• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிலவோடு தென்றலும்! 2

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
880
647
93
Chennai
அத்தியாயம் 2

அன்பரசன் கனகாவின் ஒரே மகள் அனன்யா. கல்லூரி முடித்து ஒரு வருடம் வரை கோயம்புத்தூர் என்ற தனது சொந்த ஊரில் வேலை தேடிக் கொண்டிருந்தவள் சரியான வேலை கிடைக்காமல் வெளியூருக்கும் அன்னை அனுப்ப சம்மதிக்காததால் நீண்ட நாளாய் வீட்டில் தான் இருந்தாள்.

ஒரு கட்டத்திற்கு மேல் அனன்யாவிற்கு கனகா மாப்பிள்ளை தேட ஆரம்பிக்க, அன்னையை எதிர்த்துக் கொண்டு சென்னை கிளம்பிய அனன்யாவிற்கு ஆதரவாய் தந்தை அன்பரசன் நிற்க, கனகாவால் எதுவும் செய்ய முடியவில்லை.

"அவளுக்கு தான் கல்யாணம் இப்ப வேண்டாம்னு சொல்றா இல்ல? விடு! இப்ப என்ன வயசா ஆகுது? கொஞ்ச நாள் அவ விருப்பத்துக்கு இருக்கட்டும்!" என்று அன்பரசன் சம்மதம் கொடுத்துவிட்டார் செல்ல மகள் அனன்யா சென்னை செல்ல.

அன்பரசனின் தங்கை கௌரியின் மகன் அரவிந்த் சென்னையில் வேலைக்கு சேர்ந்து கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஆக போகிறது. கௌரி இறந்து அரவிந்த் தலையெடுக்கும் வரையுமே அரவிந்த், அவனின் மூத்த சகோதரி திகழ்மதி, தங்கை அனன்யா என அனைவர்க்கும் அடைக்கலம் கொடுத்து தன்னோடு தான் வைத்திருந்தார் அன்பரசன்.

கனகா அவர்களை சரிவர பார்த்துக் கொள்ளவில்லை தான் என்றாலும் திகழ்மதி தன்னால் முடிந்த மட்டும் தன் தம்பி தங்கைகளை தானே வேலைக்கு சேர்ந்து பார்த்து படிக்க வைத்து வளர்த்துக் கொண்டாள் அத்தை மாமாவிற்கு அதிகம் செலவு கொடுக்காமல்.

அரவிந்த்துமே திகழ்மதியின் கஷ்டம் புரிந்து குடும்பத்தின் நிலை அறிந்து நன்றாய் படித்து தான் அவனுக்கு உரிய வேலையை பற்றி இருந்தான்.

அரவிந்த் மூத்த சகோதரி திகழ்மதிக்கு இதே ஊரில் தான் பெரிய பணக்காரர்களான விஸ்வநாதன் அவர்களின் மகன் ஆர்யனுடன் திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் ஆகிறது. அக்ஷயா என்ற இரண்டு வயது குழந்தையும் இருக்கிறாள்.

அரவிந்த் வேலை கிடைத்த கையோடு திகழ்மதியின் காதல் திருமணமும் நடந்தேறி இருக்க, மகிழினியை தன்னோடு வைத்துப் பார்த்துக் கொண்டாள் திகழ்மதி.

அரவிந்த் தங்கை மகிழினி. அனன்யா வயது தான் அவளுக்கும். கல்லூரி முடிந்து ஒரு வருடம் ஆகிறது. தன் மாமா ஆர்யனின் ராமசந்திரா ஜவுளி நிறுவனத்தின் ஹோம் ப்ராஞ்சில் கணினி சம்மந்தமான வேலையில் இருந்து கொண்டு தனது அக்கா திகழ்மதி வீட்டில் தான் தங்கி இருக்கிறாள்.

எப்போதாவது அண்ணன் அரவிந்த்தைக் காண சென்னை வந்து இரண்டு மூன்று நாட்கள் அவனோடு தங்கிவிட்டு செல்வாள். அவளுக்கும் மாப்பிள்ளை தேடும் பணி நடந்து கொண்டு தான் இருக்கிறது அவள் சம்மதத்தோடு.

இப்பொழுதும் அரவிந்த்தை காண மகிழினி சென்னை வந்திருந்த நேரம் தான் அன்பரசன் அனன்யாவிற்கு சென்னையில் வேலை கிடைத்த விஷயத்தை சொல்லி இருந்தார்.

"ஹாஸ்டல்ல சாப்பாடு எல்லாம் எப்படி இருக்குமோ! சிங்கிள் ரூம் இருக்குற மாதிரி வீடு எதாவது இருந்தா பாரு அரவிந்தா. அடுத்த வாரம் அனன்யா வருவா!" என்று அன்பரசன் சொல்லவுமே எதிர்வீடு தான் நியாபகம் வந்தது அரவிந்த்திற்கு.

அங்கே தான் டூ லெட் என்ற போர்டு கேட்டில் இருப்பதை பார்த்திருக்கிறான்.

"வேலை எங்க மாமா?" என்று அரவிந்த் கேட்கவும்,

"மடிப்பாக்கம்!" என்றார் அவர்.

"நீயும் அங்க பக்கத்துல வேளச்சேரில தானே வேலை பாக்குற?" என்று கேட்க,

"ஆமா மாமா!" என்றான் யோசனையோடு.

"கொஞ்சம் உனக்கு பக்கமா இருக்குற மாதிரி பாரு டா. அவ்வளவு தூரம் தனியா என்னனு இருக்க போராளோனு கொஞ்சம் பயம் தான். கொஞ்ச நாளா அவ்வளவா யாரோடவும் அனு பேசுறதே இல்ல. உன் அத்தையை தான் உனக்கு தெரியுமே! எதாவது நொய் நொய்ன்னுட்டு இருப்பா. கல்யாணம் இப்ப வேண்டாம்னு அனு சொல்லிட்டா. அது உன் அத்தைக்கு கொஞ்சம் கோவம். இப்பவே கஷ்டப்படுத்தி கல்யாணம் பண்ணி வைக்க எனக்கும் விருப்பம் இல்ல. அதான் கொஞ்ச நாள் அவ விருப்பத்துக்கு இருக்கட்டுமேனு பாக்குறேன்!" என்றிருந்தார்.

"சரி மாமா!" என்றவன் அப்போதும் யோசித்தான் தனக்கு எதிர்வீடு என்றால் அது அவளுக்கு சரிப்பட்டு வருமா என பல எண்ணங்கள் அவனிடம்.

"உனக்கும் ரொம்பவே கஷ்டம் கொடுக்குறேன் இல்ல அரவிந்தா?" என அன்பரசன் கேட்க,

"என்ன மாமா!" என்றவனுக்கு தெரியாதா? அவர் பிள்ளைகள் போல தானே அரவிந்த்தையும் அவன் சகோதரிகளையும் அவர் பார்த்துக் கொண்டார்.

"நீங்க எனக்கு அப்பா மாதிரி தான் மாமா! எவ்வளவு பண்ணிருக்கீங்க எங்களுக்காக. நம்ம அனுவை நான் பார்த்துக்க மாட்டேனா?" எனும் போது சிறு உறுத்தல் விழ தான் செய்தது அவன் மனதில்.

இத்தனை நம்பிக்கை தன் மீது தன் மாமன் வைத்திருக்க, அவர் மகளை தான் என்னவென்று நினைக்கிறோம் என நினைக்கும் போது மனம் பலமாய் தாக்கப்பட்டாலும் அனன்யா மீதான விருப்பம் நாளுக்கு நாள் அதிகமானதே தவிர குறையவில்லையே!

"சரி தான் டா. நீ இருக்கும் போது வேறென்ன கவலை எனக்கு. அதெல்லாம் பார்த்துக்குவ." என அத்தனை நம்பிக்கையாய் அவர் சொல்ல, அடுத்த நாளே எதிர்வீட்டினை சென்று பார்வையிட்டு பேசி முடித்துவிட்டான்.

அப்பொழுது தான் மகிழினியும் அரவிந்த்தை காண திகழ்மதியிடம் சொல்லிக் கொண்டு சென்னை வந்திருந்ததால் அவளைக் கொண்டே வீட்டையும் சுத்தமாக்கி வைத்தான்.

"அங்க தான் கடையில வேலை வேலைனு கிடைக்குறோமே.. இங்க அண்ணேன்னு நீ சென்னையை சுத்தி காட்டுவியேனு லீவ் போட்டு வந்தா என்னை போய் வீடு கிளீன் பண்ண வச்சுட்டியே! அண்ணனா நீயெல்லாம்!" என மகிழினி கேட்டதற்கு,

"உன் பிரண்ட்காக தானே பண்ற? எனக்காகவா பண்ற?" என அரவிந்த் கேட்க,

"ஹ்ம் அது சரி தான் அனுக்காக பண்ணலாம். ரொம்ப நாளாச்சு அனு கூட பேசி சிரிச்சு. மாமா வீட்டுல இருக்கும் போது தினமும் கொஞ்சமாவது அத்தை இல்லாத நேரம் பேசி சிரிச்சுனு ஜாலியா இருக்கும். அங்க இருந்து வந்த அப்புறம் அவ்வளவு டச் இல்ல. நீ, நான், திகழ் அக்கான்னு நாம கூட அடிக்கடி போன்ல பேசி நேர்ல பார்த்து ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருக்கோம். ஆர்யா மாமா சொல்லவே வேண்டாம். அவ்ளோ ஜோவியல்!" மகிழினி சொல்லவும் அரவிந்த் தலையசைக்க,

"ஆனா அனு பாவம் அர்வி! அத்தை இங்க நிக்காத அங்க நடக்காதனு நாம இருக்கும் போதே அவளை எவ்ளோ டார்ச்சர் பண்ணும். அதுவும் நீ வீட்டுல இருந்தா அன்னைக்கெல்லாம் அனு ரூம்விட்டு வெளிய வரவே கூடாது அத்தைக்கு. என்ன கடிச்சா சாப்பிட்ருவோம்? சரியான ஹிட்லர் அத்தை தெரியுமா அவங்க!" என அத்தனை கோபமாய் மகிழினி சொல்ல, அரவிந்த்தும் அன்றைய தினங்களை தான் நினைத்துப் பார்த்தான்.

அப்படி கனகா அவ்வளவுக்கு மகளை பொத்தி பொத்தி வைத்த போதெல்லாம் கூட அவளை வேறொரு கோணத்தில் அரவிந்த் பார்த்ததே இல்லை. கூடவே இருந்த அத்தனை வருடங்களில் ஒருமுறை கூட இவன் பார்வை அவள்
மேல் தவறாய் தவறி கூட விழுந்தது இல்லை.

கனகா வீட்டில் இல்லாத நாட்களில் திகழ்மதி, மகிழினி, அனன்யா, அரவிந்த் என நால்வருமாய் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் எல்லாம் ஏராளம். "அர்வி அத்தான்" என்று தான் அழைப்பாள் அப்போதெல்லாம் அனன்யா.

"இனி அனு இங்க வந்துட்டா நானும் வார வாரம் வந்துடுவேன். நாங்க ரெண்டு பேருமே ஜாலியா வெளிய போவோம். உன்னை எல்லாம் தேடவே மாட்டோம்!" என அவ்வளவு மகிழினி பேச,

"அதுக்குள்ள உன்னை ஒருத்தனுக்கு கட்டிக் குடுத்து பேக்கப் பண்றனா இல்லையா பாரு!" என்று சொல்லி இருந்தான் அரவிந்த்தும்.

இப்படி அனன்யாவிற்காக இன்னும் இரண்டு நாட்கள் சேர்த்து அரவிந்த்துடன் தங்கி இருந்து அனன்யா வீட்டை தயார் செய்து மகிழினி காத்திருந்தபடி அனன்யாவும் வந்து சேர்ந்துவிட்டாள்.

அரவிந்த் தான் அவள் செய்கைகளில் குழம்பி இருந்தான். தன் மேல் அவளுக்கு இருக்கும் கோபம் தான் முன்னால் அவளிடம் கோபம் கொண்டதற்காக தான் இருக்கும் என்று மட்டுமே அறிந்தவனுக்கு தான் கூறிய வார்த்தைகள் எல்லாம் நியாபகத்திலேயே இல்லை.

அனன்யா கொடுத்த காபியை பால்கனியில் நின்று அரவிந்த் குடித்தவன் பின் நேரமாவதை உணர்ந்து வீட்டினுள் வந்தான்.

"வீடு ஓகே தானே அனு?" அரவிந்த் கேட்டதற்கு,

"ம்ம்ம்!" என்று ஒரு தலையாட்டல் தான் அவளிடம்.

"எப்போ ஜாயின் பண்ணனும்?" அரவிந்த் கேட்க, மகிழினி இருவரையும் தான் பார்த்தாள்.

"மன்டே!" அனன்யா சொல்ல,

"அப்போ சட்டர்டே சண்டே வெளில போலாமா?" என்றாள் மகிழினி உடனே கண்கள் மின்ன.

"இல்ல மகி! ரெஸ்ட் வேணும். நெக்ஸ்ட் வீக் போலாமே?" அனன்யா சொல்ல,

"அப்படியா?" என்றாள் பாவமாய் மகிழினி.

"நீ வந்து ஒரு வாரமச்சு மகி. மாமா கடைனதும் கணக்கெல்லாம் கேட்க மாட்றாங்கல்ல உன்கிட்ட? ஒரு வாரம் வேலை பாக்கல இல்ல? ஊருக்கு போக வேண்டாமா?" அரவிந்த் அவளிடம் கேட்க,

"அடப்பாவி! நீ தான டா இருக்க சொன்ன? வீட்டு வேலை பார்க்க தான் இருக்க சொன்னியா? வேலை முடிஞ்சதும் கிளம்ப சொல்றல்ல நீ?" என அண்ணனை அவள் முறைக்க, அவள் முறைப்பில் சிறு புன்னகை அனன்யாவிற்கு.

"இரு உன்னை அக்காகிட்ட சொல்றேன்!" என மகிழினி சொல்லும் நேரம் மீண்டும் அனன்யா அலைபேசியில் வீடியோ அழைப்பில் வந்திருந்தாள் திகழ்மதி.

அழைப்பை ஏற்றதும் திரையை நிறைத்தாள் திகழ்மதியின் மகள் அக்ஷயா.

"குட்டிமா!" என மகிழினி அனன்யா அருகே அமர, இரண்டு வயது குழந்தை அவளைப் பார்த்து அப்படி புன்னகைத்து கையசைத்தாள்.

"அனு அத்தை, நான், மாமா எல்லாரும் ஒன்னா இருக்கோம் பார்த்தியா?" என மகிழினி அரவிந்த்தையும் காட்ட, அரவிந்த்தையும் பார்த்து இன்னும் என்னவோ அவள் பாஷையில் சொல்லி சிரித்தாள் அக்ஷயா.

"ஒரு நாள் பாப்பாவை இங்க கூட்டிட்டு வாங்களேன் அண்ணி! ஜாலியா இருக்கலாம். ரொம்ப நாள் ஆச்சு பாப்பாவை நான் பார்த்து. என்னை யார்னே அவளுக்கு தெரியாது இல்ல?" அனன்யா சொல்ல,

"கண்டிப்பா வருவோம் அனு. சீக்கிரமே பார்க்கலாம்!" என்றாள் திகழ்மதியும்.

இப்படி வீடியோ அழைப்பில் மூவருமாய் பேசிக் கொண்டு இருக்க,

"எனக்கு டைம் ஆச்சு! நான் கிளம்புறேன் மகி!" என்றான் அரவிந்த்.

"உனக்கு லன்ச்?" மகிழினி கேட்க,

"லேட் ஆச்சுல்ல? மதியத்துக்கு நீங்க சமைச்சுக்கோங்க. நான் கேன்டீன்ல பாத்துக்குறேன்!" என்றவன்,

"பை அனு!" என்று சொல்ல, அவளும் தலையசைத்தாள்.

அலைபேசியில் திகழ்மதி அக்ஷயா என அவர்களிடமும் சொல்லிக் கொண்டு அலுவலகம் கிளம்ப தன் வீட்டிற்கு சென்றுவிட்டான் அரவிந்த்.

தொடரும்..
 
  • Love
Reactions: Vathani

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
880
647
93
Chennai
ஆமாவே 😷