• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிலவோடு தென்றலும்! 3

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
865
642
93
Chennai
அத்தியாயம் 3

சனிக்கிழமை மாலை மகிழினி ஊருக்கு கிளம்பிவிட்டாள். அரவிந்த் தான் பஸ்ஸில் ஏற்றிவிட்டு வந்திருந்தான்.

"பார்த்து இருந்துக்கோ அனு. எதுவானாலும் அர்விக்கு கால் பண்ணு. அண்ணே பார்த்துக்கும். தனியா இருந்துப்ப தானே?" மகிழினி அனன்யாவிடம் கேட்க,

"ஹே! நான் என்ன குழந்தையா? அதெல்லாம் இருந்துப்பேன். நீ பார்த்து பத்திரமா போய்ட்டு வா!" என்றாள் சிரித்தபடி அனன்யா.

சரி என்று சொல்லிவிட்டாலும் என்னவோ அனன்யாவை நினைத்து அவ்வளவு கவலை மகிழினிக்கு.

"அர்வி! அனுவை பார்த்துக்கோ என்ன" என பேருந்து நிலையம் செல்லும் வழியில் மகிழினி அண்ணனிடம் சொல்ல, அவனுமே முதலில் சிரிக்க தான் செய்தான்.

"ஏன் டா சிரிக்குற?" மகிழினி முறைக்க,

"பின்ன? உன்னையும் இந்த மாதிரி எங்கேயாவது தனியா வேலைக்கு அனுப்பலாமானு பாக்குறேன். நீ தான் உலகம் தெரியாத பாப்பாவா இருக்குற மகி. அக்காவும் மாமாவும் உன்னை ரொம்ப கம்ஃபோர்ட் சோன்ல வச்சிருக்காங்க" என்றான் அரவிந்த்.

"யாரு நானா? பார்த்தல்ல? கோயம்புத்தூர் டு சென்னை தனியா ட்ராவெல் பண்றேன். அதுவும் பத்து நாளுக்கு ஒரு டைம்" என அத்தனை பெருமை மகிழினிக்கு.

"அது சரி! வர்றது டே டைம்ல. நைட்டு பஸ்ல வர பயம். அப்படியே நைட் பஸ்ணாலும் வழி முழுக்க அக்காகிட்டயும் என்கிட்டயும் வீடியோ கால் பேசிட்டே வர்ற. எதுக்கு? அவ்வளவு பயம். இதுல வாய் வேற!" என்றவன் ஒரு கொட்டும் வைத்தான் தன் தங்கைக்கு.

"இன்னும் உனக்கு மெச்சுரிட்டியே வர்ல. உனக்கு வேற மாமா மாப்பிள்ளை தேடுறார். பாவம் தான் வர போற மாப்பிள்ளை" என அரவிந்த் சிரிக்க,

"ப்ச்! போ டா நீ!. இதுக்கு மேல மெச்சுட்ரிடி வேணுமாம்" என திருப்பி அவனை அடித்தவள் பேருந்து நிலையம் வரும் வரை பேச்சை நிறுத்தவில்லை.

"சரி சரி! பஸ் கிளம்ப நேரமாகிட்டு. பார்த்து போய்ட்டு வா. வீட்டுக்கு போய்ட்டு கால் பன்றேன். பயந்துக்காத" அப்போதும் தங்கையை அரவிந்த் கிண்டல் செய்ய,

"நீ ஒன்னும் எனக்கு கால் பண்ண வேண்டாம். அதான் அவ்வளவு பேசிட்டியே!" என மகிழினி கோபமாய் சொல்ல,

"ஓஹ்! கோவமும் ரோஷமும் வந்துடுச்சா மகிக்கு? அப்போ நைட்டு முழுக்க பயமில்லாம போய்டுவ?" அரவிந்த் கேட்க,

"ச்சே ச்சே! அதான் அக்ஷி இருக்காளே! அக்காவையும் தூங்க விடாம நைட்டு பன்னிரண்டு மணி வரை விளையாட்டு தான் அவளுக்கு. அவகிட்ட பேச போறேன். அவ தூங்கினதும் உனக்கு கால் பண்ணி டிஸ்டர்ப் பண்ணுவேன்!" என்றாள்.

"மொத்தத்துல திருந்த மாட்டல்ல?" என்றவன்,

"சரி பார்த்து போ!" என வாஞ்சையாய் கூற,

"அர்வி! அனு என்னை விட போல்ட் தான். ஆனாலும் அவ இப்படி தனியா இருந்ததில்லை தானே? சின்ன வயசுல இருந்து அவளை பாக்குறோமே! நீ பார்த்துக்கோ டா. என்னவோ அவ முன்ன மாதிரி இல்லையோனு தோணுது. ரொம்ப நாள் ஆச்சுல்ல அதனால கூட இருக்கும் தான். எதுக்கும் பார்த்து கவனிச்சுக்கோ!" என அத்தனை பெரிய மனுஷியாய் மகிழினி சொல்ல,

"சரி டா. நான் பார்த்துக்குறேன். நீ கவனம்" என்றவன் பேருந்தில் அவள் ஏறியதும் பேருந்து கண்விட்டு மறையும் வரை நின்று கையசைத்தான்.

திரும்பும் முன் பேருந்து நிலையத்தின் வெளியே ஓரத்தில் இருந்த பூக்கடை ரோஜாக்கள் அரவிந்த் கண்களைப் பறிக்க, பார்த்ததும் அவள் நியாபகம் தான்.

'வேணாம் அர்வி! நேத்து வாங்கின பொக்கேவே அப்படியே இருக்கு' என மூளை கூறினாலும் மனம் கேட்கவில்லை.

'தினமும் விதவிதமான பூக்கள் தன் கை சேராத போதும் தர மறக்காத அவளுக்கு ஒரே நாளில் பூ வாங்க இவ்வளவு யோசிப்பதா நீ?' என மனம் கேட்க, வாங்கியேவிட்டான்.

வீடு திரும்பும் நேரம் மணி ஏழரை இருட்டியேவிட்டது. வாசலில் வந்து நின்றதும் எதிர் வீட்டு மாடியைப் பார்க்க, விளக்கு எரிந்து கொண்டிருந்தது.

இன்னும் பசி இல்லை. இன்று விடுமுறை தான். மதியம் மகிழினி ஆசைக்காக ஹோட்டலில் இருந்து அவன் உணவு வாங்கி வந்திருக்க, அப்போதும் மகிழினி அழைத்தும் அரவிந்த் வீட்டிற்கு வர மறுத்துவிட்டாள் அனன்யா.

"அவளுக்கு டயர்டா இருக்கும் மகி. நீங்க ரெண்டு பேரும் அங்க சாப்பிடுங்க" என அவர்களுக்கான உணவை மகிழினியிடம் கொடுத்துவிட்டிருந்தான் அரவிந்த்.

ஆனாலும் அனன்யாவிடம் இப்படி ஒரு பிடிவாதத்தை எதிர்பார்க்கவே இல்லை அரவிந்த். 'என்னை நேசித்த பெண் தானே என அத்தனை இலகுவாய் அவளை நினைத்து விட்டாயோ?' அவன் மனமே அவனிடம் கேட்டுக் கொண்டது.

அனன்யா வந்தது முதல் நேற்று இரவும் சரி இன்று பகலும் சரி மகிழினி அவளுடனேயே தான் இருந்திருக்க, இப்பொழுது அனன்யா என்ன செய்கிறாளோ என மனம் எண்ணியது.

அழைக்கலாமா என அவன் யோசனையில் இருக்க, காலிங் பெல் சத்தத்தில் புருவம் சுருக்கியவன் சென்று கதவை திறந்தான்.

"ஹே அனு! இப்ப தான் கால் பண்ணலாமானு நினச்சேன்! உள்ள வா!" என்ற அரவிந்த் முகத்தோடு அகமும் மலர்ந்திருந்தது அவள் வந்திருந்ததில்.

"பரவால்ல த்தான். ம்ம்ம்!" என அவள் நீட்டிய கையைப் பார்த்தவன்,

"என்ன அனு?" என்றான்.

"உங்களோடது தான். பால் காய்ச்ச மகி அங்க எடுத்துட்டு வந்திருந்தா..." என இன்டக்ஷனை அவள் எடுத்து நீட்ட, கோபமான கோபம் அரவிந்த்திற்கு.

"நீ முதல்ல உள்ள வா அனு!" அரவிந்த் அழைக்க, வாசலிலேயே எவ்வளவு நேரம் நிற்பது என்ற எண்ணத்தில் உள்ளே நுழைந்தாள்.

ஒரு ஹால் ஒரு அறை சமையலறை என அவளுடையதை போலவே தான். சிறுசிறு மாற்றங்கள் அவ்வளவு தான்.

"எதாவது சாப்பிடுறியா? பசிக்குதா?" அரவிந்த் கேட்கவும் அவனிடம் பார்வையை கொண்டு வந்தவள் வேண்டாம் என தலையசைத்து மீண்டும் கையில் இருந்ததை நீட்ட,

"நேத்து மகி சொன்னது உன் காதுல விழலையா?" என்றான் இடுப்பில் கைவைத்து நின்று முறைத்து.

இரு நொடி அதிகமாய் அவள் பார்வை அவனிடம் நிலைத்து நிற்க, "என்ன அனு?" என்றதில் சுதாரித்தாள்.

"பரவால்ல. நான் வேற வாங்கிக்குறேன்" அனன்யா சொல்ல,

"அப்படி என்ன கோவம் உனக்கு என் மேல?" என்றான் அவள் செய்வதில்.

"அப்படி ஒண்ணுமில்ல. எனக்காக வீடு அர்ரேஞ் பண்ணி குடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்" அனன்யா சொல்ல,

"சத்தியமா கடுப்பாகுது அனு. என்ன பேசுற நீ?" என்றான் அதிக கோபம் கொண்டு.

அவனிடன் பேசவே கூடாது என்ற எண்ணம் தான். கோபமும் அவ்வளவு அவன்மேல் இருக்கிறது தான். அதை அவனிடமே காட்டி எட்டி நின்று கொள்ள அவள் நினைக்க, என்னவோ ஒன்று மனதில். அது புரியவே இல்லை அனன்யாவிற்கு.

சென்னை செல்ல தயாரான உடன் தந்தையும் சம்மதித்துவிட, அனைவரிடமும் இருந்து தூரமாய் செல்ல தான் அவள் நினைத்தது.

இப்படி அரவிந்த்திடமே தந்தை உதவி கேட்டு அவனும் அவன் தங்கி இருக்கும் இடம் அருகேவே தனக்கும் வீடு ஏற்பாடு செய்து என தான் மறுக்கும் முன் எல்லாம் தயாராகிவிட, என்னவோ முன்பை விட இப்பொழுது தான் எல்லாம் அதிக வேதனையாய் இருந்தது அனன்யாவிற்கு. மனமும் அத்தனை கனத்து கிடந்தது.

"டிபன் என்ன செஞ்ச?" அவள் முகம் பார்த்து அதில் தெரிந்த கவலையைப் பார்த்து என எதுவும் புரியாமல் அவளை நினைத்தே வருந்தி தானே தன்னை சமன்செய்து கொண்டு கேட்டான் அரவிந்த்.

"மதியம் வாங்கின சாப்பாடு கொஞ்சம் இருக்கு. போதும்!" என்றாள் அவனைப் பாராமலே.

"ஹ்ம்! உக்காரு. காபி வேணுமா?" என அரவிந்த் கேட்க, மீண்டும் தலையசைப்பும் கைநீட்டலும் அவளிடம்.

"அனு! அதை எடுத்துட்டு போ. எனக்கு நான் பார்த்துக்குறேன்." அழுத்தமாய் அரவிந்த் சொல்லியவன்,

"நாளைக்கு சமையலுக்கு ஏதாச்சும் வாங்கனுமா? மகி கூட போன தானே எல்லாம் வாங்கிட்டியா?" என்று பேச்சை மாற்றிட,

"ம்ம் இருக்கு!" என்றவள் வெளியே செல்ல திரும்பினாள்.

எப்படியும் அவன் வாங்கிக் கொள்ள போவதில்லை என தெரிந்துவிட்டது. அங்கேயே வைத்துவிட்டு செல்லலாம் தான். ஆனாலும் என்னவோ ஒன்று தடுக்க, அமைதியாய் திரும்பியவள் பின் அவன் பக்கம் திரும்பி,

"உங்களுக்கு சாப்பிட?" என கேட்கவும் அதில் புன்னகைத்தவன்,

"ஹோட்டல் தான். போகணும்!" என்றான். மீண்டும் அவள் பார்வை அவளின் கையில் இருந்த இன்டக்ஷன் பக்கம் திரும்ப,

"அது உனக்கு தான். நான் நாளைக்கே ஒண்ணு வாங்கிக்குறேன் போதுமா?" என்றவன்,

"வாங்கினாலும் பெருசா வீட்டுல சமைச்சிட மாட்டேன். லீவ்னா மட்டும் தான். வீக்டேஸ் எல்லாம் கேன்டீன் தான்!" என அரவிந்த் விளக்கம் கொடுக்கவும் ஒரு பெருமூச்சுடன் திரும்பி நடக்க இருந்தவளை நியாபகம் வந்தவனாய்,

"ஒரு நிமிஷம் அனு!" என அவன் அழைக்கவும் அவள் நின்று திரும்ப, அவன் அறைக்குள் சென்று நான்கு சிவப்பு ரோஜாக்களை எடுத்து வந்து மொத்தமாய் அவள் பக்கம் நீட்டி இருந்தான்.

அதைப் பார்த்தது தான் தாமதம் மனதுக்குள் இருந்த அந்த ஒரு கனம் குறுகுறுப்பெல்லாம் எங்கோ சென்று ஓடி ஒழிய, முகமெங்கும் சிவந்துவிட்டது கோபத்தில் அனன்யாவிடம்.

"உனக்காக மட்டும் தான் வாங்கினேன்!" என்றவனை என்னை செய்யலாம் என்பதை போல பார்த்தவள் கொண்டு வந்ததை அங்கேயே வைத்துவிட்டு விறுவிறுவென்று வீடு நோக்கி சென்றுவிட்டாள் வேகமாய்.

"ப்ச்! அசால்ட்டா தினமும் எனக்கே தெரியாம எனக்கு பூ குடுத்த பொண்ணுக்கு இப்படி ஒரு பூவை கூட அவ கையில சேர்க்க முடியலையே!" என சொல்லிக் கொண்டவன் அந்த பூக்களைக் கொண்டே தன் நெற்றியின் ஓரம் தட்டிக் கொண்டான் புன்னகையுடன் மட்டும்.

அவள் கோபத்தில் அவனுக்கு வருத்தம் தான் என்றாலும் பதிலுக்கு கோபம் இல்லவே இல்லை.

வீட்டிற்கு வந்தவளுக்கும் அழுகை தான் வந்தது. என்ன நினைத்து இதை எல்லாம் செய்கிறான் எனும் கேள்வியும். மனம் ஒன்றை நினைத்து தவித்து அது அப்படி இல்லவே இல்லை அவன் தன்னையெல்லாம் அப்படி நினைக்க வாய்ப்பே இல்லை என்ற பதிலும் என மொத்தமாய் விண்டு போனது நெஞ்சம்.

ஊரில் தான் மட்டும் இருந்த பொழுதுகள் கூட அவன் நினைவுகளோடும் அந்த அழியா அவனின் வார்த்தை நெருப்புகளோடும் என இத்தனை வலிக்கவில்லை.

இனி தினம் அவன் முகம் பார்த்து அதில் அவன் ஒன்றுமே நடக்கவில்லை, அப்படி நடந்ததும் உன் தவறு என்பதை எல்லாம் அவன் சொல்லி கேட்டு கேட்டு என்று வரும் நாட்களை நினைத்து இப்பொழுதே அத்தனை கோபமும் கவலையும் அனன்யாவிற்கு.

தொடரும்..
 
  • Love
Reactions: Sailajaa sundhar