• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிலவோடு தென்றலும்! 21

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
880
647
93
Chennai
அத்தியாயம் 21

இன்னும் பத்து நாட்கள் தான் இருந்தது மகிழினி திருமணத்திற்கு. புதன் மாலை நிச்சயதார்த்தம் வியாழன் காலை திருமணம் என்ற நிலையில் ஒரு வாரம் முன்பு புதன் கிழமை எல்லாம் விடுமுறைக்கு ஏற்பாடு செய்த அரவிந்த் அனன்யாவிடமும் அப்பொழுதே வர சொல்லி கேட்க,

"இப்பவேவா?" என்றாள் அனன்யா.

"ஓய்! அப்ப வர மாட்ட?" என அரவிந்த் முறைக்க,

"இல்ல த்தான். நல்லாருக்கும். எனக்கும் ஆசை தான். ஆனா இப்பவே லீவ் போட்டா மகி மேரேஜ் முடிஞ்சதும் அவசரமா கிளம்பி வர்ற மாதிரி ஆயிடுமே!"

"என்ன சொல்ல வர்ற?"

"நான் ஃப்ரை டே கிளம்பி வர்றேன் த்தான். சனி ஞாயிறு லீவ். திங்கள் செவ்வாய் ஒர்க் ஃப்ரம் ஹோம் வாங்கிக்கிறேன். புதன் வியாழன் கூடவே வெள்ளி லீவ் போட்டேன்னா நெக்ஸ்ட் சனி ஞாயிறு லீவ். எட்டு நாள் மகி, அண்ணி, அக்ஷயானு ஜாலியா இருக்கும்ல?" கண்கள் மின்ன அனன்யா சொல்ல,

"எவ்ளோ பெரிய பிளான்?" என சிரித்த அரவிந்த்,

"சரி அப்ப ஒண்ணு பண்ணலாம்!" என்றதும் அனன்யா என்னவென பார்க்க,

"இந்த சனிக்கிழமை இங்கருந்து கிளம்புற மாதிரி அடுத்த சனிக்கிழமை அங்க இருந்து நீ கிளம்பி இங்க வந்துடு!" என அரவிந்த் சொல்லவும் புரியாமல் பார்த்தவள்,

"சண்டே லீவ் தானே த்தான்? கூட ஒரு நாள் அவங்களோட இருந்துட்டு ஜாலியா வருவேன்ல?" அனன்யா கேட்க,

"அப்ப நான் பாவம் இல்லையா? நான் புதன்கிழமை ஊருக்கு போனேன்னா எக்ஸாக்ட்டா பத்து நாள் லீவ் வேணும் மேரேஜ் அப்புறம் மகிக்கு விருந்து, அழைப்பு எல்லாம் சேர்த்து" என்றவன்,

"நானும் அதுக்கு மேல லீவ் போட முடியாது அனு. அடுத்த மன்டே நானும் ஒர்க் பார்க்க வரணும். சோ நாம ரெண்டு பேருக்கும் இந்த பத்து நாள் டைம் கிடைக்காது. அந்த சண்டே நமக்காக எடுத்துக்கலாம்!" என்றவனை கண்கள் விரித்து அனன்யா பார்க்க,

"என்ன அப்படி பாக்குற?" என்றவன்,

"நமக்காகன்னா... வேற ஒன்னும் இல்ல. நீ அந்த வீடு, நான் இந்த வீடு. நான் ஒரு நேரம் சமையல், நீ ஒரு நேரம் சமையல். ஈவ்னிங் ஒரு வாக். நைட்க்கு ஒரு..." என்றவனை அவள் மென்னகையாய் பார்க்க,

"ப்ச்! ஆர்டர் பண்ணிக்கலாம். சேர்ந்து சாப்பிட்டுக்கலாம்!" என்பவன் ஆசை அழகாய் அனன்யாவிடம் சேர்ந்தது.

"இங்க அப்படி தானே இப்போ இருக்கோம். நிச்சயமா நான் இந்த பத்து நாளும் உன்னை மிஸ் பண்ணுவேன். அதனால அந்த ஒரு நாள் நாம நமக்காக வச்சுக்கலாம் தானே?" என அரவிந்த் மீண்டும் கேட்க, அவளுக்குமே இப்போழுது அந்த நாள் வேண்டுமென ஆசை வந்துவிட்டது.

"என்ன அனு ஓகே தானே?" அனன்யா அமைதியாய் இருக்கவும் அரவிந்த் கேட்க,

"என்ன ஓகே? ஏன் மிஸ் பண்ணனும்? நானும் மகி கூட திகழ் அண்ணி வீட்டுல தானே இருக்க போறேன்?" என அனன்யா கிண்டலாய் கேட்க,

"பக்கத்துல இருந்தா மட்டும் போதுமா?" என சட்டென்று அரவிந்த் கேட்கவும், மனம் அதிர, வயிற்றுக்குள் ஒரு அவஸ்தை உருவாக, என்ன சொல்கிறான் என விழி விரித்து அனன்யா பார்க்க,

"இங்க உன் கூட தினமும் கொஞ்ச நேரம் பேசாம எனக்கு நாள் ஃபுல்ஃபில் ஆகாது. அப்படி டியூன் ஆகி இருக்கேன் நான். அங்கேயும் பேசலாம் தான். ஆனா எல்லாரும் பார்க்க நாம பேசிக்குற அளவுக்கு நம்ம உறவு முதல்ல தெரியப்படுத்தனுமே?" என அரவிந்த் சொல்ல, அனன்யா மொத்தமாய் மௌனமாகிவிட்டாள்.

"ரொம்ப தூரம் இல்ல அனு அந்த நாள். சீக்கிரமே பேசிடுவேன் எல்லாரோடவும்!" என அரவிந்த்தே சொல்ல, அனன்யாவிற்கு அந்த நாளை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

கனகா நிச்சயம் இதற்கு சம்மதிக்க போவதில்லை. தந்தை அதிர்ச்சி அடைந்தாலும் அரவிந்த்தை அதன் பின் ஏற்று கொள்வார் ஆனால் அன்னை அப்படி இல்லை தானே என தன் எண்ணங்களில் அனன்யா இருக்க,

"நிறைய கடந்து வரணும் தான். இந்த மூணு வருஷத்தை கடந்து வந்து இங்க நிக்கிறோமே! அதே மாதிரி தான் எல்லாத்தையும் கடந்து வந்து தான் ஆகணும். சேர்ந்து கடப்போம்!" என சொல்ல, அனன்யாவிற்கு அவன் அன்பில் கண்ணீர் வரும்போலாக அதை அவனிடம் காட்டிடாமல் நிற்க தடுமாறினாள்.

"உன் சம்மதம் தான் முதல்ல வேணும். உன்னோட பிடித்தம் தான் என் வாழ்க்கையோட ஆரம்பமே அனு. நீ சீக்கிரமா சொல்லு. அதுல தான் எனக்கு பலமே" என்று சொல்லி அவள் உருகி நிற்க,

"கட்டாயப்படுத்த மாட்டேன். ஆனா நீயா வா. என் மனசுக்குள்ள வந்த மாதிரி என் கைக்குள்ள...." என சொல்லும் போதே அழுகையை காண்பிக்காமல் இருக்க திரும்பி தன் வீட்டை நோக்கி ஓடிவிட, அவள் உணர்வுகளை புரிந்தவன் தானும் கொஞ்சம் அதிகமாய் அவளை தேடி அவளையும் தவிக்க வைத்தது புரிந்து தலையில் தட்டிக் கொண்டான்.

புதன் அன்று மாலை அனன்யாவிடம் அத்தனை பத்திரங்களை சொல்லி தான் அங்கிருந்து கிளம்பினான் அரவிந்த்.

இடையில் ஒரு நாள் தான். வெள்ளி இரவுக்கு அனன்யா பேருந்தில் ஏற்கனவே பயணத்தை உறுதி செய்திருந்தாள். ஆனாலும் அவன் தன் அருகில் இல்லை என்பதாய் அடுத்த இரண்டு நாட்களும் அத்தனை சோர்வு அனன்யாவிடம். புதன் இரவு அரவிந்த் கொடுத்த உணவை சாப்பிட்டவள் அடுத்தநாள் சமைக்கவே இல்லை. தனக்கென செய்யவே தோன்றவில்லை.

அதிகமாய் அரவிந்த்தை தேடினாள். ஓடி சென்று அவனிடம் தஞ்சமடைய ஏங்கினாள். இப்பொழுதே தன்னை தன் காதலை அவனிடம் சொல்லிவிட தவித்தாள்.

இரவு உணவு உண்ணும் எண்ணமும் இல்லை. வெள்ளிக் கிழமை காலை தான் கொஞ்சம் தெளிந்தாள்.

விடுமுறையை பெற்றுக் கொண்டு இரவு பேருந்துக்கு வந்து சேர்ந்தவளுக்கு காலையில் திகழ்மதி வீட்டிற்கு செல்ல தான் விருப்பமே!

ஆனாலும் அப்படி செய்திடவில்லை. அவ்வளவு யோசனைக்கு பின் சனிக்கிழமை காலை தன் வீட்டிற்கு தான் வந்து சேர்ந்தாள் அனன்யா.

"அனு? வர்றேன்னு சொல்லவே இல்ல?" என அனன்யா முதலில் கண்டது தாயை தான்.

மகளைப் பார்த்தது பக்கென்று தான் ஆனது கனகாவிற்கு. அவருக்கும் தெரியுமே வியாழன் மகிழினி திருமணம் என்று.

அதற்காகவா இத்தனை நாள் முன்பே வந்திருக்கிறாள் என மகளையே பார்க்க, அன்பரசன் அப்பொழுது தான் எழுந்து வந்தவர் மகளைக் கண்டதும்,

"அனு! வந்துட்டியா?" என உற்சாகத்தையும் சந்தோசத்தையும் காட்ட, தந்தையை சென்று கட்டிக் கொண்டாள்.

"எவ்ளோ நாள் ஆச்சு?" என அன்பரசன் மகள் தலையை ஆசையாய் வருடிவிட,

"உங்ககிட்ட சொன்னாளா வர்றேன்னு?" என்று தான் கேட்டார் முதலில் கனகா.

"ரெண்டு நாள் முன்னாடி சொன்னா. நேத்து பஸ் ஏறினதும் கால் பண்ணினா. இப்ப கூட ஆட்டோல வந்துட்டு இருக்கேன்னு மெசேஜ் பண்ணாளே!" என அன்பரசன் சொல்ல,

"ஏன் என்கிட்ட சொல்லல நீங்க?" என கோபமாய் கனகா கேட்க,

"இதென்ன கேள்வி? நீ தான் இவளுக்கு போன் பண்ணி எப்ப வர்றனு கேட்டிருக்கணும். அனு கல்யாணத்துக்கு வருவானு உனக்கு தெரியும் தானே?" என கணவன் கேட்க, இவர்களுக்குள் எல்லாம் முடிவு செய்கிறார்களே என கோபம்.

"அதுக்கு இவ்வளவு முன்னாடி வரணுமா? கல்யாணம் அன்னைக்கு வந்தா போதாதா?" கனகா காலையே ஆரம்பித்துவிட,

"ம்மா!" என அனன்யா பல்லைக் கடிக்க,

"அவ கிடக்குறா! நீ போய் குளிச்சுட்டு வா. அப்பா காபி போட்டு தர்றேன்!" என சொல்ல, உடனே புன்னகைத்தவள் சரி என தலையாட்டி உள்ளே சென்றுவிட்டாள்.

"என்னை என்ன உப்புக்கு சப்பா இந்த வீட்டுல வச்சுட்டு இருக்கீங்களோ? எதுவும் சொல்றது இல்ல. கேட்குறது இல்ல. நான் யாரு இந்த வீட்டுல?" என கனகா கத்த ஆரம்பிக்க,

"ஆறு மணிக்கே ஆரம்பிச்சு வைக்காத! வந்த கையோட போய்ட போறா! அவளை இவ்வளவுக்கு மாத்தினதே நீ தான். அம்மா மாதிரியா நடந்துக்குற. சத்தமில்லாம இரு. கோச்சுக்கிட்டு அனு கிளம்பிட்டா உன்னை என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது" என சொல்லி மகளுக்கு காபி போட அன்பரசன் செல்ல, அப்படியே அமைதியாகிவிட்டார் கனகா.

கிளம்பி சென்றுவிடுவாளா என்றால் ஆம் மகள் செய்ய கூடியவள் தான் என அவருக்கும் தெரியுமே! என்ன முன்னே அவள் வருவது தெரிந்திருந்தால் இன்று அந்த மாப்பிள்ளை வீட்டில் இருந்து பெண் பார்க்க வர சொல்லி இருக்கலாம் என நினைத்தவர் இப்பொழுதும் சொல்லலாம் தானே? நாளை ஞாயிறு. அனைவருக்கும் வசதியாய் இருக்குமே என மனதுக்குள் கணக்கிட்டு தான் அமைதியானது.

காலை காபியை மட்டும் குடித்துவிட்டு மதியம் கனகா செய்திருந்த சமையலை சாப்பிட்டு தந்தையோடு அமர்ந்து மூன்று மணி அளவில் கதை பேசிக் கொண்டு இருந்தாள் அனன்யா.

அவ்வபோது முன்பு இப்படி அமர்ந்து தந்தையோடு பேசுவது வழக்கம் தான். ஆனால் அரவிந்த் மூன்று வருடங்களுக்கு முன் இவளிடம் கோபமாய் பேசி சென்ற பின் மொத்தமாய் மாறி இருந்தவள் இவ்வளவு நாளும் தந்தையிடம் இருந்தும் தனித்து தான் இருந்தாள்.

இப்பொழுதும் அரவிந்த் என்ற ஒருவனே அவளுக்கு அனைத்தும் திரும்ப கிடைக்க காரணமாகியும் இருந்தான்.

அவன் எதையும் இழந்துவிட கூடாது என நினைத்து அன்று அனன்யாவை மறுத்திருக்க, இன்று வரை அனன்யாவும் அனைத்திலும் இருந்து விலகி இருந்தவளுக்கு அன்பரசனைக் கண்டதுமே அவன் எண்ணம் தான்.

தந்தை என்னவென்று தன்னையும் அரவிந்த்தையும் புரிந்து கொள்வார் என நினைக்க, இப்பொழுதே சொல்லிவிடலாம் என்று நினைக்கும் பொழுதே ஒரு மனம்,

'பேசாம இரு அனு. அத்தான் தான் அவ்வளவு சொன்னாங்களே நான் பாத்துக்குறேன்னு. நீ எதுவும் செஞ்சு வைக்காத. அவங்க பேசும் போது சப்போர்ட்டா நின்னா கூடாது போதும்' என சொல்ல, அதுவும் சரி தான் என முடிவெடுத்துக் கொண்டாள்.

ஐந்து மணிக்கு அனன்யா திகழ்மதி வீட்டிற்கு கிளம்பிவிட்டு வந்து கையில் பேகோடு நிற்க, அப்பொழுது தான் அவள் எண்ணமும் திட்டமும் தெரிய வந்து மீண்டுமாய் கனகா சத்தமிட ஆரம்பிக்க,

"என்கிட்ட சொல்லி தான் அவ எல்லாம் பண்ணுறா!" என்ற அன்பரசன் சொற்களில் இன்னுமே வெகுண்டெழ தான் செய்தார் கனகா.

இதற்கு இத்தோடு ஒரு முடிவு கட்டுகிறேன் என கனகா எடுத்த முடிவில் அனன்யா கோபமாகி அவளும் ஒரு முடிவினை எடுத்துவிட மொத்தமாய் அனைத்தும் கைமீறி பல மனஸ்தாபங்கள் குடும்பங்களுக்கு இடையே சுவராய் எழுந்து நின்றது.

தொடரும்..
 
  • Like
Reactions: Vathani

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,272
497
113
Tirupur
நான் நினைச்சேன்..கிர்ர் ஏன் மா இப்படி
 
  • Haha
Reactions: Rithi