• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிரியம் 3

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
880
647
93
Chennai
அத்தியாயம் 3

"ம்மா! பஸ் காசு எங்க?" என்று மகிமா மதிய உணவு டப்பாவை தனது பேகில் எடுத்து வைத்தபடி கேட்க,

"அப்பா டிவிகிட்ட தான் வைக்குறதா சொன்னாங்க அம்மு!" என்றார் மாலா உள்ளிருந்தே!

"ம்மா! என்னம்மா இது? வெறும் ஐம்பது ரூபா?" மகிமா கேட்க,

"பஸ் காசு அவ்வளவு தானே?" என்று வந்தார் வினோதன்.

"இவரெங்க இங்க?" அதிர்ச்சியில் வாய் வார்த்தையாய் மகிமா கூறிவிட,

"என்ன?" என்றார் அவள் கூறியது சரியாய் கேட்காததில்.

"இல்ல ப்பா! இது பத்தாது. வேற காசு இல்ல என்கிட்ட!" அவ்வளவு பவ்யம் மகிமா குரலில்.

"பத்தாதா? அப்போ நடந்து போ! கொழுப்பாது கரையுதா பாப்போம். வேலைக்கு சேந்து மூணு மாசம் ஆவுது.. சம்பளத்தை எங்க? என்னனு தெரியுது என்னை?" என்றார் வினோதன்.

இவர் எழுந்து வர நேரம் ஆகும் என்ற நம்பிக்கையில் தான் இவள் இஷ்டத்துக்கு கத்தி வைத்தது. வந்ததும் இல்லாமல் சம்பளத்தை வேறு கேட்கிறாரே என்று தோன்ற, அப்படியே நின்றாள்.

"உன்னை தான கேக்கேன்! சம்பளத்த எங்க? அம்புட்டையுமா தின்னு அழிச்சுட்ட?" என்றார் கோபமாய்.

காசு விஷயத்தில் அத்தனை கவனம். ஒவ்வொரு காசுமே அவ்வளவு முக்கியம் அவருக்கு. இத்தோடு அவர் கணக்குபடி இரண்டு மாத சம்பளம் வந்ததோடு அடுத்த சம்பளம் இன்னும் நான்கு நாட்களில் வந்திட வேண்டும்.

"ப்பா! நான் சேர்ந்தே மூணு மாசம் தான் ஆகுது. ட்ரெயினிங்க்கு எவன் சம்பளம் எல்லாம் குடுப்பான்? ஆறு மாசத்துக்கு அவங்க சொல்லி தர்றதை கேட்டு நான் ஓகேவானு டெஸ்ட் தான் பண்ணுவாங்க. அப்புறம் தான் சம்பளமே!" வாய்க்கு வந்த பொய்யை அவள் சொல்லி வைக்க,

"என்னைய பாத்தா கேனை கிறுக்கனா தெரியுதா உனக்கு? சம்பளம் இல்லாம எவனாவது சும்மா வேலைக்கு போவானா?"

"அய்யோ நிஜமா ப்பா! நீங்க வேணும்னா சிவா...." என்று சொல்ல வரும்முன் சமையலறையில் பாத்திரங்கள் கீழே விழும் சத்தம்.

"என்னத்த நொறுக்கி வச்சாளோ! போ! போய் உன்னை பெத்தவ இருக்காளா பாரு!" என்று சொல்ல, தப்பித்தேன் பிழைத்தேன் என மகிமா குடுகுடுவென்று ஓடி வந்தாள் சமையலறைக்கு.

"எருமமாடு எருமமாடு!" என தலையில் நறுக்கென்று இரண்டு கொட்டுக்களை வைத்த மாலா,

"சிவாவை ஏன் டி இழுத்த? சொல்லி இருந்தா மனுசன் என்ன ஆட்டம் போடுவார்னு மறந்து போச்சோ? அவ்வளவு திமிரா டி உனக்கு? சிவா அங்க வேலை பாக்குறது தெரிஞ்சா உன் அப்பா என்ன பண்ணுவாருன்னு தெரியாது உனக்கு?" என்று மீண்டும் அடிக்க வர,

"மறந்துட்டேன் ம்மா!" பாவமாய் கூறியவள்,

"வலிக்குது!" என்றாள் நன்றாய் தலையை தேய்த்தபடி.

"வலிக்க தான் அடிக்குறதே! பொய் சொல்லி ஊரை சுத்துனதுக்கே சாத்தி இருக்கனும். விட்டேன்ல? கூண்டோட உன் அப்பாகிட்ட மாட்டிவிட பாக்குற! இனி அவர் முன்ன வாயை திறந்த!" என்று எச்சரித்து அனுப்பி வைத்தார்.

"காசு பத்தாது ம்மா!" அன்னையிடமும் சொல்லிப் பார்க்க,

"பேசாம போயிரு! இல்ல உன் அக்கௌண்ட் பாஸ் புக்கு, ஏடிஏம் கார்டுன்னு எல்லாத்தையும் அவர் கையில குடுத்துருவேன்!" என்றார் மாலா கறாராய்.

மறுபேச்சில்லாமல் சென்றுவிட்டாள். உள்ளதும் போய் விட கூடாதே என்று.

அலுவலகம் செல்லும் முன்பே அன்னையிடம் டீல் பேசி வைத்திருந்தாள். அந்த பணத்தை தந்தையிடம் கொடுக்க போவதில்லை என்றும் தனக்கு சாதகமாய் அன்னை இருந்தால் அவ்வபோது பணம் தருவதாகவும்.

இப்பொழுது மட்டும் சிவா பெயரை வினோதன் கவனித்திருந்தால் என்ற நினைப்பில் அத்தனை திட்டி அனுப்பிவிட்டார் மகளை.

"உன்னைய கல்யாணம் பண்ணி அனுப்பி வச்சா தான் என் உசுருக்கு உத்திரவாதம். கொஞ்ச நேரத்துல பயத்தை காட்டிட்டா!" என மகளை திட்டியபடி வேலையை தொடர்ந்தார் மாலா.

"சம்பளம் தர மாட்டானுவனு சொல்லுதா? என்ன வேலை அது? எனக்கென்னமோ சரியா படல. சம்பளத்த தாராளா பாரு. இல்லைனா வீட்டுல கிடக்க சொல்லு! கல்யாணத்தை முடிச்சு அனுப்பி விடுவோம்" என்ற வினோதன்,

"ஆமா! என்ன சொல்றா அவ? இன்னும் நாலு நாள்ல மாப்பிள்ள டெல்லில இருந்து வாரான். வந்ததும் பாக்க வருவான். தயாரா இருக்க சொல்லு. அன்னைக்கு மாதிரி வம்புக்கு பேசுனா பேச வாய் இருக்காது. அவ கூட பொறந்தவ தான வனிதா? சொல்ற பேச்சை கேட்டு புருஷன் வீட்டுல அவ இஷ்டத்துக்கு இல்ல?" என்று மனைவியிடம் வினோதன் சொல்ல,

"சொல்லிட்டு தான் இருக்கேன் ... இருபத்து ரெண்டு வயசு தான் ஆகுதுன்னு புலம்பிட்டு இருக்கா.மாப்பிள்ள வீட்டுல வர சொல்லுங்க. அதெல்லாம் ஒண்ணுமில்ல!" என்றார் மாலாவும்.

"இந்த வயசுல பண்ணாம எப்ப பண்ணுவாளாம்? பொண்ணுக்கு கல்யாணம் பண்ண துப்பில்லைனு நாலு பேர் என்னை பார்த்து சிரிக்க தான? அம்மாவா அவளுக்கு புத்தி சொல்லி மாப்பிள்ளய பாக்க ரெடியா இருக்க சொல்லு!" என்றார் வினோதன்.

****************************************

"ஏன் மாமா! இதெல்லாம் ஒரு ஆம்புள புள்ளைக்கு அழகா? ஏன் மாமா இப்படி பண்ணீங்க?" அலுவலகம் வந்ததும் சிவாவின் முன் வந்து நின்றாள் மகிமா.

"நான் என்ன பண்ணினேன்?" என்றவன் அப்பொழுது தான் வந்து கணினியை உயிர்ப்பித்திருந்தான்.

"என்ன பண்ணிங்களா? நான் வீட்டுல போய் மாமா ஆபீஸ்ல அப்படி இப்படினு ஏதாவது சொல்றேனா? நீங்க மட்டும் ஏன் நான் என்ன பண்ணினாலும் சொல்லிக் குடுத்து அடி வாங்க வைக்குறிங்க?" என்றாள் இடுப்பில் கைவைத்து.

"என்ன டா காலையிலேயே பஞ்சாயத்தா?" என்று அப்போது தான் வந்தான் கார்த்திக்.

"அடிச்சாங்களா? மாமாவா?" என்றான் சிவா.

"ம்ம்க்கும். மாமா அடிக்கணும்னு வேற ஆசையா உங்களுக்கு? அடிச்சது உங்க அத்தை!"

"அத்தை அடிச்சு உனக்கு வலிச்சுடுச்சா?" என்று முறைத்தவன்,

"இதென்ன பழக்கம் வீட்டுல பொய் சொல்லிட்டு சுத்துறது? இதுல ஸ்டேட்டஸ் வேற!" என்றான் கண்டித்து.

"சொன்னா விட மாட்டுறாங்களே! நான் என்ன பண்ண? நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க!" மகிமா கேட்க,

"அப்படி என்ன சொல்லுவ நீ வீட்டுல போய் என்னை?" என்று சிவாவும் கேட்க,

"அதான்! போன மாசம் பெஸ்ட் எம்பிளாய் அவார்ட் வாங்குனீங்களே அதை சொன்னேனா? அதுக்கு முன்னாடி ப்ராஜெக்ட் சக்ஸஸ் பண்ணி குடுத்து பாராட்டு வாங்குனீங்களே அதை சொன்னேனா?" என்று மூச்சு பிடித்து அவன் வாங்கிய பட்டத்தை எல்லாம் சொல்ல,

"இதை வீட்டுல சொன்னா என்ன ஆகும்?" என்றான் சுழல் நாற்காலியில் நன்றாய் சாய்ந்து அமர்ந்து.

"ம்ம்ம்! உன் மாமன பாரு! நீயும் தான் இருக்கியேன்னு இன்னும் நாலு அடி விழும்!" என்றாள்.

"நான் செஞ்சதும் நீ செஞ்சதும் ஒன்னா? ஆபீஸ் ஆச்சேன்னு பாக்குறேன்! ஓடிரு!" என்றவன்,

"இந்த கடுப்புல தான் நைட்டு 'பாயாசம் சாப்பிடுங்க அங்கிள்'னு ஸ்டேட்டஸ் வச்சிருக்க இல்ல?" என்று கேட்க,

"ஆமா! பின்ன? அம்மா என்ன அடி அடிச்சாங்க தெரியுமா! இங்க பாருங்க!" என்று கையில் ஒரு விரலைக் காட்ட,

"பத்திரமா கையில தானே இருக்கு?" என்று சொல்லி கணினி பக்கம் திரும்பிக் கொண்டான்.

"மகி! பேசாம நீ வேற ஆபீஸ் போய்டு! இவனெல்லாம் ஆபீஸ்க்கு நேந்து விட்டவன். அவனும் திருந்த மாட்டன்.. நாமளும் நிம்மதியா இருக்க முடியாது!" கார்த்திக் சொல்ல,

"வேலிட் பாய்ண்ட் கார்த்திண்ணா! ஆனா அம்மா அனுப்பாதே! அது ஒரு சிவா பைத்தியம்!" என்று சொல்ல,

"அடிங்க.." என்ற சிவா நாற்காலியில் இருந்து எழுந்து கொள்ளப் பார்க்க, அடித்து பிடித்து ஓடிவிட்டாள் தன் இருப்பிடத்துக்கு.

"விரட்டுற டா நீ! ஆனாலும் மகி அம்மா பாவம் தான்!" என்று கார்த்திக் கிண்டலாய் கூறிவிட்டு அன்றைய வேலையை தொடர, சில நிமிடங்களுக்கு பின் சிவா மொபைலை கையில் எடுத்த போது,

"இந்த பொல்லாத உலகத்திலே ஏன் எனை படைத்தாய் இறைவா!" என்று பாடல் மகிமா பெயரில் ஒலிக்க, தன் இடத்தில் இருந்தே மகிமா இருக்கும் இடத்தை தலை சாய்த்துப் பார்த்தான் சிவா.

அவள் இடம் காலியாய் இருக்க, சீனியர் பெண் ஒருவரிடம் தூரமாய் நின்று பேசுவது தெரிந்தது.

"அடங்கவே மாட்றா!" நினைத்தபடி தலையசைத்து வேலையை தொடர்ந்தான்.

சிவாவின் வீட்டிலும் வாழவந்தான் ஒரு முடிவிற்கு வந்திருந்தார். இனி போட்டோவைக் காட்டி மகன் முன் நின்றெல்லாம் சரி வராது என நினைத்தவர், தானே ஒரு பெண்ணை பேசி முடித்து அடுத்த இரண்டு நாட்களில் பெண் பார்க்க வருவதாகவும் தகவல் சொல்லி அனுப்பி இருக்க, விஷயம் கனகவள்ளிக்கே இறுதி நேரத்தில் தான் தெரிய வந்திருந்தது

"நீங்க சொல்லுங்க த்தை! இதென்ன விளையாட்டா? அவன் வாழ்க்கை. அவனுக்கு பிடிச்சா தானே செய்ய முடியும்!" என ஈஸ்வரியிடம் வள்ளி சொல்ல,

"நான் சொன்னா உன் புருஷன் கேட்பானா வள்ளி? அவன் தான் பிடிவாதக்காரன் ஆச்சே!" என மறைமுகமாய் மகனுக்கு துணை நின்றார் ஈஸ்வரி.

"எனக்கென்ன? அவனும் உங்க மகன் மாதிரி பிடிவாதக்காரன் தான். கல்யாணம் பிடிக்காம எங்கேயும் ஓடி போய்ட்டா யாரும் என்னை சொல்ல கூடாது!" இருந்த கடுப்பில் மாமியாரிடம் கோபமாய் சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டார் வள்ளி.

மகன் மனதில் என்ன தான் இருக்கிறதோ ஏன் திருமணத்தை தள்ளி வைக்கிறான் என நேராய் கேட்க முடியாமல் அவர் தவிக்க, இங்கே ஆளாளுக்கு பந்தாடுகிறார்களே! என்று கோபம் தான் வந்தது வள்ளிக்கு.

அதை மகனிடமும் சொல்ல சில நிமிடங்கள் தான் அவன் யோசனை எல்லாம்.

"ஏன் இவ்வளவு பிடிவாதம் அப்பாக்கு?" எரிச்சலாய் கேட்டான் சிவா.

"வேறென்ன! நீயா யாரையும் கூட்டிட்டு வந்துடுவியோன்னு பயம். அவருக்கு பிடிக்குதோ இல்லையோ நமக்கு பிடிச்சதா இந்த வீட்டுல எதுவும் நடந்துட கூடாதே!" என்று கோபமானார் வள்ளி.

"அவருக்கு பிடிச்சிருந்தா ஓகேவாமா?" என்று சிரிப்பவனை என்ன சொல்ல என்று வள்ளி பார்க்க, சாப்பிட்டபடி சில நிமிடங்கள் சிந்தனையில் இருந்தான்.

"கல்யாணம் பண்றது அவ்வளவு பெரிய விஷயமா?" என்று சிவா கேட்க,

"கல்யாணம்னா சும்மாவா? எனக்கு தான் விதி! தாலி கட்டுற வர இவன் தான் உன்னை கட்டிக்க போறான்னு எதுவும் தெரியாம தலையை குடுத்துட்டேன். இப்பவும் பையனுக்கு அப்படி ஒரு இளிச்சவாய தேடுறாரோ என்னவோ!" என்று அந்த சில நிமிடங்களில் வள்ளி புலம்ப,

"சரி போலாம் ம்மா!" என்று சொல்பவனை நம்ப முடியாமல் ஆச்சர்யமும் அதிர்ச்சியுமாய் பார்த்தார் கனகவள்ளி.

தொடரும்..