• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முதலும் முடிவுமாய்-10

Pandiselvi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 30, 2021
122
59
43
Chennai
அத்தியாயம் 10

இரவே பேருந்து ஏறி விடியலில் சென்னை வந்து சேர்ந்து விட்டான் மாறன். சென்னை வரை துணிந்து வந்து விட்டான். ஆனால் அவளை எப்படி பார்ப்பது என்று தான் தெரியவில்லை அவனுக்கு‌. 'வீடு இருக்கும் இடம் தெரியும். ஆனால் என்ன சொல்லிப் போய் அவளை பார்ப்பது?' என்று யோசித்தவனுக்கு அவளின் ஐடி கார்டில் இருந்த கல்லூரியின் பெயர் மூளையில் உதித்தது.

அவனுடன் யூஜி படித்த கல்லூரி நண்பன் ஒருவன் வீடு சென்னையில் இருக்கிறது. அவனிடம் விசாரிக்க, அவன் வீட்டுக்கு வந்தே ஆக வேண்டும் என்ற வற்புறுத்தலில் அவன் வீட்டுக்குச் சென்று ரெப்பிரஷ் ஆகிவிட்டு அவளது கல்லூரியைத் தேடி அலைந்து மதியம் போல் வந்து நின்றான். 'ஏன் எதற்கு? என்ன விஷயம்?' என்று கேட்ட நண்பனிடம் சமாளித்தது எல்லாம் வேறு கதை.

வெறிச்சோடி இருந்த அந்த கல்லூரி கேட் அருகே எவ்வளவு நேரம் நின்று கொண்டிருந்தானோ. பார்த்து பார்த்து கண்கள் பூத்து விட்டது. எப்போதடா விழிகள் அவளைக் கானும் என்று ஏக்கமாய் பார்த்து விட்டான். கேட்டில் இருந்த காவலாளி கூட அவனை ஏற இறங்க ஒரு மாதிரி பார்த்து விட்டார். 'என்ன அவளை இன்னும் கானும்?' என்று ‌கூப்பாடு போட்ட மனதிடம், 'ஆமா நீ அவகிட்ட சொல்லிட்டு வந்த பாரு. நீ வந்ததும் அவ ஓடி வந்து நிற்க.. மத்தியான நேரத்துல வந்து நின்னுக்கிட்டு காலேஜ் படிக்குற பொண்ணு வெளில வரலனு பாக்குறது உனக்கே அசிங்கமாத் தெரியல. இந்த நேரத்துல எப்டி வருவா. சாயந்தரம் காலேஜ் முடியவும் தான் வருவா' என்று மூளை குத்திக் காண்பிக்க. கல்லூரி மாணவன் போல் ஒரு பெண்ணிற்காக ஊரு விட்டு ஊரு ஐநூறு மைல்கள் தாண்டி வந்தது அவனுக்கே சில்லியாகத் தான் இருந்தது. இந்த காதல் படுத்தும் பாடு வேறொன்றுமில்லை.

'சரி அவளை பாத்து என்ன பண்ண போற?. அவகிட்ட பேசப்போறியா?. என்ன சொல்லி பேசுவ?'.. 'இல்ல பாத்துட்டு மட்டும்.. இல்ல இல்ல. அவகிட்ட பேசவும் செய்யனும். என்ன பேசுறதுனுலாம் தெரியாது. மொத என்னைப் பார்த்தா அவ ரியாக்ஷன் என்னனு பாக்கனும். அவளுக்கு ஞாபகம் இருக்குமா மொத?. அதை வச்சு தான் நான் பேசுறதா வேண்டாமானு யோசிக்கனும்' என்று முடிவெடுத்தான்.

வியர்க்க விறுவிறுக்க வெட்ட வெயிலில் நிற்க சட்டை வியர்வையில் குளித்திருந்தது. முகம்பூரா வியர்வை முத்துக்களில் குளித்து கறுத்துப் போயிருந்தது. 'ஏற்கனவே நான் செம கலரு. இதுல இப்படி ரெண்டு நாள் இந்த சென்னை வெயில்ல நின்னேன். எனக்கே என்னைய அடையாளம் தெரியாம போயிரும். நம்மூர்லயும் இதுக்கு மேல வெயில் இருக்கும். ஆனா காத்து நல்லா அடிக்குறதால தெரியல போல. இங்க இருக்குற சந்து பொந்து கூட விடாம கடைய கட்டி வச்சுருந்தா காத்து எங்கிட்டு இருந்து வரும். அடியே நானும் எவ்வளவு நேரம் மனசுக்குள்ள பேசுறது. எப்ப வந்து தரிசனம் காட்டுவ' என்று நினைத்தவனுக்கு சலிப்பேத் தட்டிவிட்டது. இருந்தும் விழிகளில் இருந்த அலைப்புறதுல் குறையவில்லை.

மாலை நான்கு மணி.. ஒவ்வொரு மாணவர்களாய் வெளியே வர ஆரம்பித்தனர்..

"ஏ நிலானி.. சிந்து மேரேஜ்க்கு போனியே. ஸ்ரீவி போன எக்ஸ்பிரியன்ஸ் எப்டி இருந்துச்சு?. அந்த ஊரு எப்டி?" என்றபடி நடந்து வந்தான் அவள் நண்பன் ரோகித்.

"அதை ஏன்டா கேட்குற.. ஊரும் நல்லா இருந்துச்சு. கல்யாணமும் சிறப்பா நடந்துச்சு. ஆனா அதை விட சிறப்பா ஒன்னு நடந்துச்சு‌.." என்று நடந்த கதைகளை அவனிடம் சொன்னவள், "அய்யோ கண்ணைக் கட்டி காட்டுல விட்ட மாதிரி ஆகிடுச்சு. நல்லவேளை ஒரு புண்ணியவான் வந்து காப்பாத்துனாரு" என்றவளுக்கு அந்நாளில் நினைவுகள் இப்போதும் பதட்டத்தைக் கொடுக்க.

"அட லூசு. அவரு தான் உன் பேக் கொண்டு வர்றேன்னு சொல்லிருக்காருல. அப்புறம் என்ன அன்ரிசர்வேஷன் டிக்கெட் எடுத்துட்டு கிளம்ப வேண்டியது தான?. டிடிஆர் கிட்ட பேக் தொலைஞ்சு போச்சுனு சொல்லி உன் டிக்கெட் நம்பர் மட்டும் சொல்ல வேண்டியது தான?. இதுக்குப் போய் அழுதுட்டு நின்னாளாம்" என்று அவள் தலையில் தட்ட..

"அட அப்படி ஒன்னு இருக்கோ" என்று நாடியில் விரல் வைத்து யோசித்தவள், "ஆனா எனக்கு புக் பண்ண டிக்கெட் நம்பர், கோச் எதுவுமே ஞாபகம் இல்லையே" என்க.. சுற்றியிருந்த நண்பர்கள் அனைவரும் தூ என்று ஒன்றாக தூப்பினர்.

"நான் என்னடா பண்றது?. அந்த அளவுக்கு யோசிக்கல. இதுவரைக்கும் எங்கேயும் தனியா போனதில்லையே" என்று உதட்டைப் பிதுக்க.

அவள் தூரத்தில் வரும் போதே ஏதோ இனம்புரியாத உணர்வு மனதை ஆட்டிப் படைக்க.. இதயம் வேகமாக துடித்தது. கண்களின் அலைப்புறுதல் அதிகமானது. தூரத்திலே அவளைக் கண்டவன் அவள் இதழ் அசைவையும் பூஞ்சிரிப்பும், ஒளிவீசும் முகத்தையும் இமைக்காமல் ரசித்தான்.

"காலேஜ் படிச்சு முடிக்கப் போற. இன்னமும் உன்னை உங்கப்பா ஸ்கூல் பொண்ணு மாதிரியே வச்சுருக்காரு. ரொம்ப கஷ்டம்" என்று ரோகித் சொல்ல, அவளது தோழி பிரியாவும் அதை ஆமோதித்தாள். "உன்னைக் கட்டுறவன் ரொம்ப பாவம் டி" என்று ரோகித் அவள் தலையில் தட்டிக் கொண்டு சிரித்தபடி அவளை உரசிக் கொண்டு வர..

இங்கே ஒருவனுக்கு காரணமே இல்லாமல் உள்ளுக்குள் புகைந்தது. நட்பு என்று புரிந்தாலும், 'எப்படி என் நிலாவைத் தொடலாம்?' என்று மனம் பொறாமையில் வெடித்தது. அவள் அவள் என்று சொன்ன மனது எப்போது என் நிலா என்று உருவெடுத்ததோ?.

அதுவரை இமைகள் இருப்பதையே மறந்து உள்ளுக்குள் அவளை ரசித்து சேமித்துக் கொண்டிருந்தவன், அருகில் நெருங்க நெருங்க மனம் படபடக்க வேறுபக்கம் திரும்பிக் கொண்டான். அவளைக் காணத் தான் இரவோடு இரவாக பஸ் பிடித்து வந்து விட்டு அவளைப் பார்க்காமல் எப்படி இருக்க முடியும்?. மீண்டும் அவள்புறம் தலையைத் திருப்பியவன், விழிகளை மட்டும் அவள்மேல் பதித்து விட்டு தலையே எங்கோ திருப்பி யாரையோ பார்ப்பது போல் பாசாங்கு செய்து கொண்டிருந்தான்.

சுற்றம் மறந்து ஐம்புலன்களில் விழிகள் மட்டுமே தற்சமயம் வேலை செய்து கொண்டிருக்க, "ஹலோ மாறன்" என்று அவன் கைபிடித்து உலுக்கவும் தான் சுயம் வந்து அருகில் கண்ட நிலவை விழி விரித்துப் பார்த்தான்.

"மாறன்.. என்ன முழிக்கிறேங்க?. என்ன ஞாபகம் இல்லையா?. நாலு நாள் முன்னாடி தான பாத்தோம். நிலானி" என்று அவனைக் கண்ட சந்தோஷத்தில் சிரித்தபடி அவனுக்கு ஞாபகப்படுத்தினாள்.

'முப்பொழுதும் உன் நெனப்புல அங்க நான் செத்துப் பொழச்சுக்கிட்டு இருக்கேன். இவ எனக்கு ஞாபகப்படுத்துகிறாளாம்' என்று இதழை வளைத்து நகைத்தவன், "ஹான்.. ஞாபகம் இருக்கு. நீங்க எங்க இங்க?" என்றான் அவள் ஊரில் அவள் கல்லூரியில் வந்து நின்று கொண்டு.

"ஹலோ சார். இதை நான் கேட்கனும். எங்க ஊர்ல என் காலேஜ் முன்னாடி நீங்க நின்னுகிட்டு என்னை நீ எங்கனு கேட்குறேங்களா?" என்று இடுப்பில் கை வைத்து கேலி செய்ய..

அவன் தலைகோதி, "ஆமால.." என்று நாக்கக் கடித்து சிரிக்க.

அவள் நண்பர்கள் அவன் யார் என்று பார்த்துக் கொண்டிருந்தனர்.

"ஆமா தான். என்ன இங்க?"

"அது.. அது..". என்ன சொல்வதென்று திக்கித் திணற..

"டிரைவரா வந்தேன். இங்க தான் காலேஜ்ல இறக்கி விட்டேன். இப்போ தான் உள்ளே போறாங்க" என்று வாய்க்கு வந்ததை சொல்ல.

"அப்டியா?. இங்க படிக்கிறாங்களா?. உங்களுக்குத் தெரிஞ்சவங்களா?. எந்த டிபார்ட்மெண்ட்?" என்று கேள்விகளை அடுக்க.

'ம்கும்.. இல்லாத ஒருத்தரோட டீடெய்ல்ஸ் கேட்ட நான் எங்கிட்டு சொல்றது?' என்று நினைத்தவன், "கஸ்டமரோட டீடெய்ல்ஸ்லாம் கேட்டுக்கிறது இல்ல. தெரியல எந்த டிபார்ட்மெண்ட்னு" என்று அடுத்த பொய்யை அவிழ்த்து விட்டான். காதலின் முதல்படி கள்ளத்தனம் புகுந்து கொண்டது.

"ஓ ஓகே. சரி வாங்க சாப்பிடலாம்" என்றழைக்க.

"ஹே யாரு நிலா இது?." என்று ரோகித் முந்தி கொண்டு வர.

"இவங்க தான் நான் சொன்ன மாறன்" என்று‌ அறிமுகம் செய்தாள்.

அவனை கண்டவுடன் துள்ளிக் குதித்துக் கொண்டு வந்த போதே அவனை ஞாபகம் இருக்கிறது என்று குதித்த நெஞ்சம், இப்போது அவனைப் பற்றி பேசியிருக்கிறாள் என்று தெரியவும் இறகில்லாமலே பறந்து கொண்டிருந்தது.

"ஓ அவரா?" என்று இழுத்த ரோகித் மாறனை ஆராய்ந்தான்.

"சரி நான் கிளம்புறேன்" என்று மாறன் கிளம்ப எத்தனிக்க, "என்ன சார்.. எப்பப் பாரு கிளம்புறேன் கிளம்புறேன்னு ஓடுறேங்க?. ஒரு‌ காஃபியாவது குடிச்சிட்டு போங்க" என்று வற்புறுத்த. அவளுடன் நேரம் செலவிட கசக்குமா என்ன?. உடனே சரி என்றான்.

நண்பர்கள் வீட்டுக்குப் போக நேரமாகும் என்று கிளம்பிக் கொள்ள, "நீ மட்டும் எப்டி தனியா இருப்ப?. நானும் வர்றேன்" என்று அவர்களுடன் இணைந்து கொண்டான் ரோகித்.

அவனை விழிகளால் எரித்துக் கொண்டிருந்தான் மாறன். 'என்கிட்டயே அவளுக்கு பாதுகாப்பா?. என் நிலாவை எனக்கு பாத்துக்கத் தெரியாது. சே இடைஞ்சல்' என்று பார்த்ததிலிருந்து ரோகித்தை வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறான்.

அருகிலே இருந்த காஃபி ஷாப்பிலே காஃபி ஸ்நாக்ஸோடு அமர்ந்திருக்க ஒரு மிடறு காஃபியும் ஒரு‌ மிடறு அவளின் அசைவுகளையும் உள்வாங்கிக் கொண்டே காஃபியை அருந்தினான். "நீங்க வந்துட்டு போனதுல இருந்து அப்பா அம்மா உங்களை பத்தியே பேசிட்டு இருந்தாங்க. நீங்க ஹெல்ப் பண்ணதை பெருமையா சொல்லிட்டு இருந்தாங்க" என்று வளவளவென வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருந்தாள்.

'இவ இவ்வளவு பேசுவாளா?' என்று ரோகித் கூட சந்தேகம் கொண்டான். நண்பர்களிடத்தில் பேசுவாள் தான். ஆனால் இத்தனை ஆர்ப்பரிக்கும் சந்தேஷத்தோடு பார்த்ததில்லை. அதுவும் மூன்று நாள் பார்த்த ஒருவனிடம் இத்தனை வளவளத்துக் கொண்டிருக்கிறாள் என்று ஐயம் தோன்றியது. அதுவும் மாறனின் விழிகளின் ரகசியம் வேற புரிபடவே இல்லை. அவன் பார்வையில் விரசமில்லை. ஆனால் வேறேதோ ஒன்று இருக்கிறது என்று சந்தேகம் கொண்டான்.

"மாறன் நான் இவ்வளோ பேசுறேன். நீங்க எதுவுமே சொல்லியே" என்று முகத்தைச் சுருக்கி உதட்டைப் பிதுக்க..

அவள் இதழ் வரிகளில் கவனம் வைத்தவன் இதழைப் பிடித்து விரல்களில் அடக்கும் எண்ணத்தை அடக்கிக் கொண்டான். 'ஸப்பா.. பக்கத்துல உட்கார்ந்துட்டு கொல்லுறாளே. மூனு நாளு பாத்ததுக்கே மனுஷன் தூக்கத்தைப் பறிச்சுட்டா. இப்படி பேசுனா நான் எங்க இருந்து ஊர்ல போயி வேலையப் பாக்குறது.. ம் பாவம்டா மாறா நீயி..' என்று பெருமூச்சு விட்டவன், 'ஏதேதோ சொல்லனும்னு ஆசைதான். உன்னை நெனச்சு பைத்தியம் மாதிரி இருக்கேன்னு சொல்லனும். உனக்காக தான் இங்க வந்தேன்னு சொல்லனும். இன்னும் நிறைய இருக்கு. ஆனா பேச முடியலயே.. அதுலயும் நந்தி மாதிரி ஒருத்தன் நடுவுல உட்கார்ந்துக்கிட்டு உன்னைப் பார்க்க கூட விட மாட்டேங்குறான். லூசுப்பய பரதேசி எவன்டா இவன்?' என்று எரிச்சலுற்றான்.


தொடரும்.