• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிரியம் 6

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
880
647
93
Chennai
அத்தியாயம் 6

தன் அறையில் அன்னை அருகே அமர்ந்த சிவா, "ம்மா! இங்க பாருங்களேன்!" என்றவன் காலையில் மகிமா வைத்திருந்த அந்த ஸ்டேட்டஸை ஓட விட்டான் அன்னையிடம் காட்டி.

"எவ்வளவு சேட்டை பாருங்க இவளுக்கு. இதே வேலையை தான் ஆபீஸ்லேயும் செஞ்சு வச்சா. நாளைக்கு போய் பாத்துக்கறேன்!" என்றான் மகிமாவை திட்டியபடி மிதமான புன்னகையோடு.

வீடியோவைப் பார்த்து எதுவும் சொல்லாதவர் கண்களோடு மனமும் சிவாவின் புன்னகையில் தான் நிலைத்தது.

இரண்டு நாட்கள் தான் ஆகிறது அவனின் இந்த புன்னகைக்கு எந்த பஞ்சமும் வந்துவிட கூடாது என்று எண்ணி. அதற்குள்ளா இப்படி நடக்க வேண்டும்? என்று நினைவோடு மகனைப் பார்த்தவர் மனம் கலங்க, அது கண்களிலும் ஈரத்தைக் கொண்டு வந்தது.

"இதெல்லாம் ஒரு விஷயமா? விடுங்க ம்மா! பொண்ணை பார்த்துட்டு பிடிக்கலைனா அந்த பொண்ணுக்கு ஹர்ட் ஆகாதானு அன்னைக்கே நான் கேட்டேன்ல? அது மாதிரி தான் இதுவும்" என்றவன்,

"என்ன! அட்லீஸ்ட் அந்த வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி சொல்லி இருந்தா கூட நமக்கு பெரிய விஷயமா தெரிஞ்சிருக்காது. நாம நம்ம வேலையை பாத்துட்டு போயிருக்கலாம். இது அவங்க பரேண்ட்ஸ் பண்ணின தப்பு" என்றவன் இன்னும் அன்னை சமாதானம் அடையாததைக் கண்டு,

"இப்ப என்ன? இதனால எனக்கு வேற பொண்ணே கிடைக்காதா என்ன?" என்று கேட்க,

"சிவா! ஏன் ஏன் ஏன்?" என அத்தனை ஏன் கூறியவர்,

"உனக்கென்ன? அவளுக்கு தான் உன்னை பாக்கவே குடுத்து வைக்கல. உனக்கு நான் பாக்குறேன் டா பொண்ணு" என்றவர்,

"அந்த ராஜி சொன்னா அந்த பொண்ணு யாரையோ விரும்புறா அதான் இப்படி நடந்துகிட்டான்னு.. பொம்பளை புள்ளைக்கு அவ்வளவு கோட்டித்தனம் தேவை தான்!" என்றார்.

"ப்ச்! ம்மா! அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு. அந்த பொண்ணுக்கு என்ன சிட்டுவேஷனோ? அவங்க பேமிலில என்ன சொல்லி வச்சாங்களோ? என்ன ரீசனா இருந்தாலும் நல்லா இருந்துட்டு போகட்டும். உங்க வாயால அப்படி சொல்லாதீங்க. ஆணோ பொண்ணோ கஷ்டமோ நஷ்டமோ எல்லாருக்கும் ஒண்ணுன்னு நீங்க தானே சொல்லுவீங்க!"

"போடா! நீ இவ்ளோ நல்லவனா இருக்காத! எனக்கு பக்குன்னு இருக்கு" என்றவர் மகன் வார்த்தை புரிந்து,

"ம்ம் அவளும் நல்லாருக்கட்டும்!" என்றார்.

"ம்ம்ம்!" என்றவன் புன்னகைக்க,

"இனி இந்த மனுஷனை மட்டும் நான் நம்புறதா இல்ல. நான் பாக்குறேன் டா. தேடி அலசி உனக்கு ஏத்த ஜோடியா அம்சமான பொண்ணா கொண்டு வர்றேன் பாரு!" என்று சொல்ல, அதற்கு பதிலில்லை அவனிடம்.

"அம்மாவை நம்புற தான சிவா?"

"ம்மா! இது ஒரு கேள்வியா?" என்றவன்,

"நடக்குறது நடக்கட்டும். ஆனா இனி இதையே பேசி நீங்க அப்பாகிட்ட பாட்டிகிட்டனு சண்டைக்கு நிக்க கூடாது. இந்த டாபிக் இந்த நிமிஷத்தோட ஓவர். புரிஞ்ச்சா?" என்றான் அன்னை நாடியில் கைவைத்து கொஞ்சி.

"ம்ம்ம்!" என்றவரும் அவன் முயற்சி புரிந்து மெலிதாய் புன்னகைக்க,

"லீவ்னு ஆகிப் போச்சு. வெளில போலாமா? ஹெவியா சாப்பிட்டா எல்லாம் மறந்துடும்.. ம்ம்?" என்று புருவம் உயர்த்தி கேட்க, சரி என்று புன்னகைத்தவர் ஈஸ்வரி, வாழவந்தான் என அவர்களுக்கான உணவை தயார் செய்து வைத்துவிட்டு வெளியில் கிளம்பிவிட்டார்.

"கிளம்பிட்டா! இது ஒரு வேலையா வச்சுக்கிட்டு இருக்கா. சொன்னா அதுக்கு வாய் மட்டும் நீளும். இப்ப என்ன ஆகி போச்சுன்னு மவனை தனியா கூட்டிட்டு போராளோ! இப்படி பண்ணி தான் அவன் அப்பன்கிட்டயே அவனை சேர விடாம வச்சிருக்கா!"

ஈஸ்வரிக்கும் நடந்த காரியம் பிடிக்கவில்லை தான். ஆனால் அதில் மகனை வள்ளி குறை சொல்வதையும் ஏற்று கொள்ள முடியவில்லை. வள்ளியிடம் பட்டும் படாமலும் தான் வைத்துக் கொள்வார்.

எல்லாவற்றிற்கும் அமைதியாய் போவதில்லை வள்ளி. அதற்காக எல்லாவற்றிற்கும் பேசிடவும் மாட்டார். அதற்காகவே ஈஸ்வரி வள்ளியை விட்டுப் பிடித்து வைக்கிறேன் என அமைதியாய் இருக்க, இன்று இந்த நிலையிலும் இப்படி பேரனை தனியே அழைத்து செல்ல வேண்டுமா எனும் ஆதங்கத்தில் புலம்ப,

"நீங்க கொஞ்சம் சும்மா இருங்க ம்மா! எங்கேயோ போய்ட்டு வரட்டும். இங்க இருந்தா ரெண்டும் மூஞ்சை பாத்து முணங்கிகிட்டு தான் இருக்கும்" என்று அன்னை வாயை மூடிவிட்டார் வாழவந்தான்.

என்ன தான் வெளியில் அடாவடியாய் பேசி மனைவியை கை நீட்டும் அளவுக்கு சென்றிருந்தாலும், இப்பொழுது மகனை நினைத்த போது 'இன்னும் கொஞ்சம் பொறுமையாய் இருந்திருக்கலாமோ இந்த விஷயத்தில்!' என்று தோன்றாமலும் இல்லை வாழவந்தானுக்கு.

அதனாலேயே இருவரும் கிளம்பும் சமயம் அமைதியாய் இருந்தவர் அன்னையையும் பேச விடாமல் அடக்கிவிட்டார்.

இவை எல்லாவற்றிருக்கும் மேல் வள்ளியை போகாதே என்று இவர்கள் சொல்லவும் முடியாதே! சொன்னால் கேட்டு விடும் ரகமா? அதுவும் மகன் அருகில் இருக்கும் சமயம் வேறு!

*********************************************

"ம்மா! ம்மா! ப்ளீஸ் ம்மா ப்ளீஸ் ம்மா! அப்பாகிட்ட சொல்லும்மா!" மகிமா கெஞ்ச கெஞ்ச, கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் அவளுக்கான புடவையை எடுத்து கட்டிலில் வைத்த மாலா அதற்கு ஏற்ற நகையை பார்வையிட்டு அமர்ந்தார்.

"அந்த கல் ஆரம் இதுக்கு மேட்ச் ஆகும் ம்மா!" என்று வனிதா சொல்ல,

"ஆரம் மட்டும் போட முடியாதே வனி! அதான் கழுத்தை ஒட்டின மாதிரி இருக்குமே அதை தேடுறேன்!" என்றார் மாலா.

"நான் ஒருத்தி கத்திட்டு இருக்கேன்.. கேட்குதா இல்லையா உங்களுக்கு?" என்று இன்னும் அவள் சத்தமிட,

"கேட்குது மகி! ஆனா ஒன்னும் செய்ய முடியாதே! உனக்கே தெரியும். தெரிஞ்சும் ஏன் எனர்ஜியை வேஸ்ட் பண்ற?" என்ற வனிதா,

"அப்பா ஹால்ல தான் இருக்காங்க. இவ்வளவு சத்தம் போடாத!" என்றாள் மெதுவாய்.

"நீயாவது சொல்லேன் வனி! பொண்ணு பாக்கவே நாலு நாள் கழிச்சு தான் வர்றதா சொன்னாங்க இப்ப இன்னைக்கே பூ வைக்க வர்றதா சொல்றிங்க. என்ன நடக்குது இங்க?" என்ற மகிமா,

"என்னை பார்த்தா பாவமா இல்லையா உங்களுக்கு?" என்றாள்.

"ம்ம் இருந்துச்சு! காலையில ஸ்வீட் சாப்பிடும் போது சொன்னியே 'செம்ம டேஸ்ட் ம்மா இன்னொன்னு எடுத்துக்கவா'ன்னு. அப்ப நிஜமாவே பாவமா தான் இருந்துச்சு!" என்று சொல்லி வனிதா வாய் மூடி சிரிக்க, மாலாவும் சிரித்தவர்,

"போதும் போதும். இன்னும் ஒரு மணி நேரத்துல வந்திடுவாங்க. இந்த சேரி மாத்திட்டு இந்த நகை எல்லாம் போட்டுக்கோ. வளையல் அது கூடவே இருக்கு!" என்று சொல்ல சொல்ல மகிமா பாவமாய் பார்த்து நின்றாள்

மகிமா காலையில் எழுந்த பொழுது அருகில் மாலா வனிதாவிடம் அலைபேசியில் பேசியது தான் கேட்டது.

"பொண்ணு பார்க்க தான் போக போறாங்க. சிவாக்கு பிடிச்சு ஓகே ஆச்சுன்னா அண்ணி உடனே போன் பண்ணிடுவாங்க!" என்று சொல்ல, அதை கேட்ட மகிமா உடனே உதித்த யோசனையில் சிவாவுக்கு என வீடியோவை தேடி எடுத்து தன் தந்தையை மட்டும் வாட்சப்பில் மறைத்துவிட்டு ஸ்டேட்டஸ் வைத்து தான் அந்த நாளை துவங்கினாள்.

அதன் பின் கிளம்பி அலுவலகம் சென்றவளுக்கு பதினோரு மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து அழைப்பு வர, உடனே வீட்டிற்கு வர சொல்லி தந்தை சொன்னதாய் அன்னை சொல்லவுமே,

"ம்ம்ஹ்ம்ம் நான் மாட்டேன்! அப்பா கூப்பிட்டா நிச்சயமா எனக்கு நல்ல நியூஸா இருக்க வாய்ப்பே இல்லை!" என்றாள் என்னவென்று கேளாமலே!.

"நீ வரலைனா அப்பாவே வருவாங்க உன்னை கூப்பிட!" என்று சொல்ல, மறுபேச்சு பேசாமல் கிளம்பி ஓடி வரும் பொழுது, அங்கே வனிதாவும் வந்திருந்தாள்.

வந்ததும் அங்கிருந்த இனிப்பை எடுத்து சாப்பிட்டபடி கதை கேட்க நின்றவள் காதில் பூ வைக்க வருவதற்கான தகவல் விழ, எதிர்பாராதவள் அப்படியே நின்றுவிட்டாள் இனிப்போடு.

"சாப்பிட்டு தான் ஆகணும். கீழ வச்சிட முடியாது!" இனிப்பை சிரித்தபடி வனிதா சொல்ல, இரு அர்த்தங்களும் நன்றாய் புரிந்தது மகிமாவிற்கு.

மாலாவிற்கும் முதலில் பெரிதாய் உடன்பாடில்லை தான். ஆனால் திருமணப் பேச்சு என்று வந்த பிறகு முதலிலேயே தடுப்பதை போல பேச வேண்டாம் என நினைத்திருக்க, இப்பொழுது உடனே நேரில் பார்க்காமல் பூ வைக்கவே வருகிறார்களே என்ற பொழுது மீண்டும் அதற்கு தடையாய் நிற்க மனதில்லை.

கேள்விபட்ட வரையில் நல்ல இடம். மாப்பிள்ளையை பற்றி நல்ல விதமாய் தான் தெரிந்தவர்களும் கூறி இருந்தனர். சொந்த ஊர் இது தான் என்றாலும் மகள் இனி வாழ இருப்பது டெல்லியில் என்ற கவலை மட்டும் தான்.

இருந்தாலும் பூ வைக்க வருகிறார்கள் என்ற உடனேயே மாப்பிள்ளை பற்றிய தகவல்களை வனிதா மூலம் சிவா எண்ணுக்கு அனுப்ப சொல்லி விட்டார் மாலா. இன்னும் அவன் பார்க்கவில்லை என்றதும்,

"அங்க என்ன நடந்துச்சுன்னு கேட்க கூட எனக்கு நேரமில்ல. அண்ணி போன் பண்ணட்டும். அண்ணே வீட்டுல இருப்பாரா இருக்கும். அதான் இன்னும் போன் பண்ணல. அவங்களே பார்த்துட்டு கூப்பிடட்டும்!" என்றிருந்தார்.

வந்து இவ்வளவு நேரமும் மந்திரித்து விட்டதை போல சுற்றி வந்த மகிமா அன்னையிடம் கெஞ்சிப் பார்த்தவள் இனி எதுவும் மாறப் போவதில்லை என உணர்ந்து அப்படியே அமர்ந்துவிட்டாள்.

திருமணம் செய்வதில் எல்லாம் அவளுக்கு எந்த கவலையும் இல்லை. ஆனால் இப்பொழுதே செய்ய வேண்டுமா எனும் எண்ணம் தான்.

திருமணம் முடிந்தால் சுதந்திரம் போய்விடும் என்ற எண்ணம். அதுவும் தன்னுடன் படித்த தோழிக்கு திருமணம் முடிந்திருக்க, அவளை அவள் கணவன் எதற்கும் வெளியில் அனுப்புவதில்லை, போனை எடுக்க விடுவதில்லை என கூறியதை கேட்ட பொழுதே அவள் நினைத்திருந்தால் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு தனியாக சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று.

இப்படி வேலைக்கு சேர்ந்து மூன்றே மாதங்களிலா என்று நினைக்கும் பொழுது கவலையாய் தான் இருந்தது.

அதையும் தந்தையிடம் கூறி இருந்தாலே!

"ஆமா! வேலை பார்த்து இங்க நீ கொண்டு வந்து தான் நிறையுது எங்களுக்கு! போய் உன் புருஷன் சரினு சொன்னா எங்க வேணா வேலைக்கு போயிக்க. இதுக்கு மேல பேசி என்கிட்ட வீணா அடி வாங்காத. உன் கல்யாணத்தை முடிச்சி சொந்தக்காரன் முன்னால என் கடமையை முடிச்சுட்டேன்னு நான் பெருமையா நிக்கணும்!" என்றுவிட்டார் அப்பொழுதே!

"மகி! சும்மா ரொம்ப யோசிக்காத டா. கல்யாணம் ஒன்னும் அவ்வளவு பெரிய விஷயம் இல்ல!" என வனிதா சமாதானம் செய்ய,

"ம்ம்! ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் எப்படி வாழறோம்ன்றது இருக்குல்ல? அது சின்ன விஷயம் இல்ல தானே வனி!" என்றாள் மகிமா சிந்தித்தபடி.

தொடரும்..
 

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,273
498
113
Tirupur
மகிமா என்ன சேட்டை செய்ய போகுதோ தெரில
 
  • Haha
Reactions: Rithi