• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிலவோடு தென்றலும்! 15

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
880
647
93
Chennai
அத்தியாயம் 15

மூன்று மணி அரவிந்த் அனன்யா வீட்டிற்கு வரும் பொழுது.

"ஐஸ்கிரீம் வாங்கலாமா அனு?" என கேட்டு அவள் விருப்பப்பட்ட ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்து தானும் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வர இவ்வளவு நேரம் ஆகி இருந்தது.

இருவருக்குமே அந்நேரம் போதவில்லை. இன்னும் கொஞ்சம் என மனம் கேட்டுக் கொண்டே இருந்தது அதை ஒருவரை ஒருவர் பகிர்ந்திருந்தால் இவ்வளவும் தேவை இல்லையே!

வீட்டின் முன் அரவிந்த் வண்டியை நிறுத்த, அந்த சிறு பயணத்தை ரசித்து வந்தவள் அழுத்தமான அமைதியுடன் இறங்கி நின்றாள்.

"தேங்க்ஸ் த்தான்!" என்று சொல்லவும் அரவிந்த் புன்னகைக்க,

"எல்லாத்துக்கும்." என்றாள் அவன் கேட்காமலே!.

"நா என்ன பண்ணிட்டேன்? எல்லாம் மிஸ்டர் அண்ட் மிஸஸ் வசந்த் செயல்!" அரவிந்த் சிரித்தபடி சொல்ல,

"ஆனா என்னால உங்களுக்கு கஷ்டம் தான் இல்ல?" என்று அவள் கேட்கவும் கோபமாகிவிட்டான் அரவிந்த்.

"இப்படி நினைக்காதனு எவ்வளவு தான் சொல்றது அனு உனக்கு?" என கூறியவனுக்கு கோபமும் ஆயாசமும் சரிசமமாய் நிறைந்து இருந்தது குரலில்.

"ஆனா அது தான் உண்மைனு எனக்கு தெரியுமே த்தான். இப்ப நான் இங்க இல்லைனா? சென்னை வராமலே இருந்திருந்தா உங்களுக்கு என்னை கூட்டிட்டு அலைய வேண்டிய தொல்லை இருந்திருக்காதே" என்று அனன்யா சொல்லவும்,

"அனு!" என கோபமாய் அரவிந்த் அழைக்க,

"இவ்வளவு கோபம் என் மேல வருது இல்ல உங்களுக்கு?" என பாவமாய் கேட்டவளை எந்த விதத்தில் தான் அணுகிட?.

"இப்ப நான் ஊர்ல இருந்திருந்தா என்னை மகி இன்வைட் பண்ணிருக்க மாட்டா. நீங்களும் தனியா போய்ட்டு வந்திருப்பிங்க. என்னை யாரும் தேடி இருக்க மாட்டிங்க இல்ல?" என அனன்யா ஆதங்கம் கொண்டு கேட்க,

"எனக்கு அவ்வளவு கடுப்பாகுது அனு. எவ்வளவு தான் உனக்கு சொல்றது என் விஷயத்துல நீயா அஸம்ப்ஷன் கொண்டு வராதனு!" என கோபமாய் சொல்லியே விட்டான் அரவிந்த்தும்.

"எப்பவும் உங்களுக்கு தொல்லையா இருந்தே பழகிட்டேன். அதுவும் தெரிஞ்சே தொல்லை குடுத்துட்டு இருக்கேன் இப்பல்லாம்"

'நான் இவர்கள் குடும்பம் இல்லை தானே? போனால் போகட்டும் என்பதை போல தானே எனக்கு இந்த இன்றைய அழைப்பு' வண்டியில் வரும் வழியில் அவளுக்கு அவளே அவன் முன்பு கூறிய வார்த்தைகளுக்கு உருவம் கொடுத்து இப்பொழுதும் நினைத்து அவனையும் வருத்தவும் அவள் எண்ணத்தில் அந்த நிமிடம் இருப்பதை எல்லாம் அவனிடம் கொட்டிவிட்டாள்.

"பைத்தியமா அனு நீ? உனக்கு தெரிஞ்சும் வேணும்னே இப்படி பேசிட்டு இருக்க நீ. பழசை எல்லாம் மறக்கவே மாட்டியா? கோவத்துல ஒரு வார்த்தை வர கூடாதா?"

எத்தனை நாள் தான் அவனும் அவளின் இந்த தேவையற்ற எண்ணத்தை தாக்குப்பிடிப்பான்? தினம் தினம் விளக்கம் கொடுத்து, பார்வையால் அரவணைப்பை கொடுத்து, சில பிரேத்யேக வார்த்தைகளை கொடுத்து என அவனால் முடிந்த மட்டும் அவன் அன்பை சொல்லிக் கொண்டு தானே இருக்கிறான்.

அதற்கெல்லாம் பின்னால் அன்பரசன் மகள் அனன்யா என்ற பிம்பத்தை மட்டும் கொண்டு அவள் பார்க்கும் பொழுது எவ்வளவு நாள் தான் அவனும் தாங்குவான்? என கோபத்தில் எப்பொழுதும் விட இன்று இன்னும் அதிக கோபமாய் அரவிந்த் கூறிவிட, சட்டென்று கண்ணில் நீர் கோர்த்து விட்டது அனன்யாவிற்கு.

"ப்ச்! போ அனு!" என அந்த கண்ணீரையும் பார்க்க முடியாமல் கோபத்தையும் விட முடியாமல் அவள் பார்த்துக் கொண்டு நிற்கும் பொழுதே மாடிப் படிகளில் ஏறி அவன் வீட்டிற்கு சென்றுவிட, அவனின் இவ்வளவு கோபத்தில் மொத்தமாய் உடைந்துவிட்டாள் அனன்யா.

நேசத்தின் அளவு எல்லாம் இருவருக்குள்ளும் எல்லை கடந்து நிற்க, அதை அவரவர் அவர்களுக்குள் மட்டும் வைத்திருப்பது தான் அங்கே பிரச்சனையே!.

அன்று இரவு வரையுமே பொழுது அப்படி தான் கழிந்தது. இரவு எட்டு மணிக்கு காலிங் பெல் சத்தத்தில் அரவிந்த் தான் என நினைத்து முழு எதிர்பார்ப்போடு மட்டும் சென்று கதவை திறக்க, அங்கே ஆன்லைன் உணவு டெலிவரி செய்பவர்.

இதையும் எதிர்பார்க்கவில்லை. அவனையன்றி யார் தனக்கு? என நினைத்திருக்க, இதோ முதல் முறையாய் என்றில்லாமல் மீண்டும் மீண்டுமாய் ஒரு ஏமாற்றம்.

அவன் வேலை தான் என்று புரிந்து அதை மறுக்காமல் வாங்கிக் கொண்டாள். சமாதானப்படுத்த தான் ஆசை. ஆனாலும் பிடிவாதமாய் அவன் பக்கம் செல்லும் மனதை இழுத்துக் கட்டினாள்.

'உண்மையை தானே சொன்னேன்? நான் அவங்க குடும்பமும் இல்ல. குடும்பமாகுற வாய்ப்பும் இல்லையே!' என்று வேறு சரியான பாதையில் செல்வதாய் ஒரு எண்ணம்.

அரவிந்த் கோபத்தை தாண்டி ஆதங்கமும் ஆயாசமுமாய் தன் அறையில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான்.

உணவு வந்து அவளுக்கு கொடுத்ததையும் தன் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து பார்க்க தான் செய்தான்.

அவனும் அவன் காதலை சொல்ல தான் நினைக்கிறான். ஆனாலும் முடியவில்லையே! ஏனென்றே தெரியாமல் மனம் தடுமாறிக் கொண்டிருக்கிறது அவளிடம் பேச முடியாமல்.

என்ன தான் செய்ய என நினைத்தால், ஏன்! இன்னும் ஒரு ரோஜாவை கூட அவள் கைகளில் சேர்த்திட முடியவில்லை தானே?

"என்ன அனு பண்ற என்னை? உன்னை எனக்கு இவ்வளவு பிடிக்குமா? சத்தியமா எனக்கே இது தெரியாது டி. உனக்கு எப்படி நான் புரிய வைப்பேன்?" என தனக்குள் புலம்ப வைத்துவிட்டாள் அவனை.

'அந்த வயசுல உன்னோட விருப்பம்... நிஜமாவே என்னால இப்ப நினைச்சா கூட ஷாக்கிங்கா இருக்கு. அதுவும் கனகா அத்தை, நீ, நான், அக்கா, மகி, மாமானு எல்லாரும் ஒரே வீட்டுல இருக்கும் போதே! எப்படி உன்னால முடிஞ்சது அனு? அதுக்கு நான் கோவப்பட்டது தப்பா? ஆனா உன்னோட அந்த விருப்பம் தான் இன்னைக்கி என்னை இந்தளவுக்கு உன்னை நினைக்க வச்சிருக்கு' என நீண்ட புலம்பல் அவனில் வெளிவர,

இப்படி புலம்பித் தவிக்கும் அனைத்தையும் அவளிடம் சொல்லிவிட முடியவில்லையே என தான் இன்னமும் தவித்து போனான்.

அதை எல்லாம் அவளிடம் கொட்டிவிடும் நாளும் தூரம் இல்லை என்பதை போல இதோ அடுத்த நாளே அவனுக்கான வாய்ப்பு அவனிடம் வந்து சேர்ந்தது.

அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை. சமைக்கலாமா? சமைத்திருப்பாளா? என எண்ணங்களில் அவன் காலை ஆறு மணிக்கெல்லாம் உறக்கம் இன்றி யோசனையில் இருக்க, ஏழு மணிக்கெல்லாம் சமையல் மொத்தமும் முடித்து அரவிந்த் வீட்டின் வாசலுக்கு வந்துவிட்டாள் அனன்யா.

இதற்கு மேலும் இப்படியே இருக்கவா என நினைத்து அரவிந்த் சட்டையை மாட்டிக் கொண்டு பால் வாங்க தான் கதவை திறந்தான்.

கையில் சாப்பாடுடன் அவனிடம் கொடுக்க வந்துவிட்டவள் அவன் வீட்டுக் கதவைத் தட்ட தயங்கி வாசலில் நின்றிருக்க, அவள் முகத்தில் தான் விழித்தான் அரவிந்த்.

"என்ன அனு?" என பார்த்ததும் ஆச்சர்யமாய் கேட்டவனுக்கு சில நொடிகளில் அவள் நின்ற விதமும் காட்சிகளாய் கண் முன் படமாய் விரிய, அதிலும் அத்தனை கடுப்பு தான் அவனுக்கு.

"டிஸ்டர்ப் பண்ணவா வேண்டாமானு யோசிச்சியா?" என இடுப்பில் கைவைத்து முறைத்து நின்றான்.

"சாரி!" என அதற்கொரு மன்னிப்பு அவளிடம் வர,

"உன்னை என்ன சொல்றது? வா!" என்றான் அவனும் உள்ளே வந்து.

"எவ்வளவு தான் சொல்றது உனக்கு? நீ எனக்கு டிஸ்டர்பன்ஸ் இல்ல அனு. நான் உனக்கு பண்றதெல்லாம் விரும்பி பண்றது. கடமைக்கு பண்ற மாதிரி தான் இருக்கா உனக்கு?" என கேட்டபடி அவளை அமர சொல்ல, அமைதியாய் இருந்துவிட்டாள்.

'அத்தான் கோபப்படுற மாதிரி எதுவும் பேசிடாத அனு. எவ்வளவு நாள் தான் இப்படி அவங்க பக்கத்துல நீ இருக்க முடியும்? இப்ப இருக்குற தானே? சந்தோசமா இரேன். அவங்களையும் சந்தோசமா பார்த்துக்கோ. இதுக்கெல்லாம் பின்னாடி உனக்கு வாய்ப்பு கிடைக்கவே போறதில்ல!' என்ற இப்படி பல பல எண்ணங்களுக்கு பின் தான் அவளும் சமாதானமாகி அவனையும் சமாதானப்படுத்த என சமையலை முடித்து அவனுக்கும் எடுத்துக் கொண்டு கிளம்பி வந்திருந்தாள்.

'அவளே சமாதானமாகி வந்திருக்கும் பொழுது தானும் எதுவும் பேசி வைக்க கூடாது' என்ற எண்ணத்தில் தன் ஆதங்கத்தை எல்லாம் சிறு பெருமூச்சுக்கு பின் ஒளித்துக் கொண்டவன்,

"மணி ஏழு தான் ஆகுது. அதுக்குள்ள நீ டிபன் பண்ணிட்டியா?" என ஆச்சர்யம் போல சிறு புன்னகையுடன் கேட்ட அரவிந்த்,

"அப்ப நீ தூங்கவே இல்ல தானே?" என கேட்க,

"நான் என்னவும் பண்றேன் உங்களுக்கு என்ன? பாவமேன்னு போன வாரம் எனக்கு சமைச்சு போட்டீங்க இல்ல? எவ்வளவு நாள் தான் சும்மாவே இருந்து உங்க சாப்பாட்டை சாப்பிடுறது? அதான் நானே செஞ்சேன்!" என்று அவனைப் பாராமலே கொஞ்சமும் முகத்தில் புன்னகையையும் காண்பிக்காமலே அனன்யா சொல்ல, அத்தனை கனிவு அவள் முகம் பார்த்த அரவிந்த்திடம்.

"மகி மாதிரி தான் நீயும். வளந்த குழந்தை.. ஆனா...." என்றவன் பார்வை அவள் முகத்தில் இருந்து அங்கும் இங்கும் என அலைபாய துவங்க, சட்டென திரும்பிக் கொண்டான் தன் தலையில் தானே தட்டிக் கொண்டு.

"சரி சாப்பிடுங்க. நான் கிளம்புறேன்!" அனன்யா சொல்லி எழவும்,

"நான் லஞ்ச் பண்றேன் அனு. எடுத்துட்டு வர்றேன்!" அரவிந்த் சொல்ல,

"ஹெல்ப் எல்லாம் பண்ண மாட்டேன். நான் தூங்க போறேன். நைட் சரியாவே தூங்கல!" உடனே அனன்யா கூற, சிரித்துவிட்டவன்,

"நீங்க நல்லா ரெஸ்ட் எடுங்க மேடம். நானே வாங்கி நானே செஞ்சு நானே கொண்டு வந்து வேணும்னா நானே கூட ஊட்டியும் விட்டு..." என்று நிறுத்தவும் அதுவரை அவன் முகம் பார்க்காமல் இருந்தவள் சட்டென நிமிர்ந்துப் பார்க்க பொங்கி வந்த சிரிப்பை வாய்க்குள் அடக்கிக் கொண்டிருந்தான் அரவிந்த்.

"த்தான்!" என சிணுங்கியவளுக்கு குற்ற உணர்ச்சியில் அழுகையும் வந்தது.

"நீ அழுதாலும் அழகா தான் இருக்கு. அதுக்காக அடிக்கடி நீ என்னை அழுறதை மட்டும் பார்த்துட்டே இருன்ற!" என்றான் அரவிந்த்.

"சாரி த்தான். பேசி பேசி கஷ்டப்படுத்திட்டே இருக்கேன் உங்களை." அனன்யா சொல்ல,

"என்கிட்ட எப்பவும் சிரிச்சிட்டே இரு. நானும் சந்தோசமா இருப்பேன்!" என்றான் புன்னகை மாறா முகமாய்.

"அப்ப சமைச்சுட்டு கூப்பிடுங்க" என்றவள் முகம் முறைப்பில் இருந்து புன்னகைக்கு மாற, மதிய உணவு முடிந்து மாலை வரை நன்றாய் தான் சென்றது அன்றைய தினம்.

தொடரும்..