தக் கோயிலில் மின்னல் வேகத்தில் வந்து நின்றது அந்தக் காவல் வாகனம்.

சிவசேகரன் ஐ.பி.எஸ் ஓட்டுநர் இருக்கையில் இருந்து இறங்கி தன் கண்ணெதிரில் இருக்கும் காட்சியை உள்வாங்கியபடி வந்து கொண்டிருந்தான்.

கரிய நிற கேசம் அலை அலையாய் காற்றிலும், அவன் நடக்கும் வேகத்திலும் அசைய, அவனுடைய பழுப்பு நிற பூட்ஸ் ஒலி எழுப்பியது.

அவனுடைய கம்பீரமான முகத்தில் கோபம் குடியேறி இருந்தது. தன்னிடம் கூட சொல்லாமல் தன் ஒரே தங்கையின் திருமணத்தை நடத்தினால் யாருக்கு சினம் எழாமல் இருக்கும்?

“என்ன மச்சான் இது? எதுக்கு இந்த அவசரக் கல்யாணம்? என் தங்கச்சி கல்யாணத்தை எங்கிட்ட கூட சொல்லாமல் இப்படி கடைசி நேரத்தில் யாரோ மாதிரி வரதுக்கா? அவளுக்கு எப்படிக் கல்யாணம்..”

பொறுமையாக சிவசேகரைப் பார்த்த விஜயன், “காரணமில்லால் இல்லை. காரணமே நீங்கதான். மயூராவுக்கு எல்லாம் தெரிஞ்சிருச்சு. என்னோட தங்கச்சி டைவர்ஸ் கேட்டாலும் நீங்க கொடுக்கக் கூடாது.
அதுக்காக உங்க தங்கச்சி எப்போதும் எங்கிட்டதான் இருப்பாள்.” என்றான்.

மயூராவுக்கு உண்மை தெரிந்து விட்டது எனக் கேட்டதும் சிவசேகரனுக்குச் சகலமும் அதிர்ந்தது.

“மயூ..”

“மச்சான் என் தங்கச்சி ரொம்ப அதிகமாக அன்பு வச்சது உங்க மேலதான். உங்க விருப்பம் இல்லாமல்தான் உங்களுக்கு அவளைக் கல்யாணம் செஞ்சு வச்சேன். இது ஒன்னும் புதுசு இல்லை. கிடைச்ச வாழ்க்கையை ஏத்துகிட்டு வாழ்ந்திட்டுப் போகனும். முதலில் மறக்க முடியலானும் காலப்போக்கில் நீங்க மாறிட்டீங்கனு நினைச்சேன். ஆனால் இன்னும் அந்தப் பொண்ணு கூட பழக்கம் இருக்குனு எனக்குத் தெரியலை. எந்தங்கச்சிக்கு உங்க மேல பைத்தியம். உசுர விட்ருவா. அதுக்கு மேல் என் மருகம இருக்காள். என் கண் முன்னாடியே என்னோட தங்கச்சி குடும்பம் உடையறதை நான் பார்க்க மாட்டேன். ஜஸ்ரா இனி என் பொண்டாட்டி. இனிமேல் நம்ம குடும்பம் எப்போதும் உடையாது. இன்னும் உங்க மேல் எனக்கு மதிப்பு இருக்கு. அதனால்தான் இவ்வளவு நேரம் விளக்கம் கொடுக்கிறேன். மயூவை சமாதானம் செய்யுங்க.” என விளக்கமும் கொடுத்தான் விஜயன்.

தன் சகோதரனின் கையை அழுத்திப் பிடித்தாள் ஜஸ்ரா. சிவசேகரனின் விழிகள் கலங்கியது.

“அண்ணா உன்னை நான் நம்புறேன். நீ உன்னோட காதலை எனக்காகத் தியாகம் செஞ்சதும் எனக்குத் தெரியும். உன்னை இப்படி ஒரு நிலையில் நிறுத்தனதுக்குச் சாரிண்ணா. நான் இல்லாமல் இருந்தால் நீ சந்தோஷமாக இருந்திருப்பனு எனக்குத் தோணுது.” அவள் அந்த வார்த்தையைக் கூறியதும் இராமசந்திரனும், சிவ சேகரனும், விஜயனும் ஒரே குரலில் ‘மஹா’ என கண்டிக்கும் குரலில் கத்தி இருந்தனர்.

விஜயன் அவள் அருகில் நெருங்கிக் கையைப் பிடித்திருந்தான்.

“ஜஸ்ரா அப்ப உன்னோட சூழ்நிலையை நான் பயன்படுத்திகிட்டேன். நான் நினைச்சப்படி நடக்கலைனாலும் உனக்காக நான் செஞ்சுருப்பேன். நான் எவ்வளவு மோசமானவானா இருக்கலாம். ஒரு அப்பாவி சின்னப் பெண் உயிரோட நான் விளையாடி இருக்கமாட்டேன். உன்னோட அண்ணாவுக்கு உன் தங்கச்சி. எனக்கு என் தங்கச்சி முக்கியம். அப்ப நாம ஃபேம்லியாகனும் நான் செஞ்சேன். இப்ப நம்ம ஃபேம்லிக்காக செய்யறேன்.”

ஜஸ்ரா தன் மான் விழிகளை படக்கென்று விரித்து அவனைப் பார்த்தாள். அவள் விழிகள் கூறும் செய்தியை அந்த அரசியல்வாதியால் படிக்க இயலவில்லை.

“மொழி மாமா எல்லாரும் என் கூட இருக்கட்டும். மயூவை நீங்க பாருங்க. எல்லா சரியாகும் போது கிராண்டா வெட்டிங்க் வச்சுக்கலாம்.” என்றான் விஜயன்.

பெரும்பாலும் அவர்கள் இருவர் குடும்பத்திலும் விஜயனின் சொல்லே வேதம். சிவசேகரன் கூட எளிதில் மறுத்துப் பேச மாட்டான். இராமசந்திரன் எப்போதும் விஜயன் சொல்லையும், மயூராவின் சொல்லையும் கேட்பார்.
மயூராவும் அப்படியே நடந்து கொள்வாள். எங்கும் யாரையும் யாரும் கட்டாயப்படுத்துவதில்லை. பெரும்பாலும் சூமுகமான உறவே நீடிக்கும்.

“பாப்பா நீ அப்படி எல்லாம் எதுவும் நினைக்க வேண்டாம். மயூராவை நான் பார்த்துக்கிறேன். நீ சந்தோஷமாக இருந்தால் போதும் எனக்கு.”

“நான் ஹேப்பிதான் அண்ணா. விஜய் மாமா கண்டிப்பா நல்லாப் பார்த்துப்பார். அந்த நம்பிக்கையில்தான் இந்தக் கல்யாணத்தைச் செஞ்சுகிட்டேன். நீ எந்தப் தப்பும் செய்யலைனு நான் நம்புறேன். அண்ணிகிட்ட போ அண்ணா. இவங்க எல்லாரும் உன்னைத் தப்பா நினைச்சாலும் நான் நினைக்கல. நீ அண்ணியைத் தவிர வேற யாருக்கும் எக்ஸ்பிளனேசன் கொடுக்க வேண்டியதில்லை.”

உறுதியுடன் ஜஸ்ரா கூறியதும் தன் தங்கையை அணைத்துக் கொண்டான்.
“தேங்க்ஸ் பாப்பா.”

அவனின் செய்கையில் விஜய பாண்டியனுக்கே தான் நினைத்தது தவறோ என்று ஒரு நொடி தோன்றியது. இருந்தாலும் தன் தங்கை வாழ்வு அவனுக்கு மிகவும் முக்கியம்.
தன் சகோதரனைத் தட்டிக் கொடுத்தவள் விடுவித்தாள்.
ஒரு வழியாக ஒவ்வொருவரும் வாகனத்தில் ஏறிப் பயணிக்க, ஜஸ்ராவும், விஜயனும் ஒரே வாகனத்தில் இருக்க வேண்டிய கட்டாயம்.

சந்திரனும், மொழியும் இன்னொரு வாகனத்தில் பின்னால் வந்தனர்.
விழிகளை மூடி மகிழுந்தின் இருக்கையில் சாய்ந்தாள் ஜஸ்ரா.

“உங்க அண்ணா மேல அவ்ளோ நம்பிக்கையா?”

“ம்ம்ம்.. உங்க மேல இருக்க அதே நம்பிக்கைதான்.” விழிகளை மூடியபடி பதில் வந்து விழுந்தது.

“உனக்கு ரொம்ப தைரியம் ஜஸ்ரா.”

தன் இரு கால்களையும் புடவையுடன் தூக்கி மகிழுந்தின் எதிர் இருக்கையின் மீது சாய்த்து வைத்தாள். மதியம் ஓடிய போது ஓரிடத்தில் லேசாக இடறி விட்டிருக்க, காலில் வலி இப்போதுதான் தெரிந்தது.

“பின்ன இருக்காதா. அப்பா டீச்சர். அண்ணா போலீஸ். ஹஸ்பண்ட் பிஸ்னஸ் மேன் கம் அரசியல்வாதி.” என்றாள்.

அவள் காலைத் தூக்கி தன் மடியில் வைக்கவும் சட்டென்று விழிகளைத் திறந்தாள் ஜஸ்ரா.

“இன்னிக்கு காம்படிசனில் கல் தடுக்கி ஸ்லிப் ஆனதானே. வலி இருக்கா?”
மகிழுந்தின் முன்னிருக்கை அருகே இருக்கும் பெட்டியில் இருந்து வலி நிவாரணியை எடுத்தான். லேசாக அவள் புடவையை மேலே கணுக்காலைத் தாண்டி உயர்த்த ஜஸ்ரா புடவையை மீண்டும் மூடினாள்.

“நத்திங்க் ஐ டிண்ட் சீ ஐஸ்ரா.”

“இப்படி எல்லாம் நடந்துகிட்டால் நீங்க நல்ல ஹஸ்பண்டுனு அர்த்தமா?”

“கண்டிப்பா.”

“ஆனால் எனக்கு நல்ல பொண்டாட்டியாக நடந்துக்க விருப்பமில்லை.”

“சரி கெட்ட பொண்டாட்டியாக நடந்துக்கோ.” என்றவன் வம்படியாக அவள் காலில் வலி நிவாரணியை ஸ்பிரே செய்துவிட்டு கதவின் கண்ணாடியை அதன் நெடி போக திறந்து விட்டான்.
அவன் செயலில் முகத்தைச் சுருக்கிய ஜஸ்ரா முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“உனக்குப் பிடிச்சாலும், பிடிக்கலைனாலும் இனிமேல் என் கூடதான் வாழ்க்கை. இதை எவ்வளவு சீக்கிரம் அக்சப்ட் செய்யறியோ அவ்வளவு நல்லது. மத்தப்படி நீ வீட்டில் இருந்த மாதிரி எப்பவும் போல இருக்கலாம்.”

முன்னால் இருக்கும் ஓட்டுநருக்குத் தெரியாமல் இருவரும் மெல்லிய குரலில் பேசிக் கொண்டு வந்தனர். அவளுடைய கனவுகள் அனைத்தையும் உடைத்து அந்தத் திருமணம் நடந்திருந்தது. மனதிற்கு ஒவ்வாமல் சூழ்நிலையால் அந்தத் திருமண பந்தத்தில் நுழைந்திருக்கிறாள்.

“இந்த கல்யாணத்தை வேணா நீ நினைச்ச மாதிரி நடத்தி இருக்கலாம் விஜய். ஆனால் வாழ்க்கை அப்படியே போகாது.” என பதிலுக்கு உரைத்தவள் மேலும் பேச விருப்பமின்றி விழிகளை மூடிக் கொண்டாள்.
***

அலுவலகத்தில் அமர்ந்து ஒரு முக்கிய கோப்பினைப் படித்துக் கொண்டிருந்தாள் மித்ரவிந்தா. ஒரு துளி தூசியின்றி பளிச்சென்று நவீன கீரிம் நிறமும், சாக்லேட் நிறமும் கலந்த உள்கட்டமைப்பில் கருப்பு நிற எர்கோணமிக் நாற்காலியில் அலுவல் உடை வகையான ஆலிவ் நிற சூட்டில் கையில் பேனாவை சுழற்றியபடி கால் மேல் கால் போட்டு கம்பீரமாக அமர்ந்திருந்தாள்.

அறைக்கதவைத் தட்ட அவள் செவ்விதழைத் திறந்து அனுமதி கிடைத்ததும் உள்ளே நுழைந்தான் ராகவன். கருப்பு நிற சூட்டில் அவனும் வழக்கம் போல் இருந்தான்.

“மேம் இது நீங்க சைன் போட வேண்டிய ஃபைல்.” என அவளிடம் நீட்ட வாங்கிக் கொண்டாள் மித்ரா.

“சூர்யா மில் விஷயம் என்னாச்சு?”

“இன்னும் கொஞ்சம் இன்வஸ்டிகேட் செய்யனும். அப்புறம் மிஸ்டர். பாரதியைப் பத்தி விசாரிச்சேன். நியாயமான ஆள். அத்தோட லா காலேஜ் டாப்பர். கார்ப்பிரேட் லாதான் அவர் ஸ்பெஷாலிட்டி. அப்பா, அம்மா இப்படி ஃபேம்லி யாரும் இல்லை. இதுவரைக்கும் எல்லாம் கிளீன்.”

“ஓகே. நமக்கும் கார்ப்பரேட் லாயர் இப்ப தேவைப்படறாங்க. நம்ம ஹெச். ஆர்கிட்ட சொல்லி ஹெட் ஹண்டிங்க் ஆரம்பிக்க சொல்லுங்க. பெஸ்டா இருந்தால் மிஸ்டர்.பாரதி நம்ம பிர்மில் இருக்கனும்.”

மித்ராவின் குடும்பம் கால் பதிக்காத தொழில்களை விரல் விட்டு எண்ணி விடலாம். பெரும்பாலான தொழில்களில் அவர்களின் அழுத்தமான காலடித்தடம் உண்டு. இப்போது அந்த சாம்பராஜ்ஜியத்தைக் கட்டி ஆளும் ராட்சசியும், ராணியும் அவள்தான்.

“கார்மெண்ட்சில் ஒருத்தன் ஹராஸ் செஞ்சதால் கம்பிளைண்ட் வந்துச்சே?”

“அவன் மேல்தான் தப்பு. இன்னும் ஒன்னு இரண்டு பொண்ணுங்களையும் ஹராஸ் செஞ்சுருக்கான் அவன். பிசிக்கலா இல்லை வெர்பலா.”

“இரண்டும் ஒன்னுதான். அவனை டிஸ்மிஸ் செஞ்சுட்டு போலிஸ்ல கம்பிளைண்ட் பண்ண சொல்லிடுங்க. அந்தப் பொண்ணுங்களுக்கு சேலரி ரைஸ் பண்ண சொல்லுங்க.” என காலை நேரத்திலேயே ஒருவனை வேலையை விட்டுத் தூக்க உத்திரவிட்டிருந்தாள்.

“ஷெட்யூலைக் கொஞ்சம் படிங்க.”
ராகவன் வாசிக்க இடையில் ஒரு சந்திப்பு இருந்தது. அதைக் கேட்டதும் விரல்களைத் தலையால் தடவிக் கொண்டாள்.

“நான் கேன்சல் பண்ணிடட்டுமா?”

“கேன்சல் பண்ணா மட்டும் என்ன செய்ய முடியும்? போகலைனா பிராபளம் ஆகும்.”


அப்படி யாரை மித்ரா சந்திக்கச் செல்கிறாள்?