• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மிருதனின் முளரி.. 2

kkp7

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
8
10
8
Tamil nadu
ஊதா நிறப் பூக்கள் பூத்திருந்த அந்தப் பெயர் தெரியாத மரத்தை அடையாளமாகக் கொண்ட அந்தத் தெருவைத் தாண்டி, எதிரே இருந்த குடியிருப்புக்குள் நுழைந்தது அந்தப் புல்லட்.

புல்லட்டின் முன்னால் இருந்த ரோசாச் செடிகள் கீழே விழாத வண்ணம், நிதானமாகப் புல்லட்டை நிறுத்தி விட்டுப் பூச்செடிகளைத் தூக்கிக் கொண்டு நிமிர்ந்த கலைமோகன், எதிரே நின்றவளைப் பார்த்ததும், கையில் வைத்திருந்த ரோசாச் செடிகளைக் கை நழுவ விட்டான்.

வந்ததில் இருந்து அவனையும் அவனுக்கு முன்னால் நின்றவளையுமே பார்த்துக் கொண்டிருந்த பாரதி, வேகமாக ஓடி வந்து பூச்சாடிகளைப் பிடித்துக் கொண்டாள்.

"ஹேய்.. பாத்துப் பாத்து ஏதவோ பேய் பிசாசைக் கண்ட மாதிரி முழிச்சுக் கொண்டு நிக்கிறாய்.."
என்று கொண்டே உள்ளே போய் விட
"ஏய்.. இங்க என்னத்துக்கு நீ வந்தனீ.. நான் இங்க தான் இருக்கிறன் எண்டதை உனக்கு ஆரு சொன்னது.. முதல் நான் தான் உன்னைய எனக்குப் பிடிக்கேல்லை எண்டு சொல்லீட்டனே.. பிறகும் ஏன் பின்னாலயே வந்து தொந்திரவு செய்யிறாய்.. உனக்குக் கொஞ்சம் கூடச் சூடு சுரணை இல்லையோ.."
எனத் தன் முன்னால் நின்றவளை வார்த்தையால் அர்ச்சனை செய்தபடி, தானும் உள்ளே போகத் திரும்பியவனின் சட்டையைக் கொத்தாகப் பிடித்துக் கொண்டாள் எதிரே நின்றவள்.

அவள் அவ்விதம் செய்வாள் என்பதை எதிர் பாராதவன், சட்டென்று உள்ளே எட்டிப் பார்த்தான். இந்தக் கோலத்தில் பாரதி மட்டும் அவனைப் பார்த்தால் அவ்வளவு தான், ஏற்கனவே இருக்கும் பிரச்சினைக்குச் சமாதானம் செய்வதை நினைக்கவே அவனுக்குத் தலைசுற்றிக் கொண்டிருந்தது. இதில் புதுப் பிரச்சினை வேறா என நினைத்தவன், சட்டென்று தன் சட்டையைப் பிடித்திருந்தவளின் கையைத் தட்டி விட்டான்.

"இந்தா பாரு எஸ்தர்.. இந்தச் சட்டையைப் பிடிக்கிற வேலை எல்லாம் வைச்சுக் கொள்ளாத சொல்லீட்டன்.. பாரு பாத்தால் அவ்வளவு தான்.."

"அப்போ உங்களுக்குப் பாரு பாக்கிறது தான் பிரச்சினையோ.."

"எனக்கு நீயே பிரச்சினை தான்டி.."

"அப்புடி எண்டு உங்கடை வாய் தான் சொல்லுதே தவிர.. கண்ணு ஓராயிரம் கதை சொல்லுதே.."
என்று கொண்டு மீண்டும் அவனுக்கு அருகில் வந்தவளை, சட்டென்று பிடித்துக் கலைமோகன் தள்ளி விட, அதைச் சற்றும் எதிர்பாராத எஸ்தர், கீழே விழப் போக வேகமாக ஓடி வந்து அவளைப் பிடித்துக் கொண்டாள் பாரதி.

"மோகன்.. என்ன பழக்கம் உது.. இப்ப என்னத்துக்கு அந்தப் பிள்ளையைத் தள்ளி விட்டனீ.. கீழ விழுந்து அடிகிடி ஏதும் பட்டிருந்தால்.."
என்று சொல்லிக் கொண்டே பாரதி எஸ்தரை உள்ளே அழைத்துக் கொண்டு போகவும் அதைப் பார்த்ததும் கலைமோகன் கடுப்பாகிப் போனான்.

"பாரு.. அவளை வெளியால போகச் சொல்லு முதல்.."

"ஏன் ஏன் போகச் சொல்லோணும்.."

"என்னத்துக்கு இங்க இப்ப வருவான்.."

"உன்னட்டை ஒருத்தரும் வரேல்லை.. அவா என்னட்டைத் தான் வந்தவா.. இன்னும் ரெண்டு மாசம் என்னோட தான் இருக்கப் போறா.. நீ பேசாமல் போ.."

"என்னது ரெண்டு மாசமோ.. விளையாடாத பாரு.."

"நான் ஒண்டும் விளையாடேல்லை சீரியஸா தான் சொல்லுறன்.. நீ ரெண்டு மாசத்துக்கு வெளியால ரூம் எடுத்துத் தங்கு.."

"அடியேய்.. இருக்கிற பிரச்சினை தெரியாமல் நீ பாட்டுக்கு ஏழரையைக் கூட்டி வைக்காத.."

"அப்புடி என்ன பிரச்சினை.. ஒருக்காச் சொல்லு நானும் கேக்கிறன்.."

"பிளீஸ் பாரு.. கொஞ்சம் புரிஞ்சுக்கோவன்.. நான் காரணமே இல்லாமல் எதையும் செய்ய மாட்டன் எண்டு உனக்கு தெரியாதோ சொல்லு.."

"அது தெரியும் தான்.. ஆனாப் பாரன் உன்ரை கூட்டுச் சரியில்லை.. அந்த ரவுடியோட சேந்திட்டாய் எல்லோ.. அதனால நீ என்ன செய்தாலும் கொஞ்சம் சந்தேகக் கண்ணோடயே பாக்க வேண்டிக் கிடக்குது.."

"சந்நிதியானே.."

"செய்றதெல்லாத்தையும் செய்திட்டு அந்த மனுஷனை ஏன்டா தொந்திரவு செய்றாய்.."
என்ற பாரதி, எஸ்தரின் பக்கம் திரும்பினாள்.

"உவன் கிடக்கிறான் வளந்து கெட்டவன்.. நீங்கள் வாங்கோ நாங்கள் உள்ள போவம்.."
என்று கொண்டு பாரதி உள்ளே செல்லத் திரும்பவும், வேகமாக ஓடி வந்து அவளது கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு மாடிக்கு விரைந்தான் கலைமோகன்.

"என்னடா எருமை.. கொற கொறெண்டு இழுத்துக் கொண்டு போறாய்.. விடு நானே வாறன்.."

"கையை விட்டால் ஓடீருவாய் நீ.."

"ஓடவெல்லாம் மாட்டன் விடு வாறன்.. கொஞ்சம் நாளாவே நீ சரியில்லை.. அந்த அவன் தான் என்னவோ சூனியம் வைச்சிட்டான் உனக்கு.."

"அவன் இவன் எண்டெல்லாம் அவரைச் சொல்லாதேடி.."

"ஓஹோ.. அவுரை அவன் இவன் எண்டால் துரைக்குக் கோபம் வருதாக்கும்.. வர வர உனக்கு என்னைய விட அவன் தான் முக்கியமாப் போயிட்டான் என்ன.. இருக்கட்டும் இருக்கட்டும்.."

"அப்புடி எல்லாம் இல்லையடி தங்கம்.. எனக்கு எப்பவுமே உன்னைய விட ஆருமே முக்கியம் இல்லையடி.."

"சும்மா உருட்டாதேடா.."

"என்ரை சந்நிதியான் மேல சத்தியமாடி.."

"ம்ம்ம்.. உப்புடிச் சத்தியம் செஞ்சால் நம்ப வேண்டியது தான்.."

"அது தான் உண்மை.."

"ஏன்டா குட்டி நான் ஒண்டு கேப்பன் உண்மையைச் சொல்லுவியோ.."

"நீ குட்டி எண்டு கூப்பிட்டு எவ்வளவு நாளாச்சுது தெரியுமோ.."

"சரி சரி நான் கேட்டதுக்குப் பதில் சொல்லு.."

"எனக்குத் தெரிஞ்சு இதுவரை நான் உன்னட்டைப் பொய் சொன்னதே இல்லை.. கேளு.."

"அந்தாளுட்டை ஏதும் கடன்கிடன் வாங்கீட்டியோ.."

"எந்தாளிட்டை.."

"அது தான்டா அந்தப் பிரவுன்கலர்க் கண்ணை உருட்டி உருட்டிப் பாப்பானே உன்ரை பாஸு.. அவனிட்டைத் தான்.."

"பாரன் அவரிந்தை கண்கலர் எல்லாம் நோட் செய்து வைச்சிருக்கிறாய்.."

"இப்ப ரொம்ப முக்கியம்.. கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லடா.."

"இல்லையேடி.. அவரிட்டை இல்லை நான் ஆரிட்டையும் கடன் வாங்கவே இல்லை.."

"பிறகு ஏன்டா அந்தாளைப் பாத்துப் பயப்பிடுறாய்.."

"அது பயம் இல்லையடி மரியாதை.."

"சரி எதுவாவோ இருந்திட்டு போகட்டும்.. அவுரு மரியாதை குடுக்கிற அளவுக்கு அப்புடி என்ன செஞ்சு கிழிச்சிட்டாரு.. கொஞ்சம் சொல்லன் கேப்பம்.."

"அதைச் சொல்லத் தான் நானே வந்தன்.. அதுக்குள்ள நீயி காச்சுமூச்செண்டு கத்திக் கொண்டு நிக்கிறாய்.."

"சரி கத்தேல்லை சொல்லு.."
என பாரதி சொல்லவும், தனக்கு மைக்கேல் மீது எப்படி மரியாதை வந்தது, தான் எவ்விதம் அவனிடம் வேலை செய்யச் சென்றேன் என்பதைக் கலைமோகன் பாரதிக்குச் சொல்லத் தொடங்கினான்.

கலைமோகன் கொழும்புக்கு வேலை தேடி வந்த ஆரம்பத்தில், அவனுக்கு சுற்றுலா விடுதி ஒன்றில் நல்ல வேலை ஒன்று கிடைத்து, கை நிறைய சம்பளமும் வரத் தொடங்கியது.

அந்த நேரத்தில் அவனுக்கு ஒரு பெண் தோழி கிடைத்தாள். நல்ல பெண், அவளும் வேலைக்காகத் தான் கொழும்பு வந்திருந்தாள் போலும், இருவரும் நட்பு பாராட்டத் தொடங்கி இரண்டு மாதங்கள் ஆகி இருந்தன.

ஒரு முறை அந்தப் பெண் தன் தாயை அறிமுகம் செய்து வைக்க, கலைமோகனைக் கடற்கரைக்கு வரச் சொல்லி இருந்தாள்.

இவனும் அவளையும் அவளது தாயையும் காண, அன்று சீக்கிரமே புறப்பட்டுக் கடற்கரைக்குச் சென்றிருந்தான். அப்போது அங்கே அவன் கண்ட காட்சி அவனை உலுக்கியது என்றால் அது மிகையில்லை.

அந்தப் பெண்ணை ஐந்தாறு நபர்கள் சேர்ந்து மோசமாகக் கிண்டலடித்து விட்டு, இரண்டு நாய்களை வைத்து அவளது துணிகளைக் கடிக்க வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

நாய்கள் அவளது துணிகளோடு சேர்த்து அவளையும் கடித்துக் குதறிக் கொண்டிருந்தன.

அதைப் பார்த்த கலைமோகன் வேகமாக அங்கே ஓடுவதற்குள், எங்கிருந்தோ வேகமாக வந்த தோட்டாக்கள் அங்கே நின்றிருந்த ஆறு பேரின் கால்களையுமே ஒரே வேகத்தில் குறி தவறாமல் பதம் பார்க்க, காலைப் பிடித்துக் கொண்டு கடற்கரை மணலில் உருண்டவர்களை, கறுப்பு ஜீப் ஒன்றில் இருந்து பாய்ந்தோடி வந்த இரண்டு அல்சேஷன் நாய்கள் அவர்களைக் கடித்துக் குதறத் தொடங்கின.

அப்போது தான் முதன் முதலாக ஜோசப்மைக்கேலை கலைமோகன் நேரில் பார்த்தான். கறுப்பு ஜீப்பின் மீது அவன் அமர்ந்திருந்த விதமே, கெட்டவர்களை சம்ஹாரம் செய்ய வந்த சிம்மம் போலத் தான் இருந்தது.

மைக்கேல் என்றால் கொலைகாரன், யார் எவர் என்று பார்க்காமல் அவனது தோட்டா நிறையப் பேருடன் கதை பேசும், அவன் போதைப் பொருட்கள் கடத்தலில் கொடி கட்டிப் பறக்கும் மன்னன், அவனது அகராதியே இரத்தம், மரணம், துப்பாக்கி இந்த மூன்றாலும் மட்டுமே நிரம்பி வழியும் சிவப்புக் காகிதம் இவை தான் மைக்கேல் பற்றிய வரலாறு.

அப்படியே தான் கலைமோகனுக்கும் அவன் பற்றிய தகவல்கள் காதுவழி கசிந்திருந்தது. அதுவரையில் அவனுக்கு இருந்த மைக்கேல் பற்றிய பிம்பம் அந்த நொடியே சட்டென்று தவிடு பொடி ஆகிப் போனது.

மைக்கேல் எப்படிப் பட்டவனாக இருந்தாலும் அவனது துப்பாக்கி கெட்டவைகளை சம்ஹாரம் செய்வதற்கு மட்டுமே பயன்படும் ஒரு ஆயுதம் என்பதுவும் கலைமோகனுக்குப் புரிந்து போனது.

அவனுக்குமே இந்த மாதிரி நடக்கும் அக்கிரமங்களைத் தடுக்க வேண்டும் தண்டிக்க வேண்டும் என்பது விருப்பம், ஆனால் அவனுக்கு வன்முறை என்பது ஆகாது. இருந்தாலும் துணிந்து மைக்கேலிடம் போய்த் தன் பற்றிய விபரத்தையும் தன் விருப்பங்களையும் சொல்ல, தன் பிரவுன் கண்களால் அவனை ஒரு முறை கீழிருந்து மேலாகப் பார்த்து விட்டு, அவன் தரப்பில் சேர்த்துக் கொண்டான் மைக்கேல்.

அதில் இருந்து அடிதடி நடக்கும் இடங்களுக்கு மட்டும் கலைமோகன் போவான்.

மைக்கேலைத் தான் சந்தித்து அவனோடு சேர்ந்தது பற்றிக் கலைமோகன் சொல்லி முடிக்கும் வரை, குறுக்கே குறுக்கே பேசாமல் அமைதியாக இருந்த பாரதி அதன் பிறகே வாய் திறந்தாள்.

"பரவாயில்லை கேக்கிற மாதிரி தான் கதை கிடக்குது.‌. ஆனா ஒரு விசியம் நிசமாவே அவுரு கெட்டவங்களை மட்டும் தான் தண்டிப்பாரோ.. இதால அவருக்கு எவ்வளவு வருமானம் வருகுது.. கூடவே வைச்சிட்டுச் சுத்துற அடியாளுங்களுக்கு எப்புடிச் சம்பளம் குடுக்கிறாரு.. அதுக்குப் புறம்பா ஏதும் உழைக்கிறாரோ.. இல்லாட்டிக்கு அதுக்கு ஏதாவது வங்கிக் கொள்ளை நகைக்கடைத் திருட்டு அந்த மாதிரி.."
என்று பாரதி இழுக்க, கலைமோகன் அவளைப் பார்த்து முறைத்தான்.

"அச்சோ.. அப்புடீன்டு நான் மட்டும் கேக்க மாட்டன்.. ஆரா இருந்தாலும் இப்புடித் தான் கோப்பானுங்கள்.. இண்டைக்குக் கூட ரெண்டு நகைக்கடைக்குள்ள புகுந்து அராஜகம் செய்து இருக்கிறாரே.. அங்க என்ன தப்பு நடந்திருக்கும்.."
என நாடியில் தட்டி யோசித்தவள், சட்டென்று
"இது கூட நான் மட்டும் கேட்டிருக்க மாட்டன்.. வேறை ஆரும் கூட பாத்திருந்தாக் கேட்டு இருந்திருப்பினம்.."
எனச் சொல்லி விட்டு கலைமோகனைப் பார்த்தாள்.

"நான் அவரைப் பத்தி என்ன சொன்னாலும் உன்ரை காதுல ஏறாது.. உனக்காயே எப்பையாவது அவரைப் பத்திப் புரிய வரும்.."

"அந்தாளைப் பத்திப் புரிய வந்து நான் என்ன செய்ய.. அந்தாளைப் பத்திக் கண்டதையும் அலம்புறதை விடு.."

"ஹேய் அவரு நிசமாவே நல்லது தான் செய்யிறாருடி.."

"டேய் அவன் எதையாவது செய்து தொலையட்டும்.. நீ முதல்ல அங்கினை இருந்து வெளியால வாற வழியைப் பார்.."

"பாரு.."

"போடா போய் எஸ்தரை சமாதானம் செய்ற வழியைப் பாரு.. அந்தப் பிள்ளை தான் உன்னையக் காதலிக்கிறன் எண்டு வெக்கத்தை விட்டு வந்து நிக்குது எல்லே.. கலியாணம் கட்டிச் சந்தோஷமா வாழுற வழியைப் பாக்காமல் மக்கிப் போன மைக்கேலோட புராணம் படிச்சுக் கொண்டு நிக்கிறாய்.."

"பாரு உனக்கெப்புடித் தெரியும்.. அந்தப் பிள்ளை என்னையக் காதலிக்கிறது.."

"ஒரு பொண்ணோட மனசு இன்னொரு பொண்ணுக்குத் தான தெரியும்.."

"அது தான் கேக்கிறன் உனக்கெப்புடி அவ மனசு தெரிஞ்ச.. ரெண்டு பேரும் தான் பொண்ணுங்களே இல்லையே.. பிசாசுகள்.."

"நீ தான்டா பிசாசு.."

"ஆரு பிசாசு எண்டு பிறகு ஆராய்வம்.. முதல்ல அவ ஆருனு தெரியுமாடி.."

"உன்னோட லவ்வர்.."

"லூசு.. அவ என்னோட பாஸோட தங்கச்சி.."

"என்னது.."

"ம்ம்.."

"அது தான் அவ கண்ணை எங்கயோ பாத்த மாதிரி இருக்கேனு யோசிச்சன்.."

"நல்லா யோசிச்சுக் கிழிச்சாய்.."

"என்னடா செய்றது இப்ப.. அண்ணன் மாதிரியே தங்கச்சியும் துப்பாக்கியும் கையுமாத் தான் சுத்துறாளா.. சேச்சே அப்புடி இருக்காது அந்தப் பிள்ளையிந்தை முகத்துல ஒரு சாந்தம் தெரிஞ்சுது.."

"உனக்குத் தானே நல்லாத் தெரிஞ்சிருக்கும்.. மரியாதையா அவளை வெளியால அனுப்பீரு.. எங்க பாஸோட துப்பாக்கியால சாகுற தைரியம் எனக்கு இல்லை பாரு.."
என்றவனையே யோசனையாகப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் பாரதி.
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
417
99
43
Tirupur
கலைமோகன் 🤝 பாரு நட்பு நல்லாருக்கு ❤️
எஸ்தர் விஷயம் மைக்கேலுக்கு தெரிய வந்தா... கலைமோகன் சொல்றதிலேயும் விஷயம் இருக்கு 👍
 
  • Like
Reactions: kkp7

shasri

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 5, 2024
150
25
28
Tamilnadu
எஸ்தர் பின்னாடி இப்படி ஒரு ட்விஸ்ட் எதிர்ப்பார்க்கவில்லை
 
  • Like
Reactions: kkp7