• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிரியம் 31

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
880
647
93
Chennai
அத்தியாயம் 31

"மாமா!" என்ற அழைப்போடு ஓடி வந்து அவனின் வலது பக்க கைகளை கோர்த்து அதில் தலை சாய்ந்தவள் மகிழ்ச்சியில் அமைதியான புன்னகையுடன் அவளுக்கான இடம் கொடுத்து நின்றான் சிவபிரகாஷ்.

"உங்க போன் எங்க? எத்தனை போன் பண்ணினேன்! சட்டுன்னு என்னென்னவோ நினச்சு பயந்துட்டேன் மாமா" என்று சலுகையாய் சாய்ந்து கொண்டு மகிமா பேச,

"நேத்து ரூம்ல பவர் கட் அம்மு! பஸ்லயும் பவர் பாயிண்ட் வொர்க் ஆகல. பட் ஆஃப் ஆகும்னு நினைக்கல டா!" சிவா அவள் முகத்தைப் பார்த்து அதில் தெரிந்த கவலையை கண்டு தன் விளக்கத்தை கொடுத்தான்.

"அப்ப வீட்டுக்கு வந்தாவது கூப்பிட்டு இருக்கலாம்ல? அட்லீஸ்ட் அத்தை போன்ல இருந்தாவது கூப்பிட்டிருக்கலாம் மாமா!"

"அடிப்பாவி! அவனுக்கு பக்கத்துலயே நிக்குறேன். இன்னமும் என்னை நீ கவனிக்கல. போன் பண்ணலைனா அத்தை போன் நியாபகம் வருதா உனக்கு?" என்று கனகவள்ளி கேட்டபின் தான்,

"ஹாய் அத்தை! நீங்களும் வந்திருக்கிங்களா?" என்று கேட்டவளைப் பார்த்து சிவா சத்தமாய் சிரிக்க, வெளியில் கேட்ட பேச்சு குரலில் சமையலறையில் இருந்து வந்தார் மாலா.

"அண்ணி!" என்று ஆச்சர்யம் அடைந்தவர்,

"சிவா! எப்ப டா வந்த? உள்ள வாங்க!" என அழைத்தவர்,

"இவ்வளவு நேரமா வெளில நிக்க வச்சா டி பேசிட்டு இருந்த?" என்று மகளையும் திட்ட,

"ப்ச்! சாரி மாமா!" என்றாள் அதையும் சிவாவிடம் மட்டுமாய்.

வள்ளி மாலாவோடு உள்ளே செல்ல, "அதிருக்கட்டும் அம்மு! உன் பக்கத்து வீட்டு ஆண்ட்டி ஏன் நம்மளை அப்படி பாக்குறாங்க?" என்று கேட்கவும் அங்கே திரும்பியவள்,

"ஏதாச்சும் வேணுமா ஆண்ட்டி?" என்று அவரிடமே மகிமா கேட்கவும் அவர் சட்டென்று உள்ளே திரும்பிவிட,

"ஹேய்!" என்று அதிர்ந்தவன்,

"உன்னோட..." என்று அவன் தான் அவளையுமாய் வீட்டிற்குள் இழுத்து வந்திருந்தான்.

"எப்ப வந்த சிவா? இப்ப தான் இவகிட்ட கேட்டுட்டு இருந்தேன்!" என்ற மாலா,

"ரெண்டே நிமிஷம்! இட்லியை ஊத்திட்டு வர்றேன்!" என்று சொல்ல,

"அட உட்காரு மாலா! அதெல்லாம் வச்சுக்கலாம். இவன் இப்ப கொஞ்சம் முன்னாடி தான் வந்தான். வந்ததுமே பசிக்குதுன்னு சொன்னான். சாப்பிட்டு தான் ஓடி வர்றோம்!" என்றவர்,

"இவ ஆபீஸ் போறதுக்குள்ள வந்துடனும்னு சிவா சொல்லி தான் வேகவேகமா வந்ததே!" என்று சொல்லி வள்ளி சிரிக்க,

"அப்படியா மாமா?" என்று கேட்ட மகிமா முகத்தில் தான் அத்தனை குதூகலம்.

அதற்காகவே தானே அவனும் ஓடோடி வந்தது. எட்டு மணிக்கு சற்று முன் தான் வீடு வந்து சேர்ந்தவன் வந்ததும் மொபைலை சார்ஜில் போட்டுவிட்டு அன்னையை அவசரப்படுத்தி தான் அழைத்து வந்திருந்தான்.

"அண்ணே இல்லையா மாலா?"

"கடையை திறந்து வச்சுட்டு வருவாங்க அண்ணி! எனக்காக ரெண்டு இட்லி மட்டும். பொண்ணு பார்த்துட்டு போன அப்புறம் முதல் முறையா வந்திருக்கிங்க!" என்று மாலா ஆசையாய் கேட்க,

"அட என்ன கெஞ்சிகிட்டு! சாப்பிட்டு போனு சொன்னா சரினு சொல்ல போறேன்!!" என்று வள்ளியும் சொல்ல, மாலாவும் இவர்களுக்காக சமையல் செய்ய செல்ல, கூடவே வள்ளியும் சென்றார்.

"அம்மு!" என்ற அன்னை அழைப்புக்கு,

"ஒரு நிமிஷம் மாமா!" என்றவள் உள்ளே சென்று சிவாவிற்கான காபியோடு வர,

"டைம் ஆச்சே அம்மு! நான் வேணா ட்ராப் பண்ணவா?" என்றான் கேலியாய் அவளிடம்.

"ப்ளீஸ் மாமா! இன்னைக்கு ஒரு நாள்!" என்று கெஞ்சியபடி அவள் கொடுத்த காபியை வாங்கிக் கொண்டவன், மற்றொரு கையால் அவள் இடது கையைப் பற்றி அவளை அருகில் வைத்துக் கொண்டான்.

"ஹாப்பி அம்மு?"

"ரொம்ப ரொம்ப! கார்த்திண்ணாக்கு கால் பண்ணினேன்!" என்றவள் சொல்ல,

"தேடுவன்னு தெரியும் அம்மு! பஸ்ல இருந்து இறங்கினதும் தான் தோணுச்சு! அதான் ஆபீஸ்க்கு லீவ் இன்ஃபார்ம் பண்ணிட்டு உன்னை சர்ப்ரைஸ் பண்ணலாம்னு கிளம்பிட்டேன்!"

"போங்க மாமா! என்னவோ! உங்க விஷயத்துல மட்டும் நான் ரொம்ப வீக் ஆகிடுறேன்!" என்றவள்,

"உடனே முறைக்காதீங்க! நான் ஆபீஸ் கிளம்பி போயிருந்தா என்ன பண்ணிருப்பிங்க?" என்று கோபமாய் கேட்பதாய் நினைத்து அவள் கேட்க,

"என்ன பண்ணிருப்பேன்? குட்டிப் பொண்ணை பார்க்க ஆபீஸ் வந்திருப்பேன்!" என்றவன் காபியை கீழே வைத்திருந்தான்.

"நிஜமாவா?"

"என்ன நிஜமாவா?" என்று எழுந்து அவள் கை விரல்ளை அழுத்தமாய் பற்றிக் கொண்டவன்,

"உனக்காக தானே இங்க வந்தேன்? ஆபீஸ் வர மாட்டேனா?"

"ஆமா தான்!"

"ஹ்ம்!" என்றவன் புன்னகையும் அவன் தங்கள் கைகளை கோர்த்து சுவற்றில் சாய்ந்து நின்ற விதமும் என நொடியில் மௌனமாக்கிவிட்டான்.

"ஆபீஸ்ல இவ்ளோ ரிலாக்ஸா இவ்ளோ பக்கமா பார்த்து பேச முடியாதே அதுக்காக தான் வந்தேன்!"

"ம்ம்!" என்றவள் பாஷையில் வெளிவர இருந்த புன்னகையை அதக்கிக் கொண்டவன்,

"இன்னும் ஃபைவ் டேஸ் தான் இல்ல அம்மு?" என்று கேட்க, அதற்கும் "ம்ம்ம்" மட்டும் தான்.

சில நொடிகளின் மௌனங்களில் மெதுவாய் அவள் அவனை நிமிர்ந்து காண, அவன் கண்கள் முழுதும் முழுதுமாய் அவளிடம் மட்டும் என்றதில் அகன்ற விழிகள் அந்த பக்கமும் இந்த பக்கமுமாய் வழி தெரியா பிள்ளை போல அலைபாய,

"எதுக்காக தேடின?" என்றான் அந்த பார்வையில் தொலைந்து.

இதற்கு என்ன பதில் கூறிவிட முடியும்? அவனுக்கு தெரியாததா என்ன?

"மிஸ்ஸஸ் சிவபிரகாஷ்! உங்களை தான்!" என்ற அவன் சீண்டலில்,

"மாமா!" என்றவள் இதயம் தடதடக்க வார்த்தைக்கு தடுமாறினாள்.

"வந்ததும் கிடைச்ச வரவேற்பு நிஜமா அன்எக்ஸ்பெக்ட்டட் அம்மு!" என்று சொல்ல, அப்பொழுது இல்லாத நாணம் இப்பொழுது சட்டென ஒட்டிக் கொண்டது அவளிடம்.

"அந்த ஆண்ட்டி குறுகுறுனு பார்த்தாங்க. நீ ஓட விட்டுட்ட அவங்களை!" என்று சிவா சன்னமாய் புன்னகைக்க, அந்த பக்கத்து வீட்டு பெண்மணி பார்த்த விதமே இப்பொழுது இவன் சொல்லும் முறையில் தான் புரிந்தது மகிமாவிற்கு.

"மாமா!" என்ற சிணுங்கல் இப்பொழுதே அவனை வசமிழக்க செய்தது.

"அம்மு!" என்றவன் அவள் கைகளை உயர்த்திப் பிடிக்க அவனளித்த மோதிரம்.

சிறு அணைப்பினை எடுத்துக் கொள்ள சொல்லி உயிர் கேட்க, மெதுமெதுவாய் அவளின் கைகளை விட்டு விரல்களுடன் விரல் கோர்த்து ஒரு பெருமூச்சில் தன்னை சமன்செய்ய முயன்றான்.

மகிமா நிலை சொல்லவும் வேண்டாம். மனம் படபடவென்று அடித்துக் கொள்ள, அவன் ஒவ்வொரு அசைவுக்கும் அவன் கையிலிருக்கும் தன் கைகளின் வழி புரியாத பாஷையினை புரிய வைத்து உணர்வுகளை கடத்திக் கொண்டிருந்தது.

"அம்மு! சிவாவை சாப்பிட கூட்டிட்டு வா!" என்ற மாலாவின் குரலில் தன்னை மீட்டு நெற்றி ஓரம் நீவிக் கொண்டவன்,

"வா!" என்ற சொல்லோடு அந்த குரலுமாய் கைப்பிடித்து அவன் செல்ல, அவன்வழி நடந்தாள் இவள்.

"நீ சாப்பிட்டியா அம்மு?" என்ற வள்ளி,

"ஆபீஸ்?" என்று மகனைப் பார்க்க,

"இருக்கட்டும் அண்ணி! சிவா வந்திருக்கானே! அசைஞ்சிடுவாளா?" என்றார் மாலா.

"சரி தான்!" என்ற வள்ளி கதை பேசி இருக்க, ரெண்டு இட்லிகளோடு எழுந்து கொண்டான் சிவா.

"போதும் த்தை! வீட்டுல சாப்பிட்டேன்ல அதான் முடியல!" என்று சொல்ல,

"பரவால்ல சிவா!" என்றார் மாலாவும்.

"இன்விடேஷன் வந்துடுச்சு! பாக்குறீங்களா மாமா?" மகிமா நியாபகம் வந்தாளாய் கேட்க,

"போய் எடுத்துட்டு வந்து குடு டி!" என்றார் மாலா.

அழைப்பிதழை வாங்கி சிவா பார்த்துக் கொண்டிருக்க, வினோதன் வந்துவிட்டார்.

"வாங்க!" என இருவரையும் பொதுவாய் அழைத்தவர்,

"எப்ப வந்திங்க ஊர்ல இருந்து?" என்று கேட்க,

"மார்னிங் தான் மாமா!" என்றான் சிவா.

"மாலா சாப்பாடு ரெடி பண்ணு!" வினோதன் கூற,

"சாப்பிட்டுட்டு தான் பேசிட்டு இருக்கோம் ண்ணே! நீங்க சாப்பிட்டு வாங்க!" என்றார் வள்ளி.

"அவருக்கு மாவு கஞ்சி தான் அண்ணி காலையில!" என்ற மாலா கொண்டு வந்து கொடுக்கவும் அதை குடித்துவிட்டு,

"போன வேலை எல்லாம் நல்லபடியா முடிஞ்சதா?" என்று சிவாவிடம் பேச, கனகவள்ளி அண்ணனை தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

எப்பொழுதும் அண்ணன் இப்படி தான். யாரிடமும் வழிய சென்று பேசுவதில்லை. பேசும் பொழுதும் கூட எப்பொழுதுமே சிறு சுருக்கம் இருக்கும். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அது ஒட்டாத தன்மை. அறிந்தவர்களுக்கு அவரது குணம். பணம் என்ற விஷயத்தில் கொஞ்சம் கறார் தான். வேறு என்ன கெட்டதை சொல்லிவிட முடியும்? என்று நினைத்து பார்த்தவர் மனம் அடுத்து கணவரிடம் வந்தது.

அவரிடமும் கெட்ட குணம் என்று என்ன சொல்ல? தன் பேச்சை மற்றவர்கள் கேட்டு நடக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அது அவருக்கான மரியாதையை குறைச்சல்.

"ம்மா!" என்ற மகன் சத்தத்தில் வள்ளி திரும்ப,

"மாமா கல்யாண வேலை எப்படினு கேட்குறாங்க!" என்றான்.

"நல்லா தான் போய்ட்டு இருக்கு ண்ணே! நாளைக்கு பத்திரிக்கை குடுக்க ஆரம்பிக்கணும். சாயந்திரம் எங்க கோயில்ல போய் சாமி கும்பிட்டு முதல் பத்திரிக்கை சாமிக்கு வச்சுட்டா ஆரம்பிச்சிடலாம்!" என்றார்.

"நானும் நம்ம கோவிலுக்கு நாளைக்கு போகலாம்னு தான் இருக்கேன்" வினோதன் சொல்ல,

"இன்னைக்கு மகி லீவ் சொல்லிட்டாங்க. நீங்க சரினு சொன்னா இன்னைக்கே நாமளும் போய்ட்டு வந்துடலாம்!" மாலா கேட்க, மகளைப் பார்த்த வினோதன்,

"சரி போவோம்!" என்றார்.

மேலும் அரை மணி நேரம் இருந்துவிட்டு கிளம்பினார் சிவாவும் கனகவள்ளியும்.

"நாளைக்கு ஆபீஸ்ல பாக்கலாம் அம்மு! அஃப்டர்நூன் ஷிப்ட் தான் வருவேன்! அது தான் கேட்டிருக்கேன். மேரேஜ் ஒர்க் பாக்கணுமே அதனால! பொசிஷன் சேஞ்ச் என்னனு அங்க பேசி முடிக்கவும் நாம இன்ஃபார்ம் பண்ணிடலாம்" என்று கூறி தான் விடைபெற்றான் சிவா.

தனக்காக தனக்கு பிடித்தவர்கள் செய்யும் செயல் சிறிதாய் எனினும் அது மனதில் பெரும் இடத்தைப் பிடித்துக் கொள்ளும் தானே!

இங்கே தன்னை தேடி தேடி வரும் மகிமா சிவாவின் மனதினை ஆக்கிரமித்திருக்க, அடுத்தடுத்த செயல்களை அவளுடன் ஆவலுடன் பகிர்ந்து கேட்டு என அவளுக்கு முன்னுரிமை கொடுத்து மகிமாவினுள் தங்கிவிட்டான் சிவா.

இதோ அலுவலகத்தில் அவர்களின் திருமணத்தைப் பற்றி கூறி அனைவரின் வாழ்த்துகளோடு அவர்களின் வரவினையும் உறுதி செய்துவிட்டு தந்தைக்கு உதவியாய் திருமணம், நிச்சயம் என அனைத்து வேலைகளிலும் அவனே முன் நிற்க, நாட்கள் பறந்து கொண்டிருந்தது.

கூடவே காதல் பிரியத்தின் பெயரில் அதிகரிக்க அதிகரிக்க இரு நேசப் பறவைகளும் திருமண நாளை எதிர்நோக்கி காத்திருந்தது.

தொடரும்..