- Joined
- Jul 30, 2021
- Messages
- 566
கயல்விழியின் காதலன்
அனைவரும் பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருக்கும் அந்த காலை வேளையில், 'தன்னுடைய காதலன் இன்றாவது தன்னைப் பார்க்க வருவானா! அல்லது வழக்கம்போல் ஏமாற்றி விடுவானா!' என்ற கேள்வியை சுமந்தவாறு வெளியே ஒரு கண்ணை வைத்துகொண்டு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள் கயல்விழி.
கயல்விழி 23 வயது பருவ மங்கை, கிராமத்து பூங்குயில்! விவசாயமே பிரதானமாக கொண்டு வாழ்க்கையை ஓட்டும் சாதாரண குடும்பத்தில் பிறந்தவள். ஆனால் அவளுடைய காதலன் மேல் மிகவும் உயிராக இருப்பவள். கிட்டத்தட்ட ஒரு வருடமாக அவனை காண முடியாமல், எப்போது காண்போம் என்று உள்ளுக்குள் ஏங்கி கொண்டிருப்பவள்.
இன்றும் அதே போல் தான் கை அதன்போக்கில் வேலைகள் செய்து கொண்டு இருந்தாலும், அவளுடைய மனம்
'இன்றைக்காவது நீ என்ன பாக்க வருவியா? உன்ன எப்போடா பாப்பேன் அப்படின்னு ரொம்ப ஆவலா காத்துக்கிட்டு இருக்கேன். ஆனா நீ என்னடான்னா இதோ வரேன், இதோ வரேன்னு எனக்கு போக்கு காட்டி விட்டு வரவே மாட்டேங்குற! எப்பதான் என்ன பார்க்க வர போறே' என்று ஏங்கிக் கொண்டு இருந்தாள்.
அவள் மட்டுமல்ல அவளுடைய காதலனை காண்பதற்காக அந்த கிராமத்தில் உள்ள அனைவருமே காத்துக் கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் அனைவரின் காத்திருப்புக்கு பலனாக அவன்தான் வந்தபாடில்லை.
அவளுடைய யோசனையை பார்த்த அவளுடைய பெற்றோர் "அம்மாடி வேலை முடிஞ்சுதா! வா சீக்கிரம் போய் வயல்ல இருக்கிற வேலையை பார்ப்போம். இப்பவே மணி ஒன்பது தாண்டியாச்சு! ரொம்ப நேரம் கழித்து போனா அந்த பகலவன் நம்மள வாட்டி எடுத்து விடுவான். நம்ம எவ்வளவு தான் சொன்னாலும் அவன் காது கொடுத்துக் கேட்கவே மாட்டான், அதனால சீக்கிரம் போவது நல்லது" என்று கூறினார்கள்.
அவர்கள் கூறியதில் உள்ள உண்மை புரிய இப்போது அந்த பகலவனை மனதிற்குள் திட்ட ஆரம்பித்தாள் 'அவனுக்கு வேற வேலையே கிடையாது. எப்ப பாரு நம்ம எல்லாரையும் வாட்டி வதைக்கிறது வேலையா போச்சு. அதற்கு தீர்வு என்னுடைய காதலன் தான், ஆனால் அவன் தான் வர மாட்டேங்கிறானே!' என்று எண்ணியபடி 'சரி வேலை எல்லாம் முடிந்துவிட்டது' என்று கூறி தனது பெற்றோருடன் கிளம்பி சென்றாள்.
அனைவருமாக சென்று வேலை பார்க்க ஆரம்பித்தனர் கயல்விழியை பார்த்த வயதான மூதாட்டி ஒருவர் "என்னடி ஆத்தா! இன்னைக்காச்சும் உன்னுடைய ஆசையை நிறைவேற்றுவதற்கு அவன் வருவானா? இல்ல வழக்கம்போல வரமாட்டானா! ஒவ்வொரு நாளும் நீதான் அவன் வருவான், வருவான்னு காத்துகிட்டு இருக்க, ஆனா அவன் வந்த மாதிரி தெரியல" என்று கூறினார்.
"இன்னைக்கு கண்டிப்பா வருவான், அப்படின்னு நம்புறேன் பாட்டி" என்று வெளியே கூறினாலும் 'அவன் வருவானா? அல்லது வழக்கம்போல் தன்னை ஏமாற்றி விடுவானா?' என்ற கேள்வி அவளுக்குள்ளும் இருக்க தான் செய்தது.
அதற்கு அந்த மூதாட்டியும் "நீ தான் தினமும் வரவா வரவா அப்படின்னு கேட்டு இருக்க, அவன் அவனோட நண்பர்களோடு சேர்ந்து எங்கேயாவது சந்தோசமா சுத்த போய்விடுகிறான். இங்க நம்ம இந்த பகலவன் கிட்ட மாட்டிக்கிட்டு நொந்து சாகிறோம். எப்ப தான் நமக்கு இருக்கு விடிவுகாலம் கிடைக்குமோ ?" என்று கூறினார்.
அதைக்கேட்ட கயல்விழி மனது வேதனை கொண்டாலும் அமைதியாக வேலை பார்த்துக்கொண்டு இருந்தாள். ஆனால் மனதிற்குள் 'பார்த்தியா? நீ வருவாய்! வருவாய் அப்படின்னு நான் மட்டுமில்லை நிறைய பேர் ஆவலாக காத்துகிட்டு இருக்காங்க! ஆனா உனக்கு எங்க மேல எல்லாம் கொஞ்சம் கூட கருணை, பாசம் எதுவுமே இல்லை. எங்கள கஷ்டப்படுத்தி கிட்டே தான் இருக்க' என்று வேதனையாக எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில்.
அவள் காதலன் வரும் அறிகுறி தென்பட்டது அனைவரும் அதை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தனர். இதமான தென்றலோடு தன் நண்பர்களுடன் சேர்ந்து மேளதாள ஆரவாரத்துடனும், மின்னும் ஒளியுடனும் ஆர்ப்பாட்டமாக பூமிக்கு வந்து சேர்ந்தான், கயல்விழியின் காதலனான மழையானவன்.
ஒரு வருடமாக மழையில்லாமல் வெயிலில் மட்டுமே கஷ்டப்பட்டு கொண்டு இருந்த அந்த கிராமத்து மக்களுக்கு, கயல்விழியின் காதலன் அவளுடைய தரிசனத்தை கொடுக்க வந்துவிட்டான். அனைவரும் மகிழ்ச்சி கடலில் திளைக்க ஆரம்பித்தனர்.
சிறுவயது முதலே மழை மீது அலாதி பிரியம் கொண்ட கயல்விழிக்கு அவளுடைய காதலன் யார் என்று கேட்டால் 'இதமான தென்றலாக, கருகரு மேகங்களுடன் இன்னிசை மழையாய் இடி சத்தத்துடன், மின்மினி ஏறியும் மின்னல் ஒளியுடன் பூமிக்கு வரும் மழையானவன் தான் தன்னுடைய காதலன்' என்று கூறுவாள் அந்த அளவுக்கு மழை மீது நேசம் கொண்டவள்.
இனி பருவம் தவறாமல் தன்னுடைய காதலியை காண அவன் வந்து விடுவான் என்ற நம்பிக்கையோடு நாமும் விடை பெறுவோம்.
Aashmi S(ஆஷ்மி எஸ்)