• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மனசு - 37

Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
834
95
93
Jaffna
பகுதி 37


மைதிலியின் சம்மதத்தினை ஸ்ரீயிடம் தெரிவித்தனர். அவனுக்கு தான் தெரியுமே அவளை, பெரியவர்கள் பேச்சுக்கு எப்போதும் மரியாதை அளிப்பவள் என்று. அதனால் தானே தாயிடம் முதலில் பேசச் சொன்னான்.

மைதிலியினது சம்மதத்தினைத் தொடர்ந்து, அடுத்து வரும் முகூர்த்தத்திலேயே தனது திருமணம் என்றும் விட்டான். அவனது வேகம் பயமாக இருந்தாலும், மீண்டும் மலை ஏறிவிடுவான் என்ற பயத்தில் சம்மதித்தவர்கள்,

"வர வர சின்ன பையன் போல அடம்பிடிக்க ஆரம்பிச்சிட்ட. இனிமே இதை எல்லாம் குறைச்சுக்கோ. உன்னை கட்டிக்கப் போறவ பத்தி தெரியும்ல? இதெல்லாம் பாத்து பயந்திட போறா..." என மகனைக் கண்டித்தவர் அறிய வாய்ப்பில்லை, மகன் மருமகளை அடக்கப் போகிறானா? இல்லை, அவனே அடங்கப்போகிறானா? என்று.

ஈஸ்வரியும் ஸ்ரீயின் ஆசைக்கு தடை போடவில்லை. மைதிலியை மருமகளாக கொண்டு வருகிறேன் என்று கூறினால் யாருக்குத்தான் கசக்கும்? ரங்கசாமிக்கு சங்கடமாகத்தான் இருந்தது. என்னதான் பேரனது நடவடிக்கைகளும் குணங்களும் மாறினாலும், அவன் ஒன்றும் ஏகபத்தினி விரதன் இல்லையே!

மைதிலியைக் காணும் வரை நாளுக்கு ஒரு பெண்ணுடன் கூத்தடித்தவன் என நினைக்கும் போது, மனம் என்னவோ ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. ஆனால் ஒரு தாத்தாவாக தனது சந்ததி ஸ்ரீயோடு முடிந்து விடக்கூடாது என்றல்லவா அவர் நினைத்தார்.

அவனும் மைதிலியல்லாத வேறு ஒருத்தி தனக்கு மனைவியாக வரமுடியாது எனும் போது, அவரால் தான் என்ன கூறமுடியும்?

இந்திரா மகளைக் காண வந்து ஐந்து நாட்கள் ஓடியே விட்டது. இங்கேயே கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம் என ஈஸ்வரி கேட்டுக் கொண்டதால், இந்திராவும் வேறு வழியின்றி சம்மதித்தார்.

அவரால் தான் என்ன செய்ய முடியும்? சம்பிரதாயப்படி பெண் வீட்டில் தான் திருமண நிகழ்வே இடம்பெற வேண்டும். ஆனால் ஊரில் சொந்தமென்று கணவன் வழி தங்கையிருந்தும், உதவியின்றி நிர்கதியற்று நிற்கும் தனி ஒரு பெண்மணியால், உடனே கல்யாண ஏற்பாடுகளை செய்ய முடியும் என்பது பேச்சளவிற்கு கூட சாத்தியமாகாதே!
இன்னும் இரண்டே நாளில் திருமணம். ஆனால் இன்னும் தன் சார்பில் எவருக்கும் அழைப்பு விடுக்கவில்லை. அதனால் தான் காலையிலேயே அக்கம் பக்கத்தினருக்கும், கணவனின் உடன் பிறந்தவளுக்கும் திருமணத்திற்கு அழைப்பு விடுக்க தயாராக,

"ஏன் இந்திரா, நான் சொல்லுறேன்னு தப்பா எடுக்காத. கட்டாயம் நீ ஊருக்கு போய்தான் ஆகணுமா? ஊர்ல உனக்கு சொந்தம்னு பெருசா யாருமே இல்லையே! உன் நாத்தனாரும் இப்போ அவ்ளோ உறவில்லன்னு மைதிலி சொன்னா. அவ மகனும் மைதிலிய ஏமாத்தினான், அவங்ககிட்ட சொல்ல தான் வேணுமா?" என்றார் ஈஸ்வரி.

"உறவென்று சொல்லிக்க அவ மட்டும் தானே எனக்கு இருக்காங்க. நம்பிக்கை துரோகம் செய்திட்டாங்க என்கிறதுக்காக, நம்மளும் அதையே அவங்களுக்கு செய்யணுமா? அப்புறம் அவங்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்மா? அதுவுமில்லாமல், பொண்ணு பக்கமும் நாலு சாதி சனம் வேணும். அதுதானே உங்க சொந்தங்க மத்தியில உங்களுக்கும் மரியாதையா இருக்கும். கனகரட்ணம் பிரச்சனையால அவளை ஊருக்குள்ள தப்பா பேசுறாங்க. அதை இல்லனு நிருபிக்க வேணாமா? அதனால கண்டிப்பா போயே ஆகணும். சின்னவளையும் விட்டுட்டு தான் கிளம்புறேன். அவளையும் கொஞ்சம் பாத்துக்கோங்க." என்றவர்,

"மைதிலி, அம்மா இல்லன்னு ரெண்டு பேரும் வீட்டுல சேட்டை பண்றது போல இங்கயும் பண்ணி வச்சிடாதீங்க. ஜனா உனக்கும் தான்... அப்புறம் யாராச்சும் ஏதாவது சொன்னாங்கன்னா அம்மா என்ன செவ்வேன்னு தெரியும்ல...?" என எச்சரித்தவர் மற்றவர்களிடமிருந்தும் விடைபெற்றார்.

அவர் காரில் ஏறி கேட்டினை தாண்டவில்லை, "ஐ! அம்மா போயிட்டாங்களே...!" என பெரிதாக கூச்சலிட்ட சின்னவள்,

"அக்கா, அம்மா போயிட்டாங்க. நம்ம ஜாலியா இருக்கலாம்." என்று துள்ளியவள்,

"இடிச்சுக்கோக்கா!" என்று தனது தோள்களால் பெரியவளது எட்டாத தோள்களில் இடிக்க,

"ஏய், அமைதியா இரு! அம்மா சொல்லிட்டு போனதை மறந்திட்டியா?"

"அவங்க தான் இப்போ இல்லையேக்கா. அப்புறம் என்ன? நீ வா!" என தமக்கையின் கையினைப் பிடித்து இழுத்துக்கொண்டு உள்ளே ஓடியவள், ஷோபாவில் ஏறி நின்று துள்ளிக்குதிக்க, "இறங்குடி, உக்கார்ற சோபா மேல ஏறி நின்னு துள்ளுற?" என தங்கையைப் பிடித்திழுத்தாள்.

"விடும்மா, சின்ன பொண்ணு தானே? இத்தனை நாள் இந்த மாதிரி சேட்டை செய்ய யாருமில்ல. இப்போ தான் வீடே கலகலப்பா இருக்கு. அவ என்ன செய்தாலும் எதுவும் சொல்லாத." என விஜயாவுடன் சேர்ந்து ஈஸ்வரியும் அவள் புறம் நிற்க,

"சொல்லிட்டிங்கல்ல... இனி வீட்டுல எந்த பொருளும் உருப்படியா இருந்த போல தான். எல்லாத்தையும் உடைச்சு வைக்க போறா, எனக்கென்ன?" என்றவாறு ஓரமாக இருந்த இருக்கையில் அமர,

"நீ வாயேன்க்கா, என்கூட விளையாட..." என அழைத்தாள்.

"நீ அம்மாக்கிட்ட அடிதான் வாங்க போற ஜனா. முதல்ல இங்க வா, உன்கிட்ட கொஞ்சம் பேசணும்."

"முடியாது, நீ வேணும்னா இங்க வா." என்றாள் சின்னவள்.

"ஏய் எருமை! இப்போ வரப்போறியா, இல்லையா?" என்றவள் பேச்சை அலட்சியம் செய்துவிட்டு, மீண்டும் இருக்கையில் தொங்கியவளை,

"நான் கூப்பிட்டிட்டு இருக்கேன். நீ என்னடான்னா பெரிய இவ போல சீன் போடுறியா? உன்னை..." என அவளைப் பிடிக்க போனவள் கைகளில் சிக்காமல், குதித்து விழுந்து ஓடியவள் காதைப் பிடித்து இழுத்து வந்து அருகில் அமர்த்தியவள்,

"நேர்ல தான் நீ சின்ன பொண்ணு மாதிரி இருக்க, அன்னைக்கு போன்ல அம்மாவை எதிர்த்து பேசினதை கேட்டு, நானே ஆடிப்போயிட்டேன். அம்மா கூடவே வாயாடுற அளவுக்கு வளர்ந்துட்டியாடி நீ?"

"ஆ... மேடம் நீங்க ஊரை விட்டு வந்து வெறும் நாலே மாதம் தான் ஆகுது, நாலு வருஷமில்ல... அன்னைக்கு அத்தையை எதிர்த்து பேசினதுக்கு காரணம், அவங்க உன்னை தப்பா பேசினாங்க. அவங்க யாரு, உன்னை தப்பா பேச? அதான் திட்டி விட்டுட்டேன். அதை கூட வயசுக்கு வராமலே இந்த வாயாடுறேன், நானும் யாரையாவது இழுத்துட்டு போவேன்னு சொல்லிருக்கு அது..." என்றவள்,

"அப்பா இறந்ததுக்கப்புறம் நீ இப்பல்லாம் ரொம்பவே மாறிட்டக்கா. முன்னெல்லாம் என் கூட எதுக்கெடுத்தாலும் சண்டை போடுவ, அம்மா வீட்டுல இல்லனா நீதான் முதல்ல சந்தோஷப்படுவ. இப்போ நானே விளையாடக் கூப்பிட்டாலும் என்னை கண்டுக்கிற இல்ல. ஏன்க்கா இப்படி மாறிட்ட? எனக்கு இந்த அக்கா பிடிக்கல. என்னோட அக்காவா எனக்கு வேணும்க்கா." என்றாள் முன்னைய மைதிலியை இழந்த கவலையில்.

சின்னவள் தன்னை எத்தனை ஆழமாக கவனித்திருக்கிறாள் என்பது மைதிலிக்கு புரிந்தது. எந்த சோகம் தனக்குள் இருந்தாலும், அதை தன் மனதோடு புதைத்து விடுபவளது சேட்டை என்றும் குறைந்ததில்லை. எப்போது தனக்கும் ஸ்ரீக்குமான திருமணப் பேச்சு ஆரம்பமானதோ, அன்றிலிருந்து ஆயிரம் கேள்விகள் அவள் மனதில் ஊர்வலம் நடத்தியதன் தாக்கம் தான், அனைவரிடமும் இருந்து அவளை வேறுபடுத்திக் காட்டத் தொடங்கியது.

ஆம் இந்திரா, விஜயாவிற்கு அளித்த வாக்கினை காப்பாற்ற, திருமணத்திற்கு சம்மதித்தவள் மனமோ ஒரு நிலையில் இல்லை என்பதுதான் உண்மை. ஏதோ ஒரு நம்பிக்கையில், அன்னையின் கண்ணீரைக் காண விரும்பாது, தான் கொடுத்த வாக்கே தன்னை இப்படி ஒரு இக்கட்டில் கொண்டு வந்து விடும் என, அவள் கனவிலும் நினைக்கவில்லை. ஆனால் இந்த திருமணம் எந்த வகையில் சாத்தியம் என்பது தான் அவளது பெரும் கேள்வியாக இருந்தது.

ஸ்ரீ நல்லவன் இல்லை என்பதை முதல் பார்வையிலேயே அறிந்து கொண்டவள், கண்ணெதிரே வேறொரு பெண்ணுடன் கூத்தடித்து மாத்திரமல்லாது, அவனது மன்மத லீலைகளை தெய்வாணை உதிர்த்த வார்த்தைகளில் கேட்டவளுக்கு, இந்த பந்தத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதே சமயம் மகளை நம்பி வாக்கு கொடுத்தவரை மீறி மறுத்தால், பெற்றவள் தலை குனிவை சந்திக்க நேரிடுமே என தன் இக்கட்டான நிலையை நினைத்து நொந்தவளுக்கு, என்ன செய்து இந்த திருமணத்தை நிறுத்துவது என்பது மட்டும் தெரியவில்லை.

இந்திராவிடம் சொன்னால் திருமணத்தை நிறுத்தி விடுவார் தான், ஆனால் அவரின் நம்பிக்கை என்னாவது?

மகள் மனதைப் புரிந்து கொள்ளாமல், என்னை கஷ்டப்படுத்தி விட்டதாக நினைத்து வருந்தி, அப்பாவைப் போல அம்மாவிற்கும் என நினைத்தவளுக்கு அதற்கு மேல் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

'இல்லை... இல்லை... என்னால ஒரு உயிர் போனதே போதும், இன்னொரு உயிர் போகக்கூடாது. ஆனால் இப்போ இதை எப்படி தடுப்பது? விஜயா அம்மாகிட்டயே சொல்லிடுவோமா?' என எண்ணியவள்,

'சொன்னால் ஏன்னு காரணம் கேட்பார்களே? காரணத்திற்கு நான் எங்க போவேன்? உங்கள் பையன் நடத்தை சரியில்லை. பல பெண்ணுங்களோட உறவில் இருந்தான். என்னையும் ஒரு சில முறை கட்டாயப்படுத்தி முத்தம் வைத்தான்னா சொல்லமுடியும்? அப்புறம் பெரியவர் மறைச்சு வச்சிருக்கிற ரகசியத்தை நானே உடைச்சதா ஆகாதா? இல்லை, விஜயாவால் தான் இவற்றை கேட்க முடியுமா?

சரி, இவர்கள் தான் யாரோ? இவர்களுக்கு என்ன நடந்தால் எனக்கென்ன என்று சிந்தித்தாலும், இப்போது தன் மகளுக்கு திருமணம். அதுவும் பெரிய இடத்து சம்மந்தம் என்று சந்தோஷத்தில் தன் சொந்தங்களுக்கு சொல்ல செல்லும் அன்னையிடம், இந்த திருமணம் வேண்டாம் என்றால் சொந்தங்கள் மத்தியில் தலை குனிய நேருமே!

அதுவும் அத்தை... சொல்லவே வேண்டாம், என்ன எப்போதென தக்க சமயம் பார்த்து, அசிங்கப்படுத்த என்று காத்துக்கொண்டிருப்பாள். அவளுக்கு நானே சந்தர்ப்பம் அமைத்துக் கொடுப்பதா?' என நினைத்தவளுக்கு ஒன்று மட்டும் நன்கு புரிந்தது.
அன்னை வாக்கிற்கான விலை தன் வாழ்க்கை என்று.

ஆனால் அவன் மனைவி என்று ஊருக்காக வாழ்வேனே தவிர, ஒரு போதும் அவன் மனைவியாக வாழமாட்டேன். அவனும் என்னை மனைவி என்ற ஸ்தானத்தில் நினைத்துக்கூட பார்க்க மாட்டான். அவளை உருக உருக காதல் செய்து, மனைவியாக்க ஆசைப்படவில்லை. தனது ஆசைக்கு உடன்படவில்லை என்றதும் தான் இந்த நாடகம்.

அப்படி இவனுக்கு என்மேல் காதல் இருந்திருந்தா, இத்தனை நாள் ஏன் அலட்சியம் காட்டினான். குற்றம் உள்ள நெஞ்சு தானே குறுகுறுக்கும். இதுவே அவனுக்கு என்மேல் உண்மை காதல் என்றால், தவறான எண்ணத்தில் என்னிடம் நெருங்கவில்லை என்றும் நிரூபித்திருக்கலாமே!

அன்று அத்தான் போட்டோவினால் ஏற்பட்ட பிரச்சனையின் பின்னர், ஒரு வார்த்தை பேசவில்லையே! ஏன், ஒரு தடவை கூட என்னை நிமிர்ந்து பார்க்கவில்லையே? இதுதான் இவன் அகராதியில் காதலா?' என தனக்குள் ஆயிரம் சிந்தையில் நின்றவள் தோள்களை உலுக்கி ஜனா நடப்பிற்கு கொண்டுவர,

கனவில் இருந்து விழித்ததைப் போல் திடுக்கிட்டு தங்கையைப் பார்த்தவள், பேய் அறைந்தவள் போல் முழித்தாள்.

"என்னக்கா? சிலை போல இருக்க?" என தமக்கையின் இந்நிலை புரியாது ஜனா வினவ,

"அது... அது... ஒன்னுமில்லை..." என்றவளுக்கு தன்னை சுற்றி ஈஸ்வரியும் விஜயாவும் நின்றது நினைவில் வந்தது.

தனது இந்த நிலையினை அவர்களும் பார்த்திருப்பார்களோ என நினைத்தவளாய் அவர்களைத் திரும்பிப் பார்க்க, அவர்கள் அந்த இடத்தில் இல்லாததைக் கண்டவள், “இங்க நின்னவங்க எங்கடி போனாங்க?"

இவளது கேள்வியில் தமக்கையை ஒட்டியிருந்த ஜனா, தலையை முதுகோடு பின்புறமாக சரித்து மைதிலியை ஒரு மாதிரியாக பார்த்தவள்,

"ஏன்டி! ரொம்ப மாறிட்டனு உண்மையை சொன்னது தப்பா? இப்படி பயமுறுத்துற?" என்றாள் சின்னவள் கோபமாய்.

"ஏன்? அவங்களும் இப்போ இங்க தானே இருந்தாங்க. திடீர்னு எங்க போயிட்டாங்க?". என்றாள் புரியாது.

சட்டென இருக்கையில் இருந்து எழுந்த ஜனா, தெய்வானை கிச்சனில் இருந்து வருவதைக் கண்டுவிட்டு,

"அக்கா என்னை காப்பாத்துங்கக்கா..." என்றவாறு அவள் பின்னே சென்று ஒளிந்து கொண்டவள், எட்டி மைதிலியைப் பார்க்க,

அவளது செய்கையின் பொருள் விளங்காமல், "நான் இப்போ என்ன செய்திட்டேன்னு தெய்வானை அக்கா பின்னாடி ஒளியுற? வந்து பதில சொல்லுடி!"

"நான் வரமாட்டேன், உன்னில பேய் ஏறிடிச்சு." என்றாள் ஜனா மிரட்சியோடு.

"என்ன...?" என கேட்டது மைதிலி மட்டுமல்ல, தெய்வானையும் தான்.

பின்னே, திடீர் என மைதிலி மேல் பேய் என்றால் யாருக்குத்தான் அதிர்ச்சியாக இருக்காது. பின்னால் நின்றவளைத் தன் முன்னே இழுத்த தெய்வானை, "அவமேல பேய்ன்னு எப்பிடி சொல்ற ஜனா?"

"அதுவா? அவ நடந்துக்குற விதம் அப்பிடிக்கா!" என்றவள், சற்று முன் நடந்ததைக் கூற ஆரம்பித்தாள்.

"விஜயா அம்மாவும் பாட்டியும் நம்ம செய்ற சேட்டையை ரசிச்சிட்டு இருந்தாங்கக்கா. அப்புறம் நானும் அக்காவும் பேசிட்டிருந்தோம். நான் ஏன் நீ முன்னையது போல இல்லனு கேட்டேன். திடீர்னு அவ பேசாமல் அமைதியாகிட்டா. அப்புறம் அம்மாவை இவ முன்னாடி தானே நீங்க வந்து கிச்சனுக்கு அழைச்சிட்டு போனீங்க. அப்புறம் பாட்டியும் இவளை தட்டி நான் துணி மடிக்க போறேன்னு சொல்லிட்டு போனாங்க. சரின்னு தலையை ஆட்டினாக்கா. இப்போ அம்மாவும் பாட்டியும் எங்கனு கேட்கிறாக்கா. அப்போ இவள பேய் தானே பிடிச்சிருக்கு."

சுய சிந்தனையில் நின்றதனால் நடந்ததை உணரவில்லை. அமைதியாக குனிந்திருந்தவளை தவறாக நினைத்த தெய்வானையோ, "ஆமாடி ஜனா, அக்காக்கு பேய் தான் பிடிச்சிருக்கு. அதுவும் சாதா பேய் இல்ல, ஸ்ரீ பேய்... அதுதான் ரொம்ப பொல்லாத பேய். இன்னும் ரெண்டு நாள் இருக்குல்ல, அவன் கையால தாலி வாங்கிக்க. அதான் யோசிக்கிறாங்க. நீ பயப்படாத, அது ஒன்னும் பண்ணாது. நீயும் அதை எதுவும் பண்ணால் வந்துடு, நம்ம போயிடலாம்." என்று தெய்வானை மைதிலியைக் கேலி செய்ய,

அவளது கேலியில் தெய்வானையைப் பார்த்து விரக்தியாக சிரித்தவள், "போதும்க்கா என்னை ஓட்டினது. அம்மா தனியா இருப்பாங்க, போய் உங்க வேலையை பாருங்க." என அவள் கேலி ரசிக்க கூடியதாக இல்லை என்பதை, தன் குரலில் காட்டி அவளை அனுப்பியவளிடம் வந்த ஜனா,

"அக்கா நீ மாமாவை இந்தளவுக்கு நினைச்சு தவிக்கிறியே, மாமாவை உனக்கு ரொம்ப பிடிக்குமாக்கா?" என்று அவளை ஒட்டி அமர்ந்தவளின் கையினைப் பற்றியவள்,

"அது விடு, உன் படிப்பு எல்லாம் எப்படி போகுது? நல்லா படிக்கிறியா?" என பேச்சினை மாற்ற,

"என் படிப்புக்கு என்னக்கா? வகுப்பில முதல் ஆள் நானாக்கும்..." என வீராப்புடன் உதட்டை வளைத்துச் சொல்ல,

அவளது செயலில் சிறிதாக புன்னகைத்தவள், "படிப்பு ரொம்ப முக்கியம். படிச்சு என்னவாக வர ஆசைப்படுறியோ, அதை சாதிக்குற வரை எந்த எண்ணமும் வரக்கூடாது. அக்காவை போல படிப்பை பாதியில குழப்பிக்க கூடாது." என படிப்பினைப் பற்றி அறிவுரை கூறிய நேரம்,

"ஹாய் குட்டீஸ்!" என்ற குரல் வாசலில் கேட்டதும், அது யார் குரல் என உணர்ந்தவள் திரும்பியும் பாராமல் அமைதியாக இருக்க, "மாமா!" என துள்ளலுடன் ஓடிச்சென்று அவனது கைகளைப் பற்றியவள்,

"இன்னைக்கு எனக்கு என்ன மாமா வாங்கிட்டு வந்திங்க?" என்றாள் ஆர்வமாய்.

பேன்ட் பாக்கெட்டினுள் மறைத்து வைத்திருந்த டைரிமில்க் சாக்லேட்டை எடுத்து, அவளுக்கு எட்டாத உயரத்தில் தூக்கிப் பிடித்து காண்பிக்க,

"ஐ! சாக்லேட்!" என்றவாறு ஸ்ரீ கையிலிருந்து சாக்லேட்டை பறிப்பதற்காக இரண்டு தடவை தொங்கியவள்,

முடியாமல் போகவே, "மாமா ப்ளீஸ்..." என கொஞ்சியது சின்னவள் உதடுகள் மாத்திரமல்ல, விழிகளும் தான்.
இதற்கு மேல் ஏமாற்ற வேண்டாம் என நினைத்தவன், அவளிடம் அதை கொடுத்தான்.

"சூப்பர் மாமா நீங்க." என அவனைப் புகழ்ந்து ஒரு பாமாலை பாடிவிட்டு வந்து சோபாவில் அமர, அவள் பின்னாடியே வந்து ஸ்ரீயும் அமர்ந்து கொண்டான்.

இங்கு வந்த முதல் நாளில் ஸ்ரீயைக் கண்டு முதலில் தயங்கியவள், பின் அவனது இலகுவான பேச்சிலும் அவளுடனான ஒட்டலிலும், தினமும் அவளுக்கென்றே வாங்கி வரும் ஒவ்வொரு விதமான தின்பண்டத்திலும் மாமா பைத்தியமாகிப்போனாள் ஜனா.

அந்த வீடடில் உனக்கு யாரைப் பிடிக்கும் எனக் கேட்டால், அவளது தரவரிசை முதலிடமும் அவனுக்கே. இவர்கள் ஒட்டலில் மைதிலிக்கு ஒருவித பொறாமையும் கூட. ஐந்தே நாளில் தங்கையைக் கவிழ்த்தி விட்டான் என்று.

ஆனால் இவர்கள் உறவையோ, ஸ்ரீயினது ஒட்டலிலோ தவறான எண்ணம் இல்லை என்பதை, அவளால் நன்றாகவே உணர முடிந்தது.


***

மண்டபம் முழுவதும் இரைச்சலாக இருக்க, அவர்கள் இரைச்சலையும் மீறி நாதஸ்வர ஓசையுடன், மேள தாளங்கள் முழங்கியது. மேடையில் முகத்தினில் வெள்ளை நிற கண்ணாடி துணியினால் திரையிட்டு அமர்ந்திருந்தவளையே ஆராய்ந்தது ஸ்ரீயின் விழிகள்.

அரக்கு நிற பட்டு உடுத்தி, கழுத்தினில் பல ரக ஆபரணங்கள் மின்ன, இடுப்பே இல்லாத இடைதனில் ஒட்டியானம், கை நிறைய வளையல், தாமரை இதழ் போல் விரிந்த விரல்களுக்கு மருதாணி சாயமிட்டு, நட்சத்திரங்களை கணையாழியாக்கி அவளது ஒவ்வொரு வெண்டை பிஞ்சு விரல்களில் அணிவித்து, மார்புக்கு நடுவில் இரு கரங்களை குவித்து, தீயினையே வெறித்தவாறு அமர்ந்தவளது முக அழகையும், புடவையில் மறைந்திருந்த அவளது பாதத்தின் அழகையும் பாராதது அவன் துரதிர்ஷ்டமே!

மனமோ அதையும் பார்த்து விட துடித்தது. ஆனால் இங்கு ஐயர் மனசு வைக்க வேண்டுமே? அவனுக்குள் இப்போதிருக்கும் கேள்வியெல்லாம், 'தாலி கட்டும் போதாவது அவன் முகத் திரையினை விலக்குவார்களா?' என்றதுதான். அப்படி விலக்கவில்லை என்றால், அவள் கல்யாண அலங்காரத்தில் எப்படி இருப்பாள் என்பதை, அவன் அறிந்து கொள்ளாமலே போய் விடுவானே?

அவன் மனக்குமுறல் அப்போது பூசாரிக்கு கேட்டது போல, அருகில் நின்ற பெண்ணை அழைத்து தட்டைக் கொடுத்தவர், மற்றவர்களிடம் ஆசி வாங்கிவர அனுப்பிவிட்டு காத்திருந்தார்.

அனைவரிடமும் ஆசி வாங்கி வந்த தாலியை எடுத்து ஸ்ரீ கையில் கொடுத்தவர், முகத்திரையை விலக்குமாறு பின்புறம் நின்ற பெண்களுக்கு கூற, ஆர்வமாக தாலியை வாங்கியவன் அதை கட்ட வேண்டுமென்ற சிந்தையே இல்லாது, அவள் அழகிலேயே மெய் மறந்து போனான்.

அதை கண்டுகொண்ட ஐய்யரோ, "தம்பி முகூர்த்த நேரம் முடியிறதுக்குள்ள பொண்ணு கழுத்தில தாலிய கட்டிட்டுங்கோ. தாலி கட்டினதுக்கு அப்புறமா பொண்ணை ரசிச்சுக்கலாம்." என அத்தனை பேர் முன்னிலையில் ஸ்ரீயின் காலை வார, அவரது பேச்சில் கல்யாண சடங்கிற்கு வந்தவர்கள் அனைவருமே பெரிதாக சிரித்துவிட்டனர்.

அவர்கள் சிரிப்பில் வெட்கித்தவன் மூன்றாவது நபருக்கு இடம் கொடாது, அர்ச்சதை பூமாரி பொழிய, மூன்று முடிச்சினையும் தானே போட்டுவிட்டான். இதுவரை அழுத்திய பாரம் அகன்று இவள் என்னவள் என்ற கர்வம் குடியேறியது. அதுவரை அமைதியாக திரை மறைவில் தலை குனிந்திருந்தவள், அவன் தாலி அணிவித்ததன் பின்புதான், அவன் முகத்தை ஒருமுறை பார்த்துவிட்டு, மீண்டும் தரையினில் பார்வையைப் பதித்தாள்.

அப்போது அவள் கண்கள் கலங்கி இருப்பதை ஸ்ரீ கவனிக்காமலில்லை. ஆனால் அதை அவன் அப்போதிருந்த மனநிலையில் பெரிதுபடுத்தவும் விரும்பவில்லை. அதன்பின் வரிசையாக சடங்குகள் நடந்து கொண்டிருக்கும் போதுதான், மண்டப வாயிலை எதேர்ச்சையாக நிமிர்ந்து பார்த்தவன் வாசலில் நுழைந்தவர்களைக் கவனித்தான்.

ஆம், அது வேறு யாருமில்லை மைதிலியின் அத்தையும் அத்தானுமே தான்.

மைதிலியோ வேண்டா வெறுப்பாக குனிந்தபடி ஸ்ரீயின் கை பற்றி, அக்கினியை வலம் வந்தவள் கவனத்தைத் தன்புறம் திருப்பும் பொருட்டு, அவளது கரங்ளுக்கு அழுத்தத்தைக் கொடுத்து தன்னைப் பார்க்க வைத்தவன், வாசலை நோக்கி ஜாடை காட்டினான்.

அவனது செயலில் அவனை தவறாக நினைத்தவள் வாசலைப் பாராது, மீண்டும் தரையில் பார்வையினைப் பதித்தவளை என்ன செய்தால் தகும் என்றிருந்தது ஸ்ரீயிற்கு.

'நான் என்ன சொல்லுறேன், இவ என்ன பண்றா? அவகூட ரொமான்ஸ் பண்றதா நினைப்போ?' உள்ளே தான் பொருமினான். சடங்குகளும் ஒரு மாதிரியாக முடிந்தது.

மேடையில் தம்பதியினருக்காய் போடப்பட்ட இருக்கையில் அமர்த்தி விடப்பட்வர்களை, பெரியவர்கள் அறுகரிசி தூவி வாழ்த்து தெரிவித்து, புகைப்படங்களும் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்க,

மைதிலியின் பக்கம் சற்றி சரிந்த ஸ்ரீ அவளுக்கு மாத்திரம் கேட்கும் குரலில், "தாரை, உன் அத்தையும் அத்தானும் வந்திருக்காங்க. நீ இப்படி உம்முன்னு இருக்கிறதை பார்த்தா, உனக்கு பிடிக்காத கல்யாணத்தை, வற்புறுத்தி செய்யிறதா நினைச்சுக்க போறாங்க. உனக்கு இந்த கல்யாணத்தில இஷ்டமில்லை என்கிறது உண்மையாவே இருக்கட்டும். ஆனா இவங்களுக்கு இது தெரியணும்னு நினைக்கிறியா? உன்னை ஏமாத்தினவன் முன்னாடி நீ தலை குனிஞ்சு இருக்கிறது தான், உனக்கு வேணும்னு நினைச்சா இந்த மாதிரியே இருந்துக்கோ.

இல்லனா என்னை நீ ஏமாத்தினால் என்ன? நீ இல்லைன்னா கூட என்னால நல்லபடியா வாழமுடியும்னு அவனுக்கு காட்டணும்னு நினைச்சா, அவங்க போகும் வரைக்குமாவது சந்தோஷமா இருக்கிறது போல நடி." என்றவனது பேச்சின் பின்பு தான், மண்டபம் முழுவதும் கண்களால் தேடியவள் பார்வையில் சிக்கினர், அவர் அத்தையும் அவள் மகனும்.

அவர்களைக் கண்டதும் இதுவரை இல்லாத திடத்தினை தனக்குள் கொண்டு வந்தவள், ஏனோ தானோ என இராமல் இன்னும் சற்று ஸ்ரீயை ஒட்டி அமர்ந்து தமக்கு ஆசி தருபவர்களுக்கு, புன்னகையினை பரிசளித்தவாறு அமர்ந்திருந்தவளைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் ரஞ்சித்.

அவனுக்கும் அவளை அந்த அலங்காரத்தில் கண்டவுடன், ஒரு சொர்க்கத்தை தவறவிட்டு விட்டேன் என்ற ஏக்கம் இல்லாமலில்லை. அதனால் தான் அவளையே வைத்த கண் வாங்காமல் நின்றிருந்தான். மைதிலியின் புன்னகை முகத்துடனே அவர்களது பிம்பங்களை கேமெராக்கள் தமக்குள் பதிவு செய்திருந்தது.

ஸ்ரீயும் இதுதான் சாக்கென்று வேண்டும் என்றே அவளை அணைத்தபடி, பல புகைப்படங்களுக்கு விதவிதமாய் போஸ் கொடுத்தான்.




தொடரும்…