• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நதி -14

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
928
412
93
Tirupur
நதி - 14

மேலும் ஒரு வாரம் சென்றிருக்க, அன்று ஒரு ஞாயிறு. கார்த்தியின் வீட்டில் அனைவரும் ஹாலில் அமர்ந்திருக்க, புவனும் ருத்ரனும் அடக்க முடியாத ஆத்திரத்தில் இருந்தனர்.

கார்த்தி அப்போதுதான் எழுந்து வந்தவன், அனைவரையும் நோட்டமிட்டபடியே சிவநேசனின் அருகில் அமர, பார்கவி காப்பியை கொண்டுவந்து நீட்டினாள்.

அவள் முகத்திலும் ஒரு தெளிவில்லை.

எல்லோர் முகமும் கோபமாகத்தான் இருந்தது, அதிலும் பார்வதியின் முகத்தில் வேதனையும் சேர்ந்திருக்க, அது அவரை சோர்வாகவும் காட்டியது.

“என்ன தாத்தா.?” என்ற கேள்வியை அவரிடம் கேட்டாலும், பார்வை மற்றவரிடம்தான் இருந்தது. சுற்றி அனைவரையும் ஒரு பார்வை பார்த்தான்.

“ஒன்னுமே தெரியாத மாதிரி நடிக்காதாடா? நைட் நீ எங்க போன? மதியை எங்க இருந்து கூப்பிட்டு வந்த?” என ருத்ரன் கோபமாய் கேட்க,

அவனுக்கு பதில் சொல்லாமல், பார்கவியை பார்த்த கார்த்தி “அவ எழுந்துட்டாளா இல்லையா அண்ணி? கூப்பிட்டு வாங்க” என்றான் மிகவும் சாதாரணமாக.

“கார்த்தி எங்க பொறுமையை ரொம்பவே சோதிக்கிற, என்ன நடந்தது, மார்னிங்க் இன்ஸ்பெக்டர் கால் பண்ணி மதியை ஸ்டேஷன் கூப்பிட்டு வர சொல்றார். ஏன் எதுக்குன்னு கேட்டா, உனக்கு தெரியும்னு சொல்றார். என்னதாண்டா நடந்துச்சு?” என புவனும் கத்த,

“இப்போ ஏன் இவ்ளோ வயலன்ட் ஆகிட்டு இருக்க, அவளே வருவா கேளு” என்றவனின் குரலிலும் இப்போது கோபம் ஏற ஆரம்பித்தது.

பார்கவி மேலே செல்லும் முன்பாகவே பைரவியுடன் கீழே வந்தாள் பூமதி. அவள் முகத்தில் தெரிந்த பயமும், உடலில் தெரிந்த நடுக்கமுமே ஏதோ பெரிய தவறை செய்துவிட்டாள் என்று எல்லோருக்கும் புரிய வைத்தது.

மகேஸ்வரனின் பார்வை மனைவியைத்தான் துளைத்துக் கொண்டிருந்தது. அந்த பார்வையில் அம்பிகா நடுங்கிப் போனார்.

இந்த வீட்டின் ஒற்றை பெண் வாரிசு. இத்தனை பேர் வீட்டில் இருக்க, இவள் எங்கே போகிறாள், வருகிறாள்? யாருடன் பேசுகிறாள் பழகுகிறாள் என்றுகூட கவனிக்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என யோசித்து கொண்டிருந்தார்.

சரியாக அதேநேரம் வீட்டுக்குள் வந்த மாதேஷ், யாரையும் கண்டுகொள்ளாமல், சற்றும் யோசிக்காமல் பூமதியை இழுத்து கன்னம் கன்னமாக அரைந்து தள்ளிவிட்டான்.

நொடியில் நிகழ்ந்துவிட்ட நிகழ்வில் அனைவரும் அதிர்ச்சி நிலைக்கு சென்றுவிட்டனர். யாருக்கும் தடுக்கக்கூட நேரமிருக்கவில்லை. கார்த்திக்கு இதில் அதிர்ச்சியெல்லாம் இல்லை. மாதேஷ் அடிக்கட்டும் என்றுதான் அமைதியாகவே இருந்தான்.

மதியின் கதறலில்தான் அனைவரும் நிதானத்திற்கே வந்தனர். புவன் வேகமாக வந்து மாதேஷை இழுக்க, பைரவியும் பார்கவியும் பூமதியை பிடித்துக்கொண்டனர்.

“விடு விடுடா என்னை, என்ன காரியம் பண்ணிட்டு வந்துருக்கா தெரியுமா? இவளுக்கு செல்லம் கொடுத்து கொடுத்து எந்தளவுக்கு கெடுத்து வச்சிருக்கீங்க எல்லாரும். ஆரம்பத்துலயே கார்த்தி சொன்னான், அவ மேல ஒரு கண் வைங்கன்னு. யாரும் கேட்கல, இப்போ..” என்றவன் மீண்டும் திமிறிக்கொண்டு அடிக்க போக,

“போதும் நிறுத்துங்க.” என்றார் அந்த வீட்டின் பெரியவர் சிவநேசன். “இன்னும் இந்த வீட்டுல நான்தான் பெரிய மனுசன், அதை யாரும் மறந்துடாதீங்க.” என்றார் காட்டமாக.

அதில் அனைவரும் அமைதியாக பவானியும், அம்பிகாவும் கலங்கிப்போய் நின்றிருந்தனர்.

“கார்த்தி என்ன நடந்தது?” என சிவநேசன் கர்ஜனையாக கேட்க,

“ம்ம் உங்க செல்ல பேத்தி நேத்து காலேஜ் போறேன்னு சொல்லி ஹாஸ்பிடல் போயிருக்கா?” என்றவன், ‘ஏன்’ என்பது போல் எல்லோரும் பார்க்க, அவர்களை எல்லோரையும் ஒருமுறை பார்த்துவிட்டு “அபார்ட் பண்ண..” என முடிக்க,

“என்ன சொல்ற கார்த்தி?” என்ற எல்லோரின் கேள்வியும் கார்த்தியை நோக்கியே இருக்க, கேட்ட அந்த செய்தி உண்டாக்கிய அதிர்ச்சியில் அப்படியே மயங்கி விழுந்திருந்தார் பார்வதி.

“பாட்டி..” என பார்கவி அவரிடம் ஓட, அனைவரின் கவனமும் இப்போது பார்வதியிடம் வர, அங்கிருந்த யாரையும் பார்க்க முடியாமல் தன் அறைக்குள் ஓடினாள் பூமதி.

அப்போதுதான் மாதேஷின் மனைவி சாம்பவி பதட்டமாக உள்ளே வந்து கொண்டிருந்தாள். அவளின் பதட்டத்தைப் பார்த்தால், அவளுக்கும் விசயம் முன்னமே தெரிந்திருக்க வேண்டும் என்று அனைவருக்கும் புரிந்தது.

மற்றவர்களின் பார்வை பார்வதியின் மேலிருக்க, சாம்பவியின் பார்வையோ பூமதி வேகமாக மாடியேறுவதில் இருந்தது. சாம்பவியும் பூமதியின் பின்னே ஓடினாள்.

சாம்பவி பயந்தது போலவே அறைக்குள் நுழைந்த மதி, ஏற்கனவே வாங்கி வைத்திருந்த விசத்தை எடுத்து குடிக்க வாயருகே கொண்டு செல்ல, அதற்குள் சாம்பவி அதை தட்டி விட்டிருந்தாள்.

“என்ன காரியம் பண்ணிட்டு இருக்க.?” என மதியை பிடித்து உழுக்கியவள், “ஏற்கனவே இருக்குற பிரச்சினை பத்தாதா? புதுசா இன்னும் என்ன செய்ய போற, நீ செத்துட்டா எல்லாம் சரியா போகுமா? போன மானம் மரியாதை எல்லாம் திரும்ப வந்துடுமா? இன்னைக்கு வீட்டுக்குள்ள போன மானம், நாளைக்கு ஊரே சிரிக்கிற மாதிரி போகும். நீ நிம்மதியா செத்து போயிடுவ, ஆனா வீட்டுல இருக்குற நாங்க இதை பார்த்து பார்த்து, கேட்டு கேட்டு கொஞ்சம் கொஞ்சமா சாகனுமா? கொஞ்சமும் யோசிக்குற தன்மை இல்லையா உனக்கு. நீ செத்துட்டா வீட்டுல எல்லாரும் நிம்மதியா சந்தோசமா இருப்பாங்களா?” என காட்டமாக கத்தினாள்.

அதற்குள் புவனும், ருத்ரனும் பூமதியின் அறைக்குள் வந்திருந்தனர். சாம்பவி கூறாமலே அங்கு என்ன நடந்திருக்கும் என புரிய, அவளை அடிக்க முடியாமல் பல்லைக் கடித்தும், சுவற்றை காலால் உதைத்தும், சோபாவில் குத்தியும் தங்கள் கோபத்தை தீர்த்துக் கொண்டனர்.

இதில் அங்குள்ள யாருக்குமே மதி தெரியாமல் தப்பு செய்திருப்பாள் என்று யோசிக்க முடியவில்லை.

ஏனென்றால் அப்படி அவளுக்குத் தெரியாமல் நடந்திருந்தால் இதை கார்த்தியே யாருக்கும் தெரியாமல் முடித்திருப்பான். மதியையும் இந்த பிரச்சினையில் இருந்து வெளியில் கொண்டு வந்திருப்பான்.

கார்த்தியே இதை வீட்டில் சொல்கிறான் என்றால், மதி ஏதோ பெரிதாக செய்திருகிறாள் என்று எல்லோருக்கும் புரிந்தது.

அடுத்து என்ன செய்ய வேண்டுமென்றாலும் கார்த்தி வாயைத் திறக்க வேண்டும். என்ன நடந்தது என அவன் முழுதாக சொல்லாமல் யாரும் எதுவும் செய்ய முடியாது.

பூமதியிடம் கேட்கலாம். ஆனால் அவளிடம் பேசக்கூட யாருக்கும் பிடிக்கவில்லை.

இருவரும் தலையைப் பிடித்து அமர்ந்திருக்க, பவானியும் அம்பிகாவும் மகளைத் தேடி வந்தனர். அவள் இருந்த கோலத்தைப் பார்த்து மனம் துடித்தாலும், கோபம் அதை கவனிக்கவிடவில்லை.

இருவரின் நோக்கத்தை புரிந்த புவன், “நீங்க ரெண்டு பேரும் அமைதியா இருந்தாலே போதும். உங்களுக்கு எல்லாம் கோபமே வரக்கூடாது. வந்தாலும் ரெண்டு பேரும் உங்களுக்குள்ளாகவே காட்டிக்கோங்க. அவக்கிட்ட இல்ல. இன்னைக்கு இவ இப்படி வந்து நிக்க நீங்கதான் காரணம்..” என பெற்றவர்கள் என்றும் பார்க்காமல் கோபமாக பேச, மற்ற இருவருக்கும் எதுவும் பேசவே முடியவில்லை.

டாக்டர் வந்து பார்வதியை பார்த்து அதிர்ச்சியில் வந்த மயக்கம்தான் எனக்கூறி, “கொஞ்ச நேரம் அப்படியே விடுங்க, அவங்களே எழுந்துப்பாங்க. அதுவரை யாரும் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்..” என்றுவிட்டு செல்ல, உடைந்து போனார் சிவநேசன்.

வீட்டின் குலக்கொழுந்து பூமதி. அவள் இன்னும் சிறுபிள்ளை, வளரவே இல்லையென்று நினைத்திருக்க, எவ்வளவு பெரிய காரியத்தை செய்திருக்கிறாள். நினைக்க நினைக்க அந்த பெரியவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

தனக்கே இப்படியென்றால் தன் மகன்களின் நிலை. எப்படி தாங்கியிருப்பார்கள்? வேகமாக திரும்பி இருமகன்களையும் பார்த்தார்.

அவர்களின் முகத்தில் தெரிந்த கோபத்தில், சற்றே ஆசுவாசம் வந்தது. உடைந்து போகவில்லை தன் பிள்ளைகள் என்ற ஆசுவாசம்தான் அது.

பெருமூச்சுவிட்டவர் பேரனைப் பார்த்து கண்ணசைக்க, அதுவரை தன் தாத்தாவையே பார்த்திருந்த கார்த்தியும் வேகமாக அவரிடம் வர, “என்ன நினைக்கிற நீ.?” என்றார் வேறெதுவும் கேட்காமல்.

‘என்ன நடந்தது’ என எதுவும் கேட்காமல் ‘அடுத்து என்ன செய்யலாம்’ என்ற கேள்வியிலேயே மற்றவர்களுக்கும் புரிந்தது, பெரியவர் ஒரு முடிவெடுத்து விட்டாரென்று.

“அப்பா கொஞ்சம் பொறுங்க.. நீங்க என்ன செஞ்சாலும் சரிதான். ஆனா என்ன நடந்ததுன்னு எங்களுக்கு தெரியனும்..” என்றார் மகேசன்.

“நமக்கு தெரிய வேண்டாம்னுதானே பசங்க நினைக்கிறாங்க. தெரிஞ்ச வருத்தப்படுவ மகேசா..” என்றார் பெரியவர்.

“இருக்கட்டும்ப்பா.. இப்படியொரு பெண்ணை பெத்ததுக்கு இதைகூட அனுபவிக்கலன்னா எப்படி? என்றார் ஜெகதீசனும்.

“நேத்து நான் மதுரை போயிட்டு ரிட்டர்ன் வரும்போது ஆண்டிபட்டிக்கு முன்னாடி இருக்குற ஒரு ஹாஸ்பிடல்ல இவளும் ஒரு பையனும் டூவீலர்ல நின்னுட்டு இருந்தாங்க, இவ ரொம்ப பதட்டமா நின்னுட்டு இருந்தா, அது எனக்கு தப்பா பட்டுச்சு, இறங்கி விசாரிக்கலாம்னு யோசிக்கும்போதே உள்ள போயிட்டாங்க, நானும் அவங்களை ஃபாலோவ் பண்ணேன்.” என நிறுத்த,

“அப்போ அந்த பொறுக்கிதான் காரணமா?” என கேட்டுக்கொண்டே புவன் வர,

“இல்ல புவன், அவன் பேர் வைபவ். அவன் மதிக்கு ஹெல்ப் பண்ணதான் அங்க அழைச்சிட்டு போயிருக்கான்.” என மாதேஷ் சொல்ல,

“என்னடா சொல்ற? அப்போ இதுக்கு யார் காரணம்?” என இப்போது ருத்ரன் கேட்க,

“அவன் லண்டன் போய் ஒரு மாசம் ஆகிடுச்சு..” என்றான் கார்த்தி கோபமாக.

“இப்போ என்ன பன்றது, அவன் ஆள் யார் என்னனு தெரியுமா?” என மகேஷன் பதட்டமாக கேட்க,

“தெரிஞ்சு என்ன செய்ய போறீங்க, அந்த பொறுக்கிக்கு இவளை கல்யாணம் செஞ்சி அனுப்ப போறீங்களா, அதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன். கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணோட வாழ்க்கையை நாசம் செஞ்சவன் எப்படி நல்லவனா இருப்பான். அவனை நான் பார்த்துக்குறேன். இவளுக்கு நீங்க வேற மாப்பிள்ளை பாருங்க..” என கார்த்தி ஆத்திரமாக பேச,

“டேய் அப்போ அவ வயித்துல இருக்குற குழந்தை” என ஜெகதீசன் அதிர்ச்சியாக கேட்க,

“அதைத்தான் கொஞ்சமும் யோசிக்காம அழிச்சிட்டாளே..” என மாதேஷ் கசப்பாக கூற, கேட்டுக்கொண்டிருந்த அத்தனை பேரும் வேகமாக புவனை தான் பார்த்தனர்.

ஒரு குழந்தைக்காக புவனும் பார்கவியும் எத்தனை கஷ்டப்படுகிறார்கள், இவள் ஒரு உயிரை துச்சமாக நினைத்து அழித்துவிட்டு வந்திருக்கிறாளே என கோபம் கொப்பளித்தது. இருந்தாலும் வேறு என்னதான் செய்திட முடியும் என நினைத்தவர்கள் அமைதியாகிவிட,

புவனின் அருகில் வந்த கார்த்தி “அண்ணா அதெல்லாம் நீ யோசிக்காத, இவக்கிட்ட அந்த குழந்தை வளர வேண்டாம்னு கடவுள் முடிவெடுத்திட்டார் போல, அதனாலத்தான் எடுத்துக்கிட்டார். இப்படிப்பட்ட பாவிக்கிட்ட அந்த ஜீவன் இல்லாமல் போனதே நல்லது..” என கூறவும், புவனும் ஆமென மெல்ல தலையசைத்துக் கொண்டான்.

“அந்த பொறுக்கி பேர் நிர்மல். இவளுக்கு சீனியர். மூனு மாசமாதான் பழக்கம். அடிக்கடி காலேஜ் கட்டடிச்சு வெளிய போயிருக்காங்க. லாஸ்டா மேகமலை வரை போயிருக்காங்க. வைபவ் அவனைப்பத்தி மதிக்கிட்ட சொல்லிருக்கான். ஆனா நம்ம மேடம்தான் அதையெல்லாம் கேட்கவே இல்லையாம். கடைசில அவன் கம்பிய நீட்டிட்டு போயிட்டான். அதுக்கு பிறகுதான் இவளுக்கு மூளையில உறைச்சிருக்கு.” என கோபமாக பேசியவன்,

“அந்த பொறுக்கியைத் தேடி இவ லண்டன் போறதுக்கும் ரெடியா இருந்துருக்கா? ஆனா அவன்தான் கில்லாடியாச்சே, மதிக்கிட்ட எந்த ஒரு உண்மையான ப்ரூஃபும் கொடுக்காமத்தான் கம்பி நீட்டிருக்கான். வைபவ்தான் இதெல்லாம் சொல்லி புரிய வச்சிருக்கான். அதுக்கு பிறகும் கூட நம்மக்கிட்ட சொல்லனும்னு தோனல, குழந்தையை அபார்ட் பண்ணிட்டு எதுவும் நடக்காத மாதிரி நம்மக்கிட்ட இருக்கனும்னு நினைச்சிருக்கா.?” என ஆத்திரமாக முடிக்க, அங்கு கேட்ட அத்தனை பேருக்கும் பூமதியின் மேல் ஒரு வெறுப்பு உண்டாகிவிட்டது.

“நேத்து ஹாஸ்பிடல்ல வைபவ்தான் ஹஸ்பன்ட்ன்னு சொல்லிதான் அபார்ட் செஞ்சிருக்காங்க, அதே நேரம் அந்த நிர்மலோட ஃப்ரண்ட் ஒருத்தி அங்கே வந்துருக்கா, அவளைப் பார்த்த மதி வயலண்ட் ஆகி, அடிச்சு மண்டையை உடைச்சிட்டா. அந்த பொண்ணு போலிஸ் கம்ப்ளைன்ட் பண்ணிட்டா. அவங்க ஹாஸ்பிடலுக்கே வந்துட்டாங்க, வேறவழி இல்லாம நானும் கூட போய் எல்லாம் முடிச்சு இவளை கூப்பிட்டு வந்தேன்.” என்றான் எரிச்சலும் கோபமுமாக.

“மார்னிங்க் வாக்கிங்க் போகும் போது அந்த வைபவை பார்த்தேன், அவன்தான் எனக்கு எல்லாம் சொன்னான். இவ இவ்ளோ மோசமா போவான்னு நான் நினைக்கவே இல்ல” என மாதேஷ் கசப்பாக சொல்ல,

“நாமதான் இன்னும் வளரலன்னு நினைச்சிட்டு இருந்துருக்கோம், ஆனா அவ..” என்றார் சிவநேசன் ஆற்றாமையாக.

“நடந்ததை மாற்ற முடியாது தாத்தா. இனி என்ன செய்யலாம்னு யோசிக்கலாம். அந்த நிர்மல் பத்தி பெருசா பயப்பட வேண்டாம். அவன் எந்த பிரச்சினையும் செய்யமாட்டான். அப்படியே செஞ்சாலும் நான் பார்த்துக்குறேன். இவளுக்கு முதல்ல ஒரு மாப்பிள்ளையை பாருங்க. சீக்கிரம் இங்க இருந்து அனுப்பிடலாம்..” என கார்த்தி முடிக்க, அதுவே அனைவருக்கும் சரியெனப்பட்டது
.
 

Vimala

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 10, 2023
102
45
28
Trichy
அடேங்கப்பா..
இந்த பூமதி இவ்ளோ பெரிய தில்லாலங்கடியா 🙄
 

Joss uby

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
509
168
43
Dindugal
இந்த கார்த்திக் ஒருவேளை நல்லவனோ 🙄