• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நட பிரம்மம் - நடை 5

kkp6

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
33
34
18
Tamil nadu
நடை - 5

பத்து நாட்களுக்கு முன் நகரத்தை பற்றிய தென்றலின் வார்த்தைகள் வாங்மயியின் மனதில் எதிரொலித்தன!

நகரங்களின் மௌன கண்ணீர், ஒளியற்ற சிரிப்பு, இவை அனைத்தும் வாங்மயியை அச்சுருத்தின.

ஆனால், சென்னையின் மருத்துவமனைகளில் வேலை செய்ய வேண்டும் என்ற உறுதி, ஒரு விண்மீனின் ஒளியாக, அவளை இழுத்தது! ஒரு கனவின் அழைப்பாக அவளை ஈர்த்தது!

ரயில் நிலையத்தில் நின்று இருந்தாள்.
காற்றில் துளசி மணமும், தூசியும் கலந்து இருப்பதாக அவளுக்கு தோன்றியது.
தூசி மட்டும், அவள் மனதைப் போலவே மென்மையாக ஆடின.

வாங்மயி, ஒரு சிறிய பையுடன், சென்னை எக்ஸ்பிரஸ்ஸின் வரவை எதிர்பார்த்து, பயணிகளின் கூட்டத்தில் நின்றாள்.
ஒரு பயணியின் உறுதியுடன். கனவின் உதவியுடன்.

அவள் கண்கள், தொலைவில் மறையும் சூரியனைப் பார்த்தன—வானம், கருநீலத்தில் மூழ்கி, அவளது பயணத்திற்கு ஒரு மௌன ஆசி வழங்கியது! ஒரு தாயின் மடியென, அவளை வழியனுப்பியது.

ரயில் நிலையமோ பரபரப்பாக இருந்தது.
கடலின் அலைகளைப் போல மனித தலைகளை அவளை சுற்றி வந்தன.
குழந்தைகளிீன் அழுகை, வியாபாரிகளின் கூச்சல், தொலைவில் ஒலிக்கும் ரயிலின் சத்தம், எங்கோ கேட்கும் ஒரு பாடல் என அனைத்தும் ஒரு குழப்பமான கனவைப் போல் அவளை சுழற்றி அடித்தன.

அந்த குழப்பதில் அவளின் மனம், வாழ்முடியின் அமைதியான முற்றத்தை நினைவு செய்தது.

அங்கு இலைகளின் மணம் காற்றில் மிதந்து, தென்றலின் கவிதைகளோடு் மௌனத்தை உடைத்தன. ஆனால், இப்போது, அவள் ஒரு புதிய பயணத்தின் தொடக்கத்தில் நின்றாள்.
அவள் இதயம் ஒரு தீபமாக எரிந்தது, சென்னையின் மனிதர்களுக்கு தன்னால் ஆன முதவியை செய்ய வேண்டிய நோக்கத்துடன்.

***********
"பாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆம்" என ஒலி எழுப்பியபடி, அவள் எதிர்பார்த்து இருந்த அந்த ரயில் நிலையத்திற்குள் பிரவேசித்தது.

அதே ரயிலில், அமுதன் ஒரு முதல் வகுப்பு பெட்டியில் அமர்ந்திருந்தான்.
முகத்தில் எரிச்சல் ஒரு கோர தாண்டவம் ஆடிக்கொண்டு இருந்தது, ஒரு புயலின் முன்னறிவிப்பாக.

ரயில் பயணம் அவனுக்கு அந்நியமானது. எப்படி சாதாரனமாய் இருக்கும்? அவன் தான் எங்கு சென்றாலும் காட்டெருமையையோ, அதற்கும் பெரிய எருமைகளையோ விரட்டி செல்பவன் ஆயிற்றே!

ஆனால், இன்றோ, ஏதோ ஒரு கனவில் தவறி விழுந்தவனைப் போல, இந்த ரயில் பயணம் அவனது கௌரவத்தை காயப்படுத்தியது.

படாடோமனான அவனது உலகம் தனி விமானங்களும், ஆடம்பர காட்டெருமைகளையும் கொண்டதாகும். அவை அவனது ஆணவத்தின் அரண்கள். அவனை சாதாரண உலகத்திலிருந்து பிரித்த க்ராதகன்கள்.

ஆனால், அவனது தனி ஜெட் விமானம் அவசர பராமரிப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்தது. ஒரு எதிர்பாராத விதமாக. ஒரு முக்கியமான வணிக ஒப்பந்தத்திற்காக அவசரமாக பயணிக்க வேண்டியிருந்தது, ஆனால் வணிக விமானங்களில் இடமில்லை.

இந்த ரயில், அவனது ஒரே வழி!
ஒரு கசப்பான தண்டனையாக,அவனை பொதுமக்களின் கூட்டத்தில் தள்ளியது. கூட்டமும், சத்தமும், புழுதியும் அவனை ஆத்திரமூட்டின!

தில்லை நடராஜரின் காலின் அடியில் இருக்கும் அபஸ்மார்கத்தை போல், எதை கிடைத்தாலும் நசுக்கி விடும் எரிக்சலுடன், ஒரு கூண்டில் அடைக்கப்பட்ட மிருகத்தைப் போல் இருந்தான்.
மனம் தீப்பிழம்பாய் கொந்தளித்துக்கொண்டு இருந்தது.

அவன் மனம், வாழ்முடியில் அவமானப்படுத்திய அந்த பெண்ணை, நினைத்து இன்னும் கொதித்தது, ஒரு நெருப்பு அவனை உள்ளிருந்து எரித்தது,அவனது ஆணவத்தை கொழுந்து விட்டு எரியச் செய்தது.

அமுதனின் கண்கள், முதல் வகுப்பு பெட்டியின் சன்னல் வழியே, பயணிகளின் கூட்டத்தை இழிவாகப் பார்த்தன. அவனது உடைகள்,விலையுயர்ந்த சட்டை, பளபளக்கும் கைக்கடிகாரம்,அவனை மற்றவர்களிடமிருந்து பிரித்தன.

ஆனால் அவனது மனம் ஒரு காயத்தை மறைத்தது. வாழ்முடியில், அந்த பெண்ணின் பயமற்ற, கூர்மையான பார்வை அவனது அகம்பாவத்தைை அடக்கி ஆண்டது.

அவனது செல்வத்தை ஒரு தூசியாக்கியது.
அவன் அவளை மறக்க முயன்றான், ஆனால் அவளது வார்த்தைகள், அவனை ஒரு கத்தியென குத்தின! ஒரு மறையாத காயத்தை ஏற்படுத்தின.

ரயில் மெதுவாக நகர்ந்தது.

இரும்பு சக்கரங்களின் தாளம் பயணிகளின் முணுமுணுப்புடன் கலந்து, ஒரு பழைய பாடலின் மெட்டாக உருவெடுத்தது.

******

வாங்மயி இரண்டாம் வகுப்பு பெட்டியில் தன் இருக்கையை அடைந்தாள்.
ஒரு சிறிய பையை மேலே வைத்து விட்டு, ஜன்னல் ஓரத்தில் அமர்ந்தாள். அஙே அந்த நொடி ஒரு கனவு தொடங்கியது.

காற்று அவள் முகத்தில் மெல்ல மோதி, வேம்பு மணத்தை சுமந்து வந்தது.

வாழ்முடியின் மண்ணை நினைவூட்டியது.
அவள் மனம், தென்றலின் கவிதைகளை நினைத்தது. அவள் வலியை வார்த்தைகளாக்கினாள்.

ஆனால், இப்போது, இங்கே இவள் ஒரு புதிய பயணத்தில் !


********

அவள் எதிரே, ஒரு முதியவர்.தன் பதினைந்து வயது மகனுடன் அமர்ந்திருந்தார்.

அவர்களின் கதையின் நாயகர்களைப் போல.
அவர்களது பெரிய பை, இடத்தை அடைத்து, பயணிகளுக்கு இடையூறாக இருந்தது. அதொன்றும் பெரிய குற்றம் இல்லயே!

முதியவரின் முகத்தில், வாழ்க்கையின் கனம் தெரிந்தது. ஒவ்வொரு சுருக்கமும் ஒரு கதையைச் சுமந்தது. அவர் மகனின் கண்கள், பயணத்தின் களைப்பில் மங்கி, ஒரு மௌன கேள்வியை மறைத்தன- எதிர்காலத்தின் நிச்சயமின்மையை கண்கள் பிரதிபலித்தன. வாங்மயி அவர்களைப் பார்த்து புன்னகைத்தாள், ஆனால் அவர்கள் மௌனமாக இருந்தனர், வாழ்க்கையின் கனத்தால் அமிழ்ந்து.

அமுதன், தன் பெட்டியில் அமைதியாக உட்கார முடியாமல், எழுந்து நடந்தான், ஒரு சிறைப்பட்டவனைப் போல, அவனது ஆணவம் அவனை அலைக்கழித்து. தண்ணீர் வாங்குவதற்காக வாங்மயியின் பெட்டியைக் கடந்தபோது, முதியவரின் பையைப் பார்த்து, அவன் முகம் சுளித்தது. அது ஒரு கோபத்தின் முன்னறிவிப்பு. அவனது எரிச்சல், வாழ்முடியில் அவளிடம் தோல்வியடைந்த நினைவுகளுடன் கலந்து, ஒரு நெருப்பாக மாறியது, அவனை ஒரு எரிமலியாக ஆட்கொண்டது.

“இந்த பையை இங்கேயே வைச்சு எல்லாரையும் தொந்தரவு செய்யுறீங்க. மொதல்ல எடுங்க இங்கேந்து” என்றான். அவன் குரல் கூர்மையாக, இழிவாக ஒலித்தது. அதில் இழைந்த ஒரு வாளின் குத்தல் தொனி, பெட்டியை அதிரவைத்து.

“இதுக்கு பின்னாடி ஒரு பெட்டி இருக்கு, தெரியுமா?”

முதியவர் தயங்கினார், அவரது கைகள் நடுங்கின, வாழ்க்கையின் கனத்தால் சோர்ந்தவை. ஒரு இலையை போல நடுங்கின.

“மன்னிச்சுக்க, தம்பி… இடமில்லை, அதான்…” என்று மெதுவாகச் சொன்னார், அவர் குரல் களைப்பில் தழுதழுத்தது, ஒரு மறைந்த கண்ணீரின் எதிரொலி, அவமானத்தின் வலி எல்லாம் ஒரு சேர தெரிந்தது.

“இடமில்லைன்னு அடுத்தவன் நடக்கற இடத்துல வெச்சிட்டா ஆச்சா? ந்யூசன்ஸ்!"அமுதன் கத்தினான்.

பையை காலால் உதைத்தான். அவனது ஆணவம் ஒரு புயலாக உருவெடுத்தது.

“இதை எடுங்க இங்கேந்து, இல்லைனா நானே தூக்கி எறிஞ்சுடுவேன்!” அவன் கண்கள் கோபத்தில் சிவந்தன. நகரத்தின் செல்வம் அவனை ஆட்டுவித்தது. கோபத்தில் ஒரு மிருகத்தின் சாயல் தெரிந்தது.

முதியவரின் மகன் பயந்து, தந்தையின் கையை இறுக்கப் பிடித்தான், அவன் கண்கள் ஒரு மிரளும் மானைப் போல, கண்ணீரை உகுத்தது.

பெட்டியில் இருந்த பயணிகள் மௌனமாகப் பார்த்தனர்.சிலர் தலைகுனிந்தனர்.
ஒரு இளைஞன், பக்கத்தில், தயங்கி எழ முயன்றான், ஆனால் அவனது தோழி அவனைத் தடுத்தாள்.

“டேய். கம்முன்னு உக்காரு.உனக்கு எதுக்கு தேவை இல்லாத வம்பு. தேவை இல்லாம பிரச்சனை ஆகும்,” என்று முணுமுணுத்தாள். பெட்டியில் ஒரு மௌன பயம் பரவியது, ஒரு கனமான மேகமாக!

ஆனால், வாங்மயி எழுந்து நின்றாள், அவள் கண்கள் நெருப்பென பற்றி எரிந்தன, மனிதத்தின் கோபம் ஒரு அலையாக உயர்ந்தது, ஒரு கடலின் ஆவேசம்.

“நீங்க யாரு இப்படி நடந்துக்க?” . கேள்வி வந்தது, உறுதியாக. எப்போதும் இருக்கும் மென்மை இல்லாமல் ஆத்திரத்துடன் ஒலித்தது.

ஒரு மின்னலின் கூர்மை, பெட்டியை அதிரவைத்து. “இவர் வயசானவரு. இடமில்லைன்னு சொல்றாரு. உங்களுக்கு புரியலயா? நீங்க எல்லாம் என்ன தான் படிச்சீங்களோ.. ! ”

அமுதன் திரும்பி அவளைப் பார்த்தான்.

குரல் வந்த திசையில் தெரிந்த அந்த முகம்!
வாழ்முடியில் தன் அகங்காரத்தையும் ஆணவத்தை சுரண்டி பார்த்த அதே முகம்!
தென்றலென நினைத்தது எவ்வளவு தவறு என மனம் இப்போது கூறியது.

அவனது ஆணவம், அவமானத்தால் தூண்டப்பட்டு, எரிமலையாக வெடித்தது! ஒரு தீயின் கர்ஜனையோடு.

“நீ இதுல தலையிடுறியா? இவர் பையை வைச்சு என் இடத்தை அடைச்சுட்டார்! நீ யாரு இவருக்கு வக்காலத்து வாங்க?” அவன் குரல் பெட்டியை அதிரவைத்தது. அவனது கர்ஜனை,பயணிகளை மிரட்டியது

வாங்மயி ஒரு அடி முன்னேறினாள்.

அவளது பார்வை அவனை ஒரு வாளாக குத்தியது! ஒரு உண்மையின் கூர்மை அதில் தெரிந்தது.

“நா யாரா வேணும்னாலும் இருக்கலாம். ஆனா, மனுஷங்கள மதிக்கத் தெரிஞ்சவ. ஒரு வயசானவர எப்படி நடத்தணும்னு தெரிஞ்சவ. உங்க வீரத்த போய் அவர்கிட்ட காட்டறீங்க? இதுல உங்களுக்கு பெருமை வேற!
உங்க பணமும், ஆணவமும் இங்க ஒரு தூசிக்கு சமம்!” என்றாள்.
அவளின் வார்த்தைகள், காற்றில் மின்னலாக பாய்ந்தன, ஒவ்வொரு சொல்லும் ஒரு அடியாக, அமுதனின் ஆணவத்தை உடைக்க முயன்றது.

அமுதனின் முகம் சிவந்து, அவன் மனதில் வாழ்முடியின் அவமானம் மீண்டும் எழுந்தது.
அவளின் பொருட்படுத்தாத பார்வை, அவளின் வார்த்தைகள், ஒரு காயத்தை மீண்டும் திறந்து சுரண்டி விட்டது போல் எரிந்தது.

இப்போது, இந்த பெட்டியில், அவள் மீண்டும் அவனை சவால் செய்தாள், அவனை ஒரு சாதாரண மனிதனாக்கினாள்.

“ஏய்...நீ யாரு எனக்கு பாடம் சொல்ல? ஒரு பட்டிக்காட்டான்.. எனக்கு அட்வைஸ் பண்றியா? இந்த கிழவனுக்கு வக்காலத்து வாங்கறியா? இவர் தப்பு செய்யலையா? இந்த பையை இங்க வைச்சு எல்லாரையும் தொந்தரவு செய்யலயா!”
அவன் கர்ஜித்தான்!

கைகள் நடுங்கின!!

அவனது ஆணவம் ஒரு கட்டுக்கடங்காத தீயாக அவனையே எரித்தது!!!!

வாங்மயி பின்வாங்கவில்லை. அவள் நின்ற இடத்தில் ஒரு மரமாக உறுதியாக இருந்தாள்.

“இடமா? உங்களுக்கு இடம் மட்டும் தான் முக்கியமா?” -அவள் குரல் ஒரு புயலாக உயர்ந்து, பெட்டியை அதிரவைத்தது!

புயலில் சக்தியோடு, கடலில் ஆவேசமும் கூட்டு சேர்ந்தது.

“இந்த பெரியவருக்கு இங்க இடமே இல்லை. ஆனா உங்களுக்கு இந்த பெட்டியே பத்தாது! உங்க ஆணவம் உங்களை மூழ்கடிக்குது, ஆனா மனசு ஒரு அங்குலம் கூட மத்தவங்களுக்கு இடம் இல்லை! இவரை இப்படி அவமானப்படுத்துற உங்களுக்கு அறிவு இருக்கா?” - அவள் பொரிந்து தள்ளினாள்.

பயணிகள் மௌனமாகப் பார்த்தனர், சிலர் முணுமுணுத்தனர். ஒரு மென்மையான கிசுகிசுப்பு எழுந்தது

ஒரு பெண், பின்னால், தன் குழந்தையை இறுக்கப் பிடித்து, “சரியா சொல்றா,” என்று மெதுவாகச் சொன்னாள்!

முதியவர், தலைகுனிந்து, “வேண்டாம்ம்மா, விடு,” என்று மெதுவாகச் சொன்னார்.

அவரது மகன் கண்ணீரை அடக்கினான், கைகள் இறுகின. உடைந்த ஒரு இதயம் மௌனமாக
கதறியது.

ஆனால் வாங்மயி நிற்கவில்லை. அவள் மனம் வாழ்முடியில் கற்றவைகளை மறக்கவில்லை. “இவர் மன்னிப்பு கேட்குறார், ஆனா தப்பு இவரு செய்யலை. நீங்க தான் இந்த இடத்தை கெடுக்குறீங்க! உங்களுக்கு மனிதர்களை மதிக்கத் தெரியலைன்னா, உங்க செல்வமும் ஒரு குப்பை தான். நியாபகம் வெச்சுக்கோங்க!”

கல்லென விழுந்த அவளின் வார்த்தைகள், அமுதனின் ஆணவத்தை உடைக்க முயன்றன!

அமுதனின் கோபம் எல்லை மீறியது!
அவனின் முகம் ஒரு எரிமலையாக வெடித்தது.

“நீ உன் எல்லையை மீறிட்டே!” அவன் கத்தினான், முகம் கோபத்தில் துடித்தது!

“ஒரு கிராமத்து பொண்ணுக்கு இவ்வளவு திமிரா! இந்த விஷயத்தை இங்க விடமாட்டேன் ! ஞாபகம் வெச்சிக்கோ..நீ என்னை அவமானப்படுத்தினது எனக்கு மறக்காது! இதுக்காக நீ வறுத்தப்படுவ!” என சூளுரைத்தான்.
அவனது ஆணவம், வாழ்முடியில் தொடங்கிய வெறுப்பு, இப்போது ஒரு தீயாக எரிந்தது!

அவனை அது முழுவதுமாக ஆட்கொண்டு இருந்தது.

வாங்மயி அவனை நேராகப் பார்த்தாள், அவள் கண்கள் ஒரு கடலின் அமைதியுடன், ஆனால் உள்ளே ஒரு புயலுடன்!

“நீங்க எதை வேணா செய்யுங்க. ஆனா, சக மனுஷன மதிக்க மொதல்ல கத்துக்குங்க. மனுஷ்னகளுக்கு முதியவருக்கு மரியாதை கொடுக்க முடியாதவங்க, எந்த நகரத்துக்குப் போனாலும் மனுஷனாக முடியாது!” என்றாள்.

பின் முதியவரைப் பார்த்து, “கவலைப்படாதீங்க, பையை நான் பார்த்துக்குறேன்,” என்று மென்மையாகச் சொன்னாள், அவள் குரல் ஒரு தாயின் ஆறுதல் தொனித்தது.

முதியவர், தலையை உயர்த்தி, அவளைப் பார்த்தார், அவர் கண்களில் ஒரு மென்மையான நன்றி மின்னியது!

அவரின் மகன், கண்ணீரைத் துடைத்து, அவளுக்கு ஒரு புன்னகை அளித்தான்.
அது ஒரு நம்பிக்கையின் தொடக்கமாக .

பயணிகள், மெதுவாக முணுமுணுத்தனர், “இவள் தைரியமா பேசிட்டா,” “இவனுக்கு ஒரு பாடம் கிடைச்சது,” என்று.
ஆனால் குரல்கள் கம்மியாகவே இருந்தன, பயத்தின் நிழலில்.

******

ரயில் சென்னை நிலையத்தில் நின்றது!

ஒரு நீண்ட பயணத்தின் முடிவாக. கூட்டம் பரபரப்பாக இறங்கியது.
ஒரு அலையென, ஒவ்வொருவரும் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.

அமுதன், தன் பையை எடுத்து, கோபத்தில் மூழ்கி, முதல் வகுப்பு பெட்டியிலிருந்து இறங்கினான். அவனது் கண்கள் வாங்மயியைத் தேடின.ஆனால் அவள் காணவில்லை. அவன் நடையில் ஒரு கனம் இருந்தது, அவனது ஆணவம் ஒரு காயத்தை மறைத்தது! ஒரு மறையாத வெறுப்பு.

வாங்மயி, தன் பையை எடுத்து, முதியவருக்கு ஒரு புன்னகையுடன் விடை கொடுத்து, இறங்கினாள். அவள் முதியவரின் பையை மேலே உள்ள இடத்தில் சரி செய்து, அவர்களுக்கு இடம் ஏற்படுத்திக் கொடுத்திருந்தாள்.

அவளது கால்கள், சென்னையின் மண்ணைத் தொட்டபோது, அவள் மனம் ஒரு புதிய தொடக்கத்தை உணர்ந்தது.
ஒரு நதி புதிய பயணத்தைத் தொடங்குவது போல.

அந்த வாக்குவாதம், அவள் மனதில் ஒரு காற்றாக உதிர்ந்து, மறந்து போனது.

சென்னையில் அவள் செய்ய வேண்டிய பணி, மனிதர்களுக்கு உதவ வேண்டிய நோக்கம், அவளை முன்னோக்கி இழுத்தது.

புதிய ஒரு விண்மீனின் பயணமாக, ஒரு ஒளியின் தேடலாக அவளின் கால்கள் முன்னேறின.

*****

ஆனால், அதற்கு மாறாக அமுதனின் இதயத்தில், அவள் மேல் வெறுப்பு ஒரு கனமான கல்லாக தங்கியது. ஒரு முடிவில்லாத சாபம் போல் கருவியது.

அவள் பார்வை, அவள் வார்த்தைகள், அவனை இரண்டாவது முறையாக அவமானப்படுத்திய தருணம்,எல்லாம் அவனை விடவில்லை, ஒரு நிழலாக அவனைப் பின்தொடர்ந்து.

நகரத்தின் ஒளிரும் வீதிகளில் அவன் பயணித்தான்.
அவன் கார் அவனை எதிர்பார்த்து நின்றது. ஆனால் அவன் மனம் அந்த ரயில் பெட்டியில், அவள் நிழலில், வெறுப்பின் தீயில் எரிந்து கொண்டிருந்தது. அவன் ஆணவம், அவமானத்தால் தூண்டப்பட்டு, அவளை மறக்க மறுத்தது, ஒரு பழிவாங்கும் எண்ணமாக உருவெடுத்து. காரில் ஏறும் எண்ணமும் இல்லாமல், போபத்தில் கால் போன போக்கில் நடத்தான்.
******
வாங்மயி, நகரத்தின் விளக்குகளுக்குள் மறைந்தாள்.

அவள் கால்கள் ஒரு புதிய பாதையைத் தேடின.

ஒரு கனவின் தொடக்கம். அவள் இதயம்,ஒளியால் நிரம்பி, அந்த மோதலை ஒரு தூசியாக உதறி, முன்னேறியது- புதிய ஒரு பயணியின் உறுதியுடன்.

சென்னையின் காற்று, அவளை ஒரு புதிய உலகத்திற்கு அழைத்தது.

ஆனால் அவள் மனமோ அவ்வப்போது வாழ்முடியின் துளசி மணத்தை, தென்றலின் கவிதைகளை அசை போட்டது.

அவள் பயணம், ஒரு ஒளியின் தேடல், இந்த சிங்காரச் சென்னையில் தொடங்கியது.

தொடரும்


நட பிரம்மம் (1).png