• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிரியம் 16

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
880
647
93
Chennai
அத்தியாயம் 16

மாலை கவிழ்ந்து மணி ஏழை நெருங்கி இருந்தது. சிவாவும் கனகவள்ளியும் சிவாவின் அறையில் அருகருகில் அமைதியாய் அமர்ந்திருந்தனர்.

வாழவந்தான் தன் அறையில் மகன் பேசியதை நினைத்தபடி அமர்ந்திருந்தார்.

அந்த நேரம் தான் மாலா அழைத்தது கனகவள்ளிக்கு. யோசனையில் இருந்த வாழவந்தான் முன் மாலா என்ற பெயரில் மனைவி எண்ணுக்கு அழைப்பு வரவும் தன்முன் இருந்த அலைபேசியைப் பார்த்தவர் யார் என தெரிந்து பார்த்தபடி இருக்க, இரண்டு முறை முழு அழைப்பு சென்று நின்றது.

இது முடிவெடுக்க வேண்டிய தருணம் என்பதோடு இத்தோடு மூன்றாவது முறையாய் தொடர்ந்து மகிமாவுடனான திருமணப் பேச்சு சிவாவை சிந்திக்க வைத்திருந்தது. சற்றுமுன் தந்தையிடம் பேசியதை அவனுமே நினைவு கூர்ந்தான்.

"இவ்ளோ சீப் பிகேவியர்... அதுவும் உங்ககிட்ட இருந்து நான் நினைக்கல ப்பா!" என்ற மகனை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை வாழவந்தானுக்கு.

"இத்தனை வருஷத்துல இப்படி என்னைக்கும் நடந்ததில்லை. இப்ப மட்டும் ஏன்? அம்மா எனக்காக பேச கூடாதா? இல்ல நீங்க அம்மா சொல்றதை கேட்க கூடாதா?" சிவா சொல்ல,

"வலிக்குதா டா சிவா?" என்று மீண்டும் அவன் கண்ணம் தொட வந்து மகன் புறம் திரும்பிய ஈஸ்வரி,

"உன் அப்பா என்னைக்காவது இப்படி நடந்து பாத்திருக்கியா டா நீ? பொம்பள புள்ளைனா அவ்வளவு எளக்காரமா உனக்கு?" என முதன் முறையாய் மகனை எதிர்த்தார்.

"என்னால தான் எல்லாமே! நான் என்ன கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னா சொன்னேன்? உங்க விருப்பத்துக்குவிட்டு என் வேலையை தான பார்த்துட்டு இருக்கேன்? என்ன பண்ணிட்டு இருக்கீங்க நீங்க ரெண்டு பேரும்?" என பொதுவாய் அவன் கோவத்தை முன் வைத்தான் சிவா.

"அப்படி என்ன ப்பா அவசரம்? என் நிலைமை புரியாம ஒரு வாரத்துல இன்னொரு பொண்ணு போட்டோவோட வந்து நிக்கிறீங்க? நாலு பேர் பேச தான் செய்வாங்க. அவங்களுக்காக என் வாழ்க்கையை அவசரம் அவசரமா முடிவெடுக்க நீங்க நினைக்குறது உங்களுக்கு புரியலையா?" என்று கேட்கவும் கனகவள்ளியும் நிமிர்ந்து மகனைப் பார்த்தார்.

அவரும் தானே அவனைக் கட்டாயப்படுத்துவது போல இப்பொழுது பேசி வைத்தது. அந்த குற்ற உணர்வில் அவர் மகனைப் பாவமாய் பார்க்க, அது புரிந்தது போல அன்னையிடம் தலையசைத்தான் சிவா.

காலையில் மகிமா பேசியதும் நியாபகத்திற்கு வந்தது. இரு குடும்பங்களுக்கும் இருக்கும் ஒரே வாய்ப்பு என்று அவள் கூறியதன் நிதர்சனம் இப்பொழுது தான் அவனுக்குமே புரிந்தது.

வினோதன் என்ற பெயருக்கே இப்படி அன்னையை அடிக்கும் அளவுக்கு தந்தை செல்கிறார் என்றால் எப்பொழுது எப்படி தான் இரு குடும்பங்களும் இணைய? இல்லை இப்படியே இருக்க வேண்டியது தானா? என்ற எண்ணங்கள் நொடிக்குள் மனதினுள் பரவி இருந்தது.

"உங்களுக்கு மகிமாவை தெரியாது ப்பா. வினோதன் மாமா கூட எப்பவோ வந்த தகராறுக்கு இப்போ எதுக்கு இவ்வளவு கோபம் உங்களுக்கு? நீங்க பார்த்த பொண்ணை விட மகி பெட்டரா இருக்கலாம் இல்லையா?" என்று பேச, வாழவந்தான் அவன் கூறியதில் ஆச்சர்யமாய் பார்த்தார் அவனை.

இவனுக்கு தெரியுமா அவர்களை? என்ற கேள்வி அவர் கண்ணில்.

"எனக்கு வினோதன் மாமா மாலாத்த, அவங்க மூத்த பொண்ணு வனிதா அவங்க வீட்டுக்காரர், ரெண்டாவது பொண்ணு மகிமானு எல்லாரையும் தெரியும். எல்லாரோடவும் நான் டச்ல தான் இருக்கேன்!" என்று சொல்ல, மனைவியையும் அதே பார்வை வாழவந்தான்.

"உங்களுக்கு அவங்க வேண்டாம் சரி. அம்மா அவங்க அண்ணன் வேணும் நினைக்குறது எப்படி தப்பாகும்? இந்த கல்யாணம் நடந்தா தான்னு சொல்லல. இல்லைனாலுமே அவங்ககிட்ட அம்மா பேசினா என்ன தப்பு? உங்க ரெண்டு பேர் சண்டையை ஏன் குடும்ப சண்டையாக்கி இப்படி கை நீட்டுற அளவுக்கு என்ன அவசியம்?" என்றவன் தன் கண்ணம் வலித்ததில் மெலிதாய் கைவைத்துப் பார்த்தான்.

"இதை அம்மா வாங்கி இருந்தா எப்படி ப்பா தாங்கி இருப்பாங்க?" என்றும் கேட்க தவறவில்லை அவன்.

அப்படி யோசிக்கும் ரகம் இல்லையே வாழவந்தான். மகன் சொல்லியதும் மனைவிக்காக என்றெல்லாம் அவர் கவலை கொள்ளவில்லை. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் வள்ளி தப்பித்ததில் கவலையும் தான்.

வாழவந்தான் போன்ற மனிதர்கள் ஏராளம். அவர்களுக்கெல்லாம் மனைவி என்பவள் தன் வன்மத்தை கொட்ட கிடைத்திருக்கும் ஒரு இடம் என்பது போல தான். இவர்கள் எல்லாம் எந்த காலத்திலும் திருந்த மாற வாய்ப்பெல்லாம் இல்லை.

வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பதை போல அவரவரை அவரவர் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் இவர்களைப் போன்ற சுயநலவாதிகளிடம் இருந்து.

"நீங்க சொல்ற பொண்ணை பார்க்க போகணும் அவ்வளவு தான? சரி போகலாம்!" என வாழவந்தானிடம் சிவா சொல்லவும் வள்ளி அதிர,

"ஆனா அதுக்கு முன்னாடி வினோதன் மாமா வீட்டுக்கு போகலாம்! நீங்க மகிமாவை பாருங்க!" என்று சொல்லவும் தான் மனம் தெளிந்தது வள்ளிக்கு.

"புரியாம பேசுத நீ! இதென்ன சின்ன பசங்க சண்டைனு நினைச்சியா? சும்மா எல்லாம் அப்படி போய்ட முடியாது!" என்றார் வாழவந்தான். குரலில் காரம் இருந்தாலும் முதலில் இருந்த அளவுக்கு இல்லை.

"ஏன் முடியாது? அது அம்மா பிறந்த வீடு ப்பா!"

"சும்மா நீயும் உன் அம்மா மாதிரி வியாக்கியானம் பேசாத டா! அவ அண்ணே என்ன பார்த்ததும் கட்டிப் பிடிச்சு முத்தம் குடுப்பானா? கேளு அவகிட்ட! அவன் எவ்வளவு வீம்புக்காரன்னு அவளுக்கு தெரியாத மாதிரி தான்!" என்று சொல்லவும் அன்னையை திரும்பிப் பார்க்க, அமைதியாய் நின்றார் வள்ளி.

"இது சரிப்பட்டு வராது சிவா. உன் அப்பன் அடிச்சது தப்பு தான் இல்லைனு சொல்லல. ஆனா அந்த வீட்டுக்கு போனா மதிக்க மாட்டாங்க டா நம்மள!" என்றார் ஈஸ்வரி பாட்டியும்.

"நாளைக்கு நான் மாலாகிட்ட கேட்டு சொல்றேன் சிவா!" வாய் திறந்தார் கனகவள்ளி.

வாழவந்தானுக்கு சுத்தமாய் இதில் விருப்பமில்லை. இத்தனை வருடங்களுக்கு பின் தான் போய் அங்கே அவன் வீட்டில் நிற்பததா என நினைக்கும் பொழுதே கசந்தது அவருக்கு.

அடி கனகவள்ளிக்கு விழுந்திருந்தால் கூட மகன் பேசுவதை எல்லாம் கேட்டு இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டிருப்பார். இப்பொழுது மகனை அடித்தது வேறு இன்னும் உள்ளத்தை பிசைந்து கொண்டிருக்க, கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய முடியவில்லை அவரால்.

"இப்பவும் நான் சொல்றேன். இந்த பொண்ணு தான் வேணும்னு நான் சொல்லல. ஆனா நீங்க வினோதன் மாமா வீட்டுக்கு வரனும். மத்ததை பேசிக்கலாம் மெதுவா!" என்றான் பொறுமையாய்.

"சிவா! சொல்றதை கேளு டா. அந்த வீட்டுக்கு..." என்று ஈஸ்வரி ஆரம்பிக்க,

"பாட்டி நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க. அதான் அம்மா பேசிட்டு சொல்றேன் சொல்றாங்க இல்ல? அப்படி என்ன பிடிவாதம் உங்களுக்கும் அப்பாக்கும்? உங்களோட இந்த பிடிவாதம் தான் அம்மா அந்த வீட்டு பொண்ணை இங்க கொண்டு வர யோசிக்குற அளவுக்கு வந்திருக்கு. என்ன விதினு இருக்கோ அது தான் நடக்கும்" என்று கோபமாய் சொல்ல, ஈஸ்வரிக்கு அதன்பின் பேரனிடம் வாய் திறக்க முடியவில்லை.

சில நிமிடங்கள் அங்கேயே தான் அனைவரும் நின்றிருந்தனர். வாழவந்தான் எதுவும் பேசாமல் தன் அறைக்கு சென்றதே சிவாவிற்கு போதுமானதாய் இருந்தது.

வள்ளி ஐஸ்பேக் எடுத்து வர, ஈஸ்வரியும் அங்கேயே அமர்ந்துவிட்டார் அவர்கள் அருகில்.

"சிவா! சாரி டா. உன்னை யோசிக்காம மகிக்காக மட்டும் நான் பேசல!" அவன் கண்ணத்தில் குளிரை வைத்து எடுத்து அவர் சொல்ல,

"இது வேணாம் ம்மா!" என கீழே வைக்க செய்தவன்,

"சரியாகிடும்!" என தன் சிவந்த கண்ணத்தைப் பார்த்த அன்னையிடம் கூற,

"சிவா!" என்றார் தாங்காமல்.

"எனக்கு புரியுது ம்மா!" என்றவன் ஈஸ்வரியும் தங்களை கவனிக்க கண்டு, காலையில் மகிமா தன்னிடம் பேசியதை அன்னையிடம் சொல்ல வந்தவன் பின் வேண்டாம் என அமைதியாகிவிட்டான்.

தன் அறைக்கு சென்றபின் தான் அன்னையிடம் அதை கூறவே செய்தான்.

"என்னம்மா அமைதியாகிட்டிங்க? மகி உங்ககிட்ட பேசினாளா? அதான் இந்த பேச்சா?" என சிவா கேட்க,

"அய்யயோ! சாமி சத்தியமா இல்ல டா. அன்னைக்கு கோவில்ல அவ பேசின அப்புறம் எனக்கும் தோண ஆரம்பிச்சுடுச்சு" என்ற கனகவள்ளி தயங்கி தயங்கி மாலாவிடம் பேசியதையும் கூறிவிட்டார்.

"ஹ்ம்!" என்பதற்கு மேல் என்ன சொல்ல அவன்.

"உனக்கு பிடிக்கலையா சிவா?"

"ம்ம்?" என அன்னையைப் பார்த்தவன்,

"அம்முவை பிடிக்கும். ஆனா கல்யாணம்னு யோசிக்கலையே!" என்றான்.

'என்ன டா சொல்ல வர்ற?' என்று குழம்பிப் போனார் கனகவள்ளி.

"முதல்ல அம்முக்கு பார்த்த மாப்பிள்ளை வீட்டுல என்ன சொல்லி இருக்காங்க? மாமா வேண்டாம்னு சொல்லிட்டாரா? அவங்க ஒரு முடிவுல இருந்து நீங்க இங்க குழம்பிட்டு இருக்காதிங்க" என்று சொல்ல, தானும் கேட்டு சொல்வதாய் கூறினார் அன்னை.

"அப்போ அப்பா சொன்ன பொண்ணையும் பார்க்க போகணும் சொல்றியா சிவா?" வள்ளி கேட்க,

"அய்யோ ம்மா! இந்த பொண்ணு பாக்குறதுன்ற பேரே எனக்கு பயமா இருக்கு. என்னவோ அப்போதைக்கு என்னை காப்பாத்திக்க சொல்லி வச்சேன் அவ்வளவு தான். முதல்ல வினோதன் மாமாகிட்ட மாலாத்த சம்மதம் வாங்கட்டும்!" என்று சொல்லி,

"அவங்க முதல்ல தெளிவாவும் ஆகட்டும் அடுத்து பேசிக்கலாம்!" என்றவன்,

"மகி விருப்பத்துல எல்லாம் பேசல ம்மா. அவளுக்கு நாம பேமிலி ஒண்ணாகனும் அத்தோட நாம அவளுக்கு நல்லா தெரிஞ்சவங்க. சோ பழக ஈஸி! இவ்வளவு தான் அவளோட தாட்ஸ் எல்லாம்!" என்று சிறு புன்னகை கொடுக்க,

"அது தப்பில்லயே சிவா!" என்றார் அன்னை மெதுவாய்.

"இதெல்லாம் மட்டும் போதுமா?" என்றவன் மகிமாவை நினைக்க, அவளை கடந்த மூன்று நான்கு மாதங்களாய் தான் மிக நன்றாய் பழக்கம் அவனுக்கு.

பார்த்து பேசி இருக்கிறார்கள் தான் பள்ளி பருவத்தில். பார்க்கும் நேரம் துறுதுறுவென இருப்பவள் எதாவது பேசி இருக்குமிடத்தை கலகலப்பாய் வைத்திருப்பாள் என்பது தெரியும் அளவுக்கு எப்பொழுதாவது பார்க்கும் வாய்ப்பு தான் அப்பொழுது.

மாலாவை அன்னையோடு அடிக்கடி பார்க்கும் பொழுது எப்போதாவது மகிமா, வனிதா என ஒருவர் மாற்றி ஒருவரை அழைத்து வந்திருக்கிறார்.

வேலைக்கு என மாலா சொல்லி மகிமாவிற்காக அவன் பேசி ஒரே அலுவலகம் என்றான பின் தான் இத்தனை ஒட்டித்தலான பழக்கமும் கூட.

அதுவும் அவள் இத்தனை வாயாடியாய் இருந்ததனால் மட்டுமே இதுவும் சாத்தியம். இவனாய் சென்று பேசியது இல்லை. மாமா என்று அழைத்து அவளே தான் வந்து பேசி கலாய்த்து கிண்டல் செய்து இவன் முறைப்பையும் பேச்சையும் வாங்கி செல்வாள்.

நினைத்தபடி இருந்தவன் "பார்க்கலாம்!" என்று சொல்லி அமைதியாகிவிட்டான்.

தொடரும்..
 

Sailajaa sundhar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
165
111
43
Dindigul
பரவாயில்ல வாழவந்தான் வாயை மூடிட்டார்
இனி இந்த வினோதன் என்ன பண்ணுவாரோ?
 
  • Love
Reactions: Rithi

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
880
647
93
Chennai
பரவாயில்ல வாழவந்தான் வாயை மூடிட்டார்
இனி இந்த வினோதன் என்ன பண்ணுவாரோ?
பார்த்துடுவோம் 😊😊