• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மிருதனின் முளரி.. 4

kkp7

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
7
9
8
Tamil nadu
"ஏன் குட்டி.. உனக்கு அந்த அவளைப் பிடிக்குமோ.."
எனக் கேட்டுக் கொண்டே கலைமோகனுக்கு அருகில் வந்து அமர்ந்து கொண்டாள் பாரதி.

"எந்த எவள் பாரு.."
என நிதானமாக உருளைக்கிழங்கு பஜ்ஜியை வாய்க்குள் அடைத்தான் கலைமோகன்.

"அது தான்டா அந்த பிரவுன் கலர் கண்ணி.."

"ஓ.. எஸ்தரோ.."

"ம்ம்.."

"அவளுக்கு என்ன.."

"அவளை நீ உண்மையாவே காதலிக்கிறியோ காதலிக்கேலையோ.."

"அது.."

"யாரவோ என்னட்டை உண்மை மட்டும் தான் சொல்லுவேன் அப்புடினு சொன்ன மாதிரி இருந்த.. அது தான் கேட்டேன்.."

"அச்சோ அப்புடி எல்லாம் என்னைப் பத்தி தப்பா யோசிக்காதே பாரு.. எனக்கே அந்த எருமையை காதலிக்கிறனோ இல்லையோ எண்டு தெரியேல்லை.."

"என்னடா சொல்றாய்.."

"உண்மைக் கதை அது தான்.."

"ஓ.."

"சரி திடீர்னு ஏன் உந்த கேள்வி கேட்டனீ.."

"அது.."

"பாரு.. உன்ரை முழியே சரியில்லையே.. சொல்லு உன்ரை போக்குல என்ன ஏழரையைக் கூட்டி விட்டனீ.."

"குட்டீ.. என்னைய ஏச மாட்டியே.."

"நான் எங்கடீ உன்னைய ஏசுறனான்.. நீ தானே என்னைய ஏசுறனீ.."
எனக் கலைமோகன் சொல்லி முடிக்கவும், பாரதி தான் மைக்கேலை தேடிப் போய் கலை மற்றும் எஸ்தர் பற்றிய காதல் விவகாரம் பற்றிப் பேசியதையும், அதன் பிறகு எஸ்தர் நடந்து கொண்டதையும் அப்படியே ஒப்புவிக்க, அப்படியே தலையில் கை வைத்துக் கொண்டு கீழே அமர்ந்து விட்டான் கலைமோகன்.

"என்ன குட்டீ.. நான் செய்த விஷயத்துல ஏதும் கோபமோ.."

"கோபம் எல்லாம் இல்லை பாரு.. ஆனா.. இனிமேல் உன்ரை எண்ணத்துல ஒரு முடிவை எடுத்துக் கொண்டு போய் வேறை யாரையும் பாக்காத.."

"இனிமேல் அப்புடி செய்ய மாட்டன்.."

"அதோட அவளில எனக்கு கொஞ்சம் இது லேசா வந்தது தான்.. ஆனா எப்போ உன்னைய என்னட்டை இருந்து பிரிக்க போறேனு அவளாவே சொன்னாள்னு நீ சொன்னியோ அப்பவே அதெல்லாம் காத்தோட போயிட்டுது.."

"நிஜமாவாடா.."

"பின்னே இல்லையா.. உன்னை என்னட்டை இருந்து பிரிக்கப் பாக்கிறாள்டி.. பிறகு எப்புடி அந்த எருமையில பாசம் பாயாசம் எல்லாம் வரும் சொல்லு.."

"ஏன்டா குட்டி.. உனக்கு உண்மியாவே என்னில நிறைய பாசம் இருக்குதோ.. எனக்காக பின்னால சுத்தின பொண்ணையே வேண்டாம்னு தூக்கி போட்டிட்டியே.."

"ஆனா நீ அப்புடி இல்லையேடி.. போயும் போயும் அந்த பிசாசு சொன்ன கதையைக் கேட்டு அங்க என்ரை பாஸ் வரைக்கும் போய் இருக்காய்.."

"சாரிடா குட்டி.. அது பிசாசுனு எனக்கு அப்போ தெரியாதேடா.."

"இப்போவாச்சும் தெரிஞ்சுதே அந்த மட்டும் சந்தோஷம்.."

"அதெல்லாம் சரி தான்.. உன்னோட பாஸு கோவிச்சுக்க மாட்டாரோ.."

"அவர் ஏன் கோபிக்க.."

"அது தான் நான் போய் தேவையில்லாமல் உன்னைப் பத்தி அந்தாளிட்டை கதைச்சிட்டனே.."

"அவர் அதையெல்லாம் பெரிசா எடுத்துக்க மாட்டார்.."

"என்ன அண்ணன் அந்தாளு.. தன்ரை தங்கச்சியோட காதலை பத்தி சொன்ன பிறகுமா அதை பெரிசா எடுத்துக்க மாட்டாரு.."

"ஓம் பாரு.. அவரு யாரோட பர்ஷனலுக்குள்ளயும் மூக்கை நுழைக்க மாட்டார் தெரியுமா.."

"யாரோட பர்ஷனலுக்குள்ளயும் யாருமே தான் மூக்கை நுழைக்க மாட்டாங்க.. ஆனா சொந்த தங்கச்சியோட பர்ஷனலுக்குள்ளயுமேவா.."

"அவர் அப்புடி தான்.."

"என்ன டிசைனோ தெரியேல்லை.."

"அதெல்லாம் கிடக்கட்டும்.. அந்த எருமையோட இனி பேச்சுவார்த்தை வைச்சுக் கொள்ளாத சொல்லீட்டன்.."

"எஸ்தர் எருமையோடவா.. அவ இருக்கிற திசைப் பக்கமே இனி நான் பாக்க மாட்டேனாக்கும்.."
என்று கொண்டே தலையைச் சிலுப்பி விட்டு தன் வேலையைப் பார்க்க போய் விட்டாள் பாரதி.

பாரதியையே பார்த்திருந்த கலைமோகனுக்கு, உள்ளூர எஸ்தர் மீது கோபம் கோபமாக வந்தது.

"அவளுக்கு எவ்வளவு தைரியம் இருந்தால்.. என்ரை பாருவை என்னட்டை இருந்து பிரிப்பன் அப்புடீனு சொல்லி இருப்பாள்.. பாருக்கும் எனக்கும் இருக்கிற பந்தம் பத்தி அந்த எருமைக்கு என்ன தெரியும்.. இதுக்கு மேலயும் அவளுக்கு என்ரை மனசுல இடம் குடுக்க யோசிச்சன் அப்புடீனா என்னை விட ஒரு முட்டாள் இருக்க முடியாது.. பாருவை விட எனக்கு யாருமே முக்கியமில்லை.. பாருவை காயப்படுத்துற யாரும் கூட எனக்கு முக்கியமில்லை.."
என தன்னுள் முனகிக் கொண்டே தானும் எழுந்து போய் விட்டான் கலைமோகன்.

பாரதி குடியிருக்கும் அந்த தெருவில் இருந்து, கிட்டதட்ட அரைமணி நேரம் நடந்து போனால், அவளுக்காக கலைமோகன் அமைத்து கொடுத்த அந்த 'பிளான்ட் நர்சரி' இருக்கும்.

பாரதியின் வருமானம், சந்தோஷம் எல்லாமே அந்த இடத்தில் இருந்து தான் அவளுக்கு கிடைக்கிறது. ஆரம்பத்தில் ஒரு சில பூச்செடிகளோடு ஆரம்பித்த பிளான்ட் நர்சரி இப்போது ஏராளமான பூச்செடிகள் மட்டுமில்லாமல் மருத்துவகுணமுள்ள துளசி, கற்பூரவள்ளி, குப்பைமேனி என நிறைய மூலிகைச் செடிகளோடு வளர்ச்சி நிலையை அடைந்து கொண்டிருந்தது.

அது மட்டுமில்லாமல் விஷேட நாட்களுக்கான பூங்கொத்து, கழுத்து மாலை என அதிலும் ஒரு பக்கமான விற்பனை அங்கே நடக்கவும் தொடங்கி விட்டதால், பாரதிக்கு இப்போதெல்லாம் எப்போதுமே நர்சரியில் நிற்க வேண்டியே இருந்தது.

காலை ஏழு மணிக்கு நர்சரியை திறந்தாள் என்றால், பதினொரு மணி வரை அங்கேயே இருந்து விட்டு, அதன் பிறகு வீட்டுக்கு வந்து மதிய உணவை சமைத்து தானும் உண்டு விட்டு, கலைக்கும் எடுத்து வைத்து விட்டு இரண்டு மணியளவில் மீண்டும் நர்சரிக்கு வந்து விடுவாள்.

சில சமயங்களில் அவனுக்கான உணவை அவன் இருக்கும் இடத்துக்கு கூட கொண்டு சென்று கொடுப்பாள், ஆனால் கலைமோகன் எப்போது மைக்கோலுடன் சேர்ந்தானோ அப்போதே தான் இருக்கும் இடங்களுக்கு பாரதியை உணவு கொண்டு வர விடுவதில்லை.

அவளுக்குமே வேறு வேறு இடங்களுக்கு செல்ல நேரம் போதவில்லை என்பதால், உணவை வீட்டிலேயே வைத்து விட்டு வந்து விடுவாள்.

கலைமோகன் இரண்டரை மணிக்குள் வந்து உணவை எடுத்து உண்ணவில்லை என்றால், அடுத்த தினம் உணவே சமைக்க மாட்டாள், அது மட்டுமில்லாமல் தானும் வெளியே எங்கேயும் போய் சாப்பிடவும் மாட்டாள். இதனாலேயே அவள் பட்டினி கிடந்து விடுவாள் என்கிற பயத்தில் கலைமோகன் நேரத்துடன் வந்து சாப்பிட்டு விடுவான்.

இன்றும் உணவை சமைத்து வைத்த கையோடே கலையும் வந்து விட, வெகு நாட்களுக்கு பிறகு இருவரும் ஒன்றாக மதிய உணவை எடுத்து விட்டு தான் தத்தமது வேலைக்கு புறப்பட்டு வந்திருந்தார்கள்.

பாரதி தினமும் நர்சரிக்கு நடந்து போகிறாளே என்பதற்காக, தனது சம்பளத்தில் ஒரு பகுதியை மாதம் மாதம் ஒதுக்கி, இரண்டு கிழமைகளுக்கு முன்பு தான் அவளுக்காக ஒரு சைக்கிளை வாங்கிக் கொடுத்திருந்தான் கலைமோகன்.

சைக்கிள் வந்த பின்னர் தான் பாரதியும் அரக்கபரக்க ஓடாமல், ஆறுதலாக நர்சரிக்கு போகத் தொடங்கியிருந்தாள்.

நர்சரிக்கு பதினைந்து நிமிடத்தில் வந்து சேர்ந்த பாரதி, நர்சரிக்கு முன்னால் நின்றிருந்த ஆட்களை கடந்து, சைக்கிளை அதற்கென இருந்த இடத்தில் விட்டு நிமிரவும், அவளது நர்சரியில் அவளுக்கு ஒத்தாசைக்காக நிற்கும் பாஸ்கரன் ஓடி வந்தான்.

"அக்காச்சீ.."
என்று கொண்டு வந்தவனுக்கு மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கியது.

"என்ன பாஸ்கர்.. என்ன நடந்தது.."

"இந்த இடம் தங்கடை இடம் அப்புடீனு சொல்லிக் கொண்டு ரெண்டு பேர் வந்திருக்கினம்.. அவையோட இன்னும் சில பேரும் வந்து இருக்கினம்.."

"என்னது தங்கடை இடமாமோ.. யாருடா அது எங்க பாப்பம்.."

"ஓமக்கா.. அது தான் எனக்கு கையும் ஓடேல்லை காலும் ஓடேல்லை.."

"அதெல்லாம் ஓடும்.. நீ முதல்ல ஓடி வா.. என்ன தான் நடக்குதுனு பார்ப்போம்.."
என்று கொண்டே தன் நர்சரிக்கு முன்னால் நின்றவர்களிடம் போனாள் பாரதி.

அவளுக்காகவே காத்திருந்தது போல
"இந்தா பொண்ணு.. இந்த இடம் எல்லாம் தரைமட்டம் ஆக்கி தியேட்டர் கட்ட போறம்.. அதனால இந்த இடத்தை சீக்கிரமா காலி செய்து குடு.. இல்லாட்டிக்கு காலி செய்திட்டு ஓட வைக்க வேண்டி வரும்.."
என அங்கிருந்த ஒருவன் சொல்ல, அவனை வேற்றுக்கிரகவாசியை பார்ப்பது போல பார்த்து வைத்த பாரதி, பதில் ஏதும் சொல்லாமல் நேராக சென்று நர்சரியை திறந்து, அந்த இடத்தை கூட்டி, மஞ்சள் நீர் தெளிக்க தொடங்கினாள்.

அவளது செய்கையில் கடுப்பான அந்த புதியவனோ
"ஏய் என்னடி திமிரா.."
என்று கொண்டே அவளது தோளை வேகமாகத் தொட, அவ்வளவு தான் அவனது கையைத் தட்டி விட்டு அவன் கன்னத்தில் விட்டாள் ஒரு அறை.

"இந்தா இந்த மேலில கை வைக்கிற வேலை எல்லாம் இங்க வேண்டாம்.. உன்னோட பூச்சாண்டி காட்டுற கதை எல்லாத்தையும் வேறை எவளிட்டையாவது போய் சொல்லு.. இப்ப இடத்தை காலி பண்ணு.. எனக்கு நிறைய வேலை கிடக்கு.. சும்மா வெட்டிக்கதை பேசிக் கொண்டிருக்க எனக்கு நேரமில்லை.."
என பாரதி சொல்லி முடிக்கவும்,
"என்னடி.. பொட்டைக் கழுதை ஒரு தட்டு தட்டி விட்டால் உருண்டு கொண்டு போய் விழுவாய்.. நீ அவன் மேலயே கை வைக்கிறியோ.."
என்று கொண்டு இன்னொருவன் வந்து அவளது தலைமுடியைக் கொத்தாக பிடித்துக் கொண்டான்.

அவ்வளவு தான் அடுத்த கணமே அவன் போய் கீழே விழுந்த வேகத்துக்கு, பக்கத்தில் நின்றிருந்தவனுக்கு விழி பிதுங்கி விட்டது.

"தட்டி விட்டால் உருண்டு கொண்டு போய் யார் விழுவாங்கன்னு.. இப்போ புரியுதா.. வந்திட்டாரு பெரிய பிஸ்தா பருப்பு.. என்ன மிரட்டிப் பாக்குறியளோ.. முதல்ல யாருடா நீங்கள் எல்லாம்.. எவன் குடுத்த காசுக்கு நாக்கை தொங்க போட்டுக் கொண்டு இங்க வெட்டி வீரம் பேச வந்தனீங்கள்.."
என பாரதி கேட்ட தோரணையில், அடுத்தவனுக்கு அவளுக்கு பக்கத்தில் போகவே லேசாக உதறியது.

அதற்குள் கலைமோகனின் புல்லட்டின் சத்தம் கேட்டு, அங்கே இருந்தவர்கள் சட்டென்று அங்கிருந்து ஓடி மறைந்து விட,
"பாரு என்னடி பத்ரகாளி மாதிரி நிற்கிறாய்.. யாருடி அவனுங்கள் என்ன என்னைக் கண்டதும் உந்த ஓட்டம் ஓடுறானுங்கள்.."
என்று கொண்டே அவன் வந்து சேர்ந்தான்.

கலைமோகன் கேட்ட கேள்வியில், பதிலேதும் சொல்லாமல் அவனை முறைத்து விட்டு, தன் வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினாள் பாரதி.

அவளது முறைப்பில் சட்டென்று சுதாரித்துக் கொண்ட கலைமோகன், பாஸ்கரனைப் பார்த்து என்ன தான் நடந்தது என்பது போல சைகயில் கேட்க, அவனோ சத்தமாகவே நடந்து முடிந்ததை ஒப்புவித்து விட்டு, பாரதிக்கு பின்னால் போய் தன் வேலைகளைக் கவனிக்கத் தொடங்கி விட்டான்.

கலைமோகனுக்கு தான் வந்தவர்கள் யாராக இருக்கும் என்கிற கேள்வி, உள்ளே குடையத் தொடங்கியிருந்தது.

கேள்விக்கான பதில் கிடைக்கும் போது அவன் ஒரு ருத்ரதாண்டவமே ஆடப் போகிறான் என்பது, அப்போது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.
 

Attachments

  • eiRQEAM82000.jpg
    eiRQEAM82000.jpg
    80.8 KB · Views: 0
  • Wow
Reactions: shasri